Sunday, July 31, 2011

கயானா நாட்டில் தரையில் மோதி 2 ஆக பிளந்த விமானம்.

கயானா நாட்டில் விமானம் தரையில் மோதி 2 ஆக பிளந்தது: 163 பயணிகள் காயத்துடன் தப்பினர்

அமெரிக்கா நியூயார்க்கில் இருந்து கரீபியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-800 ரக பயணிகள் விமானம் கயானா தலைநகர் ஜார்ஜ்டவுனில் உள்ள ஜெட்டிஜகன் விமான நிலையத்துக்கு நேற்று புறப்பட்டு வந்தது. அதில் 157 பயணிகளும், 6 விமான ஊழியர்களும் இருந்தனர்.

நேற்று நள்ளிரவு 1.32 மணியளவில் அந்த விமானம் ஜெட்டிஜகன் விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது ஈரப்பதமான தட்பவெட்ப நிலை நிலவியது.

இதனால் நிலை தடுமாறிய விமானம் சுமார் 7,400 அடி நீள ஓடுதளத்தில் குட்டிகரணம் அடித்தபடி சென்றது. இறுதியில் 2 ஆக பிளந்தது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விமானத்தின் கதவை திறந்தபடி முண்டியடித்துக்கொண்டு வெளியேறினார்கள்.

இதற்கிடையே விமான நிலைய அதிகாரிகளும், மீட்பு படையினரும் விரைந்து வந்தனர். அவர்கள் விமானத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்தவர்களை உயிருடன் மீட்டனர். இந்த விபத்தில் பிளாடெல்பியாவை சேர்ந்த கீதா ராம்சிங் (41) உள்பட பலர் காயம் அடைந்தனர். அவர்களில் பலரின் கால் எலும்பு முறிந்தது. ஆனால் உயிர் சேதம் ஏதுமில்லை.

இந்த விமானம் 2 ஆக பிளந்து நின்ற இடம் ஓடுதளத்தின் இறுதி பகுதியாகும். அதன் அருகே 200 அடி ஆழத்தில் பள்ளத்தாக்கு உள்ளது. அதில் விழுந்து இருந்தால் ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக அதுபோன்று நடக்கவில்லை என்று கயானாவின் அதிபர் பாரத் ஜக்தேவ் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. அது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விமான விபத்து சம்பவம் கயானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலமோசடி பொய் புகார் அதிகரிப்பு.



இடத்திற்கு கூடுதல் பணம் பெறும் ஆசையி்ல் நில மோசடி செய்ததாக பொய் புகார்கள் கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் வன்முறை சம்பவங்களும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நிலங்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது. இதனால் நிலத்தில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் விற்கப்பட்ட நிலத்தின் விலை இன்னும் பல மடங்கு அதிகரித்து விட்டதால் ஏன்தான் நிலத்தை விற்றோமோ என்ற ஏக்கத்தில் இருப்பவர்கள் பலர்.

இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு நிலமோசடி தொடர்பான புகார்களை பெறுவதற்கு மாவட்டம் தோறும் தனிப்பிரிவை அமைத்துள்ளது. இதன் காரணமாக சில வருடங்களுக்கு முன் தாங்களாகவே விரும்பி முழு சம்மத்துடன் நிலத்தை விற்றவர்கள் கூட இன்று அந்த நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டதால் விற்றவர்களிடம் இருந்து கூடுதலாக பணத்தை பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் நிலத்தை அபகரித்து விட்டதாக பொய் புகார் கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அதிகப்படியான பணத்திற்கு ஆசைப்பட்டும், அரசியல் விரோதத்தாலும் கொடுக்கப்படும் பொய் புகார்களால் வரும் நாட்களில் வன்முறை, மோதல், கொலை போன்ற சம்பவங்கள் அதிகரிக்கும் அபாய நிலை உருவாகியுள்ளதாக பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

சென்னையில் சமச்சீர் கல்வியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.

சென்னையில் சமச்சீர் கல்வியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பங்கேற்பு

தமிழ்நாடு தனியார் பள்ளி பெற்றோர் - ஆசிரியர் கழகம், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் சங்கம் ஆகியவை சார்பில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மோகன்ராஜ், நீலன் அரசு, உதயகுமார், வேலம்மாள் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமச்சீர் கல்வியை தமிழக அரசு அமல்படுத்தாமல் இருப்பது சரியான நடவடிக்கை. தரமான கல்வியை தரவேண்டும் என்பதற்காக பழைய பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள முயற்சி வரவேற்க்கத்தக்கது.

இவற்றை வரவேற்றும் தி.மு.க. மாணவர்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்தியதை கண்டித்தும், நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்தை ரத்து செய்யக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஆதரவாக கோஷங்களும் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள்- ஆசிரியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறியதாவது:-

தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக முதல் - அமைச்சர் ஜெயலலிதா, எடுத்து வரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது. தமிழக மாணவர்கள் தேசிய அளவில் போட்டிகளை சமாளிக்க கல்வி தரத்தை உயர்த்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டியது இல்லை. நிர்ணயிக்கப்பட்டுள்ள தனியார் பள்ளி கல்வி கட்டணம் ஏற்க கூடியது அல்ல. முத்தரப்பு குழு அமைத்து கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். தனியார் பள்ளிகளின் இணைப்பு பள்ளிகளை சிபிஎஸ்இ பள்ளி தொடங்க அனுமதி வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உலகை வசீகரிக்கும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்.



பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சராக ஹினா ரப்பனி கர் நியமிக்கப்பட்டு ஒரு வார காலம்தான் ஆகிறது. அதற்குள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துவிட்டார் ஹினா. அவரது புகைபடங்களை பிரசுரிப்பதிலும், அவர் தொடர்பான வீடியோ கிளிப்பிங்குளை ஒளிபரப்பவும் சர்வதேச ஊடகங்கள் போட்டிபோடுகின்றன.

இதுவரை "பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் அக்கறை காண்பிப்பதில்லை; தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்கிறது..." என்றெல்லாம் பாகிஸ்தான் குறித்து எதிர்மறை கருத்துக்களையும், அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு வந்த உலகின் முன்னணி நாளிதழ்கள் மற்றும் வார சஞ்சிகைகளெல்லாம், தற்போது மாடல் அழகி போன்ற வசீகர தோற்றமும், அறிவு திறனும் கொண்ட இளம் பெண் ஒருவரை வெளியுறவுத் துறை அமைச்சராக நியமித்து, பாகிஸ்தான் தற்போது சந்தித்து வரும் நெருக்கடியை விவேகமாக எதிர்கொள்ள தொடங்கி உள்ளதாக புகழாரம் சூட்டிக்கொண்டிருக்கின்றன.

அல் காய்தா தலைவர் ஒஸாமா பின்லேடன் பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதன் மூலம், பாகிஸ்தானின் இமேஜ் உலக நாடுகளில் அதல பாதாளத்திற்கு சரிந்தது.



பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக பாகிஸ்தான் மீது எப்போதும் இருந்துவரும் குற்றச்சாட்டை, பின்லேடனின் பதுங்கல் நிரூபிக்கும் விதமாக அமைந்து விட்டதால் பாகிஸ்தான், உலக நாடுகளிடம் அம்பலப்பட்டு போனது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிடமிருந்து பாகிஸ்தானுக்கு சமீப காலமாக கடுமையான நெருக்கடிகள் வந்தன. குறிப்பாக பாகிஸ்தான் இராணுவத்திலும், உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யிலும் தீவிரவாதிகளுக்கு ஆதரவான சக்திகள் உள்ளதாக, அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ குற்றம்சாட்டியது.

ஆனால் பாகிஸ்தான் அதற்கு கடுமையாக மறுப்பு தெரிவித்து, ஆதாரமில்லாமல் குற்றம்சாட்ட வேண்டாம் என்று கூறவே, சிஐஏ-வின் தலைவர் விமானத்தை பிடித்து நேரடியாக இஸ்லாமாபாத் வந்திறங்கினார்.

அங்கு அவர் பாகிஸ்தான் இராணுவ மற்றும் உளவுத் துறை அதிகாரிகளை சந்தித்து, அமெரிக்காவின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வீடியோ ஆதாரம் ஒன்றை காட்டியதாகவும், அதனை பார்த்து பாகிஸ்தான் அதிகாரிகள் வாயடைத்துபோய் தலையை தொங்கப்போட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டது.



இந்த சூழ்நிலையில்தான் மும்பையில் அண்மையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவம் பாகிஸ்தான் மீது மீண்டும் உலக நாடுகளின் பார்வையை திருப்பவே, அந்நாடு வெகுவாகவே அவஸ்தைக்குள்ளானது.

இதனையடுத்தே தனது வெளியுறவு நடவடிக்கைகள் மற்றும் தோற்றத்தை மாற்றுவதற்கான வியூகத்தை வகுத்தது. அதன் ஒரு அம்சமாகவே திறமையும், புத்திசாலித் தனமும் கொண்டவர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டால் எதிர் தரப்பின் கடுமையைகுறைக்க முடியும் என்றெண்ணி, வசீகரிக்கும் அழகு கொண்ட ஹினா ரப்பானி கர் என்ற 34 வயது அழகு பெண்ணை தனது வெளியுறவுத் துறை அமைச்சராக கடந்த 20 ஆம் தேதி நியமித்தது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் வரலாற்றில் அதன் வெளியுறவுத் துறை அமைச்சராக பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவை நினைவுபடுத்தும் இந்த அழகு அமைச்சரும், பாரம்பரிய அரசியல் குடும்ப பின்னணி கொண்டவர்தான்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்டான் என்ற இடத்த்ல் 1977 ஆம் ஆண்டு ஜனவரி 19ல் பிறந்த ஹினாவின் குடும்பம், செல்வ செழிப்பு மிக்க குடும்பமும் கூட. ஹினா குடும்பத்தினருக்கு சொந்தமாக ஏராளமான மீன் பிடி படகுகள் கொண்ட மீன் பிடித் தொழிலும், மாந்தோப்புகளும், கரும்பு வயல்கள் உள்ளிட்ட ஏராளமான விவசாய தொழில்களும் உள்ளன.



லாகூர் பல்கலைக்கழகத்தில் நிர்வாக அறிவியலில் பி. எஸ்சி பட்டம்பெற்ற ஹினா, அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பில் எம். எஸ்சி பட்ட மேற்படிப்பு பயின்றுள்ளார்.

இவரது தந்தை குலாம் ரப்பானி, பஞ்சாப் மாகாணத்தின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவர். இவரது மாமாதான் பஞ்சாப் மாகாண முதலமைச்சர்.

ஃபெரோஷ் குல்சார் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டுள்ள ஹினாவுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்.

தந்தையும், மாமாவும் அரசியலில் இருக்க ஹினாவுக்கு அந்த ஆசை வராமல் போகுமா என்ன? 2002 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் நாடாளுமனற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹினாவுக்கு, அரசியலில் அப்போது முதல் ஏறுமுகம்தான்.

2008 தேர்தலில் ஹினாவுக்கு பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்க மறுக்கவே, பாகிஸ்தான் மக்கள் கட்சியில் சேர்ந்து போட்டியிட்டு 84, 000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று மீண்டும் எம். பியானார்.



தொடர்ந்து பிரதமர் யூசுப் ரஸா கிலானி தலைமையிலான அமைச்சரவையில் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை இணையமைச்சராக பணியாற்றிய அவர், 2011 பிப்ரவரியில் வெளியுறவுத் துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்த ஷா முகமத் குரேஷி அப்பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதும், 2011 பிப்ரவரி 13 ல் வெளியுறவுத் துறையின் தற்காலிக அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்துதான் கடந்த 20 ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தான் அயலுறவுத் துறையின் கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டார் ஹினா. அப்போதே உலக நாடுகளை, குறிப்பாக மேற்குலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார்.

இவர் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதை வெகுவாக புகழ்ந்து எழுதும் "பாகிஸ்தான் அப்சர்வர்" போன்ற அந்நாட்டு ஆங்கில ஏடுகள், அண்மையில் ஹிலாரி கிளின்டனுடன் ஹினா நடத்திய பேச்சுவார்த்தையின் போது, அவரது தைரியமான பேச்சும், அணுகுமுறையும், பாடி லேங்வேஜ் எனப்படும் உடம் மொழியும் ஹிலாரியை வெகுவாகவே கவர்ந்ததாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானும் ஏகப்பட்ட இழப்புகளை சந்தித்துள்ளதாக புள்ளி விவரங்களுடன் அவர் முன்வைத்த வாதத்தை பார்த்து
ஹிலாரி அசந்துபோனதாகவும் புகழாராம் சூட்டுகின்றன.



இந்த நிலையில்தான் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்று டெல்லி வந்தார் ஹினா.

வழக்கமாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் டெல்லி வந்தால், விமான நிலையத்தில் வந்திறங்குவதை படம் பிடித்து சம்பிரதாய செய்தியாக வெளியிடுவது இந்திய ஊடகங்களின் வழக்கம்.

ஆனால் வசீகரமும், மாடல் அழகி போன்ற தோற்றத்துடனும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சராக ஒருவர் வந்திறங்குவார் என்று தொலைக்காட்சி கேமராமேன்களும், பத்திரிகை புகைப்படக்காரர்களும் எதிர்பார்க்கவே இல்லை.

ஆங்கிலத்தில் "Stunning beauty" என்று சொல்வார்களே அதுமாதிரி அசர அடிக்கிற அழகுடன் வந்திறங்கிய ஹினாவை நமது பத்திரிகை புகைப்படக்காரர்களும், தொலைக்காட்சி கேமராமேன்களும் வளைத்து வளைத்து படம்பிடித்ததை பார்த்து, ஹினா சற்று வெட்கப்பட்டுதான் போனார்.


இந்த நிலையில்தான் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வுடன் இன்று இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார் ஹினா.

இப்பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் முடிவுகள் எதுவும் எட்டப்படாது என்று முன்னரே கூறப்பட்டபோதிலும், பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக ஹினா செய்தியாளர்களிடம் கூறினார்.

அதே சமயம் கடந்த காலங்களைப் போன்றல்லாமல் இந்த முறை இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை இறுக்கமாக அல்லாமல், உற்சாகமான சூழலில் நடந்ததாகவும், இத்ற்கு ஹினா முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல என்றும் கூறுகின்றனர் நமது வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள்.

பாகிஸ்தானில் பெனாசிர் பூட்டோவுக்கு பின்னர் ஒரு வசீகரமான, வலிமையான, விவேகமான ஒரு தலைவர் இல்லாமல் இருந்த நிலையில், ஹினா ரப்பானி அந்த இடத்தை பூர்த்தி செய்வார் என்றும், எதிர்காலத்தில் பாகிஸ்தான் பிரதமர் பதவியில் ஹினா அமரப்போவது நிச்சயம் என்றும் அடித்துக் கூறுகின்றன பாகிஸ்தான் ஊடகங்கள்.

எப்படியோ இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் ஒரு புதிய நல்லத்தியாயம் மலர, ஹினா போன்ற இளம் தலைவர்கள் இருநாடுகளிலும் நிறைய பேர் உருவாகட்டும்!

etamilnews.com

மாணவன் உயிரை குடித்த சமச்சீர் கல்வி போராட்டம் .

சமச்சீர் கல்வி போராட்டம் மாணவன் உயிரை குடித்தது;     வீட்டுக்கு திரும்பும் வழியில் பஸ் கவிழ்ந்து விபத்து

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி கிளரியம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் விஜய் (வயது 12). விஜய் கொரடாச்சேரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று சமச்சீர்கல்வியை நடைமுறைப்படுத்தக் கோரி தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தி.மு.க.வினர் பள்ளி மாணவர்களை அழைத்து மறியலில் ஈடுபட்டனர்.

பள்ளிக்கு சென்ற மாணவன் விஜய் மற்றும் மாணவர்களை வீட்டுக்கு செல்லுமாறு தி.மு.க.வினர் கூறினர். இதனால் அந்த வழியாக வேளாங்கண்ணியில் இருந்து தஞ்சை நோக்கி வந்த அரசு பஸ்சில் விஜய் ஏறினான். அவனுடன் பள்ளி மாணவ- மாணவிகள் சிலரும் அந்த பஸ்சில் ஏறினர்.

பஸ் கிளரியம் ரெயில்வேகேட் அருகே சென்றபோது எதிரே தஞ்சையில் இருந்து ஜல்லி ஏற்றிக்கொண்டு திருவாரூர் நோக்கி வேகமாக ஒரு லாரி வந்தது. லாரியை பஸ் கடக்க முயன்றபோது, லாரி பஸ் மீது மோதியது. இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து, உடனே நிலை தடுமாறி ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த மாணவன் விஜய் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

மேலும், அதே பஸ்சில் பயணம் செய்த சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திவ்யா (10), தமிழரசி (14), பிரவீனா (16), சூர்யா (15), செந்தமிழ்ச்செல்வி (14), வீரமணி (15), கவிதா (18), வேதவள்ளி (25) உள்ளிட்ட 19 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயம் அடைந்த மாணவ- மாணவிகளை ஆம்புலன்சில் ஏற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்தின் காரணமாக, திருவாரூர் - தஞ்சை சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய 2 வாகனங்கள் மீட்கப்பட்ட பின்னர், போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் மாணவனின் சாவுக்கு காரணமான தி.மு.க.வினரை கைது செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் வேனில், கலங்கிய கண்களுடன் வீரபாண்டியார் !



தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வருவதாக நினைத்துக் கொண்டு ரிலாக்ஸ்டாக வந்திருந்தபோது அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். சிறைக்கு அழைத்துச்செல்ல வேனில் ஏற்றப்பட்டபோது இந்த முன்னாள் அமைச்சர் கண் கலங்கியதைக் காணப் பரிதாபமாக இருந்தது.

போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட மூன்றாவது நாளாக நேற்று காலை, 7.53 மணிக்கு, வீரபாண்டியார் வந்திருந்தார். அவருடன், உதவியாளர் சேகர், வழக்கறிஞர் மூர்த்தி ஆகியோரும் வந்தனர்.

வெளியே நின்றிருந்த தொண்டர்களிடம் ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு சரியாக 7.57 மணிக்கு அலுவலகத்துக்குள் நுழைந்தார் முன்னாள் அமைச்சர். உள்ளே காத்திருந்த இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், சீனிவாசன் ஆகியோர், அமைச்சரிடம் வழக்கு நிபந்தனை பைலில் கையெழுத்து வாங்கினர்.

கையெழுத்து போட்டுவிட்டு சாவகாசமாக துணை கமிஷனர் சத்யபிரியாவின் அலுவலகத்துக்குள் நுழைந்தார் வீரபாண்டியார். அடுத்த நிமிடமே, அதிரடிப்படை வாகனம் ஒன்று, அலுவலகத்தின் முன் பகுதியில் சர்ரென்று வந்து நின்றது.

இந்த நேரத்தில்தான் துணை கமிஷனர் சத்யபிரியா வாயைத் திறந்தார். தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலமோகன்ராஜ் என்பவரின் நிலத்தை, மிரட்டி வாங்கிய வழக்கில் கைது செய்யப்படுவதாக வீரபாண்டியாரிடம் தெரிவித்தார்.

அதிர்ச்சி அடைந்த வீரபாண்டியார் சில விநாடிகள் எதுவும் பேசாமல் வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தார். அதன்பின், தன்னை இப்படிக் கைது செய்ய முடியாது என்று போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தான் முன்னாள் அமைச்சர் என்பதைத் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்.

ஆனால், அவர் கூறியதை யாரும் காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. அவரை வேனில் ஏற்றுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். வீரபாண்டியார் திகைத்தபடி நின்றிருந்தார்.

சில நிமிடங்களில் அவர், போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். வேன் நகரத் தொடங்கியபோது, அங்கு வெளியே காத்திருந்த தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சிவலிங்கம், மாநகர பொருளாளர் அன்வர் உட்பட சிலர் வீதியில் உட்கார்ந்து மறித்தனர்.

அவர்களுடன் போலீஸ் கொஞ்சம் கடுமையாகவே நடந்து கொண்டது.

அவர்களை கைகளிலும் கால்களிலும் பிடித்து, அப்படியே தூக்கி வீதியிலிருந்து அகற்றினர் போலீஸார். அதையடுத்து லேசான தடியடி பிரயோகமும் நடத்தினர்.

ஆட்கள் அகற்றப்பட்டதையடுத்து, வீரபாண்டியாரை ஏற்றிய வேன் உட்பட ஏழு வாகனங்கள் வெளியில் வந்தன. இந்த வாகனங்கள் தடையில்லாமல் செல்வதற்கு ஏற்கனவே முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கோர்ட்வரை, பணியில் நின்றிருந்த போக்குவரத்து போலீசார் தயார் நிலையில் நின்றிருந்தனர். வீரபாண்டியாரின் வண்டி கிளம்பியதும் வாக்கி டாக்கி மூலம் அவர்கள் அனைவருக்கும் தகவல் பறந்தது.

இதனால், இடையே எங்கும் நிறுத்தப்படாமல் அனைத்து போலீஸ் வாகனங்களும் அதி வேகத்தில் பறந்தன. சினிமாவில் வரும் சேஸிங் காட்சிபோல வரிசையாகச் சென்ற வாகனங்கள், சேலம் கோர்ட் வளாகத்துக்கு அருகிலுள்ள நீதிபதியின் வீட்டு வாயிலில் போய் நின்றன.

வீட்டிலிருந்த நீதிபதி ஸ்ரீவித்யா இவர்களின் வருகைக்காக காத்திருந்தார்.

வழக்கமாக கிரிமினல் குற்றவாளிகளை ஆஜராக்கும் பாணியில் வீரபாண்டியாரை போலீஸார் இரு கைகளிலும் பற்றியபடி நீதிபதி ஸ்ரீவித்யா முன்னிலையில் கொண்டுபோய் நிறுத்தினர். குற்றவாளிகள் தப்பியோடி விடாதபடி அவர்களது இரு கைகளையும் போலீஸார் பற்றிக் கொள்வது வழக்கம்.

வழக்கின் விபரங்களை சரிபார்த்த நீதிபதி ஸ்ரீவித்யா, வீரபாண்டியாரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். முன்னாள் அமைச்சர் தலைகுனிந்த நிலையில் நின்றிருந்தார்.

முன்னாள் அமைச்சர் உட்பட ஐந்து பேர் மீது, சட்ட விரோதமாக நான்கு பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடுதல், அத்து மீறி உள்ளே நுழைதல், அச்சுறுத்தும் வகையில் கொலை மிரட்டல் விடுதல், அத்துமீறுதல், மிரட்டி பணம் பறித்தல், நிலத்தை அபகரித்தல், மிரட்டல் மூலம் அபகரித்துக் கொள்ளுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது போலீஸ்.

இந்த ஐந்து பேரில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை மட்டும் கைது செய்துள்ளதாக நீதிபதியிடம் தெரிவித்தனர் போலீஸார். அதையடுத்து அவரை வெளியே அழைத்துச் செல்லலாம் என சைகை செய்தார் நீதிபதி ஸ்ரீவித்யா.

உடனடியாக அவரை கைகளைப் பற்றி இழுத்த நிலையிலேயே வெளியே கொண்டுவந்த போலீஸார், கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காக மீண்டும் வேனில் ஏற்றினார்கள். வேனில் ஏற்றப்படும்போது தி.மு.க.வின் இந்த முன்னாள் அமைச்சர் கண் கலங்கினார்.

அவர் கண் கலங்கியதையும், அழுதுகொண்டே வேனில் ஏறியதையும் போலீஸார் எவரும் கண்டுகொள்ளவில்லை.

நேற்று காலை 11.35 மணியளவில், கோவை மத்திய சிறை வளாகத்துக்குள் வீரபாண்டி ஆறுமுகம் வந்த வாகனம் நுழைந்தது.

அப்போது, சிறை வளாகத்துக்கு முன் கூடியிருந்த தி.மு.க.,வினர், தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்கள் அனைவரையும், போலீசார் அப்புறப்படுத்தினர்.

கோவை சிறையில் வீரபாண்டி ஆறுமுகம் அடைக்கப்பட்டார்.

viruvirupu.com

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும் ; அ.தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம்.



சட்டசபை தேர்தலுக்கு பின்னர் முதல் முறையாக அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்தது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல் - அமைச்சர் ஜெயலலிதா முன்னிலை வகித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும்; என்று அ.தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

அ.தி.மு.க. செயற்குழுவின் தீர்மானம் விவரம் வருமாறு:-

* இந்திய நாட்டிற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கு விசாரணையில், பிரதமர் மீதும், மத்திய உள்துறை அமைச்சர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்னாள் மத்திய அமைச்சர் நீதிமன்றத்தில் கூறி இருக்கிறார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பல நாட்களாகியும், இதுகுறித்து பிரதமரோ, உள்துறை அமைச்சரோ எந்த விதமான பதிலையும் அளிக்கவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமாக இருப்பவரும் இதுகுறித்து தனது கருத்தைத் தெரிவிக்கவில்லை.

இந்த இமாலய ஊழலில் உள்ள உண்மையை தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இந்த நாட்டு மக்களுக்கு இருக்கிறது. மத்திய அரசிடமிருந்து முறையான பதிலை இந்த நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் வகையில், பிரதமர் மீதும், உள்துறை அமைச்சர் மீதும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன்சிங் அவர்களையும், மத்திய உள் துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களையும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அவர்களையும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

Saturday, July 30, 2011

கியாஸ் விலை உயர்வுக்கு இந்தியா - சீனா காரணம் ; ஒபாமா குற்றச்சாட்டு.

அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்: கியாஸ் விலை உயர்வுக்கு    இந்தியா-சீனா காரணம்;    ஒபாமா குற்றச்சாட்டு

கியாஸ் விலை உயர்வுக்கு இந்தியா- சீனாதான் காரணம் என அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார். எரிபொருள் வருகிற 2025-ம் ஆண்டில் அமெரிக்க வாகனங்களில் எரி பொருள் பயன்பாடு திறன் ஊக்குவிப்பு திட்டம் தொடக்க விழா வாஷிங்டனில் நடந்தது. அதில் அதிபர் ஒபாமா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த பல ஆண்டுகளாக எரிபொருள் விலை உயர்வால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளே காரணமாகும். ஏனெனில், அங்கு அதிக அளவில் எரிபொருள் பயன் படுத்தப்படுகிறது. அந்த நாடுகளில் தேவை அதிகரிப்பால்தான் அமெரிக்காவில் கியாஸ் விலை அதிகரித்துள்ளது. எனவே 2012 முதல் 2016-ம் ஆண்டிற்குள் குறைந்த அளவு எரிபொருள் கியாஸ் மூலம் அதிக தூரம் ஓடக் கூடிய கார்கள் மற்றும் எடை குறைந்த சரக்கு ஏற்றும் வாகனங்களை தயாரிக்கும்படி கம்பெனிகளுடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

போர்டு, ஜி.எம்., ஹோண்டா, ஹீண்டாய், டொயோடா உள்ளிட்ட முக்கிய கம்பெனிகளுடன் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இக்கம் பெனிகள் தயாரிக்கும் 90 சதவீத வாகனங்கள் அமெரிக்காவில் விற்பனை ஆகின்றன. வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணை அளவை குறைப்பதற்காகத்தான் இந்த ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

இவ்வாறு அதிபர் ஒபாமா பேசினார்.

மு.க. ஸ்டாலினை விடுவித்தது போலீஸ்.


திமுகவினரின் பெரும் போராட்டத்தைத் தொடர்ந்து, முன்னாள் துணை முதல்வர் முக ஸ்டாலினை விடுவிக்க போலீசாருக்கு உத்தரவிட்டது தமிழக அரசு.

இன்று காலை கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் மதியம் 2 மணி வாக்கில் விடுவிக்கப்பட்டார். ஸ்டாலினுடன் வந்த பழனிமாணிக்கம் உள்ளிட்ட திமுக தலைவர்களும் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக தனது கைது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "ஆகஸ்ட் 1-ம் தேதி திமுக நடத்தவிருக்கும் பெரும் அறப்போரை நசுக்கவே என்னைக் கைது செய்துள்ளது அதிமுக அரசு," என்று கூறியிருந்தார்.

அவரது கைதைக் கண்டித்து திமுகவினர் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று பிற்பகல் அவரை போலீஸார் விடுவித்துவிட்டனர்.

ஸ்டாலின் கைது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருவாரூர் மாவட்ட எஸ்பி, "ஸ்டாலினை நாங்கள் கைது செய்யவில்லை. மாணவர் ஒருவர் விபத்தில் இறப்பதற்குக் காரணமான சம்பவம் தொடர்பாக மாவட்ட திமுக செயலர் பூண்டி கலைவாணனிடம் விசாரணை நடத்த வந்தோம்; அவரை ஒப்படையுங்கள் என்றோம்.

அதற்கு ஸ்டாலின் தரப்பு மறுத்ததுடன் தானாகவே சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கைதாகினர். அவர்களை பாதுகாப்பாக திருவாரூர் அழைத்து வந்தோம். தற்போது, கலைவாணனை மட்டும் விசாரணைக்கு நிறுத்தி வைத்து, மற்றவர்களை விடுவித்துவிட்டோம்," என்றார் அவர்.

இதைத் தொடர்ந்து, கலைவாணனைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மண்டபத்தை விட்டு வெளியேறினர்.

நிலவாரப்பட்டி நில அபகரிப்பு வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் கைது !


சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கு மற்றும் சேலம் பிரிமியர் ரோலர் மில் நிலம் அபகரிப்பு வழக்குகளில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த வழக்குகளில் அவர் முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் சரண் அடைந்து 3 நாள் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அதன் பிறகு சேலம் கோர்ட்டில் ஜாமீன் வாங்கிக் கொள்ளலாம் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் அவர் சரண் அடைந்தார். அவரிடம் 3 நாட்கள் போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தினமும் காலை 8 மணிக்கு சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

நேற்று முன்தினமும், நேற்று காலையும் அவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு வந்து கையெழுத்து போட்டு சென்றார். இன்று காலை கையெழுத்து போட 7-50 மணிக்கே அவர் போலீஸ் நிலையத்தில் காத்து இருந்தார். ஆனால் 8-05 மணி வரை அவர் வெளியே வரவில்லை.

திடீரென்று போலீஸ் நிலையம் முன்பு நூற்றுக் கணக்கான துப்பாக்கி ஏந்திய போலீசாரும், அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டனர். ஏற்கனவே தி.முக. தொண்டர்களும் குவிந்து இருந்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை உருவாகியது. தொண்டர்கள் போலீஸ் அராஜகம் ஒழிக என்று கோஷம் எழுப்பினார்கள்.

போலீசாருக்கும், தி.முக.வினருக்கும் வாக்குவாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது. அப்போது துணை போலீஸ் கமிஷனர் சத்யப்பிரியா வந்தார். அதன் பிறகு வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டதாக அறிவித்தனர்.

பின்னர் வீரபாண்டி ஆறுமுகம் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். இதைப் பார்த்த தி.முக. தொண்டர்கள் ஆவேசம் அடைந்து வேன் முன்பு படுத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் தடியடி நடத்தி தி.மு.க. வினரை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் வீரபாண்டி ஆறுமுகத்தை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். பின்னர் அவர் அய்யந்திருமாளிகையில் உள்ள 4-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு ஸ்ரீவித்யா வீட்டில் ஆஜர் செய்யப்பட்டார். அவரை அடுத்த மாதம் 12-ந் தேதி வரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து அவரை கோவை மத்திய சிறையில் அடைக்க போலீசார் பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்றனர். தாசநாயக்கன் பட்டியைச் சேர்ந்த பாலமோகன் ராஜ் என்பவரின் ரூ 4 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்து கொண்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ரூ.4 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு

சேலம் நிலவாரப்பட்டியில் இருக்கும், பாலமோகன்ராஜ் என்பவரின் 20469 சதுரடி நிலம் சேலம், நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.

இந்த இடத்தை அப்போதைய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தனக்கு வேண்டும் என்று சொல்லுவதாக சொல்லி அனுப்பியதாக, பாரப்பட்டி சுரேசும், கவுசிகபூபதியும், 25.3.2007 அன்று தன்னை வந்து பார்த்து பேசியதாகவும், தனக்கு இடத்தை விற்க விருப்பமில்லை என்று சொன்னதாகவும், ஆனால் விடாமல் தொல்லை செய்து, 27.3.2007 அன்று காலையில், கவுசிகபூபதி தன்னை வந்து அழைத்துக்கொண்ட பூலாவாரியில் உள்ள அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வீட்டுக்கு கூடிப்போனதாகவும், அங்கிருந்த வீரபாண்டி ஆறுமுகம் தன்னை அடித்து, மாரியாதையாக நிலத்தை எழுதி கொடுக்கவேண்டும் என்று மிரட்டியதாகவும், அன்று, மாலை கவுசிகபூபதியும், பத்திரம் எழுதும் சுந்தரமும் தன்னை வந்து பார்த்து நிலம் சம்பந்தமான விவரங்களை கட்டாயமாக பறித்துக்கொண்டு சென்றதாகவும், பின்னர், 28.3.2007 அன்று காலையில் தனக்கு சொந்தமான நிலத்தை எழுதிவாங்கிக் கொண்டதாகவும், நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்துக்கு நாற்பது இலட்சம் மட்டும் கொடுத்து ஏமாற்றி விட்டதாகவும் பாலமோகன்ராஜ் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நிலம், சேலம் மாவட்டகாவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வந்தாலும், பாலமோகன்ராஜ் இடத்தை பறித்தது, பத்திரம் பதிவு செய்தது எல்லாம் சேலம் மாநகர எல்லையில் வருவதால் இந்த வழக்கை சேலம் மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிவு செய்துள்ளார்கள்.

வீரபாண்டி ஆறுமுகம், அவரது அண்ணன் மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிகபூபதி உட்பட எட்டுப்பேர் மீது வழக்கு பதிவு செய்து, அதில் வீரபாண்டி ஆறுமுகத்தை 306/1 உட்பட நான்கு பிரிவுகளில் கைது செய்துள்ளனர், சேலம் போலீசார்.

நேற்று இரவோடு இரவாக, சேலம் காவல்துறையில் வீரபாண்டி ஆறுமுகத்தின் விசிவாசியாக இருந்த காவல் துறை அதிகாரிகளான ஐ.எஸ்.இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, அழகாபுரம் இன்ஸ்பெக்டர் கண்ணன் இருவரும் இராமநாதபுரம் மாவட்டத்திற்கும்,கிச்சிப்பாளையம் தங்கவேலு திருநெல்வேலி மாவட்டத்திற்கும், அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சங்கர் விழுப்புரம் மாவட்டத்திற்கும் மாற்றப் பட்டுள்ளார்கள்.

திருவாரூர் அருகே மு.க. ஸ்டாலின் திடீர் கைது.



திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டார்.

திமுக பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் திருத்துறைப் பூண்டி அருகே மொழிப்போர் தியாகி தொடர்பான கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று இரவு தஞ்சாவூருக்கு வந்திருந்தார்.

பின்னர் இன்று காலை திருவாரூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். திருவாரூர் மாவட்ட எல்லையில், திருத்துறைப்பூண்டி அருகே கோவில்வன்னி என்னும் இடத்தில் அவருக்கு வரவேற்பு கொடுக்க திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட தி.மு.க.வினர் காத்திருந்தனர்.

அங்கே மு.க.ஸ்டாலின் வந்ததும், போலீஸார் அவரிடம் ஒரு விசாரணை உள்ளது என்று கூறினர். என்ன என்று கேட்டபோது, சமச்சீர் கல்வியை அமலாக்கக் கோரி திமுகவினர் போராட்டம் நடத்தியபோது பள்ளியில் இருந்து மாணவர்களை வலுக்கட்டாயமாக பஸ்ஸில் திரும்பி அனுப்பினர். அப்போது, கொரடச்சேரி அருகே பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளானதில், திமுகவினரால் திருப்பி அனுப்பப்பட்ட விஜய் என்ற மாணவர் விபத்தில் பலியானார்.

இதற்கு பூண்டி கலைவாணன்தான் காரணம். எனவே விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.

பூண்டி கலைவாணனை ஒப்படைக்க இயலாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சாலைமறியல் போராட்டமும் நடந்தது. இதனால் ஸ்டாலினையும் சேர்த்து திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர்கள் அழகு திருநாவுக்கரசு, மதிவாணன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், விஜயன் எம்.பி. உள்பட சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடைகள் அடைப்பு

ஸ்டாலின் கைதான சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது திமுகவினர் மத்தியில். திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திமுகவினர் தொடர்ந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் கைது .



திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்த மாணவன் விஜய். நேற்று காலை திமுகவினர் நடத்திய சமச்சீர் கல்விக்கு ஆதரவான வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தின் காரணமாக வகுப்புக்கும் செல்லாமல், போராட்டத்திலும் கலந்துகொள்ளாமல், இந்த மாணவன் கிளரியம் என்ற கிராமத்திற்கு அரசு பேருந்தில் ஏறிச் சென்றான்.

அப்போது எதிர்பாராத விதமாக அரசு பேருந்து கவிழந்ததில் இந்த மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேலும் 18 பேர் காயம் அடைந்தனர். இந்த பிரச்சனைக்கு மாணவர்களை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி வெளியில் அனுப்பியதால்தான், அந்த மாணவன் அந்த பேருந்தில் செல்ல நேரிட்டது. மாணவர்களை வெளியே அனுப்பியது திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் என்று போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுடன் காரில் செல்லும்போது கைது செய்துள்ளனர்.

திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனை கைது செய்ய வந்த போலீசாரிடம், அப்பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், என்ன வழக்கு என்று கூறாமல் ஒப்படைக்க முடியாது என்று கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவினரின் எதிர்ப்பை மீறிய போலீசார் பூண்டி கலைவாணனை கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்படியானால் தானும் வருகிறேன் என்று கூறி போலீஸ் வாகனத்தில் மு.க.ஸ்டாலின் ஏறினார். பூண்டி கலைவாணனுடன் மு.க.ஸ்டாலினும் போலீஸ் வாகனத்தில் சென்றுள்ளதால் அப்பகுதியில் உள்ள திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்துறைப்பூண்டி போகும் வழியில் உள்ள ஆலத்தம்பாடியில் போலீசார் பூண்டி கலைவாணனை கைது செய்தனர்.

இவர்களுடன் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், எம்பி ஏகேஎஸ் விஜயன், முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் மதிவாணன் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உள்பட 300 பேர் காவல்துறை வாகனத்தில் ஏறினர்.

வீரபாண்டி ஆறுமுகம் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.



காவல் நிலையத்துக்கு கையெழுத்து போடச் சென்ற வீரபாண்டி ஆறுமுகத்தை மீண்டும் கைது செய்தனர் போலீசார்.

30.07.2011 அன்று காலை 8 மணிக்கு குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு கையொப்பம் இடச் சென்ற திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை, வேறொரு வழக்கில் மீண்டும் கைது செய்த சேலம் போலீசார் அவரை கோவைக்கு அழைத்துச் சென்றனர்.

அவர் மீது இன்னொரு நிலப்பறிப்பு வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கே நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

வீரபாண்டி ஆறுமுகம் இன்று மீண்டும் கைது.



காவல் நிலையத்துக்கு கையெழுத்து போடச் சென்ற வீரபாண்டி ஆறுமுகத்தை மீண்டும் கைது செய்த போலீசார்.

அங்கமாள் நகர் மற்றும் பிரிமியர் மில் நில அபகரிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 25.07.2011 மற்றும் 26.07.2011, 27.07.2011 ஆகிய மூன்று நாட்களும் சேலம் மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார்.

மூன்று நாட்கள் போலீஸ் விசாரணைக்கு உட்பட்டிருந்த வீரபாண்டி ஆறுமுகம், 27ஆம் தேதி மாலை நீதிமன்றத்தால் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டார்.

நீதிமன்ற மறு உத்தரவு வரும்வரை தினமும் காலை 8 மணிக்கு சேலம் மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் கையொப்பம் இடவேண்டும் என்ற நிபந்தனையுடன் வீரபாண்டி ஆறுமுகம் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் 30.07.2011 இன்று காலை 8 மணிக்கு குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு கையொப்பம் இடச் சென்ற வீரபாண்டி ஆறுமுகத்தை, வேறொரு வழக்கில் மீண்டும் கைது செய்தனர்.

போலீசார் வீரபாண்டி ஆறுமுகத்தை வெளியே அழைத்துக் கொண்டு சென்று உள்ளார்கள்.

இன்று நீதிமன்ற விடுமுறையாக இருப்பதால், நீதிபதியின் வீட்டுக்கு அவரை காவல் நீடிப்பு செய்ய அழைத்துச்சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.

ஆடி அமாவாசை - அப்பாவுக்காக.....!



அமாவாசை


வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியிற் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் "பிதிர் காரகன்" என்கிறோம். சந்திரனை "மாதுர் காரகன்" என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும்.

ஆடி அமாவாசை

பித்ருக்களை வழிபட ஏற்ற காலம் ஆடி மாதம் இந்த மாதமே ஒரு புண்ணிய காலமாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

தினசரி வாழ்வில் பல சோதனைகளை,தடைகளை சந்திக்கிறோம். இவற்றில் பல தோல்விகளுக்கு காரணமே தெரியாது. எதுக்கு இவ்வளவு கஷ்டம் நமக்கு மட்டும் வருது என வேதனைப்படுபவர்கள் பலர். அவர்களுக்கு நான் சொல்லும் ஆலோசனை என்னவென்றால் உங்கள் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையா மல் அவர்களின் ஆசி உங்கள் வம்சத்துக்கு கிடைக்காமல் இருந்தால் உங்கள் வம்சத்தில் பிறக்கும் ஆண்கள், பெண்கள் கடும் துன்பத்திற்கு ஆளாவார்கள். பெண்களுக்கு மண வாழ்க்கை முறிவு, ஆண்களுக்கு தொழில் பாதிப்பு, கடன், வேலை செய்யுமிடத்தில் பல பிரச்சனைகள் என சந்திப்பார்கள்.

இதை தவிர்க்க உங்கள் வம்சத்தில் உங்களுக்கு முன்னால் பிறந்து வாழ்ந்த உங்கள் முன்னோர்களை நினைத்து அவர்களுக்காக ஆற்றின் கரைகளிலோ, கடல் கரைகளிலோ பித்ரு பூஜை, பித்ரு பரிகாரம், பிண்டம் வைத்து வழிபாடு செய்தல் நலம்.

பித்ரு பூஜைக்காக லட்சக்கணக்கிலோ ஆயிரக்கணக்கிலோ செலவு செய்ய வேண்டாம். எள், மாவு, வாழைக்காய் என சில பொருட்களை பிராமணர்களிடம் கொடுத்து இதற்கு முன் வாழ்ந்த என் வம்சத்தார் 32 தலைமுறையினருக்கு ஒரே சமயத்தில் ஆத்ம சாந்தி செய்யலாம்.இதை ஆடி அமாவாசையில் செய்தால் இந்த பரிகாரம் உடனே உங்கள் முன்னோர்களுக்கு சென்று சேரும். மகிழ்ச்சியில் உங்களை ஆசிர்வாதிப்பார்கள்.

அதன் பின் வீடு வந்து மதியம் காக்கைக்கு சாதம் வைத்து பிறகு உண்ணவும். அன்று மாமிசமோ, மதுவோ எடுத்துக்கொள்ளக்கூடாது. அன்றைய தினம் இரவு உங்கள் வீட்டிற்கு உங்கள் முன்னோர் வருவர். நீங்கள் உங்கள் தாத்தா, பாட்டியிடம் அதிக பிரியம், பாசத்தோடு இருந்தீர்களா..? அவர்கள் நிச்சயம் அன்று இரவு உங்களை தேடி உங்கள் வீட்டிற்கு வருவார்கள். உங்கள் தலையை தொடுவார்கள். இது அனுபவ உண்மை. அவர்கள் திருப்தியாக இருந்தால் இது நடக்கும்.

உங்கள் குடும்பத்தினர் யாராவது விபத்து போன்ற அகால மரணம் அடைந்து இருந்தால் அவர்களுக்கு ஆடி அமாவாசை அன்று கண்டிப்பாக பிண்டம் வைத்து வணங்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் உலகில் அவரது ஆத்மா சித்ரவதை படாமல் இருக்கும். ஆத்ம சாந்தியும் உண்டாகும். இல்லையெனில் அவர்களின் சிதைந்த உடலுக்கு திரும்ப அவர்கள் போராடுவார்கள். தங்கள் குடும்பத்தாரோடு பேச மிகவும் கஷ்டப்படுவார்கள். கண்ணீர் வடிப்பார்கள். தொட முடியாமல், தொடர்பு கொள்ள முடியாமல் வேதனையில் துடிப்பார்கள். அவர்களுக்கு கடவுளின் மடியில் தஞ்சம் புக நீங்கள் செய்யும் பிண்ட பூஜை மிக உதவியாக இருக்கும். என்ன நம்ப முடியவில்லையா. இது முற்றிலும் உண்மை.

தாய், தந்தை, தாத்தா, பாட்டிக்கு மட்டும்தான் பித்ரு பூஜை செய்யணுமா என்றால் இல்லை. இந்த உலகில் இறந்த எந்த மனிதருக்கும் நீங்கள் தர்ப்பணம் கொடுக்கலாம். இதனால் அந்த உயிரின் ஆத்மா சாந்தியடையும் என சாஸ்திரம் சொல்கிறது.

தாய், தந்தை, நெருங்கிய உறவுகள் நம்மை விட்டு போய் விடுகின்றனர். அவர்களுக்கு அமாவாசைகளில், சாஸ்திரப்படி தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்நாளில் தீர்த்தங்களில் எள்ளை விடுகின்றனர். வாழைக்காய் உள்ளிட்ட சில காய்கறி வகைகளைப் படைக்கின்றனர். திருவிளக்கு முன் பெற்றவர்களின் படங்களை வைத்து உணவு படைத்து பூஜை செய்கின்றனர். காகங்களுக்கும், ஏழைகளுக்கும் உணவளிக்கின்றனர். முன்னோருக்காக தர்ப்பணம் செய்யப்படும் எள், தண்ணீர், காய்கறி வகைகள், உணவு ஆகியவை அவர்களைப் போய்ச் சேருகிறதா என்பது பலரது சந்தேகம்.

ஏனெனில்,எள் தண்ணீரோடு போய் விடுகிறது. வாழைக்காய், அரிசி வகைகளை அந்தணர்கள் கொண்டு போய் விடுகின்றனர். வடை, பாயசம் உள்ளிட்ட உணவுகளை வீட்டில் இருப்பவர்களே சாப்பிட்டு விடுகின்றனர். இப்படியிருக்க, இது முன்னோரைப் போய் எப்படி சேர்ந்தது என்பது தான் சந்தேகத்திற்கான காரணம்.

இறப்புக்கு முன் நம் பெற்றோருக்கு எத்தனையோ சேவை செய்கிறோம். அது இறப்புக்குப் பின்னும் தொடர வேண்டும் என நம்பப்படுகின்றது.



பிதுர் தர்ப்பணம் செய்யாவிட்டால், பிதுர்களால் நமக்கு கிடைக்கும் ஆசி கிடைக்காமல் போய் விடும் என்று சொல்லப்படுகின்றது. உன் பிள்ளையை பொறுப்பற்றவனாக வளர்த்திருக்கிறாயே என பிதுர் தேவதைகள், அவர்களுக்கு தண்டனையும் தந்து, மோட்சத்திற்கு போக விடாமல் செய்து விடுவர் என்று சாஸ்திரம் சொல்கிறது. பெற்றவர்களின் ஆசியின்றி செய்யப்படும் எந்தச் செயலும் வெற்றி பெறாது என் அனைத்து இன மகான்களாலும் சொல்லப்படுகின்றது.

இந்தியாவில் இருப்பவர்கள் ஆடி அமாவாசையன்று மறக்காமல் தங்கள் பெற்றோருக்கு ராமேஸ்வரம், பாபநாசம், கன்னியாகுமரி, வேதாரண்யம் மற்றும் நதிக்கரை, கடற்கரை தலங்களுக்கு சென்று தர்ப்பணம் செய்து பிதிர்களின் நல்லாசியைப் பெறுகின்றனர்.
ஆடி அமாவாசை காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தருகின்றது என நம்பப்படுகின்றது.

ejaffna.blogspot.com

என்றும் இளமைக்கு யோகாவின் ரகசியங்கள், அர்த்தகாடி சக்ராசனம், சிக்கி ஆசனம்.

என்றும் இளமைக்கு யோகாவின் ரகசியங்கள்!

என்றும் இளமைக்கு யோகாவின் ரகசியங்கள்!

"யோகாசனம் என்பது, எமனையும் வெல்லும் அரிய கலை. தினந்தோறும் குறிப்பிட்ட ஆசனங்களுடன், உணவுமுறையில் ஒருசில மாறுதல்களோடு யோகாசனங்களைச் செய்து வந்தால் புற்றுநோய், மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறு உள்பட எந்த நோயையும் மருந்தே இல்லாமல் குணப்படுத்திவிடலாம்''.

``உடல், சுவாசம், மனதை இறைநிலை யோடு இணைப்பதுதான், யோகம் எனப்படுகிறது.

யோகத்தில் இமயம், நியமம், ஆசனம், பிராணா யாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்று 8 நிலைகள் உண்டு. இதில் நான்காவதாக வருவதுதான், யோகாசனம்!

யோகா என்ற சமஸ்கிருத சொல்லுக்கு `இணைதல்' என்று பொருள். நமது உடலையும் மனதையும் யோகா மூலம் ஒன்றிணைக்க முடியும். அப்படி ஒன்றிணைக்கும்போது அற்புதமான ஆற்றலைப் பெற முடியும். உலகில் 84 லட்சம் ஜீவராசிகளுக்கும் 84 லட்சம் யோகாசனங்கள் உண்டு.

ஆனால், இவை அத்தனையையும் விரிவாய் சொல்வாரும் இல்லை. செய்வாரும் இல்லை. ஆனாலும், இதில் குறிப்பிட்ட ஆசனங்களை நாள்தோறும் செய்துவந்தால், நீங்கள் `என்றும் பதினாறாக' இளமையுடன் திகழ முடியும். வாழ்நாள் முழுக்க நோய்-நொடியின்றி, ஆரோக்கியமாக நீடுழி வாழ இயலும்.

யோகா விதிமுறைகள்:

* யோகாசனம் செய்வதற்கு கருவிகளோ, சாதனங்களோ தேவையில்லை. ஒரு போர்வை மட்டும் இருந்தால் போதும்.

* தரையில் போர்வையை விரித்து இறை சிந்தனையோடு கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி ஆசனம் செய்ய ஆரம்பித்துவிடலாம்.

* யோகாசனம் செய்வதற்கு நிறைய விதிமுறைகள்-விதி விலக்குகள் உண்டு. அதிகாலையில் எழுந்து காலைக்கடன் முடித்து, குளித்து விட்டு, குறைந்த ஆடையுடன் வெறும் வயிற்றில் கீழே விரிப்பு விரித்து கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஆசனம் செய்ய வேண்டும்.

* இல்லற வாழ்வியலுக்கு கிழக்கு நோக்கியும், ஞானம்-ஆன்ம முக்திக்கு வடக்கு நோக்கியும் அமர்வது உத்தமம்.

* பொதுவாக, ஆசனங்களை முதலில் வலப்பக்கம் செய்து, பிறகு இடப்பக்கமாக செய்யவேண்டும்.

* அதிகாலை 4-6 மணிக்குள் யோகாசனம் செய்து முடிப்பது சாலச்சிறந்தது.

* குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது யோகாசனம் செய்ய வேண்டும்.

* உணவு உட்கொண்டபிறகு 3 அல்லது 4 மணிநேரம் கழித்து யோகாசனம் செய்யலாம்.

* இதில் திரவ உணவுகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு.

* முழுநேர கண் விழிப்பு நோயால் தூக்க மின்மை, இல்லறத்தில் கூடிய நாள், எண்ணெய் தேய்த்து குளித்த நாள், நீண்டதூர பயணம், வீட்டில் நன்மையோ தீமையோ ஏற்பட்ட நாள், மாதவிடாய், மகப்பேறு காலம், மனச்சோர்வு, களைப்பு, மனநிலை சரியின்மை ஆகிய நேரங்களில் யோகா செய்வதைத் தவிர்ப்பது நல்லது.


அர்த்தகாடி சக்ராசனம்
அர்த்தகாடி சக்ராசனம்

செய்முறை:

இரு கால்களையும் பக்கவாட்டில் 3 அடிதூரம் அகட்டி வையுங்கள். கைகளிரண்டையும் செங்குத்தாக மேலே தூக்கவும். நின்ற நிலையில் உடம்பை மட்டும் அப்படியே சரித்து வலதுகையால், வலதுகால் பாதத்தைத் தொடுங்கள். அப்போது இடதுகை இயல்பாக தொங்கட்டும்.

முழங்கால்கள் மடங்கலாகாது. அடுத்தபடியாக இடதுகையால், இடதுகால் பாதத்தை தொடுங்கள். அப்போது வலதுகை, இயல்பாக தொங்கட்டும். இயல்பான சுவாசத்தில் 20 விநாடிகள் இருந்து, பிறகு ஆசனத்தைக் கலையுங்கள்.

பயன்கள்:

பெருந்தொந்தி குறையும். சிறுகுடல், பெருங்குடல் இரண்டும் நன்றாக இயங்கும். பெண்களுக்கு கர்ப்பப்பை, சினை முட்டை உற்பத்தி சீராகும். மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும்.

பின்பகுதி, புட்டங்கள், தொடைப் பகுதி, தொப்புள் பிரதேசம், கீழ் அடிவயிற்று பகுதிகளின் சதை குறையும். அர்த்தகாடி சக்ராசனத்தை தொடர்ந்து செய்கிற ஆண்-பெண் இருபாலருக்கும் பிடியிடை கிட்டுவது உறுதி.


சிக்கி ஆசனம்
சிக்கி ஆசனம்

செய்முறை:

இரு கால்களையும் பக்கவாட்டில் 3 அடிதூரம் அகட்டி வையுங்கள். கைகளிரண்டும் தலையில் கோர்த்திருக்கட்டும். நின்றநிலையில் உடம்பை மட்டும் அப்படியே வலதுபுறம் திருப்பி, முடிந்தவரையில் பின்பக்கம் பார்க்கவும். அடுத்தபடியாக இடதுபுறம்! இயல்பான சுவாசத்தில் 15 விநாடிகள் இருந்து, பிறகு ஆசனத்தை கலையுங்கள்.

பயன்கள்:

கால்வலி, குதிகால் பிடிப்பு நீங்கும். உடம்பின் பக்கவாட்டு தசைகள் குறையும். புட்டப்பகுதி எடையும் குறையும்! சிறுநீரகம் நன்கு இயங்கும். இதயம், காற்று சிற்றறைகள் நன்கு இயங்கி மூச்சு சம்பந்தமான நோய்கள் தீரும். பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். காலில் ஊளைச்சதை, மூட்டுப் பிடிப்பு உடையோர், தொடைச்சதையை குறைக்க விரும்புவோருக்கு உகந்த ஆசனமிது.

Friday, July 29, 2011

திமுகவின் மாணவர் ஸ்டிரைக் பிசுபிசுத்தது - வழக்கம்போல வகுப்புகள் நடந்தன.


திமுக அழைப்பு விடுத்த வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் இன்று பிசுபிசுத்தது. பெரிய அளவில் பள்ளிகளில் வகுப்புகள் பாதிக்கப்படவில்லை. பள்ளிக்கூடங்கள் முன்பு போராட்டம் நடத்திய திமுகவினர் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டனர்.

சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரி இன்று வகுப்புகளைப் புறக்கணிக்குமாறு மாணவர்களுக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது. 'மாணவச் செல்வங்கள்' வகுப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியும் கோரிக்கை விடுத்தார்.

இந்த போராட்டத்தில் தாங்களும் இணைவதாக சில மாணவர் அமைப்புகள் அறிவித்திருந்தன.

அதன்படி இன்று காலை மாநிலம் முழுவதும் திமுகவினர் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் குழுமி போராட்டத்தில் குதித்தனர். அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரியில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தை முறியடிக்கும், திமுகவினர் மாணவர்களை கட்டாயப்படுத்தி, மிரட்டி போராட்டத்தில் கலந்து கொள்ள வைப்பதைத் தடுக்கும் வகையிலும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பள்ளிகள், கல்லூரிகள் முன்பு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மதுரையில் சொதப்பலான திமுக ஆர்ப்பாட்டம்:

மதுரையில் முன்னாள் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி தலைமையில் 300க்கும் மேற்பட்ட திமுகவினர் தபால் நிலையம் அருகில் திரண்டு சமச்சீர் கல்விக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். 15 நிமிடங்களிலேயே இந்த ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டனர்.

இந்தப போராட்டத்தில் மதுரை மேயர், துணைமேயர், திமுக மாவட்ட செயலாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இது திமுகவினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நெல்லையில் பூங்கோதை கைது

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நெல்லை டவுன், செங்கோட்டை, சிவகிரி, வாசுதேவநல்லூர் ஆகிய 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாளையங்கோட்டை போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா கலந்து கொண்டார். பள்ளியை நோக்கிப் பேரணியாக செல்ல முயன்ற அவர் உள்ளிட்ட 25 பேரை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். கூட்டம் அதிகம் இல்லாததால் பூங்கோதை உள்ளிட்டோர் சாவகாசமாக நடந்து போலீஸார் ஏற்பாடு செய்திருந்த பஸ்சில் ஏறிச் சென்றனர்.

பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின:

இந்தப் போராட்டத்தால் பள்ளிகளில் வகுப்புகள் எந்த அளவிலும் பாதிக்கப்படவில்லை.

அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கின. மாணவர்களும், ஆசிரியர்களும் வழக்கம்போல் பள்ளிக்கு வருகை தந்தனர்.

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் திமுகவினர் சிலர் பள்ளிகளின் முன்பாக நின்று பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளை தடுத்து ரகளை மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை உடனடியாக போலீஸார் தடுத்து அப்புறப்படுத்தினர்.

போலீஸ் பாதுகாப்புடன் பள்ளி பஸ்கள் ஓடின

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கின. பள்ளி வாகனங்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. பள்ளிகளுக்கு முன்பாக போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது.

பள்ளிகளின் முன்பாக சமச்சீர் கல்வியினை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திமுகவினர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு மாலையில் வெளியே விடப்பட்டனர்.

முன்னதாக இப்போராட்டம் சமச்சீர்க் கல்வி திட்டம் தொடர்பான பிரச்சினையை திசை திருப்புவதாக உள்ளது என்று தமிழக அரசு கண்டித்திருந்தது. மேலும், இன்று பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதுகுறித்து தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை மூலம் பிறப்பித்த உத்தரவில்,

தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை நடைபெற வேண்டும். காலை 11 மணிக்குள் வருகைப் பதிவு நிலவரம் குறித்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்ப வேண்டும். அவர்கள் அந்தத் தகவல்களைச் சென்னைக்குத் தெரிவிக்க வேண்டும்.இதுகுறித்து எல்லா பள்ளிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பள்ளி வளாகத்திலேயே இருப்பதை உறுதி செய்யுமாறும், மாணவர்கள் வெளியில் இருந்தால் பள்ளிக்கூட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டால் தக்க போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

பள்ளிக்கு வரும் மாணவர்களை எக்காரணம் கொண்டும் இடையில் வெளியில் அனுமதிக்கக் கூடாது. மதிய உணவை காரணம் காட்டி மாணவர்கள் வெளியேற அனுமதிக்கக் கூடாது.

பள்ளிகளுக்கு வராத ஆசிரியர்கள் பட்டியலை அரசு உயர் அதிகாரிகளுக்கு மாவட்ட கல்வி நிர்வாகம் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

திமுகவைக் கண்டித்து நாளை மெட்ரிக் பள்ளிகள் போராட்டம்:

இதற்கிடையே திமுகவின் போராட்ட அறிவிப்புக்கு நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் கிறிஸ்துராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்தப் போராட்டம் தேவையற்றது, இதில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். அனைத்துப் பள்ளிகளும் வெள்ளிக்கிழமை திறந்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் தமிழக நர்சரி, தொடக்க, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் சார்பில் திமுகவின் போராட்டத்தைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் என்ன அலங்கார பொம்மையா? - கடுப்பில் பாக் அமைச்சர் ஹினா ரப்பானி கர்.



இந்திய பத்தரிக்கைகள் தன் ஆடை, அலங்காரத்தைப் பற்றி அதிகம் எழுதியதால் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் கடுப்பாகியுள்ளார்.

பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர். அந்நாட்டின் பணம் படைத்த, சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் பதவியேற்ற சில நாட்களில் இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்தியாவுக்கு பேச்சுவார்த்தை நடத்த வந்த அவர் என்ன பேசப் போகிறார், என்ன பேசினார் என்பதை விட அவரது உடையலங்காரம், ஸ்டைல் ஆகியவை குறித்து தான் இந்திய ஊடகங்கள் அதிகமாக செய்திகள் வெளியிட்டன. அவர் வகை வகையான சுடிதார்கள், வைரக் கம்மல், முத்துமாலை, டிசைனர் கண்ணாடி, டிசைனர் பேக், விலை உயர்ந்த கோட் அணிந்து வலம் வந்தார். இதுதான் பெரிதாக பேசப்பட்டது, எழுதப்பட்டது, பார்க்கப்பட்டது.

பேச்சுவார்த்தையை மறந்துவிட்டு அலங்காரத்தைப் பற்றி செய்திகள் வெளியிட்டதால் இந்திய ஊடகங்கள் மீது கர் கோபம் கொண்டுள்ளார். டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு லாகூர் திரும்பிய அவரை செய்தியாளர்கள் விமான நிலையத்தில் சந்தித்தபோது தனது எரிச்சலை வெளியிட்டார். நிருபர்களைப் பார்த்த அவர் எரிச்சலுடன் எங்கு போனாலும் பத்திரிக்கையாளர்கள் தான் மொய்க்கிறார்கள். நீங்கள் இது போன்ற காரியங்களைச் செய்யக் கூடாது என்று கூறிவிட்டு விருட்டென்று இஸ்லாமாபாத் புறப்பட்டுப் போய் விட்டார்.

தர்மபுரி மாவட்ட நூலகத்தில் 40 ஆயிரம் புத்தகங்களுடன் இலவச சிவில் சர்வீசஸ் மையம்.



தர்மபுரி மாவட்டம் கல்வி வளர்ச்சியில் தமிழக அளவில் பின்தங்கிய நிலையில் உள்ள மாவட்டகளில் ஒன்றாக உள்ளது. இருந்தபோதிலும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த படித்த இளைஞர்கள் இடையே போட்டித் தேர்வுகளை எழுதும் ஆர்வம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பலர் இதனை கருத்தில் கொண்டு தர்மபுரி மாவட்ட மைய நூலகத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வுகள் உள்பட அனைத்து விதமான போட்டிதேர்வுகளுக்கும் பயன்படும் அனைத்து விதமான புத்தகங்களும் அடங்கிய இலவசமையம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்தொடங்கப்பட்டது.

சில ஆயிரம் புத்தகங்களுடன் தொடங்கப்பட்ட இந்த மையம் தற்போது சுமார் 40 ஆயிரம் புத்தகங்களுடன் விரிவடைந்த மையமாக செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கடந்த ஆண்டில் மட்டும் போட்டி தேர்வுகளுக்கு பயன்படும் 4 ஆயிரம் புத்தங்கள் புதிதாக வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்தை பயன்படுத்த நூலக உறுப்பினராக வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனால் இந்த மையத்திற்கு வந்து அங்குள்ள புத்தகங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சமீப காலமாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த மையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் டிபன் பாக்ஸ்களில் மதிய உணவை எடுத்து சாப்பிட்டு விட்டு நாள் முழுவதும் இந்த மையத்திலேயே இருந்து போட்டி தேர்வுகளுக்கு படித்து வருகிறார்கள்.

இதுபற்றி மாவட்ட நூலக அதிகாரி விஜயலட்சுமி கூறியதாவது:-

தர்மபுரி மாவட்ட மைய நூலகத்தில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 247 புத்தகங்கள் உள்ளன. 20 ஆயிரத்து 942 நூலக உறுப்பினர்கள் உள்ளனர். இங்குள்ள சிவில் சர்வீசஸ் மையம் சுமார் 40 ஆயிரம் புத்தகங்களுடன் செயல்பட்டு வருகிறது. காலை முதல் மாலை வரை தொடர்ந்து செயல்படும் இந்த மையத்தில் போட்டி தேர்வு களுக்கு தயார் செய்பவர்கள் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

தர்மபுரி மாவட்ட மைய நூலகத்தில் அமைக்கப்பட் டுள்ள சிவில் சர்வீசஸ் தேர்வு மையத்தில் குரூப்-1 குரூப்-2 உள்ளிட்ட போட்டி தேர்வுகளின் மாதிரி வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை போட்டி தேர்வுக்கு தயார் செய்யும் மாணவ - மாணவிகள் இளைஞர்களுக்கு மிகவும் உதவியாக அமைந்துள்ளது.

நூலகத்தில் உள்ள அனைத்து புத்தகங்களையும் பார்கோடிங் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்தால் நூலக சேவை மற்றும் பராமரிப்பு எளிதாகும். இவ்வாறு அவர் கூறினார்.

என்ஜினீயரிங் படிப்பு : கிராமப்புற மாணவர்கள் ஆர்வத்துடன் சேருகிறார்கள் ; கலந்தாய்வில் பாதி இடங்களை நிரப்பினர்.

என்ஜினீயரிங் படிப்பு: கிராமப்புற மாணவர்கள் ஆர்வத்துடன் சேருகிறார்கள்; கலந்தாய்வில் பாதி இடங்களை நிரப்பினர்

தமிழகத்தில் உள்ள 500 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வருகிறது. ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

கடந்த வாரம் வரை கலந்தாய்வு மூலம் 37,506 பேருக்கு ஒதுக்கீட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அதிக அளவில் கிராமப்புற மாணவர்கள் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிராமப்புறங்களில் இருந்து வந்த 16,158 மாணவ-மாணவிகள் பல் வேறு பாடப்பிரிவுகளை ஆர்வத்துடன் தேர்வுசெய்து கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கிராம பஞ்சாயத்து பகுதியை சேர்ந்தவர்கள்.

கிராமப்புறங்களில் என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்த மாணவர்களில் 4524 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரும், 4420 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரும் ஆவர். கிராமப்புறங்களில் வந்து சேர்ந்த மாணவர்களை போன்று நகராட்சி பகுதிகளில் 7769 பேரும், மாநகராட்சி பகுதியில் இருந்து 6741 பேரும், பேரூராட்சி பகுதியில் இருந்து 5647 பேரும் பி.இ. படிப்பில் சேர்ந்துள்ளனர். டவுன்ஷிப் பகுதியில் இருந்து மிகக்குறைந்த அளவில் 1191 மாணவ-மாணவிகள் ஒதுக்கீட்டு கடிதம் பெற்றுள்ளனர்.

மொத்தம் விண்ணப்பதாரர்களில் பாதிக்கு மேல் கிராமப்புற மாணவர்கள் இடம் பெற்றனர். என்ஜினீயரிங் படிப்பில் சேர 68 ஆயிரம் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களும், 34 ஆயிரம் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களும், 18 ஆயிரம் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் விண்ணப்பித்துள்ளனர்.

ஓ.சி. பிர்வை சேர்ந்த 9500 மாணவர்களும், கலந்தாய்வில் பங்கேற்கிறார்கள். கிராமப்புற மாணவர்கள், நகர்புறங்களை நோக்கி உயர்கல்விக்காக வரும் நிலை அதிகரித்து வருகிறது. என்ஜினீயரிங் கல்லூரிகள் நிறைய புதிதாக தொடங்கப்படுவதால் கிராமப்புற மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் எளிதாக சேருகிறார்கள்.

அழகான பெண் என்பதால் கடத்தினேன் : அதிர்ச்சி வாக்குமூலம் அளித்த காவல் ஆய்வாளர்.



கல்லூரி மாணவியைக் கடத்திப் பாலியல் வன்கொடுமை செய்த காவல்துறை ஆய்வாளருக்குக் காவல்துறை சலுகை காட்டுவதைக் கண்டித்து 28.07.2011 அன்று திருச்சி காதிகிராஃப்ட் தொடர்வண்டிச் சந்திப்பு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமைப் பேரவை, தமிழ்நாடு மற்றும் மகளிர் ஆயம், தமிழ்நாடு ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன.

கடந்த சூன் மாதம் 24ஆம் தேதி இரவு 11 மணியளவில் தன் சொந்த ஊருக்குச் செல்வதற்காகத் தன் ஆண் நண்பருடன் திருச்சி பேருந்து நிலையத்தில் பேருந்திற்காகக் காத்திருந்த பொறியியல் கல்லூரி மாணவியை, திருச்சி தீண்டாமை ஒழிப்புப் பிரிவு ஆய்வாளர் கண்ணன் மிரட்டி தனது காரில் கடத்திச் சென்றார். நள்ளிரவு 2.00 மணியளவில் புதுக்கோட்டைப் பேருந்து நிலையத்தில் அந்த மாணவியை இறக்கிவிட்டுள்ளார்.

கடத்தல் நடந்த அன்றே கடத்தியது ஆய்வாளர் கண்ணன்தான் என்று தெரிந்த பின்னரும் சூலை 4ஆம் தேதி வரை கண்ணனைக் கைது செய்யாமல் இருந்தது காவல்துறை என்பது குறிப்பிடத்தக்கது.

இக்குற்றச் செயலுக்கு ஆய்வாளர் கண்ணன் மீது வெறும் கடத்தல் வழக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதி கண்ணனின் பிணை மனுவைத் தள்ளுபடி செய்துள்ளார்.

நள்ளிரவில் மாணவியைக் கடத்தி உள்ள கண்ணன் மீது பாலியல் வன்கொடுமை நடந்தது பற்றி விசாரணை செய்யப்படவில்லை. “அந்தப் பெண் அழகாக இருந்ததால் கடத்தினேன்“ என்று காவல்துறையிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான் கண்ணன்.

கடத்திச் சென்ற மாணவியை கீரனூர் அருகே ஒரு குவாரியில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறை தனது புலன் விசாரணையில் மௌனம் சாதித்து வருகிறது.

கடத்தப்பட்ட மாணவி மருத்துவப் பரிசோதனைக்கும் உட்படுத்தப்படவில்லை.

கடத்தப்பட்ட மாணவி மற்றும் அவளது நண்பனின் வாக்கு மூலங்கள் காவல்துறையால் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை.

கடத்தல் கண்ணனின் வழக்கை புலன் விசாரணை செய்யும் அவனது பால்ய நண்பர் சிகாமணி பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் கற்பழித்த்தற்கான காயங்கள் இருந்ததை மறைத்திருக்கிறார்.

இந்த வழக்கில் மாணவி கடத்தப்பட்ட நள்ளிரவு 12.00 மணிமுதல் 2.00 மணி வரை இரண்டு மணி நேரம் அந்த மாணவிக்கு நடந்தது என்ன என்பதை சட்ட ஒழுங்கு காவல்துறை வேண்டுமென்றே தன் சக காவல்துறை நண்பரைக் காப்பாற்றுவதற்காக உண்மைகளை மறைக்கிறது. அந்த இரண்டு மணி நேரத்தில் அந்த மாணவிக்கு நடந்த கொடுமைகள் புலன் விசாரணையில் வெளிக் கொணரப் படவேண்டும்.

மாணவி கடத்தப்பட்ட வழக்கில் சட்டம் ஒழுங்கு காவல்துறை சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றவேண்டும். உரிய குற்றப் பிரிவுகளில் கண்ணனின் மீது வழக்குப் போடவேண்டும்.

காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் பெண் முதல்வர் பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணிற்கு ஏற்பட்டுள்ள அவமானத்திற்கும் அநியாயத்திற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றமிழைத்தவர்களும் குற்றத்தை மறைத்தவர்களும் தண்டிக்கப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆய்வாளர் கண்ணனையும், அவனுக்குச் சலுகை காட்டும் காவல்துறையையும் கண்டித்து கண்டனை உரையாற்றினார்கள்.

சமூகப் பொறுப்புள்ள ஆண்களும் பெண்களும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாகக் கலந்து கொண்டு காவல்துறைக்கு எதிராகவும் ஆய்வாளர் கண்ணனுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பினார்கள்.

ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகளும் – சிகிச்சையும்.



ஃப்ளூ என்று பொதுவாக அழைக்கப்படும் இன்ஃப்ளூயன்சா என்பது ஒரு வைரஸ் காய்ச்சல். இது மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரல் ஆகிய உறுப்புகளைத் தாக்குகிறது.

மூச்சுக் குழல் எனப்படும் சுவாசக் குழலைப் பாதிக்கும் மற்ற வைரஸ்களைவிட இன்ஃப்ளூயன்சா வைரஸ், தீவிரமாக நோய்க் கிருமிகளையும், சிக்கல் நிறைந்த நோய்த்தன்மையையும் கொண்டது. இன்ஃப்ளூயன்சா ஏ, பி மற்றும் சி ஆகிய 3 வைரஸ்களால் இந்த காய்ச்சல் ஏற்படலாம். இதில் ஏ ரக வைரஸ் பரவலாக தொற்றக் கூடியது, இது தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்டது.

இந்த ஏ டைப் வைரஸ் சீரான முறையில் வளர்ந்து சில ஆண்டு களுக்கு ஒரு முறை தொற்று நோய்ப் பரவலை ஏற்படுத்தக் கூடியது. இதில் டைப் பி, டைப் சி வைரஸ்களால் சிறு சிறு உபாதைகளே தோன்றி மறையும்.

இன்ஃப்ளூயன்சாவிற்கு வயது வித்தியாசமோ, வயது வரம்போ கிடையாது. யாருக்கு வேண்டுமானாலும், எப்போதும் இந்த வைரஸ் காய்ச்சல் ஏற்படலாம். பொதுவாக குளிர்காலத்திலேயே இந்தவகை வைரஸ் காய்ச்சல் தொற்றக்கூடியது. இந்த காய்ச்சல் ஏற்பட்டோரின் இருமல், சளி ஆகியவை மூலம் இது பிறருக்கும் தொற்றுகிறது.

இன்ஃப்ளூயன்சா திடீரென, உடனடியாகத் தோன்றும். முதலில் அதிக காய்ச்சல், குளிர், வேர்வை, தசை வலி மற்றும் தலைவலி போன்ற தொடக்க அறிகுறிகள் ஏற்படும். தொடர்ந்து மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை கட்டு மற்றும் சூரிய ஒளிக்கு ஒத்துக் கொள்ளாமல் கண்ணீர் வழியும் கண்கள் என்று இதன் நோய் அறிகுறிகள் விரிவடையும். இந்த உடனடி தீவிர அறிகுறிகள் சாதாரணமாக 3 அல்லது 5 நாட்களுக்கு இருக்கும், பொதுவாக 48 மணி நேரத்தில் நோய்க்கூறுகள் அதிகரிக்கத் தொடங்கும்.

ஃப்ளூ வைரஸ்களால் கூடுதலாக, எலும்பு உட்புழை, காது மற்றும் மூச்சுக்குழல் ஆகியவற்றில் தொற்றுக் கிருமிகள் ஏற்படுகின்றன. சில சமயம் ஃப்ளூவால் நியுமோனியா ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. நியுமோனியாவானது இன்ஃப்ளூயன்சா வைரசால் மட்டுமோ அல்லது இரண்டாம் கட்ட நோய்க்கிருமிக்கு காரணமாகும் பாக்டீரியாவாலோ தோன்றலாம்.

அறிகுறிகள்

  • 104 டிகிரி வரை காய்ச்சல்
  • தலைவலி
  • தசைவலி மற்றும் பிடிப்பு
  • மூக்கிலிருந்து தண்ணீர் போல் சளி வருதல்
  • இருமல்
  • மூச்சு விடுதலில் சிரமம்
  • நடுக்கம்
  • தளர்ச்சி
  • வியர்வை
  • பசியின்மை
  • மூக்கடைப்பு
  • தொண்டைக்கட்டு

இது சாதாரண ஃப்ளூ காய்ச்சலாக இருந்தால் மருத்துவர்கள் காய்ச்சல் எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளைக் கொடுத்து கட்டுப்படுத்துவர். ஆனால் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், வயதானவர்கள், இருதயம், நுரையீரல் மற்றும் கிட்னி ஆகியவற்றில் நீண்ட நாளைய பழுது இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா வைரஸ் இருப்பது 48 மணி நேரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டால் அமான்ட டின், ரிமான் டடின் ஆகிய வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் அளிக்கப் படுவது இயல்பு.

குழந்தைகளை இந்த வைரஸ் நோய் தாக்கினால் சிகிச்சை பொதுவாக தேவையில்லை என்று கருதப்படுகிறது. ஆனால் இதன் மூலம் வேறு நோய்கள், வேறு உறுப்புகளில் பழுது என்ற நிலை தோன்றுவதுபோல் தென்பட்டால் சிகிச்சை அவசியம் தேவைப்படும். குழந்தைகளுக்கு ஆஸ்ப்ரின் கொடுக்கக் கூடாது, ஏனெனில் இது ஆபத்து மிகுந்தது ஆஸ்ப்ரினுக்கும் ஒரு புதுவகை ஃப்ளூவிற்குமான தொடர்பு நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தண்ணீர், பழச்சாறுகள் மற்றும் திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ளுதல் அவசியம்.

அதிக திரவங்களை உட்கொண்டால் எலும்பு உட்புழை மற்றும் நுரையீரலில் உள்ள சளிச்சவ்வு மெலிதடைந்து உடலிலிருந்து விரைவில் வெளியேறும்.

பொதுவாக இன்ஃப்ளூயன்சா காய்ச்சலை குறைக்காமல் அதன் முழுக்காலத்தை கடக்கவிடுவதே சிறந்தது. ஆனால் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் சிகிச்சை அவசியம் தேவை. இது பிறருக்கு தொற்றாமல் இருக்க பாக்டீரியா – தடுப்பு சோப்பை பயன்படுத்தி அடிக்கடி கை கழுவுதல் நலம்.

பிற உறுப்புகளில் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா தாக்கினால், மேலும் சிக்கல் நிறைந்த நோய்களை உருவாக்க வாய்ப்பிருக்கிறது என்பது தவிர இதனால் பெரும் ஆபத்து எதுவும் இல்லை.

ஆரோக்கியமாக இருந்து வரும் நபர்களுக்கு இன்ஃப்ளூயன்சா 7 முதல் 10 நாட்களில் குணமாகி விடும். வயதானவர்கள், உடல் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், நீண்ட நாள் இருதய, கிட்னி மற்றும் நுரையீரல் நோய் இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா வைரஸ் மேலும் ஆபத்தானதாக மாறுவதற்குக் கூட வாய்ப்புகள் அதிகம்.

2ஜி - பிரதமர் அனுமதியோடுதான் எல்லாம் நடந்தது ! பெகுராவும் குற்றச்சாட்டு.


2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுராவும் பிரதமர் மன்மோகன் சிங் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

ஏற்கெனவே இந்த வழக்கில் பிரதமர் மீது ஆ.ராசா குற்றசாட்டியுள்ள நிலையில், இப்போது பெகுராவும் பிரதமரைக் குற்றம் சாட்டியுள்ளார். 2ஜி அலைக்கற்றை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில், பெகுரா தரப்பு வழக்குரைஞர் அமன் லேகி கூறியுள்ளது:

முதலில் வருபவருக்கு முதலில் ஒதுக்கீடு என்ற அடிப்படையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதற்கு பிரதமர்தான் ஒப்புதல் அளித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அலைக்கற்றை ஒதுக்கீடு கோருவதற்கான தேதியை முன்னதாகவே முடித்துக் கொள்ளவும் பிரதமர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனை அட்டார்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதியும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

சொலிசிட்டர் ஜெனரல் உள்ளிட்டோர் இதில் அனுமதி அளித்துள்ள நிலையில், அரசு அதிகாரியான பெகுரா, இந்த கொள்கை விஷயத்தில் தலையிட முடியாது.

மத்திய அமைச்சரவை கூறியபடிதான் செயல்பட முடியும். தவறு இருப்பதாகத் தோன்றினால் பிரதமர்தான் தலையிட்டிருக்க வேண்டும் என்று பெகுரா தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவரது தரப்பு வழக்குரைஞர் அமன் லேகி இது தொடர்பாக நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சுமார் 3 மணி நேரம் வாதாடினார். அரசு உருவாக்கிய கொள்கையின்படிதான் பெகுரா நடந்து கொண்டார்.

அலைக்கற்றை ஒதுக்கீட்டு கொள்கையை அவர் உருவாக்கவில்லை. இந்த வழக்கில் சாட்சியாக வேண்டுமானால் பெகுராவைச் சேர்க்கலாம். குற்றவாளியாக சேர்த்திருக்கக் கூடாது என்றார் அவர்.

மேலும் 2007ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ப.சிதம்பரமும், சுப்பா ராவும் கலந்துகொண்ட தாகவும், இந்த கூட்டத்தில் தான் 2ஜி அலைக்கற்றையை ஏலம் விடாமல் உரிமங்களை ஒதுக்குவதற்கான முடிவு
எடுக்கப்பட்டதாகவும் பெகுரா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னதாக இந்த ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மீதும், மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மீதும் ஆ.ராசா குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிதம்பரம் மீது குற்றச்சாட்டு-கபில்சிபல் மறுப்பு:

இந் நிலையில் 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் நிதித்துறைச் செயலாளராக இருந்த டி.சுப்பா ராவ் ஆகியோர் மீது தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெகுரா கூறியுள்ள குற்றச்சாட்டுகளை மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல் மறுத்துள்ளார்.

இது குறித்து கபில் சிபல் கூறுகையில், பெகுரா தெரிவித்தபடி ப.சிதம்பரமும், சுப்பாராவும் கலந்துகொண்டதாக கூறப்படும் 2007ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி கூட்டம் நடைபெற்றதற்கான ஆதாரம் ஏதுமில்லை.

2008ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தொலைத்தொடர்புத்துறை செயலாளராக பணியில் சேர்ந்த பெகுரா, 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி நடைபெற்ற கூட்டம் பற்றி குறிப்பிடுவது வியப்பளிப்பதாக உள்ளது. மேலும் அவர் கூறிய கருத்துக்கு ஆதரவாக ஆவணம் எதையும் காட்டவில்லை என்றார்.

மிருகங்களை விட மோசமான கொடூர புத்திகொண்டது இலங்கை ராணுவம்...



தமிழர்களின் நாக்குகளை துடிக்க துடிக்க அறுத்து எரிந்தனர் : சிங்கள ராணுவ வீரர் அதிர்ச்சி வாக்குமூலம்.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்த போது ராணுவ வீரர்கள் தமிழர்களின் நாக்குகளை அறுத்ததாகவும், நிராயுதபாணிகளாக சரண் அடைந்த விடுதலைப்புலிகளை சுட்டுக் கொன்றதாகவும் சிங்கள ராணுவ வீரர் ஒருவரே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே உச்சக்கட்ட போர் நடந்த போது மனிதாபிமானமற்ற கொடூர செயல்களில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.

தமிழ் வாலிபர்களை நிர்வாணமாக்கி கண்களை கட்டி ஈவு இரக்கமின்றி அவர்கள் சுட்டுக்கொன்ற காட்சிகள் இங்கிலாந்து நாட்டின் `சேனல் 4' டெலிவிஷனில் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் உலகம் முழுவதிலும் இருந்து இலங்கை அரசுக்கு எதிராக கண்டன கணைகள் பாய்வதோடு, போர்க்குற்றம் புரிந்த அதிபர் ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் சிங்கள ராணுவத்தினர் நடத்திய கோர தாண்டவங்கள் ஒவ்வொன்றாக `சேனல் 4' டெலிவிஷன் அம்பலப்படுத்தி வருகிறது.

இறுதிக்கட்ட போரின் போது சரண் அடையும் விடுதலைப்புலிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக அதிபர் ராஜபக்சே உறுதி அளித்தார். அவரது பொய்யான வாக்குறுதியை நம்பி ஏராளமான விடுதலைப்புலிகள் சரண் அடைந்தனர்.

அவரது வாக்குறுதியை நம்பி சரண் அடைந்த விடுதலைப்புலிகளை ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டுக்கொல்லுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு, ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். கோத்தபய உத்தரவிட்டதும், சரண் அடைந்த விடுதலைப்புலிகளை சிங்கள ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக்கொன்றனர்.

இந்த தகவலை அப்போது அருகில் இருந்த இலங்கை ராணுவத்தின் 58-வது படைப்பிரிவின் ராணுவ வீரர் ஒருவரே உறுதிப்படுத்தி உள்ளார்.

அதன்பிறகு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிரிகேடியர் சவேந்திர சில்வா பதவி உயர்வு அளிக்கப்பட்டு தற்போது நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் துணைத்தூதராக பணியாற்றுகிறார்.

போரின் இறுதி நாட்களில் நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை நேரில் கண்டவரும், அங்கு சாதாரண படை வீரர்களில் ஒருவராக இருந்தவருமான பெர்னாண்டோ என்ற ராணுவ வீரர் `சேனல் 4' டெலிவிஷனுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ள தகவல்கள் கல் மனதையும் கரையச் செய்வதாக உள்ளது.

அவர், ‘’என்னுடைய சக ராணுவ வீரர்கள், கண்ணில் பட்ட அப்பாவி மக்களை எல்லாம் மிருகத்தனமாக சுட்டுக்கொன்றனர். மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர். துடிக்க துடிக்க அவர்களுடைய நாக்குகளை அறுத்து எரிந்தனர். பெண்கள், முதியவர்கள், குழந்தைகளையும் கூட விடாமல் கொன்று குவித்தனர்.

அப்படி கொல்லப்பட்டவர்கள் யாரும் விடுதலைப்புலிகள் அல்ல. சாதாரண குடிமக்கள்தான்.

பெண்களை அடித்து உதைத்து துன்புறுத்தி கற்பழித்தனர். அந்த கொடூரத்தை தடுக்க முயன்ற அவர்களுடைய பெற்றோர்களை அந்த இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். மருத்துவமனையில் தமிழ் இளம்பெண் ஒருவரை எனது சகாக்கள் 6 பேர் சேர்ந்து கற்பழித்த கோரத்தை என் கண்களாலேயே பார்த்தேன்.

இலங்கை ராணுவத்தினரின் இதயங்கள் மிருகங்களை விட மோசமாக இருந்தது. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் சிதறிக்கிடந்ததை பார்த்தேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

750 இடங்களை நிரப்ப மருத்துவப் படிப்பு : 2-வது கட்ட கவுன்சிலிங் தொடங்கியது.

750 இடங்களை நிரப்ப மருத்துவ படிப்பு: 2-வது கட்ட    கவுன்சிலிங் தொடங்கியது

மருத்துவப் படிப்பு 2-வது கட்ட கவுன்சிலிங் இன்று தொடங்கியது. தமிழ்நாட்டில் 17 அரசு மருத்துவக் கல்லுரியில் 1653 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளது. இதற்கான கவுன்சிலிங் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டது. இதில் எஸ்.சி. மற்றும் பி.சி. பிரிவுக்கான 5 இடங்கள் தவிர அனைத்து இடங்களும் நிரம்பி விட்டது.

கடந்த 22-ந்தேதி கல்லூரி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இன்று தொடங்கியது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 599 அரசு இடங்கள் உள்ளது. மேலும் புதிதாக அனுமதி அளிக்கப்பட்ட மாதா மருத்துவக் கல்லூரி மற்றும் திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மூலம் 150 இடங்கள் அரசுக்கு கிடைக்கிறது. இதன் மூலம் இந்த எண்ணிக்கை 750ஆக உயர்த்துள்ளது. இவைகள் தவிர ஏற்கனவே காலியாக இருக்கும் 5 இடங்களுக்கான கவுன்சிலிங் இன்று தொடங்கியது.

இன்றைய தினம் 500 மாணவ - மாணவிகள் அழைக்கப்பட்டு இருந்தன. இதுதவிர பல் மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங்கும் இன்று நடக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரியில் 73 இடங்களும் தனியார் பல் மருத்துவ கல்லூரியில் 847 இடங்களும் நிரப்பப்படுகிறது. வருகிற 4-ந்தேதி வரை கவுன்சிலிங் நடக்கிறது.