Wednesday, June 15, 2011

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் கலெக்டர் மகள் !




மேல்தட்டு மக்கள் பலரும் தம் பிள்ளைகளை மெட்ரிக் வழிக்கல்வி, ஆங்கில வழிக்கல்வி, சி.பி.எஸ்.ஈ வழிக்கல்வி என்று இவற்றில் ஏதாவது ஒன்றில் சேர்த்தால்தான் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்கும் என்றொரு நம்பிக்கை கொண்டுள்ளனர். அது அவர்களுக்கு பெருமையும் கூட.

நடுத்தர வர்கத்தினருக்கு மேற்கண்ட பள்ளிகளில் ஏதாவது ஒன்றில் கடன் பட்டாவது தம் பிள்ளைகளை சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்னும் எண்ணம் ஒரு கௌரவ பிரச்சனையாக வெளிப்படுகிறது.

உளவியலோடு உற்றுப்பார்த்தால், தனக்கு கிடைக்காத கல்வி தன் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும். தான் அடைய முடியாத இலக்குகளை தன் பிள்ளைகள் அடையவேண்டும். அவர்களது உயர்வுதான் தனது வாழ்க்கையின் உயர்வு. என்னும் இரண்டரக்கலந்த எண்ணம் பெற்றவர்களை புரட்டிப் போட்டுவிடுகிறது.

அதனாலேயே அரசுப் பள்ளியில் தான் படித்தது போதும். தன் பிள்ளைகள் கான்வென்ட் பள்ளியில் படிக்க வேண்டும். ஆங்கிலம் பேசவேண்டும், அது தான் அவனது எதிர்கால கல்லூரி படிப்பிற்கு துணை நிற்கும். என்பன போன்ற எண்ணங்கள் மேலும் வலுசேர்த்துவிடுகிறது.

அடித்தட்டு மக்களும், வறுமையோடு போராடியாவது ஆங்கில வழிக்கல்வியில் மாதச்சம்பளம் செலுத்தி சேர்த்துவிடுகின்றனர். இந்நிலை தொடரமுடியாமல் பாதியிலே நின்று போகக்கூடிய சூழலும் உண்டு. இருந்தபோதும் என் பிள்ளை இங்கிலீஸ் மீடியத்தில் படிக்கிறான் என்று கேட்பவர்களிடம் சொல்லும்போது எதையோ எட்டிப்பிடித்த சாதனை உணர்வு மனதினில் நிறைவது உண்மையாகவே படுகிறது.

அரசுப் பள்ளிகளில் தரம் இருக்காது, பிள்ளைகள் கெட்டுப் போய் விடுவார்கள், சரியாக படிக்க மாட்டார்கள், சமூகத்தில் மரியாதை இருக்காது என்பது இவர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.

மேல்நிலைமக்களாகட்டும்,நடுத்தரவர்கத்தினராகட்டும்,அடித்தட்டுமக்களாகட்டும் யாருக்குமே குழந்தைகளின் சுமை தெரிவதில்லை., அவர்களின் கண்களுக்கும், மூளைக்கும் குழந்தைகளின் சிரமம் புரிவதில்லை சில நேரங்களில் ஆசிரியர் களுக்கும் கூட.

இப்படிப்பட்ட சமூக எதார்தத்தின் ஊடே முகத்தில் அறைந்த மாதிரி ஒரு நிகழ்வு.

ஒரு மாவட்ட கலெக்டர் தனது பிள்ளையை சாதாரண ஒரு அரசுப் பள்ளியில் 2வது வகுப்பில் சேர்த்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

அவர் ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார். இவர் நேற்று தனது மனைவி டாக்டர். ஸ்ரீவித்யா, மகள் கோபிகா ஆகியோருடன் ஈரோடு, குமலன் குட்டை பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக் கூடத்திற்கு வந்தார். நேற்றுதான் விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் பள்ளிக்குள் அலைமோதிக் கொண்டிருந்தனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியை ராணி புதிய மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். ஈரோடு தொடக்க கல்வி அதிகாரி அருள்மொழி, மாணவர் சேர்க்கைப் பணியை பார்வையிட்டுக் கொண்டு இருந்தார்.

அப்போது கலெக்டர் அங்கு வந்ததால், என்னவோ ஏதோ என்று அவரை நோக்கி தலைமை ஆசிரியையும், தொடக்கக் கல்வி அதிகாரியும், ஆசிரியர்களும் விரைந்து வந்தனர். அப்போது அவர்களிடம் தனது மகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்க வந்திருப்பதாக கலெக்டர் கூறவே அவர்களுக்கு அதிர்ச்சியானது. பிறகுதான் அவர்கள் சுதாரித்து தலைமை ஆசிரியை அறைக்கு கலெக்டர் குடும்பத்தினரை அழைத்துச் சென்றனர்.

அங்கு தலைமை ஆசிரியை தனது இருக்கையில் கலெக்டரை அமரச் சொன்னார். அதை மறுத்து விட்ட கலெக்டர் பெற்றோர்கள் வந்து அமருவதற்காக போடப்பட்டு இருந்த நீண்ட பெஞ்ச்சில் அமர்ந்தார்.

பிறகு தனது மகளை தமிழ் மீடியத்தில் 2வது வகுப்பில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து அதை தலைமை ஆசிரியையிடம் கொடுத்தார். பின்னர் கோபிகாவை பள்ளியில் 2ஆம் வகுப்பில் சேர்த்தனர்.

மேலும் பள்ளியின் வளர்ச்சிக்காக செயல்படும் புரவலர் திட்டத்துக்கு ரூ. 2000 வழங்கி, அத் திட்டத்தில் கலெக்டர் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

என் குழந்தையும் பள்ளியில் சத்துணவு சாப்பிடுவாள். இலவச சீருடை அவளுக்கும் கொடுங்கள் என்று கூறியுள்ளார்.அதன் பின்னர் தனது மகள் சத்துணவு சாப்பிடவும், சீருடை அணியவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார் கலெக்டர்.

பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்ட கோபிகா தனது வகுப்புக்குச் சென்று மற்ற பிள்ளைகளுடன் அமர்ந்து படிக்க ஆரம்பித்த காட்சி அனைவரையும் வியக்க வைத்தது.

கலெக்டர் வந்து தனது மகளை அரசுப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டு, சத்துணவும் சாப்பிட ஏற்பாடு செய்து விட்டுச் சென்ற சம்பவம் அந்தப் பள்ளிக்கூடத்தை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஈரோடு மாவட்டத்திற்குமே இது மிகப் பெரிய செய்தியாக அமைந்துள்ளது. ஏன் தமிழக மக்களுக்கும் இது பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசு அலுவலகத்தில் சாதாரண அலுவலக உதவியாளர் வேலை பார்ப்பவர் கூட தனது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் பெரும் பணம் கொடுத்து சேர்க்கத் துடிக்கும் நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஒருவர் சாதாரண அரசுப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தது ஆச்சரியமாகவே உள்ளது.

ஆனால் கலெக்டர் ஆனந்தகுமாருக்கு இது பெரிய விஷயமாகவே இல்லை. தனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்ததை அவர் விளம்பரப்படுத்தவும் விரும்பவில்லை. மாறாக இது எனது தனிப்பட்ட விஷயம் என்று மட்டும் அடக்கமாக அவர் கூறினார்.

தனது செயலின் மூலம் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் மறைமுகமாக ஒரு செய்தியை விட்டுச் சென்றுள்ளார் கலெக்டர் ஆனந்தக்குமார். அரசுப் பள்ளிகள் தரமானவையே, அங்கு படிக்க வைப்பதால் குழந்தைகளுக்கு ஒன்றும் ஆகி விடாது. அரசுப் பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் அரசு ஊழியர்களாவது மதிப்பும், மரியாதையும்,அங்கீகாரமும் தர வேண்டும் என்பதே அது.

கலெக்டரின் மகள் படிக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை இனி பொதுமக்கள் உயர்வாக பார்க்கக்கூடும். ஆசிரியர்களும் தமது பணியினைச் செவ்வனே செய்தாக வேண்டும். அல்லது மாறி வரும் ஆசிரியர்கள் அதைச் செய்வார்கள்.

அதைப் போலவேதான் சத்துஉணவும், இலவச சீருடையும் இன்னபிறவும். ஒரு பள்ளியை நெறிபடுத்திய பெருமைக்கு உரியவராகிறார், ஈரோடு மாவட்ட கலெக்டர்.

தமிழ்வழியில் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்கள் தான் இன்றளவும் சாதனை யாளர்கள். குறிப்பாக கிராமங்களில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். இந்த வருடம்கூட 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கூட இதை நோக்கியே பயணிக்கிறது. இனியும் பயணிக்கும், இதன் பயன் இனிக்கும்.

இந்தியாவின் மிக பலம் வாய்ந்த கார்ப்பரேட் நிறுவணங்கள், நிரா ராடியா கைதை தடுத்து வருகிறது.



சிபிஐ இயக்குநர் ஏ.பி.சிங்கை அரசியல் தரகர் நீரா ராடியா இன்று திடீரென நேரில் சந்தித்துப் பேசினார்.

பல்வேறு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் பெற்றுத் தருவதில் முக்கிய பங்கு வகித்தவர் நிரா ராடியா. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுடன் சேர்ந்து கொண்டு சில நிறுவனங்களுக்கு நிரா ராடியாவும் உதவியதாக குற்றச்சாட்டு உள்ளது.

இதையடுத்து இவரை சிபிஐ, அமலாக்கப் பிரிவினர், வருமான வரித்துறையினர் கண்காணித்து வந்தனர். இவரது தொலைபேசியை வருமான வரித்துறையினர் ஒட்டுக் கேட்டபோது தான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பல உண்மைகள் வெளியில் வந்தன.

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது ராசாவுக்கு தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பதவியைப் பெற்றுத் தந்ததிலும் நிரா ராடியாவுக்கு முக்கிய பங்குள்ளதும், சில முன்னணி தொழிலதிபர்கள் சார்பில் ராசாவுக்காக ராடியா 'லாபி' செய்ததும் அவரது தொலைபேசி பேச்சுக்கள் மூலம் தெரியவந்தது.

2ஜி ஊழல் வழக்கில் மொத்தம் 125 பேரை சிபிஐ சாட்சிகளாக சேர்த்துள்ளது. அதில் நிரா ராடியாவின் பெயர் 44வது சாட்சியாக இடம் பெற்றுள்ளது.

இதனால் நிரா ராடியாவும் கைதாவார் என்று கருதப்பட்டது. ஆனால், இவருக்கு ஆதரவாக இந்தியாவின் மிக பலம் வாய்ந்த கார்ப்பரேட் லாபி செயல்பட்டு, இவரது கைதை தடுத்து வருவதாகக் கூறப்பட்டு வருகிறது.

இந் நிலையில் சிபிஐ தனது 3வது துணை குற்றப்பத்திரிகையை ஜூலை முதல் வாரத்தில் தாக்கல் செய்யவுள்ளது. அதில் ராடியாவின் பெயர் இடம் பெறலாம் என்று கூறப்படும் நிலையில், இன்று நிரா ராடியா திடீரென சிபிஐ இயக்குநரை சந்தித்தார்.

டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் இன்று இந்தச் சந்திப்பு நடந்தது. சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பின்போது நிரா ராடியா தனது தரப்பு நியாயத்தை விளக்கியதாகத் தெரிகிறது. மேலும் 2ஜி விவகாரம் தொடர்பாக சில ஆவணங்களையும் அவர் சிங்கிடம் சமர்பித்ததாகத் தெரிகிறது.

2ஜி வழக்கின் சாட்சிகளில் ஒருவரான நிரா ராடியா சிபிஐ அதிகாரிகளை சந்திக்க உரிமை உள்ளதாக சிபிஐ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

லோக்பால் மசோதாவுக்கு 'நேர்மையான' மன்மோகன் சிங் தயங்குவது ஏன்?



லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும். இதில் தன்னையும் உள்படுத்திக் கொள்ள நேர்மையான மன்மோகன் சிங் ஏன் தயங்க வேண்டும் என்று அன்னா ஹசாரே கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கும் அரசு உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வகை செய்யும் வகையில் லோக்பால் சட்டத்தை கடுமையாக்கக் கோரி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது.

மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், ஹசாரேவை உள்ளடக்கிய லோக்பால் மசோதா வரைவுக் கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்தக் கமிட்டியின் அடுத்த கூட்டம் நாளை நடைபெறுகிறது. இத நிலையில் அன்னா ஹசாரே மற்றும் இந்தக் கமிட்டியில் இடம் பெற்றுள்ள மக்கள் பிரதிநிதிகளான அர்விந்த் கெஜரிவால், வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ஆகியோர் நிருபர்களிடம் பேசுகையில்,

ஊழல் குற்றம் சாட்டப்படுவோரிடம் விசாரணை நடத்தி அவர்களிடம் இருக்கும் ஊழல் சொத்தை பறிமுதல் செய்ய வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், சிறை தண்டனை வரை வழங்கும் அதிகாரம் கொண்டதாக லோக்பால் மசோதா அமைய வேண்டும்.

இந்த நாட்டை 6,000 சமூக சேவை செய்வோர் குழப்புகிறார்கள், என்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருக்கிறார். இது போன்ற தேவையற்ற கருத்துகளை சொல்வதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கமிட்டியின் தலைவராக இருக்கும் அவர், முன்னுக்கு பின்னாக சர்க்கசில் பல்டி அடிப்பது போல கருத்துக்களை மாற்றி மாற்றி பேசி வருகிறார். கமிட்டியில் இடம் பெற்று இருக்கும் 5 அமைச்சர்களுமே எங்கள் செயல்பாட்டுக்கு எதிராகவே இருக்கிறார்கள்.

லோக்பால் சட்ட வரம்புக்குள் மத்திய அமைச்சர்களை உட்படுத்துவதில் இதுவரை எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால் பிரதமரைச் சேர்ப்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இதில் பிரதமரையும் சேர்க்க வேண்டும். சேர்க்கா விட்டால், இது பெரிய பின்னடைவை ஏற்படுத்தி விடும்.

இதுபற்றி, உங்கள் நிலை என்ன? எங்களுக்கு தெளிவு படுத்துங்கள், என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, கடிதம் அனுப்பி இருக்கிறோம். மோசடி செய்யாத, உண்மையாக உழைக்கும் நேர்மையான பிரதமர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவர். அப்படியிருக்க மன்மோகன் சிங், ஏன் லோக்பால் மசோதாவுக்கு பயப்பட வேண்டும்?.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமீபத்தில் ஹசாரேவைத் தாக்கி பேசியிக்கிறார். அவர் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க முகமூடியை அணிந்திருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இது தவறு. சோனியாவின் கருத்து, லோக்பால் சட்டத்தை உருவாக்கும் பணிக்கு தடை ஏற்படுத்தும். இதை அவரும், மத்திய அமைச்சர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஏற்கனவே மத்தியஅரசு தெரிவித்தபடி ஆகஸ்டு 15ம் தேதிக்குள் நாடாளுமன்றத் தில் , கடுமையான, உறுதியான லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையேல் 16ம் தேதி ஹசாரே தனது போராட்டத்தை தொடங்குவார்.

நாட்டில் சமூக- அரசியல் மாற்றம் ஏற்படுவதை யாரும் தடுக்க முடியாது. இதை அரசியல் தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றனர்.

சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் ஹசாரே-காங்கிரஸ் தாக்கு:

இந் நிலையில் அன்னா ஹசாரே, சர்வாதிகாரி போல் செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி, அன்னா ஹசாரே. பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியோரை பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக தாக்கினார்.

தேர்ந்தெடுக்கப்படாத சர்வாதிகாரி போல் செயல்படும் நபரால் ஜனநாயகத்துக்கு பேராபத்து ஏற்பட்டு இருப்பதாகவும், தேசத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் சக்திகளின் கருவியாக அவர் செயல்படுவதாகவும் திவாரி குற்றம் சாட்டினார்.

சென்னை வக்கீலின் மகன் கொலை - சேலம் டாக்டரின் பரபரப்புத் தகவல் .



சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சங்கர சுப்புவின் காணாமல் போன மகன் சதீஷ்குமாரை கொலை செய்து விட்டு உடலை ஏரியில் வீசியதாக புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பரபரப்புத் தகவலை சேலத்தைச் சேர்ந்த டாக்டர் பிருத்விராஜ் என்பவர் கூறியுள்ளார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கலைச்செல்வி என்ற நர்ஸ் கொலை வழக்கில் குற்றவாளிகள் பிடிபடுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். போலீஸாருக்கு எதிரான வழக்குகளில்தான் இவர் பெரும்பாலும் ஆஜராவார் என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றில் பெரும்பாலானவற்றில் வெற்றியும் பெற்றவர் இவர். இவர்தான் தற்போது சதீஷ்குமார் மரணம் குறித்த புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

சதீஷ்குமாரின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் உள்ளன. இக்காயங்கள் அனைத்தும் அவர் தண்ணீரில் மூழ்குவதற்கு முன்னர் ஏற்பட்டது போல தெரிகிறது. கொலை செய்து அவரை 16 மணி நேரத்துக்கு மேல் வெளியில் எங்கோ வைத்திருந்து, அதன் பின்னர் ஏரியில் அவரை தூக்கி வீசியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். இதற்கான தடயங்களும், சதீஷ்குமாரின் உடலில் காணப்படுகிறது.

தண்ணீரில் மூழ்குவதற்கு முன்னர் அவரது உடல் அழுகி புழுக்கள் தோன்றியதற்கான அறிகுறிகளும் காணப்பட்டுள்ளன. இது போன்ற நோய்களில் பூச்சியல் நிபுணர்களை வைத்து பிரேத பரிசோதனை செய்திருக்க வேண்டும்.

ஏரியில் 5 நாட்களுக்கு மேல் சதீஷ்குமாரின் உடல் கிடைத்துள்ளது. ஆனால் அவர் அணிந்திருந்த செருப்பு காலிலேயே இருந்துள்ளது. காலை விட்டு எடுக்க முடியாத அளவுக்கு செருப்பு பற்றிக் கொண்டிருந்தது. கொலையாளிகளுடன் போராடும் போது தான் இது போன்று ஏற்பட வாய்ப்புள்ளது. சதீஷ்குமார் தற்கொலை செய்திருந்தால் மறுநாளே உடல் மிதந்திருக்கும். மூக்கில் இருந்து நுரை தள்ளியிருக்கும். இது போன்ற அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை. திட்டமிட்டு நடத்தப்பட கொலை போலவே உள்ளது என்று அவர் கூறினார்.

பிரதேப் பரிசோதனை முடிந்தது

இந்த நிலையில் சதீஷ்குமாரின் உடல் இன்று பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. காலை 8.15 மணிக்கு பிரேத பரிசோதனை தொடங்கியது. அரசுத் தரப்பில் டாக்டர்கள் சாந்தகுமார், முருகேஷ், சங்கர சுப்பு தரப்பில் டாக்டர் சம்பத்குமார் ஆகியோர் இதில் ஈடுபட்டனர். விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு உடன் இருந்தார். சங்கரசுப்பு சார்பில் ஒரு வீடியோகிராபரும், அரசு சார்பில் ஒரு வீடியோகிராபரும் இருந்தனர். ஒரு அரசுத் தரப்பு புகைப்படக்காரரும் உடன் இருந்தார்.

பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உடலை வேனில் ஏற்றினர். அப்போது அங்கு திரண்டிருந்த வக்கீல்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் போலீஸாரை எதிர்த்து கோஷமிட்டனர். அவர்களுடன் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், வழக்கறிஞரும், சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த மாணவர்கள் மோதல் வழக்கில் தொடர்புடையவருமான ஆம்ஸ்டிராங்கும் உடன் இருந்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு ஒத்திகை.



மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த ஹைதராபாத் திலிருந்து 80 விரைவு அதிரடிப்படை வீரர்கள் வரவுள்ளனர்.

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டலும் பயங்கரவாத அச்சுறுத்தலும் தொடர்ந்து வந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மாதந்தோறும் மத்திய உளவுத் துறை அறிவுரை வழங்கி வருகிறது.

இதை உள்ளூர் காவல்துறையினர் செயல்படுத்துகின்றனரா என, மாநில நுண்ணறிவுப் பிரிவு மற்றும் மத்திய உளவுத் துறை அதிகாரிகளும் ஆய்வு செய்கின்றனர்.

இதற்கிடையே மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, முக்கிய கோவில் தலங்களைப் பாதுகாக்க மத்திய அரசு, விரைவு அதிரடிப் படையை உருவாக்கியது. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் போது எந்தெந்த வகையி்ல் அதை முறியடிக்கலாம் என்பது குறித்து, இப்படை வீரர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன்படி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் ஒத்திகை நடத்த ஜூன் 17ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அதிரடிப்படை முகாமிலிருந்து 80 வீரர்கள் 2 கமாண்டர்கள் தலைமையில் மதுரை வருகின்றனர்.

23ம் தேதி மதுரையில் முகாமிடும் இவர்கள் கோவிலில் பயங்கரவாதிகளை முறியடிக்கும் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபடவுள்ளனர்.

இலங்கையை கண்காணிக்க ஜெயலலிதா ஆர்வம்



இலங்கையில் இன்னமும் முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்த சரியான தகவலைப் பெற்றுத் தாருங்கள் என பிரதமர் மன்மோகன் சிங்கைக் கோரியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

பாரதப் பிரதமரிடம், முதல்வர் ஜெயலலிதா இந்தக் கோரிக்கையை முன்வைத்த போது, இலங்கை விவகாரங்களைக் கவனிக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனும் அங்கிருந்தார். சமீபகாலமாக, இலங்கை அரசுடன் தமிழ் மக்கள் தொடர்பான தகவலை விட சிவசங்கர் மேனன் ஊடாகவே இந்திய அரசு கையாண்டு வருகின்றது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்தியப் பிரதமரைச் சந்திக்குமுன் இலங்கை தொடர்பான பல துணிச்சலான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை இந்தியா கொண்டுவரவேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் ஒன்றும் அவரால் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதனால் பிரதமருடனான சந்திப்பின்போது, இலங்கை தொடர்பான பேச்சுக்களும் இடம்பெறும் என்பதை ஊகித்தே, சிவசங்கர் மேனனும் பிரதமர் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

“இலங்கையிலுள்ள முகாம்களில் இன்னமும் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதில் மாறுபட்ட தகவல்கள் வந்துகொண்டிருக் கின்றன. இதை மத்திய அரசு சரிபார்க்க வேண்டும். தவிர, அங்குள்ள நிலைமைகளை நேரில் ஆராய்ந்து வருவதற்காக தமிழகத்தின் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் குழுவை அனுப்ப அனுமதிக்க வேண்டும்” என்ற கோரிக்கையும் தமிழக முதல்வரால் பிரதமரிடம் முன்வைக்கப்பட்டது.

இன்னமும் எத்தனை பேர் இருக்கிறார்கள் முகாம்களில்?

இதற்குமுன், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கைக்குச் சென்று திரும்பியிருந்தது. அந்தக் குழுவில் தி.மு.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் உறுப்பினர்களே இடம்பெற்றிருந்தனர்.

தற்போது ஜெயலலிதா, “தமிழக சட்டசபையின் உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்த்துவர வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். தனது கட்சியைச் சேர்ந்தவர்களையும், தோழமைக் கட்சியினரையும் மாத்திரம் அனுப்புமாறு கோராமல், அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றை அனுப்பவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்தக் கோரிக்கைக்கு இணங்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறது மத்திய அரசு.

கடந்த மாதம், தீவிரவாத விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவராக சர்வதேச ஊடகங்களில் குறிப்பிடப்படும், பேராசிரியர் ரொஹான் குணரட்ண, முதல்வர் ஜெயலலிதாவை இலங்கைக்கு அழைக்க வேண்டும் என இலங்கை அரசுக்கு ஆலோசனை கூறியிருந்தார்.

இவர் சிங்கப்பூரில் இயங்கும் International Centre for Political Violence and Terrorism Research (IC PVTR) அமைப்பின் தலைவர்.

“சமீபத்தில் அமெரிக்க ராஜாங்க அமைச்சின் துணைச் செயலாளர் ராபர்ட் பிளேக் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். யுத்தம் நடைபெற்ற வன்னிப் பகுதிக்கு நேரில் சென்று அங்கு நடைபெறும் அபிவிருத்தி வேலைகளை நேரில் கண்டுவிட்டுச் சென்றிருக்கின்றார். அதுபோலவே, தமிழக முதல்வரையும் அழைத்து வன்னியில் நடப்பவற்றை நேரில் பார்க்கும்படி செய்யவேண்டும்” என்றும் அவர் இலங்கை அரசுக்கு ஆலோசனை கூறியிருந்தார்.

ரொஹான் குணரட்ண, இலங்கை அரசின் பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவராகச் செயற்படுபவர் என்று பரவலாகக் கூறப்படுகின்றது.

இந்த விதத்தில், இந்திய அரசு தமிழக சட்டசபை உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கை செல்வதற்காக அனுமதி கோரினால், இலங்கை அரசு அதற்கு அனுமதி வழங்கும் என்றே ஊகிக்கலாம்.

தமிழகத்திலிருந்து இலங்கை பற்றிய குரல்கள் தற்போது அதிகமாக எழத்தொடங்கியுள்ளன. இந்த நிலையில், மத்திய அரசும் தமிழக எம்.எல்.ஏ.க்களின் குழுவொன்றை அங்கு அனுப்பிவைக்கவே விரும்பும்.

டில்லியில் பிரதமரை சந்தித்து விட்டு திரும்பிய பிறகு நிருபர்களிடம் பேசிய முதல்வர் ஜெயலலிதா, “இலங்கையில் எத்தனை பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றி முரண்பட்ட தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இலங்கை அரசாங்கம், வெறும் 10 ஆயிரம் பேர் மட்டுமே முகாம்களில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தனியார் தொண்டு நிறுவனங்களோ, அதை விட அதிகமான எண்ணிக்கையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றன. இதில் எது உண்மை என்பது பற்றி ஆராய்ந்து, உண்மையை கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இலங்கையுடன் தற்போது மத்திய அரசே டீல் பண்ணிக்கொண்டிருக்கின்றது. மாநிலஅரசு மட்டத்தில், இலங்கையின் நேரடியான தகவல்கள் தேவை என்று ஜெயலலிதா கோருகின்றார்.

நிர்வாக விசயங்களில் முடிவெடுக்குமுன், துல்லியமான தகவல்களைக் கையில் வைத்திருக்க விரும்புவார் ஜெயலலிதா என்று கூறப்படுவதுண்டு.

கர்நாடகத்தில் எம்.பி.பி.எஸ். போலி மதிப்பெண் சான்றிதழ் ரூ.1 லட்சத்துக்கு விற்பனை : 18 மாணவர்கள் சிக்கினர்.

கர்நாடகத்தில் எம்.பி.பி.எஸ். போலி மதிப்பெண் சான்றிதழ் ரூ.1 லட்சத்துக்கு விற்பனை: 18 மாணவர்கள் சிக்கினர்

கர்நாடகாவில், போலி எம்.பி.பி.எஸ். மதிப்பெண் சான்றிதழ் விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. இதுவரை 18 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்கள், அறிவாளிகளாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பண வசதி இருந்தால் தேர்வில் பாஸ் செய்து விடலாம் என்பதை சமீபத்தில் வெளியாகி இருக்கும் மார்க் பட்டியல் ஊழல் விவகாரம் நிரூபித்துள்ளது.

இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் சிலர் பணம் கொடுத்து பாஸ் ஆகி இருக்கும் தகவல் வெளியானதை அடுத்து, இதுபற்றி விசாரணை நடத்த மாநில கல்வி துறை உத்தரவிட்டது.

பெங்களூரில் உள்ள அல்-அமீன் பல் மருத்துவக் கல்லூரி, மற்றும் குல்பர்க்கா, தும்கூர், சித்ரதுர்க்கா ஆகிய நகரங்களில் செயல்பட்டு வரும் 7 மருத்துவக் கல்லூரிகளில் பி.டி.எஸ். மற்றும் எம்.பி.பி.எஸ். படித்த மாணவர்களில் சிலர், போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் பாசாகியுள்ளனர்.

தேர்வில் தோல்வி அடைந்த அந்த மாணவர்கள், தேர்வு அதிகாரியை சந்தித்து, மதிப்பெண்ணை திருத்தியுள்ளனர். கூடுதலாக வழங்கப்படும் ஒவ்வொரு சதவீதம் மதிப்பெண்ணுக்கும், ரூ.1 லட்சம் வீதம் லஞ்சம் கொடுத்துள்ளனர். இந்த மோசடி கடந்த 2006-ம் ஆண்டு முதலே நடந்து வந்துள்ளது.

போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தில் மாநிலம் முழுவதும் 18 பேர் சிக்கியுள்ளனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களது சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புகாரில் சிக்கியுள்ள 7 மருத்துவக் கல்லூரிகளில் படித்து எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற மாணவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் போலி என்று தெரிய வந்தால் அந்த மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மருத்துவக்கல்விதுறை மந்திரி ராம்தாஸ் உறுதி அளித்துள்ளார்.

இதுபற்றி அவர் அளித்த பேட்டியில், இது ஒரு கிரிமினல் குற்றமாகும். இந்த விவரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மோசடி குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களின் எம்.பி.பி.எஸ். டிகிரி சான்றிதழையும் ரத்து செய்ய தயங்க மாட்டோம் என்றார்.

போலி மதிப்பெண் சான்றிதழ் பெற்று பலர், டாக்டர்களாக பணிபுரிந்து வருவதாக, பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போலி எம்.பி.பி.எஸ். மதிப்பெண் சான்றிதழ் விவகாரம் அங்கு பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆதிகால மனிதனை விட இப்போதைய மனிதனின் மூளை அளவு குறைந்து விட்டதாக தகவல்.

ஆதிகால மனிதனை விட இப்போதைய மனிதனின் மூளை  அளவு குறைந்து விட்டது;  நிபுணர்கள் தகவல்

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர் டாக்டர் மார்தா லாகர் தலைமையிலான குழுவினர் மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அவர்கள் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களில் வாழும் மனிதர்களின் மண்டை ஓடுகள் மூலம் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

சமீபத்தில் இஸ்ரேலில் உள்ள குகைகளில் இருந்து மனித மண்டை ஓடுகள் கிடைத்தன. அது கடந்த 1 லட்சம் முதல் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குகை மனிதர்களுடையது என தெரிய வந்தது. அவர்கள் நடத்திய ஆய்வின் மூலம் இவர்கள் மிகவும் உயரமாகவும், கட்டுமஸ்தான உடலமைப் புடனும் இருந்தது தெரிய வந்துள்ளது.

அதே போன்று அவர்களின் மூளை அளவு பெரிதாக இருந்தது. அவர்களின் உடல் அமைப்பை தற்போது வாழும் மனிதர்களுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 10 ஆயிரம் ஆண்டுக்குள் ஆதிகால மனிதனை விட தற்போதைய மனிதனின் உயரமும், உடல் எடையும் குறைந்துள்ளது.

அதே நேரத்தில் மூளையின் அளவும் 10 சதவீதம் குறைந்து சுருங்கி இருப்பது கண்டு பிடிக்கப் ட்டுள்ளது. அதற்கு தற்போது உணவு கட்டுப்பாடு மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலை, இதை தொடர்ந்து ஏற்படும் நோய்களும் காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கதிர்வீச்சு பாதித்த புகுஷிமாவில் காது இல்லாமல் பிறந்த முயல் குட்டி : ஜப்பான் மக்கள் பீதி.

கதிர்வீச்சு பாதித்த புகுஷிமாவில் காது இல்லாமல் பிறந்த முயல் குட்டி: ஜப்பான் மக்கள் பீதி

கடந்த மார்ச் 11-ந்தேதி ஜப்பானில் பூகம்பமும், அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இதில் புகுஷிமாவில் தாங் - இச்கி அணுமின் நிலையம் சேதம் அடைந்தது. இதைதொடர்ந்து அங்குள்ள அணு உலைகளில் இருந்து கதிர்வீச்சு ஏற்பட்டு அது காற்றில் பரவியது.

குடிநீர், பால் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களிலும் ஊடுருவியது. இதனால் பாதிப்பு ஏற்படும் என கருதி 20 கி.மீட்டர் சுற்றளவில் தங்கியிருந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தற்போது ஓரளவு நிலைமை சீரடைந்ததும் மக்கள் மீண்டும் அங்கு திரும்பி வர தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் புகுஷிமா அருகே உள்ள நமி நகரில் யுகோ சுஜிமோடோ என்பவரின் பண்ணையில் காது இல்லாத முயல் குட்டி பிறந்துள்ளது. இந்த முயல் குட்டிக்கு காது மட்டுமே இல்லை என்ற குறை தவிர வழக்கம் போல் மற்ற உறுப்புகள் உள்ளன. வெள்ளை நிறம், சிவப்பு கண்களுடன் அது உள்ளது. காய்கறிகள் மற்றும் புல்லை சாப்பிடுகிறது.

இந்த முயல் குட்டி பிறந்துள்ள நமி நகரம் கதிர்வீச்சு அதிகம் பாதித்த பகுதியில் உள்ளது. எனவே, கதிர்வீச்சு பாதித்ததால் கர்ப்பமான முயலுக்கு பாதிப்பு ஏற்பட்டு அது காது இல்லாத குட்டியை ஈன்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது ஜப்பான் மக்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கதிர்வீச்சு அபாயம் தற்போது வெளிப்பட தொடங்கி விட்டதாக கருதுகின்றனர். இதை நிபுணர்கள் மறுத்துள்ளனர். சில நேரங்களில் மனிதர்களை போன்று விலங்குகளும் இதுபோன்ற குறைபாடுடைய குட்டிகள் பிறக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

டி.பி. ரியலிட்டி நிறுவனத்தின் ரூ.200 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை.

ஸ்பெக்ட்ரம் ஊழல்: டி.பி. ரியலிட்டி நிறுவனத்தின் ரூ.200 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை; சி.பி.ஐ. தகவல்

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழல் பற்றி விசாரித்து வரும் சி.பி.ஐ. தாக்கல் செய்த 2-வது குற்றப்பத்திரிகையில், டி.பி. ரியலிட்டி நிறுவனத்தின் மூலம் குசேகான் ஹெல்த்தி மற்றும் சினியுக் நிறுவனம் ஆகியவற்றின் வழியாக கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி போய் சேர்ந்ததாக கூறப்பட்டு இருந்தது.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் சுவான் டெலிகாம் நிறுவனம் பெற்ற ஆதாயத்துக்காக இந்த பணம் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் அந்த குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரின் பெயரும் இடம் பெற்று இருந்தது.

இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். டி.பி. ரியலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சாகித் உஸ்மான் பல்வா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இந்த நிலையில், கலைஞர் டி.வி.க்கு கொடுக்கப்பட்ட ரூ.200 கோடிக்கு சமமான மதிப்புள்ள டி.பி. ரியலிட்டி நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய இருப்பதாகவும், இது தொடர்பாக அமலாக்கப் பிரிவுக்கு விரைவில் கடிதம் எழுத இருப்பதாகவும் சி.பி.ஐ. வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

சி.பி.ஐ. நிறுவனமே நேரடியாக சொத்துக்களை முடக்க முடியாது என்பதாலும், சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் வெளிநாட்டு பணம் விதிமுறை மீறல் சட்டத்தின்படி, அமலாக்கப் பிரிவுதான் அந்த நடவடிக்கையை எடுக்க முடியும் என்பதாலும் அந்த அமைப்புக்கு கடிதம் எழுத இருப்பதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் கூறின.

பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்படுகின்றன : என்ன பாடம் சொல்லி கொடுப்பது என்பதில் குழப்பம்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்படுகின்றன: என்ன பாடம் சொல்லி கொடுப்பது என்பதில் ஆசிரியர்கள் குழப்பம்

மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (புதன்கிழமை) திறக்கப்படுகின்றன. பழைய பாடத்திட்டமா? சமச்சீர் கல்வியா? என்பது இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் மாணவர்களுக்கு என்ன பாடங்களை சொல்லிக்கொடுப்பது என்று ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

சமச்சீர் கல்வி வழக்கில், ஒன்றாம் வகுப்புக்கும், 6-ம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வி தொடர வேண்டும் என்றும், மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடங்களை ஆராய நிபுணர் குழு அமைத்து 3 வாரத்தில் முடிவு செய்து சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று (புதன்கிழமை) திறக்கப்படுகின்றன. வழக்கமாக பள்ளிகள் திறக்கும் நாளன்று அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் அனைத்து மாணவ&மாணவிகளுக்கும் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு விடும். தனியார் பள்ளிகளில் மாணவர்கள் முன்கூட்டியே புத்தகங்களை வாங்கி பள்ளி திறக்கும் நாளில் எடுத்துச் செல்வார்கள்.

என்ன சொல்லிக் கொடுப்பது? ஆனால், நடப்பு கல்வி ஆண்டில், ஒன்றாம் வகுப்பு, 6-ம் வகுப்பு நீங்கலாக 10-ம் வகுப்பு வரையுள்ள எஞ்சிய மாணவர்களுக்கு சமச்சீர் கல்வியா? அல்லது பழைய பாடத்திட்டமாக என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதனால், 2, 3, 4, 5, 7, 8, 9, 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு இன்னும் ஒரு வார காலத்திற்கு என்ன பாடங்கள் சொல்லிக்கொடுப்பது என்று தெரியாமல் ஆசிரியர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஒன்றாம் வகுப்பு, 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி என்பதால் அவர்கள் முதல் நாளன்று தங்களுக்கான பாடப்புத்தகங்களை கொண்டு செல்வார்கள். எனவே, அந்த வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. இதே போல் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழக்கம் போல் பாடம் நடத்த ஆரம்பித்துவிடுவார்கள்.

இதர வகுப்பு மாணவர்களுக்கு எவ்வித புத்தகமும் இல்லாத நிலையில் தினமும் காலை முதல் மாலை வரை வகுப்பில் அவர்களை எப்படி சமாளிக்கப் போகிறோம்? என்று ஆசிரியர்கள் குறிப்பாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் கவலையில் மூழ்கி உள்ளனர்.

வகுப்பில் பாடங்களை நடத்தினாலே ஒரு சில மாணவர்களை சமாளிக்க முடியாது. அப்படி இருக்கும் போது பாடப்புத்தகங்களும் இல்லாத நிலையில் 3 வாரங்களுக்கு எந்த பாடமும் நடத்தாமல் எப்படி அவர்களை கையாளப் போகிறோம் என்று ஆசிரியர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். பொதுவாக, பாடப்புத்தகங்கள் வராத நேரங்களில் நீதி போதனை தொடர்பான வகுப்புகள் நடைபெறுவது வழக்கம்.

திருக்குறள் அல்லது ஆங்கில இலக்கணம் சொல்லிக் கொடுப்பதும் உண்டு. இல்லாவிட்டால் மாணவர்களை ஒவ்வொருவராக வரவழைத்து ஏதாவது கதை சொல்ல அல்லது பாட்டு பாடச் சொல்வார்கள். எனவே, சமச்சீர் கல்வியா? அல்லது பழைய பாடத்திட்டமா? என்பது முடிவு செய்யப்படும் வரை ஆசிரியர்கள் இது போன்று ஏதாவது செய்வார்களா? என்று தெரியவில்லை.