Thursday, September 29, 2011

வாச்சாத்தி கற்பழிப்பு வழக்கில் இதுவரை 210 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு.



வாச்சாத்தி மலை கிராமத்தில் போலீசார், வருவாய்த்துறையினர், வனத்துறை யினரால் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 19 ஆண்டுகளுக்குப் பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் நான்கு இந்திய வனப்பணி அதிகாரிகள் உள்பட 210 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தர்மபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிபதி குமரகுரு தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு உரிய நேரத்தில் நடத்தி முடிக்கப்படாமல், பெரும் இழுத்தடிப்புக்குப் பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் 54 பேர் விசாரணையின்போதே இறந்து விட்டனர்.

யார் யார் குற்றவாளி?

ஐஎப்எஸ் எனப்படும் இந்திய வனப் பணி அதிகாரிகள் பாலாஜி, ஹரிகிருஷ்ணன், முத்தையன், நாதன் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு ஐஎப்எஸ் அதிகாரியான சிங்காரவேலு ஏற்கனவே இறந்து விட்டார்.

என்னென்ன பிரிவுகளில் குற்றச்சாட்டு ?

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஐபிசி 147, 149, 323, 342 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் அத்தனை பேர் மீ்தும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அதேபோல பலர் மீது பாலியல் பலாத்காரத்திற்காக 376வது பிரிவின் கீழும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதேபோல ஆதாரங்களை மறைத்தது தொடர்பாக ஐஎப்எஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், தாக்கிக் காயப்படுத்தியது, சட்டவிரோதமாக அடைத்து வைத்தது ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

நடந்தது என்ன?

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்டது வாச்சாத்தி கிராமம். இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையினர் மலை ஜாதியினர் .

இந்த கிராம மக்கள் காட்டுப் பகுதியில் உள்ள சந்தன மரங்களை வெட்டி, கடத்தி விற்பனை செய்வதாக 1992ம் ஆண்டு வனத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இதையடுத்து அந்த ஆண்டு ஜூன் 20ம் தேதி வனத்துறை 155 பேர், போலீசார் 108 பேர், வருவாய்த் துறையினர் 6 பேர் என மொத்தம் 269 பேர் ஆகியோர் அடங்கிய கூட்டு குழு இந்த கிராமத்தில் சோதனை நடத்தியது.

வாச்சாத்தி கிராமத்தில் இவர்கள் வீடு, வீடாக சோதனை நடத்தினர். பின்னர் ஏரிப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சந்தனக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 15 ஆண்கள், 90 பெண்கள், 28 குழந்தைகள் மீது வழக்குப் பதிவு செய்து, 133 பேரை கைதும் செய்தனர்.

ஆனால், இந்த சோதனைகளின்போதும், சோதனைகளைத் தொடர்ந்து நடந்த கைது நடவடிக்கைகளின்போதும் ஜெயா, செல்வி, சித்ரா, காந்தி, அபரக்கா, பாப்பாத்தி, காந்தி, மாரிக்கண்ணு, லட்சுமாயி, கம்சலா, முத்துவேதி, பூங்கொடி, மல்லிகா, சுகுணா, பாப்பாத்தி, முத்துவேதி, தேன்மொழி, பழனியம்மாள் உள்ளிட்ட 18 மலை கிராம பெண்களை கூட்டு குழுவினர் கற்பழித்ததாக புகார் எழுந்தது.

விசாரிக்க மறுத்த போலீஸ்

இது தொடர்பாக கிராம மக்கள் கூட்டு குழுவினர் மீது, அரூர் போலீஸில் தந்த புகாரை போலீசார் பதிவு செய்ய மறுத்து விட்டனர்.

இதையடுத்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொது செயலாளர் சண்முகம் மற்றும் சமூக நல அமைப்புகள் வாச்சாத்தி கிராமத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, கூட்டு குழுவினரால் மலைவாழ் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் மற்றும் பாலியல் தொல்லைக்கு ஆளாகப்பட்டதாகவும் வீடுகள் சூறையாடப்பட்டதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

உச்சநீதிமன்றம் கொடுத்த சூடு

இதைத் தொடர்ந்து வாச்சாத்தி கிராமத்தில் கூட்டு குழு விசாரணையின் போது நடந்த சம்பவங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 1992ம் ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது.

இதையடுத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய தென் மண்டல ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இந்த கிராமத்தில் நேரடி விசாரணை நடத்தப்பட்டு, அந்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யுமாறு அரூர் போலீசாருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரே, வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சிபிஐக்கு மாறிய வழக்கு

ஆனாலும் போலீசார் முறையாக இந்த விவகாரத்தை விசாரிக்காததால் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கக் கோரி 1993ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கடந்த 1995ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் கூட்டுக்குழுவினரின் அட்டகாசங்கள் வெளியில் வந்தன. இதையடுத்து அந்தக் குழுவைச் சேர்ந்த 269 பேரையும் சிபிஐ கைது செய்தது. மேலும் கடந்த, 1996ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கோவை நீதிமன்றத்தில் சி.பி.ஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

2006ம் ஆண்டு இந்த வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. பின்னர், 2008ம் ஆண்டு பிப்ரவரி, 17ம் தேதி தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

பெரும் இழுத்தடிப்புக்குப் பின் இந்த வழக்கு நடந்து முடிந்துள்ளது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 269 பேரில் 29 வனத்துறையினர், 24 போலீசார், ஒரு வருவாய்த்துறை ஊழியர் உள்பட மொத்தம் 54 பேர் இறந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் அவசரம்.



நாட்டில் முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரச் செய்ய எதிர்க்கட்சிகள் மிகுந்த அவசரப்படுவதாக பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார்.

அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய அவர் விமானத்தில் நிருபர்களிடம் பேசுகையில், மத்திய அமைச்சரவையில் யாருக்கும் இடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

5 ஆண்டுகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு மக்கள் அனுமதி வழங்கியுள்ளனர். எனவே இன்னும் 2 ஆண்டுகள் காத்திருங்கள் என்று, எதிர்க்கட்சியினரைக் கேட்டுக் கொள்கிறேன்.

எங்கள் அரசு பற்றிய சில பலவீனமான அம்சங்களை வைத்துக் கொண்டு, முன்கூட்டியே தேர்தலை திணித்து விடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்த அரசைக் கவிழ்க்க சில சக்திகள் முயற்சிக்கின்றன. ஆனால், மக்கள் அனுமதி அளித்து உள்ளபடி, 5 ஆண்டுகளுக்கு இந்த அரசு நிச்சயம் நீடிக்கும்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அமைச்சர்களுக்கு இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஊடகங்கள்தான் அவ்வாறு நினைக்கிறது. அமைச்சரவையில் எப்போதும் திறந்த மனதுடன் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

அமைச்சர்களுக்குள் பல்வேறு எண்ணங்கள், கருத்துகள் இருக்கலாம். இதனால், எங்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை என்று அர்த்தமல்ல. கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வெளியாகி வருவது போல் (பிரணாப் முகர்ஜிக்கும், ப.சிதம்பரத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு) எதுவும் நடக்கவில்லை. ப.சிதம்பரம் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

நாடாளுமன்றத்தில் பல முக்கியமான மசோதாக்கள் விவாதிக்கப்படக் காத்திருக்கின்றன. ஆனால், தேவையற்ற பிரச்சனைகளை எழுப்பிக் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி நாடாளுமன்றம் செயல்படாமல் தடுக்கப்படுவதால் அந்த மசோதாக்கள் நிறைவேறாமல் முடக்கப்பட்டுள்ளன.

காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிப்பது, பென்சன் சீர்திருத்தம், சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு பொது கொள்முதல் கொள்கை மற்றும் லோக்பால் போன்ற முக்கிய பொருளாதார சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்.

ராணுவத் தலையீடு மூலம் இன்னொரு நாட்டில் உள்நாட்டுப் பிரச்னையைத் தீர்க்க முயல்வது ஆபத்தில் முடியும். லிபியாவில் ஆட்சி மாற்றத்தால் அங்கே அமைதி நிலவிவிடும் என்று நம்ப முடியவில்லை. உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடந்தால் அதன் விளைவுகள் லிபியாவை ஒரு சோமாலியா போல மாற்றிவிடக் கூடும் என்றார் மன்மோகன் சிங்.

ராஜீவ் கொலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் மூன்று பேருக்கும், அதை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட வேண்டும் என்று தமிழகத்தில் காங்கிரஸ் தவிர்த்து இதர அரசியல் கட்சிகள் அனைத்தும் கோரிக்கை எழுப்பி வருவது குறித்துக் கேட்டதற்கு, அது குறித்து நான் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் சட்டத்தின் மேலாண்மை நிலைநிறுத்தப்படும் என்பதை மட்டும் தான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து கேட்டதற்கு, இது தொடர்பாக தமிழகத்தில் எழுப்பப்படும் எதிர்ப்புகள் விரும்பத்தக்கதல்ல. சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை விபத்துகள் பற்றித் தெரிந்த பின்னும் அரசு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், கூடங்குளம் போன்ற அணு மின் நிலையங்களை அமைக்க முன் வருமா என்பதை அவர்கள் யோசிக்க வேண்டாமா?.

இந்தியாவிலேயே தமிழகம்தான் தொழில் வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் மாநிலமாக வளர்ந்திருக்கிறது. இந் நிலையில் தமிழகத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டுமானால் அணு மின் நிலையம் அமைப்பதைத் தவிர வேறு உடனடி மாற்று வழியேதும் இல்லை. சுற்றுச்சூழலை பாதிக்காமல், குறைந்த செலவிலும் எரிசக்தி வேண்டுமானால், நாம் அணு மின் சக்தியை பயன்படுத்தியே தீர வேண்டும் என்றார்.

இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதற்கு உலக மயமாக்கல் தான் காரணம் : மன்மோகன்சிங்.



அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பியக் கூட்டமைப்பு போன்ற வல்லரசுகளின் பொருளாதாரப் பிரச்னைகளால் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதற்கு உலக மயமாக்கல் தான் காரணம். உலகமயத்தால் பல நன்மைகள் ஏற்பட்டிருந்தாலும், ஆரம்ப கால நன்மைகளை அதன் பின் விளைவுகள் பாதிக்கத் தொடங்கியுள்ளன.

நான் சோஷலிஸ்டாக இருந்து, உலக மயமாக்கலின் ஆதரவாளனாக மாறி இருப்பவன் என்கிற குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறேன். அந்தந்த சூழ்நிலையில் நாட்டுக்கு எது நன்மை பயக்குமோ, அதை ஏற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். உலக மயமாக்குதல் மூலமும், பொருளாதார சீர்திருத்தம் மூலமும் பல நன்மைகளை இந்தியா அடைந்திருக்கிறது. இதன் பயன் எல்லா தரப்பினரையும் போய்ச் சேர்ந்தாக வேண்டுமென்றால், சில மாற்றங்களை நாம் செய்தாக வேண்டும்.

விலைவாசி உயர்வு என்பது உலகளாவிய பிரச்சனை. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் நிலைமை எவ்வளவோ பரவாயில்லை. சீனாவில் விலைவாசியால் மக்கள் நம்மைவிட மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை, உணவு தானியங்களின் விலைவாசி ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், காய்கறிகள், மீன், முட்டை, இறைச்சி போன்றவற்றின் விலை தான் மிக அதிகமாக உள்ளது. மக்களின் வருமானம் உயர்ந்திருப்பதும், அவர்கள் இதுபோன்ற ஆரோக்கியமான சத்துணவுகளில் கூடுதல் கவனம் செலுத்துவதும்தான் இதற்குக் காரணம்

நமது தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாததால்தான் இந்த விலைவாசி உயர்வே தவிர பணவீக்கத்தால் ஏற்பட்ட விலைவாசி உயர்வாக இதைக் கருத முடியாது என்றார்.

Wednesday, September 28, 2011

சென்னையில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண் ; காதலுக்காக நூதன போராட்டம்.

பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்

பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் நேற்று நள்ளிரவு இளம்பெண் ஒருவர் தலைமுடி விரித்த நிலையில் நிர்வாணமாக ஓட்டமும் நடையுமாக வந்தார். இதனை பார்த்தவர்கள் பேய் என்று நினைத்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

அப்பகுதியில் இருந்தவர்கள் வெளியே வர பயந்து மறைவான இடங்களில் பதுங்கி இருந்தனர்.

இதனால் அந்த இடமே மயான அமைதியாக காணப்பட்டது. அந்த நேரத்தில் ரோந்து வந்த பல்லாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்த், இளம்பெண் நிர்வாணமாக வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து அந்த பெண்ணிற்கு ஆடை அணிவித்தனர். பின்னர் அவரை பல்லாவரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

அப்போது அவர் கூறியதாவது:- எனது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள தென்கல்பாக்கம் கிராமம். கடந்த 6 வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும், நானும் தீவிரமாக காதலித்து வந்தோம். பல இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்தோம். 10 மாதத்திற்கு முன்பு என்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை ராமச்சந்திரன் திருமணம் செய்து கொண்டார்.

இதுகுறித்து கேட்டபோது அவர் என்னிடம் பேச மறுத்து விட்டார். எனவே செய்யாறு போலீசில் இதுபற்றி அப்போது புகார் செய்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனவேதனையால் வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்தேன். எனது பெற்றோர் மன மாற்றத்துக்காக பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் உள்ள எனது அக்காள் வீட்டிற்கு என்னை அனுப்பி வைத்தனர்.

காதலன் ராமச்சந்திரன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன். வித்தியாசமாக எதையாவது செய்தால் போலீசார் கைது செய்து நம்மை விசாரிப்பார்கள். அப்போது நடந்ததை கூறி ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க செய்யலாம் என்று நினைத்தேன். இதற்காக நள்ளிரவு நிர்வாணமாக பொழிச்சலூரில் இருந்து பல்லாவரம் வரை நடந்து வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

இளம்பெண் சொல்வது உண்மைதானா? அல்லது மனரீதியாக பாதிக்கப் பட்டுள்ளரா? என்று போலீசார் விசாரிக்கின்றனர். தற்போது அவர் பரங்கிமலை பெண்கள் போலீஸ் நிலையத்தில் உள்ளார். இளம்பெண் நிர்வாணமாக நடந்து வந்த சம்பவம் பல்லாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்பெக்ட்ரம் கேஸ் : திருப்பம் அல்ல, திடீர் திருப்பமல்ல.. குபீர் திருப்பம் !



திருப்பம்’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘திடீர் திருப்பம்’ என்றுகூட கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘குபீர் திருப்பம்’ இது! ஸ்பெக்ட்ரம் வழக்கில் நேற்றுவரை அமைச்சர் சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்த ஆ.ராசா தரப்பு, இன்று திடீரென தமது நிலைப்பாட்டை மாற்றியிருப்பதன் பெயர்தான், குபீர் திருப்பம்!

இன்று சி.பி.ஐ. தனிகோர்ட்டில் ஆஜராகிய ஆ.ராசாவின் வக்கீல் சுசீல்குமார், “அமைச்சர் ப.சிதம்பரம் விசாரிக்கப்பட வேண்டியது அவசியமில்லை என்று எனது கட்சிக்காரர் கருதுகிறார்” என்றார்.

சி.பி.ஐ. தனி கோர்ட்டில் தினமும் நடைபெற்றுவரும் வழக்கு இது. இருந்த போதிலும், கடந்த சில தினங்களாக பார்வையாளர்கள் முன்பை விட கூர்மையாக கவனம் செலுத்த தொடங்கியிருந்தார்கள். காரணம், அமைச்சர் சிதம்பரத்தில் பெயர் வழக்கில் கண்ணாமூச்சி காட்டத் தொடங்கியிருந்தது.

தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, சில வாரங்களுக்கு முன்னர்தான், இந்த வழக்கில் முதலில் அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் பெயரை உச்சரித்தார்.

“ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றி அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் தெரியும். நான் என்ன செய்யப் போகின்றேன் என்பதை அவர் அறிந்திருந்தார். இது தவறு என்றால், அவர் ஏன் தடுத்து நிறுத்தவில்லை? அவரைக் கூப்பிட்டு விசாரியுங்கள்” என்றார் ஆ.ராசா. தனக்காக தானே வாதாடுகிறேன் என்று கூறிக்கொண்டு அவர் நேரடியாக நீதிபதியிடம் கூறிய கூற்று இது.

அதன் பிறது, அவரது வக்கீல் சுசீல்குமார், அதே விஷயத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

இதற்கிடையே கனிமொழியின் வக்கீலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயம் பற்றி அப்போதைய அமைச்சரவைக்கு எல்லாமே தெரிந்திருந்தது என்று கொளுத்திப் போட்டார்.

அவர் தனது வாதத்தில், “அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம், மற்றும் பிரதமரின் முன்னிலையில், ராசா இதுபற்றி விலாவாரியாகவே தெரிவித்து விட்டார். ஆ.ராசா செய்தது தவறு என்றால், பிரதமரும், சிதம்பரமும் அதற்கு உடந்தையாக ஏன் இருக்கக்கூடாது?” என்ற ரீதியில் கூறத் தொடங்கினார்.

கனிமொழியும், ராசாவும் சொல்லி வைத்தால்போல சிதம்பரத்தையும், பிரதமரையும் வழக்குக்குள் இழுக்கத் தொடங்கவே, கேஸ் திரும்பப் போகின்றது என்பது விஷயம் அறிந்தவர்களுக்கு புரிந்து விட்டது. மத்திய அரசும் ஓரளவுக்கு அலர்ட் ஆகியது. ஆனால், அதற்குள் காரியங்கள், அனைவரது கைகளையும் மீறிச் செல்லத் தொடங்கிவிட்டன.

இந்த விவகாரத்தில், நிதி அமைச்சகம், பிரதமரின் அலுவலகத்துக்கு எழுதிய கடிதம் ஒன்று பற்றிய தகவல் ‘எப்படியோ’ லீக் ஆகியது.

அப்படியொரு கடிதம் இருக்கும் விஷயத்தை, தெரிய வேண்டியவர்களுக்கு தெரியப்படுத்தி விட்டாலே போதும். தகவல் அறியும் சட்டத்தின்படி விண்ணப்பித்து, குறிப்பிட்ட கடிதத்தை வெளியே கொண்டுவந்து விட்டார்கள். அந்தக் கடிதம், அரசியல் ரீதியாக ஒரு உலுப்பு உலுப்பிவிட்டது.

அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரம் நினைத்திருந்தால், இந்த ஊழல் நடக்காமல் தடுத்திருக்கலாம் என்பதுபோன்ற வார்த்தை அமைப்புகளுடன் இருந்தது, நிதி அமைச்சின் கடிதம். அது ஏற்படுத்திய பரபரப்பு இன்னமும் ஓயவில்லை. சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஆக்ரோஷமாக நிற்கின்றன.

நிலைமை மோசமானால், அமைச்சர் சிதம்பரத்தின் பதவி பறிபோகும் (அல்லது அவராகவே ராஜினாமா செய்யலாம்) என்ற நிலையில் வந்து நிற்கிறது அந்த விவகாரம். (இந்தக் கட்டுரையைப் படித்து முடித்தபின், கீழே ‘தொடர்புடையவை’ என்ற தலைப்பில் பட்டியலிடப்பட்ட 3 டாபிக்களையும் முடிந்தால் ஒருமுறை படித்து விடுங்கள். வழக்கின் பேக்ரவுண்ட் புரியும்)

இப்படியான சூழ்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) ஆ.ராசாவின் வக்கீல் கொஞ்சம் வில்லங்கமான விதத்தில் வழக்கைத் திருப்பினார். சிதம்பரம் கோர்ட்டுக்கு இழுக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது என்ற நிலையை சாதுர்யமாக ஏற்படுத்தினார்.

ஆ.ராசாவின் வக்கீல், அடி மடியில் எப்படி கையை வைத்தார்? இதோ, இப்படித்தான்:

“ஆ.ராசாவுக்கும், சிதம்பரத்திற்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எவ்வித கருத்து வேறுபாடும் எழவில்லை என்பதையே நான் அழுத்திக் கூறுகிறேன். அதாவது, அப்போதைய நிதி அமைச்சருக்கு நன்கு தெரிந்திருந்தும், அவரால் தடுக்கப்படாத ஒரு நடவடிக்கையே ஆ.ராசாவால் எடுக்கப்பட்டது. எனவே, செக்க்ஷன் 311 படி சிதம்பரத்தை ஒரு சாட்சியாக கூப்பிட்டு விசாரியுங்கள். இந்த விவகாரத்தில் தனக்குத் தெரிந்ததை அவரே கோர்ட்டில் தெரிவிக்கட்டும். பிரதமரின் முன்னிலையில் வைத்து இந்த விவகாரம் பற்றி பேசப்பட்டதா என்பதை அவர் தெளிவு படுத்தட்டும். அதன் பின்னர் பிரதமரை அழைக்க வேண்டுமா இல்லையா என்பதை கோர்ட்டே முடிவு செய்யட்டும்”

உண்மை, பொய், நேர்மை எல்லாவற்றுக்கும் மேலாக, வக்கீலின் சாதுரியமாக திறமை ஸ்கோர் பண்ணிய இடம் அது.

24 மணி நேரத்துக்குள், பலன் கைமேல் தெரிந்திருக்கிறது! இன்று காலை விடிந்தது. கோர்ட் தொடங்கியது. ஆ.ராசாவின் வக்கீல் சுசீல்குமார், “அமைச்சர் ப.சிதம்பரம் விசாரிக்கப்பட வேண்டியது அவசியமில்லை என்று எனது கட்சிக்காரர் கருதுகிறார்” என்றார்.

இதற்கு அவர் என்ன காரணம் கூறுகிறார்? “அமைச்சர் சிதம்பரத்தை விசாரிக்கத் தொடங்கினால், வழக்கு மேலும் இழுத்துச் செல்லும். எனது கட்சிக்காரர் ஜாமீன் பெறுவதில் கால தாமதம் ஏற்படும். அதனால்தான், அமைச்சர் சிதம்பரத்தை விசாரிக்க வேண்டியது அவசியமில்லை என்று கூறுகிறோம்”

சுருக்கமாகச் சொன்னால், நேற்று நீதிமன்றத்தில், ஆ.ராசா தரப்பு வக்கீல் திறமையாக தூண்டில் போட்டுவிட்டுச் சென்றார். இரவோடு இரவாக தூண்டிலில் போடப்பட்ட இரையை மீன் கவ்வியிருக்கிறது.

கொஞ்சம் தலைகீழாக யோசித்துப் பாருங்கள்.

“நீங்கள் தேவையில்லாமல் ‘அவரை’ கேஸில் இழுக்காமல் விட்டால், உங்கள் ஜாமீன் கோரிக்கை வரும்போது, நாங்களும் பெரிதாக எதிர்ப்பு காட்ட மாட்டோம்” என்பதற்கு மேல், ஒரு வார்த்தைகூட நாங்கள் எழுதக்கூடாது!

விறுவிறுப்பு.காம்.

பள்ளிகளில் இனி மதிப்பெண்களுக்கு பதில் கிரேடு முறை.



2012-13ஆம் கல்வியாண்டு முதல் 1-8 வகுப்புகளுக்கு கிரேடு முறை அமல்படுத்தப்படுகிறது. 2013-2014ஆம் கல்வியாண்டில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கும் கிரேடு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

பள்ளி்க் குழந்தைகள் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையை தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் முப்பருவ முறை (Trimester pattern) அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில் மாணவர்கள் மொட்டைப் மணப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவதற்கு பதிலாக அவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் கிரேடு முறையை அரசு அறிமுகப்படுத்தவிருக்கிறது.

இது குறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் டி. சபீதா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது,

பள்ளி மாணவர்கள் குருட்டு மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மதிப்பெண் பெறும் முறையை மாற்றி அவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறையை (கிரேடு சிஸ்டம்) கொண்டு வருவது தொடர்பாக தமிழக அரசு, நிபுணர் குழுவை அமைத்தது. அந்த நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரை விவரம் வருமாறு:-

தற்போதைய தேர்வுமுறை மாணவர்களின் நினைவாற்றலை மையப்படுத்தியே அமைந்துள்ளது. மேலும், 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு வினாக்களும் மாணவர்கள் எளிதாக கண்டறியும் வகையிலேயே உள்ளன. இதன் காரணமாக, மாணவர்களால் பாடத்தை தாண்டி வெளியே படிக்க முடியவில்லை.

அரசு பொதுத் தேர்வுகளாலும் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல், தேர்வில் தோல்வி காரணமாக தவறான முடிவு எடுப்பதற்கும் இட்டுச் செல்கிறது. இதைத் தவிர்க்க தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீடு முறை கொண்டுவர வேண்டியது அவசியம் ஆகும். சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10-ம் வகுப்பில் ஏற்கனவே இந்த முறை அமலில் உள்ளது. மேலும், கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களிலும் இந்த முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.

இந்த முறையின்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டும் 3 பருவங்களாகப் பிரிக்கப்பட வேண்டும். ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம், அக்டோபர் முதல் டிசம்பர் வரை 2-ம் பருவம், ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 3-ம் பருவம். இந்த பருவங்களில் உடனடி மதிப்பீடு, பருவ இறுதி மதிப்பீடு என இரண்டு வகையான மதிப்பீடுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

உடனடி மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண்களும், பருவ இறுதி மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண்களும் வழங்கப்பட வேண்டும். கற்பனைத் திறனை வளர்க்கும் நடவடிக்கைகளான விளையாட்டு, நாடகம், பாடல்கள் போன்றவை உடனடி மதிப்பீட்டிலும், தேர்வுகள் பருவ இறுதி மதிப்பீட்டிலும் இடம்பெற வேண்டும். இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப கிரேடு வழங்கப்பட வேண்டும்.

55 முதல் 60 மார்க் வரை - ஏ 1 கிரேடு (பாயிண்ட் 10)

49 முதல் 54 வரை - ஏ 2 கிரேடு (பாயிண்ட் 9)

43 முதல் 48 வரை - பி 1 கிரேடு (பாயிண்ட் 8)

37 முதல் 42 வரை - பி 2 கிரேடு (பாயிண்ட் 7)

31 முதல் 36 வரை - சி 1 கிரேடு (பாயிண்ட் 6)

25 முதல் 30 வரை - சி 2 கிரேடு (பாயிண்ட் 5)

19 முதல் 24 வரை - டி கிரேடு (பாயிண்ட் 4)

13 முதல் 18 வரை - இ 1 கிரேடு (பாயிண்ட் இல்லை)

12 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண் - இ 2 கிரேடு (பாயிண்ட் இல்லை)

மூன்று பருவங்களின் முடிவில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் மற்றும் கிரேடு சராசரி அடிப்படையில் ஆண்டு இறுதியில் கிரேடு வழங்கப்பட வேண்டும். ஒரு பருவத்தில் எடுக்கப்படும் பாடங்கள் அடுத்த பருவத்திற்கு வராது. இதனால், ஆண்டு தேர்வுக்கான முக்கியத்துவம் குறையும். இதுபோல, 10 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளையும் மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளில் கல்லூரிகளில் இருப்பதைப் போன்று செமஸ்டர் முறையையே அறிமுகப்படுத்தலாம்.

நிபுணர் குழு அளித்த மேற்கண்ட பரிந்துரைகளை ஆராய்ந்த அரசு மதிப்பெண்ணுக்குப் பதிலாக கிரேடு வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் கல்வி ஆண்டு முதல் (2012-13) ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையும், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து (2013-14) 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கும் கிரேடு முறையை கொண்டுவர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் கல்லூரிகளில் இருப்பதைப் போல அனைத்து பள்ளிகளிலும் முப்பருவ தேர்வு முறை (டிரெமஸ்டர் சிஸ்டம்) நடைமுறைப்படுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு வித்திட்டது தயாநிதி மாறன் தான் - பிரதமர்.



2ஜி ஸ்பெக்ட்ரத்துக்கு விலையை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட அமைச்சர் குழுவுக்கு, அந்த அதிகாரத்தைத் தர மறுத்து நெருக்கடி தந்த, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனால் தான் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே வித்திடப்பட்டது என்று பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார்.

அமெரிக்காவிலிருந்து டெல்லி திரும்பும் வழியில் விமானத்தில் நிருபர்களிடம் பேசிய மன்மோகன் சிங், 2ஜி ஸ்பெக்ட்ரத்துக்கு விலையை நிர்ணயிக்க அமைச்சரவைக் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அந்தத் குழுவுக்கு தயாநிதி மாறன் எதிர்ப்புத் தெரிவித்தார்.

ஸ்பெரக்ட்ரம் விலை நிர்ணயம் என்பது தொலைத் தொடர்புத்துறையின் அடிப்படையான உரிமை என்றும், அதில் ஏராளமான தொழில்நுட்ப-பொருளாதார விஷயங்கள் அடங்கியுள்ளதால், அமைச்சரவைக் குழுவால் அதில் முடிவை எடுக்க முடியாது என்றும், அதை தொலைத் தொடர்புத் துறையால் தான் சிறப்பாக கையாள முடியும் என்றும் வாதிட்டார்.

ஒரு கட்டத்தில் அவரது வாதத்தை நானும் ஏற்றுக் கொண்டேன். ஸ்பெக்ட்ரம் விற்பனையில் தேவையில்லாத பிரச்சனைகள் வரக் கூடாது என்று நினைத்துத் தான் தயாநிதியின் கருத்தை ஒப்புக் கொண்டேன் என்றார்.

ஆனால், அமைச்சரவைக் குழுவின் தலையீடு இல்லாததால் பின்னர் தொலைத் தொடர்புத்துறை நினைத்தபடியெல்லாம் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கி பெரும் ஊழலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

உலகமே கொண்டாடும் தமிழன் போதி தர்மனைப் பற்றி உள்ளூரில் யாருக்கும் தெரியவில்லையே ! - ஏ ஆர் முருகதாஸ் வேதனை.

உலகமே கொண்டாடும் தமிழ் சாதனையாளர் போதி தர்மனைப் பற்றி உள்ளூர் தமிழர்கள் ஒருவருக்கும் தெரியவில்லையே, என வேதனைப்பட்டார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.

"1,600 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் வாழ்ந்த போதி தர்மன் என்ற பல்லவ மன்னர் பரம்பரை இளவரசன், பின்னாளில் உலகம் முழுக்க பயணித்தான். அவனே பின் சீனாவுக்குப் போய் தற்காப்புக் கலையை அங்கே நிறுவினான்.

அங்கே எங்கே பார்த்தாலும் போதிதர்மனுக்கு சிலைகள் உள்ளன. சீனாவின் புகழ்பெற்ற ஷோலின் கோயிலில் தமிழரான போதி தர்மனின் சிலையைப் பார்த்து சிலிர்த்துவிட்டேன்.

சீன மாணவர்கள் போதியை பாடமாகவே படிக்கிறார்கள். புத்த சமயத்தின் குருவாக அவரை மதிக்கிறார்கள். அவர் படைத்த சாதனைகள் கொஞ்சமல்ல. இவ்வளவு பெருமையும் புகழும் கொண்ட ஒரு தமிழனைப் பற்றி அவன் பிறந்த காஞ்சிபுரத்தில் மட்டுமல்ல, தமிழ் சமூகத்துக்கே தெரியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் எனக்கு உள்ளது.

இனி வரும் தலைமுறையினர் போதி தர்மன் பெயரை தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்ட வேண்டும். இவ்வளவு பெரிய சாதனையாளனுக்கு சிலை எழுப்பி அவன் புகழைப் பரப்ப வேண்டும்.

சூர்யா

7-ஆம் அறிவு படத்தின் நாயகன் சூர்யா கூறுகையில், "போதி தர்மனை, பாதி உலகம் கடவுளாக கொண்டாடி கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் போதி தர்மனை பற்றிய தடயங்களே அழிக்கப்பட்டு விட்டன. அவருடைய புகழ் மறக்கடிக்கப்பட்டு விட்டதால், யாரும் இதுபற்றி படம் எடுக்கவில்லை.

அவரை பற்றிய புத்தகங்களை படித்துவிட்டு, டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் தூக்கமின்றி தவித்தார். இந்த படத்தில் நடிப்பதற்காக, சில தற்காப்பு கலை பற்றிய பயிற்சி பெறுவதற்காக வியட்நாம் சென்றேன். அங்கே 80 வயது பாட்டி, சிலம்பம் சுற்றிக்கொண்டிருந்தார். மிரண்டு போனேன்.

அங்கே சர்க்கரை நோய் மருந்து விற்பதில்லை என்று கேள்விப்பட்டேன். அந்த மருந்து அங்கே தேவைப்படவில்லை.

7-ஆம் அறிவு படத்தின் பெரும்பகுதி சீனாவில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


'போதி தர்மன்'... சில குறிப்புகள்!


கிபி 5-ம் நூற்றாண்டில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்தவர் இந்த போதி தர்மன். காஞ்சிபுரத்தில் பிறந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவர்.

புத்த மத குருவாக மாறியபிறகு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி, அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.

ஷோலின் குங்ஃபூ என்ற உலகின் மிகச் சிறந்த தற்காப்புக் கலையை நிறுவியரே இவர்தான் என்கிறது வரலாறு. இதற்கான கல்வெட்டு சீனக் கோயிலில் இன்றும் உள்ளது.

புத்த மதத்தில் உள்ள 28 குருக்களில் கடைசி குரு போதிதர்மர் என்ற இந்த தமிழன்தான் என்பதை பல வரலாற்று ஆசிரியர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். செயற்கரிய பல செயல்களைச் செய்து ஆச்சரியத்தில் மூழ்கடித்தவராம் இந்த போதி தர்மர்.

அதுமட்டுமல்ல, அவர் கால் தடம்பதியாத நாடுகளே இல்லையாம். இதை அவரது குறிப்பிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. கடல்வழியாக இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் போதி தர்மன் மகாயானத்தைப் பரப்பியுள்ளார்.

போதிதர்மன் மரணமடைந்து, அவர் உடல் எரிக்கப்பட்டதாக சீனாவின் ஷோலின் வம்ச அரசன் நம்பிக்கொண்டிருந்தபோது, போதியோ உயிருடன் 'பாமீர் முடிச்சு' பிரதேசத்தில் ஒற்றை காலணியை சுமந்தபடி நடந்து சென்றுகொண்டிருந்ததை சீன அமைச்சர் நேரில் கண்டாராம். அவரிடம் விசாரித்த போது, நான் என் சொந்த ஊருக்குப் போகிறேன், என்று கூறிவிட்டுச் சென்றாராம் போதி. அவர் மீண்டும் உயிர்த்து எழுந்துவிட்டதை, ஷோலின் கோயிலின் குருக்களும் உறுதி செய்தார்களாம்... இப்படிப் போகிறது போதியின் கதை.

வாயு முத்திரை, சூன்ய முத்திரை, சூரிய முத்திரை.

வாயு முத்திரை.

வாயு முத்திரை

ஆள்காட்டி விரலை கட்டை விரல் அடியில் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்தால் வாயுவால் ஏற்படும் தொந்தரவை 24 மணி நேரத்தில் நிவர்த்தி செய்யும்.
தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வந்தால் வாயுப்பிடிப்பு, கீழ் வாதம், பாரிச வாயு போன்ற வியாதிகளை கட்டுப்படுத்தும். வயிறு சம்பந்தப்பட்ட வாயு உபாதைகளும் நீங்கும்.


சூன்ய முத்திரை.
சூன்ய முத்திரை

நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வை இது நிவர்த்தி செய்யும். தினமும் 40 முதல் 60 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
காது தொடர்புடைய நோய்களை இந்த முத்திரை கட்டுப்படுத்தும்.


சூரிய முத்திரை.
சூரிய முத்திரை

மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். தைராய்டு சுரப்பியை தூண்டும் சக்தி இந்த முத்திரைக்கு உண்டு. தினமும் இரு முறை 5 முதல் 15 நிமிடங்கள் பயிற்சி தரலாம். கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். நிம்மதியின்மை, ஜீரணமின்மை போன்ற குறைபாட்டை களைய வகை செய்யும்.


Monday, September 26, 2011

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தலைவணங்கும் இந்திய அரசு.



டில்லியில் அரசியல் புயலைக் கிளப்ப இரண்டாவது கடிதமும் வெளியாகிவிட்டது. ஏற்கனவே ஒரு கடிதம் வெளியாகி பலத்த அரசியல் சர்ச்சையைக் கிளப்பிவிட்டதை சமாளிக்கவே மத்திய அரசு திணறுகிறது. இந்த இரண்டாவது கடிதம், அரசியலில் எப்படியான பூகம்பத்தைக் கிளப்பப் போகின்றதோ!

இரண்டாவது கடிதம், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனால், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதப்பட்டுள்ளது.

தயாநிதி தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது, அவர் பிரதமருக்கு எழுதிய இந்தக் கடிதத்தில், ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயத்தில் சுதந்திரமாக செயல்பட்டு, தனது துறையே முடிவு செய்வதற்கு அனுமதிக்குமாறு கோரியுள்ளார். அத்துடன,

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு மார்க்கெட் ரேட்டில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் அதிக பணம் கொடுக்கும் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்னும், அமைச்சரவைப் குழுவின் பரிந்துரையை ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை குழுவின் பரிந்துரை, நேர்மையான வழிமுறை. அந்த வழிமுறையில் அரசுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பணம் கிடைக்கும்.

ஆனால், தயாநிதியின் வழிமுறை என்னவென்றால், அதிக பணம் கொடுக்கத் தயாராக உள்ள நிறுவனங்களுக்கு உரிமம் கொடுக்காமல், எந்த நிறுவனம் முதலில் வந்து உரிமம் கேட்கிறதோ, அந்த நிறுவனத்துக்கு குறைந்த விலையில் கொடுப்பது!

அதாவது, அரசுக்கு நஷ்டம் ஏற்பட வைத்து, முதலில் வரும் நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் கொடுக்கும் வழிமுறை அது. கொள்ளை லாபம் பெற்ற நிறுவனங்கள், அதற்கு பிரதி உபகாரமாக, கொடுக்க வேண்டியதை, கொடுக்க வேண்டியவர்களுக்கு, கொடுப்பார்கள்.

தயாநிதி மாறனின் இந்த கடிதத்துக்கு பிரதமர் எந்த எதிர்ப்பும் காட்டாமல் ஒத்துக்கொண்டதால்தான், ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடைபெற்றது என்பதே தற்போது எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக, லட்டு மாதிரிக் கிடைத்துள்ளது, தயாநிதி மாறன் பிரதமருக்கு எழுதிய இந்தக் கடிதம்.

தகவல் அறியும் சட்டத்தின்படிதான் இந்தக் கடிதமும் பெறப்பட்டுள்ளது. (ப.சிதம்பரத்துக்கு எதிரான முதல் கடிதம் பெறப்பட்டதும், அப்படித்தான்)

இங்குள்ள மற்றொரு முக்கிய விஷயம் என்ன தெரியுமா? தயாநிதியால் தொடங்கப்பட்ட இந்த நடைமுறையை அப்படியே காப்பியடித்துத்தான் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா செயற்பட்டார். அதற்காக அவர் திகார் ஜெயிலில் கம்பி எண்ணுகிறார்.

ஆனால் கார்ப்பரேட் முதலாளியான தயாநிதி மாறன் மீது கை வைக்க மத்திய அரசு அஞ்சுகிறது.

மூத்த அரசியல்வாதியான கருணாநிதியின் மகள் கனிமொழியை அசால்ட்டாக கைது செய்து சிறைவைத்த மத்திய அரசு, கார்ப்பரேட் முதலாளி மீது கை வைக்க யோசிக்கிறது.

அரசியல் நெருக்கடியைவிட, கார்ப்பரேட் முதலாளிகளின் நெருக்கடிக்கு இந்திய அரசு தலைவணங்குகிறது.

அமெரிக்காவுக்கு எதிரான கருத்து ; பாகிஸ்தான் பெண் மந்திரி ஹினா ரப்பானிகர் உடனே நாடு திரும்ப உத்தரவு .

அமெரிக்காவுக்கு எதிரான கருத்து; பெண் மந்திரிக்கு பாகிஸ்தான் கண்டனம்; உடனே நாடு திரும்ப உத்தரவு

அமெரிக்காவுக்கு எதிரான கருத்து தெரிவித்த பெண் மந்திரிக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் அவரை உடனடியாக நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுடன் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு (ஐ.எஸ்.ஐ) தொடர்பு இருப்பதாக அமெரிக்க முப்படை தளபதி அட்மிரல் முல்லன் தெரிவித்து இருந்தார்

மேலும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதில் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை நேரடியாக சம்பந்தப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு பாகிஸ்தான் வெளியுறவு பெண் மந்திரி ஹினா ரப்பானிகர் பதில் அளித்தார். பாகிஸ்தான் மீது தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்கா கூறி வருகிறது. இந்த நிலை நீடித்தால் ஒரு கூட்டாளியை இழக்க நேரிடும். பாகிஸ்தான் உறவு வேண்டுமா? வேண்டாமா? என்பதை அமெரிக்காதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

இது அமெரிக்காவை எரிச்சலடைய செய்தது. இதைத்தொடர்ந்து ஹினா ரப்பானி கிர் கருத்துக்கு அமெரிக்கா வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பு செயலாளர் ஜே.கார்னர், முப்படை தளபதி முல்லரின் செய்தி தொடர்பாளர் கேப்டன் கிர்பி ஆகியோர் தங்களின் கருத்துகளை தெரிவித்து இருந்தனர். அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தி தொடர்பாளர் ஜார்ஜ் கூறும் போது, பாகிஸ்தானுடன் உள்ள உளவு சிக்கலானது. அதே நேரத்தில் அத்தியாவசியமானதாகவும் உள்ளது. கருத்து வேறுபாடுகளும், தீவிரமான பிரச்சினைகளும் உள்ளன. ஆனால் தீவிரவாத பிரச்சினையில் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது என்றார்.

இது இரு நாட்டு உறவில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அமெரிக்கா நியூயார்க்கில் உள்ள ஐ.நா.சபை தலைமை அலுவலகத்தில் பொதுசபை கூட்டம் நடக்கிறது. அதில் பங்கேற்க இருந்த பாகிஸ்தான் பிரதமர் கிலானி அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் அவரை சந்திக்க ஒபாமா விரும்பவில்லை. எனவே வெள்ளநிவாரண பணிகளை மேற்பார்வையிட இருப்பதாக கூறி தனது பிரதிநிதியாக வெளியுறவு மந்திரி ஹீனா ரப்பானி கர்ரை அனுப்பி வைத்தார்.

கூட்டத்தில் பங்கேற்க சென்ற அவர் அமெரிக்காவுக்கு எதிரான கடுமையான கருத்துகளை தெரிவித்தார். இதன் மூலம் பாகிஸ்தானை அமெரிக்காவின் வெறுப்புக்கு உட்படுத்தி விட்டார். இது பிரதமர் கிலானிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஹினா ரப்பானி கர் கருத்தில் அவருக்கு உடன்பாடும் இல்லை. எனவே அமெரிக்காவுக்கு எதிரான கருத்து கூறியதற்காக அவருக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் வெளியுறவு மந்திரி ரப்பானி உடனடியாக நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் இன்று இரவு இஸ்லாமாபாத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அமெரிக்காவுக்கு எதிராக கருத்து கூறியது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படுகிறது. அமெரிக்காவுடனான உறவை சரி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த செய்தி பாகிஸ்தானில் இருந்து ஒளிபரப்பாகும் டி.வி. சேனலில் ஒளிபரப்பாகியது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் : ஆ.ராசா, கனிமொழி மீது சி.பி.ஐ. புதிய வழக்கு ; ஆயுள் தண்டனை கொடுக்கும் பிரிவில் பதிவு.

ஸ்பெக்ட்ரம் ஊழல்: ஆ.ராசா, கனிமொழி மீது சி.பி.ஐ. புதிய வழக்கு; ஆயுள் தண்டனை கொடுக்கும் பிரிவில் பதிவு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் காரணமாக ரூ. 1.76 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கை துறை அறிவித்தது. இதையடுத்து இந்த ஊழலில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதி மன்றத்தில் நீதிபதி சைனி முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த விசாரணை தகவல்களை சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ. அவ்வப்போது தெரிவித்து வருகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் ஓரளவு விசாரணை முடிந்து விட்டது. இதனால் இந்த வழக்கில் கைதானவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சி.பி.ஐ. புதிய நடவடிக்கையால் அது தள்ளிப் போனது.

இந்த நிலையில் சி.பி.ஐ. புதிய அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது. சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வக்கீல் லலித் இன்று ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் அவர், ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா உள்பட அனைவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 409 (நம்பிக்கை மோசடி) கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பதவியில் இருந்து கொண்டு ஆ.ராசா, சந்தோலியா, சித்தார்த் ஆகியோர் நம்பிக்கை மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது இந்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

மற்ற குற்றவாளிகளுக்கும் இது பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒவ்வொருவரும் எத்தகைய பிரிவின் கீழ் தொடர்புடையவர்கள் என்று வக்கீல் லலித் விளக்கமாக கூறினார்.

மேலும் 409-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டியது இந்த விசாரணைக்கு மிகவும் அவசியம் என்று விவாதித்தார். இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் வாதாடிய வக்கீல் சி.பி.ஐ.யின் புதிய வழக்குக்கு எதிர்ப்பு தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றத்தை பதிவு செய்யும் நடவடிக்கையை தாமதப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்த புதிய பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுவதாக கூறினார்.

சி.பி.ஐ. தொடர்ந்துள்ள புதிய பிரிவு வழக்கு காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை வரை வழங்க முடியும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். இதற்கு முன்பு சி.பி.ஐ. பதிவு செய்துள்ள சட்டப்பிரிவுகளின்படி அதிகப்பட்சமாக 7 ஆண்டுகள் வரையே தண்டனை கொடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் இன்று சி.பி.ஐ. மேற்கொண்டுள்ள புதிய அதிரடி நடவடிக்கை காரணமாக ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிக பட்சமாக 10 ஆண்டுகள் வரை தண்டனை கொடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

409-வது பிரிவின் கீழ் ஆ.ராசா, கனிமொழி, ராசாவின் உதவியாளர் சந்தோலியா, முன்னாள் தொலை தொடர்புதுறை செயலாளர் சித்தார்த் பெகுரா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வரை கொடுக்க முடியும் என்று பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் மீது ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 12-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

இதுகுறித்து சுப்பிரமணியசாமி கூறுகையில் ப.சிதம்பரத்திடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரும் எனது வேண்டுகோளை வரும் 12-ந்தேதிக்குள் சுப்ரீம் கோர்ட்டு தீர்மானிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு ப.சிதம்பரத்தை ஒரு சாட்சியாக அழையுங்கள் - ஆ.ராசா.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு ப.சிதம்பரத்தை ஒரு சாட்சியாக அழையுங்கள்- ஆ.ராசா

முன்னாள் நிதியமைச்சரும், தற்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்தை 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஒரு சாட்சியாக அழைக்க வேண்டும் என்று முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவின் வழக்கறிஞர் சுஷில்குமார் தெரிவி்த்தார்.

மேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளிலும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் பங்குண்டு என தெரிவி்த்தார்.

இந்த விவகாரத்தில் நடந்தது அனைத்தும் அவருக்கு தெரியும். இந்த வழக்கில் அனைத்து உண்மைகளும், விவரங்களும் அவருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது என சுஷில்குமார் குறிப்பிட்டார்.

அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் அமைச்சரவை முடிவுசெய்தது. எனவே ஒட்டுமொத்த அமைச்சரவையும் விசாரணையை சந்திக்க வேண்டும் என அவர் கூறினார். 2003 அமைச்சரவையில் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து வந்த அனைத்து அமைச்சரவையும் அதைப் பின்பற்றியது. அப்படியிருக்க ராசா மட்டும் ஏன் சிறையில் இருக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார். சிதம்பரத்தை ஒரு சாட்சியாக நீதிமன்றத்துக்கு அழையுங்கள். பிரதமரின் முன்னிலையில் அறிவுரை வழங்கப்பட்டதா அல்லது வழங்கப்படவில்லையா என்பதை அவரே கூறட்டும் என சுஷில்குமார் குறிப்பிட்டார்.

ப.சிதம்பரம் குறித்த கடிதம், பிரதமர் அலுவலகம்தான் வெளியிட்டுள்ளது - பிரணாப் குற்றச்சாட்டு.



2ஜி விவகாரத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைக் குறை கூறி நிதியமைச்சகத்திலிருந்து எழுதப்பட்ட கடிதம் வெளியாக பிரதமர் அலுவலகமே காரணம் என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி குற்றம் சாட்டியுள்ளதாகத் தெரிகிறது.

2ஜி ஊழலைத் தடுக்கத் தவறி விட்டார் அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் என்று மத்திய நிதியமைச்சகம் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதம் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்குப் பிறகு தான் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், சிதம்பரத்தின் நேர்மையில் தனக்கு துளி கூட சந்தேமில்லை என்று கூறிவிட்ட பிரதமர் மன்மோகன் சிங், அவரை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.

இந்த விவகாரத்தில் பிரணாப் முகர்ஜி மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ப.சிதம்பரமும் கடுப்பில் உள்ள நிலையில், நேற்று அமெரிக்காவில் இருந்தபடி ப.சிதம்பரத்துடன் தொலைபேசியில் பேசினார் பிரணாப்.

அப்போது தனது கடிதம் குறித்து அவர் விளக்கம் அளித்ததாகத் தெரிகிறது. மேலும் பிரதமரையும் பிரணாப் முகர்ஜி சந்தித்தார்.

அப்போது, இந்தக் கடிதம் வெளியே லீக் ஆனதற்கு நான் காரணமல்ல, அதை பிரதமர் அலுவலகம்தான் வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சகம் வெளியிடவில்லை என்று பிரணாப் கூறியதாகத் தெரிகிறது.

இந் நிலையில் இன்று நாடு திரும்பும் பிரணாப் சோனியாவையும் நேரில் சந்தித்து விளக்கம் தரவுள்ளார்.

ஆட்டம் காணும் உலகப் பொருளாதாரம்.



உலக பொருளாதாரம் ஆபத்தான நிலையில் இருப்பதாக உலக வங்கியின் தலைவர் ராபர்ட் ஜோயெலிக் தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது, அதற்கு என்னென்ன நடிவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த மாநாடு வாஷிங்டனில் நடந்தது. அதில் உலக வங்கியின் தலைவர் ராபர்ட் ஜோயெலிக், ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டின் லகார்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் பேசிய ஜோயெலிக் கூறியதாவது,

உணவுப் பொருட்களின் விலையேற்றம் இன்னும் பெரிய பிரச்சனையாகத் தான் உள்ளது. ஆனால் தற்போது புதிய பிரச்சனைகள் வரவிருக்கிறது.

வளரும் நாடுகள் விலை உயர்வை சரிசெய்வதில் கவனம் செலுத்தி வருகின்றன. வளர்ந்த நாடுகள் கடன் பிரச்சனையில் சிக்கியுள்ளது.

உலக பொருளாதாரம் ஆபத்தான நிலையில் தான் உள்ளது. அதில் இருந்து மீண்டு வருவது அவ்வளவு சுலபம் அல்ல. ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் நிதி நெருக்கடியை சமாளிக்க உடனடியாக நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதே கருத்தை ஐஎம்எப் தலைவரும் வலியுறுத்தினார்.

ஆஸ்திரேலியாவின் பிரபல செய்தித்தாள் வீக்ண்டுக்கு உலக வங்கியின் தலைவர் சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"உலக பொருளாதாரத்தில் காணப்படும் ஸ்திரத்தன்மையற்ற போக்கால், பல ஆபத்தான கட்டங்களை எதிர்நோக்கும் அபாயம் இருக்கிறது," என்று உலக வங்கி தலைவர் ராபர்ட் ஜோயலிக் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதாரத்தின் ரேட்டிங்கை, கடந்த வாரம் ஸ்டான்டர்டு அன்ட் புவர் நிறுவனம் குறைத்து அறிவி்த்தது. இதன் எதிரொலியால் சர்வதேச பங்கு சந்தைகளில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது.

போதாக்குறைக்கு ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பொருளாதார நிலையிலும் சரிவு ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதனால், அடுத்த பொருளாதார சரிவை உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ளன.

"தற்போது நாம் புதிய பொருளாதார சரிவின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். ஆனால், இது கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார சரிவு போன்று இருக்காது.

கடந்த சில வாரங்களாக ஆஸ்திரேலியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பொருளாதாரம் ஓரளவுக்கு வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளன. ஆனால், வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம் தொடர்ந்து ஆபத்தான கட்டத்தை எதிர்நோக்கியுள்ளன.

வளர்ந்த நாடுகள் பொருளாதார கொள்கைகளை சீர்படுத்தினால், மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்ப முடியும்," என்று கூறினார்.

நினைவாற்றலை அதிகரிக்கும் ஜின்கோ மாத்திரை.



நினைவாற்றலுக்கு மூளையின் செயல்பாடுகளுக்கும் நம் ஊரில் வல்லாரைக் கீரை சமைத்து உண்கின்றனர். இதில் உள்ள வாலரின் என்னும் ரசாயனம் மூளையின் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் குறிப்பாக ஞாபக சக்தி இருக்கும் இடமாகிய மெமொரி கார்ட்டெக்ஸைத் தூண்டிவிடுகிறது.

சரஸ்வதியைப் போல மூளையைத் தூண்டிவிடுவதால் புத்தியை தீட்சண்யமாக கூர்மையாக ஆக்குவதால் வல்லாரைக்கு ப்ராமி என்ற பெயரைக் கொடுத்து உள்ளார்கள்.

இதேபோல் ஜின்கோ எனப்படும் சீனாவில் வளரும் மரத்தின் இலைகள் மூளை நரம்புகளை சுறுசுறுப்பாக செயல்படுத்துகிறது. பூமியில் உள்ள மரங்களிலேயே மிகப்பழமையான மரமான ஜின்கோ சீனாவைத் தவிர தற்பொழுது ஃபிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, ஆகிய நாடுகளின் பெரும் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.

இலைகள் பசுமை அல்லது மஞ்சள் வண்ண முடையவை. இலைகள், விதைகள் மருத்துவப்பயன் கொண்டவை. இலைகளும், கனிகளும், இலையுதிர்காலத்தில் சேகரிக்கப்படுகின்றன.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இம்மரத்தின் மருத்துவப்பயன்களுக்கு காரணமாக உள்ள வேதிப்பொருட்கள் ஃபிளேவனாய்டுகள், ஜின்கோலைடுகள், பைலோபலைடுகள்

மூளை நரம்புகளுக்கு வலுவூட்டும்

இலைகள் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தினை மேம்படுத்தி நினைவாற்ற லையும், கவனத்தினையும் அதிகரிக்கிறது. வயோதிக ஞாபக மறதிக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் மிக அதிகமாக விற்பனையாகும் தாவரமருந்து ஜின்கோ, பல மில்லியன் மத்திய வயதினர் முதல் வயோதிகர்கள் வரை தினமும் ஜின்கோ மத்திரைகளை உட்கொள்கின்றனர்.

ஜின்கோ பிலோபா மூளை, கால்கள், இடுப்பின் உட்புறம் ஆகிய இடங்களில் உள்ள ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்யும். கோவார்க்டேஷன் எனப்படும் கண்டிஷனுக்கு இதைக் கொடுப்பார்கள். பக்கவாத நோய்களுக்குக் கூட மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.

சிறுநீர் நோய்களுக்கு மருந்து

இலைகள் ரத்த ஓட்டத்தினை தூண்டி வலுவேற்றி மருந்தாகிறது. ஆஸ்த்மா மற்றும் அலர்ஜிக்கு எதிரான செயல்புரிகிறது. தசைபிடிப்பு வலி போக்க வல்லது. ஆக்ஸிகரணத்திற்கு எதிரானது. ரத்த அடர்த்தி அதிகரித்து உறைவதை தடுக்க வல்லது ஆஸ்துமாவை குணப்படுத்தும்.

விதைகள் ஊது மூச்சு ( Wheezing) விடுதலை தடுத்து சளியினை போக்குகிறது. பெண்களின் வெள்ளைப்போக்கினை தடுக்கவும், சிறுநீர்ப்போக்கு நோய்களுக்கும் மருந்தாகிறது.

போதை விருந்து : எஸ். ஆர். எம். - விஐடி பல்கலைக்கழக, மாணவ - மாணவிகள் கைது.



ஏலகிரியில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் மது, போதை விருந்து நடந்துள்ளது. இதில் இரண்டு பிரபல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் உள்பட 74 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம் மற்றும் வேலூர் விஐடி பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 72 மாணவ, மாணவியர் ஏலகிரியில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் மது, போதை விருந்து நடத்தியுள்ளனர். இதில் சென்னை, பெங்களூரில் வேலை பார்க்கும் என்ஜினியர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த விருந்தில் கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துகள் பயன்படுத்தப்படுவதாக் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடு்தது வேலூர் எஸ்.பி. பாபு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஏலகிரியில் உள்ள ஹோட்டல்கள், லாட்ஜ்கள், தனியார் விருந்தினர் மாளிகைகள் ஆகியவற்றில் சோதனை நடத்தினர்.

அப்போது ஆரோவில் என்ற விருந்தினர் மாளிகையில் இந்த மது, போதை விருந்து நடப்பதை கண்டுபிடித்தனர். அதில் கலந்து கொண்ட 74 பேரை கைது செய்தனர். பின்னர் 6 பேரைத் தவிர மற்றவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thursday, September 22, 2011

உடலை வலுவாக்கும் பாதாம்பருப்பு.



பாதாம் பருப்பினால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைப்பதோடு, ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்வதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பாதாமில் உள்ள புரதச்சத்து மிகவும் தரம் வாய்ந்தது.

25 கிராம் பாதாமில் 6 கிராம் புரதம் உள்ளது. பாதாமில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பு சத்தை உடல் ஏற்றுக் கொள்வதை தவிர்க்கின்றது. பாதாமில் உள்ள நார்ச்சத்து 20 சதவிகிதம் கரையும் தன்மை கொண்டது. 80 சதவிகிதம் கரையாத்து. இந்தக் கலவை உடலின் ஜீரணமண்டலத்திற்கு மிகவும் நல்லது.

இது கொலஸ்ட்ரால் லெவலை குறைக்கின்றது. இதனால் பாதாமை ஒரு குறைந்த கலோரி உணவு என்று சொல்லலாம். புரதமும், நார்ச்சத்தும் செறிந்து இருப்பதால் பாதாம் சிறிய அளவில் எடுத்துக் கொண்டாலும் பசியை தணிக்கின்றது. எனவேதான் பாதாம் ஒரு உயர்தர உணவாக கருதப்படுகிறது.

பாதாம் உடலுக்கு வலிமை, வீரியம் இவற்றை தருகின்றது. சத்து நிறைந்த பாதாம் இந்தியாவில் பஞ்சாபிலும், காஷ்மீரிலும் அதிக அளவில் விளைகின்றது. மிகச் சிறந்த பாதாம் பருப்புகள் அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் விளைகின்றன. அங்கு பாதாம் பயிரிடுபவர்கள் இணைந்து “கலிஃபோர்னியா பாதாம் போர்டு” என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு, உலகெங்கும் பாதாம் பருப்பை விற்பனை செய்கின்றன.

செயல்திறன் மிக்க சத்துக்கள்

பாதாமில் உள்ள கொழுப்புச்சத்து வகையை சேர்ந்த மூஃபா கொலஸ்ட்ராலை குறைக்க வல்லது. தவிர பாதாமில் ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதயத்திற்கு நல்லது. பாதாமில் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியமும், பாஸ்பரசும் உள்ளன. இவை கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன. மக்னீசியம், மேங்கனீஸ் மற்றும் விட்டமின் பி – 6 பாதாமில் காணப்படுகின்றன. வைட்டமின் பி – 6 புரதத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றது. இதனால் இதயத்திற்கு கெடுதலான ஹேமோசைடிசின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. பாதாமில் வைட்டமின் இ கூட செறிந்திருக்கின்றது

பாதாம் எண்ணெய்

பாதாமில் இரண்டு வகை உண்டு. ஒன்று இனிப்பு பாதாம், மற்றொன்று கசப்பு பாதாம் இனிப்பு பாதாமில் பூக்கள் மென்மையாக இருக்கும். கசப்பு பாதாமின் இலைகள் சிவப்பு நிறத்தில் காணப்படும்.

இனிப்பு பாதாமிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சருமத்திற்கு மிகவும் நல்லது. உடலை மசாஜ் செய்ய பெரும்பாலும் இனிப்பு பாதாம் எண்ணெயே பயன்படுத்தப்படுகின்றது.

பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதன் எடையில் பாதி அளவு இருக்கும். எடுக்கப்பட்ட எண்ணெய் வண்ணமில்லாமலும் இருக்கும். இல்லை மஞ்சள் நிறத்தில் இருக்கும். பாதாம் எண்ணெயானது தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் புரதம் செரிந்தது. இது அனைத்துவகையான சருமத்திற்கும் ஏற்றது.

பாதாம் எண்ணெய்யை உபயோகிப்பதால் சருமம் மிருதுவாகின்றது. புத்துணர்ச்சி பெறுகின்றது. சரும வறட்சி, அரிப்பு, போன்றவைகளுக்கு பாதாம் எண்ணெய் தடவுவதால் நீக்கலாம். சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும வியாதிகளுக்கு பாதாம் எண்ணெய் ஏற்றது. தீப்புண்களை குணப்படுத்தவும் பயன்படுகின்றது. இனிப்பு பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சோப்புகள், அழகு சாதனங்கள் இவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது.

செரிமானக் கோளாறுகளை நீக்கும்

நமது பெருங்குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள், தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து உணவு செரிமானத்தை அதிகரிப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே செரிமானக்கோளாறு உள்ளவர்கள் பாதம் பருப்பை உண்ணுவதால் அதில் உள்ள வேதிப்பொருட்கள் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதனால் ஜீரணக்கோளாறுகள் குணமடைவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்பிரச்சினை இருப்பவர்கள் மட்டுமின்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பவர்கள் அனைவரும் பாதாம் பருப்பு சாப்பிடலாம்.

வயிற்றுக்கு ஏற்ற பாதாம் பால்

பாதாமை தோலுரித்த பிறகே உண்பது நல்லது. பாதாமின் தோல் உணவுக்குழாயில் எரிச்சலை உண்டாக்கலாம். தவிர பாதாம் பருப்புகள் வாயில் நன்றாக மென்று விழுங்க வேண்டும். அப்பொழுது தான் எளிதில் ஜீரணமாகும். ஸ்டார்ச் இல்லாததால் பாதாம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

பாதாம் பாலில் கொழுப்பு குறைவு. அதனால் பசுவின் பாலுக்கு பதிலாக பாதாம் பாலை உபயோகிக்கலாம்.பாதாம் பால் வயிற்றுக்கு, சிறுநீரக பாதைகளுக்கு நுரையீரலுக்கு நல்லது. பாதாம் பால் வயிற்றெரிச்சலை போக்கும். பொடித்த பாதாம் கேக்குகள், ரொட்டி தயாரிப்பில் உதவுகின்றது.

இதயத்தின் நண்பன்

ஓட்ஸ்,சோயா பூண்டு, பாதாமும் இதயத்தின் நண்பன். பாதாம் உடல் எடையை கூட்டுவதில்லை என்றால் பலர் நம்புவதில்லை. பாதாம் போன்ற கொட்டைகள் உடல் எடையை அதிகரிக்கின்றன என்பது பலருடைய கருத்து. இந்த கருத்து சரியல்ல. பாதாம் பருப்பை குறைவாக எடுத்துக் கொண்டாலே பசி அடங்கி விடும். 25 கிராம் பாதாம் 164 கலோரிகளை அளிக்கின்றது.

ஆயுர்வேத, யுனானி சிகிச்சைகளில் பாதாம் ஒரு முக்கியமான டானிக். சோகை, மனக்கலைப்பு, ஆண்மைக்குறைபாடுகள், மலச்சிக்கல், சுவாச கோளாறுகள் இவற்றைப் போக்கும் டானிக்காக பாதாம் பயன்படுகின்றது.

ஆய்வுகளின் படி பாதாமில் உள்ள 9 பெனாலிக் வேதிப் பொருட்களில் 8 ஆன்டி – ஆக்ஸிடென்ட் குணங்களை உடையவை. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பாதாமை உண்பதால் அதிகரிக்கும். புற்றுநோய் வருவதும் தவிர்க்கப்படுகின்றது. தவிர பாதாம் அலர்ஜிகளை உண்டாக்காது. உணவுப் பொருளில் பாதாம் சேர்ப்பதால் அவற்றின் சுவை மற்றும் சத்துக்கள் அதிகரிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

என் நாவிற்கு துணிச்சல் இல்லை : வைகோ.



சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் இராஜா அண்ணாமலை மன்றம் அரங்கில், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்திருந்த, 'இன்னுயிர் ஈந்து மூன்று தமிழர் உயிர் காத்த வீரமங்கை தோழர். செங்கொடி வீரவணக்க நினைவேந்தல் மற்றும் மூன்று தமிழரின் மரண தண்டனையை முற்றிலும் நீக்கக்கோரி கூட்டம்' 21.09.2011 அன்று மாலை நடைபெற்ற்றது.

இந்த கூட்டதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,

இனியும் செங்கொடிகள் தங்களை தீக்கரையாக்கிக் கொள்கிற நிலை உருவாகிவிடக்கூடாது என்று கொளத்தூர் மணி சொன்னார். இந்த வீரமங்கை செங்கொடி தீட்சண்யமான கண்கள். வசீகரம் என்று நான் சொல்ல மாட்டேன். அந்தப் புகைப்படத்தை பார்க்கின்றபோதே, நமது நெஞ்சை ஏதோ ஈர்க்கிறது. நான் சுமந்து செல்கின்ற கைப்பெட்டியில் அந்த அழகான படத்தை வைத்திருக்கிறேன்.

எம்ஜிஆர் நகரில், கட்சி வேறுபாடு இல்லாமல் ஒருசேர எழுவோம். தமிழ் ஈழத்தை காக்கின்ற உணர்ச்சி தீயை நெஞ்சில் ஏந்தி எழுவோம். முவர் உயிரை காக்கவும், மரண தண்டனை முற்றாக அழித்து ஒழிக்கவும் சங்கநாதம் புரிவோம். தோள் கொடுத்து நிற்போம் என்று அந்த கூட்டத்திற்கு செல்லும் வழியில் மல்லை சத்யா, இதோ இந்த தங்கை தான் செங்கொடி.

சென்றபோது, அந்த கொட்டடிகள் இருக்கிற இடத்துக்கு செல்ல என்னால் இயலவில்லை. என் கால்களில் இனம்புரியாத ஒரு நடுக்கம். நாளை வேலூருக்கு புறப்படுகின்ற, பேரறிவாளன், சாந்தன், முருகன் உயிரை காப்பதற்கு புறப்படுகின்ற அந்தப் பயணத்தைப் பற்றிய துண்டு பிரசுரத்தை இதோ உங்களிடம் தருகிறார் என்றார்.

26ஆம் தேதி தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு, பிற்பகல் 1.30 மணிக்கு பேரறிவாளனிடம், சாந்தனிடம், முருகனிடம் 9ஆம் தேதி அன்று உங்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்று அறிவித்து அவர்கள் கையெழுத்துக்களை அவர்களிடமே பெற்றுக்கொண்ட ஒன்றரை மணி நேரத்தில், பிற்பகல் 3 மணிக்கு தனித்தனி கொட்டடிகளில் பூட்டப்பட்ட அவர்களை சந்திக்க திரும்பவும் இவர்களை நாம் காண்போமா.



அவர்கள் கலகலப்பாக இருந்தார்கள். மனதில், முகத்தில் எந்த சஞ்சலத்தின் ரேகையும் காணவில்லை. வீரர்கள் அல்லவா. மானம் உணர்வு உள்ள வீரர்கள் அல்லவா. ஏன்னே பயப்படரீங்க. ஒண்ணுமில்லண்ணே. தமிழகம் எங்களை காப்பாற்றும். தமிழர்கள் எங்களை காப்பாற்றுவார்கள்.

சிறை வாசலில் பத்திரிகையாளர்கள் சூழ்ந்தபோது, 9ஆம் தேதி தூக்கு என்று சொல்லுவதற்கு என் நாக்குக்கு துணிச்சல் இல்லை. நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் செய்தி மின்னல் வேகத்தில் பரவத்தானே செய்யும். தொலைக்காட்சிகளிலே 9ஆம் தேதி தூக்கு தண்டனை என்ற செய்தி கோடிக்கணக்கா மக்களின் நெஞ்சில் ஈட்டியாக பாய்ந்தது. அங்கிருந்து அவசர அவசரமாக நாம் ஏற்கனவே எடுத்திருக்கின்ற முடிவின்படி, மூன்று தமிழர்களின் உயிர்காக்கும் இயக்கத்தின் சார்பிலே எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி, மனித சங்கிலியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அண்ணாவை தந்த காஞ்சி நகரத்துக்கு ஓடோடி வந்தேன்.

தொடர்வண்டி செல்லுகின்ற பாதையை வழிமறிக்கின்ற கதவுகள் பூட்டப்பட்டிருந்த காரணத்தினால் குறித்த நேரத்தில் நான் செல்ல முடியவில்லை. தாமதமாகிவிட்டதே என்று விரைந்து சென்றேன். முழுக்கம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள் மேடையில் காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள்.

அப்போது கரம் கோர்த்து பல்லாயிரக்கணக்கானவர்கள் நிற்கின்ற காஞ்சி நகர வீதிகளில் நின்றபோது, எனக்கு தெரியாது. வீரமங்கை செங்கொடிக்கு பக்கத்தில் நிற்கின்ற பாக்கியம் எனக்கும் கிடைத்தது என்று எனக்கு தெரியாது.

சேலத்துக்கு பக்கத்தில் ஆத்தூர் என்ற நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்ற மேடையேற போகிறேன். காஞ்சிபுரத்தில் இளம்தளிர் செங்கொடி நெருப்பிலே பாய்ந்தாள். முடிந்துவிட்டது அவள் வாழ்வு. கருகி சாம்பல் ஆகிப்போனாள் என்ற செய்தி, அதற்கு பிறகு அந்த மேடையில் உரையாற்ற என் மனம் என்ன பாடுபட்டிருக்கும்.

மகேஷ் (காஞ்சி மக்கள் மன்றம்) சொன்னார். சின்ன வயதில் என்னிடம் வந்தாள். நான் வளர்த்தேன். இசையில், பாடல் பாடுவதில், அந்த குயிலின் ஓசை அந்த கானக் குரலோடு கலந்திருந்ததாமே, தப்பாட்டம், பறையாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்துவதிலே அற்புதமான கலை அவளிடம் வளர்ந்திருந்ததாமே, போராட்ட களங்களுக்கு முதல் ஆளாக வந்து நிற்பாளாமே. காஞ்சி மக்கள் மன்றம் நடத்திய போராட்டத்தில் துணிச்சலாக முதல் ஆளாக நின்று நாயகியாக நின்றாளாமே.

எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அங்கையற்கண்ணி, வடிவாம்பாள், சுஜாதாவும் நாங்களும் எங்களை மாய்த்துக்கொள்ள தயாராகிவிட்டோம். உயிர் முடிந்தாலும் பரவாயில்லை. உண்ணா நோன்பு இருப்போம் என்று அறப்போர் நடத்துகின்ற களத்துக்கு செல்வோம் வா என்று அழைத்த மகேஷிடம், நான் வரவில்லை. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வர இன்று எனக்கு விருப்பமில்லை என்று சொன்னாளாம்.

சொன்னதற்கு பிறகு மகேஷ் சொல்லுகிறார், நான் புறப்பட்டுச் சென்றேன். திருப்பி பார்த்தேன். என்னாளும் இல்லாத விசித்திரமான புன்னகை ஒன்று அவள் உதடுகளில் தவழ்ந்தது. எதற்கு இந்த புன்னகையை நெளிய விடுகிறார் என்று அப்பொழுது புரியவில்லை. கடைசியாக பார்க்றோம் என்று தான் சிரித்தாள் போலும்.

முத்துக்குமார் தன்னைத்தானே அழித்துக்கொண்ட விளைவாகத்தானே தமிழக்ததில் பிரளயம் ஏற்பட்டது அதுபோல யாராவது ஒருவர் மாய்த்துக்கொண்டால், எரிமலை சீறுமா என்று கேட்டபோது, இதெல்லாம் எதற்காக கேட்கிறாய். அதெல்லாம் இப்பொழுது அவசியமில்லை. அதுபற்றி ஏன் சிந்திக்கிறாய் என்று சொல்லிவிட்டு நான் சென்னைக்கு வந்துவிட்டேன் என்றார்.

செங்கொடி அதன் பிறகு துரிதமாக செல்லக்கூடிய இருசக்கர வாகனத்திலே புறப்பட்டுச் செல்கிறாள். அவளுக்கு அத்தனை பயிற்சிகளும் உண்டு. ஏன் போர்ப் பயிச்சிக் கூட பெற்றிருப்பாள். வாகனத்திலே சென்று, அந்த இடத்தில் வானத்தை நிறுத்திவிட்டு, அங்கிருக்கும் கடைக்காரரிடம் சாவியை கொடுத்து வருவார்கள் சாவியை கொடுத்துவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறாள்

பெட்ரோல் வாங்கிக்கொண்டு, வாகனத்துக்கு என்று வாங்கிக்கொண்டு, அந்த பெட்ரோல் தன் மீது ஊற்றுக்கின்றபோதே, தன்னை கொண்டுபோய் மருத்துவமனையிலே காப்பாற்றிவிடக்கூடாது என்று நனைய நனைய அந்த பெட்ரோலை மேனி மீது இருக்கிற உடை மீது கொட்டிவிட்டு, அதன்பிறகு நெருப்புக் குச்சியை எடுத்து மேலே போட்டவுடனேயே பனை மர உயரத்துக்கு தழல் எழுந்ததள்ளவா. தழல் எழுகிற வேளையிலேயே முழக்கமிடுகிறாள். பேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்றுங்கள். முழக்கம் எழுப்புகிறாள். நெருப்பு எரிவதை பார்த்து பலர் ஓடி வருகிறார்கள். மருத்துவமனைக்கு கொண்டுபோகிறார்கள். பேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்றுங்கள் என்று சொல்லிக்கொண்டே வருகிறபோது, அந்த உயிர் விளக்கு கொஞ்சம் கொஞ்சமாக அணைகிறபோது, சுவாசம் நிற்கப்போகிறது. அந்தக் கட்டத்தில், குரல் எழுப்புற அந்த சக்தி கொஞ்சம் கொஞ்சமாக உயிர் கரைந்துகொண்டே இருக்கிற காரணத்தினாலே, பேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்றுங்கள். என்று சொல்லி வந்தவள், அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மூவரை காப்பாற்றுங்கள்... முவரை காப்பாற்றுங்கள்... முவரை காப்பாற்றுங்கள்... முடிந்துவிட்டது செங்கொடியின் உயிர்.

தற்கொலையை நியாயப்படுத்தவில்லை. தீக்குளிப்பதை எவரும் ஊக்கப்படுத்துவல்லை. தீக்குளிப்பை ஊக்கப்படுத்துவதாக தயவு செய்து எண்ணி விடாதீர்கள். கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் இந்தச் சுடர் இங்கே எரிகிறது.

நெஞ்சில் எவ்வளவு தியாக உணர்வு இருந்திருந்தால், பற்றுமே தழல், படீர் படீர் என்று வெடிக்குமே, தசை கருகுமே, நரம்புகள் கருகுமே, அந்த வலி தாங்க முடியாதே என்று எண்ணினாளா. இல்லை. அவள் எழுதி வைத்துவிட்டு போனாள். முத்துக்குமார் உடல் தமிழகத்தை எழுப்பியது. என்னுடைய உடல் மூன்று பேரின் உயிரை காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு செல்லுகிறேன் என்று அவள் எழுதி வைத்துவிட்டு போனாள். தமிழினத்தின் ஒரு பொக்கிஷம் அல்லவா செங்கொடி. இவ்வாறு வைகோ பேசினார்.

நடிகை சோனா, போலீஸ் கமிஷனரிடம் வீடியோ ஆதாரம் கொடுத்தார் ; சரண் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தல்.



தயாரிப்பாளரும் நடிகருமான எஸ்.பி.பி. சரண் மது விருந்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாண்டிபஜார் போலீசில் நடிகை சோனா புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தினர். எஸ்.பி.பி. சரண் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையடுத்து ஐகோர்ட்டில் சரண் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். பணம் பறிக்கும் நோக்கில் சோனா பாலியல் உணர்வை தூண்டும் விதமாக நடந்து கொண்டார் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார். அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று சோனா எதிர்த்தார்.

இந்த நிலையில் சோனா இன்று காலை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங்கை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

பின்னர் சோனா நிருபர்களிடம் கூறியதாவது:-

எஸ்.பி.பி. சரண் என்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஏற்கனவே போலீசில் புகார் அளித்துள்ளேன். இன்று கமிஷனர் அலுவலகத்தில் சந்தித்து அதற்கான வீடியோ ஆதாரங்களையும் கொடுத்தேன். வீடியோ ஆதாரத்தை எனது லேப்டாப் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்து இருந்தேன். அதனை கமிஷனரிடம் ஒப்படைத்து விட்டேன்.

நான் பணத்துக்கு ஆசைப்பட்டும் விளம்பரத்துக்காகவும் சரண் மீது பாலியல் புகார் கூறுவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. அதற்கு இந்த வீடியோ ஆதாரம் பதில் சொல்லும். இந்த ஆதாரத்தை வைத்து சரண் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் கேட்டுக் கொண்டேன்.

இவ்வாறு சோனா கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

கேள்வி:- எஸ்.பி.பி. சரணிடம் நீங்கள்தான் பாலியல் உணர்வை தூண்டியதாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளதே?

பதில்:- யார் குற்றவாளி என்பது என் வீடியோ ஆதாரத்தில் தெளிவாக உள்ளது. அந்த வீடியோவே இந்த கேள்விக்கு பதில் சொல்லும்.

கே:- இயக்குனர் வெங்கட் பிரபு உங்களுடன் சமரச பேச்சில் ஈடுபட்டாரா?

ப:- இரண்டு முறை சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவிக்கிறோம் என்று அறிக்கை விடுமாறு சரண் தரப்பில் என்னிடம் வற்புறுத்தப்பட்டது. நான் ஏன் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்று கேட்டேன். இதனால் சமரச பேச்சு வெற்றி பெறவில்லை. சரண் என்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லாவிட்டால் நான் விடமாட்டேன்.

கே:- வீடியோ ஆதாரம் மது விருந்தில் எடுக்கப்பட்டதா?

ப:- அது பற்றி இப்போது எதுவும் சொல்ல இயலாது. பத்து நாட்களுக்குள் சரண் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தேன். இன்றுடன் ஒன்பது நாட்கள் ஆகிறது. நாளை பார்ப்போம்.

இவ்வாறு சோனா கூறினார்.

ஐ.நா.வில் அனாதரவாக விடப்பட்ட மன்மோகன் - முக்கியத் தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை !



வழக்கமாக பிரதமர் மன்மோகன் சிங் ஐ.நா. கூட்டத்திற்குப் போனால் உலக வல்லரசு நாடுகளின் தலைவர்கள் அவரைச் சந்தித்துப் பேச அலை பாய்வார்கள், ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்திற்காக அமெரிக்கா போயுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க யாருமே ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவையோ, இங்கிலாந்து பிரதமரையோ, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளின் தலைவர்களையோ இந்த முறை அவர் சந்திக்கவில்லை.

அன்னா ஹஸாரே போராட்டம், ஊழலுக்கு எதிரான இந்திய மக்களின் கொந்தளிப்பு, தொடர்ந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீதான ஊழல் புகார்கள் உள்ளிட்டவை காரணமாக பிரதமர் மன்மோகன் சிங்கின் மிஸ்டர் கிளீன் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீதான நற்பெயர் சர்வதேச அளவில் காலியாகியுள்ளதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதன் காரண்மாகவே மன்மோகன் சிங்கை சந்திக்க எந்த வல்லரசுத் தலைவரும் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ராஜபக்சே போன்ற இரண்டாம் கட்ட உலகத் தலைவர்களை சந்தித்துப் பேசி ஆலோசனை நடத்தும் நிலைக்கு பிரதமர் தள்ளப்பட்டுள்ளார்.

இருப்பினும் இதைப் பொருட்படுத்தவில்லை மன்மோகன் சிங். மாறாக, மிக முக்கியமான விஷயத்தை அவர் தனது பேச்சின்போது ஐ.நா. மன்றத்தில் வைக்கவுள்ளார். அது ஐ.நா. சபையின் விரிவாக்கம் மற்றும் மறு சீரமைப்பு மற்றும் இந்தியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் பதவி என்பதுதான்.

இந்தக் கோரிக்கைக்கு ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு முக்கிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சீனா மட்டும் இதுவரை ஒப்புதல் தரவில்லை. இந்த நிலையில் தற்போதைய கூட்டத்தில் ஐ.நா. மறு சீரமைப்பு மற்றும் விரிவாக்கம் குறித்து விரிவாகப் பேசத் திட்டமிட்டுள்ளார் மன்மோகன் சிங்.

இதுகுறித்து டெல்லியிலிருந்து கிளம்புவதற்கு முன்பு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐ.நா .சபையை சீரமைக்கும் முயற்சியின்போது, குறிப்பாகப் பாதுகாப்புச் சபையை விரிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் ஐ.நா. அமைப்பானது நடுநிலையுடனும், நம்பிக்கைக்குரியதாகவும் இருக்கும்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்பினர் நாடாக பொறுப்பேற்றதிலிருந்து, உலக அமைதிக்காகவும், பாதுகாப்புக்காகவும் இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சிகள் பாதுகாப்புச் சபையின் கொள்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளன.

பணவீக்கம் போன்ற பிரச்சனைகளால் உலகப் பொருளாதாரம் தடுமாறிக்கொண்டிருக்கிறது. தீவிரவாதத்தால் உலகப் பாதுகாப்புக்கும், நாடுகளின் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேற்கு ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் எழுந்துள்ள பிரச்னைகளால், எதிர்காலத்தில் ஸ்திரமற்ற சூழ்நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாலஸ்தீனப் பிரச்னை இதுவரை தீர்க்கப்படாத ஒன்றாகவே உள்ளது. ஈரான், தெற்கு சூடான், இலங்கை, ஜப்பான், நேபாளம் ஆகிய நாடுகளுடனான இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளை நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.

ராஜபக்சேவை சந்தித்துப் பேசும்போது இலங்கையின் முக்கியப் பிரச்சனையான தமிழர் பிரச்சனை குறித்து இரு தலைவர்களும் பெரிதாக பேசிக் கொள்ள மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. மாறாக, இலங்கையை ஐஸ் வைக்கும் வகையிலான பல விஷயங்கள் குறித்தே பிரதமர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவைக் காரணம் காட்டி இந்தியாவிடமிருந்து முடிந்தவரை லாபம் சம்பாதிக்கத் துடிக்கும் ராஜபக்சே, இந்த சந்திப்பின்போதும் தனக்கு சாதகமான பல விஷயங்களை இந்தியாவிடமிருந்து உறுதிமொழியாக பெற முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரின் ஐ.நா. பயணத்தின்போது இன்னொரு முக்கிய சந்திப்பும் நிகழவுள்ளது. அது நேபாள பிரதமர் பாபுராம் பட்டாராயுடனான சந்திப்பு. ஏற்கனவே பாகிஸ்தானுடன் பஞ்சாயத்து உள்ளது. வங்கதேசமும் முழுமையாக ஒத்துவருவதில்லை. சீனாவைக் காட்டி இலங்கை மிரட்டுகிறது. இந்த நிலையில் சமீபகாலமாக நேபாளமும் இந்தியாவின் நட்பு வட்டத்திலிருந்து வேகமாக விலகிக் கொண்டிருக்கிறது. எப்படி பாகிஸ்தான், இலங்கை ஆகியவை சீனாவின் நட்பு நாடுகளாக விளங்குகின்றனவோ அதே நிலையை நோக்கி நேபாளமும் செல்ல ஆரம்பித்திருப்பதால் இந்தியாவுக்கு கவலை அதிகரித்துள்ளது.

எனவே நேபாளத்தை மீண்டும் இந்தியாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் அந்த நாட்டு பிரதமருடன் பேச மன்மோகன் சிங் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நேபாள நாட்டுத் தலைவரை நீண்ட காலமாகவே இந்தியத் தரப்பில் யாரும் சந்திக்காமல் உள்ளனர். மேலும் நேபாளம் குறித்து இந்தியா முன்பு போல அதிக அக்கறை காட்டுவதில்லை. அலட்சியப் போக்கில்தான் இருந்து வருகிறது. இதுவே இந்தியாவை விட்டு நேபாளம் விலகிச் செல்ல முக்கியக் காரணம். இதை இப்போதுதான் இந்தியா உணர்ந்துள்ளதாக தெரிகிறது.

மொத்தத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, வழக்கமாக வல்லரசு நாடுகளின் தலைவர்களுடன் பேசுவதற்கே நேரம் போதாமல் பிசியாக இருக்கும் மன்மோகன்சிங், இந்த முறை குட்டித் தலைவர்களுடன் முக்கியப் பேச்சுவார்த்தை களில் ஈடுபடப் போகிறார். அதேசமயம், ஐ.நா. மறுசீரமைப்பு என்ற முக்கிய வாதத்தையும் பொதுச் சபைக் கூட்டத்தில் வைத்து விட்டு வரப் போகிறார். இந்தியா மற்றும் பிரதமரின் எந்த முயற்சிக்குப் பலன் கிடைக்கும் என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

2ஜி ஊழலில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு ? பிரதமருக்கு பிரணாப் அனுப்பிய `பகீர்' கடிதம்.


2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று நிதியமைச்சகம் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுடன் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன்மூலம் பிரணாப் முகர்ஜி- ப.சிதம்பரம் இடையே நடந்து வரும் மோதல் வெளியே தெரியவந்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 2007ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த இப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தக் கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனு மீது நீதிபதிகள் சிங்வி, கங்குலி ஆகியோர் முன்னிலையில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரத்துக்கு எதிரான ஒரு கடிதத்தை சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்தார்.

இந்தக் கடிதம் கடந்த மார்ச் 25ம் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு அந்த கடிதம் அனுப்பப்பட்டதாகும். நிதியமைச்சகத்தின் Economic Affairs பிரிவின் துணை இயக்குனர் பதவியில் இருக்கும் ஒரு மூத்த அதிகாரி எழுதிய அந்தக் கடிதம் பிரணாப் முகரிஜியின் முழு ஒப்புதலுடன் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த 14 பக்க கடிதத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலம் மூலம் விற்பனை செய்ய நிதியமைச்சக அதிகாரிகள் பரிந்துரைத்தனர். ஆனால், அதை நிராகரித்து விட்டு 2001ம் ஆண்டு விலையிலேயே, முதலில் வந்தவர்களுக்கு முதலில் என்ற முறையில், 2007ம் ஆண்டில் ஸ்பெக்ட்ரத்தை விற்க அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா எடுத்த முடிவுக்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அனுமதி அளித்துள்ளார்.

ராசாவைத் தடுத்து, ஸ்பெக்ட்ரத்தை ஏலம் மூலம் மட்டுமே விற்க வேண்டும் என்று சிதம்பரம் வலியுறுத்தி இருந்தால் ஸ்பெக்ட்ரம் ஊழலே நடந்திருக்காது.

ஆனால், அவரைத் தடுக்காததால் செல்போன் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ரூ. 1,600 கோடிக்கு மட்டுமே விற்கப்பட்டது. 2007ம் ஆண்டில் விற்பனைக்கான அனுமதி தரப்பட்டாலும், ஸ்பெக்ட்ரத்தை விற்றது 2008ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தான்.

இந்த இடைப்பட்ட காலத்தில், சிதம்பரம் நினைத்திருந்தால், இந்த விற்பனையை ரத்து செய்திருக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்ததன் மூலம், அதில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை பிரணாப் முகர்ஜி முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதும் தெளிவாகிறது.

இதன்மூலம் மத்திய அரசுக்குள் மூத்த அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி-ப.சிதம்பரம் இடையே நடந்து வரும் மோதலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நிதியமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய இந்தக் கடிதத்தை தகவல் அறியும் மூலம் விவேக் கார்க் என்பவர் பெற்றுள்ளார். அதை உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்துள்ளார். இந்த முக்கியமான கடிதத்தை உச்ச நீதிமன்றமும் ஏற்று பதிவு செய்து கொண்டுள்ளது.

இந்த கடிதம் குறித்து விவேக் கார்க் கூறுகையில், நிதியமைச்சகம் மற்றும் இதர அமைச்சகங்களின் தொடர்பு இல்லாமல் இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்க சாத்தியமில்லை. சிதம்பரத்துக்கும் வேறு சிலருக்கும் இந்த ஊழலில் தொடர்புள்ளதை இந்த கடிதம் தெளிவாகக் குறிப்பிடுகிறது என்றார்.

கருத்து கூற பிரணாப் மறுப்பு:

இந் நிலையில் இந்தக் கடிதம் குறித்து கருத்துக் கூற நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மறுத்துவிட்டார்.

இந்திய- அமெரிக்க முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் சென்றுள்ள அவரிடம் இது குறித்துக் கேட்டதற்கு, இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அதுகுறித்து கருத்து கூற முடியாது என்றார்.

அதே நேரத்தில் ஊழலை ஒழிக்க தகவல் அறியும் சட்டத்தை கொண்டு வந்ததே நான் தான் என்றும் அவர் கூறினார்.

சிதம்பரம் பதவி விலக பாஜக கோரிக்கை:

இது குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவேத்கர் கூறுகையில், பிரதமருக்கு பிரணாப் முகர்ஜி எழுதிய கடிதம் மூலமாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ப.சிதம்பரத்தின் தொடர்பு அம்பலமாகி விட்டது. நிதியமைச்சகமும், தொலைத்தொடர்பு அமைச்சகமும் ஸ்பெக்ட்ரம் விலை விவகாரத்தில் உடன்பட்டதால்தான், அதை செயல்படுத்த ஒப்புக்கொண்டதாக ஏற்கனவே பிரதமரும் கூறியுள்ளார்.

ஸ்பெக்ட்ரமுக்கு விலையை நிர்ணயிப்பதில் ராசா பின்பற்றிய வழிமுறையை முதல் நாளில் இருந்தே ப.சிதம்பரம் ஆதரித்தார். ஆனால், மத்திய நிதியமைச்சக அதிகாரிகளோ, 2001ம் ஆண்டு விலைக்கு ஸ்பெக்ட்ரமை ஒதுக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் நிலைப்பாட்டை ப.சிதம்பரம் ஏற்றிருந்தால், ஸ்பெக்ட்ரம் ஊழலே நடந்திருக்காது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது கூட்டணி கட்சியின் ஊழல் என்றும், ராசாவே தனியாக எடுத்த முடிவு என்றும் நாடு நம்ப வேண்டும் என்று ப.சிதம்பரம் விரும்புகிறார். ஆனால், பிரணாப் முகர்ஜியின் கடிதம் மூலம், இந்த ஊழலில் காங்கிரசுக்கும் பங்கு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்றார்.

சிதம்பரத்தின் நிலைப்பாடு ஏற்கத்தக்கதல்ல-இந்திய கம்யூனிஸ்ட்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறுகையில், ஸ்பெக்ட்ரம் ஊழலில் ப.சிதம்பரத்தின் நிலைப்பாடு ஏற்கத்தக்கதல்ல. அவரது தொடர்பு பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும், பிரதமரிடம் ஆலோசனை நடத்தியே அனைத்து முடிவுகளும் எடுத்ததாக ராசா கூறி வருவதால், இதில் பிரதமரும் பதிலளிக்க வேண்டும் என்றார்.

சிதம்பரத்துக்கு எதிரான குற்றச்சாட்டு-காங்கிரஸ் நிராகரிப்பு:

இந் நிலையில் இந்த விவகாரத்தில் ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை காங்கிரஸ் கட்சி நிராகரித்துவிட்டது.

இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், எந்த வகையிலும் சுப்ரமணிய சாமியின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. சிதம்பரத்தின் நேர்மையை யாராலும் சந்தேகிக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தில் சாமியால் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன. விசாரணை முடிவடைவதற்குக் காத்திருக்காமல் சாமியோ அல்லது வேறு எவருமோ சிதம்பரம் தவறு செய்திருப்பதாக முடிவுக்கு வருவது ஆட்சேபத்துக்குரியது என்றார்.

Wednesday, September 21, 2011

ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் மட்டுமல்ல – கார்ப்பரேட் பகற்கொள்ளை !!!

ஸ்பெக்ட்ரம் ஊழல்: வழக்கு நீர்த்துப் போகும் காரணம் என்ன?

படம் - www.thehindu.com


ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நடந்த பிரம்மாண்டமான ஊழலை மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. நாமோ அப்போதே இதை வெறும் ஊழல் மட்டுமல்ல – கார்ப்பரேட் பகற்கொள்ளை என்றோம். மட்டுமல்லாமல், இந்த ஊழல் தனியார்மய தாராளமயக் கொள்(ளை)கை எனும் அடித்தளத்தில் நிற்கிறது என்பதை எமது பதிவுகளிலும், பத்திரிகைகளிலும் சுட்டிக் காட்டி எழுதினோம். தனியார்மயத்தை ஆதரித்துக் கொண்டே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஊழல் என்று தனியாக பிரிக்க முடியாது என்பதையும் வலியுறுத்தியிருந்தோம்.

கடந்த மாதத்தில் அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு சர்க்கஸ் நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில் இந்த வழக்கு விசாரணைகளில் நடந்துள்ள சில முக்கியமான விஷயங்கள் ஏற்கனவே நாம் வைத்த வாதங்களை மெய்பிப்பதாக உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முதலில் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழல் தேசிய அளவிலான ஒரு விவாதப் பொருளாக ஆனபின் உச்சநீதிமன்ற உத்திரவின் கீழ் விசாரணையைத் துவக்கும் சிபிஐ, இதில் சுமாராக முப்பதாயிரம் கோடிகள் அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என்று ஒரு குத்துமதிப்பாக தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டது.

பின்னர், இந்த ஊழலில் குறிப்பாக ஏற்பட்ட இழப்பின் அளவு என்ன என்பதை தொலை தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஜனவரி 19-ம் தேதி சி.பி.ஐ கேட்டது. இதற்காக ஒரு ‘நிபுணர்’ குழுவை தொலைதொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அமைத்தது. சி.பி.ஐயிடம் செப்டெம்பர் முதல் வாரத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்த அக்குழு, அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு ஏதும் இல்லையென்றும், நியாயமாகப் பார்த்தால் மூவாயிரம் கோடியில் இருந்து ஏழாயிரம் கோடிகள் வரை லாபம் கிடைத்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது. ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் ஏதும் நடக்கவே இல்லை என்று ஆ.ராசாவைத் தொடர்ந்து தொலைதொடர்புத் துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் கபில் சிபல் தெரிவித்து வருகிறார். இதே பாட்டை மன்மோகன் சிங்கும் பாராளுமன்றத்தில் பாடியிருக்கிறார்.

ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஏலம் விடவில்லை என்றும், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற கொள்கையைக் கடைபிடித்தார் என்றும், இதனால் தான் ஊழலுக்கு வழியேற்பட்டது என்றும் ஆங்கில ஊடகங்கள் எழுதி வந்த நிலையில், ஆகஸ்ட் 20-ம் தேதியிட்ட தனது கடிதம் ஒன்றில், ட்ராய் செயலாளர் ஏ.கே. அர்னால்ட், “ஸ்பெக்ட்ரமை ஏலம் விடக்கூடாது என்பது தான் தமது கொள்கை, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பொருத்தமட்டில் அதை ஒரு வருமானம் ஈட்டும் வகையினமாகக் கருதக் கூடாது என்பதே ட்ராயின் கொள்கை முடிவு” என்றும் தெரிவித்திருந்தார்.

ஆக, இப்போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தேசத்திற்கு பாரதூரமான இழப்பை ஆ.ராசா ஏற்படுத்தி விட்டார் எனும் குற்றச்சாட்டை தொலைத்தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையமே காலாவதியாக்கி விட்டது. அடுத்து, ‘இதையே ஏலம் விட்டிருந்தால்….’ எனும் கேள்விக்கும் மடையடைத்து விட்டது. மேலும், ஒரு பொருளைக் களவு கொடுத்தவனின் குற்றச்சாட்டு தான் குற்றவியல் விசாரணைக்கே மிக அடிப்படையான ஆதாரம் – இங்கோ, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை யாருக்கு சொந்தமோ – அதாவது அரசு – அவரே, இதில் இழப்பு ஏதும் இல்லை என்பதை பாராளுமன்றத்துக்கு உள்ளும் வெளியேயும் பட்டவர்த்தனமாக சொல்லியாகிவிட்டது.

மட்டுமல்லாமல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பலனடைந்த டாடா குழுமத்துக்கு சி.பி.ஐயே முன்வந்து தனது குற்றப்பத்திரிகையில் பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளது. மேலும் சம்பந்தமே இல்லாமல், ‘எங்கப்பன் குதிருக்குள்ள இல்லையே..’ என்கிற கணக்கில் மன்மோகன் சிங் நெம்ப நல்லவராக்கும்‘ என்றும் குற்றப்பத்திரிகையில் சொருகியிருக்கிறது.

அடுத்து, ஊழல் நடந்திருப்பதற்கு சான்றாக குறைந்த விலையில் வாங்கிய அலைக்கற்றை உரிமத்தை, வேறு பன்னாட்டு கம்பெனிகளுக்கு அதிக விலைக்குக் கைமாற்றி விட்டதை குறிப்பிட்டார்கள். இந்நிலையில் நீதிமன்றத்தில் தனது வாக்குமூலங்களை அளிக்கத் துவங்கிய ஆ.ராசா, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் எனும் வகையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் தான் எடுத்த முடிவுகளால் அரசுக்கு இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும், இதில் ஊழல் நடைபெறவில்லை என்றும், தனது முடிவுகள் அனைத்தும் பிரதமருக்கும் பா. சிதம்பரத்துக்கும் ஏற்கனவே தெரியுமென்றும், தேவைப்பட்டால் அவர்கள் இருவரையும் சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் ஆ.ராசா மன்மோகன் சிங்கின் டவுசரை அவிழ்த்ததும், ஆங்கிலச் செய்தி ஊடகங்களில் தோன்றிய சிதம்பரம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று ஏற்கனவே கபில் சிபலும் பிரதமரும் தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டினார். மேலும், ஒரு நிறுவனம் தனது பங்குகளை விற்பதோ அல்லது முதலீடுகளை வெளிச்சந்தையில் இருந்து கோரிப் பெறுவதோ சட்டப்படி தப்பே இல்லை என்று தெரிவித்தார்.

இதற்கிடையே தனது ஆகஸ்ட் 29-ம் தேதியிட்ட அறிக்கையில், ஆ.ராசாவுக்கும் யுனிடெக்குக்கும் இடையிலான பணப்பரிவர்த்தனையையோ, ரிலையன்ஸால் போலியாக உருவாக்கப்பட்ட ஸ்வான் டெலிகாமுக்கும் அதனால் ரிலையன்ஸ் அடாக் குழுமத்துக்கு கிடைத்த ஆதாயத்தையோ நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. அதே போல், மாக்ஸிஸ் நிறுவனத்திடம் இருந்து தயாநிதி மாறனும் சன் டிவி குழுமமும் லஞ்சம் பெற்று, ஏர்செல்லின் பங்குகளை அடாவடியாக மாக்ஸிஸ் நிறுவனம் கைப்பற்ற வகைசெய்தார்கள் எனும் குற்றச்சாட்டையும் நிரூபிக்க போதுமான ஆதாரம் ஏதும் இல்லை என்று சிபிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆக, இந்த விவரங்களில் இருந்து நமக்குத் தெரியவருவது என்னவென்றால், சிபிஐயே ஊழல் பெருச்சாளிகள் புகுந்து புறப்படுவதற்கான அத்தனை ஓட்டைகளையும் தனது குற்றப்பத்திரிகைகளிலும் விசாரணை அறிக்கைகளிலும் செய்து முடித்துள்ளது என்பதைத் தான். இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இது அனைத்தும் அண்ணா ஹசாரே நாடகம் சிறப்பாக நடந்தேறிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் நடந்து முடிந்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பொருத்தளவில், அரசுக்குச் சொந்தமான அலைக்கற்றையை பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்லிடம் அளிக்காமல் தனியாருக்கு விற்பது என்று முடிவெடுத்த இடத்தில் தான் இந்த மோசடியின் மையம் உள்ளது. பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்லை முடக்கி வைப்பது என்கிற ‘கொள்கை’ முடிவின் ஆரம்பம் காட் ஒப்பந்தத்தில் இருக்கிறது. ஆக, பொதுச் சொத்தை கூறு கட்டி தனியாருக்கு தாரை வார்ப்பதை கொள்கையாக வைத்திருப்பதில் தான் ஊழலின் அச்சு இருக்கிறது. ஊழலை எதிர்க்க வேண்டுமென்றால், தனியார்மய தாராளமய பொருளாதாரக் கொள்கையை எதிர்க்க வேண்டியிருக்கும். ஒன்றை விட்டு ஒன்றைப் பேசுவதும், ஒன்றை ஆதரித்துக் கொண்டு இன்னொன்றை எதிர்ப்பதும் அடிப்படையிலேயே முட்டாள்தனமானது.

ஆனால், இந்த முட்டாள்தனம் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிவந்த சமயத்தில் தேசிய ஊடகங்களில் இருந்து நம் தமிழ் வலைப்பதிவு உலகம் வரையில் நடந்து வந்தது. இந்த ஊழலைக் குறித்து வலைப்பதிவுகளில் எழுதியவர்களில் பெரும்பாலானோர் இந்த அமைப்பு முறையை மனதார நம்புகிறவர்கள். இந்த ஊழல் நீதிமன்றத்தில் வைத்து முறையாக விசாரிக்கப்பட்டு தீர்க்கப்பட்டுவிடும் என்று இன்னமும் நம்புபவர்கள். இதோ, இந்த வழக்கையே ஒட்டுமொத்தமாக நீர்த்துப் போகச் செய்யும் சி.பி.ஐயின் சதிகள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையிலும் அவர்களது நம்பிக்கையின் தரமென்ன என்று கேட்கிறோம்.

முக்கியமாக இவர்கள் தான் ஊழலுக்கும் தனியார்மய கொள்கைகளுக்கும் தொடர்பே இல்லை என்றும், தனியார்மயம் தான் போட்டியை ஊக்குவித்து தரமான சேவை கிடைப்பதை உறுதி செய்ய வல்லது என்றும் பேசினார்கள். ஊழலுக்கும் லஞ்சத்துக்குமான அடிப்படை வேறுபாடு கூட தெரியாமல் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் தரகர்கள் பெரும் லஞ்சத்தையும் ஸ்பெக்ட்ரம் போன்ற கார்ப்பரேட் பகற்கொள்ளையையும் இணைவைத்துப் பேசினார்கள்.

ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிகள் எனும் பிரம்மாண்டம் அளித்த அதிர்ச்சி மயக்கத்திற்கு இப்போது சி.பி.ஐ விசாரணையின் பித்தலாட்டங்கள் தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டுக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு தேசத்தின் வளங்களின் மேலிருக்கும் உரிமையை மறுப்பதிலிருந்தும், அதை பங்கு வைத்து பன்னாட்டுக் கம்பெனிகளுக்குப் பரிமாற வேண்டும் என்கிற இந்தக் கைக்கூலிகளின் துரோகத்தனங்களிலிருந்துமே ஊழலுக்கான ஆரம்ப விதை தூவப்படுகிறது. அதற்குத் தண்ணீர் ஊற்றி வளர்ப்பது தான் சி.பி.ஐ, போலீசு, நீதிமன்றம் போன்ற அரசு அலகுகளின் நடைமுறையாக உள்ளது.

இதில் எரியும் அடிக்கொள்ளியான மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராடி முறியடிக்கும் போது, அதற்கு இசைவாய் ஒத்து ஊதிக் கொண்டிருக்கும் இந்த அரசு இயந்திரங்களின் கொதிப்பு தானே அடங்கிப் போகும்.

நன்றி - வினவு