Tuesday, May 17, 2011

தலைமைச் செயலகத்தை மாற்றுவதை எதிர்த்து வழக்கு.


தமிழக அரசின் தலைமைச் செயலகத்தை மீண்டும் கோட்டைக்கே மாற்றுவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னையைச் சேர்ந்த ஜி. கிருஷ்ணமூர்த்தி என்னும் வழக்கறிஞர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

முந்தைய திமுக ஆட்சியில் ரூ. 1000 கோடியில் கட்டப்பட்ட கட்டடத்தை தவிர்த்துவிட்டு, மீண்டும் கோட்டைக்கே சட்டப்பேரவையையும் தலைமைச் செயலகத்தையும் மாற்றுவதை நிறுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களின் விருப்பத்தின் பேரில் மீண்டும் இடமாற்றம் செய்யப்படுகிறது.

தலைமைச் செயலகம் ஏன் மாற்றப்படுகிறது என்பது குறித்து தலைமைச் செயலர் விளக்கம் அளிக்க வேண்டும்.

பெரும் தொகையில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை புறக்கணித்துவிட்டு, தலைமைச் செயலகத்தையும் சட்டப்பேரவையையும் இடமாற்றம் செய்வது சட்டவிரோதமானது, பொது நலனுக்கு எதிரானது.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் ஜி.கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனு விபரம் :
http://vaiarulmozhi.blogspot.com/2011/05/blog-post_7895.html

பெட்ரோல் விலை உயர்வு : கார்களை விட்டு பைக்குக்கு தாவும் வாடிக்கையாளர்கள்.


சட்டசபை தேர்தல் முடிவுகள் தெரிந்த கையோடு, பெட்ரோல் விலையை மத்திய அரசு 5 ரூபாய் உயர்த்தியுள்ளது. கடந்த 9 மாதங்களில் இதுவரை 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டு வந்த அதீத வளர்ச்சியை இந்த ஆண்டு எதிர்பார்க்க முடியாது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பெட்ரோல் விலை உயர்வால் கார் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கார் நிறுவனங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனவாம்.

மேலும், இன்னும் சில நாட்களில் டீசல் விலையும் உயர்த்தப்படும் என்று தகவல்கள் உலா வருவதால், கார் நிறுவனங்கள் கவலை அதிகரித்துள்ளதாம். பெட்ரோல் விலை உயர்வால் புதிதாக கார் வாங்குவதை தவிர்த்து, பைக் பக்கம் வாடிக்கையாளர்கள் கவனம் செல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளதுதான் கார் நிறுவனங்களின் கவலைக்கு காரணம்.

பெட்ரோல் விலை உயர்வு காரணமாக சைக்கிள் விற்பனை கணிசமாக உயரும் என்பதும ஆட்டோமொபைல் துறையின் கருத்தாக உள்ளது. இதற்கு சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களும் தலையசைத்துள்ளன.

பெட்ரோல் விலை உயர்வு பிரச்னையிலிருந்து கார் மற்றும் பைக் வைத்திருப்பவர்கள் தப்புவதற்கு சில வழிமுறைகள்:

1.குறைந்த தூரம் செல்வதற்கு கார், பைக்குகளை பயன்படுத்தாமல் நடந்து செல்வதே சால சிறந்தது. பெட்ரோலும் மிச்சம், வாக்கிங் செய்த பலனும் கிட்டும்.

2.தரமான பெட்ரோல் பங்குகளில் மட்டுமே பெட்ரோல் போடுங்கள். சில பங்குகளில் போடப்படும் கலப்பட பெட்ரோல் உங்கள் வாகனத்தின் எஞ்சினை சுவாகா செய்துவிடும்.

3.குறிப்பிட்ட இடைவெளிகளில் வாகனத்தை சர்வீஸ் செய்ய மறக்க வேண்டாம். இதனால், வாகனத்தின் மைலேஜ் குறையாது.

4.டிரைவிங்கை பொறுத்து வாகனத்தின் மைலேஜ் கொடுக்கும் திறன் மாறுபடும். எனவே, வாகனத்தை சீராக ஓட்டுவதற்கு பழகிக் கொள்ளுங்கள்.

5.சிக்னல்களில் நிற்கும்போது, ஆக்சிலேட்டரை அழுத்தி எஞ்சினை உறுமவிடாதீர்கள். இதனால், அதிக எரிபொருள் செலவாகும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

6.எஞ்சினில் சரியான அளவு ஆயில் இருக்கிறதா என்பதை அடிக்கடி உறுதி செய்து கொள்ளுங்கள்.

7.டயர்களில் சரியான அளவு காற்றின் அழுத்தம் இருக்கிறதா என்பதை பார்த்துகொள்வது நல்லது. டயர்களில் சரியான அளவு காற்று இல்லாவிட்டால் அதிக எரிபொருளை எஞ்சின் வி்ழுங்கும்.

இதுபோன்ற நடைமுறைகளை கடைபிடித்தால், பெட்ரோல் விலை உயர்வு நம் பாக்கெட்டை பதம் பார்க்காது.

ரஜினியின் உடலுக்கு என்ன பிரச்சினை ?


ரஜினிக்கு என்னதான் பிரச்சினை என்று நாடு முழுவதிலும் கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன.

ரஜினி ஆரம்பத்தில் அஜீரணக் கோளாறு, நீர்ச்சத்து குறைவு மற்றும் சோர்வு போன்றவற்றால் அவதிப்பட்டார். இது அவர் ராணாவுக்காக 15 கிலோ வரை எடை குறைத்து ஸ்லிம்மாக மேற்கொண்ட கடும் உடற்பயிற்சி மற்றும் டயட்டின் விளைவு.

அதன் தொடர்ச்சியான விளைவுகளாக, நுரையீரலில் நோய்த் தொற்று மற்றும் இரைப்பை அழற்சி போன்றவை அவரைச் சற்று கடுமையாக பாதித்துள்ளன.

நுரையீரலில் தேங்கும் திரவம்

ரஜினிக்கு நீண்ட காலமாக புகைப் பழக்கம் இருப்பதால், நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அவரது அண்ணன் சத்யநாராயணாராவ் கெய்க்வாடும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனை சரிசெய்ய ஆக்ஸிஜன் மூலம் நோய் எதிர்ப்புக்கான மருந்துகள் செலுத்தப்பட்டு, அந்தப் பகுதியில் உள்ள நோய்த் தொற்றை அடியோடு நீக்கி வருகின்றனர்.

இந்தப் பிரச்சினை காரணமாக அவருக்கு நுரையீரலுக்கும் இதயப் பகுதிக்கும் இடையே திரவம் (Fluid) அதிகளவு தேங்குகிறது. இந்த திரவம் நுரையீரல்களை அழுத்தி மூச்சு விட சிரமப்பட வைக்கும்.

மேலும் ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை மூலம் தேங்கும் திரவத்தை பெருமளவு அகற்ற முயன்று, அதில் நல்ல வெற்றியும் கிடைத்துள்ளது மருத்துவர்களுக்கு. இந்த சிறிய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ரஜினி தெம்பாகியுள்ளார்.

சிறுநீரகம் செயல்படுவதில் சிக்கல்

நுரையீரலில் இத்தனை பிரச்சினைகள் இருப்பதால் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் ஒழுங்கின்மை காணப்படுகிறதாம். காலில் வீக்கம் ஏற்பட முக்கிய காரணம் இதுவே.

ஆனால் இது மிக ஆரம்ப நிலை என்பதால் சீக்கிரமே சரிப்படுத்திவிட முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நுரையீரல் பிரச்சினை சரியாகிவிட்டாலே, சிறுநீரக ஒழுங்கின்மையும் ஓரளவு கட்டுக்குள் வந்துவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

புற்றுநோய் அறிகுறி இல்லை

இப்போது ரஜினியின் திசுக்கள் சோதனை முடிவும் வந்துவிட்டன. ரஜினிக்கு புற்று நோய்க்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய நடத்தப்பட்ட சோதனை இது. ஆனால் அவருக்கு அப்படி எந்த அறிகுறியும் இல்லை என்பது உறுதியாகத் தெரிந்துள்ளது.

‘உற்சாகத்தில் ரஜினி’ - மருத்துவமனை அறிக்கை

ராமச்சந்திரா மருத்துவமனையின் இரண்டாவது செய்திக் குறிப்பில், “பொது மற்றும் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் ரஜினிக்கு இப்போது கிசிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நலத்தை முழுமையாக கண்காணிப்பதற்காக தொடர்ந்து மருத்துவமனையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நூரையீரலில் சிறு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பிறகு ரஜினி உற்சாகமாக இருக்கிறார். அவருக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது முக்கிய உறுப்புகள் அனைத்தும் இயல்பாக செயல்படுகின்றன.

பார்வையாளர்களை சந்திப்பதை வெகுவாக குறைத்துக் கொள்ளும்படி ரஜினிக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவரை முழு ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவ நிபுணர்கள்," என்று கூறப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்வது எப்போது?

நுரையீரல் பிரச்சினை முற்றாக சரியாகிவிட்டால் வெளிநாட்டுக்குச் செல்ல தேவையில்லை என்கிறார்கள். சிறுநீரகக் கோளாறுகளை இங்கேயே சரி செய்துவிட முடியும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டசபையை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்ற வைகோ எதிர்ப்பு.


தமிழக சட்டசபையை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் கேட்ட சீட் கிடைக்காததால், சட்டசபைத் தேர்தலைப் புறக்கணித்த மதிமுக தேர்தல் முடிந்து, அதிமுகவும் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து விட்ட நிலையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியது.

தங்களது ஆதரவே இல்லாமல் அதிமுக மாபெரும் வெற்றியடைந்தது அக் கட்சிக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மதிமுக ஒரு சக்தியே இல்லை என்ற அளவுக்கு அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

இந் நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகமான தாயகத்தில் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் மதிமுகவின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழுவினர், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடந்தது.

அதில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கட்சியினருடன் வைகோ ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், தமிழக அரசின் தலைமைச் செயலகமும், சட்டமன்றமும் இயங்குவதற்கு புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களும் வளாகங்களும், அள்ளித் தெளித்த அவசர கோலத்தில் செய்யப்பட்டதும், தொடக்கத்தில் கூறப்பட்ட மதிப்பீட்டுத் தொகையைவிட மூன்று மடங்கு அதிகமாக செலவீட்டுத் தொகை காட்டப்பட்டதும் மிகத் தவறானது.

எனினும், மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட, மக்களுக்குச் சொந்தமான கட்டடங்களை நிராகரித்து விட்டு, ஜார்ஜ் கோட்டை வளாகத்திலேயே சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் இயங்கிட புதிய அரசு முடிவு எடுக்குமானால், முந்தைய அரசால் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்கள், மேம்பாலங்கள், நீதிமன்றக் கட்டடங்கள் இவற்றையெல்லாம், புதிய அரசு பயன்படுத்தாது விட்டுவிடுமா? என்ற கேள்வி எழுகிறது.

எனவே, சட்டமன்றத்தை மாற்றுவது ஏற்பு உடையது அல்ல; மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்திலேயே சட்டமன்றம் தொடர்ந்து இயங்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் நதி நீர் பிரச்சனைகளைத் தீர்க்க மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், நதிகள் இணைப்புத் திட்டத்தை அதிமுக அரசு அமலாக்க வேண்டும் உள்ளிட்ட சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

சேலத்தில் 5மணி நேரம் மின்வெட்டு.


சேலம் நெத்திமேடு மின்நிலையத்தில் இருந்துதான், சேலம் மாநகரின் பெரும்பான்மையான பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.

இந்த சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தான் 5மணி நேரம் மின்வெட்டு கடந்த 16ந்தேதி முதல் அமுலில் உள்ளது.

காலை 6மணி முதல் 9மணி வரை., 3மணி நேர மின்வெட்டு.

10.30மணி முதல் 11மணி வரை .,

மதியம் 2மணி முதல் 2.30மணி வரை .,

மாலை4.30மணி முதல் 5மணி வரை .,


இரவு 8.30மணி முதல் 9மணி வரை


இப்படி தினமும் சேலத்தில் 5மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப் படுகிறது.

மின்வெட்டை சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் சென்னையை மட்டும் மின்வெட்டு இல்லாத மாநகரமாக ஆக்கினால் போதும் என்று எண்ணுகிறார்களா?

அல்லது வீதிக்கு வீதி காவலர்களை நிறுத்தினால் போதுமானது என்று எண்ணு கிறார்கள் போலும்.

மின்வாரிய ஊழியர்களிடம் கேட்டால், உங்களுக்கு மின்சாரம் இல்லை என்ற ஒரு பிரச்சனைதான்.

ஆனால் எங்களால் பில் தரமுடியவில்லை, மக்களுக்கு மின்வெட்டிற்கான பதில் சொல்ல முடியவில்லை, எங்கள் பணிகள் எதுவும் சரிவர செய்ய முடியவில்லை, அலுவலுகத்திற்குள் புழுங்க முடிய வில்லை.

இப்படி அவர்களுடைய பிரச்சனையை நம்முன் அடுக்குகிறார்கள்.

தான் ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றையதினமே சங்கிலி பறிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துவிட்டது என்றும் சங்கிலியை பறிக்கும் ஆட்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். நாமும் நம்புவோம்

இது போன்ற அதிசயதக்க மாற்றம் மின்துறையில் எப்போது வரும்!!.



ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாத்தி அம்மாள் ஆடிட்டரிடம் விசாரணை.


ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ராஜாத்தி அம்மாள் ஆடிட்டரிடம் விசாரணை; சி.பி.ஐ. போலீஸ் தீவிரம்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் பணம் எப்படியெல்லாம் கை மாறியது என்பது குறித்து சி.பி.ஐ., வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இதுவரை நடந்துள்ள விசாரணையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு பிறகு இந்தியாவுக்கு வந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மொரிஷியஸ் மற்றும் வளைகுடா நாடுகளில் விசாரணை நடத்த அமலாக்கப் பிரிவு சென்றுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் டாடா தொழில் நிறுவனத்துக்கு சொந்தமான வோல்டாஸ் நிறுவனத்தின் நிலம் பலரது கைக்கு மாறி, கடைசியில் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள் ஆடிட்டர் வசம் சென்றுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பயன் அடைந்ததற்காக இந்த நிலத்தை டாடா நிறுவனம் கைமாற்றி கொடுத்திருக்கலாம் என்று சி.பி.ஐ. சந்தேகிக்கிறது. வோல்டாஸ் நிறுவன நிலம் முதலில் 18 பேரின் பெயர்களில் நீண்ட கால குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. பிறகு கடந்த 2009-ம் ஆண்டு அந்த நிலம் ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டர்களில் ஒருவரான மலேசிய சரவணன் பெயருக்கு மாற்றப்பட்டது.

திடீரென ஒரு வாரம் கழித்து அந்த நிலம் மலேசியாவைச் சேர்ந்த சங்கல்பம் என்ற நிறுவனத்துக்கு கை மாறியது. இந்த மாற்றத்தை ராஜாத்தி அம்மாளின் மற்றொரு ஆடிட்டரான ரத்தினம் செய்ததாக கூறப்படுகிறது. வோல்டாஸ் நிறுவன நிலம் கை மாறியது தொடர்பான சர்ச்சையில் உண்மையை தெரிந்து கொள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டருக்கு அழைப்பு விடுத்தனர்.

அதை ஏற்று ஆடிட்டர்கள் ரத்தினம், மலேசிய சரவணன் இருவரும் நேற்று சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு சென்று ஆஜரானார்கள். அவர்களிடம் வோல்டாஸ் நிறுவன நிலம் ஏன், எதற்காக, எப்படி கை மாற்றப்பட்டது என்று விசாரித்தனர். இதற்கு ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டர்கள் அளித்த பதில் பதிவு செய்யப்பட்டது. அவை தனித்தனி ஆவணங்களாக தொகுக்கப்பட்டு வருகின்றன.

கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகிய இருவரின் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 20-ந்தேதி அளிக்கப்பட உள்ளது. அப்போது வோல்டாஸ் நிலம் கை மாறிய விதம் பற்றிய ஆவணங்களை கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை பொறுத்தே கனிமொழி எம்.பி., சரத்குமாருக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பது தெரிய வரும்.

தமிழக எம்.எல்.ஏ.க்களில் பாதி பேர் கோடீசுவரர்கள்.

தமிழக எம்.எல்.ஏ.க்களில்  பாதி பேர் கோடீசுவரர்கள்

தமிழக சட்டசபைக்கு தேர்வான 234 எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு விபரங்கள், அவர்களது வேட்புமனுக்கள் வாயிலாக ஆய்வு செய்யப்பட்டன. 234 எம்.எல்.ஏ.க்களில் 120 பேர் கோடீசுவரர்கள் என்பது தெரிய வந்துள்ளது. சதவீத கணக்கில் பார்த்தால் மொத்தம் உள்ள எம்.எல்.ஏ.க்களில் 52 சதவீதம் பேர் கோடீசுவரர்கள். அதாவது தற்போதைய எம்.எல்.ஏ.க்களில் பாதி பேர் கோடீசுவரர்கள் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளனர்.

கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபைக்கு தேர்வான 234 எம்.எல்.ஏ.க்களில் 57 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே கோடீசுவரர்களாக இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் கள் 5 பேரில் 3 பேர் முக்கால்வாசிக்கும் அதிகமானவர்கள் கோடீசுவரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 23 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள தி.மு.க. , 146 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள அ.தி.மு.க.வில் 55 சதவீதம் பேர் கோடீசுவரர்கள்.

“ரத்த பரிசோதனை மூலம் ஆயுளை கண்டுபிடிக்கலாம்”

“ரத்த பரிசோதனை மூலம்  ஆயுளை கண்டுபிடிக்கலாம்”

ஒரு மனிதனின் ஆயுட் காலத்தை குரோம்சோம்களின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒருவரது குரோம்சோம்களின் நுனிப் பகுதி “டெலோமியர்” என அழைக்கப்படுகிறது. அவை நீளமாக இருந்தால் ஒருவரது ஆயுட்காலம் அதிகமாக இருக்கும்.

அதே பட்சத்தில் நுனிப் பகுதி சிறிதாக இருந்தால் அவரின் வாழ்நாள் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.டெலோமியரின் அளவை கண்டுபிடிக்க ஒரு சிறிய ரத்த பரிசோதனை மட்டுமே போதும்.

இச்சோதனையை மாட்ரிட் நகரில் உள்ள ஸ்பெயின் தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த மரியா பிளாஸ்கோ மேற் கொண்டார். ஐரோப்பாவின் பல நாடுகளில் ரத்த மாதிரி எடுத்து இப்பரிசோதனை நடத்தப்பட்டது.

முதல்வராக பொறுப்பேற்ற பின் ஜெயலலிதா அளித்த பேட்டி.


தமிழ்நாடு விடுதலை அடைந்துவிட்டது. நேற்றைய தினமே சங்கிலி பறிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துவிட்டதாக கேள்விப்பட்டேன். சங்கிலியை பறிக்கும் ஆட்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

முதல்வராக பொறுப்பேற்ற பின் சென்னை ஜார்ஜ் கோட்டையில் அவர் அளித்த பேட்டி:

கேள்வி: தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டுள்ள இலவச மிக்சி, கிரைண்டர் எப்போது தரப்படும்?

பதில்: இப்போதுதானே பதவி ஏற்றிருக்கிறேன்.

கேள்வி: அரசு எதற்கெல்லாம் முன்னுரிமை தரும் என்ற தகவலை நீங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளீர்கள். தற்போது மின்சார வெட்டை நீங்குவதற்கு குறுகிய கால திட்டம் எதையும் வைத்திருக்கிறீர்களா?

பதில்: நான் இன்றுதான் பதவி ஏற்றேன். அமைச்சர்களும் இன்றுதான் தங்களுக்கான பதவிகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எனவே எதுவென்றாலும், துறைரீதியாக அவற்றைப் பற்றி பரிசீலனை செய்வதற்கு எங்களுக்கு போதிய கால அவகாசம் தேவைப்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்காக எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்பதை முடிவு செய்ய கால அவகாசம் தேவை.

கேள்வி: கேபிள் டி.வி. அரசுடமை ஆக்கப்படுமா?

பதில்: இதை எங்கள் தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறோம். விரைவில் நிறைவேற்றப்படும்.

கேள்வி: இந்த அமைச்சரவையை புதியவர்களையும், பழையவர்களையும் கலந்து நீங்கள் நல்ல கலவையாக அமைத்திருக்கிறீர்கள். இதன் பின்னணியைப் பற்றி சொல்ல முடியுமா?

பதில்: இந்த அமைச்சரவையில் தமிழகத்தின் எல்லா பகுதிகள், சமுதாயம், மதம், சாதியினரின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இந்த முயற்சியில் நான் நல்ல வெற்றியை அடைந்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். நான் ஏற்கனவே சொன்னது போல இந்த அமைச்சரவை, பழையவர்கள், அவர்களின் அனுபவம் மற்றும் புதியவர்கள் ஆகியோர் கலந்த நல்ல கலவைதான்.

கேள்வி: நீங்கள் ஜார்ஜ் கோட்டையில் பதவி ஏற்றிருக்கிறீர்கள். கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் என்னாகும்?

பதில்: இப்போதே அது குறித்து எதுவும் கூற முடியாது. அமைச்சரவைக் கூட்டத்தில்தான் அதுபற்றிய முடிவை எடுப்போம்.

கேள்வி: முதல்வராக பதவி ஏற்றுள்ள இந்த முதல் நாளில் மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் நிர்வாகமே இல்லாத ஒரு சூழ்நிலை இருந்தது. அரசு நிர்வாகம் என்பதே இல்லாமல் இருந்தது. அரசாங்கப் பணி என்பது நடைபெறவே இல்லை. எனவே கடந்த 5 ஆண்டு காலத்தில் இந்த மாநிலம் வெறும் 5 ஆண்டு கால பின்னடைவை மட்டும் அடையவில்லை. கற்காலத்துக்கே சென்றுவிட்டது. ரத்தினச் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் எல்லாமே சீரழிக்கப்பட்டுவிட்டது, சீரழிந்து போய்விட்டது. எனவே தமிழ்நாட்டை மீண்டும் நிர்மாணிக்க வேண்டும், மீண்டும் கட்ட வேண்டும். விலைவாசியை குறைக்க வேண்டும். மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். சட்டம்-ஒழுங்கை சீர்படுத்த வேண்டும்.

விவசாயத் துறையை மேம்படுத்த வேண்டும். நெசவுத்துறையை மேம்படுத்த வேண்டும். ஒட்டுமொத்த தொழில்துறையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் திட்டங்களை கொண்டு வர வேண்டும். இப்படி துறை தோறும் ஏராளமான பணிகள் இருக்கின்றன. ஒட்டு மொத்தத்தில் தமிழகத்தை புனரமைக்க வேண்டும்.

கடந்த 5 ஆண்டு காலத்தில் மக்கள் ஒரு அச்ச உணர்வுடனேயே வாழ்க்கையை நடத்தினர். ஊடகங்களுக்கு கூட சுதந்திரம் இல்லாத நிலை இருந்தது. இனிமேல் எல்லாரும் சுதந்திரமாக வாழலாம். தேர்தல் பிரசாரத்தின் போதே ஒவ்வொரு கூட்டத்திலும் இதைச் சொன்னேன்.

ஒரு கொடுங்கோல் ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்து இருக்கிறார்கள். மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டம் தமிழகத்தில் நடைபெற்று இருக்கிறது. தமிழ்நாடு விடுதலை அடைந்துவிட்டது. நேற்றைய தினமே சங்கிலி பறிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துவிட்டதாக கேள்விப்பட்டேன். சங்கிலியை பறிக்கும் ஆட்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன்.

எனவே படிப்படியாக நிலமை மாறும். தமிழக மக்களைப் பொறுத்தவரை இனி அச்ச உணர்வு தேவையில்லை. நம் எதிர்காலம் எப்படி இருக்குமோ, நமது குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்குமோ, கணவர் காலையில் அலுவலகத்துக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பும்போது மனைவி உயிருடன் இருப்பாளா? இல்லையா? என்றெல்லாம் கவலைப்படத் தேவையில்லை.

ஒரு சராசரி மனிதர் வேலைக்கு சென்று வீட்டுக்கு வரும்போது வயதான தாயார் உயிருடன் இருப்பாரா? இல்லையா? என்ற கவலை தேவையில்லை. சூழ்நிலைகள் மாறும். சட்டம்-ஒழுங்கு செம்மையாக காக்கப்படும், பராமரிக்கப்படும். மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும். தமிழ்நாடு செழிப்படையும். இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக தமிழகம் உயர்வு பெறும்.

கேள்வி: நீங்கள் இந்த பொறுப்புக்கு வரும்போது, தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் பொருளாதாரம் உயரும். பொருளாதாரம் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: முதலில் உங்களது மங்களகரமான வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி. நிச்சயமாக தமிழகத்தின் பொருளாதார நிலை உயரும். அதை புனரமைத்த பிறகு நிச்சயம் மேலே நோக்கி செல்லும். கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தின் பொருளாதாரம் அழிந்துபோன நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தது. எனவே தமிழகத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வர வேண்டும். அதை மேலேங்கி வளரச் செய்வதற்கான நடவடிக்கைகளை தொடர வேண்டும்.

கேள்வி: தமிழகத்தில் வசிக்கும் மற்றவர்களுக்கும் பாதுகாப்பு பற்றிய கவலை உள்ளதே?

பதில்: யாரும் பாதுகாப்பு பற்றி கவலைப்படத் தேவையில்லை. எல்லாருக்கும் முழுமையான பாதுகாப்பு தரப்படும் என்றார்.

நிருபர்களுடன் டீல்:

பேட்டியின் முடிவில் ஜெயலலிதா கூறுகையில், `நட்புரீதியாக நமக்குள் ஒரு டீல் வைத்துக் கொள்வோம். வாரத்துக்கு ஒருமுறை உங்களை சந்திக்கிறேன். நீங்கள் கேட்கும் கேள்வி அனைத்துக்கும் பதிலளிக்கிறேன். அதை விட்டுவிட்டு, நுழைவாயிலில் அருகே, வீட்டருகே, ஹோட்டல் அருகே என்று நின்று கொண்டு கேள்விகள் கேட்கக் கூடாது. சரியா?' என்று கேட்க, நிருபர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

நிருபருக்கு அட்வைஸ்:

முன்னதாக அவர் பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது ஒரு நிருபரின் செல்போனில் இருந்து சினிமா பாட்டு ரிங் டோனாக ஒலித்தது. அப்போது ஜெயலலிதா`நீங்கள் கேட்டுக்கொண்டதால்தான் மரியாதை நிமித்தமாக உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். எனவே என்னை சந்திக்க வருவதற்கு முன்பு செல்போன்களை நீங்கள் அணைத்து வருவதை கடைப்பிடித்திருக்க வேண்டும்' என்றார்.

இன்று மதியம் முதல் அமைச்சரவைக் கூட்டம்:

இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் ஜார்ஜ் கோட்டையில் பகல் 2 மணிக்கு நடக்கவுள்ளது. அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

சென்னை போலீஸ் கமிஷ்னர் 'என்கெளண்டர் திரிபாதி பேட்டி.


சென்னை நகர புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள ஜே.கே.திரிபாதி 3 ஆண்டுகள் தென் சென்னை இணை போலீஸ் கமிஷனராக பணியாற்றியபோது தான் பிரபல தாதா அயோத்திகுப்பம் வீரமணி உள்பட 12 ரெளடிகள் `என்கெளண்டரில்' போலீசாரால் போட்டுத் தள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந் நிலையில் சென்னை போலீஸ் கமிஷ்னராக பதவியேற்ற திரிபாதி அளித்த பேட்டி:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு முதலில் முக்கியத்துவம் கொடுத்து அரசு கடமையாற்றும் என்று முதல்வர் கூறியுள்ளார். அவரது கூற்றுப்படி, சென்னை நகரில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனைக்கு முதல் முக்கியத்துவம் கொடுத்து போலீசார் பணியாற்றுவார்கள்.

ரெளடிகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள். அனைத்து குற்றங்களையும் குறைப்பதற்கு உரிய வழிவகை காணப்படும். செயின் பறிப்பு, பிக்பாக்கெட், வழிப்பறி, திருட்டு போன்ற எல்லாவித குற்றங்களையும் தடுப்பதற்கும், நடந்தவற்றை கண்டுபிடிப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 10 ரூபாய் கூட மக்களுக்கு இழப்பு ஏற்படக்கூடாது என்ற வகையில் சென்னை போலீசாரின் செயல்பாடு இருக்கும்.

மக்கள் இரவு நிம்மதியாக தூங்கிவிட்டு, காலையில் நல்லபடியாக எழுந்து சூரிய உதயத்தை பார்க்கவேண்டும். அதற்கேற்ற வகையில் போலீசாரின் செயல்பாடு இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அது நிறைவேற்றப்படும். குழந்தைகள் நல்லபடியாக பள்ளிக்கு போய்விட்டு சந்தோஷமாக பயமில்லாமல் வீடு திரும்பிவர வேண்டும். பெற்றோர்களுக்கு, நமது குழந்தைக்கு என்ன ஆனதோ? என்ற பயம் இருக்கக்கூடாது.
அதுபோல வீடுகளில் பெண்களும், முதியோர்களும் தனியாக பயமில்லாமல் இருக்கும் வகையில் ஒரு நல்ல சூழ்நிலை உருவாக வேண்டும். அதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். சென்னை போலீசார் இதை ஒரு சவாலாக ஏற்று வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

ரவுடிகள் மீது `என்கெளண்டர்' நடவடிக்கைகள் மீண்டும் எடுக்கப்படுமா? என்று கேட்டதற்கு, `என்கெளண்டர்' என்பது போலீசாரின் கொள்கையல்ல. குற்றவாளிகளை பிடிக்கும்போது மோதல் ஏற்பட்டால், தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள போலீசார் பயன்படுத்தும் கடைசி ஆயுதம்தான் அது என்றார்.

புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சாரங்கியைப் போல இவரும் ஒரிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்தவரே என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் அமெரிக்க ஏவுகணை தாக்குதல் ; 10 தீவிரவாதிகள் பலி.

பாகிஸ்தானில் அமெரிக்க ஏவுகணை தாக்குதல்; 10 தீவிரவாதிகள் பலி

பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடன் அமெரிக்க அதிரடி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதை தொடர்ந்து தலிபான் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள வசிரிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் தொடர்ந்து ஏவுகணை தாக்குதலை அதிகரித்து வருகிறது. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதைப்பற்றியெல்லாம் அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து தாக்கி வருகிறது.

இந்நிலையில், வடக்கு வசிரிஸ்தானில் மிரான்ஷா அருகேயுள்ள மிர்அலி நகரில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அங்கு அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் ஏவுகணைகளை வீசின.

இதைத் தொடர்ந்து தீவிரவாதிகள் பதுங்கியிருந்த அந்த கட்டிடம் இடிந்து முற்றிலும் தரைமட்டமானது. இதில், 10 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இத்தகவலை பாகிஸ்தான் டெலிவிஷன் வெளியிட்டது. அமெரிக்காவின் இத்தாக்குதல் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் விரைவில் மாற்றம் ; ரவுடிகளை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை.

தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் விரைவில் மாற்றம்;  ரவுடிகளை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை

தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா நேற்று காலையில் பொறுப்பேற்றுக் கொண்டார். உடனடியாக அதிகாரிகளும் மாற்றப்பட்டனர். புதிய தலைமை செயலாளராக தேபேந்திரநாத் சாரங்கி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக திரிபாதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்றபின்னர் கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஜெயலலிதா, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதற்கேற்ப திறமையான அதிகாரிகளை போலீஸ் துறையில் நியமிக்க அவர் முடிவு செய்தார். அதன்படி சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்ட திரிபாதி உடனடியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், பொதுமக்கள் இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்கி விழிக்கலாம். குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். சென்னையை பொறுத்தவரை செயின் பறிப்பு, பிக்பாக்கெட், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் கடந்த ஆட்சியில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தன. ரவுடிகளின் அட்டகாசமும் அதிகமாக இருந்தது. கடைகளில் ரவுடிகள் மாமூல் கேட்டு மிரட்டிய சம்பவங்களும் நடைபெற்று வந்தன.

இதனை கட்டுப்படுத்த புதிய கமிஷனர் திரிபாதி போலீசாருக்கு அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். போலீஸ் நிலையங்களுக்கு வரும் புகார்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடிகளுக்கு எந்த சூழ்நிலையிலும் போலீசார் துணை போகக்கூடாது, குறிப்பாக அரசியல் பின்னணியில் இதுநாள்வரை ஆட்டம் போட்ட ரவுடிகளின் குற்றச் செயல்களை தூசுதட்டி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்பது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

சென்னை மக்களை வாட்டி எடுக்கும் பிரச்சினைகளில் இன்று அதிகமாக இருப்பது போக்குவரத்து நெரிசல்தான். இதற்கு புதிய கமிஷனர் திரிபாதி முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. போலீஸ் கமிஷனரை தொடர்ந்து சென்னையில் இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை இணை கமிஷனர் பதவிகளை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. இதற்காக வெளி மாவட்டங்களில் பணிபுரியும் அதிகாரிகள் சிலர் சென்னையில் முகாமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். எந்த நேரத்திலும் இடமாறுதல் உத்தரவு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இவர்கள் தவிர மாவட்ட கலெக்டர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், உளவு பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாறுதல் பட்டியலில் உள்ளனர். 70-க்கும் மேற் பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஜே.சி.பி. எந்திரம் கொண்டு வந்து வீட்டை இடிப்போம் என எச்சரிக்கை - நடிகர் வடிவேலு வீடு தாக்குதல்.

தாம்பரம் படப்பையில் உள்ள  நடிகர் வடிவேலு பண்ணை  வீட்டில் தாக்குதல்;  ஜன்னல்கள் உடைப்பு

சட்டமன்ற தேர்தலில் நடிகர் வடிவேலு தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். விஜயகாந்தை கடுமையாக தாக்கி பேசினார்.தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றதால் சென்னை சாலி கிராமத்தில் உள்ள வடிவேலு வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வடிவேலுவின் பண்ணை வீட்டில் திடீர் தாக்குதல் நடந்து உள்ளது. இந்த பண்ணை வீடு தாம்பரம் அருகேயுள்ள படப்பை புஷ்பகிரி பகுதியில் இருக்கிறது. மாமர தோப்புகள் மத்தியில் இவ்வீடு கட்டப்பட்டு உள்ளது. பண்ணை வீட்டில் வேலு என்பவர் காவலாளியாக வேலை பார்க்கிறார்.இவர் தனது குடும்பத்தினருடன் தோப்பில் தனி வீட்டில் வசிக்கிறார்.

நேற்று மாலை இந்த பண்ணை வீட்டுக்கு 30-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வந்தனர். வீட்டை அவர்கள் சூறையாடினார்கள். அங்கிருந்த பொருட்களை கீழே தள்ளி உடைத்தனர். வீட்டில் 6 கண்ணாடி ஜன்னல்களையும் உடைத்து நொறுக்கினார்கள். காவலாளி வேலுவுக்கும் மிரட்டல் விடுத்தனர். அவரிடம் வடிவேலுவின் செல்போன் நம்பரை கொடுக்குமாறு கேட்டனர். அவர் தெரியாது என்றார்.

உடனே மர்ம ஆசாமிகள் வேலுவின் செல்போனை வாங்கி அதில் வடிவேலு நம்பர் இருக்கிறதா என்று தேடி பார்த்தனர். அதில் வடிவேலு எண் இல்லாததால் மீண்டும் அதை வேலுவிடம் கொடுத்தனர்.

வருகிற சனிக்கிழமைக்குள் இந்த இடத்தை காலி செய்து விடவேண்டும். இல்லா விட்டால் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு வந்து வீட்டை இடிப்போம் என எச்சரிக்கை விடுத்தனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச்சென்று விட்டார்கள். இது குறித்து காவலாளி வேலு பண்ணை மேலாளர் சங்கருக்கு தகவல் தெரிவித்தார். மேலாளர் சங்கர் மணி மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

'நண்பர்களின் தொந்தரவை தவிர்க்கத்தான் ரஜினி மருத்துவமனையில் உள்ளார்' - சோ.


ரஜினிக்கு ஒன்றுமில்லை. அவர் வழக்கம்போல சுறுசுறுப்பாக இருக்கிறார். என்னைப்போன்ற நண்பர்களின் தொந்தரவை தவிர்க்கவே அவர் இங்கே உள்ளார், என்றார்.

ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியை நேற்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். ரஜினியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சென்றனர்.

அவர்களுடன் ரஜினியின் நெருங்கிய நண்பரும் மூத்த பத்திரிகையாளருமான சோவும் சென்றிருந்தார்.

ரஜினியை சந்தித்துவிட்டு வெளியில் வந்த அவர் கூறுகையில், "என்னைப் போன்ற நண்பர்கள் தொந்தரவை தவிர்ப்பதற்காகவே ரஜினிகாந்த் இங்கே வந்திருக்கிறார். மற்றபடி அவருக்கு ஒன்றுமில்லை. ரசிகர்கள் கவலைப்பட்டு மருத்துவமனையை சூழ வேண்டாம். அவர் நலமாக இருக்கிறார். விரைவில் உங்கள் முன் பேசுவார்,'' என்றார்.

பி.இ. விண்ணப்ப விநியோகம் தொடக்கம் : முதல் நாளில் 88 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை பி.இ. விண்ணப்பங்களை வாங்குவதற்காகக் குவிந்த மாணவர்கள்.


பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கத் தொடங்கிய முதல் நாளான திங்கள்கிழமையே 88 ஆயிரத்து 744 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளிலும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழான இடங்களும் ஒற்றைச்சாளர கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கப்படுகின்றனர்.

2011-12 கல்வியாண்டு பி.இ. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 62 மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

முதல் நாளான திங்கள்கிழமை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மையத்தில், விண்ணப்பங்களை வாங்க அதிகாலை 3 மணிக்கே மாணவ, மாணவிகள் கூட்டம் கூடியது. கூட்டம் கூடியதைத் தொடர்ந்து, இந்த மையத்தில் மட்டும் அதிகாலை 3 மணி முதலே விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.

மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக முதல் நாளிலேயே 88 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.

விண்ணப்ப விநியோகத்தை தொடங்கி வைத்த சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் அளித்த பேட்டி:

பொறியியல் படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை இம்முறை உயரும் என்பதால், கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 ஆயிரம் விண்ணப்பங்கள் கூடுதலாக அச்சிடப்பட்டுள்ளன.

விண்ணப்ப விநியோகத்துக்காக தமிழகம் முழுவதும் உள்ள மையங்களுக்கு மொத்தம் 23 ஆயிரம் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கூடுதல் விண்ணப்பங்கள் தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக அச்சிட்டு விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள 486 பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் 400 கல்லூரிகள், கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலிடம் (ஏ.ஐ.சி.டி.இ.) அனுமதி கோரியுள்ளன. இதில் பெரும்பாலான கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு விடும்.

வரும் 18, 19, 20 தேதிகளில் ஏ.ஐ.சி.டி.இ., நிபுணர்கள் குழு கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டு, அனுமதி வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க உள்ளன.

இதனால் இப்போது பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.20 லட்சம் அரசு ஒதுக்கீட்டிலான இடங்கள், 1.5 லட்சமாக உயர வாய்ப்பு உள்ளது. எனவே, இம்முறையும் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பி.இ. இடம் கிடைக்கும்.

படிப்புகளுக்கான இடங்கள் அதிகரிப்பு:

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கிண்டி பொறியியல் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டடக்கலை மற்றும் திட்டக் கல்லூரி ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் பி.இ. எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல், சிவில் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இடங்கள் உயர வாய்ப்பு உள்ளது என்றார் மன்னர் ஜவஹர்.

பி.இ. விண்ணப்பங்கள் மே 31-ம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் ஜூன் 3-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

கடந்த முறை அரசு ஒதுக்கீட்டிலான பி.இ. படிப்புகளில் சேர 1,69,666 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 1,11,883 பேர் பி.இ. இடம் பெற்றனர். மொத்தம் 8,172 பி.இ. இடங்கள் காலியாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.பி.பி.எஸ். : முதல் நாளில் 9,000 விண்ணப்பம் விற்பனை - ஆண்டுக் கட்டணம் எவ்வளவு?



சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை கல்லூரி முதல்வர் டாக்டர் வி.கனகசபையிடம் எம்.பி.பி.எஸ். விண்ணப்பத்தை பெறும் மாணவி.


தமிழகத்தில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்ப விநியோகம் தொடங்கிய முதல் நாளான திங்கள்கிழமை (மே 16) மட்டும் 9,000 மாணவ-மாணவியர் விண்ணப்பம் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு (2010) விண்ணப்ப விநியோக முதல் நாளில் மொத்தம் 6,249 மாணவர்களும், 2009-ம் ஆண்டு விண்ணப்ப விநியோக முதல் நாளில் மொத்தம் 5,000 மாணவர்களும் விண்ணப்பத்தைப் பெற்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். (இரண்டு படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பம்.) படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 9,000-மாக அதிகரித்துள்ளது.

சென்னை, மதுரை, கோவை, சேலம்: சென்னை மருத்துவக் கல்லூரிகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல் நாளான திங்கள் கிழமையன்று மற்ற இடங்களைவிட அதிகபட்சமாக 1,350 பேரும், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 1,060 பேரும், கோவையில் 989 பேரும், சேலத்தில் 893 பேரும் விண்ணப்பம் வாங்கியுள்ளனர். சென்னை அரசு மருத்துவக் கல்லூரி உள்பட பிற இடங்களையும் சேர்த்து மொத்தம் 9,000 மாணவர்கள் திங்கள்கிழமை விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர்.

கூடுதலாக 5,000 விண்ணப்பங்கள்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க தொடர்ந்து விடுமுறை இன்றி வரும் ஜூன் 2-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், ஜூன் 2-ம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர வேண்டும்.

முதல் கட்டமாக 20,000 விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டன; முதல் நாளே 9,000 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளதால், தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க கூடுதலாக 5,000 விண்ணப்பங்களை அச்சடிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார்.

கட்-ஆஃப் அதிகமாக இருந்தாலும்கூட...

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி உள்பட 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இது தவிர எட்டு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 650-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய அதிக கட்-ஆஃப் மதிப்பெண் ஏராளமான மாணவர்கள் எடுத்துள்ளனர். எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய உயிரியல்-இயற்பியல்-வேதியியல் ஆகிய முக்கியப் பாடங்களில் 200-க்கு 200 வாங்கி, ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 200-ஐ 65 மாணவர்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் பொதுப் பிரிவு மாணவர்கள் முதல் ஒவ்வொரு வகுப்புவாரி மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள் மட்டுமே உள்ளதால், இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 199.25-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 197.25-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 21-ல் தரவரிசைப் பட்டியல்:

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு வரும் ஜூன் 20-ம் தேதி சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வழங்கப்படும்; அதாவது ஒரே ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் எடுத்த மாணவர்களை வரிசைப்படுத்த சமவாய்ப்பு எண் வழங்கப்படுகிறது. தொடர்ந்து ஜூன் 21-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, முதல் கட்ட எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் ஜூன் 30-ம் தேதி தொடங்கும்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். - ஆண்டுக் கட்டணம் :

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் மாணவர்களுக்கான ஆண்டுக் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பு ஆண்டுக் கட்டணம் ரூ.10,495-லிருந்து ரூ.12,290-ஆகவும் பி.டி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பு ஆண்டுக் கட்டணம் ரூ.8,495-லிருந்து ரூ.10,290-ஆகவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

கட்டணத்தில் மாற்றம் ஏன்?

எம்.பி.பி.எஸ். படிப்பில் கல்விக் கட்டணம் ரூ.4,000, சிறப்புக் கட்டணம் (மாணவர் அனுமதி மருத்துவப் பரிசோதனைக் கட்டணம் உள்பட) ரூ.950, டெபாசிட் தொகை ரூ.1,000, நூலகக் கட்டணம் ரூ.1,000, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகக் கட்டணம் ரூ.4,910, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் சரிபார்த்தல் கட்டணம் ரூ.50, எல்ஐசி காப்பீடு கட்டணம் ரூ.170, செஞ்சிலுவைச் சங்க கட்டணம் ரூ.10, இதர கட்டணம் ரூ.100, கொடி நாள் கட்டணம் ரூ.100 என ஆண்டுக் கட்டணமாக மொத்தம் ரூ.12,290 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் பல்கலைக்கழகக் கட்டணம் ரூ.3,825-லிருந்து ரூ.4,910-ஆக அதிகரித்துள்ளதாலும் சிறப்புக் கட்டணம் ரூ.500-லிருந்து 950-ஆக அதிகரித்துள்ளதாலும் மற்ற இதர கட்டணங்களாலும் எம்.பி.பி.எஸ். கட்டணம் ரூ.10,495-லிருந்து ரூ.12,290-ஆக உயர்ந்துள்ளது.

பி.டி.எஸ். படிப்புக்கு...

இதே போன்று சென்னை பாரிமுனையில் உள்ள ஒரே அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ். படிப்பில் சேரும் மாணவர்களுக்கான ஆண்டுக் கட்டணமும் ரூ.10,290-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக கட்டணம், சிறப்புக் கட்டணம் ஆகியவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் பி.டி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பு ஆண்டுக் கட்டணமும் ரூ.10,290-ஆக உயர்ந்துள்ளது.

கலந்தாய்வின்போது...

கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், மருத்துவக் கல்லூரியில் சேர அனுமதிக் கடிதம் பெறும்போது எம்.பி.பி.எஸ். படிப்புக்கு மேலே குறிப்பிட்ட ஆண்டுக் கட்டணம் ரூ.12,290-ஐ டி.டி.-யாகச் செலுத்த வேண்டும்; அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ். படிப்பில் சேரும் மாணவர்கள் ரூ.10,290-ஐ டி.டி.யாகச் செலுத்த வேண்டும்.

சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு...

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு கல்லூரிக்கு ஏற்ப ஆண்டுக் கட்டணம் ரூ.2.25 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு பி.டி.எஸ். இடத்துக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.85,000-மாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

கலந்தாய்வின் போது சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு அனுமதிக் கடிதம் பெறும் மாணவர்கள், ரூ.25,000-த்தை முன்தொகையாக டி.டி. எடுத்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவில் செலுத்த வேண்டும்; பின்னர் சுயநிதி மருத்துவக் கல்லூரி அரசு ஒதுக்கீட்டு இடத்தில் அந்த மாணவர் சேரும்போது ஆண்டுக் கட்டணத்தில் முன்தொகையாகச் செலுத்திய ரூ.25,000 கழித்துக் கொள்ளப்படும்.

என்ஜினீயரிங் இடங்கள் 30 ஆயிரம் அதிகரிப்பு.


2011-12ம் ஆண்டுக்கான என்ஜினீயரிங் சேர்க்கை விண்ணப்பம் வினியோகம் தொடங்கியது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்ப வினியோகத்தை துணை வேந்தர் மன்னர் ஜவகர் தொடங்கி வைத்தார்.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது:

வருகிற கல்வியாண்டிற்கு பி.இ. மற்றும் பி.டெக் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு முழுவதும் 62 மையங்களில் வினியோகிக்கப்படுகிறது. சென்னையில் 5 இடங்களில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 488 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இதில் 460 சுய நிதி பொறியியல் கல்லூரிகள் அடங்கும். இதன் மூலம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 20 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கிடைக்கின்றன.

கடந்த ஆண்டு கவுன்சிலிங் முடிவில் 8,172 இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு 400 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் தங்களது பாடப்பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மனு செய்துள்ளனர். இதனால் ஏற்கனவே உள்ள கல்லூரிகள் மூலம் 30 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் கூடுதலாக கிடைக்கும். இந்த ஆண்டில் புதிதாக 120 கல்லூரிகள் அனுமதி கேட்டு விண்ணப்பித்து உள்ளன. இன்னும் 1 மாதத்தில் இதற்கான அனுமதி கிடைக்கும். இதன் மூலம் கூடுதல் சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு மொத்தம் 472 கல்லூரிகள் இருந்தன.

இந்த ஆண்டு 16 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு முதல் தலைமுறை மாணவர்கள் 78 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும். என்ஜினீயரிங் விண்ணப்பம் வினியோகம் செய்வதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் 20 கவுண்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறினார்.