Friday, August 19, 2011

சேலம் மாவட்டத்தில் 20 சதவீதம் லாரிகள் ஓடியது : பால் - கியாஸ் - உணவு பொருட்கள் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படுகிறது.


சேலம் மாவட்டத்திலும் லாரிகள் ஸ்டிரைக் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. இந்த வேலைநிறுத்தத்தால் ஏதும் பாதிப்பு வந்து விடாமல் இருக்க மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு மயில்வாகனன் தலைமையில் போலீசார் ரோந்து வந்து கண்காணித்தனர்.

லாரி ஸ்டிரைக் நடந்தாலும் சேலம் மாவட்டத்தில் 20 சதவீதம் லாரிகள் ஒடுவதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:- சேலம் மாவட்டத்தில் 20 சதவீதம் தான் லாரிகள் ஓடுகிறது. 80 சதவீதம் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பால், கியாஸ், உணவு பொருட்கள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. லாரிகள் ஸ்டிரைக்கினால் இன்று பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பி.இ. கவுன்சிலிங் முடிந்தது ; 44 ஆயிரம் இடங்கள் காலி.


தமிழ்நாடு முழுவதும் உள்ள 502 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 47 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கடந்த 40 நாட்களாக கவுன்சிலிங் நடந்தது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூலை 8-ந்தேதி தொடங்கிய பொது கலந்தாய்வு இந்த மாதம் 11-ந்தேதி வரை நடந்தது.

அதைத்தொடர்ந்து பிளஸ்-2 உடனடி தேர்வு எழுதியவர்களுக்கும் பின்னர் தொழில் பிரிவை சேர்ந்தவர்களுக்கு துணை கவுன்சிலிங் நேற்று வரை நடந்து முடிந்தது ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 564 பேரின் விண்ணப்பங்கள் தகுதி உடையதாக இருந்தது. அவற்றில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 166 இடங்கள் மட்டும் நிரம்பி உள்ளன.

அறிவியல் பாடப்பிரிவில் ஒரு லட்சத்து 6182 இடங்கள் நிரம்பியது. இதில் 43,393 இடங்கள் காலியாக உள்ளன. தொழில் பாடப்பிரிவில் 3984 இடங்கள் மட்டும் நிரம்பின. 746 இடங்கள் காலியாக இருக்கின்றன. மொத்தம் 44,139 என்ஜினீயரிங் இடங்கள் நிரம்பாமல் உள்ளன. கடந்த ஆண்டு 12 ஆயிரம் இடங்கள் காலியாக கிடந்தன. பி.இ. படிப்பிற்கான கலந்தாய்வு நிறைவு பெற்றதை தொடர்ந்து நாளை (20-ந்தேதி) முதல் எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தொடங்குகிறது.

3 மாதத்தில் 8,600 நில அபகரிப்பு புகார்கள்.

3 மாதத்தில் 8,600 நில அபகரிப்பு புகார்கள்: தகுந்த ஆதாரம் இருந்தால் மட்டுமே நடவடிக்கை- கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் தகவல்
தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நடந்த நில அபகரிப்பு பற்றி போலீசுக்கு தினமும் ஏராளமான புகார்கள் வருகின்றன. இந்த புகார்களில் போலீசார் எடுக்கும் நடவடிக்கைகளை கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் கண்காணித்து வருகிறார்.

அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த 3 மாதத்தில் 8,600 நில அபகரிப்பு புகார்கள் வந்துள்ளன. இதில் விசாரணை நடத்திய பின்பு 430 புகார்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்ற புகார்களையும் நில அபகரிப்பு பிரிவு தனிப்படை விசாரித்து வருகிறது. பலகோடி நிலம் மோசடி புகார்களில் தகுந்த ஆதாரத்துடன் கூடிய உண்மையான, தகுதியான புகார்கள் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கிறோம்.

நிலஅபகரிப்பு மிரட்டல், பலப்பிரயோகம், அச்சுறுத்தல் போன்ற புகார்களில் மட்டுமே நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். கடந்த மாதத்தில் மட்டும் 6000 புகார்கள் வந்துள்ளன. நில அபகரிப்பு வழக்கில் போலீசார் நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுக்கிறோம். இதனால் போலீசார் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு பாதிக்கப்பட்டோர் யாருக்கும் பயப்படாமல் தைரியமாக புகார் கொடுக்க முன்வருகிறார்கள்.

எனவேதான் புகார்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றன. கோவை, சேலம், ஈரோடு ஆகிய மேற்கு மாவட்டங்களில்தான் அதிக அளவில் நில அபகரிப்பு புகார்கள் வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் தலைமையகங்களில் புகார் செய்து வருகிறார்கள். தமிழ்நாடு போலீஸ் இணைய தளத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்யலாம்.

இவ்வாறு ஜார்ஜ் கூறினார்.

இந்தியாவை உலுக்கிய அன்னாஹசாரே : பூ வியாபாரி காந்தியவாதியானார்.


உண்ணாவிரத போராட்டத்தை உலகுக்கு கற்றுத்தந்த காந்தியின் அகிம்சை போராட்டத்தால் ஆங்கிலேய ஏகாதிபத்தியமே நடுங்கிப் போனது வரலாறு. அதே வழியில் இன்றும் உண்ணாவிரத போராட்டத்தால் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் அன்னாஹசாரே.

இந்த 76 வயது இளைஞரின் மனதில் கொளுந்து விட்டு எரியும் நெருப்பு மிகப்பெரிய போராட்டத்தை நாடு முழுவதும் பரவ வைத்துள்ளது. மிக மோசமான தொற்று நோய். அடி முதல் நுனிவரை செல்லரித்து விட்ட இந்த நோயை குணப்படுத்தியே தீரவேண்டும். இல்லாவிட்டால் நாடு அதாள பாதாளத்தில் வீழ்ந்து விடும் என்ற ஏக்கம் நாட்டு நலனில் அக்கறை கொண்ட அனைவரிடமும் உள்ளது.

எங்கும் லஞ்சம்... எதிலும் லஞ்சம்... என்று தலை விரித்தாடும் லஞ்சத்தால் ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள். அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊழல் செய்து குறுகிய காலத்திலேயே செல்வ செழிப்பில் மிதக்கிறார்கள். இதை பார்த்து படித்தவர்களும் பாதை மாறும் துர்பாக்கிய நிலைமை உருவாகி உள்ளது.

இப்படியே போனால் வருங்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் நிழல்போல் தொடரும் ஊழலை வெட்டி வீழ்த்த முடியுமா? என்ற யதார்த்தமான கேள்வியும் மனதில் எழுகிறது. ஆனாலும் இதற்கு பாடம் புகட்டியே ஆகவேண்டும் என்ற ஆதங்கம் நம்மிடம் உள்ளது.

ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார்? இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி? என்று ஒவ்வொருவரும் யோசனையில் ஆழ்ந்து இருந்த நேரம்... இதோ நான் இருக்கிறேன் என்று ஆபத்பாந்தவனாக கையை உயர்த்தியவர்தான் அன்னாஹசாரே!

1937-ம் ஆண்டு மராட்டிய மாநிலம் பின்கார் கிராமத்தில் பாபுராவ் ஹசாரே- லட்சுமிபாய் தம்பதிக்கு மகனாக பிறந்தார். இளமையில் வறுமையோடு போராடியவர். 6 வயதிலேயே தந்தையை இழந்தார். அவரது சித்தி படிக்க வைப்பதாக கூறி மும்பைக்கு அழைத்து சென்றார். 7-ம் வகுப்பு வரை படிக்க வைத்தார். அதற்குமேல் படிக்க வைக்க வசதி இல்லை.

இதனால் மும்பை தாதரில் பூ வியாபாரத்தை தொடங்கினார் ஹசாரே. பின்னர் பூக்கடை ஒன்றை சொந்தமாக தொடங்கினார். அதில் ஓரளவு வருமானம் வந்தது. இந்த நேரத்தில் (1962-ல்) சீனப்போரில் களம் இறங்க இந்திய ராணுவத்துக்கு இளைஞர்களை தேடினார்கள். தாய்நாட்டை காக்க தன்னை அர்ப்பணிக்க முன்வந்தார் ஹசாரே.

ராணுவத்தில் டிரைவராக சேர்ந்த ஹசாரே 1965-ல் இந்தியா- பாகிஸ்தான் போரில் எல்லைப் பகுதியில் எதிரிகளின் களத்தை துவம்சம் செய்ய ஒரு குழுவுடன் அனுப்பி வைக்கப்பட்டார். பாகிஸ்தான் படை நடத்திய தாக்குதலில் ஹசாரேயுடன் இருந்த அனைவரும் வீரமரணம் அடைந்தார்கள். தலையில் குண்டு காயத்துடன் ஹசாரே மட்டும் தப்பினார்.

எவ்வளவு ரத்தம் சிந்தினோம்...? எத்தனை உயிர்களை இழந்தோம்...? இதில் கிடைக்கப் போவது என்ன? என்ற விரக்தியின் உச்சத்துக்கு சென்றார் ஹசாரே. காண்டீபத்தை கீழே போட்டு விட்டு கலங்கி நின்ற அர்ஜுனனை போல் வாழ்க்கையே வெறுத்து தற்கொலை முடிவோடு புறப்பட்டார்.

அப்போது டெல்லி ரெயில் நிலையத்தில் சுவாமி விவேகானந்தரின் புத்தகம் ஒன்றை வாங்கி படித்தார். அதில் அவர் கூறிய வாழ்க்கை தத்துவங்கள் ஹசாரேயின் மனதில் இருந்த தற்கொலை முடிவை மாற்றி மனதில் உறுதியையும், தெளிவையும் கொடுத்தது. ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையை அர்த்தமாக்கி கொள்ள வேண்டும். தனக்காக வாழாமல் மற்றவர்களுக்கு பயன்தரும் வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற தத்துவார்த்த சிந்தனை ஹசாரேயை மீண்டும் புது மனிதனாக்கியது.

39 வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று சொந்த ஊரான ரலேகான்சித்திக்கு திரும்பினார். வாலிப முறுக்கோடு இருந்த ஹசாரே திருமண ஆசையை துறந்தார். சொந்த கிராம மக்களின் வறுமையை துடைக்க களம் இறங்கினார். மழைநீர் சேமிப்பு திட்டம் உள்பட பல முன்மாதிரி திட்டங்களை செயல்படுத்தினார். இதனால் ரலேகான்சித்தி செழித்தது.

அகமத்நகர் மாவட்டத்திலேயே ரலேகான்சித்தி ஒரு முன் மாதிரி கிராமமாக உருவெடுத்தது. தனது கிராமப்பணியை நிறைவு செய்து திருப்தி அடைந்த ஹசாரே தனது போராட்ட வியூகத்தை விரிவாக்கினார். ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கினார். ஊருக்கு சேவை செய்ய வரும் அரசியல்வாதிகள் ஊரை அடித்து உலையில் போடும் அநியாயத்துக்கு எதிராக வெகுண்டெழுந்தார்.

ஹசாரேயின் போராட்டத்தால் மராட்டிய மாநிலத்தின் அசைக்க முடியாத தலைவர்களான பால் தாக்கரே, சரத்பவார் போன்றவர்களே ஆடிப்போனார்கள்.

1996-ல் சிவசேனா ஆட்சியில் ஊழல் செய்த 2 மந்திரிகளை தனது போராட்டத்தின் மூலம் வீட்டுக்கு அனுப்பினார். 2003-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்த 4 மந்திரிகள் மீது விசாரணை கமிஷன் அமைக்க வைத்தார். ஊழலுக்கு எதிரான அவரது போர் 2-வது சுதந்திரபோர் என்று பேச வைத்துள்ளது.

ஊழலுக்கு எதிரான அவரது குரல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எதிரொலிக்கிறது. அவரது உரத்த குரலுக்கு முன்பு செப்படி வித்தைகள் தவிடு பொடியாகி விட்டன. ஹசாரேயின் போராட்டத்தை அடக்க நினைத்த இந்திய பேரரசே காந்தியவாதியின் அஹிம்சை போராட்டத்தின் முன்பு அடிபணிந்து விட்டது.

பின்புலம் எதுவுமின்றி லட்சியத்துக்காக போராடும் ஹசாரேயின் போராட்டத்துக்கு இன்றோ, நாளையோ விடை கிடைத்து விடாது. ஆனால் இந்திய மக்கள் ஒவ்வொருவர் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. லட்சக்கணக்கானவர்கள் இந்த புதிய மகாத்மாவின் பின்னால் அணி திரள்கிறார்கள். காந்திக்கு பிறகு உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த ஹசாரேயின் போராட்டத்தை பற்றி மக்கள் தங்கள் கருத்தை அமைதியான முறையில் சொல்லி வருகிறார்கள். இது வலுவான ஜனநாயகத்தின் அடையாளம் என்று அமெரிக்கா கூறி உள்ளது.

தொடரும் 15 நாள் போராட்டத்தால் புதிய விடியலுக்காக இந்தியாவே காத்திருக்கிறது.

தங்கம் விலை பவுன் ரூ.21 ஆயிரத்தை நெருங்கியது.

தங்கம் விலை பவுன் ரூ.21 ஆயிரத்தை நெருங்கியது

கடந்த 2009-ம் ஆண்டு ஒரு பவுன் தங்கம் ரூ.10 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. அப்போது இதுகுறித்து மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அதில் இருந்து தங்கம் விலை ராக்கெட்டை மிஞ்சும் வேகத்தில் இடைவிடாது விர்ரென அதிரடியாக உயர்ந்து வருகிறது.

2010-ம் ஆண்டில் ஒரு பவுன் 12 ஆயிரத்து 784 வரை விற்கப்பட்டது. இது படிப்படியாக உயர்ந்து இந்த ஆண்டில் (2011) கடந்த ஏப்ரல் மாதம் பவுன் ரூ.16 ஆயிரத்தை கடந்தது.

தொடர்ந்து “ஜெட்” வேகத்தில் ஏறிய தங்கம் நேற்று ஒரு பவுன் 20 ஆயிரத்தை தாண்டியது. பவுன் ரூ.20 ஆயிரத்து 32 ஆக இருந்தது. ஒரு கிராம் ரூ.2,504-க்கு விற்கப்பட்டது. இது வரலாறு காணாத விலை உயர்வு என வர்ணிக்கப்பட்டது.

ஏழை எளிய மக்களும், பெண் குழந்தைகளை பெற்றவர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தங்களுக்கு தங்கம் எட்டாக் கனியாகி விட்டதே என்ற வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதற்கிடையே இன்று தங்கம் விலை மேலும் எகிறியுள்ளது. ஒரே நாளில் ஒரு பவுனுக்கு ரூ.648 அதிகரித்து ரூ.20 ஆயிரத்து 680 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2504க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் தங்கம் பவுன் ரூ.21 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

பங்கு சந்தை வீழ்ச்சி, அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சி மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இனி சுப முகூர்த்த நாட்கள் தொடங்கி விட்டதால் தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை. தொடர்ந்து உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோ வெள்ளி ரூ.62 ஆயிரத்து 625 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.67க்கு விற்கப்படுகிறது.

ராஜீவ் கொலைக் கைதிகளின் மரணதண்டனை ரத்து செய்யப்படும் நம்பிக்கை உள்ளது பேரறிவாளன் உறவினர்கள் பேட்டி.

ராஜீவ் கொலைக் கைதிகளின்   மரணதண்டனை ரத்து செய்யப்படும் நம்பிக்கை உள்ளது   பேரறிவாளன் உறவினர்கள் பேட்டி

ராஜீவ் கொலைக் கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தூக்கு தண்டனை கைதிகளாக வேலூர் ஜெயிலில் உள்ளனர். இவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இதனால் எந்த நேரத்திலும் இவர்கள் தூக்கிலிடப்படலாம் என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராஜீவ் கொலைக் கைதிகளை நேற்று முன்தினம் வைகோ சந்தித்து பேசினார். நேற்று சீமானும் சந்தித்தார். அப்போது அவர் உலகில் 135 நாடுகள் மரணதண்டனையை கைவிட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிலும் மரண தண்டனையை கைவிட வேண்டும் என்றார். இதேபோல் மரண தண்டணையை ரத்து செய்யக்கோரி மக்கள் இயக்கம் சார்பில் 1000 பேர் சைக்கிளில் பேரணியாக சென்னையிலிருந்து வேலூர் வந்தனர். அப்போது அவர்கள் வேலூர் ஜெயில் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரப்பான நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தூக்கு தண்டனை கைதி பேரறிவாளனை பார்க்க அவரது உறவினர்களான அத்தை, தம்பி ஆகியோர் வேலூர் ஜெயிலுக்கு வந்தனர். அப்போது அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களது சொந்த ஊர் ஜோலார்பேட்டை தற்போது பொள்ளாச்சியில் வசித்து வருகிறோம். நாங்கள் மாதம் ஒரு முறை வந்து பேரறிவாளனை சந்தித்து விட்டு செல்வோம். முதலில் எங்களுக்கு எந்த வித நம்பிக்கையும் இல்லாமல் இருந்தேம். தற்போது பல கட்சிகளை சேர்ந்தவர்கள் மரண தண்டனையை எதிர்ப்பதால் ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. மரண தண்டனை மறுபரிசீலனை செய்யப்படும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல் நிலை தேர்வு முடிவு வெளியீடு - தமிழகத்தில் 600 பேர் தேர்ச்சி.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல்நிலை தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல்நிலை எழுத்துத் தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் நடந்தது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் இருந்து 4 லட்சத்து 97,187 பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

இதில் 11,984 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில், தமிழகத்தைச் சேர்ந்த 600 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அடுத்தக்கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள், அக்டோபர் மாதம் 29ம் தேதி துவங்குவது குறிப்பிடத்தக்கது.

நான் நிரபராதி என்று கத்தும்போதே என் குரல்வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ ? - பேரறிவாளன்.



நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் போதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பேரறிவாளன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது குடும்பத்திற்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

பேரன்புமிக்க அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகளே,

வணக்கம். நான், அ.ஞா.பேரறிவாளன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு அதன் விளைவாய் தூக்கு தண்டனை பெற்றவனாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருந்து வருபவன். எள் முனையளவும் தொடர்பே இல்லாத வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், கேட்க நாதியற்றவன் என்பதாலும் அநீதியான தீர்ப்பை சுமந்து நிற்பவன்.

தந்தை பெரியாரின் கொள்கையால் நிரம்பிய குடும்ப வழி வந்தவன் என்பதால் மனிதநேயத்தின் அடிப்படையிலும், தொப்புள் கொடி உறவு என்பதால், இன உணர்வின் அடிப்படையிலும் சிங்கள இனவாதத்திற்கு எதிரான ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து அதற்காக தமிழக மண்ணில் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்தவன் என்ற காரணத்தால் என் மீது தவறான குற்றச்சாட்டு புனையப்பட்டது என்பதை தங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

19 வயது இளைஞனாய் கைது செய்யப்பட்டு, வாழ்வின் வசந்த காலங்களையெல்லாம் சிறையில் செய்யாத குற்றத்திற்காக தொலைத்து, இன்று 40 வயதுடன் பக்குவப்பட்ட குடிமகனாய் உங்கள் முன் இக்கடிதத்தின் மூலம் பேசுகிறேன்.

1. திரு. ராஜீவ் அவர்களின் கொலையை நியாயப்படுத்துவதல்ல இக்கடிதத்தின் நோக்கம். மாறாக இக்குற்றத்திற்கு எவ்வித தொடர்புமில்லாத நானும், என்னைப் போன்றவர்களும் மரண தண்டனைக்கு உரியவர்கள் அல்லர் என்று எடுத்துரைப்பது மட்டுமே.

2. திரு. ராஜீவ் கொலை விஷயமாக விசாரிக்க வேண்டும் என்று சொல்லி 11.06.1991 அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நான் இன்று வரை நீதி மறுக்கப்பட்டு தூக்கு மரத்தின் நிழலிலேயே வாழ்ந்து வருகிறேன்.

3. அக்கொலைக்கு பயன்பட்ட ‘பெல்ட் பாம்’ செய்வதற்கு நான் உதவினேன் என்பதே என் தண்டனைக்கு வழி வகுத்தக் குற்றச்சாட்டு. இதற்கு ஏதுவாக ஊடகங்களில் பொய் செய்தி பரப்பப்பட்டது. ‘இந்தியா டுடே’ நாளிதழும் நான் எப்படி வெடிகுண்டு செய்தேன் என்று பொய்யாக ஒரு செய்முறை விளக்கம் வெளியிட்டிருந்தார்கள். ஆனால், “சி.பி.ஐ.யால் இறுதி வரை கண்டுப்பிடிக்க முடியாத கேள்விகளுள் ஒன்று, அந்த ‘பெல்ட் பாம்’ஐ செய்தவர் யார் என்பதே” என்று.

விடை தெரியா கேள்விக்கு விடையாக நான் பலியிடப் படவேண்டுமா?


4. அந்த ‘பெல்ட் பாமிற்கு’ 9வி பேட்டரி வாங்கித் தந்தேன் என்பதின் மூலமே நான் அந்த ‘பெல்ட் பாம்’ஐ செய்தேன் என வழக்குரைத்தனர் அரசு தரப்பு வழக்கறிஞர்கள். அதற்கு வசதியாக என்னுடைய மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டய படிப்பும் இவர்களின் கதைக்கு கருவானது. ஆனால் வழக்கின் எந்தவொரு இடத்திலும் நான் வாங்கித் தந்த 9வி பேட்டரிதான் பெல்ட் பாம் வெடிக்கப் பயன்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை.

5. உண்மை என்னவெனில் நான் 9வி பேட்டரியை வாங்கவுமில்லை, அதனை யாருக்கும் தரவுமில்லை. ஆனால் நான் 9வி பேட்டரி வாங்கினேன் என்பதற்கு வழக்கிலுள்ள ஒரே ஆதாரம், ஒரு பெட்டிக் கடைக்காரரின் சாட்சி தான். இந்த சாட்சியை ஏற்க முடியாது என்று தடா நீதிமன்றத்தில் கூறிய நீதிபதி, பிறகு என்ன காரணத்தினாலோ இந்த சாட்சியை ஏற்றுக் கொண்டுவிட்டார். நான் வாங்காத பேட்டரியை வாங்கினேன் என்று ஒருவர் மூலம் சொல்ல வைப்பது நம் காவல்துறைக்கு எத்தனை சுலபம் என்று சற்றே சிந்தியுங்கள்.

6. தடா சட்டத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதே தவறு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. காரணம் இந்தக் கொலைக் குற்றவாளிகளுக்கு கொலை செய்யப்பட்டவர்களைத் தவிர யாதொருவரையும் அச்சுறுத்தவோ, கொல்வதோ நோக்கமாக இருந்திருக்கவில்லை என்று எடுத்துரைத்தது. அப்படி இருக்கும் வேளையில், எங்களை தடா சட்டத்தின் கீழ் கைது செய்து, உரிமைகள் மறுக்கப்பட்டு, தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு, பெறப்பட்ட வாக்கு மூலம் மட்டும் எப்படி செல்லுபடியாகும்?

மேலும் நம் நாட்டில் வாக்கு மூலங்கள் எப்படிப் பெறப்படுகின்றன என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். கடுமையான சித்திரவதை, மிரட்டல், அடி உதைக்கு பயந்துதான் பல வாக்குமூலங்கள் ரத்தத்தால் கையெழுத்தாகின்றன. பொதுவாக அப்படிப் பெறப்படும் வாக்கு மூலங்களை மட்டுமே வைத்து நீதிமன்றங்கள் தீர்ப்பினை தருவது கிடையாது. ஆனால் என் வழக்கில் மட்டும் நீதிமன்றம் அவ்வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, வேறு எந்த ஆதாரமும் இல்லாமல் எனக்குத் தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது.

7. ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்த திரு. தியாகராஜன் என்ற அதிகாரி கேரள மாநிலத்தில் 1993 இல் நடைபெற்ற அருட்சகோதரி அபயா கொலை வழக்கை ‘தற்கொலை’ என முடிக்க அழுத்தம் கொடுத்தவர் என்பதும், அவரது முறைகேட்டை எதிர்த்ததால், அவருக்கு கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் திரு. தாமஸ் வர்கீஸ் என்பவர் தனது பதவியை துறந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பிறகு இந்த வழக்கு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை என்று திரும்பியது. எர்ணாகுளம் தலைமை நீதிமன்ற நடுவர் 23.06.2000 அன்று அளித்த தீர்ப்பில் கடுமையான கண்டனங்களை வாங்கியவர் இந்த தியாகராஜன். இவர் என்னிடம் வாங்கிய வாக்குமூலங்கள் ஏன் உண்மையாக இருக்க வேண்டும்? யாருக்காகவோ வழக்கை எப்படியும் வளைப்பவர்கள்தானே இவர்கள்....

8. தடா சட்டத்தில், சிறப்பு தனி நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதால், பெரும் பான்மையான உரிமைகள் எனக்கு மறுக்கப்பட்டன. அதுவே என் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூற முடியாமல் செய்துவிட்டது. பொதுவாக ஒரு மாவட்ட நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பிற்கு, உயர்நீதிமன்றம், பிறகு உச்சநீதிமன்றம் என்று இருமுறை மேல் முறையீடு செய்யும் வாய்ப்புள்ளது.

இந்த செயலபாடு ஒரு இடத்தில் இல்லாவிட்டாலும் மறு இடத்தில் நீதி சரியாக கிடைக்க உதவியது. ஆனால் எங்கள் விஷயத்தில் தடா கொடுங்கோல் வழக்கு என்பதால், உயர் நீதிமன்றம் செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்டு, இரண்டில் ஒரு மன்றத்தின் கதவு அடைக்கப்பட்டுப்போனது. இப்பொழுது தடா சட்டம் தவறு என்று அந்த சட்டமே நம் நாட்டில் வாபஸ் பெறப்பட்டாலும், அதனால் பாதிக்கப்பட்ட என் போன்றவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? எப்பொழுது கிடைக்கும்?

9. தடா நீதிமன்றத்தின் கீழ் விசாரிக்கப்படுபவர்கள் 20 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தடா சட்ட வரம்பு சொல்கிறது.

10. அவர் அதற்கு முன்னால் குற்றம் ஏதும் புரிந்தவரா என்பதை கவனிக்க வேண்டும்.

11. குற்றப் பின்னணி உள்ள குடும்பத்தைச் சார்ந்தவரா என்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்கிறது தடா சட்டம்.

12. எனக்கு மட்டும் இந்த எந்த வரைமுறைகளையும் கடைபிடிக்காமல் தடாவின் கீழ் கைது செய்து விசாரித்து, தண்டனையும் அறிவித்தார்கள்.

13. சிறப்பு நீதிமன்றத்தில் 26 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் அதில் 22 பேர் தூக்குத் தண்டனையை ரத்து செய்கிறதென்றால், இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் எத்தன்மையுடன் ஒரு தலைப்பட்சமாக, முன் முடிவுகளுடன் விசாரிக்கப்பட்டதென்பதை புரிந்து கெள்ள முடியும்.

சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்று இருந்தாலும், இந்த வழக்கைப் பொறுத்தவரை கொல்லப்பட்டவர் ராஜீவ் என்பதாலும், அவருக்கு இருந்த செல்வாக்கு மற்றும் ஊடக அனுகூலங்களாலும், ஒரு தலைபட்சமாகவே பார்க்கப்பட்டது. இன்னொரு வாய்ப்பு கிடைக்கப் பெற்று, நடுநிலையுடன் விசாரிக்கப்பட்டால் எங்களது தூக்குக் கயிறும் கண்டிப்பாக அறுபடும் என்று என்னால் உறுதியாக கூற முடியும்.

அந்த வசதி இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் உள்ளது. ஆனால் இனி வழக்கை விசாரிக்கும் வழியில்லை என்கிறது இந்திய குற்றவியல் சட்டம். ஆகையால் கருணை மனுவின் மீதான முடிவே இறுதி முடிவு என்று விடப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள் ஆகிப் போனோம் நாங்கள். நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ?

14. திருமதி சோனியா காந்தி, இவ்வழக்கில் தூக்குத் தண்டனைப் பெற்றவர்களுக்கு அத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கோ என் குழந்தைகளுக்கோ (ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி) சற்றும் விருப்பமில்லை என ஏற்கனவே கூறியுள்ளார்.

15. ஆயினும் எங்களை 20 ஆண்டுகளாக இப்படி சிறையில் அடைத்து வைத்திருக்கும் மர்மம் எங்களுக்கு விளங்கவில்லை. நிரபராதிகளான எங்களை இப்படி தூக்குக் கொட்டடியிலேயே வைத்திருக்கும் காரணம் புரியவில்லை.

16. 1980களின் இறுதியில் வாழ்ந்த எல்லா இளைஞர்களைப் போலவே நானும் ஈழ விடுதலையிலும், விடுதலைப் போராளிகளின் மீதும் பற்றுக் கொண்டிருந்தேன். அன்று கல்லூரிகளிலும், பணி இடங்களிலும் எல்லோரும் தான் விடுதலைப் போராட்டத்திற்காக உதவி வந்தார்கள்.

ஒரு நாள் ஊதியத்தையும் கொடுத்தார்கள். பள்ளிகளில் நன்கொடை வசூலித்தார்கள். ஏன் நம் மத்திய, மாநில அரசுகள் கூடத்தான் அவர்களுக்கு உதவிகள் புரிந்தன? ஒரு துர்ச் சம்பவம் நிகழும்பொழுது நான் மட்டும் எப்படி எதிரி ஆகிப் போனேன்?? ஏன் தனிமைப்படுத்தப்பட்டேன்?? உங்களில் ஒருவன் தானே நானும்??

தூக்குத் தண்டனை என்பது சட்டத்தின் பெயரால் செய்யப்படும் திட்டமிட்ட படுகொலை என்கிறார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்.

செய்த குற்றத்திற்கு வழங்கப்படும் தூக்கு தண்டனையையே திட்டமிட்டப் படுகொலையெனில், செய்யாத குற்றத்திற்கு வழங்கப்படும் தூக்குத் தண்டனையை என்னவென்று சொல்வது?

- முடிவுறா விசாரணையில், முடிவினை நோக்கித் தள்ளப்பட்டுள்ள அப்பாவி

இவ்வாறு அவர் அந்த கடித்தத்தில் தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

எய்ட்ஸ் நோய்க்கு விரைவில் தடுப்பூசி : விஞ்ஞானிகள் தகவல்.

எய்ட்ஸ் நோய்க்கு விரைவில் தடுப்பூசி: விஞ்ஞானிகள் தகவல்

எய்ட்ஸ் நோயை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக மருத்துவ அதிகாரிகள் பல்வேறு வித ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது நம்பிக்கைதரும் வகையில் விஞ்ஞானிகள் ஒரு தகவல் வெளியிட்டுள்ளனர். விரைவில் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த தடுப்பூசியை உருவாக்கி விடுவோம் என்று அறிவித்துள்ளனர்.

மனிதன் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்திகள் உள்ளன. இதில் அதிக திறன் கொண்ட 17 மூலக்கூறுகளை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதை மேலும் மேம்படுத்துவதன் மூலம் எய்ட்ஸ் நோயையும் மனிதர்களுக்கு ஏற்படாமல் தடுத்து விடலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

எனவே இந்த மூலக்கூறுகளை மேலும் வீரியமாக்க தடுப்பூசி மருந்தை உருவாக்கி வருகின்றனர். விரைவில் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதனால் எய்ட்ஸ் நோயை முன்கூட்டியே தடுத்து முற்றிலும் விரட்டிவிடலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தகவல் மருத்துவ அறிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய தலைமை செயலக கட்டிடம் அரசு மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படும் : ஜெயலலிதா அதிரடி அறிவிப்பு.


புதிய தலைமை செயலக கட்டிடம் அரசு மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜெயலலைதா அறிவித்தார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராக இந்த மருத்துவமனை அமையும் என்றும் அவர் அறிவித்தார்.

’A’பிளாக்கில் பல்வேறு உயர்சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்படும் என்றும்,

‘B’பிளாகில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் அறிவித்தார்.

இது குறித்து சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

தகுதி வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், நவீன உபகரணங்கள் ஆகியவற்றுடன் சுகாதாரமான சுற்றுச்சூழலைக் கொண்ட தரமான மருத்துவச் சேவையை தாராளமாக அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

இந்தக் குறிக்கோளை நிறைவேற்றும் விதமாக, ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்துதல்; உயிர் காக்கும் உபகரணங்களை தமிழ்நாடு சுகாதார நலத் திட்டத்தின் கீழ் 55 கோடி ரூபாய் செலவில் மாவட்ட மருத்துவமனைகளுக்கு வழங்குதல்; உணவு பாதுகாப்பு-மருந்து கட்டுப்பாடு நிருவாகத்திற்கென தனியாக ஒரு ஆணையரகத்தை உருவாக்குவது; திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு சிகிச்சை மையம், மக்கள் வீட்டிற்கே சென்று சுகாதார வசதிகள் அளிக்கக் கூடிய நடமாடும் மருத்துவமனை என்னும் புதிய திட்டம் உட்பட பல்வேறு சிறப்புத் திட்டங்கள் எனது தலைமையிலான அரசின், 2011-2012 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதை இந்த உறுப்பினர்கள் அறிவீர்கள்.

இவை மட்டும் அல்லாமல், அனைவருக்கும் மருத்துவ சேவையை நல்கும் வகையில், முதல்வரின் விரிவான பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்படும் என்றும், இந்தத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ வசதிகளை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில், அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ வசதிகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, இவற்றுக்கெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாக, ஏழை, எளிய மக்கள், பல்வேறு நோய்களுக்கும், தரமான, உயரிய சிகிச்சையினை இலவசமாகப் பெறும் வகையில், பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை, அதாவது, (Multi Super Specialty Hospital) ஒன்றை அமைக்க எனது தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மருத்துவமனை, சென்னை மாநகரத்தின் மையப் பகுதியான அண்ணா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், முந்தைய தி.மு.க அரசால், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக கட்டப்பட்ட, 97,829 சதுர மீட்டர் தளப் பரப்பு கொண்ட பிளாக் 'ஏ' கட்டடத்தில் அமைக்கப்படும். இந்தக் கட்டடம், சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகத்தில் தற்போது உள்ள 36 துறைகளும் செயல்படுவதற்கு போதுமானதல்ல என்பதாலும்; பயன்படுத்தக் கூடிய இடம் வெகு குறைவாக இருப்பதால், அலுவலக பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்தக் கட்டடம் இல்லை என்பதாலும்; இரு வேறு கட்டடங்களில் இருந்து தலைமைச் செயலகம் செயல்பட முடியாது என்பதாலும்; சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருவதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.

தற்போது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், பயன்படுத்தப்படாமல் உள்ள கட்டடம், ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனையை அமைக்க எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கட்டடத்தில் பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை அமையும் வகையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, மருத்துவ வல்லுநர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டு, உயர் தர மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நவீன உபகரணங்கள் வாங்கப்பட்டு, இந்த மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய மருத்துவமனை டெல்லி எய்ம்ஸ் மருத்துமனைக்கு நிகராக அமையும் என்று அவர் தெரிவித்தார்.

புதிய தலைமைச் செயலகக் கட்டடம் வீணடிக்கப்படக் கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரி வந்த நிலையில் அந்த கட்டடத்தை பிரமாண்ட மருத்துவமனையாகவும், மருத்துவக் கல்லூரியாகவும் மாற்றப்படு்ம் என்று முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையின் 4வது அரசு மருத்துவக் கல்லூரி

இங்கு அமையும் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை நகரில் அமையும் 4வது அரசு மருத்துவக் கல்லூரியாக இருக்கும். ஏற்கனவே சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவை தவிர பல் மருத்துவக் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக ஒரு மருத்துவக் கல்லூரியை சென்னை பெறவுள்ளது.

ராஜபக்சே நீண்ட நாள் வாழ, ஈழப்பெண்களின் மார்புகளை அறுத்து யாக குண்டலத்தில் வீசும் கொடூரம்.



இலங்கையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பாலியல் வன்முறைகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார்.

அவ்வறிக்கையில், ’’இலங்கையின் கிழக்கு மாவட்டங்களில் சிறிலங்க இராணுவத்தினரும், காவல் துறையினரும் தமிழ்ப் பெண்களை முகாம்களுக்குக் கடத்திச் சென்று அவர்களின் மார்பகங்களை அறுத்துவிட்டு, பிறகு கொன்றுவிடுவதாக அங்குள்ள தமிழர்கள் என்னைத் தொடர்பு கொண்டு அச்சத்துடன் கூறுகின்றனர்.

இலங்கையின் கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் உள்ள கல்லடி, காந்திபுரம், ஊரணி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து இப்படி பெண்கள் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்படுகின்றனர் என்றும், இரவு நேரங்களில் வீட்டிற்குள் புகுந்து இவ்வாறு பிடித்துச் செல்வது கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது என்றும் கூறும் தமிழர்கள், அவ்வாறு பிடித்துச் செல்லப்படும் தமிழ்ப் பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சில சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதுவரை 20க்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் ஒருவரும் வீடு திரும்பவில்லையென்றும் கூறுகின்றனர்.

பிடித்துச் செல்லப்படும் பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டு, அவைகள் ஒரு யாகசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கு யாக குண்டத்தில் வீசப்படுகிறது என்றும், இந்த யாகம் இலங்கை அதிபர் ராஜபக்சே நீண்ட காலம் வாழ மேற்கொள்ளப்படுவதாகவும் தங்களுக்கு தெரியவந்துள்ளதென அம்மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து காவல் நிலையங்களுக்குச் சென்று புகார் கூறினால் அதனை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.

இலங்கையின் கிழக்கு மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு ஆகியவற்றில், பல இடங்களில் கிரீஸ் தடவிய மனிதர்களை ஏவிவிட்டு பெண்களை மீது பாலியல் வன்முறை தொடுக்கப்பட்ட சம்பவங்களினால் அங்கு காவல் துறையினருக்கு எதிராக தமிழர்கள் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திறகு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. கிரீஸ் மனிதன் அச்சுறுத்தலினால், இரவில் பெண்கள் எவரும் தங்கள் இல்லங்களில் தூங்காமல், ஒரு இடத்தில் எல்லோரும் கூடி ஒன்றாகவே துயில் கொண்டு வருகின்றனர். இச்செய்தியை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே என்னிடம் பேசி உறுதி செய்துள்ளார்.

தமிழர்கள் மீது நேரடியாக போர் தொடுத்து பல இலட்சக்கணக்கானவர்களை அழித்தொழித்த சிறிலங்க அரசு, இப்போது தமிழினத்தை அழிக்க இப்படிப்பட்ட பாலியல் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது என்று ஈழத் தமிழர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறும் நிகழ்வுகளை கேட்டால் நெஞ்சம் பதறுகிறது. தமிழர்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்பட்டு, வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இது பாரிய மனித உரிமைப் பிரச்சனையாகும். இலங்கையில் அரச படைகளே இப்படிப்பட்ட வன்முறையின் பின்னணியில் இருந்து செயல்படுகின்றன. எவ்வித பாதுகாப்பும் இன்று தமிழர்கள் வாழ்வு ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தலிற்குள்ளாகியுள்ளது.

“இலங்கையிலுள்ள தமிழர்கள் எங்கள் நாட்டு மக்கள், அவர்கள் பற்றி தமிழ்நாட்டின் முதல்வர் பேசத் தேவையில்லை” என்று கூறும் கோத்தபய ராஜபக்சே கும்பல் நடத்தும் ஆட்சியின் யோக்கியதைக்கு இது ஒரு அத்தாட்சியாகும். கோத்தபய ராஜபக்சதான் சிறிலங்க அரசின் பாதுகாப்புச் செயலர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது கட்டுப்பாட்டிலுள்ள இராணுவம்தான் தமிழர்களுக்கு எதிரான இப்படிப்பட்ட மறைமுக வன்முறைகளை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

ஈழத் தமிழர்கள் மீது ஈடிணையற்ற அன்பும், அக்கறையும் காட்டிவரும் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள், இப்பிரச்சனையிலும் கவனம் செலுத்தி, ஐ.நா.விற்கும், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கூறி தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்திய மத்திய அரசு, இலங்கை அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இப்பிரச்சனையை மனித உரிமை அமைப்புக்களிடம் தமிழக முதல்வர் நேரிடையாகவே கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.