Tuesday, May 24, 2011

சமச்சீர் கல்வி திட்டம் தொடருமா? கல்வியாளர்கள் கருத்து.

ஆட்சி மாற்றம்:    சமச்சீர் கல்வி    திட்டம் தொடருமா?    கல்வியாளர்கள் கருத்து

10-ம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி பாடத் திட்டம் இந்த ஆண்டு நடை முறைப்படுத்த வேண்டாம் என்று நர்சரி, பிரைமரி சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வருகிற கல்வி ஆண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் பாடத் திட்டம் நடை முறைப்படுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு 1 மற்றும் 6-ம் வகுப்பிற்கு சமச்சீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு மற்ற 8 வகுப்புகளுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது. இதற்காக 8 கோடி பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து பள்ளிகளும், ஒரே பாடத் திட்டத்தை செயல்படுத்தக் கூடிய சமச்சீர் கல்வி திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.

அதே நேரத்தில் சமச்சீர் பாடத் திட்டம் தரம் குறைவாக இருப்பதாகவும், இந்த தரத்தில் இருந்தால் உயர் கல்விக்கான போட்டித் தேர்வுகளில் நம்முடைய மாணவ-மாணவிகள் வெற்றி பெற இயலாது. இதனால் பாடத் திட்டத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என தனியார் பள்ளி சங்கங்கள் கோரிக்கை வைத்தன.

ஒரே நேரத்தில் 8 - வகுப்புகளுக்கு சமச்சீர் பாடத் திட்டத்தை அமல் படுத்து வதை தவிர்க்க வேண்டும்.

படிப்படியாக செயல்படுத்த வேண்டும் 10-ம் வகுப்பிற்கு இந்த ஆண்டு நடை முறைப்படுத்த வேண்டாம் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் குலேசன் மேல்நிலைப்பள்ளி சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் வலியுறுத்தினார். அவர் மேலும் கூறியதாவது:-

சமச்சீர் பாடத்திட்டத்தில் நிறைய பிழைகள் உள்ளன. உலகத் தமிழ் மாநாட்டில் இடம் பெற்ற கவிதைகள், முன்னாள் முதல் - அமைச்சர் கதைகள் இடம் பெறுகின்றன. மேலும் பாடப்புத்தகமும் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுவதால் 10-ம் வகுப்பிற்கு இந்த ஆண்டு சமச்சீர் திட்டம் செயல்படுத்த வேண்டாம். அடுத்த ஆண்டு நடை முறைப்படுத்தலாம். சமச்சீர் கல்வி திட்டம், கல்வி கட்டண விவகாரத்தில் பெற்றோர்கள், பள்ளி நிர்வாகிகள், கல்வி அதிகாரிகள் ஆகியோரிடம் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம்.

இந்த பிரச்சினையில் அவசரம் காட்டாமல் சுமூக தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தி.மு.க. அரசு கொண்டு வந்த சமச்சீர் பாடத்திட்டம் வருகிற கல்வி ஆண்டு முதல் முழுமையாக செயல் படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தனியார் பள்ளி கல்வி கட்டணம் முறைப்படுத்தப்பட்டு ஒரு சில நாட்களில் அறிக்கை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் முடிவு அ.தி.மு.க.வுக்கு அமோக ஆதரவை தேடித் தந்துள்ளது.

அதனால் சமச்சீர் கல்வி திட்டம், பள்ளி கல்வி கட்டணம் நிர்ணயம் போன்றவற்றில் புதிய அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்று தெரியவில்லை. ஜூன் மாதம் பள்ளி திறப்பதற்கு முன்பாக பள்ளிகளுக்கு சமச்சீர் பாட புத்தகம் வினியோகம் செய்யப்பட வேண்டும்.

புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். தி.மு.க. அரசு கொண்டு வந்த இந்த கல்வி திட்டங்களை புதிய அரசு நடை முறைப்படுத்துமா? அல்லது இதில் மாற்றம் செய்து புதிய திட்டத்தை செயல்படுத்துமா? என்பது பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எற்படுத்தி உள்ளது. சமச்சீர் கல்விக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

தனியார் பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் எவ்வளவு வேண்டும் என்ற பட்டியலும் பெறப்பட்டு புத்தகம் அச்சிடப்பட்டு வருகின்றன. இந்த பிரச்சினையைப் புதிய அரசு எடுக்கப் போகிற யுக்தி என்ன என்பதை அனைத்து தரப்பினரும் கல்வியாளரும் உற்று நோக்குகிறார்கள்.

சமச்சீர் கல்வி திட்டம் ரத்து ; தமிழக அரசு முடிவுக்கு பெற்றோர், மாணவ - மாணவிகள் வரவேற்பு.

சமச்சீர் கல்வி திட்டம் ரத்து;   தமிழக அரசு முடிவுக்கு பெற்றோர்,   மாணவ-மாணவிகள் வரவேற்பு

சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைத்து தமிழக அமைச்சரவை முடிவு எடுத்தது அறிவித்தது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு பெற்றோர்களும், மாணவ - மாணவி களும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். கோவை ஸ்ரீசவுடேஸ்வரி வித்யாலாய மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் முதல் மாணவி எஸ். பிரார்த்தனா கூறியதாவது:-

சமச்சீர் கல்வி திட்டம் அறிமுகப்படுத்துவது தள்ளிப் போடப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. எல்லோருக்கும் பொதுவான பாடத் திட்டம் என்பதில் உடன்பாடில்லை. தேர்வுகளில் மிக எளிதாக அதிக மதிப்பெண்களை பெற முடிந்தாலும், கல்வியின் தரம் எதிர்பார்த்தப்படி இல்லை. மெட்ரிக்குலேஷன் முறையை அமுல்படுத்தப்படுவதையே நான் வர வேற்கிறேன்.

8-ம் வகுப்பு மாணவி எஸ்.நிருபமா:-

எங்கள் வகுப்பு மாணவர்களிடம் சமச்சீர் கல்வி திட்டம் எப்படியிருக்குமோ என்று ஒரு பதட்டமான மனநிலை இருந்தது. சமச்சீர் கல்வி திட்டம் இந்த வருடம் நிறுத்தி வைக்கப்பட்ட செய்தி கேட்டவுடன் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டோம். இந்த வருடம் பல புதிய அறிவு தகவல்களை நாங்கள் பெற முடியும். இது பொதுக்கல்வி திட்டத்தில் இல்லை. அது மெட்ரிக் குலேஷன் பள்ளி பாடத் திட்டத்தை ஒப்பிடுகையில் மிக குறைந்த அளவே அறிவை கொடுப்பதாக உள்ளது.

வியாபாரி எச்.ஸ்ரீதர்:-

எந்த பாடத்திட்டமாக இருந்தாலும் அது மாணவர்களுக்கு அதிக அளவில் அறிவை அளிக்கும் திட்டமாக இருக்க வேண்டும். சமச்சீர் கல்வி திட்டம் கல்வியின் தரத்தை உயர்த்துவதாக இருந்திருந்தால் எல்லா பெற்றோர்களும் அதனை வரவேற்று இருப்போம். ஆனால் அதற்கு மாறாக அது கல்வியின் தரத்தை கீழே கொண்டு வந்து விட்டது.

டாக்டர் மன்வீண்கவுர்:-

பாடத்திட்டத்தின் சரித்திரம், பூகோளம் போன்ற பாடங்களுக்கு மட்டுமே அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் அல்லாத பிற மொழிகளை இரண்டாம் மொழியாக கற்க வாய்ப்பில்லாமல் உள்ளது. எனது மகளின் பல நண்பர்கள் தமிழை தவிர வேறு மொழி இத்திட்டத்தில் கற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லாததால் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு மாறி செல்ல தொடங்கி விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ்-2 விடைத்தாள் நகல் கேட்டு 75 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ஜூன் 2-வது வாரத்தில் கிடைக்கும்.

பிளஸ்-2 விடைத்தாள் நகல் கேட்டு 75 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ஜூன் 2-வது வாரத்தில் கிடைக்கும்

பிளஸ்-2 தேர்வு முடிவு கடந்த 14-ந்தேதி வெளியானது. 7.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதியவர்களில் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதபவர்கள் விடைத்தாள் நகல் பெற்றுக்கொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

விடைத்தாள் நகல் பெற விரும்புவர்கள் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 16-ந்தேதி முதல் விடைத்தாள் நகல் பெறுவதற்கு விண்ணப்பம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் விடைத்தாள் நகல் கேட்டு மாணவ- மாணவியர்கள் விண்ணப்பித்தனர்.

அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில், மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டன. தமிழகம் முழுவதும் விடைத்தாள் நகல் கேட்டு 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணை விட குறைந்த மார்க் பெற்றதாக கருதிய மாணவ- மாணவிகள் இந்த முறை அதிகம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். கடந்த ஆண்டு 65,000 பேர் பிளஸ்-2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தனர். இந்த வருடம் அதை விட கூடுதலாக விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பெறப்பட்ட விண்ணப்பப்பங்கள் சென்னை தேர்வுத் துறைக்கு வந்தன. அவற்றை ஆய்வு செய்து விண்ணப்பித்த மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்குவதற்கான பணி தொடங்கியது. எந்தெந்த மாவட்டத்தில் இருந்துவிடைத்தாள் கேட்டு இருக்கிறார்களோ அவரது பதிவு எண்ணை வைத்து அதற்கு போடப்பட்ட டம்மி எண்ணை கண்டுபிடித்து அந்த பாடத்தின் விடைத்தாள் திருத்திய மையத்தில் இருந்து கொண்டு வரப்படும்.

அதன் பின்னர் அவை ஜெராக்ஸ் எடுத்து மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்த பணி முடிய குறைந்தது 20 நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. சென்னை எழும்பூர் மாநில பள்ளியில் விடைத்தாள் நகல் வழங்கும் பணி நடக்கிறது. ஜூன் 2-வது வாரத்தில் விடைத்தாள் நகல் கேட்டவர்களுக்கு தபாலில் கிடைக்கும். அதற்கான பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

மருத்துவ படிப்பில் சேர ஆர்வம்: 22 ஆயிரம் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் விற்பனை.

மருத்துவ படிப்பில் சேர ஆர்வம்: 22 ஆயிரம் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் விற்பனை; கூடுதலாக 5000 அச்சடிப்பு

அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பம் கடந்த 16-ந்தேதி முதல் வினியோகிக்கப்படுகிறது.

17 அரசு மருத்துவ கல்லூரிகள், சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 9 நாட்களாக விண்ணப்பம் வழங்கப்படுகிறது. ஜூன் 2-ந்தேதி வரை விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுகிறது. இதுவரையில் 22 ஆயிரம் எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மருத்துவ படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் இடையே ஆர்வம் அதிகரித்து வருவதால் விண்ணப்பம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க மருத்துவ தேர்வுக்குழு நடவடிக்கை எடுத்து வருகிறது. கூடுதலாக 5 ஆயிரம் எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் அச்சடித்து தயாராக இருப்பதாக தேர்வு குழு செயலாளர் டாக்டர் ஷீலாகிரேஸ் ஜீவமணி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

முதல்கட்டமாக எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் 25 ஆயிரம் அச்சடித்து வழங்கப்பட்டன. இதில் 22 ஆயிரம் இதுவரை விற்பனையாகி உள்ளது. விண்ணப்பிக்க கால அவகாசம் இருப்பதால் எல்லா மருத்துவ கல்லூரி களிலும் விண்ணப்பம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்காக கூடுதலாக 5 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடித்து தயாராக இருக்கின்றன.

டிப்ளமோ நர்சிங் படிப்பதற்கு 15 ஆயிரம் விண்ணப்பம் வழங்கப்பட்டு விட்டன. இதனால் மேலும் 4 ஆயிரம் விண்ணப்பம் அச்சடிக்கப்பட்டுள்ளன. மருத்துவம் சாரா படிப்புகளுக் கான விண்ணப்பம் 9 ஆயிரம் அச்சடித்து வினியோகிக்கப்பட்டு உள்ளது.

தற்போது கூடுதலாக 6 ஆயிரம் விண்ணப்பம் அச்சடிக்கப் படுகிறது. கடந்த வருடம் 20 ஆயிரம் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

ராஜீவ் படுகொலையை அரசியல் ஆக்க வேண்டாம் : ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் கண்டனம்.

ராஜீவ் காந்தி படுகொலையை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம் என்று ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் 24.05.2011 அன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா, ராஜீவ்காந்தி கொலையில் திமுகவை தொடர்பு படுத்திப் பேசியதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி, ராஜீவ்காந்தி கொலை மிகவும் உணர்வு பூர்வமான நிகழ்வு. இந்த சம்பவம் நாடு முழுவதும் மட்டுமின்றி உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வு.

மிகவும் உணர்ச்சிகரமான அந்த துயரச் சம்பவத்தை யாரும் அரசியலாக்க முயற்சி செய்ய வேண்டாம். இதனை யாரும் அரசியலாக்க முயற்சிப்பதை காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது. இவ்வளவு பெயரி துயரச்சம்பவத்தை அரசியலாக்க முயற்சிப்பது கண்டனத்துக்குறியது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அச்சம்பவம் அரசியலாக்கப்படுவதில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு.


சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்கும் மாணவர் நலனுக்கு எதிரான அதிமுக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஷ்யாம் சுந்தர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்றே சமச்சீர் கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு 1 மற்றும் 6ம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது மற்ற வகுப்புகளுக்கும் சேர்த்து 200 கோடி ரூபாய் அளவுக்கு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்கும் அதிமுக அரசின் உத்தரவு மாணவர் நலனுக்கு எதிரானது என்றும், அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த பொதுநல மனு 25.05.2011 அல்லது 26.05.2011 அன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மனுதாரரின் வழக்கறிஞர் சக்திவேல்,

சமச்சீர் கல்வி முறை திட்டத்தை நிறுத்தி வைத்ததைத்தொடர்ந்து நாங்கள் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளோம். சமச்சீர் கல்வி முறை திட்டத்தை நிறுத்தி வைப்பதினால் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் நிறைய குழப்பங்கள் ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் சமுதாயத்தினர் பாதிக்கப்படுகின்றனர். இதனைத் தொடர்ந்து சமச்சீர் கல்வி முறை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக மனுதாக்கல் செய்துள்ளோம் என்றார்.



டெல்லியில் கருணாநிதியுடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு.


திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைதாகி சிறையில் இருக்கும் தனது மகள் கனிமொழியை சந்திப்பதற்காக கருணாநிதி டெல்லி வந்துள்ளார். திகார் சிறையில் நேற்று அவர் கனிமொழியையும், முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

கனிமொழி கைது நடவடிக்கையாலும், தமிழகத்தில் ஏற்பட்ட தேர்தல் தோல்வியாலும் திமுக-காங்கிரஸ் இடையிலான உறவு சீர்குலைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழக விவகாரங்களுக்கான பொறுப்பாளரான ஆஸாத், கருணாநிதியை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குச் சென்று இன்று சந்தித்தார்.

''உண்மையை உணர்ந்துள்ளார் கருணாநிதி, உறவு பாதிக்கப்படாது'':

இந்தச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய குலாம் நபி, 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழி கைது செய்யப்பட்டதால் திமுக-காங்கிரஸ் உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த சட்ட விவகாரத்தில் மத்திய அரசு எந்த வகையிலும் தலையிடவில்லை, தலையிடாது.

ஒரு பெண் என்ற வகையில் கனிமொழி சிறையில் இருப்பது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் வருத்தமடையச் செய்துள்ளது. ஆனால், இதில் யாரும் ஏதும் செய்ய முடியாது என்பதே உண்மை.

இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணித்து வருவதையும், இதில் மத்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்பதையும் கருணாநிதியும் நன்றாகவே உணர்ந்து வைத்துள்ளார். கருணாநிதி ஒரு மூத்த அரசியல் தலைவர் மட்டுமல்ல, அரசியலை மிகச் சிறப்பாக உணர்ந்தவர். இந்த விஷயத்திலும் அவர் உண்மை நிலையை புரிந்து வைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. இதில் காங்கிரசும் ஏதும் செய்ய முடியாது என்பதையும் அவர் உணர்ந்துள்ளார் என்றார்.

ஜெயந்தி நடராஜனும் சந்திப்பு:

அதேபோல காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனும் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக-காங்கிரஸ் இடையிலான உறவு அப்படியே உள்ளது. இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என திமுக கூறியுள்ளது. நான் கலைஞரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.

கனிமொழி நலமாக இருப்பதாகவும், இந்த விவகாரத்தை சட்டரீதியில் எதிர்கொள்ள அவர் தயாராக இருப்பதாகவும் கருணாநிதி என்னிடம் தெரிவித்தார் என்றார்.

நேற்றிரவு கருணாநிதியை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் இணை - அமைச்சர் வி.நாராயணசாமி ஆகியோரும் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

நாராயணசாமி பொறுப்பு வகிக்கும் பெர்சனல் துறையின் கீழ் தான் சிபிஐ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று கனிமொழியை முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் சந்தித்துப் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

'புலிகளை அழிக்கவே கருணாநிதியுடன் கூட்டு வைத்தார் சோனியா' - வைகோ.


சோனியா காந்திக்கு விடுதலைப் புலிகளை அழிக்க கருணாநிதியின் ஆதரவு தேவைப்பட்டதால் அவருடன் கூட்டணி வைத்தார். தற்போது தேர்தலில் திமுக தோற்று விட்டதாஸ் அதிமுகவுடன் கூட்டணி வைக்க நினைக்கிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

மதிமுகவின் 18வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு ஆலங்குளத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது,

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் என்ற முறையில் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆனால், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தனது கட்சியைச் சேர்ந்த 58 வேட்பாளர்களையும், கூட்டணி கட்சியினரையும் தேர்தலில் தோற்கடித்து வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு எதற்காக வாழ்த்து சொல்ல வேண்டும்?.

அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காகவே சோனியா வாழ்த்து தெரிவித்துள்ளார். சோனியா காந்திக்கு விடுதலைப் புலிகளை அழிக்க கருணாநிதியின் ஆதரவு தேவைப்பட்டதால் அவருடன் கூட்டணி வைத்தார். தற்போது தேர்தலில் திமுக தோற்று விட்டதாஸ் அதிமுகவுடன் கூட்டணி வைக்க நினைக்கிறார்.

சட்டசபைத் தேர்தலில் தோற்று, மகள் கனிமொழியும் சிறையில் இருக்கும் இந்த இக்கட்டான நிலையில் நிராயுதபாணியாக நிற்கும் கருணாநிதியைப் பற்றி பேச நான் விரும்பவில்லை.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை, உயிருடன் தான் இருக்கிறார். அவர் மீண்டு வந்து போரிடுவார். வெல்வார். ஈழம் நிச்சயம் மலரும் என்றார்.

ஐஐடி, ஐஐஎம் நிறுவனங்கள் சர்வதேச தரத்துக்கு இணையாக இல்லை : ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு.


நாட்டின் முன்னணி கல்வி மையங்களான ஐஐடி மற்றும் ஐஐஎம்-கள் சர்வதேச தரத்தில் இல்லை என்று மத்திய சுற்றுச் சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐஐடி, ஐஐஎம்களில் கல்வித் தரம் சிறப்பாக உள்ளது என்று குறிப்பிட்டார். ஆனால் அது சர்வதேச தரத்துக்கு இணையாக இல்லை என்று சுட்டிக்காட்டினார். இத்தகைய கருத்தை தெரிவித்துள்ள ஜெய்ராம் ரமேஷும், மும்பையில் உள்ள ஐஐடி-யின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஐடி மையங்களில் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி ஏதேனும் உருவாகியுள்ளதா? இதிலிருந்தே அது சர்வதேச தரத்துக்கு இணையானதாக உயரவில்லை என்பதும், அங்குள்ள ஆசிரியர்களின் போதிக்கும் திறனும் வளரவில்லை என்பதும் தெரிகிறது.

இவ்விரு கல்வி மையங்களும் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழ்வதற்கு அங்குள்ள மாணவர்களே காரணம். அங்குள்ள ஆராய்ச்சி மையமோ அல்லது ஆசிரியர்களோ காரணமல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

அரசு சார்ந்த ஆய்வு மையங்கள் திறமையான இளைஞர்களை ஈர்க்கத் தவறிவிடுகின்றன. இதற்குக் காரணம் அவை அரசு நிறுவனங்களாக இருப்பதுதான். இதைக் கருத்தில்கொண்டே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் இணைந்து தேசிய கடல்சார் பல்லுயிர் பெருக்க மையம் (பயோடைவர்சிடி) ஒன்றை குஜராத் மாநிலம் ஜாம் நகரில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. சர்வதேச தரத்திலான ஆராய்ச்சி மையத்தை அரசு தன்னிச்சையாக ஏற்படுத்த முடியாது என்பதால்தான் தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து அமைக்க முடிவு செய்யப்பட்டது என்றார் அவர்.

ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்குவதில் இப்போது உரசல் ஏற்பட்டதாகக் கூறப்படுவது பற்றி கேட்டதற்கு, வாழ்க்கையே மிகப் பெரிய உரசல்களை உள்ளடக்கியதுதான். ஆனால் அரசாங்கத்தால் சர்வதேச தரத்திலான ஆராய்ச்சி மையத்தை ஏற்படுத்த முடியாது என்பதுதான் யதார்த்தமான உண்மை. அத்துடன் அரசு ஏற்படுத்தும் ஆராய்ச்சி மையம் திறமையானவர்களை தக்க வைத்துக் கொள்ளாது என்பதும் உண்மை. அத்துடன் திறமையானவர்களை அரசு ஆராய்ச்சி மையம் ஊக்குவிக்காது என்பதாலேயே வித்தியாசமாக யோசித்து தனியார் கூட்டுடன் இத்தகைய மையத்தை ஏற்படுத்த முயற்சித்தோம். ஆராய்ச்சி மையத்தை எவ்விதம் நடத்த வேண்டும் என்பதற்காக இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்டீஸýடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று குறிப்பிட்டார். இந்த மையம் நமது கடல்சார் பல்லுயிர் பெருக்கத்தை காப்பதற்கான ஆராய்ச்சிகளை மட்டுமே பிரத்யேகமாக மேற்கொள்ளும் என்றார் ஜெய்ராம் ரமேஷ்.

ஜெய்தாபூர் அணுமின் நிலைய திட்டம் குறித்து தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவின் அணுகுமுறைகள் முற்றிலும் அறிவியல் ரீதியில் இல்லை என்று குறிப்பிட்டார். ஜெய்தாபூர் அணு மின் திட்டத்தில் அனைத்து பாதுகாப்பு முறைகளும் பின்பற்றப்படவில்லையெனில் அது மிகப் பெரிய குழப்பத்துக்கு வழிவகுக்கும் என்று ஏ.பி. ஷா குறிப்பிட்டிருந்தார்.

ஜெய்தாபூர் அணுமின் நிலையம் அமைப்பது தொடர்பான மக்கள் ஆணையத்துக்கு ஷா தலைவராக உள்ளார். என்ரான் மின் நிலையம் நிதி நெருக்கடியால் பிரச்னையை சந்தித்தது, ஆனால் ஜெய்தாபூர் அணு மின் நிலையம் பாதுகாப்பு பிரச்னையால் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஷா கருத்து தெரிவித்திருந்தார்.இந்த அணுமின் திட்டம் அவசர அவசரமாக மேற்கொள்ளப் படுவதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

திமுகவினர் முறைகேடாக சேர்த்த சொத்துக்களை மீட்க நடவடிக்கை : ஜெயலலிதா.


திமுகவினர் முறைகேடாக சேர்த்த சொத்துக்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் திமுகவினர் அடாவடியாக சொத்துக்களை சேர்த்துள்ளனர். அவற்றை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பெட்ரோல் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது. பெட்ரோல் மீதான வரியை குறைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என ஜெயலலிதா தெரிவித்தார்.

தமிழகத்தில் எம்ஜிஆர் காலத்திலேயே சட்ட மேலவை தேவையில்லை என முடிவுசெய்யப்பட்டது. தற்போதும் சட்ட மேலவை தேவையில்லை. எனவே அது அமையாது என்றார் அவர்.

பள்ளிக் கட்டண விவகாரத்தில் அரசு நேரடியாகத் தலையிடாது. அதற்காக அமைக்கப்பட்டுள்ள ரவிராஜபாண்டியன் குழுவின் முடிவை அரசு அமல்படுத்தும். பள்ளிகள் கேட்டுக்கொண்டால் கட்டண விவகாரத்தில் அரசு தலையிடும் என ஜெயலலிதா கூறினார்.

தமிழகத்தில் நிலவிவரும் மின்வெட்டு பிரச்னையை தீர்க்க அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.

மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து ஆளுநர் உரையில் அறிவிப்பு வெளியாகும். தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்ட அனைத்தையும் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என ஜெயலலிதா தனது பேட்டியின்போது தெரிவித்தார்.

தானியங்கி பெட்ரோல் நிலையங்கள் - இந்தியன் ஆயில் முடிவு.


கலப்படம், அளவு குறைவு என பெட்ரோல் நிலையங்கள் மீது வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் கூறிவருவதால், அனைத்து பெட்ரோல் நிலையங்களையும் தானியங்கி முறைக்கு மாற்ற இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது.

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெரும்பாலும் ஊழியர்களும் வாடிக்கை யாளர்களும் கடுமையாக மோதிக் கொள்ளும் நிலை உள்ளது. இதற்குக் காரணம், அளவு குறைவு, கலப்படம் போன்ற புகார்கள்தான்.

இந்த புகார்களைக் களையும் பொருட்டு, இனி அனைத்து பெட்ரோல் நிலையங் களிலும் தானியங்கி எந்திரங்களைப் பொருத்தும் முடிவுக்கு வந்துள்ளது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்.

நாடுமுழுவதும் மொத்தம் 19000 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளன, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு. இவற்றில் மாதம் 200 கிலோலிட்டர் விற்பனைத் திறன் கொண்ட 4500 நிலையங்களை மட்டும் இப்போதைக்கு தானியங்கி முறைக்கு மாற்றப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த கட்டமாக 100 கிலோ லிட்டர் விற்பனைத் திறன் கொண்ட நிலையங்களும் தானியங்கி முறைக்கு மாற்றப்படும்.

பிரான்ஸ்: தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட மதுரை வாலிபர் கைது.


பிரான்ஸில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட மதுரை மேலுரைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸில் தீவிரவாதப் பயிற்சி மேற்கொண்டதாக கடந்த 10ம் தேதி 6 பேரை அந் நாட்டு போலீஸார் கைது செய்தனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது நியாஸ் அப்துல் ரஷீத் என்பவரும் அடக்கம். பிரான்ஸைச் சேர்ந்த இருவரை பாகிஸ்தானின் தீவிரவாத முகாம் ஒன்றுக்கு இவர் அனுப்பி வைத்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

ரஷீத் குறித்து பிரான்ஸ் போலீசார் மத்திய அரசுக்குத் தகவல் அனுப்பியதைத் தொடர்ந்து அவர் குறித்து மத்திய உளவுப் பிரிவினரும் தமிழக உளவுப் பிரிவினரும் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இவர் மதுரை மேலூரைச் சேர்ந்தவர் என்றும், தனியார் பொறியியல் படித்தபோது சிமி இயக்கத்துடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட, தமிழகத்தைச் சேர்ந்த தீவிரவாதியின் கூட்டாளிகளுடன் இவர் நெருக்கமாக இருந்தது தெரியவந்தபோதே இவரை மத்திய உளவுப் பிரிவான ஐ.பி. கண்காணிக்க ஆரம்பித்ததாகவும், 3 மாதங்களுக்கு முன் இவர் பிரான்சிலிருந்து மேலூர் வந்து 10 நாட்கள் தங்கியிருந்தபோதும் கண்காணிப்பிலேயே இருந்தார் என்றும், அந்த நேரத்தில் இவரது நடவடிக்கைகளில் தீவிரவாத செயல்கள் ஏதும் இல்லாததால் இவரை அப்போது ஐ.பி. கைது செய்யாமல் விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், பிரான்சில் இவர் எந்த மாதிரியான செயல்களில் ஈடுபட்டார் என்ற விவரம் ஐ.பியிடம் இல்லை. இப்போது பிரான்ஸ் போலீசார் தந்துள்ள தகவல்களின்படி இவரது பின்னணியை ஐ.பியும் மாநில உளவுப் பிரிவினரும் மீண்டும் தோண்ட ஆரம்பித்துள்ளனர்.

இவர் மீது தமிழகத்தில் எந்த வழக்குகளும் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், மெக்கனிக்கல் என்ஜினியரான இவர் அல்-கொய்தா அமைப்புடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாகவும், பாகிஸ்தானில், குறிப்பாக பின்லேடன் கொல்லப்பட்ட அபோடாபாத் நகரில் தீவிரவாத அமைப்பினருடன் இவர் தொடர்பு கொண்டிருந்ததாகவும் பிரான்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் வாலிபர்கள் மூவரை தீவிரவாத பயிற்சிக்காக இவர் பாகிஸ்தானுக்கு அனுப்பியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

இவர் குறித்து முழுமையாக விசாரித்து தகவல் தருமாறு பிரான்ஸ் கோரியுள்ளது. இதையடுத்து ரஷீத்தின் குடும்பத்தைப் பற்றிய முழுமையான தகவல்களைப் போலீஸார் திரட்டி வருகின்றனர். ரஷீத் குடும்பத்தினர் கடைசியாக திருச்சியில் தங்கியிருந்ததும், அவர் தனது பாஸ்போர்ட்டை திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் தான் பெற்றார் என்றும் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் ரஷீதின் செயல்பாடுகளை அறிந்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வேண்டாம் என அவர்கள் பலமுறை எச்சரித்ததால் 10 ஆண்டுகளுக்கு முன்பே அவர்களை விட்டு ரஷீத் விலகிச் சென்றுவிட்டதாகவும், கடைசியாக 3 மாதங்களுக்கு முன்பே அவர் வீட்டுக்கு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் வழக்கு : 30-ந்தேதிக்கு ஒத்திவைப்பு - ஜெயிலில் கனிமொழிக்கு பழம், ஜூஸ் கொடுக்க தடை .

ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன்மனு விசாரணை; 30-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கனிமொழி எம்.பி. கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார்.

கனிமொழி தன் மனுவில், என் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறானவை கலைஞர் டி.வி.யில் நான் வெறும் பங்குதாரர்தான். வேறு எந்த செயல்பாட்டுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.

எனக்கு சி.பி.ஐ. கோர்ட்டில் ஜாமீன் மறுத்தது சரி அல்ல. பணபரிவர்த்தனையில் நான் பலன் பெறவில்லை. எனக்கு பள்ளி செல்லும் வயதில் மகன் உள்ளான். அவனை நான்தான் கவனிக்க வேண்டும். எனவே மனிதாபிமான அடிப்படையில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

டெல்லி ஐகோர்ட்டில் இன்று கனிமொழியின் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பிறகு இந்த விசாரணையை வரும் 30-ந் தேதிக்கு ஐகோர்ட்டு நீதிபதி அஜீத் பரிகோகி ஒத்தி வைத்தார்.

கனிமொழி மனு மீது உரிய பதில் அளிக்க சி.பி. ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார். கனிமொழியிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் முழுவதையும் 30-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்ட காரணத்தால் கனிமொழி இன்னும் ஒரு வாரம் திகார் ஜெயிலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கனிமொழி போலவே, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் நேற்று ஜாமீன் கோரி மனு செய்திருந்தார். அவரது மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனு மீதான விசாரணையும் வரும் 30-ந் தேதிக்கு நீதிபதி அஜீத் ஒத்தி வைத்துள்ளார்.


திகார் ஜெயிலில் கனிமொழிக்கு பழம் - ஜூஸ் கொடுக்க தடை

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை டெல்லி திகார் ஜெயிலுக்கு சென்று கனிமொழி, ஆ.ராசா, சரத்குமார் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது கனிமொழியிடம் ஒரு பாக்கெட் உலர் பழ வகைகள் மற்றும் ஒரு பாட்டில் ஜூஸ் கொடுக்கப்பட்டது.

கருணாநிதி ஜெயிலில் இருந்து புறப்பட்டுச் சென்றதும் கனிமொழி அந்த உலர் பழங்களையும், ஜூஸ் பாட்டிலையும் தன்னுடன் எடுத்துச் செல்ல தயாரானார். ஆனால் ஜெயில் அதிகாரிகள் அதற்கு அனுமதிக்கவில்லை. உலர் பழங்களையும், ஜூசையும் அவர்கள் தங்கள் வசம் எடுத்துக் கொண்டனர். இது குறித்து திகார் ஜெயில் சட்ட அதிகாரி சுனில் குப்தா கூறுகையில்,

சிறை சட்ட விதிகளின் படி, பார்வையாளர்கள் கொடுக்கும் எந்த பொருளையும் கைதிகள் தங்கள் அறைக்கு எடுத்துச் செல்லக் கூடாது. கோர்ட்டு அனுமதி கொடுக்கும் பட்சத்தில் உணவு மட்டும் கொண்டு செல்லலாம் என்றார். அவர் மேலும் கூறுகையில், கனிமொழி விஷயத்தில், அவரை சந்திக்க வரும் பார்வையாளர்கள் கொடுக்கும் உணவை கனிமொழி எடுத்துச் செல்லலாம் என்று கோர்ட்டு எந்த சிறப்பு அனுமதியும் கொடுக்க வில்லை.

எனவே கனிமொழி பழம், ஜூஸ் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றார். திகார் ஜெயில் டைரக்டர் ஜெனரல் நீரஜ்குமார் கூறு கையில், ஜெயிலுக்குள் யாரும் வி.ஐ.பி. அல்ல. வி.ஐ.பி.க்கள் கைதிகளாக வரும் போது கோர்ட்டு அனுமதி இல்லாமல் எந்தவித சலுகையும் கொடுக்க மாட்டோம் என்றார். முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவுக்கு வாரத்துக்கு 2 நாட்கள் வீட்டு உணவை கொடுக்கலாம் என்று கோர்ட்டு அனுமதி கொடுத்துள்ளது. அதுவும் கறி மற்றும் பழ வகைகள் இல்லாமல் கொடுக்க உத்தர விடப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா நேரில் அஞ்சலி - படங்கள்.

சாலை விபத்தில் உயிரிழந்த அமைச்சர் மரியம் பிச்சைக்கு, அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா அஞ்சலி செலுத்தினார். தனி விமானம் மூலம் திருச்சி சென்ற ஜெயலலிதா, அங்கிருந்து கார் மூலம் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மரியம் பிச்சையின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு ஜெயலலிதா ஆறுதல் கூறினார்.












அமைச்சர் மரியம் பிச்சை மரணம் - படங்கள்.



தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் காலமானார். அவருக்கு வயது 60. 16.05.2011 அன்று அமைச்சராக பதவியேற்ற மரியம்பிச்சை, சென்னையில் இன்று எம்எல்வாக பதவியேற்க இருந்தபோது இந்த துயரசம்பவம் நிகழ்ந்துள்ளது.


















மூத்த தமிழ்ப் பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி மாரடைப்பால் மரணம்.


தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளரும், திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் சிந்தனையாளருமான எழுத்தாளர் சின்னக்குத்தூசி எனப்படும் தியாகராஜன் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார்.

77 வயதான சின்னக்குத்தூசி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நலன் குன்றியிருந்த நிலையிலும் கூட அவர் தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னக்குத்தூசியின் உடல் நலம் குறித்த விசாரிக்க திமுக தலைவர் கருணாநிதியும் நேரில் வந்து விசாரித்து விட்டுச் சென்றிருந்தார். இதேபோல பல்வேறு தலைவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்களும் மருத்துவமனைக்குச் சென்று சின்னக் குத்தூசியின் உடல் நலம் விசாரித்தனர்.

மறைந்த சின்னக்குத்தூசியை கடந்த 15 ஆண்டுகளாக நக்கீரன் ஆசிரியர் கோபால் சிறந்த முறையில் கவனித்து வந்தார். சின்னக் குத்தூசியின் உடல் நலம் பாதிக்கப்பட்டபோதும் கூட அவர்தான் மருத்துவமனையில் சேர்த்து முழு சிகிச்சைகளையும் பார்த்து வந்தார்.

சின்னக்குத்தூசி மறைவு : மு.க.ஸ்டாலின் அஞ்சலி















மறைந்த சின்னக் குத்தூசியின் உடல் ராயப்பேட்டையில் உள்ள நக்கீரன் பத்திரிக்கை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

2014-ம் ஆண்டில் தனித்து ஆட்சி அமைக்க பிரியங்கா அரசியலில் நுழைய வேண்டும்.

2014-ம் ஆண்டில் தனித்து ஆட்சி அமைக்க பிரியங்கா அரசியலில் நுழைய வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் வசந்த்சாத்தே வலியுறுத்தல்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி 2 ஆண்டு முடிந்து 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிலையில் 2014-ம் ஆண்டில் காங்கிரஸ் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்க பிரியங்கா தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான வசந்த்சாத்தே வலியுறுத்தி உள்ளார்.

86 வயதான அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் முதல் குடும்பத்தை சேர்ந்த சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருடன் பிரியங்காவும் இனி வரும் காலங்களில் மக்களுடன் தீவிர தொடர்பு ஏற்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்.

சோனியா, ராகுல், பிரியங்கா நாடு முழுவதும் சென்றால் காங்கிரஸ் மறுமலர்ச்சியடைந்து ஒரு பெரும் சக்தியாக மாறும். சோனியாவுக்கு அடுத்தப்படியாக மக்களிடையே பிரியங்காவுக்கு ஆதரவு அதிகமாக உள்ளது.

ஆனால் அவர் தனது சகோதரர் ராகுல்காந்தி ஒதுக்கப்பட்டு விடுவாரோ என்று கருதி தீவிர அரசியலுக்கு வருவதில்லை. கூட்டணி ஆட்சி என்பது பொருந்த வில்லை. இது காங்கிரசுக்கு அவப்பெயரையே தருகிறது.

மாநில கட்சிகள் வளர்ந்து வருவது காங்கிரஸ் உள்பட தேசிய கட்சிகளுக்கு பின்னடைவாகும். எனவே கூட்டணி ஆட்சி என்று இல்லாமல் காங்கிரஸ் தனித்து வென்றிடும் நிலை வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எகிப்தில் போலீஸ் அதிகாரிக்கு மரண தண்டனை : போராட்டத்தின் போது மக்களை சுட்டு கொன்றவர்.


எகிப்தில் போலீஸ் அதிகாரிக்கு  மரண தண்டனை: போராட்டத்தின் போது மக்களை சுட்டு கொன்றவர்

எகிப்தில் போராட்டத்தின்போது பொதுமக்களை சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எகிப்தில், பொதுமக்கள், போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அதிபர் பதவியில் இருந்து முபாரக் விலகினார். அவரும், அவரது 2 மகன்களும் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தின் போது போலீசார் மற்றும் ராணுவத்தினரால் சுமார் 800 பேர் கொல்லப்பட்டனர். தற்போது, அங்கு ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. போராட்டத்தின் போது, ஆயுதமின்றி நிராயுதபானியாக நின்ற பொது மக்களை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் மீது ராணுவ ஆட்சி யாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தின் போது பொது மக்களை சுட்டு கொன்ற போலீஸ் அதிகாரி மொகமத் இப்ராகிம் ஆப்டெல் மோனம் என்பவருக்கு ராணு கோர்ட்டு மரண தண்டனை விதித்துள்ளது. இவர் சுட் டதில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

15 பேர் காயம் அடைந்துள்ளனர். அதற்காகதான் அவருக்கு இந்த தண்டனை வழங்கப் பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது இவர் கோர்ட்டில் நேரில் ஆஜராகவில்லை. அவர் கண்டு பிடிக்கப்பட்டாலோ அல்லது நேரில் ஆஜரானாலோ இந்த தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யலாம். அப்போது இந்த வழக்கு விசாரணை மீண்டும் நடத்தப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் லஞ்ச ஊழல் மற்றும் பொதுமக்களை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டதற்காக முன்னாள் மந்திரி ஹபீப் எல்-அட்லிக்கு 12 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்தில் அகால மரணம் - ஜெயலலிதா அனுதாபம்.


தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள மரியம் பிச்சை, இன்று காலை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

சமீபத்தில் பதவியேற்ற முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் என்.மரியம் பிச்சை. திருச்சி மேற்குத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேருவை வீழ்த்தியதால் இவரை பதவி தேடி வந்தது.

இன்று எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா சட்டசபையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மரியம் பிச்சை, காலையிலேயே தயாராகி விட்டார்.

பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை

காலையில் ஒத்தகடையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். ஏராளமான அதிமுகவினர் இதில் பங்கேற்றனர்.

அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்ட பின்னர் அப்படியே சென்னைக்குக் கிளம்பினார்.

அமைச்சருடன் அவரது நண்பர் கார்த்திகேயன், உதவியாளர் வெங்கடேசன் உள்ளிட்ட சிலரும் உடன் இருந்தனர்.



இவர்களது கார், பெரம்பலூர் அருகே பாடாலூர் என்ற இடத்தில் வந்தபோது முன்னால் போய்க் கொண்டிருந்த டிப்பர் லாரியை முந்த முயன்றதாக தெரிகிறது. அப்போது திடீரென அந்த டிப்பர் லாரி வலது புறமாக திரும்பியுள்ளது.

இதை எதிர்பாராததால், கார், டிப்பர் லாரி மீது பலமாக மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து போனார் மரியம் பிச்சை. அவருடன் இருந்தவர்களில் 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. ஆனால் டிரைவர் ஆனந்தனுக்கு ஒரு காயமும் ஏற்படவில்லை. அவர் அப்படியே உயிர் தப்பினார்.

வழியில் வந்த அமைச்சர் சிவபதி உதவினார்

இந்த நிலையில் அந்த சாலையில் சென்னையை நோக்கி விளையாட்டுத் துறை அமைச்சர் சிவபதி வேறு ஒரு காரில் வந்து கொண்டிருந்தார். விபத்து நடந்ததைப் பார்த்த அவர் காரிலிருந்து இறங்கி மரியம் பிச்சையின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப உதவினார். பின்னர் அவரும் திருச்சி திரும்பிச் சென்றார்.

விபத்தில் மரியம் பிச்சை இறந்த தகவல் பரவியதும் திருச்சியில் கடைகள் அடைக்கப்பட்டன. அதிமுகவினர் அரசு மருத்துவமனையில் குவி்ந்தனர். அதிமுக கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன.

முதல் முறையாக பதவிக்கு வந்தவர்

மரியம் பிச்சை முதல் முறையாக எம்.எல்.ஏ. தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர். முதல் முறையிலேயே அவர் அமைச்சர் பதவிக்கும் உயர்ந்தவர்.

மரியம்பிச்சை திருச்சி சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்தவர். பி.ஏ. வரலாறு படித்துள்ளார். இவருக்கு பாத்திமாகனி என்ற மனைவியும், ஆசிக் மீரா, ராஜ்முகமது, அமீர்முகமது என்ற 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

60 வயதான மரியம் பிச்சை ஆரம்பத்தில் திரைப்பட விநியோகஸ்தராக இருந்தவர். அரசுக்குச் சொந்தமான கலைவாணர் அரங்கத்தை குத்தகைக்கு எடுத்து மரியம் தியேட்டர் என்ற பெயரில்நடத்தி வந்தார்.

திருச்சி மாநகர அதிமுக அமைப்பாளராக செயல்பட்ட இவர் 27வது வார்டு கவுன்சிலராக இருந்தார். தேர்தலில் நிற்பதற்காக அப்பதவியை ராஜினாமா செய்து விட்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார்.

பாலக்கரையில் உடல் அடக்கம்

அமைச்சர் மரியம் பிச்சையின் உடல் இன்று மாலை பாலக்கரை பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்படுகிறது.



முதல் - அமைச்சர் ஜெயலலிதா அனுதாபம்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

திருச்சி மாநகர் மாவட்ட கழக முன்னாள் செயலாளரும், சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான அன்புச்சகோதரர் மரியம்பிச்சை இன்று காலை எதிர்பாராத விதமாக நடைபெற்ற சாலை விபத்தில் அகால மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன்.

கழகத்தின் மீதும், கழகத்தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு ஆரம்ப காலம் முதல் கழகப்பணிகளில் ஈடுபட்டு வந்த அன்புச்சகோதரர் மரியம்பிச்சை, பொன்மலை பகுதிக் கழக செயலாளராகவும், அரியமங்கலம் மண்டல குழு தலைவராகவும், மூன்று முறை திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினராகவும் திறம்பட பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆற்றல் படைத்த கழகச் செயல்வீரர் மரியம்பிச்சையின் இழப்பு ஈடுசெய்ய முடியாது. அன்புச் சகோதரர் மரியம்பிச்சையை இழந்து ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது மனைவி மற்றும் குடும் பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனு தாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


‘’விடுதலை’’க்கு தடையா? : ஜெயலலிதாவுக்கு வீரமணி கண்டனம்.


திராவிட இயக்கப் போர் வாளான “விடுதலை” நாள் ஏட்டை ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றைக்கே அவசர அவசரமாக ஆணை பிறப்பித்து அரசு நூலகங்களில் இடம் பெறுவதற்குத் தடை விதிக்கப்பட்டதைக் குறிப்பிட்டு “விடுதலை” ஆசிரியர் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்,

’’தமிழர்களின் “கெசட்” என்றால் அது “விடுதலை” என்பது சுவர் எழுத்தாகும்.

நம் ஆயுதம் “விடுதலை” என்று சுருக்கமாகச் சொன்னார் அதன் உரிமையாளரான தந்தை பெரியார். தமிழன் வீடு என்பதற்கு அடையாளம் “விடுதலை” என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

“ஒரு காலத்தில் நீ உன்னத நிலையில் இருந்தாய்; இந்நாட்டு ஆட்சி உன்னுடையதாய் இருந்தது. ஆனால், இன்று! நீ ஆண்டியாய்க் கிடக்கிறாய். வீரனாய் விறல் வேந்தனாய் இருந்த நீ கோழையாய் பூனையைக் கண்டஞ்சும் பேதையாகிக் கிடக்கிறாய். சிம்மாசனத்தில் சிறப்போடு இருந்தநீ, இன்று செங்கை ஏந்திக் சேவடி காத்து நிற்கிறாயே! இப்படி நீ ஆனதன் அடிப்படையை உணரவில்லையே! என்று கூறி விளக்கமும், விழிப்பும் உண்டாக்கி வருகின்றது ‘விடுதலை’.”

“இவ்வாறு செய்வது மாபெரும் குற்றம் என்று மக்கள் சார்பில் அரசியலை நடத்தும் சர்க்கார் கூறுகின்றது. ஜாமீன் கேட்கின்றது. இது நேர்மையா?” (திராவிட நாடு 27.6.1948) என்று “விடுதலை” சார்பில் நின்று விவேகக் குண்டுகளை வீசினார் அண்ணா.

தந்தை பெரியார் அவர்களின் அறிக்கைகளும், தலையங்கங்களும், பெட்டிச் செய்திகளும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் மட்டுமல்ல;
நாடாளுமன்றத்திலும்கூட பெரும் புயல்களைக் கிளம்பியதுண்டு.

1939ஆம் ஆண்டிலேயே ஈழத் தமிழரைப்பற்றி எழுதியது “விடுதலை”; இந்தி எதிர்ப்புப் போரில் இணையற்ற தளபதியாகக் களத்தில் நின்று வெற்றி வாகைசூடிய விவேக சிந்தாமணி விடுதலை.

குலக்கல்வித் திட்டத்தை ஓட ஓட விரட்டியடித்து, ஆச்சாரியாரை ஆட்சியை விட்டு அகலச் செய்து, கர்ம வீரர் கல்வி வள்ளல் காமராசரை அரியாசனத்தில் அமர வைத்ததில் “விடுதலை”யின் பங்கு என்ன என்பதை வரலாறு வாழ்நாள் எல்லாம் பேசிக் கொண்டே இருக்கும்.

சமூக நீதிக்களத்தில் அதன் பங்களிப்பு சாதாரணமானதா? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வருவதற்காக முழு மூச்சாகப் பாடுபட்ட பேராயுதம் எது? “விடுதலை” தானே? 31 (சி) சட்டத்துக்குக் கருத்துரு கொடுத்தது “விடுதலை”யே!

ஏன்? இன்றைய முதல் அமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் 31(சி) சட்டத்தினைக் கொண்டு வந்து 69 சதவிகிதம் இடஒதுக்கீட்டைக் காப்பாற்றியதற்கு கருத்துரு கொடுத்ததும் “விடுதலை”யன்றோ!

ஆட்சிகள் போகலாம் - வரலாம்; அதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடந்து கொள்ளத் தேவையில்லை.

மே.16ஆம் தேதி, முதல் அமைச்சராக செல்வி ஜெயலலிதா பதவி ஏற்கிறார் என்றால் அவசர அவசரமாக அன்றைய தினமே அரசு நூலகங்களில் “விடுதலை” ஏட்டை நிறுத்தும் ஆணை பிறப்பிக்கப்படுகிறது என்றால் இதன் பொருள் என்ன?

2012 மார்ச்சு வரை அரசு நூலகங்களில் “விடுதலை” இடம் பெறுவதற்கான அரசு ஆணை ஏற்கெனவே இருக்கும் நிலையில், திடீரென்று அந்த ஆணையை ரத்து செய்ய வேண்டிய அவசியம் - அவசரம் ஏன்? ஏன்?

மாறுபட்ட கருத்துகள் - விளக்கங்கள் கூடவே கூடாது என்று நினைப்பது ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு உகந்ததுதானா? ‘விடுதலை’யைப் பொறுத்தவரையில் ஆதரிக்க வேண்டியதை ஆதரித்தும், எதிர்க்க வேண்டியதை எதிர்த்தும் நடைபோடும் பகுத்தறிவு ஏடு.

பகுத்தறிவு கொள்கையோடு உலகிலேயே வீரநடை போடும் ஒரே ஏடு “விடுதலை”யே! இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் 51(ஏ)வில் கண்டுள்ள விஞ்ஞானம், சீர்திருத்த மனப்பான்மையை அன்றாடம் வளர்க்கும் ஒரே ஏடும் விடுதலையே! இதற்காக திராவிட இயக்கங்கள் பெருமைப்பட வேண்டாமா?

அரசு என்பது அனைத்து மக்களுக்கும் கருத்துரிமை என்ற அடிப்படைக் கோட்பாடு கொண்டதல்லவா!

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், நான் எப்பொழுதும் செயல்படுவதில்லை என்று கூறும் முதல் அமைச்சர் திடீரென்று “விடுதலை”யை நிறுத்தியது எந்த அடிப்படையில்? அல்லது அவர் அறியாமல் “அதி விசுவாசிகளான’’ அதிகாரிகளின் வேலையா இது?

பெண்கள் உரிமைக்காக வாழ்நாள் எல்லாம் குரல் கொடுப்பதை குருதியோட்டமாகக் கொண்ட “விடுதலை” ஏடு பெண் ஒருவர் முதல் அமைச்சராக இருந்த ஒரு கால கட்டத்தில் அரசு நூலகங்களுக்குச் செல்லாமல் நிறுத்தப்பட்டது என்ற பழியைச் சுமக்கலாமா?

அதிமுக அரசின் இந்தச் செயல்பாடு - காலா காலத்துக்கும் குற்றச் செயல் என்று பேசப்படாதா?

எப்படிப்பட்ட “விடுதலை?” தந்தை பெரியார் அவர்களின் போராயுதம் மட்டுமல்ல, அறிஞர் அண்ணா, டி.ஏ.வி. நாதன், பண்டித எ. முத்துசாமிப்பிள்ளை, அ. பொன்னம்பலனார், சாமி சிதம்பரனார், குத்தூசி குருசாமி, அன்னை மணியம்மையார் போன்றவர்களை ஆசிரியர்களாகக் கொண்ட அரும் பெரும் வரலாற்றுப் பெருமைக்குரிய ஏடாயிற்றே!

அண்ணாவின் பெயரையும் “திராவிட” என்ற இன அடையாளத்தையும் கொண்ட ஒரு கட்சி ஆட்சி நடத்தும் ஒரு கால கட்டத்தில், திராவிட இயக்கத்தின் ஆணிவேரான - அதன் தாய் என்று சொல்லத்தக்கதான “விடுதலை” ஏட்டைப் புறக்கணிக்கும் வகையில் ஆணை பிறப்பது வரலாற்றுக் குற்றம் ஆகாதா?

புதிய புதிய சட்டங்கள் உருவானதற்கும், தமிழர்களைப் பாதிக்கச் செய்யும் சட்டங்கள் பின் வாங்கப்படுவதற்கும், புதிய புதிய திட்டங்கள் கருக் கொள்வதற்கும், பிற்போக்குத்தனமான திட்டங்கள் குதிகால் பிடரியில் இடிபட ஓட்டம் பிடிப்பதற்கும் காரணமாக இருந்தது ‘விடுதலை’ அல்லவா! ‘விடுதலை’ வெறும் காகிதமல்ல - தமிழர்களைப் பழைய நிலையிலிருந்து விடுதலை செய்த வீரவாள்! - போர் வாள்!!

கடலூர், மதுரை சிறைகளில் “விடுதலை”க்குத் தடை போடப்பட்டது - சிறை அதிகாரிகளால்; அந்த நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் “ரிட்” மனு ஒன்றைத் தாக்கல் செய்தோம். உள்துறை தனிச் செயலாளர் அந்தத் தடை ஆணையை விலக்கிக் கொண்டதால் (27.11.1987) வழக்கு விசாரணை தேவையில்லை என்று நீதியரசர் சத்யதேவ் தீர்ப்பு அளித்தது உண்டே!
பழியைத் தேடிக் கொள்ள வேண்டாம்!

1935இல் தொடங்கப்பட்டு, பவள விழாவும் கண்ட திராவிட இயக்க மூச்சுக் காற்றான “விடுதலை” ஏட்டை நூலகங்களில் நீக்கிய பழியை முதல் அமைச்சர் ஏற்க வேண்டாம் என்பது நமது வேண்டுகோள்.

நெருக்கடி நிலை என்னும் நெருப்பாற்றை எல்லாம் நீந்திக் கரை சேர்ந்த வரலாறு “விடுதலை”க்கு உண்டு; இப்பொழுது நடப்பது நெருக்கடி நிலை ஆட்சியல்லவே!
முதல் அமைச்சர் பரிசீலிக்கட்டும்!

முதல் அமைச்சர் அவர்கள் நிதானமாகக் கருத்து செலுத்தி, நல்லது நடக்க ஆவன செய்வார் என்று எதிர்பார்க்கிறோம்.

கழகத் தோழர்களே, தமிழ் இன உணர்வாளர்களே விடுதலை சந்தாக்களைக் குவியுங்கள்! பணிகளை உடனே துவக்குங்கள்!!’’ என்று தெரிவித்துள்ளார்.

சமச்சீர்கல்வித் திட்டம் : மார்க்சிஸ்ட் வேண்டுகோள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமலாக்க வேண்டும் என மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஜனநாயக இயக்கங்கள் நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வந்துள்ளனர். இப்பின்னணியில்தான், 2010-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சமச்சீர்கல்வியை ஏற்றுக்கொண்டு முதல் கட்டமாக முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு புதிய பொதுப்பாடத்திட்டத்தை உருவாக்கி அமல்படுத்தியது.

இந்நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசு, சமச்சீர்கல்வி அமலாக்கத்தை ஏற்றுக் கொள்வதாகவும், கூடவே கல்வித் தரத்தையும் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி அதற்காக வல்லுனர்குழு அமைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்தக் கல்வியாண்டில் சமச்சீர்கல்வி முறையை நிறுத்தி வைப்பதாகவும் பழைய பாடப்புத்தகங்களையே பின்பற்ற வேண்டுமெனவும் இப்பின்னணியில் பாடப்புத்தகங்கள் அச்சிட வேண்டியிருப்பதால் பள்ளிகள் திறக்கப்படுவதை ஜூன் 15-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்திருப்பதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கல்வித்தரத்தை உயர்த்துவதும் பாடப்புத்தகத்தில் உள்ள குறைபாடுகளைக் களைவதும் வரவேற்கத்தக்கவையே.

ஆனால் இதற்காக சமச்சீர் கல்வி முறையை இந்த ஆண்டு நிறுத்தி வைத்திருப்பதும் ரூ. 200 கோடிக்கு மேல் செலவிட்டு அச்சிடப்பட்டுள்ள பாடப்புத்தகங்கள் முழுமையாகக் கைவிடப்படுவதும் மாணவர்கள் மததியில் குழப்பத்தையும், ஆசிரியர்கள்-கல்வியாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே சமச்சீர் கல்வி முறையை இந்த ஆண்டும் அமலாக்கிக் கொண்டே கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான பணிகளை நிறைவேற்றுமாறும், பாடப்புத்தகங்களில் உள்ள குறைபாடுகளைக் களையும் வகையில் சில பாடங்களை நீக்கியோ அல்லது பிழைதிருத்தம் செய்தோ அரசு உத்தரவு மூலம் சரி செய்யுமாறும் வேண்டுகிறோம்.

மேலும், தனியார் கல்விக் கட்டணக் கொள்ளையிலிருந்து மாணவர்களையும், பெற்றோர்களையும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

உயிர் தப்பிய அமைச்சர் சிவபதி.


உயிர் தப்பிய அமைச்சர் சிவபதி

திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்றுகாலை 6.30 மணிக்கு நடந்தது. இதில் அமைச்சர்கள் மரியம்பிச்சை, சிவபதி ஆகியோர் பங்கேற்று பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அதன்பிறகு சென்னையில் நடைபெறும் எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்புவிழாவில் பங்கேற்பதற்காக தனித்தனி காரில் புறப்பட்டனர். முதலில் சென்ற அமைச்சர் மரியம்பிச்சையின் கார் பாடாலூர் அருகே லாரி மீது மோதி விபத்தில் சிக்கியதில் மரியம்பிச்சை சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.

பின்னால் தனிக்காரில் வந்ததால் அமைச்சர் சிவபதி விபத்தில் இருந்து தப்பினார். விபத்து நடந்த தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்த அவர் உடனடியாக மீட்பு பணியை முடுக்கிவிட்டார்.

மரியம்பிச்சையின் உடலை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார். அவரும் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பிரேத பரிசோதனை விரைந்து நடைபெற நடவடிக்கை எடுத்தார். அங்கு திரண்டு கண்ணீர் விட்ட அ.தி.மு.க.வினருக்கு அமைச்சர் சிவபதி ஆறுதல் கூறினார்.

அமைச்சர் காரில் இருந்த 6 பேர் உயிர் தப்பினர்
.

அமைச்சர் மரியம்பிச்சை காரில் டிரைவர் ஆனந்த் அமைச்சரின் நேர்முக உதவியாளர் மகேஷ்வரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் முன்னாள் வட்ட செயலாளர் கார்த்திகேயன், ஆயில்மில் சீனிவாசன், வெங்கடேசன், சரவணன் ஆகியோர் இருந்தனர்.
விபத்தில் அமைச்சர் மரியம்பிச்சை சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 6 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மகேஷ்வரன், கார்த்திகேயன், வெங்கடேசன் ஆகியோர் லேசான காயத்துடன் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்தது எப்படி?

மரியம்பிச்சையின் கார் டிரைவரை விசாரணைக்காக பாடாலூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சென்னை முகப்பேறு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் ஆனந்த்(35) என தெரிய வந்தது.

போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் டிரைவர் கூறி இருப்பதாவது:-

அமைச்சர் மரியம்பிச்சையின் கார் இன்று காலை 7 மணிக்கு பாடாலூர் அருகே பெருமாள்மலை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் இடதுபுறமாக ஒரு கண்டெய்னர் லாரி சென்றது. இதனால் லாரியை முந்தி செல்வதற்காக ஹாரன் அடித்தேன். இதில் கண்டெய்னர் லாரி டிரைவர், லாரியை இடது புறமாக திருப்புவதற்கு பதிலாக வலது புறமாக திருப்பினார்.

இதனால் கார், எதிர்பாராத விதமாக கண்டெய்னர் லாரியின் பின்னால் மோதியது. இதில் முன்பகுதியில் உட்கார்ந்திருந்த அமைச்சர் மரியம்பிச்சை இருக்கை யிலேயே இறந்தார். விபத்தை கண்டதும், கண்டெய்னர் லாரி டிரைவர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்று விட்டார்.

இவ்வாறு டிரைவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

திகார் சிறையில் கனிமொழியுடன் கருணாநிதி சந்திப்பு.

திகார் சிறையில் கனிமொழியுடன் கருணாநிதி சந்திப்பு


2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியை சந்திக்க டில்லி சென்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது மகள் கனிமொழியை டில்லி திகார் சிறையில் இன்று மாலை நேரில் சந்தித்துப் பேசினார்.

கருணாநிதியுடன் அவரது மனைவி ராசாத்தி அம்மாள், கனிமொழியின் கணவர் அரவிந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

கனிமொழியுடன் சிறிது நேரம் கருணாநிதி பேசிக் கொண்டிருந்தார். பின்னர், அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.