Friday, June 17, 2011

ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளிடம் நூதன முறையில் நகைகள், பணம் பறிப்பு .

ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளிடம் நூதன முறையில் பணம் பறிப்பு: நகைகள்- பொருட்களை பொதுமக்கள் இழக்கும் பரிதாபம்

சேலம் மாவட்டம் ஏற்காட்டின் அழகை ரசிக்க தினமும் சுற்றுலா பயணிகள் திரளாக வந்து செல்கிறார்கள். கடந்த மே மாதம் கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சி நடந்தது. இதில் பல ஆயிரம்பேர் கலந்து கொண்டு இயற்கை அழகை ரசித்தனர்.

தற்போது சீசன் முடிந்துவிட்ட நிலையிலும் சனி, ஞாயிறு நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கிறார்கள். சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நேரத்தில் ஏற்காட்டில் 10 பேர் கும்பல் ஒன்று சூதாட்டம் நடத்தி பணம், நகைகளை பறித்து வருகிறது. இவர்களிடம் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என பலரும் ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள்.

இதுகுறித்து ஏற்காட்டை சேர்ந்த கனகராஜ், ராஜேந்திரன் கூறியதாவது:-

ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நேரத்தில் சிலர் திடீரென வருகிறார்கள். பூங்கா பகுதி, லேடீசீட் பகுதி, பக்கோடா பாயிண்ட் பகுதிகளில் ரோட்டு ஓரம் அமர்ந்து கொள்கிறார்கள்.

கூட்டம் அதிகம் வரும் நேரத்தில் சூதாட்டம் நடத்துகிறார்கள். இந்த சூதாட்டத்தை பார்ப்போர் என்ன கூட்டமாக இருக்கிறது என பார்க்க செல்லும்போது சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் கட்டாயப்படுத்தி அவர்கள் வைத்து இருக்கும் பணம், மற்றும் நகைகளை பறித்து கொள்கிறார்கள்.

உஷாராக இருப்பவர்களை மிரட்டி அனுப்பி விடுகிறார்கள். தாயக்கட்டை, சீட்டாட்டாம் உள்பட பல விளையாட்டுக்களை இவர்கள் நடத்தி இதன் மூலம் பணம் பறிக்கிறார்கள். பணம் இல்லை என்றால் நகையை தாருங்கள் நாங்கள் அடகு வைத்து பணம் பெற்று தருகிறோம் என மிரட்டி நகைகளை பறித்து சென்று விடுகிறார்கள்.

நகை, பணம் இல்லாதவர்களிடம் அவர்கள் வரும் மோட்டார் சைக்கிள் அல்லது மொபட்டுக்களை பறித்து கொள்கிறார்கள். இதை யாரும் தட்டி கேட்டால், அவர்களை தாக்கவும் செய்கிறார்கள்.

இவர்கள் மீது உடனே சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு மயில்வாகனன் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கண்காணித்து கைது செய்ய வேண்டும். இந்த சம்பவம் தொடர்ந்தால் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வராத நிலை ஏற்பட்டாலும் ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் மின்சாரம் திருட்டு.

சென்னை விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் மின்சாரம் திருட்டு: மின்வாரியம் நோட்டீசு

சென்னை விமான நிலையத்திற்கு மின்வாரியத்தில் இருந்து எச்.டி./232 என்ற எண்ணில் இருந்து விமான நிலையத்தின் செயல்பாடுகளுக்கு தேவையான பயன்பாடுகளுக்கு மட்டும் பயன்படுத்த மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.

விமான நிலையத்தின் செயல்பாடுகளுக்கு மட்டுமல்லாமல் வேறு வகைகளுக்கு மின்சாரத்தை பயன்படுத்தியது திடீர் சோதனையில் தெரிய வந்தது.

இதன் மூலம் மின்சார வாரியத்திற்கு ரூ.22 லட்சத்து 4 ஆயிரத்து 591 நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பணத்தை உடனடியாக செலுத்துமாறு இந்திய விமானநிலைய ஆணையத்திற்கு மின்வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டவுடன் விமான நிலைய உயர் அதிகாரிகள் மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து அரசு அலுவலகம் என்பதால் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கோரினர்.

இந்த கோரிக்கையை மின்வாரியம் நிராகரித்து தள்ளுபடி செய்தது. இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய செயல்பாடுகளுக்காக கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பில் இருந்து அங்கு நடைபெறும் கட்டிட பணிக்கு மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது. இது விதிகளின்படி மின் திருட்டாகும். அபராதம் செலுத்த வேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அபராத தொகை கட்டப்படவில்லை. இது குறித்து மின்வாரியம் விரைவில் நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமச்சீர்கல்வியை புறக்கணித்த முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தனியார் பள்ளிகள் மாநாடு .

முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தனியார் பள்ளிகள் மாநாடு சென்னையில் நாளை நடக்கிறது

முதல் - அமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து தனியார் பள்ளிகள் மாநாடு சென்னையில் நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன், மேல்நிலைப்பள்ளிகள் சங்கத்தினர் சார்பாக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனியார் பள்ளிகள் வாழ்வுரிமை மாநாடு நாளை 18-ந்தேதி சனிக்கிழமை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள வித்யோதயா மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது.

மாநாடு குறித்து மாநில பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் கூறியதாவது:-

சமச்சீர் கல்வியை நிறுத்தி தரமான கல்வியை வழங்க முனைப்போடு செயல்படும் முதல் - அமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி - பாராட்டுதலை தெரிவிப்பதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

கல்வி கட்டணத்தை முறைப்படுத்த முத்தரப்பு குழு அமைத்து பெற்றோர்கள், மாணவர்கள், பள்ளி நிர்வாகிகள் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்.

ரவிராஜ பாண்டியன் கமிட்டியின் புதிய கல்வி கட்ட குறைபாடுகளை நீக்க வேண்டும். ரத்து செய்யப்பட்ட பள்ளிகள் அங்கீகாரத்தை உடனே வழங்க வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். நிலம் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

தனியார் பள்ளிகளின் வாழ்வாதார பிரச்சினைகள் பற்றி மாநாட்டில் பேசி முடிவு எடுக்க வேண்டியிருப்பதால் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சாய்பாபா அறையில் 11.56 கோடி ரூபாய், மற்றும் 98 கிலோ தங்கம், 317 கிலோ வெள்ளி கண்டுபிடிப்பு.

சாய்பாபா அறையில் 11.56 கோடி ரூபாய், மற்றும் 98 கிலோ தங்கம், 317 கிலோ வெள்ளி கண்டுபிடிப்பு

புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ மனையில் மார்ச் 28-ந்தேதி அனுமதிக்கப்பட்டார் அப்போது அவரது அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந்தேதி மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்த போது கூட அந்த அறை திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் சுமார் 2 1/2 மாதத்துக்குப் பிறகு சாய்பாபா அறையை திறக்க முடிவு செய்யப்பட்டது.அப்போது குவியல், குவியலாக பணக்கட்டுக்களும், வைரங்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது ,அதனை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் வங்கிக்கு எடுத்துச் சென்றனர் .மேலும் அவற்றின் மதிப்பு எவ்வளவு என்ற விவரத்தை தற்போது அறிவித்துள்ளனர் 11.56 கோடி ரூபாய், மற்றும் 98 கிலோ தங்கம், 317 கிலோ வெள்ளி இருந்தாக தெரிவித்தனர் .

வைரங்களின் மதிப்பு இன்னும் வெளியிடப் படவில்லை.

கலெக்டர் மகள் சேர்ப்பால் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ள அரசு தொடக்கப்பள்ளி.

கலெக்டர் மகள் சேர்ப்பால் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ள    ஈரோடு அரசு தொடக்கப்பள்ளி;    என் மகளுக்கு எந்த சலுகையும் காட்டக்கூடாது என்று கலெக்டர் கண்டிப்பு

ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார் தனது மகள் கோபிகாவை ஏழை பள்ளிகள் படிக்கும் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் சேர்த்தார். கலெக்டரின் இந்த நடவடிக்கையால் தற்போது ஈரோடு மாவட்டத்தில் பல பெற்றோர் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கும் முனைப்புடன் உள்ளனர்.

மேலும் முன் உதாரணமாக திகழ்ந்த கலெக்டருக்கு அடுத்தப்படியாக மற்ற அரசு அதிகாரிகளும் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க ஆர்வத்துடன் உள்ளனர். ஈரோடு குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்பட்டு இருக்கும் தனது மகள் கோபிகாவை மற்ற குழந்தைகளை எப்படி கவனித்து படிக்க வைக்கிறீர்களோ... அப்படிதான் படிக்க வைக்க வேண்டும். வேறு எந்த சிறப்பு சலுகையும் காட்டக் கூடாது என்றும் கலெக்டர் ஆனந்தகுமார் பள்ளி நிர்வாகத்தினரிடம் கூறி உள்ளார்.

கலெக்டரின் குழந்தை குமலன் குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்பட்டு இருப்பதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி அதிகாரிகளின் பார்வையும் குமலன்குட்டை தொடக்கப்பள்ளியிலேயே பதிந்துள்ளது.

நேற்று அப்பள்ளிக்கு ஈரோடு பஞ்சாயத்து யூனியன் அலுவலர் வகிதா நேரில் வந்து, பள்ளியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுத்தமான தரமான சமையல் செய்ய வேண்டும். காய்-கறிகளை நன்கு சுத்தம் செய்து கழுவி சத்துணவு சமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து தற்போது குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஈரோடு மாவட்டத்தில் ஒரு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது.

கலெக்டர் மகள் நாங்கள் படிக்கும் பள்ளியில் எங்களுடன் படிக்கிறாள்... என்று மற்ற மாணவ- மாணவிகளும் பள்ளி குழந்தைகளும் தங்கள மழலை குரலில் உற்சாகத்துடன் கூறினர்.

பள்ளியின் தலைமை ஆசிரியை ராணி கூறும் போது, கலெக்டரின் மகள் எங்களது பள்ளியில் படிப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. சவாலாகவும் உள்ளது என்று கூறினார்.

மற்ற ஆசிரிய- ஆசிரியைகளும் கலெக்டர் மகள் கோபிகா... இப்போது எங்களது செல்லக்குழந்தை. தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஏன் அதற்கு மேலாக எங்களது கல்வி சொல்லி கொடுக்கும் முறை இருக்கும். பொதுவாக எல்லா அரசு பள்ளிகளிலும் நன்றாகத்தான் சொல்லி கொடுக்கிறார்கள். கலெக்டரின் மகள் எங்கள் பள்ளியில் சேர்க்கப்பட்ட தன் மூலம் அரசு பள்ளிக்கு தனி அந்தஸ்து கிடைத்துள்ளது என்று பெருமையுடன் கூறினர்.

நேற்று கலெக்டர் கோபிகா மகளுக்கு வீட்டில் இருந்து காரில் மதிய உணவு வந்தது. சீருடை கொடுத்த பிறகு கலெக்டர் மகளுக்கும் பள்ளியிலேயே சத்துணவு சாப்பிட கொடுக்கப்படும்.

அண்ட வெளியில் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் நட்சத்திரம்!



புதிதாகத் தோன்றிய ஒரு நட்சத்திரத்திலிருந்து (Baby star) மாபெரும் அளவில் தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கொண்டிருப்பதை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.

உலகின் மாபெரும் ஆறுகளில் ஒன்றான அமேசான் ஆற்றை இந்த நட்சத்திலிருந்து பீய்ச்சி அடிக்கும் நீர் ஒரு வினாடியில் நிறைத்துவிடும், அந்த அளவுக்கு அதில் நீர் உற்பத்தியாகிக் கொண்டுள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

பூமியிலிருந்து 750 ஒளி வருடத்துக்கு அப்பால் உள்ளது இந்த நட்சத்திரம். இதன் வயது 100,000 ஆண்டுகள் தான். அதாவது சூரியனை ஒத்துள்ள இந்த நட்சத்திரம் இன்னும் முழுமையாக உருவாகவில்லை. இப்போது தான் உருவாகிக் கொண்டுள்ளது.

பெர்சூயஸ் நட்சத்திர மண்டலத்தில் (constellation perseus) இந்த நட்சத்திரத்தின் வடக்கு-தெற்கு புலத்திலிருந்து அண்ட வெளியில் இந்த நீர் பீய்ச்சி அடித்துக் கொண்டுள்ளது. மணிக்கு 2 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் இந்த நீர் பாய்ந்து கொண்டுள்ளது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ஹெர்ஸ்செல் ஸ்பேஸ் அப்சர்வேட்டரி (Herschel Space Observatory) என்ற வானியல் தொலைநோக்கி இந்த நட்சத்திரத்தை படம் பிடித்துள்ளது. இந்த நட்சத்திரத்தில் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்து தண்ணீர் அணுக்களை (H2O) உருவாக்குகின்றன. ஆனால், நட்சத்திரத்தில் நிலவும் பயங்கர வெப்பத்தால் அவை 1.8 லட்சம் பாரன்ஹீட் அளவுக்கு சூடாகி வாயுவாக மாறுகின்றன. பின்னர் நட்சத்திரத்திலிந்து இந்த வாயு அதிவேகத்தில் வெளியேறுகிறது. வெளியில் அண்ட வெளியில் நிலவும் மிகக் குளுமையான சூழலால் இந்த வாயு மீண்டும் நீராக மாறி அண்டவெளியில் பல கோடி கி.மீ. தூரத்துக்கு பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது என்கின்றனர் இந்த ஹெர்ஸ்செல் ஸ்பேஸ் அப்சர்வேட்டரியை இயக்கி வரும் நெதர்லாந்து நாட்டின் லெய்டன் பல்கலைக்கழக வானியல் விஞ்ஞானிகள்.

உயிர்கள் உருவாகவும், உயிர்கள் நிலைக்கவும் மிக முக்கிய காரணியான நீர் பூமிக்கு எப்படி வந்தது என்பது குறித்து பல யூகங்கள் உள்ளன. இப்போது, இந்த நட்சத்திரத்தில் நீர் உருவாவது, பூமிக்கு ஏதாவது ஒரு நடத்திரத்திலிருந்து நீர் வந்திருக்கலாமோ என்ற யூகத்தை வலுப்படுத்தியுள்ளது. அந்த நட்சத்திரம் நமது சூரியனாகக் கூட இருக்கலாம் என்கிறார்கள். நட்சத்திரங்கள் உருவாகும்போது நீர் உருவாவது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது சூரியனும் ஒரு நட்சத்திரமே என்ற அடிப்படையில், பூமிக்கு சூரியனிலிருந்து நீர் வந்திருக்கலாம் என்கிறார்கள்.

கல்வி கட்டணக் கொள்ளையை தடுக்க கல்லூரிகள், பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும் : டாக்டர் ராமதாஸ் பேச்சு.

கல்வி கட்டணக் கொள்ளையை தடுக்க கல்லூரிகள், பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ் பேச்சு

தமிழக மாணவர் சங்கம் சார்பில் தனியார் பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் கட்டண உயர்வை கண்டித்து சென்னை மெமோரியல் ஹால் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது :-

கல்விகண் கொடுத்தவர் காமராசர். அந்த காலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்தவர் கள்தான், ஜனாதிபதிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், பல உயரிய பொறுப்புகளில் பதவிக்கு வந்தனர். காமராஜரின் ஆட்சிக்கு பிறகு நர்சரி பள்ளி, மெட்ரிக் குலேசன் பள்ளி எப்படி உருவானது? ஏழைகள் பணக்காரர்களுக்கு என்று கல்வி பிரிக்கப் பட்டது எப்படி? கல்விக் கட்டண கொள்ளைக்கு துணை போனவர்கள் ஆட்சியாளர் களதான்.

இப்போது நடைபெறும் கல்வி கட்டணக் கொள்ளையைத் தடுக்க ஒரே வழி பள்ளி, கல்லூரிகள் அனைத்தையும் அவசர சட்டத்தின் மூலம் அரசுடமை ஆக்க வேண்டும். அரசே அனைவருக்கும் தரமான கல்வியையும், கட்டணம் இல்லாத கல்வியையும் கட்டாய கல்வியையும் கொடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தர்ம சிந்தனையோடு லாப நோக்கம் இல்லாமல் கல்வி நிறுவனங்கள் நடத்துகிறோம் என்று ஒருவர் கூட சொல்ல முடியாது. வருகிற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அரசு அவசர சட்டம் கொண்டு வந்து, பள்ளிகளை அரசுடமை ஆக்க வேண்டும்.

பாட்டாளி மாணவர்கள் சங்கத்தினர் அரசே கல்வி கொடு, அரசே கல்விக் கூடங்களை நடத்து என்ற முழக்கத்தோடு எல்லா மாவட்டங்களிலும், போராட்டம் நடத்துங்கள். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

சாய்பாபா அறையில் வைரம், பண குவியல் ; வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது

சாய்பாபா அறையில் வைரம், பண குவியல்; வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது

புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா கடந்த ஏப்ரல் மாதம் 24-ந்தேதி மரணம் அடைந்தார். உடல் நலக்குறைவு காரணமாக மார்ச் மாதம் 28-ந் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சுமார் ஒரு மாதம் சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.

சாய்பாபா, புட்டபர்த்தி ஆசிரமத்தில் உள்ள யஜுர் மந்திரில் வசித்து வந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மார்ச் 28-ந்தேதி அவரது அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. அவர் மரணம் அடைந்த போது கூட அந்த அறை திறக்கப் படவில்லை.

இந்த நிலையில் சுமார் 2 1/2 மாதத்துக்குப் பிறகு சாய்பாபா அறையை திறக்க முடிவு செய்யப்பட்டது.சாய்பாபா அறையை திறக்கும்போது தங்களையும் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆந்திர மாநில அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் சாய் பாபா அறக்கட்டளை கமிட்டியினர் அதை ஏற்கவில்லை.

நேற்று சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் பி.என்.பகவதி, ரத்னாகர், கிரி, சீனிவாசன் சத்யஜித் ஆகியோர் முன்னிலையில் சாய்பாபா அறை பூஜை நடத்தி திறக்கப்பட்டது. சாய்பாபா அறையின் ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்யப்பட்டது. அப்போது குவியல், குவியலாக பணக்கட்டுக்களும், வைரங்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவற்றின் மதிப்பு பல கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

தங்கம், வைரம் மற்றும் பணத்தை தனித்தனியாக பிரித்து கட்டும் பணிகளில் சாய்பாபா கல்லூரியில் படிக்கும் 15 மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் பணம் எண்ணும் கருவி கொண்டு வந்திருந்தனர். மாணவர்கள் எண்ணி கொடுத்த பணக் கட்டுக்கள், அந்த எந்திரம் மூலம் எண்ணப்பட்டன.

பிறகு நேற்று மாலை அந்த தங்கம், வைரம், பணக் கட்டுக்கள் வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அவற்றின் மதிப்பு எவ்வளவு என்ற விவரத்தை இன்று (வெள்ளி) வெளியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமச்சீர் கல்விக்கான நிபுணர் குழு விவரம்.



கடந்த ஆட்சியில் கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டம் தரமானதாக இல்லை என்று கூறி புதிதாக பதவி ஏற்ற தமிழக அரசு நிறுத்தி வைத்தது. சட்டசபையில் இதற்கான சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி இக்பால் வழக்கை விசாரித்து தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு இடைக்கால தடை விதித்தார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் செய்தது. அதில் ஐகோர்ட்டின் இடைக்கால தடையை நீக்குமாறு கூறியிருந்தது.

அப்பீல் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்பில் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர வேண்டும் என்றும் மற்ற வகுப்புகளில் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துவது பற்றி நிபுணர் குழு ஆய்வு செய்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து ஆராய நிபுணர் குழு இன்று அறிவிக்கப்பட்டது.

நடப்புக் கல்வியாண்டில் 2, 3, 4, 5, 7, 8, 9, 10 வகுப்புகளுக்கு இதை அமல்படுத்துவது குறித்து நிபுணர் குழு அமைத்து ஆராய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் குழுவுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைவராக இருப்பார். இந்தக் குழு இன்று அறிவிக்கப்பட்டது.

குழு விவரம்:

1. குழுத் தலைவர் - தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி
2. தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபீதா
3. தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வசுந்தரா தேவி
4 மத்திய இடைநிலைக்கல்வி வாரிய முன்னாள் இயக்குநர் ஜி.பாபசுப்ரமணியன்
5. சென்னை லேடி ஆண்டாள் மெட்ரிக் பள்ளி முன்னாள் முதல்வர் விஜயலட்சுமி
6. கோபாலபுரம் டிஏவி பள்ளி நிறுவனர் ஜெயதேவ்
7. பத்மா சேஷாத்ரி பள்ளி இயக்குநர் திருமதி ஒய்ஜி பாராத்திசராதி
8. தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவன பேராசிரியர் பி.கே. திரிபாதி
9. பேராசிரியர் அனில் சேத்தி

இந்தக் குழுவினர் 2 வாரங்களுக்குள் தங்களது ஆய்வறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதை ஒரு வாரத்திற்குள் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவரை 1, 6 ஆகிய வகுப்புகளைத் தவிர மற்றவர்களுக்குப் புத்தகம் வைத்து பாடம் நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அறிவித்தபடி கடந்த 15-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளில் மட்டும் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி வகுப்புகள் நடைபெறுகின்றன.

இந்த இரு வகுப்புகளுக்கும் 18 லட்சம் பாடப் புத்தகங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு விட்டன. இந்த பாட புத்தகங்களின் பின்பக்க அட்டையில் செம்மொழி மாநாட்டு சின்னமான திருவள்ளுவர் உருவ படம் மற்றும் இலக்கிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த பக்கத்தை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. 6-ம் வகுப்பு பாடப் புத்தகங்களில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி பற்றிய பாடங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றையும் நீக்கி விட்டு வழங்க முடிவு செய்துள்ளது.

தலைவர்கள் மறந்து போன ஒரு தமிழறிஞர்!



எல்லிசன்! தமிழன் மறந்துபோன ஒரு ஆங்கிலேய தமிழ் அறிஞர்! பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் என்ற தன் ஆங்கில பெயரை தமிழ் ஒலிச் சப்தத்திற்கேற்ப தூய தமிழில் எல்லீசன் என்று மாற்றிக்கொண்ட தமிழ்மொழிக் காதலர்!

தமிழுக்கு அப்படி இவர் என்னதான் செய்தார் என்கிறீர்களா? திருக்குறள் உலகப் பொதுமறை என்று பெரியாரால் போற்றப்படுவதற்கு நூறு வருடங்களுக்கு முன்னதாகவே திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகறியச் செய்த உத்தமர் இந்த எல்லீஸ்! மதராஸ் ஆங்கிலேய அரசாங்கத்தின் வருவாய் வாரியச் செயலாளர் பதவிக்காக இந்தியா வந்த இவர் நிலச்சுங்க அதிகாரி, சென்னை மாவட்ட ஆட்சியர் எனப் பல பதவிகளை வகித்த ஓர் உயர் அதிகாரி. இவரது காலத்தில்தான் சென்னையில் நிலவிய குடிநீர் பஞ்சதைப் போக்க பல கிணறுகள் வெட்டப்பட்டன. இப்போதும் ஏழுகிணறு என சென்னை மக்களால் குறிப்பிடப்படும் கிணறு எல்லிஸால் வெட்டப்பட்டதுதான். தமிழனின் தாகம் போக்கிய இந்த ஆகிலேயனுக்கு தமிழ்மீது தனியா தாகம் உண்டானதில் வியப்பொன்றுமில்லை!

மறைந்துபோன எல்லிஸ் வரலாற்றை மறுபடியும் கண்டறிந்தவர் தாமஸ் டிராவுட்மன். ஒரு பயணத்தின்போது எதேட்சையாக அயர்லாந்தில் இருந்த எல்லிஸின் கையெழுத்துப் பிரதிகளை புரட்டிப்பார்த்த டிராவுட்மன் இது அரிய பொக்கிஷம் என்பதை உணர்ந்தார். உடனே தாமதிக்காமல் தன் ஆய்வைத் தொடர்கிறார். இந்த தாமஸும் ஓர் ஆங்கிலேயர் என்பது கூடுதல் தகவல். தமிழை பற்றி ஆங்கிலேயர்கள் உணர்ந்துகொண்ட அளவுக்கு தமிழர்களே உணரவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை! மக்கள் ஒருபுறம் இருக்கட்டும் அரசாவது உணர்ந்ததா என்றால் இல்லை என்றுதான் நமக்கு பதில் வருகிறது. கால்டுவெல்லுக்கு கொடுக்கப்பட்ட அளவுக்கு எல்லிஸ் கெளரவிக்கப்படவில்லை.

“தமிழ்மொழி, இலக்கியத்தின் மீது காதலார்வம் கொண்ட்டிருந்த எல்லிஸின் புலமை இன்று பெரிதும் மறைக்கப்பட்டுவிட்டது; அதனை மீட்டு, தமிழ் வாசகர்களின் கையில் ஒப்படைக்க வேண்டும் என்பதே என் நெடுநாள் விருப்பம்” என்கிறார் தாமஸ் டிராவுட்மன். இவர் அமெரிக்காவிலுள்ள மிஷிகன் பல்கலையில் பணியாற்றி வரும் மானிடவியல் மற்றும் வரலாற்றுப் பேராசிரியர்.

எல்லிஸின் ஆய்வுகள் குறித்த நன்கு அறிந்த தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கிடாசலபதியிடம் பேசினோம். “தமிழில் செய்யுள் இயற்றும் அளவுக்கு ஆங்கிலேய துரை எல்லீசனுக்கு பயிற்சியிருந்தது. நமசிவாயம் என்ற ஐந்தெழுத்து மந்திரம்பற்றி இவர் ஐந்து பாடல்கள் இயற்றியுள்ளதாக ரா.பி.சேதுப்பிள்ளை குறிப்பிருகிறார். சென்னையில் தம் பொறுப்பிலிருந்த அரசாங்கத் தங்கச் சாலையில் திருவள்ளுவரின் உருவம் பொறித்த நான்கு வாரகம் தங்க நாணயங்களை வார்த்து வெளியிட்டவரும் இவரே. 1994ல் ஐராவதம் மகாதேவன் இலண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருந்த இரு நாணயங்களையும் கல்கத்தாவில் இருந்த இரு நாணயங்களையும் கண்டெடுத்து அதன் ஒளிநகலை முதன்முதலாக வெளியிட்டார்.

எல்லிஸ் தென்னிந்திய மொழிகளையும் பிற இந்திய நாட்டு மொழிகளையும் ஆங்கிலேய நிர்வாக அதிகாரிகளுக்குப் பயிற்றுவிப்பதற்காகப் புனித ஜார்ஜ் கோட்டையில் ஒரு கல்லூரியை 1812ல் நிறுவினார். ’சென்னைக் கல்விச் சங்கம்’ என்று தமிழில் அறியப்பட்ட இக்கல்லூரியே எல்லிஸின் மொழி ஆய்வுகளுக்குக் களமாக விளங்கியது. 1856ல் கால்டுவெல் எழுதி வெளியிட்ட ‘திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் அரிய ஆய்வு நூலுக்கு நாற்பதாண்டுகளுக்கு முன்னரே, 1816ல் ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்ற புலமை மிக்க கருத்தாக்கத்தை கண்டுணர்ந்து உலகுக்கு வெளிப்படுத்தியவர் எல்லிஸ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு முதலான திராவிட மொழிக் குடும்பம் என்றும், சொற்கள் அளவிலான கொள்வினையே சமஸ்கிருதத்துடன் உண்டு என்பதையும் எல்லிஸ்தான் முதலில் நிறுவுகிறார்” என்ற சலபதியிடம் “தன் ஆய்வுகளை எல்லிஸ் ஏன் வெளியிட முயற்சிக்கவில்லை என்றோம்?” மறுபடி தொடர்ந்தார் சலபதி.

“நாற்பது வயது நிறையும் வரை நூல்களை எழுதி வெளியிடுவதில்லை என்ற உறுதிபூண்டிருந்த எல்லிஸ் நாற்பத்தோரு வயதில் திடீரென்று உடல்நிலை சீர்குலைந்து மறைந்துபோகிறார். இதனால் அவரது ஆய்வை மூலையில் முடக்கிவிட்டது. இதை மீண்டும் கண்டெடுத்து நூலாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் ஆங்கிலத்தில் வெளியீடுவதற்கு முன்னதாகவே தமிழாக்க செய்து வெளியிடப்பட்டது. இவ்வளவு சிறப்பு மிக்க நூல் தமிழக அரசு நூலகத்திற்குகூட கொள்முதல் செய்யாமல் தவிர்த்துவிட்டது என்ற செய்தி வருந்த்தக்க ஒன்றாகும். பள்ளிக்கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டம் ஒரு பலனும் கிடைக்கவில்லை” என்றார்.

தாமஸ் டிராவுமன் தனது தமிழ்மொழிபெயர்ப்பு நூலை எழுத்தாளர் தியடோர் பாஸ்கரனுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார். அவருடன் பேசினோம். “டிராவுட்மன் அர்த்தசாஸ்திரம் பற்றி ஆய்வைதான் முதலில் மேற்கொள்கிறார். அதன்மூலம் அர்த்தசாஸ்திரம் கெளடில்யர் என்ற தனியொருவரின் படைப்பல்ல; சில நூற்றாண்டுக்கால இடைவெளியில் பலருடைய பங்களிப்பால் உருவான நூல் அது என்று தன் புள்ளியல் பகுப்பாய்வின் மூலம் நிறுவினார். தற்செயலாக ஏ.எல்.பாஷம் எழுதிய The Wonder that was India என்ற நூலை படிக்கிறார். அதன் பின் டிராவுட்மன் கவனம் இந்தியாவின் மீது விழுந்தது. நாடு சுதந்திரம் அடைந்தப் பிறகு புதிய ஆய்வுகள் நம் சமூகத்தில் நடைபெறவே இல்லை. எல்லோரும் பாடிய பாட்டையே பாடுகிறார்கள். கால்டுவெல் எவ்வளவு முக்கியமான அறிஞரோ அதற்கு சற்றும் குறையாதவர் எல்லிஸ்.மெட்ராஸ் லிட்ரரி சொஸைட்டி உட்பட பல நல்ல துறைகளை சென்னையில் நிறுவியவர். ஆனால் எல்லிஸை யாரும் கண்டு கொள்வதேயில்லை. இதே போலதான் அறிஞர் சுரேஷ்பிள்ளை. வரலாற்று ஆய்வில் மிகப் பெரிய முன்னோடி. அவரையும் யாரும் பேசுவதில்லை. தாமஸ் டிராவுட்மனை எனக்கு 1974ல் இருந்து தெரியும். ’திராவிட உறவுமுறை’ ஆய்விற்காக இந்தியா வந்த போது பழக்கமேற்பட்டு தமிழ்நாட்டிலுள்ள பல வரலாற்று சின்னங்களை காண என்னுடன் பயணித்தார். அவரது ஆய்வை உலகம் அறிந்துகொண்டு எல்லிஸை இன்று கொண்டாடுகிறது. தமிழனுக்காக நடத்தப்பட்ட ஆய்வை தமிழகஅரசுகூட கண்டுகொள்ளாதது துரதிருஷ்டமானதுதான்” என்றார்.

எல்லிஸின் கல்லறையை கண்டறிந்தவர் கல்வெட்டறிஞர் வெ.வேதாசலம். பல்வேறு ஆய்விற்காக நான் சுற்றிய போது இராமநாதபுரத்திலுள்ள ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தில் எல்லிஸின் கல்லறையுடன் கல்வெட்டு ஒன்றைக் கண்டெடுத்தேன். சிதைந்த நிலையில் கிடந்த அக்கல்வெட்டை இப்போது பாதுகாப்பாக மதுரை நாயக்கர் மகால் அருங்காட்சியத்தில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறேன்” என்றார். எல்லிஸின் சில கட்டுரைகளை தமிழுக்கு மறுபடியும் வழங்கியவர் பேரா.மருதநாயகம். எல்லிஸின் பிரதிகளை வெளியிட கொடுத்த பதிப்பகமொன்று எல்லிஸ் ஆய்வை தன் தாயாருக்கு சமர்ப்பணம் செய்த கொடுமையும் நிகழ்ந்துள்ளது.

எவ்வித பிரதிபலனும் பாராமல் உழைத்த எல்லிஸுக்கு இன்று ஒரு படம் கூட இல்லை. சிலை கூட இல்லை. இதைவிட கொடுமை வேரென்ன இருக்கமுடியும்? வாழ்க செம்மொழியான தமிமொழியாம்!

நன்றி - குமுதம்

இலங்கை போர்க்குற்றம் குறித்து ஐ.நா. விசாரணை : இங்கிலாந்து பிரதமர் கேமரூன் வலியுறுத்தல்

இலங்கை போர்க்குற்றம் குறித்து ஐ.நா. விசாரணை: இங்கிலாந்து பிரதமர் கேமரூன் வலியுறுத்தல்

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் நடந்த இறுதிகட்ட போரில் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. அது தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.நா. குழு, `இலங்கையில் போர்க்குற்றம் நடந்துள்ளது' என தெரிவித்தது.

இந்த நிலையில், இறுதிகட்ட போர் காட்சிகளை வீடியோவாக சேனல் 4 என்ற இங்கிலாந்து டி.வி. வெளியிட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் ஓடும் அந்த வீடியோ பதிவில் சிங்கள ராணுவத்தின் காட்டுமிராண்டித் தனமான செயல்களை காட்சிகளாக காண முடிகிறது.

இதனால், பல்வேறு உலக நாடுகளும் இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இங்கிலாந்து வெளியுறவு மந்திரி அலிஸ்டர் பட், `இலங்கை போர்க் குற்றம் குறித்து நியாயமான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்றார்.

இத்தகைய சூழ்நிலையில், இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த லீ ஸ்காட் என்ற எம்.பி, அந்த நாட்டு பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அவர், "இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் மற்றும் போரில் கொடூரமாக கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இதற்கான பணியில் இங்கிலாந்து பிரதமரும் என்னுடன் சேர்ந்து கொள்வாரா?''

என கேட்டார். அவருடைய கேள்விக்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இருந்த பெரும்பாலான எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, பிரதமர் டேவிட் கேமரூன் பதிலளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- இலங்கை போர்க்கள காட்சிகள் அடங்கிய ஆவணப்படத்தை நான் முழுமையாக பார்க்கவில்லை.

ஆனால், அது மிகவும் அதி பயங்கரமானது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இலங்கை போரை இறுதி கட்டத்துக்கு கொண்டு செல்லும் போது, மிகவும் கவலையளிக்கக் கூடிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிய வருகிறது. எனவே, இறுதிக்கட்ட போரின் போது உண்மையில் என்ன நடந்தது என்பதை அடி ஆழம் முதல் முழுமையாக நாம் அறிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக விரிவான விசாரணையை இலங்கை மேற்கொள்ள வேண்டும் என உலகின் மற்ற அரசுகளுடன் இணைந்து இங்கிலாந்து அரசும் வலியுறுத்துகிறது. மேலும், இறுதிகட்ட போரின் போது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக ஐ.நா. விசாரணையும் அவசியம் என்றும் இங்கிலாந்து அரசு வற்புறுத்துகிறது.

அப்போது தான், எதிர் காலங்களில் அதுபோன்று நடைபெறாமல் தடுப்பதற்கு நாம் பாடம் கற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் கேமரூன் தெரிவித்தார்.