Saturday, July 2, 2011

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் அமெரிக்கா நடத்திய உலகளாவிய தாக்குதல்களில் 2.25 லட்சம் பேர் பலி.



2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் உலக அளவில் பல்வேறு நாடுகளில் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அமெரிக்கப் படைகள் இந்த வேட்டைக்காக செய்த செலவுத் தொகை மட்டும் 4.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகம் நடத்திய புள்ளிவிவர சேகரிப்பில் இது தெரிய வந்துள்ளது.

2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இரட்டை கோபுரம் விமானம் மூலம் தகர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா, உலகளாவிய தீவிரவாத வேட்டையைத் தொடங்கியது. ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான், ஏமன் என பல நாடுகளிலும் அமெரிக்கப் படைகள் வேட்டையில் இறங்கின.

இதில் ஈராக், ஆப்கானிஸ்தானில்தான் பெருமளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தின அமெரிக்கப் படைகள். அமெரிக்கப் படைகள் இதுவரை நடத்திய தாக்குதல்களில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக இந்தத் தகவல் தெரிவிக்கிறது.

அமெரிக்கப் படைகளின் தாக்குதலில் சிக்கி 3 லட்சத்து 65 ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் பல்கலைக்கழக தகவல் தெரிவிக்கிறது.

இதில் அமெரிக்க கூட்டுப் படைகளின் தரப்பில் மட்டும் 31 ஆயிரத்து 741 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவருமே ராணுவத்தினர் ஆவர். இவர்களில் 6000 பேர் அமெரிக்கர்கள், 1200 பேர் கூட்டுப் படையினர், 9900 பேர் ஈராக்கியர்கள், 8800 பேர் ஆப்கானிஸ்தானியர்கள், 3500 பேர் பாகிஸ்தானியர்கள். இவர்கள் தவிர அமெரிக்காவுக்காக பாதுகாப்பு குறித்த தகவல்களைத் திரட்டித் தந்தவர்கள் 2300 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அப்பாவி மக்கள்தான் பெருமளவில் உயிரிழந்துள்ளனர். இவர்களின் எண்ணிக்கை மட்டும் 1 லட்சத்து 72 ஆயிரம் பேர் ஆவர். இவர்களில் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் ஈராக்கியர்கள், 35,000 பேர் பாகிஸ்தானியர்கள், 12,000 பேர் ஆப்கானிஸ்தானியர்கள் ஆவர்.

அமெரிக்க மற்றும் கூட்டுப் படையினரிடம் சிக்கி உயிரிழந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை. இருப்பினும் இது 20,000 முதல் 51,000 ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது.

தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 168 பேர் செய்தியாளரக்ள், 266 பேர் மனிதாபிமான பணியாளர்கள் ஆவர்.

அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் சிக்கி இடம் பெயர்ந்து அகதிகளாக உள்ளோரின் எண்ணிக்கை மட்டும் 70.8 லட்சம் பேர் ஆவர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.

அமெரிக்கா நடத்தி வரும் போரினால் ரூ.200 லட்சம் கோடி சேதம் அடைந்துள்ளன. அதில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் தான் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் சுங்கவரி வசூல்மையத்தை புறக்கணித்து தனியாக ரோடு அமைக்க, லாரி உரிமையாளர்கள் சங்கம் முடிவு.

தூத்துக்குடியில் சுங்கவரி வசூல்மையத்தை புறக்கணித்து  தனியாக ரோடு அமைக்க முடிவு:   லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

தூத்துக்குடி - மதுரை இடையே 4வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் தூத்துக்குடி மாநகர பகுதியையொட்டி சுங்கவரி வசூல் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையம் நேற்று முன்தினம் இரவு முதல் செயல்பட தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் லாரி உரிமையாளர்கள் சாலை பணிகள் முழுமையாக முடிவதற்கு முன்பு வரிவசூல் செய்யக்கூடாது, அதே போன்று வரி வசூல்மையம் மாநகருக்கு மிகவும் அருகில் அமைந்து உள்ளது. இதனால் அதனை மாற்ற வேண்டும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதை வலியுறுத்தி நேற்று முன்தினம் இரவு சுங்கவரி வசூல்மையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். லாரிகள் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர்.

இதனால் துறைமுகத்தில் பலகோடி மதிப்பிலான சரக்குகள் தேங்கின. இதைத்தொடர்ந்து நேற்று மாலை லாரி உரிமையாளர் களுடனான பேச்சுவார்த்தை உதவி கலெக்டர் சஜ்ஜன்சிங் ஆர்.சவான் தலைமையில் நடந்தது. இதில் பேசிய சப்-கலெக்டர், லாரி உரிமையாளர்கள் தங்களது கோரிக்கைக்கு கோர்ட்டு மூலம் நடவடிக்கை எடுத்து கொள்ளுமாறு கூறினார்.

இதையடுத்து லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்தில் லாரி உரிமையாளர்களுக்கு சொந்தமான இடம் தூத்துக்குடி சுங்கவரி வசூல் மையம்அருகே உள்ளது. அந்த இடத்தில் தனியாக ரோடு அமைத்து அதன் வழியாக லாரிகள் சென்று வரவும், அதன் வழியாக மற்ற வாகனங்கள் சென்று வர அனுமதிப்பது, சுங்கவரி வசூல் மையத்தை புறக்கணிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் லாரி உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டனர்.இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் லாரிகள் வழக்கம் போல் ஓடத்தொடங்கின.

வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை.



ஒரு நிகழ்வு குறித்து உலகம் அறியும் முன்பே சொல்லும் ஒரு சக்தி வாய்ந்த மலைக் கோவில் குறித்து அறிந்து அதைக் காண ஆவலுடன் சென்றோம்.

சிந்தையை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் அரிது. பஞ்ச பூதங்களின் சக்தியை உணர்ந்து சித்தத்தை அடக்கி செயற்கரியன செய்து வென்றவர்கள் தான் சித்தர்கள். அவ்வகையைச் சேர்ந்தவர்களில் ஒருவரான சிவ வாக்கிய சித்தர் பூஜித்த மலை தான் சிவன்மலை.

எங்கும் வளம் பொங்கும் கொங்கு நாட்டின் சிங்க நகரான காங்கயத்திற்கு அருகில் காங்கயம் - திருப்பூர் நெடுஞ்சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிவன்மலை.

இம்மலை மீது கோவில் கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடந்த பல வருடங்களுக்கு முன்பு, பட்டாலிமலை என்று வழங்கப்பட்டதாகவும், அதன் பின் அங்கு வந்து சித்தர் சிவவாக்கியர் முன்நின்று முயன்று சான்றோர்களின் பெருந்துணையுடன் பக்தர்களின் ஒத்துழைப்பாலும் பல திருப்பணிகள் செய்துள்ளார். அது முதல் இந்த மலை சிவன் மலை என்று பெயர் பெற்றதாம்.

மேலும், அக்காலத்தில் இந்த மலையை சுற்றி பசுக்கள் சூழ்ந்தும் மேய்ந்தும் வர வளம் பெற்றுள்ளது. பசுக்களை சேய் என்று கூறுவது தமிழ் வழக்கில் உள்ளது. இதனால் சிவனின் சேயான குகன் வந்து அமர்ந்து அருள்பாலிப்பதாலும் சேமலை என்று அழைக்கப்பட்டது. கால சுழற்சியில் அது சிவன்மலை என மருவியதாகவும் ஒரு தகவல் உண்டு.

இந்த மலையின் சிறப்பு குறித்து அங்கு சாமி கும்பிட வந்த ஈரோட்டைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் ராஜேஷ் என்பவரிடம் பேச்சு கொடுத்தோம். அவர் நம்மிடம், சிவன்மலை முருகப் பெருமானின் சிறந்த திருத்தலமாகும். இது கொங்கு நாட்டின் புகழ்ப் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள முருகன் சக்தி வாய்ந்த தெய்வமாகும். தான் தெரிவிக்க விரும்புவதை பக்தர்களின் கனவில் வந்து கூறி கட்டளையிட்டு பின் நடப்பதை முன் கூட்டியே தெரிவி்க்கும் அபூர்வ சக்தி கொண்டவர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோயில் பெட்டியில் சொம்பில் தண்ணீர் வைக்க உத்தரவு வந்தது. இதனால் நாட்டில் என்ன நடக்கப் போகின்றது என அது பற்றி அப்போது யாருக்கும் தெரியவில்லை. ஆனால் சில நாட்களிலேய தமிழகத்தில் மக்களின் மனங்களில் மாறாத வடுவை ஏற்படுத்திய பேரழிவு அரக்கன் என்ற சுனாமி வந்து அப்பாவிகள் பலர் உயிரையும் பலிவாங்கிவிட்டது. அப்போது தான் இந்த பெட்டியில் உள்ள பொருளுக்கு மதிப்பு இன்னும் அதிகமானது.

அடுத்து மஞ்சள் வைத்து கோயிலில் பூசை செய்தனர். முன்பு காட்டில் சும்மா கிடந்த மஞ்சள் தங்கத்தின் விலையை விட அதிக அளவுக்கு மார்க்கெட்டில் விற்பனையானது. அப்போது விண்ணை முட்டும் அளவு உயர்ந்த விலை இப்போது வரை பழைய நிலைக்கு திரும்பிவே இல்லை என்றார்.

அடுத்து அங்கிருந்த கரூரைச் சேர்ந்த தேமுதிக முன்னாள் மாவட்டத் தலைவர் விஸ்வநாதன் என்பவர் கூறுகையில், நான் இந்த கோவிலின் மகிமை தெரிந்து அடிக்கடி வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றேன். இங்கு வந்துவிட்டு சென்றாலே ஒரு மாற்றம் நிச்சயம். இந்த கோவிலின் சக்தி ஆபூர்வமானது. முன்பு ஒரு பக்தரின் கனவில் வந்து மண் வைத்து பூசை செய்யச் சொன்னதாம். அது முதல் இந்த பகுதியைச் சுற்றி நிலத்தின் மதிப்பு கண்ணாபிண்ணா என உயர்ந்து வி்ட்டதாம். அவ்வளவு ஏன் தமிழகத்தில் பல இடங்களில் இதே நிலை தான். இப்போது கூட சாமானிய மக்கள் நிலம் வாங்குவது குதிரைக் கொம்பாக உள்ளது.

அதே போன்று மற்றொரு பக்தரின் கனவில் வந்து 500 ரூபாய் பணம் வைக்கச் சொல்லி உத்தரவு வந்ததாம். அதன் பின்பு மக்கள் மத்தியில் 10, 20, 50 ரூபாய்க்கு மதிப்பு குறைந்து போனது. ஏன் 100 ரூபாய்க்கு கூட மதிப்பு குறைந்து, தற்போது பலரிடம் ரூ. 500 சரளமாக புழக்கத்தில் உள்ளது. இது தான் முருகனின் அருள் என பெருமை பொங்கச் சொன்னார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு பக்தரின் கனவில் வந்து அரைப் பவுன் தங்கத்தை வைத்து பூசை செய்யச் சொன்னதாம்.

சாமிக்கு கூட தங்கத்தின் மீது காதலா என பலரும் வியந்து கிடக்க, அடுத்த சில நாட்களிலேயே அதன் உண்மை நிலவரம் உலகிற்கு தெரிய வர ஆரம்பித்தது.

அது என்ன வென்றால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்ததே அப்போது தான். பெண்ணைப் பெற்றவர்கள் முருகா இது என்ன சோதனை என குரலை உயர்த்தியவர்கள் இப்போது வரை முருகா நீ தான் எங்க பெண்ணை கரை சேர்க்க வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.

இது இப்படி என்றால் மற்றொரு பக்தரின் கனவில் வந்த முருகன், தேங்காயை வைக்கச் சொல்லி உள்ளார். அது போலவே தேங்காயை வைத்து பூசையும் நடைபெற்றது. அப்போது தான் தேங்காய் விலையும் கூட அதிகரித்தது. கொப்பறை தேங்காய்க்கும் ஒரு மவுசு வந்து அது கொப்பறை தேங்காய் ஊழல் வரை சென்று நின்றது என்கின்றனர்.

தற்போது திருப்பூரைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்ற பக்தரின் கனவில் தோன்றி பச்சை அரிசி வைக்கச் சொல்லி உத்தரவு வந்ததாம். அதன்படியே அந்த பெட்டியில் தற்போது பச்சை அரிசி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதைச் சொன்ன கோடீஸ்வரன் என்ற பக்தரின் பெயரும், அவர் கோயிலில் வந்து சொன்ன தேதியும் மறவாமல் குறிப்பிட்டுள்ளனர்.

கடவுள் கனவில் சொல்லுகின்ற அந்த பொருளை அந்தப் பெட்டியில் எப்போது வைப்பார்கள் என்று கோயில் ஊழியர் ஒருவரிடம் கேட்ட போது,

காங்கயத்திற்கு அருகில் உள்ள திருப்பூர், வெள்ளக்கோயில், தென்னிலை, பரமத்தி, பல்லடம், கோவை மற்றும் பல சுற்றுப்புற கிரமங்களில் உள்ள தனது பக்தர் ஒருவரின் கனவில் சாமி தோன்றி பெட்டியில் வைக்க வேண்டிய பொருள் பற்றி கூறுவார்.

மறுநாள் அருள் வந்த நிலையில், அந்த நபர் தனது கனவில் சுவாமி தோன்றி சொன்னது குறித்து கோயில் நிர்வாகியிடம் வந்து தெரிவிப்பார். அவர் சொன்னது உண்மை தானா என்று தெரிந்து கொள்ள கோயில் நிர்வாகிகள் பூக்களை பொட்டலத்தில் வைத்து அதை சாமி முன்பு போட்டு பூச்சயனம் கேட்பார்கள்.

அதில் முதல் எடுப்பிலே வெள்ளைப் பூ வந்தால் முருகன் கனவில் தோன்றி கூறியது உண்மை தான் என உறுதி செய்து கொண்டு அந்த பொருளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து அந்த பெட்டியில் வைத்து விடுவார்கள். கூடவே அருள் வந்து சொன்னவர் பெயர், அவரது ஊர், அவர் கோயிலில் வந்து சொன்ன தேதி என அனைத்தையும் அந்த பெட்டியின் கீழ் எழுதி வைத்துவிடுவார்கள். இது தான் நடைமுறை என விளக்கம் கொடுத்தார்.

தற்போது பச்சை அரிசி வைத்துள்ளது பற்றி கோயில் குருக்கள் ஒருவரிடம் கேட்ட போது அவர் நம்மிடம் பேசும் முன்பு, சில மந்திரங்களை வாயில் முணுமுத்தபடி பின்பு குரலை உயர்த்தி தம்பி பச்சை அரிசி வைத்துள்ளது நல்ல சகுனம் தான். நாட்டில் விவசாயம் செழிக்கும். அரிசிப் பஞ்சம் வராது. சுபிச்சமாக இருக்கும் போங்கோ என அருள்வாக்கு கூறினார்.

நாட்டில் நடப்பதை முன்கூட்டியே மக்களுக்கு சொல்லும் இந்த கடவுளின் அருள் வாக்கை நினைத்து மெய் மறந்தபடி அங்கிருந்து புறப்பட்டோம்.

பத்மநாபசாமி கோயில் நகை மதிப்பு ரூ 50 ஆயிரம் கோடி !!



பத்மநாபசாமி கோவில் ரகசிய அறைகளில் உள்ள நகைகளின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில் 10 கிலோ எடையுடன் 18 அடி நீள தங்க மாலை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்றது பத்மநாபசாமி கோவில். இது ஒரு வைணவத் திருத்தலம்.

திருவாங்கூர் மன்னர் பரம்பரைக்குச் சொந்தமான அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் இருந்து வருகிறது. இந்த கோவில் கருவறைக்கு அருகே 6 ரகசிய பாதாள அறைகள் நீண்ட காலமாக பூட்டப்பட்டு இருந்தன.

அந்த பாதாள அறைகளை திறந்து, உள்ளே இருக்கும் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொக்கிஷங்கள் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, உச்சநீதி மன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.

இதற்காக ஓய்வு பெற்ற கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் உள்பட 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர், 6 ரகசிய அறைகளுக்கும் ஏ,பி,சி,டி,இ,எப் என பெயரிட்டு ஒவ்வொன்றாக திறந்து நகைகளின் விவரங்கள் குறித்து கணக்கெடுத்து வருகிறார்கள்.

ஏ மற்றும் பி அறைகளில் நகைகள் மதிப்பீடு செய்யும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த அறைகளில் மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த, தங்க மணிகள், தங்கத்திலான சாமி சிலைகள், தங்க கயிறு, தங்க கிரீடங்கள், தங்க மாலைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டன.

கேரள பட்ஜெட்டை விட அதிகம்

அவற்றில் விலைமதிக்க முடியாத அபூர்வமான வைரம், வைடூரியம் உள்பட நவரத்தின கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. அனைத்து அறைகளில் உள்ள தங்கம், வைரம், வைடூரியம், ரத்தினம் ஆகியவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

கேரள மாநில ஆண்டு பட்ஜெட்டின் வருவாய் அளவே ரூ.35 ஆயிரம் கோடிதான். இந்த நிலையில் பத்மநாபசாமி கோவிலில் உள்ள நகைகளின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடியை தாண்டி இருப்பது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

அதிலும் குறிப்பாக ஏ அறையில் இருந்த சுமார் 10 கிலோ எடைகொண்ட 18 அடி நீளமுள்ள தங்கச் சங்கிலி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது பத்மநாபசுவாமிக்கு அணிவிக்க மன்னரால் வழங்கப்பட்டது என தெரிகிறது.

ஒரு பாதாள அறையின் உள்பகுதியில் 150 ஆண்டுகளுக்கு மேல் திறக்கப்படாத மற்றொரு சிறிய ரகசிய அறை திறக்கப்பட்டது. அந்த அறையில் விஷ வாயு மற்றும் விஷப் பூச்சிகள் இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டதால், முதலில் ஆக்சிஜன் வாயு செலுத்தப்பட்டது.

1200 தங்கச் சங்கிலிகள்

அதன்பின்னர் மதிப்பீட்டு குழுவினர், தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் முகக்கவசம் அணிந்து உள்ளே சென்றனர். அங்கும் குவியல் குவியலாக நகைகள்தான் இருந்தன. 1200-க்கு மேற்பட்ட 'சரப்பொலி' என்று அழைக்கப்படும் தங்கச் சங்கிலிகள் ஒரு அறையில் இருந்தன. அவற்றில் 'அவல்' என்று அழைக்கப்படும் ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டு இருந்தன.

அவை திருவாங்கூர் மன்னர்கள், ராணிகள் அணிந்த நகைகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 3 மணி மகுடங்கள், தங்கத் தாம்பாளங்களில் தங்க நாணயங்களும் இருந்தன. 'சொர்ண தண்டு' என்று அழைக்கப்படும் தங்க செங்கோல், நெக்லஸ் மற்றும் ஏராளமான பதக்கங்களும் குவிந்து இருந்தன.

ஜொலிக்கும் வைரங்கள்

பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகளில் அதிக அளவிலான தங்கக் குடங்கள் உள்ளன. அவற்றிற்குள் தங்க க்காசுகள் குவிந்திருந்தன. அவை அனைத்தும் புதிதாக செய்யப்பட்டது போல பொலிவுடன் காணப்பட்டன.

அதேபோல பெரிய ரத்தின கற்கள் பதித்த அரியாசனம், மன்னர்கள் அணியும் கிரீடங்கள், நவரத்தின கற்கள் பதித்த தங்க கிரீடங்கள், பத்மநாபசாமி சிலை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலை வண்ணத்தில் பளிச்சிட்டன.

நெப்போலியன் கால நாணயங்கள்

இவற்றில் பிரஞ்சுப் பேரரசன் நெப்போலியன் காலத்து நாணயங்கள் ஏராளமாக இருந்தன. அதே போல வெனிஸ் நாணயங்கள் மட்டும் 70 கிலோவுக்கும் அதிகமாக இருந்தன.

எண்ணி முடிக்க ஒரு வாரம் ஆகலாம்

சந்தன மண்டபம் என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள 'ஏ' அறையில் அனைத்தும் கணக்கிடப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டுவிட்டன. அனைத்து அறைகளிலும் உள்ள நகைகளை கணக்கிட்டு மதிப்பீடு செய்ய இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என்று கருதப்படுகிறது. இவற்றின் மதிப்பையும் சேர்த்தால் இன்னும் பல ஆயிரம் கோடியைத் தாண்டும் என்று தெரிகிறது.

கண்டுபிடிக்கப்பட்ட தங்க நகைக் குவியல்கள் மன்னர் காலத்து நகைகள் என்பதால், அதன் தொழில்நுட்பம், வடிவமைப்பு டிசைன்கள் ஆகியவற்றை பார்ப்பதற்கு பொது மக்களும், தங்க நகை வியாபாரிகளும், நகை வடிவமைப்பாளர்களும் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

விலை மதிப்பற்ற நகைகள் இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதால், பத்பநாபசாமி கோவிலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தியாவில் இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதா? சீமான் கண்டனம்.

இந்தியாவில் இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதா?  சீமான் கண்டனம்

நாம் தமிழ் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இலங்கை ராணுவத்தின் படையினருக்கும், அதிகாரிகளுக்கும் இந்தியாவின் ராணுவ பயிற்சிக்கழகங்களில் திறன் மேம்பாட்டுப்பயிற்சி அளிக்க அதிக இடங்களை ஒதுக்கவும், தீவிரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பயிற்சி அளிக்கவும் இந்திய ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது மனிதாபிமானமற்ற, தமிழர் விரோத நடவடிக்கையாகும்.

இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. டெல்லியில் நேற்று இலங்கை ராணுவத்தின் செயலர் மேஜர் ஜெனரல் எச்.சி.பி. குணதிலக்கே தலைமையிலான குழுவுடன் இந்திய ராணுவத்தின் பன்னாட்டு ஒத்துழைப்பு பிரிவிற்கான கூடுதல் தலைமை இயக்குனர் மேஜர் ஜெனரல் ஐ.பி.சிங். தலைமையிலான குழு டெல்லியில் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் இவ்வாறு ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளதென இந்திய ராணுவ அதிகாரி கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இனப் படுகொலைப்போர் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகள் கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

தமிழர்களை இனப்படு கொலை செய்த இலங்கை அரசை போர்க்குற்றவாளியாக அறிவிக்கவேண்டும் என்றும், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்க உலகநாடுகளுடன் இணைந்து இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ள நிலையில், அதற்கு நேர் மாறாக, தமிழினப் படுகொலை செய்த இலங்கை ராணுவத்திற்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்று இந்திய ராணுவம் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இனப் படுகொலையை ஆதரிக்கிறது என்பது மட்டுமின்றி தமிழர்களின் குரலாக எதிரொலித்த தமிழக சட்டப்பேரவைத் தீர்மானத்தையும் அவமதிப்பது ஆகும்.

இந்திய ராணுவத்தின் இம்முடிவு, அது தமிழினப் படுகொலையில் இலங்கை ராணுவத்திற்கு முழுமையாக உதவியுள்ளது என்பதற்கு மேலும் ஒரு அத்தாட்சியாகும். இலங்கை ராணுவத்தின், அந்நாட்டு அரசின் மனிதாபிமான முகம்தான் இன்றைக்கு உலகெங்கிலும் கண்டனத்திற்குரியதாக உள்ளது ஐ.நா. அமைதிப்படையின் அங்கமாக ஹைட்டி நாட்டிற்குச் சென்ற இலங்கை ராணுவத்தினர், அந்நாட்டின் சிறுமிகளின் மீது பாலியல் வன்முறை செய்துள்ளனர் என்று குற்றம் சாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

ஆனால் இந்தியாவின் ராணுவமோ அந்நாட்டிற்கு மனிதாபிமான நடவடிக்கைகள் பற்றிக்கற்றுத் தரப்போகிறேன் என்கிறது. இதை விடக் கேலிக்கூத்தும் கொடூரமும் வேறு என்ன இருக்க முடியும்? பன்னாட்டு மனிதாபிமானப் பிரகடனங்களில் கையெழுத்திட்டுள்ள நாடான இந்தியாவின் ராணுவம், அந்தப் பிரகடனங்களின்படி குற்றமிழைத்துள்ளதாக ஐ.நா. நிபுணர் குழுவால் குற்றஞ் சாற்றப்படும் நாட்டிற்கு ராணுவ பயிற்சி அளிக்க முன்வந்திருப்பது, மனிதாபிமான பிரகடனங்களை அவமதிப்பது ஆகும்.

இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கை இலங்கைத் தொடர்பான இந்திய அரசின் தவறான போக்கு தடையற்று தொடருவதையே காட்டுகிறது. இதனை தமிழர்களும், தமிழக அரசும் புரிந்து கொள்ளவேண்டும். ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசின் போக்கு நியாயமற்றதாகவே எதிர்காலத்திலும் இருக்கும் என்பதற்கு இந்திய ராணுவத்தின் இந்த முடிவு ஒரு சரியான அறிகுறியாகும்.

இவ்வாறு சீமான் கூறி உள்ளார்.

கைகளை சங்கிலியால் கட்டி, மனநோயாளிகளுடன் அடைத்ததால் நரக வேதனையில் இருந்தோம் : விடுதலையான மீனவர்கள் பேட்டி.

கைகளை சங்கிலியால் கட்டி இழுத்து சென்று மனநோயாளிகளுடன் அடைத்ததால் நரக வேதனையில் இருந்தோம்: விடுதலையான ராமேசுவரம் மீனவர்கள் கண்ணீர் பேட்டி

ராமேசுவரத்தில் இருந்து ஜூன் மாதம் 20-ந்தேதி மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் 5 படகுகளுடன் 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழக மீனவர்களை விடுதலை செய்ய முதல்- அமைச்சர் ஜெயலலிதா தீவிர நடவடிக்கை மேற்கொண்டார். சிறை பிடிக்கப்பட்ட 23 மீனவர்களையும் உடனே விடுதலை செய்ய கோரி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மீனவர்களை விடுதலை செய்ய மத்திய- மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. இதனையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரையும் மன்னார் நீதிமன்றம் 29-ந்தேதி விடுதலை செய்தது. பின்னர் 23 மீனவர்களையும் 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் அழைத்து வந்து இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மீனவர்கள் 23 பேரும் நேற்று மாலை மண்டபம் கடலோர காவல்படை நிலையம் வந்து சேர்ந்தனர். மீனவர்களை கண்டதும் அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். விடுதலையான மீனவர்களில் விஜயன் என்பவர் கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறியதாவது:-

மன்னார் போலீசார் எங்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் வவுனியா சிறைக்கு கொண்டு செல்ல போர் குற்றவாளிபோல எங்கள் கைகளில் சங்கிலியால் கட்டி இழுத்து சென்றனர். வவுனியா சிறையில் 2 நாள் தங்கி இருந்தோம்.

பின்னர் அனுராதபுரம் சிறையில் அடைத்தனர். அங்கு எங்களுடன் மனநலம் பாதித்த நோயாளிகள் சிலரையும் அடைத்தனர். சில நேரங்களில் அவர்கள் அலறி சத்தம் போடுவார்கள். இதனால் இரவில் தூங்க முடியாமல் நரக வேதனை அடைந்தோம். மனநோயாளிகளுடன் எங்களை அடைத்து வைத்து இலங்கை போலீசார் அவ மானப்படுத்தினர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல மேலும் சில மீனவர்கள் கண்ணீர் மல்க கூறும்போது, இலங்கை சிறையில் கடும் துயரம் அடைந்தோம் என்றனர்.

மாற்று திறனாளிகள் ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு இடம் கேட்டு, மணிக்கட்டு வரையே கை உள்ள மாணவி வழக்கு.

மாற்று திறனாளிகள் ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு இடம் கேட்டு கைவிரல் இல்லாத மாணவி வழக்கு: ஒரு இடத்தை காலியாக வைக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

திண்டுக்கல் சித்துவாத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவருடைய மகள் வானதி(வயது 18).

இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

எனது இடது கை, மணிக்கட்டு வரையே உள்ளது. விரல்கள் எதுவும் கிடையாது. இதனால் எனக்கு 60 சதவீதம் ஊனம் என்று மருத்துவக்குழு சான்று அளித்துள்ளது. நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வில் நான் 1139 மதிப்பெண்கள் பெற்றேன். மருத்துவ படிப்புக்கு கட்- ஆப் மதிப்பெண் 191 வைத்துள்ளேன்.

நான் எனது அன்றாட வேலைகளை நானே செய்து கொள்கிறேன். பள்ளிக்கு சைக்கிளில் சென்றுதான் படித்து வந்தேன். எனக்கு டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனால் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தேன்.

ஆனால் எனது விண்ணப்பத்தை மருத்துவக் கல்வி தேர்வுக்குழு நிராகரித்தது. காரணம் கேட்டபோது, இடுப்புக்கு கீழே ஊனம் இருந்தால் மட்டுமே மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர முடியும் என்று விதி இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த விதி மாற்றுத் திறனாளிகள் சட்டத்துக்கு எதிரானதாகும். நான் மருத்துவ படிப்பை முடிக்கும் பட்சத்தில், என்னால் நோயாளிகளை பரிசோதிக்க முடியும். எனது கைகளில் உணர்ச்சி உள்ளது. இந்த விதியால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். அதுபோன்று விதியை உருவாக்க மருத்துவ கல்வி இயக்குனரகம், மருத்துவக்கல்வி தேர்வுக் குழுவுக்கு எந்த அதிகாரமும் வழங்கவில்லை.

எனவே அந்த விதி சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும். இந்த மனு நிலுவையில் இருக்கும்வரை எம்.பி.பி.எஸ் படிப்பில் ஒரு இடத்தை எனக்காக காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் நிர்மலாராணி ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரருக்காக எம்.பி.பி.எஸ் படிப்பில் ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக்கல்வி இயக்குநர், மருத்துவக்கல்வி தேர்வுக்குழு தலைவர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.