Sunday, December 25, 2011

சசிகலா நீக்கத்துக்கு காரணம் என்ன ? : சோ பரபரப்பு பேட்டி.

சசிகலா நீக்கத்துக்கு காரணம் என்ன?: சோ பரபரப்பு பேட்டி

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா, நடராஜன் உள்பட 14 பேர் நீக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இதுபற்றி கேள்விகளுக்கு எழுத்தாளர் “சோ” பதில் அளித்துள்ளார்.

கேள்வி: அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?.

பதில்:- சசிகலாவை நீக்கியதற்கான காரணத்தை அனுமானத்தின் அடிப்படையில் தான் கூறமுடியுமே தவிர முழு விஷயமும் எனக்கு தெரியாது. அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவும், அவரது உறவினர்களும் நீக்கப்பட்டது நல்ல நிர்வாகத்தை அளிக்க ஜெயலலிதா மேற்கொண்ட தீர்க்கமான உறுதியான நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன்.

தமிழகத்துக்கு நல்ல ஆட்சியையும், நேர்மையான நிர்வாகத்தையும் கொடுக்க ஜெயலலிதா விரும்புகிறார். ஆட்சியும், நிர்வாகமும் வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு தடை ஏற்படுத்தும் விதமாக மாநிலத்தில் மற்றொரு அதிகார மையம் செயல்படுவதில் அர்த்தம் இருக்க முடியாது.

எனவே அந்த வகையில், இந்த நடவடிக்கை சரியானது, தீர்க்கமானது என்று கூறுகிறேன். இந்த நடவடிக்கை அவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருக்க வாய்ப்பில்லை. சிலரின் நடவடிக்கைகள், அரசின் செயல்பாட்டுக்கு இடையூறாக இருப்பதாக அவர் உணர்ந்து இருக்கிறார். அதனால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதுதான் என்னுடைய அனுமானம்

கே:- சசிகலா கட்சியில் இருந்து விலக்கினாலும் மீண்டும் சிறிது நாளில் கட்சியில் சேர்ந்து விடுவார் என்றும் இதற்கு முன்பு இதேபோல் ஒதுக்கி வைக்கப்பட்டு பிறகு மீண்டும் சேர்ந்திருக்கிறார் என்றும் சிலர் கூறுகிறார்களே?

ப:- அந்த கட்சியினர் அப்படி நினைக்கவில்லை. அதற்கு மேல் சொல்ல எனக்கு ஒன்றுமில்லை.

கே:- முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நீங்கள் அவ்வப்போது ஆலோசனை வழங்குவதாக பேசுகிறார்களே?

ப:- நாட்டு நடப்பையும் அரசு நிர்வாகத்தையும் மிக நன்றாக அறிந்த முதல்- அமைச்சருக்கு நிர்வாக அனுபவமே சற்றும் இல்லாத நான் ஆலோசனை வழங்குவதாக சொல்வது மிகப்பெரிய தமாஷ். ஏற்கனவே 10 வருடம் முதல்-அமைச்சராக பதவி வகித்து வந்தவருக்கு ஒரு வினாடிகூட எந்த பதவியும் வகிக்காத என்னைப்போன்றவர்கள் ஆலோசனை வழங்குவதாக கூறுவது சரியல்ல.

கே:- சசிகலா நீக்கப்பட்ட பிறகு அந்த இடத்துக்கு இன்னொரு அதிகார மையம் உருவாகும் வாய்ப்பு உள்ளதா?

ப:- இன்னொரு அதிகாரமையம் என்ன என்பதை மற்றவர்கள் சுட்டிக்காட்டினால் தான் அது தெரியவரும். யார் அது? எந்த வகையில் அதிகாரம் செய்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். அப்போதுதான் எதுவும் சொல்லமுடியும்.

கே:- இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது திடீரென சசிகலா நீக்கத்துக்கு உங்கள் ஆலோசனைதான் காரணம் என்று கூறப்படுகிறதே?

ப:- இவ்வளவு நாள் இல்லாத பேச்சாக உள்ளது. சசிகலா நீக்கத்திற்கு நான்தான் காரணம் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஏதோ இப்போதுதான் எனக்கும் முதல்-அமைச்சருக்கும் திடீரென நட்பு ஏற்பட்டதுபோல் பேசுகிறார்கள். எங்கள் நட்பு 50 வருடத்துக்கு மேலானது. அப்படி இருக்கும் போது இப்போது நான் திடீரென ஏதோ ஆலோசனை சொல்லிவிட்டதாக கூறுவதில் துளிகூட அர்த்தம் இல்லை.

கே:- அ.தி.மு.க.வில் பெரிய அளவில் நடவடிக்கை எடுத்துள்ள ஜெயலலிதாவுக்கு தேசிய அளவில் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பு ஏற்படும் என நினைக்கிறீர்களா?

ப:- தேசிய அளவில் அவர் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாக எனக்கு தெரியாது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் எந்த பதவியிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் தேசிய அளவில் அவர் செயல்பட விருப்பம் இல்லாமல் இருக்கவும் வாய்ப்பு உண்டு என கருதுகிறேன். எனவே தற்போதைய அதிரடி நடவடிக்கைக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இருக்க முடியாது.

இவ்வாறு மாலை மலர் நிருபர் கேட்டதற்கு அவர் கூறினார்.

முல்லைப் பெரியாறு அணையின் ஆய்வை புறக்கணித்தது கேரளா.



முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அணையின் உறுதித்தன்மையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முல்லைப்பெரியாறு அணையில் 2 கட்டங்களாக ஆய்வு செய்தனர். அப்போது அணையில் அதிர்வலை சோதனை மற்றும் தேக்கடி ஏரியின் மண் படிவத்தை சேகரித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தொழில் நுட்ப குழுவில் இடம் பெற்று உள்ள வல்லுநர்கள் சி.டி.தத்தா, டி.கே.மேத்தா ஆகியோர் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்வதற்காக இடுக்கி மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் முதலில் இடுக்கி அணை மற்றும் அதன் அருகில் உள்ள கொளமாவு, செருதோணி ஆகிய அணைக்கட்டுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொழில்நுட்ப குழுவினர் நேற்று முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்ய காலை 9.30 மணியளவில் தேக்கடி படகு துறைக்கு வந்தனர். பின்னர் தேக்கடியில் இருந்து படகு மூலம் முல்லைப்பெரியாறு அணைக்கு சென்றனர்.

அவர்களுடன் தமிழக பொதுப்பணித்துறை மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் எம்.சம்பத்குமார், உதவி பொறியாளர் பழனிச்சாமி, கேரள மாநில முல்லைப் பெரியாறு செல் தலைவர் பொறியாளர் எம்.கே.பரமேஸ்வரன் நாயர், கேரள அணை பாதுகாப்பு துணை பொறியாளர் லத்திகா, டோமி ஜார்ஜ் ஆகியோர் உடன் சென்றனர்.

நிபுணர் குழுவினர் மற்றும் தமிழக, கேரளப் பொறியாளர்கள் குழு அணையின் பின்பகுதியில் உள்ள கேலரிக்கு சென்று அடிப்பகுதியை பார்வையிட்டனர். அடிக்கடி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அணைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அணையில் 7 துளைகள் போட்டு ஆய்வு செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட பகுதிகளையும் அப்போது பார்வையிட்டனர்.

அணையில் துளைகள் இடும் பகுதிகளை தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்து கொண்டு இருந்த போது, கேரள பொறியாளர் லத்திகா அணையில் வேறு சில இடங்களையும் மற்றும், தாங்கள் குறிப்பிடும் பகுதியையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அதை தொழில்நுட்பக் குழுவினர் ஏற்கவில்லை.

இதையடுத்து பொறியாளர் லத்திகா நிருபர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேட்டி அளித்தார். அப்போது அவர், "தொழில் நுட்ப குழுவினர் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். நாங்கள் என்ன சொன்னாலும் அவற்றை கேட்க மறுக்கின்றனர். அணைப்பகுதிகளில் நாங்கள் பார்வையிட சொல்லும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய மறுக்கின்றனர். அதனால் நாங்கள் இந்த ஆய்வை புறக்கணிக்கிறோம்'' என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்ட தொழில் நுட்ப குழுவினர் அதிருப்தி அடைந்தனர். கேரள அதிகாரிகளை அழைத்து நீங்கள் இதுபோல் செயல்படக்கூடாது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுங்கள் என்று கண்டனம் தெரிவித்தனர். அதற்கு கேரள அதிகாரிகள், இந்த ஆய்வில் எங்களுக்கு திருப்தி இல்லை. அதனால் ஆய்வை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று கூறினார்கள். இதனால் லேசாக வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் மத்திய குழுவினர் ஒரு சார்பாக செயல்படுவதாகவும் கேரள அதிகாரிகள் குற்றம் சாட்டியதால் ஆய்வு பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

கேரளத்தினரின் இந்த செயலைப் பொருட்படுத்தாமல் தொழில்நுட்பக் குழுவினர் அணையை முழுமையாக ஆய்வு செய்தனர். பின்னர் மாலையில், தமிழக மதகு பகுதிக்கு வந்து பார்வையிட்டனர். மாலை ஆறரை மணியளவில் ஆய்வை முடித்துக் கொண்டு தேக்கடி திரும்பினர். அதன்பிறகு அங்குள்ள விருந்தினர் மாளிகையில் கேரள - தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தொழில் நுட்ப குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

இன்று முல்லைப் பெரியாறு அணையில் மீண்டும் ஆய்வு செய்யும் தொழில்நுட்பக் குழுவினர் தேனி மாவட்டத்திற்கு வருகை தந்து வைகை அணையைப் பார்வையிடுகின்றனர். பின்னர் அவர்கள் மதுரை செல்கிறார்கள்.