Friday, July 29, 2011

திமுகவின் மாணவர் ஸ்டிரைக் பிசுபிசுத்தது - வழக்கம்போல வகுப்புகள் நடந்தன.


திமுக அழைப்பு விடுத்த வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் இன்று பிசுபிசுத்தது. பெரிய அளவில் பள்ளிகளில் வகுப்புகள் பாதிக்கப்படவில்லை. பள்ளிக்கூடங்கள் முன்பு போராட்டம் நடத்திய திமுகவினர் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டனர்.

சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரி இன்று வகுப்புகளைப் புறக்கணிக்குமாறு மாணவர்களுக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது. 'மாணவச் செல்வங்கள்' வகுப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியும் கோரிக்கை விடுத்தார்.

இந்த போராட்டத்தில் தாங்களும் இணைவதாக சில மாணவர் அமைப்புகள் அறிவித்திருந்தன.

அதன்படி இன்று காலை மாநிலம் முழுவதும் திமுகவினர் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் குழுமி போராட்டத்தில் குதித்தனர். அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரியில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தை முறியடிக்கும், திமுகவினர் மாணவர்களை கட்டாயப்படுத்தி, மிரட்டி போராட்டத்தில் கலந்து கொள்ள வைப்பதைத் தடுக்கும் வகையிலும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பள்ளிகள், கல்லூரிகள் முன்பு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மதுரையில் சொதப்பலான திமுக ஆர்ப்பாட்டம்:

மதுரையில் முன்னாள் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி தலைமையில் 300க்கும் மேற்பட்ட திமுகவினர் தபால் நிலையம் அருகில் திரண்டு சமச்சீர் கல்விக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். 15 நிமிடங்களிலேயே இந்த ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டனர்.

இந்தப போராட்டத்தில் மதுரை மேயர், துணைமேயர், திமுக மாவட்ட செயலாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இது திமுகவினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நெல்லையில் பூங்கோதை கைது

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நெல்லை டவுன், செங்கோட்டை, சிவகிரி, வாசுதேவநல்லூர் ஆகிய 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாளையங்கோட்டை போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா கலந்து கொண்டார். பள்ளியை நோக்கிப் பேரணியாக செல்ல முயன்ற அவர் உள்ளிட்ட 25 பேரை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். கூட்டம் அதிகம் இல்லாததால் பூங்கோதை உள்ளிட்டோர் சாவகாசமாக நடந்து போலீஸார் ஏற்பாடு செய்திருந்த பஸ்சில் ஏறிச் சென்றனர்.

பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின:

இந்தப் போராட்டத்தால் பள்ளிகளில் வகுப்புகள் எந்த அளவிலும் பாதிக்கப்படவில்லை.

அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கின. மாணவர்களும், ஆசிரியர்களும் வழக்கம்போல் பள்ளிக்கு வருகை தந்தனர்.

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் திமுகவினர் சிலர் பள்ளிகளின் முன்பாக நின்று பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளை தடுத்து ரகளை மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை உடனடியாக போலீஸார் தடுத்து அப்புறப்படுத்தினர்.

போலீஸ் பாதுகாப்புடன் பள்ளி பஸ்கள் ஓடின

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கின. பள்ளி வாகனங்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. பள்ளிகளுக்கு முன்பாக போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது.

பள்ளிகளின் முன்பாக சமச்சீர் கல்வியினை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திமுகவினர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு மாலையில் வெளியே விடப்பட்டனர்.

முன்னதாக இப்போராட்டம் சமச்சீர்க் கல்வி திட்டம் தொடர்பான பிரச்சினையை திசை திருப்புவதாக உள்ளது என்று தமிழக அரசு கண்டித்திருந்தது. மேலும், இன்று பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதுகுறித்து தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை மூலம் பிறப்பித்த உத்தரவில்,

தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை நடைபெற வேண்டும். காலை 11 மணிக்குள் வருகைப் பதிவு நிலவரம் குறித்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்ப வேண்டும். அவர்கள் அந்தத் தகவல்களைச் சென்னைக்குத் தெரிவிக்க வேண்டும்.இதுகுறித்து எல்லா பள்ளிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பள்ளி வளாகத்திலேயே இருப்பதை உறுதி செய்யுமாறும், மாணவர்கள் வெளியில் இருந்தால் பள்ளிக்கூட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டால் தக்க போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

பள்ளிக்கு வரும் மாணவர்களை எக்காரணம் கொண்டும் இடையில் வெளியில் அனுமதிக்கக் கூடாது. மதிய உணவை காரணம் காட்டி மாணவர்கள் வெளியேற அனுமதிக்கக் கூடாது.

பள்ளிகளுக்கு வராத ஆசிரியர்கள் பட்டியலை அரசு உயர் அதிகாரிகளுக்கு மாவட்ட கல்வி நிர்வாகம் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

திமுகவைக் கண்டித்து நாளை மெட்ரிக் பள்ளிகள் போராட்டம்:

இதற்கிடையே திமுகவின் போராட்ட அறிவிப்புக்கு நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் கிறிஸ்துராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்தப் போராட்டம் தேவையற்றது, இதில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். அனைத்துப் பள்ளிகளும் வெள்ளிக்கிழமை திறந்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் தமிழக நர்சரி, தொடக்க, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் சார்பில் திமுகவின் போராட்டத்தைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் என்ன அலங்கார பொம்மையா? - கடுப்பில் பாக் அமைச்சர் ஹினா ரப்பானி கர்.



இந்திய பத்தரிக்கைகள் தன் ஆடை, அலங்காரத்தைப் பற்றி அதிகம் எழுதியதால் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் கடுப்பாகியுள்ளார்.

பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர். அந்நாட்டின் பணம் படைத்த, சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் பதவியேற்ற சில நாட்களில் இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்தியாவுக்கு பேச்சுவார்த்தை நடத்த வந்த அவர் என்ன பேசப் போகிறார், என்ன பேசினார் என்பதை விட அவரது உடையலங்காரம், ஸ்டைல் ஆகியவை குறித்து தான் இந்திய ஊடகங்கள் அதிகமாக செய்திகள் வெளியிட்டன. அவர் வகை வகையான சுடிதார்கள், வைரக் கம்மல், முத்துமாலை, டிசைனர் கண்ணாடி, டிசைனர் பேக், விலை உயர்ந்த கோட் அணிந்து வலம் வந்தார். இதுதான் பெரிதாக பேசப்பட்டது, எழுதப்பட்டது, பார்க்கப்பட்டது.

பேச்சுவார்த்தையை மறந்துவிட்டு அலங்காரத்தைப் பற்றி செய்திகள் வெளியிட்டதால் இந்திய ஊடகங்கள் மீது கர் கோபம் கொண்டுள்ளார். டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு லாகூர் திரும்பிய அவரை செய்தியாளர்கள் விமான நிலையத்தில் சந்தித்தபோது தனது எரிச்சலை வெளியிட்டார். நிருபர்களைப் பார்த்த அவர் எரிச்சலுடன் எங்கு போனாலும் பத்திரிக்கையாளர்கள் தான் மொய்க்கிறார்கள். நீங்கள் இது போன்ற காரியங்களைச் செய்யக் கூடாது என்று கூறிவிட்டு விருட்டென்று இஸ்லாமாபாத் புறப்பட்டுப் போய் விட்டார்.

தர்மபுரி மாவட்ட நூலகத்தில் 40 ஆயிரம் புத்தகங்களுடன் இலவச சிவில் சர்வீசஸ் மையம்.



தர்மபுரி மாவட்டம் கல்வி வளர்ச்சியில் தமிழக அளவில் பின்தங்கிய நிலையில் உள்ள மாவட்டகளில் ஒன்றாக உள்ளது. இருந்தபோதிலும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த படித்த இளைஞர்கள் இடையே போட்டித் தேர்வுகளை எழுதும் ஆர்வம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பலர் இதனை கருத்தில் கொண்டு தர்மபுரி மாவட்ட மைய நூலகத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வுகள் உள்பட அனைத்து விதமான போட்டிதேர்வுகளுக்கும் பயன்படும் அனைத்து விதமான புத்தகங்களும் அடங்கிய இலவசமையம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்தொடங்கப்பட்டது.

சில ஆயிரம் புத்தகங்களுடன் தொடங்கப்பட்ட இந்த மையம் தற்போது சுமார் 40 ஆயிரம் புத்தகங்களுடன் விரிவடைந்த மையமாக செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கடந்த ஆண்டில் மட்டும் போட்டி தேர்வுகளுக்கு பயன்படும் 4 ஆயிரம் புத்தங்கள் புதிதாக வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்தை பயன்படுத்த நூலக உறுப்பினராக வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனால் இந்த மையத்திற்கு வந்து அங்குள்ள புத்தகங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சமீப காலமாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த மையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் டிபன் பாக்ஸ்களில் மதிய உணவை எடுத்து சாப்பிட்டு விட்டு நாள் முழுவதும் இந்த மையத்திலேயே இருந்து போட்டி தேர்வுகளுக்கு படித்து வருகிறார்கள்.

இதுபற்றி மாவட்ட நூலக அதிகாரி விஜயலட்சுமி கூறியதாவது:-

தர்மபுரி மாவட்ட மைய நூலகத்தில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 247 புத்தகங்கள் உள்ளன. 20 ஆயிரத்து 942 நூலக உறுப்பினர்கள் உள்ளனர். இங்குள்ள சிவில் சர்வீசஸ் மையம் சுமார் 40 ஆயிரம் புத்தகங்களுடன் செயல்பட்டு வருகிறது. காலை முதல் மாலை வரை தொடர்ந்து செயல்படும் இந்த மையத்தில் போட்டி தேர்வு களுக்கு தயார் செய்பவர்கள் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

தர்மபுரி மாவட்ட மைய நூலகத்தில் அமைக்கப்பட் டுள்ள சிவில் சர்வீசஸ் தேர்வு மையத்தில் குரூப்-1 குரூப்-2 உள்ளிட்ட போட்டி தேர்வுகளின் மாதிரி வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை போட்டி தேர்வுக்கு தயார் செய்யும் மாணவ - மாணவிகள் இளைஞர்களுக்கு மிகவும் உதவியாக அமைந்துள்ளது.

நூலகத்தில் உள்ள அனைத்து புத்தகங்களையும் பார்கோடிங் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்தால் நூலக சேவை மற்றும் பராமரிப்பு எளிதாகும். இவ்வாறு அவர் கூறினார்.

என்ஜினீயரிங் படிப்பு : கிராமப்புற மாணவர்கள் ஆர்வத்துடன் சேருகிறார்கள் ; கலந்தாய்வில் பாதி இடங்களை நிரப்பினர்.

என்ஜினீயரிங் படிப்பு: கிராமப்புற மாணவர்கள் ஆர்வத்துடன் சேருகிறார்கள்; கலந்தாய்வில் பாதி இடங்களை நிரப்பினர்

தமிழகத்தில் உள்ள 500 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வருகிறது. ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

கடந்த வாரம் வரை கலந்தாய்வு மூலம் 37,506 பேருக்கு ஒதுக்கீட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அதிக அளவில் கிராமப்புற மாணவர்கள் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிராமப்புறங்களில் இருந்து வந்த 16,158 மாணவ-மாணவிகள் பல் வேறு பாடப்பிரிவுகளை ஆர்வத்துடன் தேர்வுசெய்து கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கிராம பஞ்சாயத்து பகுதியை சேர்ந்தவர்கள்.

கிராமப்புறங்களில் என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்த மாணவர்களில் 4524 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரும், 4420 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரும் ஆவர். கிராமப்புறங்களில் வந்து சேர்ந்த மாணவர்களை போன்று நகராட்சி பகுதிகளில் 7769 பேரும், மாநகராட்சி பகுதியில் இருந்து 6741 பேரும், பேரூராட்சி பகுதியில் இருந்து 5647 பேரும் பி.இ. படிப்பில் சேர்ந்துள்ளனர். டவுன்ஷிப் பகுதியில் இருந்து மிகக்குறைந்த அளவில் 1191 மாணவ-மாணவிகள் ஒதுக்கீட்டு கடிதம் பெற்றுள்ளனர்.

மொத்தம் விண்ணப்பதாரர்களில் பாதிக்கு மேல் கிராமப்புற மாணவர்கள் இடம் பெற்றனர். என்ஜினீயரிங் படிப்பில் சேர 68 ஆயிரம் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களும், 34 ஆயிரம் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களும், 18 ஆயிரம் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் விண்ணப்பித்துள்ளனர்.

ஓ.சி. பிர்வை சேர்ந்த 9500 மாணவர்களும், கலந்தாய்வில் பங்கேற்கிறார்கள். கிராமப்புற மாணவர்கள், நகர்புறங்களை நோக்கி உயர்கல்விக்காக வரும் நிலை அதிகரித்து வருகிறது. என்ஜினீயரிங் கல்லூரிகள் நிறைய புதிதாக தொடங்கப்படுவதால் கிராமப்புற மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் எளிதாக சேருகிறார்கள்.

அழகான பெண் என்பதால் கடத்தினேன் : அதிர்ச்சி வாக்குமூலம் அளித்த காவல் ஆய்வாளர்.



கல்லூரி மாணவியைக் கடத்திப் பாலியல் வன்கொடுமை செய்த காவல்துறை ஆய்வாளருக்குக் காவல்துறை சலுகை காட்டுவதைக் கண்டித்து 28.07.2011 அன்று திருச்சி காதிகிராஃப்ட் தொடர்வண்டிச் சந்திப்பு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமைப் பேரவை, தமிழ்நாடு மற்றும் மகளிர் ஆயம், தமிழ்நாடு ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன.

கடந்த சூன் மாதம் 24ஆம் தேதி இரவு 11 மணியளவில் தன் சொந்த ஊருக்குச் செல்வதற்காகத் தன் ஆண் நண்பருடன் திருச்சி பேருந்து நிலையத்தில் பேருந்திற்காகக் காத்திருந்த பொறியியல் கல்லூரி மாணவியை, திருச்சி தீண்டாமை ஒழிப்புப் பிரிவு ஆய்வாளர் கண்ணன் மிரட்டி தனது காரில் கடத்திச் சென்றார். நள்ளிரவு 2.00 மணியளவில் புதுக்கோட்டைப் பேருந்து நிலையத்தில் அந்த மாணவியை இறக்கிவிட்டுள்ளார்.

கடத்தல் நடந்த அன்றே கடத்தியது ஆய்வாளர் கண்ணன்தான் என்று தெரிந்த பின்னரும் சூலை 4ஆம் தேதி வரை கண்ணனைக் கைது செய்யாமல் இருந்தது காவல்துறை என்பது குறிப்பிடத்தக்கது.

இக்குற்றச் செயலுக்கு ஆய்வாளர் கண்ணன் மீது வெறும் கடத்தல் வழக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதி கண்ணனின் பிணை மனுவைத் தள்ளுபடி செய்துள்ளார்.

நள்ளிரவில் மாணவியைக் கடத்தி உள்ள கண்ணன் மீது பாலியல் வன்கொடுமை நடந்தது பற்றி விசாரணை செய்யப்படவில்லை. “அந்தப் பெண் அழகாக இருந்ததால் கடத்தினேன்“ என்று காவல்துறையிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான் கண்ணன்.

கடத்திச் சென்ற மாணவியை கீரனூர் அருகே ஒரு குவாரியில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறை தனது புலன் விசாரணையில் மௌனம் சாதித்து வருகிறது.

கடத்தப்பட்ட மாணவி மருத்துவப் பரிசோதனைக்கும் உட்படுத்தப்படவில்லை.

கடத்தப்பட்ட மாணவி மற்றும் அவளது நண்பனின் வாக்கு மூலங்கள் காவல்துறையால் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை.

கடத்தல் கண்ணனின் வழக்கை புலன் விசாரணை செய்யும் அவனது பால்ய நண்பர் சிகாமணி பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் கற்பழித்த்தற்கான காயங்கள் இருந்ததை மறைத்திருக்கிறார்.

இந்த வழக்கில் மாணவி கடத்தப்பட்ட நள்ளிரவு 12.00 மணிமுதல் 2.00 மணி வரை இரண்டு மணி நேரம் அந்த மாணவிக்கு நடந்தது என்ன என்பதை சட்ட ஒழுங்கு காவல்துறை வேண்டுமென்றே தன் சக காவல்துறை நண்பரைக் காப்பாற்றுவதற்காக உண்மைகளை மறைக்கிறது. அந்த இரண்டு மணி நேரத்தில் அந்த மாணவிக்கு நடந்த கொடுமைகள் புலன் விசாரணையில் வெளிக் கொணரப் படவேண்டும்.

மாணவி கடத்தப்பட்ட வழக்கில் சட்டம் ஒழுங்கு காவல்துறை சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றவேண்டும். உரிய குற்றப் பிரிவுகளில் கண்ணனின் மீது வழக்குப் போடவேண்டும்.

காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் பெண் முதல்வர் பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணிற்கு ஏற்பட்டுள்ள அவமானத்திற்கும் அநியாயத்திற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றமிழைத்தவர்களும் குற்றத்தை மறைத்தவர்களும் தண்டிக்கப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆய்வாளர் கண்ணனையும், அவனுக்குச் சலுகை காட்டும் காவல்துறையையும் கண்டித்து கண்டனை உரையாற்றினார்கள்.

சமூகப் பொறுப்புள்ள ஆண்களும் பெண்களும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாகக் கலந்து கொண்டு காவல்துறைக்கு எதிராகவும் ஆய்வாளர் கண்ணனுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பினார்கள்.

ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகளும் – சிகிச்சையும்.



ஃப்ளூ என்று பொதுவாக அழைக்கப்படும் இன்ஃப்ளூயன்சா என்பது ஒரு வைரஸ் காய்ச்சல். இது மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரல் ஆகிய உறுப்புகளைத் தாக்குகிறது.

மூச்சுக் குழல் எனப்படும் சுவாசக் குழலைப் பாதிக்கும் மற்ற வைரஸ்களைவிட இன்ஃப்ளூயன்சா வைரஸ், தீவிரமாக நோய்க் கிருமிகளையும், சிக்கல் நிறைந்த நோய்த்தன்மையையும் கொண்டது. இன்ஃப்ளூயன்சா ஏ, பி மற்றும் சி ஆகிய 3 வைரஸ்களால் இந்த காய்ச்சல் ஏற்படலாம். இதில் ஏ ரக வைரஸ் பரவலாக தொற்றக் கூடியது, இது தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்டது.

இந்த ஏ டைப் வைரஸ் சீரான முறையில் வளர்ந்து சில ஆண்டு களுக்கு ஒரு முறை தொற்று நோய்ப் பரவலை ஏற்படுத்தக் கூடியது. இதில் டைப் பி, டைப் சி வைரஸ்களால் சிறு சிறு உபாதைகளே தோன்றி மறையும்.

இன்ஃப்ளூயன்சாவிற்கு வயது வித்தியாசமோ, வயது வரம்போ கிடையாது. யாருக்கு வேண்டுமானாலும், எப்போதும் இந்த வைரஸ் காய்ச்சல் ஏற்படலாம். பொதுவாக குளிர்காலத்திலேயே இந்தவகை வைரஸ் காய்ச்சல் தொற்றக்கூடியது. இந்த காய்ச்சல் ஏற்பட்டோரின் இருமல், சளி ஆகியவை மூலம் இது பிறருக்கும் தொற்றுகிறது.

இன்ஃப்ளூயன்சா திடீரென, உடனடியாகத் தோன்றும். முதலில் அதிக காய்ச்சல், குளிர், வேர்வை, தசை வலி மற்றும் தலைவலி போன்ற தொடக்க அறிகுறிகள் ஏற்படும். தொடர்ந்து மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை கட்டு மற்றும் சூரிய ஒளிக்கு ஒத்துக் கொள்ளாமல் கண்ணீர் வழியும் கண்கள் என்று இதன் நோய் அறிகுறிகள் விரிவடையும். இந்த உடனடி தீவிர அறிகுறிகள் சாதாரணமாக 3 அல்லது 5 நாட்களுக்கு இருக்கும், பொதுவாக 48 மணி நேரத்தில் நோய்க்கூறுகள் அதிகரிக்கத் தொடங்கும்.

ஃப்ளூ வைரஸ்களால் கூடுதலாக, எலும்பு உட்புழை, காது மற்றும் மூச்சுக்குழல் ஆகியவற்றில் தொற்றுக் கிருமிகள் ஏற்படுகின்றன. சில சமயம் ஃப்ளூவால் நியுமோனியா ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. நியுமோனியாவானது இன்ஃப்ளூயன்சா வைரசால் மட்டுமோ அல்லது இரண்டாம் கட்ட நோய்க்கிருமிக்கு காரணமாகும் பாக்டீரியாவாலோ தோன்றலாம்.

அறிகுறிகள்

  • 104 டிகிரி வரை காய்ச்சல்
  • தலைவலி
  • தசைவலி மற்றும் பிடிப்பு
  • மூக்கிலிருந்து தண்ணீர் போல் சளி வருதல்
  • இருமல்
  • மூச்சு விடுதலில் சிரமம்
  • நடுக்கம்
  • தளர்ச்சி
  • வியர்வை
  • பசியின்மை
  • மூக்கடைப்பு
  • தொண்டைக்கட்டு

இது சாதாரண ஃப்ளூ காய்ச்சலாக இருந்தால் மருத்துவர்கள் காய்ச்சல் எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளைக் கொடுத்து கட்டுப்படுத்துவர். ஆனால் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், வயதானவர்கள், இருதயம், நுரையீரல் மற்றும் கிட்னி ஆகியவற்றில் நீண்ட நாளைய பழுது இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா வைரஸ் இருப்பது 48 மணி நேரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டால் அமான்ட டின், ரிமான் டடின் ஆகிய வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் அளிக்கப் படுவது இயல்பு.

குழந்தைகளை இந்த வைரஸ் நோய் தாக்கினால் சிகிச்சை பொதுவாக தேவையில்லை என்று கருதப்படுகிறது. ஆனால் இதன் மூலம் வேறு நோய்கள், வேறு உறுப்புகளில் பழுது என்ற நிலை தோன்றுவதுபோல் தென்பட்டால் சிகிச்சை அவசியம் தேவைப்படும். குழந்தைகளுக்கு ஆஸ்ப்ரின் கொடுக்கக் கூடாது, ஏனெனில் இது ஆபத்து மிகுந்தது ஆஸ்ப்ரினுக்கும் ஒரு புதுவகை ஃப்ளூவிற்குமான தொடர்பு நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தண்ணீர், பழச்சாறுகள் மற்றும் திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ளுதல் அவசியம்.

அதிக திரவங்களை உட்கொண்டால் எலும்பு உட்புழை மற்றும் நுரையீரலில் உள்ள சளிச்சவ்வு மெலிதடைந்து உடலிலிருந்து விரைவில் வெளியேறும்.

பொதுவாக இன்ஃப்ளூயன்சா காய்ச்சலை குறைக்காமல் அதன் முழுக்காலத்தை கடக்கவிடுவதே சிறந்தது. ஆனால் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் சிகிச்சை அவசியம் தேவை. இது பிறருக்கு தொற்றாமல் இருக்க பாக்டீரியா – தடுப்பு சோப்பை பயன்படுத்தி அடிக்கடி கை கழுவுதல் நலம்.

பிற உறுப்புகளில் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா தாக்கினால், மேலும் சிக்கல் நிறைந்த நோய்களை உருவாக்க வாய்ப்பிருக்கிறது என்பது தவிர இதனால் பெரும் ஆபத்து எதுவும் இல்லை.

ஆரோக்கியமாக இருந்து வரும் நபர்களுக்கு இன்ஃப்ளூயன்சா 7 முதல் 10 நாட்களில் குணமாகி விடும். வயதானவர்கள், உடல் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், நீண்ட நாள் இருதய, கிட்னி மற்றும் நுரையீரல் நோய் இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா வைரஸ் மேலும் ஆபத்தானதாக மாறுவதற்குக் கூட வாய்ப்புகள் அதிகம்.

2ஜி - பிரதமர் அனுமதியோடுதான் எல்லாம் நடந்தது ! பெகுராவும் குற்றச்சாட்டு.


2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுராவும் பிரதமர் மன்மோகன் சிங் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

ஏற்கெனவே இந்த வழக்கில் பிரதமர் மீது ஆ.ராசா குற்றசாட்டியுள்ள நிலையில், இப்போது பெகுராவும் பிரதமரைக் குற்றம் சாட்டியுள்ளார். 2ஜி அலைக்கற்றை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில், பெகுரா தரப்பு வழக்குரைஞர் அமன் லேகி கூறியுள்ளது:

முதலில் வருபவருக்கு முதலில் ஒதுக்கீடு என்ற அடிப்படையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதற்கு பிரதமர்தான் ஒப்புதல் அளித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அலைக்கற்றை ஒதுக்கீடு கோருவதற்கான தேதியை முன்னதாகவே முடித்துக் கொள்ளவும் பிரதமர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனை அட்டார்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதியும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

சொலிசிட்டர் ஜெனரல் உள்ளிட்டோர் இதில் அனுமதி அளித்துள்ள நிலையில், அரசு அதிகாரியான பெகுரா, இந்த கொள்கை விஷயத்தில் தலையிட முடியாது.

மத்திய அமைச்சரவை கூறியபடிதான் செயல்பட முடியும். தவறு இருப்பதாகத் தோன்றினால் பிரதமர்தான் தலையிட்டிருக்க வேண்டும் என்று பெகுரா தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவரது தரப்பு வழக்குரைஞர் அமன் லேகி இது தொடர்பாக நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சுமார் 3 மணி நேரம் வாதாடினார். அரசு உருவாக்கிய கொள்கையின்படிதான் பெகுரா நடந்து கொண்டார்.

அலைக்கற்றை ஒதுக்கீட்டு கொள்கையை அவர் உருவாக்கவில்லை. இந்த வழக்கில் சாட்சியாக வேண்டுமானால் பெகுராவைச் சேர்க்கலாம். குற்றவாளியாக சேர்த்திருக்கக் கூடாது என்றார் அவர்.

மேலும் 2007ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ப.சிதம்பரமும், சுப்பா ராவும் கலந்துகொண்ட தாகவும், இந்த கூட்டத்தில் தான் 2ஜி அலைக்கற்றையை ஏலம் விடாமல் உரிமங்களை ஒதுக்குவதற்கான முடிவு
எடுக்கப்பட்டதாகவும் பெகுரா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னதாக இந்த ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மீதும், மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மீதும் ஆ.ராசா குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிதம்பரம் மீது குற்றச்சாட்டு-கபில்சிபல் மறுப்பு:

இந் நிலையில் 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் நிதித்துறைச் செயலாளராக இருந்த டி.சுப்பா ராவ் ஆகியோர் மீது தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெகுரா கூறியுள்ள குற்றச்சாட்டுகளை மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல் மறுத்துள்ளார்.

இது குறித்து கபில் சிபல் கூறுகையில், பெகுரா தெரிவித்தபடி ப.சிதம்பரமும், சுப்பாராவும் கலந்துகொண்டதாக கூறப்படும் 2007ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி கூட்டம் நடைபெற்றதற்கான ஆதாரம் ஏதுமில்லை.

2008ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தொலைத்தொடர்புத்துறை செயலாளராக பணியில் சேர்ந்த பெகுரா, 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி நடைபெற்ற கூட்டம் பற்றி குறிப்பிடுவது வியப்பளிப்பதாக உள்ளது. மேலும் அவர் கூறிய கருத்துக்கு ஆதரவாக ஆவணம் எதையும் காட்டவில்லை என்றார்.

மிருகங்களை விட மோசமான கொடூர புத்திகொண்டது இலங்கை ராணுவம்...



தமிழர்களின் நாக்குகளை துடிக்க துடிக்க அறுத்து எரிந்தனர் : சிங்கள ராணுவ வீரர் அதிர்ச்சி வாக்குமூலம்.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்த போது ராணுவ வீரர்கள் தமிழர்களின் நாக்குகளை அறுத்ததாகவும், நிராயுதபாணிகளாக சரண் அடைந்த விடுதலைப்புலிகளை சுட்டுக் கொன்றதாகவும் சிங்கள ராணுவ வீரர் ஒருவரே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே உச்சக்கட்ட போர் நடந்த போது மனிதாபிமானமற்ற கொடூர செயல்களில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.

தமிழ் வாலிபர்களை நிர்வாணமாக்கி கண்களை கட்டி ஈவு இரக்கமின்றி அவர்கள் சுட்டுக்கொன்ற காட்சிகள் இங்கிலாந்து நாட்டின் `சேனல் 4' டெலிவிஷனில் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் உலகம் முழுவதிலும் இருந்து இலங்கை அரசுக்கு எதிராக கண்டன கணைகள் பாய்வதோடு, போர்க்குற்றம் புரிந்த அதிபர் ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் சிங்கள ராணுவத்தினர் நடத்திய கோர தாண்டவங்கள் ஒவ்வொன்றாக `சேனல் 4' டெலிவிஷன் அம்பலப்படுத்தி வருகிறது.

இறுதிக்கட்ட போரின் போது சரண் அடையும் விடுதலைப்புலிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக அதிபர் ராஜபக்சே உறுதி அளித்தார். அவரது பொய்யான வாக்குறுதியை நம்பி ஏராளமான விடுதலைப்புலிகள் சரண் அடைந்தனர்.

அவரது வாக்குறுதியை நம்பி சரண் அடைந்த விடுதலைப்புலிகளை ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டுக்கொல்லுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு, ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். கோத்தபய உத்தரவிட்டதும், சரண் அடைந்த விடுதலைப்புலிகளை சிங்கள ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக்கொன்றனர்.

இந்த தகவலை அப்போது அருகில் இருந்த இலங்கை ராணுவத்தின் 58-வது படைப்பிரிவின் ராணுவ வீரர் ஒருவரே உறுதிப்படுத்தி உள்ளார்.

அதன்பிறகு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிரிகேடியர் சவேந்திர சில்வா பதவி உயர்வு அளிக்கப்பட்டு தற்போது நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் துணைத்தூதராக பணியாற்றுகிறார்.

போரின் இறுதி நாட்களில் நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை நேரில் கண்டவரும், அங்கு சாதாரண படை வீரர்களில் ஒருவராக இருந்தவருமான பெர்னாண்டோ என்ற ராணுவ வீரர் `சேனல் 4' டெலிவிஷனுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ள தகவல்கள் கல் மனதையும் கரையச் செய்வதாக உள்ளது.

அவர், ‘’என்னுடைய சக ராணுவ வீரர்கள், கண்ணில் பட்ட அப்பாவி மக்களை எல்லாம் மிருகத்தனமாக சுட்டுக்கொன்றனர். மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர். துடிக்க துடிக்க அவர்களுடைய நாக்குகளை அறுத்து எரிந்தனர். பெண்கள், முதியவர்கள், குழந்தைகளையும் கூட விடாமல் கொன்று குவித்தனர்.

அப்படி கொல்லப்பட்டவர்கள் யாரும் விடுதலைப்புலிகள் அல்ல. சாதாரண குடிமக்கள்தான்.

பெண்களை அடித்து உதைத்து துன்புறுத்தி கற்பழித்தனர். அந்த கொடூரத்தை தடுக்க முயன்ற அவர்களுடைய பெற்றோர்களை அந்த இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். மருத்துவமனையில் தமிழ் இளம்பெண் ஒருவரை எனது சகாக்கள் 6 பேர் சேர்ந்து கற்பழித்த கோரத்தை என் கண்களாலேயே பார்த்தேன்.

இலங்கை ராணுவத்தினரின் இதயங்கள் மிருகங்களை விட மோசமாக இருந்தது. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் சிதறிக்கிடந்ததை பார்த்தேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

750 இடங்களை நிரப்ப மருத்துவப் படிப்பு : 2-வது கட்ட கவுன்சிலிங் தொடங்கியது.

750 இடங்களை நிரப்ப மருத்துவ படிப்பு: 2-வது கட்ட    கவுன்சிலிங் தொடங்கியது

மருத்துவப் படிப்பு 2-வது கட்ட கவுன்சிலிங் இன்று தொடங்கியது. தமிழ்நாட்டில் 17 அரசு மருத்துவக் கல்லுரியில் 1653 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளது. இதற்கான கவுன்சிலிங் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டது. இதில் எஸ்.சி. மற்றும் பி.சி. பிரிவுக்கான 5 இடங்கள் தவிர அனைத்து இடங்களும் நிரம்பி விட்டது.

கடந்த 22-ந்தேதி கல்லூரி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இன்று தொடங்கியது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 599 அரசு இடங்கள் உள்ளது. மேலும் புதிதாக அனுமதி அளிக்கப்பட்ட மாதா மருத்துவக் கல்லூரி மற்றும் திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மூலம் 150 இடங்கள் அரசுக்கு கிடைக்கிறது. இதன் மூலம் இந்த எண்ணிக்கை 750ஆக உயர்த்துள்ளது. இவைகள் தவிர ஏற்கனவே காலியாக இருக்கும் 5 இடங்களுக்கான கவுன்சிலிங் இன்று தொடங்கியது.

இன்றைய தினம் 500 மாணவ - மாணவிகள் அழைக்கப்பட்டு இருந்தன. இதுதவிர பல் மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங்கும் இன்று நடக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரியில் 73 இடங்களும் தனியார் பல் மருத்துவ கல்லூரியில் 847 இடங்களும் நிரப்பப்படுகிறது. வருகிற 4-ந்தேதி வரை கவுன்சிலிங் நடக்கிறது.