Wednesday, May 18, 2011

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் : அண்ணாசாலையில் போலீஸ் தடியடி.

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்:    இந்தியன் ஆயில் நிறுவனத்தில்    புகுந்த கம்யூ. தொண்டர்கள்;    அண்ணாசாலையில் போலீஸ் தடியடி

சென்னை, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் புகுந்த கம்யூனிஸ்டு தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இன்று முற்றுகை போராட்டம் நடந்தது. அண்ணாசாலையில் உள்ள மத்திய அரசின் இந்தியன் ஆயில் நிறுவனத்தை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டனர்.

பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கோஷமிட்டார்கள். வட சென்னை மாவட்ட செயலாளர் விஜயகுமார், தென்சென்னை மாவட்ட செயலாளர் லெனின் ஆகியோர் தலைமையில் போலீஸ் தடையை மீறி இந்த போராட்டம் நடந்தது.

அப்போது சிலர் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கேட்டை உடைத்து தள்ளி விட்டு உள்ளே புகுந்தனர். பாதுகாப்புக்கு நின்ற போலீசாரையும் தள்ளி விட்டு உள்ளே சென்றனர். இதில் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர் கீழே விழுந்தார். இதனால் அவர்களை தடியடி நடத்தி போலீசார் வெளியேற்றினர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் சாலையில் உட்கார்ந்தனர். மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசின் எண்ணை அலுவலகத்தில் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அண்ணாசாலையில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

ஓசூர்அருகே பெங்களுர் வாலிபரிடம் ஓடும் பஸ்சில் நகை அபேஸ்.

ஓசூர்அருகே    பெங்களுர்  வாலிபரிடம்    ஓடும் பஸ்சில் நகை அபேஸ்

தான் ஆட்சிப் பொறுப்பேற்ற 16-05-2011 அன்றையதினமே சங்கிலி பறிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துவிட்டது என்றும் சங்கிலியை பறிக்கும் திருடர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். நாமும் நம்புவோம்!!!

கிருஷ்ணகிரி,மே,18- கர்நாடக மாநிலம் பெங்களுர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 28). இவர் தனது மனைவியுடன் பெங்களுரில் இருந்து தனியார் பஸ்சில் சேலம் புறப்பட்டு வந்து கொண்டு இருந்தார்.

ஓசூர் அருகே வந்த போது அவரது கைப்பை ஜிப் திறந்து கிடந்தது. பையில் இருந்த 35 கிராம் தங்க நகையை காணவில்லை.

இது குறித்து அவர் ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை அபேஸ் செய்து சென்றது யார் என்று விசாரித்து வருகிறார்கள்.

தலைமைச் செயலக விவகாரம் : தமிழக அரசுக்கு நோட்டீஸ்.


தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றத்தை மாற்றக் கூடாது என்று உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வரும் 16ஆம் தேதிக்குள் இதுதொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

திமுக அரசால் அனைவரும் வியக்கும் வகையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டப்பட்டது.

இக் கட்டிடம் சுற்றுச் சூழலுக்கு உகந்த, நலன்பயக்கும் பசுமைக்கட்டிடம் என்பது மிக முக்கியமான சிறப்பாகும். மேலும் இந்தியாவின் முதல் சட்டமன்றம், தலைமைச்செயலக பசுமைக்கட்டிடம் இது என்பது குறிப்பிடத்தக்கது


இதனை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்ற பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தலைமைச் செயலகத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் ராஜேஸ்வரன், வாசுகி ஆகியோர் முன்பு 18.05.2011 அன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, அதிக பொருட்செலவில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை மாற்றக்கூடாது என்று வாதிட்டார்.

இதுதொடர்பாக அரசு ஏதேனும் உத்தரவு பிறப்பித்துள்ளதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதுகுறித்து தகவல் எதுவும் இல்லை என்றும், பத்திரிகை மற்றும் ஊடகங்களில் அவ்வாறு செய்திகள் வருவதாகவும் மனுதாரர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர்தான் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல் அமைச்சர் தெரிவித்துள்ளாரே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மூன்றாவது பிரதிவாதியாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், யாருடைய உத்தரவின்பேரில் இந்த மாற்றம் நடைபெற்று வருகிறது என்பது தெரிய வேண்டும் என்று மனுதாரர் வலியுறுத்தினார்.

இந்த மனுவில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பெயரை நீக்க வேண்டும் என்று அவருடைய வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் கூறினார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக வரும் ஜூன் 16ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறைச் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதா வுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே அரசு தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் மாற்றம் தொடர்பாக உத்தரவு பிறப்பித்தால், மனுதாரர் உடனடியாக உயர்நீதிமன்றத்தை அனுகலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில் திருத்தம் செய்ய முடிவு ; அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை.

சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில்    திருத்தம் செய்ய முடிவு;    அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

சமச்சீர் பாடப் புத்தகங்களில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. 1 முதல் 10-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டம் வருகிற கல்வி ஆண்டில் செயல்படுத்தப்படுகிறது.எல்லா குழந்தைகளும் ஒரே பாடத்திட்டத்தை படிக்கக் கூடிய வகையில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த ஆண்டு முதல் முழுமையாக இத்திட்டம் செயல்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக 8 கோடி பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் புதிதாக அ.தி.மு.க. அரசு ஆட்சி அமைத்ததை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையில் சில மாற்றங்களை செய்ய முன் வந்துள்ளது. உயர் அதிகாரிகள், இயக்குனர், இணை இயக்குனர்கள் விரைவில் மாற்றப்படுகிறார்கள். இதன் ஒரு பகுதியாக சமச்சீர் பாடப்புத்தகத்திலும் சில மாற்றங்களை கொண்டு வருவதாக தெரிகிறது.

10-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய கவிதைகள், கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது. 10-ம் வகுப்பு சமச்சீர் தமிழ் புத்தகத்தில் 4 பக்கத்தில் கலைஞரின் “செம்மொழி” பாடல் இடம் பெற்றுள்ளது. 17 பக்கத்தில் செம்மொழி அந்தஸ்தை பெற முயற்சி என்ற தலைப்பில் ஒரு குறிப்பு உள்ளது. 89-ம் பக்கத்தில் தூய தமிழில் கட்டுரை இடம் பெற்றுள்ளது. மாணவர்கள் கூடுதலாக படிக்கும் திறன் பற்றிய பயிற்சி முன்னாள் முதல்வர் எழுதிய கட்டுரை அடங்கி உள்ளது. 100-ம் பக்கத்தில் போர்க்களத்தில் மகனுக்கு வீரத்தை எடுத்துரைக்கும். தாய் பற்றிய பயிற்சியும் இடம் பெற்றுள்ளது.

இந்த பாடத் திட்டங்களை சிலவற்றை திருத்தவோ அல்லது நீக்கவோ பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்கிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் இன்று நடந்தது. கல்வி அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இயக்குனர்கள் வசுந்தராதேவி, அறிவொளி, தேவராஜன், மணி, வசந்தி, ஜீவாகனந்தம், தமிழ்நாடு பாடநூல் நிர்வாக இயக்குனர் ஜீவானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதிகாரிகளிடம் சமச்சீர் பாடப்புத்தகங்களில் வினியோகம் செய்தல், தேவையற்ற பாடங்களை நீக்குதல், அல்லது திருத்தம் செய்தல் போன்றவை குறித்து அமைச்சர்கள் நீண்ட நேரம் கருத்துக்கள் கேட்டறிந்தார். சமச்சீர் பாடப்புத்தகம் பெரும்பாலான அரசு பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு விட்டன. தனியார் பள்ளிகளுக்கு மட்டும் வழங்க வேண்டும். இத்தகைய சூழலில் மாணவர்களை பாதிக்காமல் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நத்தம் புளி : அறுவடை செய்ய ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் அவதி.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நத்தம் புளி:அறுவடை செய்ய ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் அவதி

வெளிநாடுகளுக்கு நத்தம் பகுதியில் இருந்து புளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது அறுவடை செய்ய ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நத்தம் வட்டாரத்தில் திருமலைக்கேனி, மலையூர், வேம்பார்பட்டி உள்பட பல இடங்களில் ஆயிரக்கணக்கான புளியமரங்கள் உள்ளன. புளியம்பழம் தட்டி விதை நீக்கி தனிப்பழமாக விற்கும் குடிசை தொழில் இங்கு செயல்பட்டு வருகிறது.

இது குறித்து நத்தம் தொகுதி தென்னை, மா, புளி பண்ணையின் அமைப்பாளர் வேம்பார்பட்டி கண்ணுமுகமது, நத்தம் வியாபாரி சேக்முகமது கூறியதாவது:-

நத்தம் பகுதியில் விளையும் நாட்டு புளியம்பழம் தரமுள்ளதாகும். குளிர் சாதன கிட்டங்கி புளி 1 கிலோ ரூ.41, அதே சமயம் விதை நீக்கப்பட்டு பக்குவப்படுத்தப்பட்ட பழங்கள் 1 கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரையிலும் விற்கப்படுகிறது.

நத்தம் உள்ளூர் புளி 1 கிலோ விதை எடுக்கப்பட்டது ரூ.60 முதல் ரூ.65 வரையிலும் விற்கப்படுகிறது. மேலும் நத்தம் பகுதியில் பாகிஸ்தான், தாய்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பெரிய மொத்த கொள்முதல் வியாபாரிகள் வந்து நத்தம் வட்டாரத்தில் கொள்முதல் செய்கின்றனர். இந்த வருடம் விளைச்சல் குறைவு. கடந்த வருடம் சரியான அளவில் பருவமழை பெய்யவில்லை. இதனால் மகசூல் குறைந்து போனது. தமிழ்நாடு அளவிலும் மற்ற மாநிலங்களிலும் விளைச்சல் மந்தமானது.

கடந்த வருடத்தை விட இந்த வருடம் விலை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் வரத்து குறைவு. மேலும் புளியம்பழம் அறுவடை செய்ய கூலி ஆட்கள் கடும் தட்டுப்பாடு அடைந்துள்ளனர்.இதனால் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வியாபாரிகளும் கவலை கொண்டுள்ளனர்.

மின்பற்றாக்குறையை போக்க லோயர்கேம்ப் மின் உற்பத்தி - பொதுமக்கள் கோரிக்கை.

மின்பற்றாக்குறையை போக்க லோயர்கேம்ப் மின் உற்பத்தி பணியை விரைந்து முடிக்க வேண்டும்; கூடலூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை

கடந்த 2004-ம் ஆண்டில் முல்லை பெரியாற்றில் மின் பற்றாக்குறையை போக்கிட 17 இடங்களில் சிறுபுணல் நீர் மின் நிலையம் தொடங்கிட அடிக்கல் நாட்டப்பட்டு நான்கு இடங்களில் தொடங்கப்பட்டது.

அடுத்து வந்த அரசு ஆமை வேகத்தில் சிறுபுணல் மின் உற்பத்தி வேலைகளை செய்தது. இன்னும் 13 இடங்களில் அதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. மின் பற்றாக்குறையை பற்றி கவலையும் படவில்லை என பொதுமக்கள் கூறுகிறார்கள்.

தற்பொழுது பதவி ஏற்ற அரசு மின் பற்றாக்குறை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது. எனவே தேனி மாவட்டத்தில் காமராஜர் ஆட்சி காலத்தில் லோயர்கேம்பில் ரூ.7 கோடி செலவில், முல்லை பெரியாறு அணையிலிருந்து நான்கு ராட்சத குழாய்கள் வழியாக தமிழகத்திற்கு கொண்டு வரப்படும்.

ஆயிரத்து 200 கன அடி தண்ணீரை பயன்படுத்தி நான்கு எந்திரங்கள் மூலம் 140 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் வகையில் பெரியாறு நீர் மின் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டது.

ஆனால் சில மாதங்களாக ஒரே ஒரு எந்திரம் மட்டுமே இயங்கி வருகிறது. அதிகாரிகளின் அலட்சிய போக்கால் இயங்காமல் வருகிறது. லோயர் கேம்பிலுள்ள பெரியாறு நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கு பிறகு ஆற்றில் விடப்படும் தண்ணீரை கொண்டு கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் சிறுபுணல் நீர் மின்நிலையம் அமைத்து ஒவ்வொரு சிறுபுணல் மின் நிலையத்திலும் 4 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க 2004-ம் ஆண்டில் தமிழக அரசு முடிவு செய்தது.

மூன்று ஆண்டுகளில் முடிக்க திட்டமிட்டு லோயர் கேம்ப், குருவனூத்துப் பாலம், காஞ்சி மரத்துறை, வெட்டுகாடு, குள்ளப்ப கவுண்டன்பட்டி, ஒத்தகளம் ஆகிய பகுதிகளில் தலா ரூ.19 கோடி செலவில் சிறுபுணல் நீர்மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து மற்ற 13 நிலையங்களும் தொடங்கப்பட்டால் 220 மெகாவாட் உற்பத்தி செய்யப்படும். இதனால் பெரும்பான்மையான மின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். மின்சாரம் பற்றாக்குறைகள் உள்ள நிலையில் விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிறு தொழில் புரிவோர் மற்றும் சிறு விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“நேட்டோ” ஹெலிகாப்டர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு.

“நேட்டோ” ஹெலிகாப்டர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் (பன்னாட்டு ராணுவம்) முகாமிட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் ஆத்மி காட் பகுதிக்குள் நேட்டோ படையை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் அத்துமீறி நுழைந்து பறந்தன.

இதை கவனித்த பாகிஸ்தான் ராணுவத்தினர் அந்த ஹெலிகாப்டர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு நேட்டோ படையினரும் சுட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

அதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் வான்வெளி எல்லைக்குள் நேட்டோ ஹெலிகாப்டர்கள் பறந்ததால் அந்நாட்டு ராணுவத்தினரை ஆத்திரம் அடைய செய்துள்ளது.

இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கை கோள் 21-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கை கோள் 21-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது

இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் ஜிசாட்-8 என்ற தகவல் தொடர்பு செயற்கை கோளை உருவாக்கி உள்ளனர். இதுவரை இந்தியா தனது செயற்கை கோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தி வந்தது.

இப்போது ஜி.சாட் 8 செயற்கைகோள் தென் அமெரிக்காவின் கோருவில் உள்ள பிரெஞ்ச் கயானா ராக்கெட் தளத்தில் இருந்து ஏரியான்-5 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.

இதற்காக ஜி சாட் 8 செயற்கைகோள் பிரெஞ்ச் கயானாவில் ராக்கெட்டில் பொருத்தி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வருகிற 20-ந்தேதி ராக்கெட் விண்ணில் பறப்பதாக இருந்தது.

இப்போது பல்வேறு ஆய்வு பணிகள் முடிவடையாததால் அது ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டு 21-ந்தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை கோள் 3.1 டன் எடை கொண்டது. அரசு மற்றும் தனியார் நடத்தும் டி.டி.எச். சேவைக்கான ஒளிபரப்பு கருவிகள், தகவல் தொடர்பு டிரான்ஸ் மீட்டர்கள், டிரான்ஸ் பாண்டர்கள், தானியங்கி ரிசீவர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

விண்ணில் பறந்த 30 நிமிடத்தில் செயற்கை கோள் நிலை நிறுத்தப்பட்டு கர்நாடக மாநிலம் ஹாசனில் உள்ள தரை கட்டுப்பாட்டு நிலையத்தின் உத்தரவுக்கு ஏற்ப இயங்க தொடங்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

பதவியேற்பு விழா - வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கிய ஜெ !


ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்கும் விழாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும் அழைப்பி வைக்கப்பட்டிருந்தது. முதல் வரிசையில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்தத் தகவலை தனது கட்சியின் உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் வைகோவே தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்த மதிமுக நடத்திய கூட்டத்தில் பேசிய வைகோ,

தேர்தல் முடிவு எதிர்பார்க்காத ஒன்று தான். தேர்தல் தோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் நடந்த ரகளை பற்றி அனைவருக்கும் தெரியும். நமது கட்சியில் அப்படியொரு வன்முறை சம்பவத்திற்கு யாரும் இடம் கொடுக்கவில்லை. ஏதாவது ஒரு சம்பவம் நடந்து விடுமோ என்ற அச்சம் எனக்கு இருந்தது. அனைவரது மனதிலும் ஊமை காயம் உள்ளது.

கடந்த ஐந்தாண்டு காலமாக திமுக அரசை கடுமையாக நாம் எதிர்த்தோம். அதற்குரிய பலனை அவர்கள் அனுபவித்து வருகின்றனர். இனி நாம் திமுக தலைவர் கலைஞரை விமர்சிக்க வேண்டியது இல்லை. அதேபோல் ஜெயலலிதாவையும் நாம் விமர்சிக்க வேண்டாம்.

கடந்த ஐந்தாண்டுகளாக நாம் அதிமுகவுக்கு உறுதுணையாக இருந்தோம். முதல்வர் பதவி ஏற்பு விழாவிற்கு கூட எனக்கு அழைப்பிதழ் அனுப்பி வைத்துள்ளனர். நான் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தேன். வீட்டின் வேலைக்கார பெண் தான் அழைப்பிதழை பெற்றுள்ளார். பதவி ஏற்பு விழாவில் முதல் வரிசையில் உட்காருவதற்கு தான் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நாம் திமுக, அதிமுகவை சரிசமமாக பாவிக்க வேண்டும். ஆளுங்கட்சி தவறு செய்தால் சுட்டிக் காட்டுவோம். பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் எனக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அவரது மகள் படிக்கும் கல்லூரியில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியை கேட்டுள்ளனர். என் பெயரை 80 சதவீதம் மாணவியர் தெரிவித்துள்ளதாக, கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதனால் என்னை அடுத்த முதல்வராக நினைத்து வெளியே பேச வேண்டாம். நமக்கு நல்லதொரு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்று பேசினார்.

முன்னதாக அக் கட்சியின் ஒரு மாநில நிர்வாகி பேசுகையில், வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும். பாஜக கூட்டணி தான் வெற்றி பெறும். அப்போது நாம் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றார். அதை வைகோ கவனமாகக் கேட்டுக் கொண்டார்.

10 ஆயிரம் ரவுடிகள் பட்டியல் தயார் ; கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க 10 ஆயிரம் ரவுடிகள்    பட்டியல் தயார்;    கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அதிக கவனம் செலுத்தப்படும். ரவுடிகள் கட்டுப்படுத்தப்படுவார்கள். மக்கள் நிம்மதியாக வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கும்படி காவல் துறைக்கு போலீஸ் டி.ஜி.பி. போலோநாத் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளது. ரவுடிகளை 3 விதமாக போலீசார் பிரித்து வைத்துள்ளார்கள். முதல் ரக ரவுடிகள் கொலை, கூலிக்கு கொலை செய்தல், பணத்துக்காக ஆட்களை கடத்துதல், கற்பழிப்பு வெடிகுண்டு வீசுதல் போன்ற கொடுங்குற்றங்களில் ஈடுபடுபவர்கள்.

2-வது ரக ரவுடிகள் ஆயுதங்களை காட்டி மிரட்டி பணம், நகை பறிப்பது, அடி- தடிகளில் ஈடுபடுவது, கொலை முயற்சிகளில் இறங்குவது, கொள்ளைகளில் ஈடுபடுவது போன்ற குற்றங்களை செய்பவர்கள்.

3-ம் ரக ரவுடிகள் தங்கள் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிப்பது போன்ற குற்றங்களில் ஈடு படுபவர்கள். தமிழ்நாடு முழுவதும் ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 10 ஆயிரம் ரவுடிகள் பெயர் சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 2800 ரவுடிகள் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 450-க்கும் மேற்பட்டவர்கள் மிக கொடூரமான ரவுடிகள் என்று கூறப்படுகிறது.

குண்டர் சட்டத்தில் பல முறை ஜெயிலுக்கு சென்றவர்களையும் அவர்களுக்கு பின்னணியில் உதவும் நபர்கள் பற்றிய பட்டியல் தனியாக தயாராகிறது. கடந்த ஆட்சியில் சில இயக்கங்களின் பக்க பலத்துடன் கட்ட பஞ்சாயத்து, மாமூல் வசூலிப்பது போன்ற செயல்களில் பலர் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பற்றிய விபரங்களையும், அவர்களுக்கு பக்க பலமாக செயல்பட்டவர்கள் பற்றியும் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் தனிப்பட்டியல் தயாராகி வருகிறது.

இந்த பட்டியல் தயாரிப்பை அறிந்ததும் கட்ட பஞ்சாயத்து தாதாக்கள், மாமூல் வேட்டை நடத்தி வலம் வந்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இதுபற்றி போலீஸ் டி.ஜி.பி. போலோநாத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை காப்பதில் போலீசார் தீவிரமாக இருப்பார்கள். ரவுடிகளை கட்டுப்படுத்தினாலே சட்டம் ஒழுங்கு சீராகி விடும். ரவுடிகளை அடக்குவதில் பாரபட்சத்துக்கு இடமில்லை. பொதுமக்கள் நிம்மதியாக வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை அரங்கம் ஒருவாரத்தில் தயார் ஆகும் ; இரவு - பகலாக பணி தீவிரம்.

புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை அரங்கம்    ஒருவாரத்தில் தயார் ஆகும்;    இரவு-பகலாக பணி தீவிரம்

தமிழக சட்டசபை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடித்ததையடுத்து, புனித ஜார்ஜ் கோட்டை சீரமைக்கப்படுகிறது. முதல்- அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பணிபுரியும் அறைகள் தயார் ஆகி விட்டன. ஒரு சில சிறிய வேலைகள் நடந்து வருகின்றன. இது தவிர கோட்டையின் மற்ற பகுதிகள் வண்ணம் பூசப்பட்டு சீரமைக்கப்படுகின்றன. இதற்கான பணிகளில் ஏராளமான ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் 33 அமைச்சர்கள் கடந்த 16-ந் தேதி சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவி ஏற்றுக் கொண்டனர். புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை கூட்ட அரங்கம் தயார் ஆகி வருகிறது.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் இருக்கைகள் அமைக்கும் பணி இரவு-பகலாக நடந்து வருகிறது. பணியாளர்கள் கூடுதல் எண்ணிக்கையில் நியமிக்கப்பட்டு இருப்பதால் சட்டசபை கூடம் உருவாகும் பணி மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. இருக்கைகளை அமைப்பதற்கான படிக்கட்டுகள், மின்சார வயரிங் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஒலிபெருக்கி கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணி இரவு-பகலாக நடக்கிறது. ஏற்கனவே இருந்த இருக்கைகளில் சில சேதம் அடைந்த நிலையில் உள்ளன. அவற்றை புதுப்பிக்கும் வேலை நடந்து வருகிறது.

சட்டசபை அரங்கத்தை அமைக்கும் வேலையை ஒரு வாரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப பணியாளர்கள் இங்கு பணிபுரிந்து வருகிறார்கள். 22-ந் தேதிக்குள் பெரும்பாலான பணி முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு முடிவடைந்தால் 23-ந் தேதி புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சட்டமன்ற துறை அலுவலகம் ஏற்கனவே புதிய சட்டசபை கட்டிடத்துக்கு மாற்றப்பட்டு இருந்தது. அதுவும் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்படுகிறது. இதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. சட்டசபை தொடர்பான அனைத்து பணிகளும் 24-ந் தேதிக்கு முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. 25-ந் தேதி முதல் புனித ஜார்ஜ் கோட்டை சட்டசபை கூடுவதற்கு முழுமையாக தயார் ஆகிவிடும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


சட்டசபை இட மாற்றத்திற்கு தடை விதிக்க முடியாது ; சென்னை ஐகோர்ட்டு மறுப்பு.

சட்டசபை இட மாற்றத்திற்கு  தடை விதிக்க முடியாது;  சென்னை ஐகோர்ட்டு மறுப்பு

சென்னையை சேர்ந்த வக்கீல் கிருஷ்ணமூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள புதிய தலைமை செயலக கட்டிடத்தில் செயல்படும் தமிழக சட்டசபை மற்றும் தலைமை செயலக அலுவலகங்கள் அனைத்தும் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.

இதற்காக ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்த நூலகம் காலி செய்யப்பட்டது. இந்த இடமாற்றத்தின் மூலம் பொது மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. எனவே தமிழக அரசின் இந்த இட மாற்ற நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டார்.

இம்மனுவை நீதிபதிகள் ராஜேஷ்வரன், வாசுகி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசின் தலைமை செயலாளர், பொதுப்பணித்துறைச் செயலாளர், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தர விட்டனர்.

அப்போது வக்கீல் கிருஷ்ணமூர்த்தி நீதிபதிகளிடம், சட்டசபை இட மாற்ற பணிக்கு தடை விதிக்கும்படி கோரிக்கை விடுத்தார். ஆனால் நீதிபதிகள் சட்டசபை இடமாற்றத்திற்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.

மு.க.அழகிரி திருமண மண்டபம் மீது தாக்குதல்.


மு.க.அழகிரி திருமண மண்டபம் மீது தாக்குதல்

மதுரையில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு சொந்தமான ‘’தயா’’ திருமண மண்டபம் மீது நேற்று நள்ளிரவில் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மண்டபத்தின் காவலாளி ஓடிவந்து துரத்தியுள்ளார்.

‘’நாங்க அதிமுக காரங்கடா...உங்கள சும்மா விடமாட்டோம்டா...’’ என்று சத்தம்போட்டு ஓடியதாக காவலாளி கூறியுள்ளார்.

நடிகர் வடிவேலு வீடு தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், அழகிரியின் திருமண மண்டபமும் தாக்கப்பட்டுள்ளது. மேலும், அழகிரியின் ஆதரவாளர்கள் வீடுகள் மீதும் தாக்குதல் நடந்து வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் மதுரை திமுக பிரமுகர்களுடன் அழகிரி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த தாக்குதல் தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடைபெறுகிறது. சென்னை வந்து கவர்னரை சந்தித்து புகார் அளிக்கலாமா என்றும் ஆலோசனை செய்யப்படுகிறது.

அழகிரி ஆதரவாளர் பொட்டுசுரேஷ் வீடு மீது தாக்குதல்

மதுரையில் முக்கிய திமுக பிரமுகரும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு நெருக்கமானவருமான சுரேஷ் பாபு என்கிற பொட்டு சுரேஷ் வீடு மீது நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதிமுக தரப்பினர்தான் இந்த தாக்குதல் நடத்தியது என்று அழகிரியிடம் முறையிட்டுள்ளார் பொட்டு சுரேஷ். நடிகர் வடிவேலு வீடு மற்றும் பண்ணை வீடு மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வேளையில் பொட்டு சுரேஷ் வீடு மீது தாக்குதல் நடந்துள்ளதால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொட்டு சுரேஷை தொடர்ந்து மதுரையில் மற்ற திமுக பிரமுகர்கள் வீடு மீதும் தாக்குதல் தொடரலாம் என்பதால் அவர்களின் வீடுகளில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தேர்தல் சமயத்தில் அழகிரி பின்னால் சென்று போட்டோ பிடித்த மதுரை கலெக்டர் சாகாயம் என்ன செய்துகொண்டிருக்கிறார்?

கலைஞருக்கு பழ.நெடுமாறன் எழுதிய பகிரங்கக் கடிதம்.


மதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம்.

"எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே' என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன்.

தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது.

"பொடா' சிறையில் நான் இருந்தபோது, நீங்கள் எழுதிய "தொல்காப்பியப் பூங்கா' நூலைக் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தீர்கள். நானும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன்.

ஆனால், தாங்கள் செய்த, செய்துவரும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் தங்களது இலக்கியத்தைப் பாராட்டுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்திருந்தும் திசை திருப்புவதற்கு முயற்சி செய்திருக்கிறீர்கள். இப்போது மட்டுமல்ல, நீண்டகாலமாகவே இவ்வாறு செய்து வருகிறீர்கள்.

1969-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் முதல்முதலாக என் மீது பொய் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனாலும், முதலமைச்சராக அண்ணா இருந்தவரை, அந்த வழக்கு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், நீங்கள் முதலமைச்சரான உடனேயே என்னைக் கைது செய்து சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தீர்கள்.

6 மாத நன்னடத்தை ஜாமீன் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போகலாம் என நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எனது மனசாட்சி ஏற்க மறுத்தது.

எந்தக் குற்றமும் செய்யாதபோது நன்னடத்தை ஜாமீன் எழுதிக்கொடுப்பதை நான் ஏற்கவில்லை. அதன் விளைவாக, ஆறு மாதம் சிறையில் இருக்க நேர்ந்தது. காமராஜ் மதுரை சிறைக்கே வந்து என்னைப் பாராட்டினார். அதைவிடச் சிறந்த பாராட்டு வேறு இல்லை. இதன் விளைவாக, தமிழகம் முழுவதற்கும் நான் அறிமுகமானேன். இதற்குக் காரணம் நீங்களே என்பதை இன்றும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

1978-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இந்திரா காந்தி மதுரைக்கு வந்தபோது, அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்ற பெயரில் உங்கள் தொண்டர்கள் அவரது உயிருக்கு உலை வைக்க முயன்றார்கள்.

உங்களால் ஏவி விடப்பட்டவர்களின் கொடூரமான தாக்குதல்களிலிருந்து இந்திராவைக் காப்பாற்றிய பேறு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் அகில இந்திய அளவில் அறிமுகமானேன். இதற்கும் நீங்களே காரணம் என்பதை உணர்ந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

1985-ம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் துணையுடன் இலங்கைத் தமிழர் பகுதியில் ரகசியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு சிங்கள ராணுவம் இழைத்து வரும் கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக அறிந்துவந்து வெளியிட்டபோது, நீங்கள் முரசொலி இதழில் என்னைப் பாராட்டி முழுப்பக்க அளவில் கட்டுரை எழுதினீர்கள். இப்போதும் அதை நன்றியோடு நினைவுகூர்கிறேன். ஆனால், நாம் ஒன்று கூடி உருவாக்கிய "டெசோ' அமைப்பை நீங்கள் தன்னிச்சையாகக் கலைத்தீர்கள்.

ஈழத் தமிழர் பிரச்னையில் உங்களுக்கு உண்மையான ஈடுபாடு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறீர்கள் என்பதை உணர்ந்தபோது, உங்களுக்கு எதிர்நிலை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

காமராஜரோடு உங்களை ஒப்பிட்டும், உங்கள் ஆட்சியை காமராஜ் ஆட்சி என வருணித்தும் காங்கிரஸ்காரர்கள் சிலர் பேசுகிறார்கள். புரிந்து பேசுகிறார்களா அல்லது புரியாமல் பேசுகிறார்களா என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும்.

காமராஜ் மக்கள் தொண்டுக்காகத் திருமணத்தைத் துறந்தவர். பெற்ற தாயைக்கூட தன்னுடன் வைத்துப் பேணாதவர்.

ஒன்பது ஆண்டுகள் ஆங்கிலேயரின் கொடுமையான சிறையில் வாடியபோதும் அதுகுறித்து ஒருபோதும் பேசாதவர். மறையும்போது தான் உடுத்தியிருந்த துணிகளைத் தவிர, வேறு சொத்து இல்லாதவர். ஆனால், நீங்களோ மனைவி, துணைவி என பல்கிப் பெருகிய குடும்பங்களுடன் வாழ்பவர். அது மட்டுமல்ல, ஏழைக் குடும்பமான உங்கள் குடும்பம், இன்று ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

தனது தாய் உள்பட, தனது குடும்பத்தவர் எவரையும் அரசியலில் அனுமதிக்காதவர் காமராஜ். அதைப்போலவே தான் உருவாக்கிய தி.மு. கழகத்தில் அண்ணா, தனது பிள்ளைகள் எவரையும் வாரிசாக அறிமுகப்படுத்தவில்லை.

ஆனால், நீங்கள் செய்ததை நாடறியும். 1970-களில் உங்களது மூத்த மகன் மு.க. முத்துவை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகத் திரையுலகில் களமிறக்கினீர்கள். கட்சிக்காரர்களைத் தூண்டிவிட்டு ரசிகர் மன்றங்களை உருவாக்கினீர்கள். இறுதியில் மு.க. முத்துவை நிலைநிறுத்தவும் முடியவில்லை. எம்.ஜி.ஆரை கழகத்தில் நீடிக்க வைக்கவும் முடியவில்லை.

இதன் விளைவாக, 13 ஆண்டுகள் நீங்கள் பதவி இல்லாத இருளில் தடுமாற நேர்ந்தது. ஆனாலும் நீங்கள் பாடம் கற்கவில்லை. இப்போது இளம் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோருக்குப் போட்டியாக உங்கள் பேரன் அருள்நிதியை கலை உலகில் இறக்கியிருக்கிறீர்கள். விஜய்யின் படங்களுக்கு பல முட்டுக்கட்டைகளைப் போட்டுத் தடுக்க நடைபெற்ற முயற்சி வெற்றி பெறவில்லை. விஜய்யின் பகையைத் தேடிக் கொண்டதுதான் மிச்சம். திரையுலகைக் கபளீகரம் செய்ய உங்கள் வாரிசுகள் செய்த முயற்சியின் விளைவாக, ஒட்டுமொத்தத் திரையுலகமும் உங்களுக்கு எதிராகத் திரும்பி விட்டதே!

கடைசிவரை அண்ணா காங்கிரஸ் எதிர்ப்பாளராகவே திகழ்ந்தார். மதுவிலக்குக் கொள்கையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், அண்ணா மறைந்த உடனேயே நீங்கள் மதுக்கடைகளைத் திறந்து இளைய தலைமுறையின் சீரழிவுக்குக் காரணமானீர்கள். அதைப்போல 1971-ம் ஆண்டில் காங்கிரஸýடன் கைகோக்கத் தொடங்கி இன்றுவரை அந்த உறவை நீட்டிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறீர்கள்.

நேரு குடும்பத்துக்கும் தனக்கும் உள்ள உறவை யாரும் பிரித்துவிட முடியாது எனத் தம்பட்டம் அடிக்கிறீர்கள்.

1959-ம் ஆண்டு சென்னைக்குப் பிரதமர் நேரு வந்தபோது கறுப்புக் கொடி என்ற பெயரில் அவர் மீது உங்களது தம்பிகள் செருப்புகளை வீசினார்கள்.

1978-ல் மதுரைக்கு இந்திரா காந்தி வந்தபோது கொலை முயற்சி நடைபெற்றது. அது மட்டுமல்ல, பாட்னாவில் வி.பி. சிங் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, நான் வெளிநாட்டுப் பெண்ணை மணந்தவன் இல்லை என ராஜீவைச் சாடினீர்கள். நேரு குடும்பத்தின்மீது நீங்கள் வைத்திருக்கிற அளவற்ற அன்பின் அறிகுறிகள் இவை.

பல கட்டங்களில் காங்கிரஸ் தலைமையை மிரட்டிப் பணியவைக்க நீங்கள் முயற்சி செய்தீர்கள். மத்திய அமைச்சரவையில் மகனுக்கும், மகளுக்கும் இடம்கேட்டு நீங்கள் நடத்திய மிரட்டல் நாடகமும், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக விடுத்த மிரட்டலும் கடைசியில் உங்களின் சரணாகதியில்தான் முடிந்தது.

1971-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு ஒன்பது இடங்களுக்கு மேல் தர முடியாது. சட்டமன்றத்தில் ஓரிடம்கூட கிடையாது என இந்திராவையே மிரட்டிப் பணியவைத்த நீங்கள், இன்று சோனியாவிடம் ஒவ்வொரு முறையும் சரணடைவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.

அதிகாரம், பணம் ஆகியவற்றின் பலத்தோடு உங்கள் மகன் அழகிரி திருமங்கலம் இடைத்தேர்தலில் கையாண்ட தில்லுமுல்லுகள் உங்கள் ஆசியோடுதானே நடைபெற்றன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற அத்தனை இடைத்தேர்தல்களிலும் திருமங்கலம் சூத்திரத்தின் அடிப்படையில்தானே நீங்கள் வெற்றிபெற முடிந்தது. இதைக் கண்டு மகிழ்ந்து மகனை உச்சிமுகர்ந்து பாராட்டினீர்கள். ஆனால், தேர்தல் ஆணையம் விழிப்படைவதற்கு இவை காரணமாயிற்று என்பதை அப்போது நீங்கள் உணரவில்லை. சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகத்தானே உங்களால் முறைகேடுகளை அரங்கேற்ற முடியவில்லை.

தேர்தல் முடிந்த பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி விடுத்த அறிவிப்பு நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக நாடு முழுவதும் ரூ. 70 கோடி கைப்பற்றப்பட்டது. இதில் ரூ. 60 கோடி தமிழ்நாட்டில் மட்டும் கைப்பற்றப்பட்டது. நாங்கள் ஒரு கோடி ரூபாயைக் கைப்பற்றியிருக்கிறோம் என்றால் 40 முதல் 50 கோடி ரூபாயை விநியோகிக்கவிடாமல் தடுத்து இருக்கிறோம் என்று பொருள் எனக் கூறியுள்ளார்.

அவர் கூற்றுப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் ரூ. 2,400 கோடி முதல் ரூ. 3,000 கோடி வரை பணம் விநியோகிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. ஜனநாயகத்தைச் சீரழிக்கத் தமிழ்நாட்டில் உங்கள் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி குறித்து நீங்கள் இதுவரை வெட்கமடைய வில்லையே, அது ஏன்?

நீங்கள் உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் தொகுதி மாறி போட்டியிட்டும் பயனில்லாமல் போனது ஏன்?

தி.மு.க. வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது ஏன்? மூத்த அமைச்சர்களும் கூட்டணித் தலைவர்களும் படுதோல்வி அடைந்தது ஏன்? நீங்கள் சிந்தித்தது உண்டா? இனிமேலாவது சிந்திப்பீர்களா?

இலவசங்களை அள்ளித் தந்தும், பல ஆயிரம் கோடி ரூபாய்களை வாரியிறைத்தும் பலமான கூட்டணி அமைத்தும் களம் இறங்கியபிறகு தோல்வியைத் தழுவியது ஏன்? இலங்கையில் நடைபெற்ற போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் உண்ணாவிரத நாடகத்தை நடத்தி காங்கிரஸூக்குத் துணை போனது இந்தத் தோல்விக்குரிய முக்கிய காரணமென்பதை இப்போதாவது உணர்கிறீர்களா?

முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தில் மக்களைக் காப்பதற்காக தனது மகனையே களமுனைக்கு அனுப்பிக் காவுகொடுக்க ஒரு தலைவன் முன்வந்தான். அதே காலகட்டத்தில் தில்லியில் தனது மகனுக்கும், மகளுக்கும் பதவி பெறுவதற்காக மடிப்பிச்சை ஏந்தி நின்றார் ஒரு தலைவர் என்ற தீராத பழிக்கு ஆளாகிவிட்டீர்களே!

உங்களின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், இயற்கை வளங்கள் கொள்ளை, மோதல் சாவுகள், உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல், அன்னிய நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்படுத்திய கொடுமை போன்றவற்றை விரிக்கின் பெருகும். உங்கள் தோல்விக்கு இவையெல்லாம் துணை நின்றன.

திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் வல்லவர் நீங்கள் என்பதை நான் மறுக்கவில்லை. நீங்கள் எழுதிய வசனங்களிலேயே என் மனதில் இன்னமும் நிற்பது "மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது' என பூம்புகார் படத்தில் நீங்கள் எழுதிய வசனம் உங்களுக்கு இன்று எல்லா வகையிலும் பொருத்தமாகிறது.

ஈழத் தமிழர்களை மட்டும் நீங்கள் கைவிடவில்லை. தமிழக மீனவர்களையும் கைவிட்டீர்கள். ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க எதுவும் நீங்கள் செய்யவில்லை.

உங்கள் மகள் கனிமொழி, ஆ. ராசாவுடன் கூட்டுச்சேர்ந்து நடத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடிமறைக்க நீங்கள் செய்த முயற்சி எதிர்விளைவை அல்லவா ஏற்படுத்தி விட்டது. ஈழத் தமிழர் பிரச்னையில் துரோகம் செய்த மத்திய அரசுக்கு ஆதரவாக நீங்கள் நடந்து கொண்டதற்குக் கிடைத்த கைமாறுதானே ஸ்பெக்ட்ரம். குடும்ப நலனைக் காப்பாற்ற காங்கிரஸ் தலைமையுடன் பணிந்து போனீர்கள். ஆனால், தமிழக மக்கள் உங்களையும் காங்கிரஸையும் கூட்டணி சேர்ந்த கட்சிகளையும் கூட்டாகத் தண்டித்து விட்டார்கள்.

மதம், ஜாதி, பிராந்திய வேறுபாடுகள் இல்லாமலும் ஒட்டுமொத்த தமிழகமும் உங்களுக்கு எதிராகத் திரண்டது ஏன்? பல காலம் உங்களின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த சென்னை தவிடு பொடியானது ஏன்? அண்ணா வளர்த்த கட்சி, கடைசிக் கட்டத்தில் வடிவேலுவையும், குஷ்புவையும் நம்பி நிற்க வேண்டிய அவலத்துக்கு யார் பொறுப்பு?

கடந்த ஐந்தாண்டு காலத்தில் எந்த மாநில முதலமைச்சரும் சந்தித்திராத பாராட்டு விழாக்களை நடத்தி, இதுவரை யாரும் பெற்றிராத விருதுகளையும் உங்கள் துதிபாடிகள் உங்களுக்கு அளித்தபோது கூச்சமின்றி அவற்றை ரசித்து ஏற்றீர்களே, இன்றைக்கு அந்தத் துதிபாடிகள் உங்களைத் தனிமையில் விட்டுவிட்டு, "அற்ற குளத்து அறுநீர் பறவைகளாக'ப் பறந்துவிட்டார்களே.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்து உயர்ந்த நிலையில் இருந்த காமராஜ் 1967-ம் ஆண்டு தேர்தலில் தோற்றபோது மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறேன் என்று கூறினார். அவருக்கு இருந்த ஜனநாயகப் பண்பு உங்களிடம் காணப்படாதது ஏன்? "மக்கள் ஓய்வளித்து விட்டார்கள்' என்று நீங்கள் கூறியதன் மூலம் ஜனநாயகத்தையும் பொது வாழ்க்கையையும் மாசுபடுத்தி விட்டீர்கள்.

பொது வாழ்க்கைக்கு வருகிறவர்கள் கடைசிவரை மக்களுக்குத் தொண்டாற்றுவதையே கடமையாகக் கொண்டு செயல்படுவார்கள். பதவியில் இருந்தால் மக்கள் தொண்டு, பதவியில் இல்லாவிட்டால் ஓய்வு என்று சொல்பவர் உண்மையான மக்கள் தொண்டராக இருக்க முடியாது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகும் பக்குவம் தங்கபாலுவுக்குக்கூட இருக்கிறது. ஆனால், பொது வாழ்க்கைக்குப் பொன் விழா கொண்டாடிய உங்களுக்கு இன்னமும் அந்தப் பக்குவம் வராதது ஏன்? இந்தக் கட்டத்திலேயாவது பிறரிடம் இல்லையென்றாலும் உங்கள் வாரிசிடமாவது எல்லாவற்றையும் ஒப்படைக்கலாம் என நீங்கள் எண்ணியதுண்டா?

ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரவர்கள் செயல்பாடே அடிப்படை என்பதை வள்ளுவர் கூறுகிறார். குறளோவியம் தீட்டிய தாங்கள், இதை உணராதது ஏன்?

""பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்'' ’’ என்று கூறியுள்ளார்.


தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு இந்தியா கடும் கண்டனம்.


தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு இந்தியா சார்பில் இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

3 நாள் பயணமாக இந்தியா வந்த இலங்கை வெளியுறவு மந்திரி ஜி.எல்.பெரீஸ், டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங், நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி ஆகியோரைச் சந்தித்து பேசினார். வெளியுறவு துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவுடன், பிரதிநிதிகள் குழுவினருடன் பெரீஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையின்போது, தமிழக மீனவர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் தொடர் தாக்குதல்களுக்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்குப்பின் இரு நாடுகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், "அனைத்து மீனவர்களும் மனிதாபிமான முறையில் நடத்தப்படுவார்கள். எந்த சூழ்நிலையிலும் மீனவர்களுக்கு எதிராக பலப்பிரயோகம் செய்வதை நியாயப்படுத்த முடியாது என்று இந்தியாவும், இலங்கையும் ஒப்புக்கொண்டு இருப்பதாக'' குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் கொண்டுவருவதன் அவசியம் குறித்து உடன்பாடு ஏற்பட்டு இருப்பதுடன், விரிவுபடுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் சட்டபூர்வ உரிமை கோரிக்கைக்கு பலமான ஆதரவை இலங்கை மீண்டும் உறுதி செய்து இருப்பதாகவும் கூட்டறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போரின்போது அகதிகளாக இடம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் தங்கள் சொந்த இடத்தில் குடியமர்த்தி, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டிய அவசியம் குறித்து, நெருக்கடி நிலை சட்டங்களை விரைவில் வாபஸ் பெற்று மனித உரிமைகள் மீறல் குறித்த விசாரணையை தொடங்க வேண்டும் என்றும், இந்தியா தரப்பில் வற்புறுத்தப்பட்டு உள்ளது.

இந்த பணியில் இலங்கை அரசு அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட்டு வருவதாக, பெரீஸ் மீண்டும் உறுதி அளித்தார்.

இது தொடர்பாக தமிழர் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இலங்கை அரசு நடத்திவரும் பேச்சுவார்த்தை மற்றும் அதிகார பகிர்வு திட்டத்தின் மூலம் உறுதியான விரைந்த தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 19-ந் தேதி முடிவுக்கு வந்த இறுதிகட்ட போரின்போது ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் மூலம் இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்ததாக ஐ.நா. சபையின் நிபுணர் குழு குற்றம் சாட்டி இருந்தது. இதுகுறித்து சுதந்திரமான அமைப்பு மூலம் விசாரணை நடத்தவும் அந்த குழு சிபாரிசு செய்து இருந்தது.

இலங்கை மந்திரி பெரீசின் 3 நாள் இந்திய பயணம் நேற்று முடிவடைந்த நிலை குறித்து, ஐ.நா. சபையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை அரசின் நிலை குறித்து இந்தியாவிடம் தெரிவித்தாரா? என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஜெயலலிதா: “புதிய கடவுளா? பழைய பிசாசா?”

பாரதிதம்பி.
மே 13-ம் தேதி காலை 10 மணி… தமிழகத் தேர்தல் நிலவரங்கள் தொலைக் காட்சிகளில் பரபரப்புடன் ஒளிபரப்பாகத் தொடங்கின. சன், கலைஞர், ராஜ், பொதிகை தொலைக்காட்சிகள் அரசியல் கட்சித் தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும் தமது ஸ்டுடியோக்குள் அழைத்துவந்து நேரடி ஒளிபரப்பு செய்தன.

பல்வேறு தொகுதிகளில் இருந்தும் வரும் தேர்தல் முன்னணி நிலவரங்களை சொல்லிக்கொண்டே விருந்தினர்களுடன் தேர்தல் பற்றிய கலந்துரையாடல் நடந்தது. அந்த சமயத்தில் ஜெயா டி.வி-க்கு ரிமோட்டை மாற்றினால்… அங்கு, நான்கு ஜோதிடர்களை அழைத்து வந்து ஸ்டுடியோவுக்குள் அமர வைத்து கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். ‘91-ல் ஜெயலலிதா ஆட்சி, 2001-ல் ஜெயலலிதா ஆட்சி. 2011-ல் கண்டிப்பா அம்மா ஆட்சிதான்’ என்று அவர்களும் பின்னி எடுத்தனர். எதிர்வரும் ஐந்தாண்டு கால ஜெயலலிதாவின் ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு இது ஒரு முன்னோட்டம்!

மக்களை நம்பாமல், சொந்தக் கட்சிக்காரர்களை நம்பாமல், கூட்டணிக் கட்சியினரை நம்பாமல், கருணாநிதி குடும்பத்தின் அராஜகத்தை மட்டுமே நம்பி தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றி பெற்றிருக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகத்தை சுரண்டும் அதிகாரத்தை ஜெயலலிதாவுக்கு கை மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள் மக்கள். அ.தி.மு.க. சுவைத்திருக்கும் இந்த மாபெரும் வெற்றியின் ருசி அவர்களே எதிர்பாராதது! ஆனால் நமது ஊடகங்களும், அரசியல் பார்வையாளர்களும், ஜெயலலிதாவின் வெற்றிக்கு பல்வேறு அரசியல், பொருளாதார காரணங்களையும் ‘கண்டுபிடித்து’ சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், ‘இது ஆளுங்கட்சிக்கு எதிரான மக்கள் கோபத்தின் அறுவடை’ என்பதை ஜெயலலிதாவே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுவிட்டார்.

இந்த தோல்விக்கு கருணாநிதி தகுதியானவர் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை இந்த வெற்றிக்கு ஜெயலலிதா தகுதியானவர் இல்லை. இருவரின் ஊழல் விகிதத்தைக் கூட நாம் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டாம். குறைந்தப்பட்சம் ஓர் ஓட்டரசியல் கட்சிக்கு உண்டான உழைப்பைக் கூட ஜெயலலிதா வழங்கவில்லை. கொடநாட்டில் ஓய்வு, அவ்வப்போது அறிக்கைகள், இன்பச் சுற்றுலா போல எப்போதாவது ஒரு போராட்டம் என கடந்த 5 ஆண்டுகள் அவர் எதற்கும் உழைத்தது இல்லை.

’ஜெயலலிதா ரொம்ப தைரியமானவங்க. எதையும் போல்டா செய்வாங்க’ என்கிறார்கள் பலரும். இந்த சித்திரத்தின் ஊற்றுகண் எங்கிருந்து வருகிறது? ஒரு சொட்டு மையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பினார். சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படைப் பிரச்னைகளுக்குப் போராடினால் கூட போலீஸ் படையை ஏவிவிட்டு அடித்து நொறுக்கினார். தன் அமைச்சரவையில் அமைச்சர்களை ஒரு மாதத்துக்கு ஒரு தடவை மாற்றிக்கொண்டே இருந்தார். கூட்டணிக்கு வர சொல்லிவிட்டு தன் போக்குக்குத் தொகுதிகளை அறிவித்தார். வைகோ போன்ற தலைவர்களை கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டார். ஜெயலலிதாவின் இத்தகைய தடாலடி நடவடிக்கைகளைதான் ‘தைரியம்’ என வரையறுக்கிறார்கள். இதற்குப் பெயர் தைரியம் அல்ல, அரசியல் ரவுடித்தனம். உங்கள் வீட்டில், உங்கள் தெருவில் இத்தகைய நடவடிக்கையோடு ஒருவர் இருந்தால் அதை தைரியம் என்றா சொல்வீர்கள்?

ஸ்பெக்ட்ரம் எனும் பகல்கொள்ளை நடந்தது. கார்பொரேட் முதலாளிகளும், தி.மு.க. பிரைவேட் லிமிட்டெட்டும் சேர்ந்து பல லட்சம் கோடி ரூபாய் பணத்தை கேட்டுக்கேள்வி இல்லாமல் கொள்ளை அடித்தனர். பிரதான எதிர்கட்சியாக ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்பலப்படுத்த ஜெயலலிதா எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்ன? எதுவும் இல்லை. போகிற போக்கில் நான்கு அறிக்கைகள் வெளியிட்டதோடு சரி. ஏன் ஜெயலலிதா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை பெரிதுபடுத்தவில்லை என்பதை ஆராய்வோமேயானால், அதன் பதில் தெரிந்த ஒன்றுதான். அது வெறுமனே தி.மு.க.வுக்கும், கருணாநிதிக்கும் எதிரானது மட்டுமல்ல. அது முதலாளிகளுக்கு எதிரானது. அதனால்தான் ஸ்பெக்ட்ரத்துக்கு எதிரான பிரசாரம் ஓட்டரசியலுக்கு உதவும் எனத் தெரிந்தும் ஜெயலலிதா அதைப்பற்றிப் பேசவில்லை. இரண்டாவது பாய்ண்ட், என்ன இருந்தாலும் ஊழலுக்கு எதிராக ஓவர் ஆவேசத்துடன் பேசுவதற்கு ஜெயலலிதாவுக்கும் கொஞ்சம் கூச்சமாக இருக்கும்தானே?!

இப்போது கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தில் சட்டசபையை நடத்தாமல் பழைய செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே பதவி ஏற்பதற்கான வேலைகள் நடக்கின்றன. இதே அளவுகோளின் படி, கருணாநிதி சென்னையைச் சுற்றி, கொண்டுவந்திருக்கும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களை திருப்பி அனுப்பவோ, அவற்றுக்கு வழங்கப்பட்டுவரும் சலுகைகளைத் திரும்பப் பெறவோ முன்வருவாரா ஜெயலலிதா? மாட்டார். ஏனெனில் அவை முதலாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள். காஞ்சிபுரத்தில் சசிக்கலா கும்பல் Midas Golden Distilleries Limited என்ற பெயரில் சாராய கம்பெனி நடத்துகிறது. அதே காஞ்சிபுரத்தில் தி.மு.க.வின் ஜெகத்ரட்சகன் SNJ DISTILLERIES(P) LTD என் ற பெயரில் சாராயக் கம்பெனி நடத்துகிறார். கடந்த தி.மு.க. ஆட்சியில் எப்படி Midas நிறுவனத்துக்கு எந்த பிரச்னையும் வரவில்லையோ, அதுபோல இப்போது ஜெகத்ரட்சகன் கம்பெனிக்கு எந்தப் பிரச்னையும் வரப்போவது இல்லை. இங்கு மட்டுமல்ல… தமிழகம் முழுவதும் கல்விக்கொள்ளை முதல் மணல் கொள்ளை வரையிலான சகலக் கூட்டுக் கொள்ளைகளிலும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கை கோத்துதான் நிற்கிறது. இதற்கு ஏதேனும் பாதிப்பு வரும் என நினைக்கிறீர்களா?

இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தவே அனுமதி மறுக்கப்பட்டது. ஓர் அரங்கக்கூட்டம் கூட நடத்த முடியவில்லை. துண்டு பிரசுரங்கள் அச்சடிக்க முடியவில்லை. அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனத்தை அமுல்படுத்தியிருந்தார் கருணாநிதி. உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணியன்சாமியின் முகத்தில் படிந்த முட்டைக் கரையை வழக்கறிஞர்களின் ரத்தத்தால் துடைத்துவிட்டார். இப்போது வரை அடித்த போலீஸுக்கு சிறு தண்டனையும் கிடைக்கவில்லை. தலித்களின் சம்பந்தியாக தன்னை அறிவித்துக்கொண்டவர், உத்தபுரம் தீண்டாமைச் சுவரை இடிப்பதற்கு எதையும் செய்யவில்லை. இவற்றுக்கு எல்லாம் ஜெயலலிதா மாற்றாக இருப்பார் என நீங்கள் நம்புகிறீர்களா?

சந்தேகம் இல்லாமல் இது ஊழலுக்கு எதிரான மக்கள் மனநிலையின் வெளிப்பாடுதான். ஆனால் ஊழல் மட்டுமே இங்கு பிரச்னை இல்லை. நடந்து முடிந்த தேர்தல், ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் போல நடத்தப்பட்டிருக்கிறது. போலி ஜனநாயகம்தான் என்றாலும் இதுவரை பெயரளவுக்கேனும் மக்கள் பங்கேற்பு இருந்தது. ஆனால், கடந்த தேர்தலில் திட்டமிட்ட வகையில் மக்கள் தேர்தலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ’பணத்தை வாங்குனியா, ஓட்டைப் போட்டியா… போயிட்டே இரு’ என்பதே டீலிங். இதைப்பற்றி வெகுமக்கள் மனநிலை கேள்வி எழுப்பவில்லை. ‘மக்களையே பங்கேற்கவிடாமல் அப்புறம் என்ன மக்களாட்சி?’ எனக் கேட்கும் தார்மீக மனநிலையை பலரும் இழந்துவிட்டனர். சொல்லப்போனால், மக்கள் பங்கேற்பு இல்லாத இந்த ‘அமைதியான’ தேர்தல் மத்தியதர வர்க்க மனநிலையால் வரவேற்கவும் படுகிறது.

ஜெயலலிதாவின் வெற்றியை ஊழலுக்கு எதிரான எழுச்சியாக சித்தரிக்கும் யாரும், தேர்தல் சமயத்தில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதையும், வாங்குவதையும் எதிர்க்கவில்லை. மாறாக, ‘ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்கள் பணம்’ என பேரம் பேசுவதற்கான உபாயத்தையே சொல்லித் தந்தனர். அண்ணாச்சிக் கடையில் ஹமாம் சோப்பு வாங்கிவிட்டு, ’ஷாம்பு ஆஃபர் இருக்கா?’ எனக் கேட்பதைப் போல… ’ஊழல் காசில் உங்கள் பங்கைக் கேட்டு வாங்குங்கள்’ என்கிறார்கள். இது யோக்கியமான பேச்சா? இப்போதும் கூட பலர் ‘பணத்தை எல்லாம் வாங்கிக்கிட்டு மக்கள் தி.மு.க.வுக்கு வெச்சாங்கல்ல ஆப்பு. பணத்தால் மக்களை விலைக்கு வாங்கிடலாம்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு சவுக்கடி’ என ஷங்கர் படத்தின் க்ளைமேக்ஸ் மக்கள் கருத்து போல பேசுகின்றனர். ’பணத்தை வாங்கினாலும் அந்த தாசில்தார் கரெக்டா வேலையை முடிச்சுக் கொடுத்துட்டாருப்பா’ என்பதற்கும், இதற்கும் ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா

’கருணாநிதி அயோக்கியர்தான். ஆனால் ஜெயலலிதா அதற்கு மாற்று இல்லை’ இதை ஏற்றுக்கொள்ளும் பலரும், ‘ஆனாலும் வேற வழி இல்லையே…’ என்ற இடத்தில் வந்து நிறுத்துகின்றனர். ’வேறு வழி இல்லை’ என்ற வாதத்தை முன் வைக்கும் இவர்கள்தான் அரசியல் கட்சிகளின்; முதலாளிகளின் ஊழல்களைப் பற்றிப் பேசும்போது, ‘இது ஒண்ணும் புதுசு இல்லையே’ என்கிறார்கள். 1. ‘வேறு வழியில்லை, 2. எதுவும் புதுசில்லை… என்ற இந்த இரு வசனங்களும் ஒன்றுக்கொன்று நேரடித் தொடர்பு கொண்டவை. இந்த டுபாக்கூர் ஜனநாயகத்தின் உயிர் ஒட்டிக்கொண்டிருப்பது இந்த இரு புள்ளிகளுக்கு இடையில்தான்.

போலி ஜனநாயகம் மட்டுமல்ல… அநீதியான சாதி, ஊழல் என அனைத்தையும் சமரசப் புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தும் வாதமும் ‘எதுவும் புதுசில்லை’ என்பதுதான். ஸ்பெக்ட்ரம் பகல்கொள்ளையில், புரோக்கர் வேலைப் பார்த்த ஊடகவியலாளர் பர்கா தத், தன் முகம் அம்பலப்பட்டதும், ‘மீடியாக்காரர்கள் மீடியேட்டராக செயல்படுவது ஒன்றும் புதுசு இல்லையே’ என்றார். ’இவ்வளவு காலமாக அனுமதித்தீர்கள். இப்போதும் கண்டுகொள்ளாமல் இருப்பதில் உங்களுக்கு என்னப் பிரச்னை?’ என்பது பர்க்கா தத்தின் அறச் சீற்றத்தின் அடிப்படை.

நாம் மறுபடியும் ஜெயலலிதாவுக்கு வருவோம். கடந்த ஐந்து ஆண்டுகால குடும்பக் கொள்ளை கருணாநிதியை அதிகாரத்தில் இருந்து அகற்றியிருக்கிறது. இதுவே ஜெயலலிதாவை அதிகாரத்தில் அமர வைத்துமிருக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் ஜெயலலிதாவும் இதைத்தான் செய்வார் என்பதில் சந்தேகம் தேவை இல்லை. அதனால் இதில் ஒருவரை காட்டி ஒருவரை நியாயப்படுத்தவோ, சமாதானம் அடையவோ எதுவும் இல்லை.

நமது சொந்த மனதின் உணர்ச்சிப்பூர்வமான தர்க்கங்களால் உற்பத்தியாகும் சொற்களுக்கு மெய்யுலகில் மதிப்பும் இல்லை, பொருளும் இல்லை. மெய்யுலகம் வேறு. அது முதலாளிகளால் இயக்கப்படுகிறது. அதன் புரோக்கர்களால் கண்காணிக்கப்படுகிறது. அதன் அடியாட்களால் ஒழுங்குப்படுத்தப்படுகிறது.

அதனால்தான் ஜெயலலிதா வெற்றி பெற்ற உடனேயே, ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கை சீர்படுத்த முன்னுரிமைத் தரப்படும்’ என முந்திக்கொண்டு அறிவித்திருக்கிறார். போலீஸ் படை இன்னும் ஐந்தாண்டு காலத்துக்கு ஆட்டம் போடுவதற்கான மனநிலையை இப்போதே பெற்றுவிட்டது. இனிவரும் அடக்குமுறைகளை ‘இது ஒண்ணும் புதுசு இல்லையே’ என சகித்துக்கொண்டுப் போவதா, அல்லது புதிதாக ஒன்றை நோக்கி போராடுவதா? நாம்தான் முடிவு செய்ய வேண்டும்!

Barathi Thambi

6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .


சேலம் நெத்திமேடு மின்நிலையத்தில் இருந்துதான், சேலம் மாநகரின் பெரும்பான்மையான பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.

இந்த உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தான் 6மணி நேரம் மின்வெட்டு கடந்த 16ந்தேதி முதல் அமுலில் உள்ளது.

இதேபோல் ஒவ்வொரு உட்கோட்டத்திலும் 6மணி நேரம் மின்வெட்டு கடந்த 16ந்தேதி முதல் நடைபெறுகிறது.

கடந்த ஆட்சியில் 2மணிநேர மின்வெட்டு சீராக இருந்தது. மின் பற்றாக்குறை அதிகம் இருந்த காலத்தில்கூட 3மணிநேர மின்வெட்டுதான் நடைமுறையில் இருந்தது. இதுபோல் 6மணி நேர மின்வெட்டெல்லாம் நினைத்து பார்க்காத ஒன்று. மின்வெட்டைச் சொல்லி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான பிரச்சனை இது.

காலை 6மணி முதல் 9மணி வரை., 3மணி நேர மின்வெட்டு.

10.30மணி முதல் 11மணி வரை .,

மதியம் 2மணி முதல் 2.30மணி வரை .,

மாலை4.30மணி முதல் 5மணி வரை .,


இரவு 8.30மணி முதல் 9மணி வரை.,

இரவு 10.30மணி முதல் 11மணி வரை.,

இரவு 1.30மணி முதல் 2மணி வரை.,


இப்படி தினமும் சேலத்தில் 6மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப் படுகிறது.

மின்வெட்டை சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் சென்னையை மட்டும் மின்வெட்டு இல்லாத மாநகரமாக ஆக்கினால் போதும் என்று எண்ணுகிறார்களா?

அல்லது வீதிக்கு வீதி காவலர்களை நிறுத்தினால் போதுமானது என்று எண்ணு கிறார்கள் போலும்.

மின்வாரிய ஊழியர்களிடம் கேட்டால், உங்களுக்கு மின்சாரம் இல்லை என்ற ஒரு பிரச்சனைதான்.

ஆனால் எங்களால் பில் தரமுடியவில்லை, மக்களுக்கு மின்வெட்டிற்கான பதில் சொல்ல முடியவில்லை, எங்கள் பணிகள் எதுவும் சரிவர செய்ய முடியவில்லை, அலுவலுகத்திற்குள் புழுங்க முடிய வில்லை.

இப்படி அவர்களுடைய பிரச்சனையை நம்முன் அடுக்குகிறார்கள்.

தான் ஆட்சிப் பொறுப்பேற்ற 16-05-2011 அன்றையதினமே சங்கிலி பறிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துவிட்டது என்றும் சங்கிலியை பறிக்கும் திருடர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். நாமும் நம்புவோம்

இது போன்ற அதிசயதக்க மாற்றம் மின்துறையில் எப்போது வரும்!!.