Monday, April 11, 2011

பணம் வாங்கிக் கொண்டு மதிமுகவை வெளியேற்றிய அதிமுக. - நாஞ்சில்சம்பத்.


அதிமுக ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம் வாங்கிக் கொண்டு மதிமுகவை வெளியேற்றியுள்ளது என, மதிமுக கொள்கைப் பரப்பு செயலாளர் நாஞ்சில்சம்பத் கூறியுள்ளார்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வாயு கசிந்தால், அதாவது விஷ வாயு கசிந்தால், தூத்துக்குடி சுடுகாடு ஆகும் அபாயம் உள்ளது. எனவேதான் மதிமுக அந்த ஆலையை மூட வேண்டும் என்று கோரி போராட்டங்கள் பல நடத்திவருகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டரீதியாக போராடிக் கொண்டிருக்கிறோம். அந்த ஆலையின் அதிபர் வைகோவை சந்தித்து சரிகட்டிவிடலாம் என்று எண்ணினார். ஆனால் வைகோ அவரை சந்திக்க முன்வரவில்லை. வைகோவின் குரலும், வைகோவின் சகாக்களின் குரலும் சட்டமன்றத்தில் ஒலிக்கக் கூடாது என்பதால், அந்த ஆலை அதிபர் அதிமுகவிற்கு பெருந்தொகை கொடுத்து எங்களை கூட்டணியில் இருந்து கழற்றிவிட ஏற்பாடு செய்துள்ளார்.

இதற்காக போயஸ் தோட்டத்திற்கு ஸ்டெர்லைட் நிறுவனம் பெருந்தொகை கொடுத்துள்ளது. அவர்களும் அதைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள் என்று வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறேன்.

அதிமுக கூட்டணியில் இணைந்திருந்த எங்களை எந்த காரணமும் இல்லாமல் கழட்டிவிட்ட காரணத்தை இதுவரை ஜெயலலிதா கூறவில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்ய அன்றைய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தவர்தான் ஜெயலலிதா.

ஜெயலலிதாவும், ராஜபக்சேவும் ஒரு நேர்கோட்டில் உள்ளதால் அங்கிருந்தும் பணம் வாங்கியிருக்கிறார்கள்.

எங்களை இழந்தவர்களுக்கு ஏதாவது இழப்பு ஏற்படுகிற வகையில் எங்களது தீர்ப்பு இருக்கும். எதை வேண்டுமானாலும் நாங்கள் மன்னிப்போம். துரோகத்தை மன்னிக்க மாட்டோம். துரோகத்தை சாய்ப்பதற்கு எங்கள் தோழர்கள் முடிவு எடுப்பார்கள். என்று நாஞ்சில்சம்பத் தெரிவித்துள்ளார்.

துரோகத்தை சாய்க்கும் வகையில் மதிமுக தொண்டர்களின தீர்ப்பு இருக்கும் : நாஞ்சில்சம்பத்.


அதிமுகவின் துரோகத்தை சாய்க்கும் வகையில் தேர்தலின்போது மதிமுக தொண்டர்கள் முடிவெடுப்பார்கள் என, மதிமுக கொள்கைப் பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

நாகப்பட்டிணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணியில் இணைந்திருந்த எங்களை எந்த காரணமும் இல்லாமல் கழட்டிவிட்ட காரணத்தை இதுவரை ஜெயலலிதா கூறவில்லை. அதிமுகவின் துரோகத்தை மறக்காத மதிமுக தொண்டர்கள் தேர்தலில் தக்க முடிவு எடுப்பார்கள்.

எங்கள் மனச்சாட்சிப் படி நாங்கள் வாக்களிப்போம். ஆனால் எங்களை இழந்தவர்களுக்கு ஏதாவது இழப்பு ஏற்படுகிற வகையில் எங்களது தீர்ப்பு இருக்கும். எதை வேண்டுமானாலும் நாங்கள் மன்னிப்போம். துரோகத்தை மன்னிக்க மாட்டோம். துரோகத்தை சாய்ப்பதற்கு எங்கள் தோழர்கள் முடிவு எடுப்பார்கள்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டரீதியாக போராடிக் கொண்டிருக்கிறோம். அந்த ஆலையின் அதிபர் வைகோவை சந்தித்து சரிகட்டிவிடலாம் என்று எண்ணினார். ஆனால் வைகோ அவரை சந்திக்க வைகோ முன்வரவில்லை. வைகோவின் குரலும், வைகோவின் சகாக்களின் குரலும் சட்டமன்றத்தில் ஒலிக்கக் கூடாது என்பதால், அந்த ஆலை அதிபரின் பணம் சிலருக்கு போயுள்ளது என்றார்

தமிழக சட்டசபை தேர்தல் : பிரச்சாரம் ஓய்ந்தது.

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் கடந்த ஒரு மாதமாக மிக விறுவிறுப்பாக நடந்து வந்தது. இன்று மாலை 5 மணியுடன் இந்தப் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது.

திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி, இன்று தான் போட்டியிடும் திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொண்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அத்துடன் தனது பிரச்சாரத்தை முடித்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்னையில் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு நிறைவு செய்தார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து அதனை நிறைவு செய்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில் இன்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தை முடித்தார்.

இன்று மாலை 5 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக் கூடாது. மைக், ஒலிபெருக்கி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தக் கூடாது. அதே நேரத்தில் வீடு வீடாக அமைதியான முறையில் சென்று வாக்கு சேகரிக்கலாம்.

நாளை பிரச்சாரத்துக்கு ஓய்வு நாள் ஆகும். வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்லும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபடுவார்கள். நாளை மறுதினமான 13ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும்.

அனல் பறக்க நடந்தது இந்த சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரம். திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் இன்னொரு கூட்டணியும் இத்தேர்தலில் போட்டியிடுகின்றன. இது தவிர பாஜக, இந்திய ஜனநாயகக் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் தனியாக போட்டியிடுகின்றன. ஆனால் முக்கியப் போட்டி திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு இடையில்தான் நிலவுகிறது.

முதல்வர் கருணாநிதி 12வது முறையாக வெற்றிக்குத் தயாராகி வருகிறார். திருவாரூர் தொகுதியில் அவர் இம்முறை போட்டியிடுகிறார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியத்தில் நிற்கிறார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

திமுக கூட்டணியில், பாமக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் ஆகியவை முக்கியக் கட்சிகளாக உள்ளன. அதிமுக கூட்டணியில் தேமுதிக, இடதுசாரிகள் முக்கியக் கட்சிகளாக உள்ளன.

வைகோவின் முழக்கம் மிஸ்ஸிங்:

இந்தத் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய 'விஷயமாக' வைகோ திகழ்கிறார். அவரது முழக்கம் கேட்காமலேயே இந்தத் தேர்தல் நடக்கவுள்ளது. அவரது கனீர் குரலால் நடுங்கும் வாய்ப்பை இந்த முறை அரசியல் மேடைகள் இழந்து விட்டன.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்று கேவலப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டு விட்டார் வைகோ. இந்த விரக்தியில், அவர் தேர்தலையே புறக்கணித்து விட்டார். இருப்பினும் பெரும்பாலான மதிமுகவினர் யாருக்கு வாக்களிக்க உள்ளனர் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

வரலாறு காணாத கட்டுப்பாடுகள்:

இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது தேர்தல் ஆணையம் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் கெடுபிடிகளை அமல்படுத்தியது. போஸ்டர் ஒட்டக் கூடாது, ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். இதனால் திருவிழா போல வழக்கமாக களை கட்டியிருக்கும் தேர்தல் பிரசாரம் இந்த முறை மயானக் காட்சி அளித்தது.

வடிவேலுவின் வெடிப் பேச்சு:

அதேசமயம், பிரச்சாரத்தில் சூடுக்கு குறைவே இல்லை. திமுக சார்பி்ல் பிரச்சாரம் மேற்கொண்ட காமெடி நடிகர் வடிவேலு, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை தனிப்பட்ட முறையில் குறி வைத்து லூஸு, அது இது, கருப்பு எம்.ஜி.ஆர், நான்சென்ஸ் என்று தாறுமாறாக தாக்கிப் பேசியது சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் ஹைலைட்டாகும்.

முதல்வர் கருணாநிதி பேசினால் கூடுவதைப் போன்ற கூட்டத்தைக் கூட்டினார் வடிவேலு தனது பேச்சால். அரசியல்ரீதியாக அநாகரீகமானதாக அவரது பேச்சு இருந்தாலும் தொய்ந்து போயிருந்த திமுகவினருக்கு உற்சாகம் தரும் டானிக்காக அவரது பேச்சு அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.

அதேபோல நடிகை குஷ்பு, இயக்குநர் பாக்யராஜ், வாகை சந்திரசேகர் என திரையுலகினர் திமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தனர்.

அதிமுக தரப்பிலும் ஏகப்பட்ட சினிமா நட்சத்திரங்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். நடிகர்கள் ராதாரவி, செந்தில், ஆனந்தராஜ், பொன்னம்பலம், நடிகை சந்தியா என பலரும் வடிவேலுவின் பேச்சுக்கு கவுண்டர் கொடுத்தனர்.

தேமுதிக சார்பில் பெரிய அளவிலான நடிகர், நடிகையர் யாரும் பிரசாரம் செய்யவில்லை. இருப்பினும் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகிய இருவரும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

விஜயகாந்த் பிரச்சாரத்தின்போது தனது கட்சி வேட்பாளரையே அடித்தது, சின்னத்தை மாற்றிக் கூறியது, வேட்பாளர் பெயரை மாற்றிக் கூறியது, திமுக கொள்கை பரப்புச் செயலாளர் என்று சொல்வதற்குப் பதில் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் என்று கூறியது, அதிமுக கொடிகளை அகற்றச் சொன்னது ஆகியவற்றை திமுக தரப்பு டிவிகள் பெரும் பிரச்சினையாக மாற்றி அதைத் திரும்பத் திரும்ப காட்டி அதிமுக-தேமுதிகவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தின.

தேசியத் தலைவர்கள் குவியல்:

இதுவரை இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் பல தேசியத் தலைவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்தனர். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், அத்வானி, வெங்கையா நாயுடு, நரேந்திர மோடி, பிரகாஷ் காரத், சீதாராம் எச்சூரி, பிருந்தா காரத், பர்தான், மாயாவதி, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாக் என பெரும் தேசியத் தலைவர்கள் படையே தமிழகத்தை முற்றுகையிட்டு தத்தமது கட்சிகள், கூட்டணிகளுக்காகப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இத்தேர்தல் பிரச்சராத்தில் அதிமுக தரப்பில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ஈழத் தமிழர் பிரச்சினை உள்ளிட்டவை முக்கியப் பிரச்சினைகளாக எடுத்து வைத்துப் பிரச்சாரம் செய்தனர்.

திமுக தரப்பில் அரசு செய்த சாதனைகள், அதிமுக அரசில் மக்கள் பட்ட வேதனைகள் உள்ளிட்டவற்றை சுட்டிக் காட்டிப் பிரச்சாரம் நடந்தது.

பெரிய அளவில் வன்முறைகள் எதுவும் இல்லாமல் இத்தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருவது காவல்துறைக்கும், தேர்தல் ஆணையத்திற்கும், பொதுமக்களுக்கும் நிம்மதி தருவதாக உள்ளது.

நாளைய ஓய்வுக்குப் பின்னர் 13ம் தேதி புதிய பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்கத் தயாராகி வருகின்றனர்.



விஜயகாந்த் பிரசார வேன் மீது செருப்பு வீச்சு.


ரிஷிவந்தியத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பிரச்சார வேன் மீது செருப்பு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தான் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் வந்த பிரசார வேன் மீது மர்ம நபர்கள் செருப்பை வீசினர். இதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த கூட்டத்தை போலீசார் விரட்டியடித்தனர்.

பிரசார வாகனத்தின் மீது செருப்பு வீசப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


திமுக கூட்டணிக்கு 140 - அதிமுக கூட்டணிக்கு 94 இடங்கள்: நக்கீரன் கருத்துக் கணிப்பு


நக்கீரன் இதழ் நடத்தியுள்ள இறுதிக் கட்ட கருத்துக் கணிப்பின்படி திமுக கூட்டணி 140 தொகுதிகளும், அதிமுக கூட்டணி 94 இடங்களிலும் வெற்றி பெரும் என்று தெரியவந்துள்ளது.

நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மார்ச் 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் நக்கீரன் முதல் கட்ட கருத்துக் கணிப்பு நடத்தியது.

அப்போது அதிமுக கூட்டணியில் மதிமுக இருந்தது. திமுக-அதிமுகவின் இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகள் வெளியாகவில்லை. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 பேர் வீதம் 234 தொகுதிகளில் 1,170 பேர் களமிறங்கி இந்த மெகா சர்வேயை நடத்தினர்.

ஒரு தொகுதிக்கு 400 வாக்காளர்கள் என்ற அடிப்படையில் ஆண், பெண்களிடம் சரிபாதியாக, படித்தவர்கள், பாமரர், கிராமத்தினர், நகர்ப்புறத்தினர், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர், சொந்தத் தொழில் செய்வோர், மாணவர்கள், வீட்டுவேலை செய்வோர், இல்லத்தரசிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர், வியபாரம் செய்வோர், சொந்த விவசாயம் செய்வோர், விவசாயக் கூலிகள், கூலி வேலை செய்வோர், உயர் நிலை பணியாளர்கள், வேலையில்லாதோர் என அனைத்துத் தரப்பினரிடமும் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

தொகுதிக்கு 400 பேரை ஆண்கள், பெண்கள் சரிபாதி அளவிலும், வயதளவில் 18-25, 25-40, 40-55, 55க்கு மேற்பட்டோர் என்று பிரித்தும் தேர்வு செய்து கருத்துக் கணிப்பை நக்கீரன் நடத்தியது.

அதிலும் முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மத வழி சிறுபான்மையினர் என அந்ததந்தப் பகுதியில் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதாச்சாரப்படி வாக்காளர்களை அடையாளம் கண்டு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

அந்தக் கருத்துக் கணிப்பின்படி திமுக கூட்டணி 146 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 80 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளதும், 8 தொகுதிகளில் நிலைமையை கணிக்க முடியாத அளவுக்கு இரு கட்சிகளும் சம பலத்தில் உள்ளதும் தெரியவந்தது.

அதே நேரத்தில் பெரும்பாலான தொகுதிகளில் இரு கட்சிகளும் ஒன்று அல்லது இரண்டு சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் ஒருவரைவிட ஒருவர் முன்னணியில் இருந்ததும் தெரியவந்தது.

இந் நிலையில் அதிமுக கூட்டணியை விட்டு மதிமுக வெளியேறியது. மேலும் திமுக, அதிமுக ஆகியவை போட்டி போட்டுக் கொண்டு தங்களது இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன. இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களையும் அறிவித்து பிரச்சாரத்தையும் தொடங்கின.

நக்கீரன் 2வது கட்ட கருத்துக் கணிப்பு:

இந் நிலையில் நக்கீரன் 234 தொகுதிகளிலும் தனது 2வது கட்ட கருத்துக் கணிப்பை நடத்தியது.

திமுக கூட்டண் 140-அதிமுக கூட்டணி 94:

இதன் விவரங்களை கடந்த 3 இதழ்களில் நக்கீரன் வெளியிட்டது. அதன்படி, திமுக கூட்டணிக்கு மொத்தம் 140 இடங்களும் அதிமுக கூட்டணிக்கு 94 இடங்களும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

திமுகவுக்கு 90 இடங்கள்:

திமுக கூட்டணியில் திமுகவுக்கு 90 இடங்களும், காங்கிரசுக்கு 24 இடங்களும், பாமகவுக்கு 17 இடங்களும், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 4 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்குக்கு 3 இடங்களும், கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு 1 இடமும், ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னணிக் கழகத்துக்கு 1 இடமும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

இந்தக் கூட்டணிக்கு மொத்தத்தில் 140 இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

அதிமுகவுக்கு 74 இடங்கள்:

அதிமுக கூட்டணியில் அதிமுகவுக்கு 74 இடங்களும், தேமுதிகவுக்கு 8 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 இடங்களும், மனித நேய மக்கள் கட்சிக்கு 1 இடமுநம், சமத்துவ மக்கள் கட்சிக்கு 1 இடமும், கொங்கு இளைஞர் பேரவைக்கு 1 இடமும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

அதிமுக கூட்டணிக்கு 94 இடங்கள் கிடைக்கும் என்று நக்கீரன் கூறியுள்ளது.


30 நகரங்கள் பூகம்ப ஆபத்து பகுதிகள் : தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி தகவல்.


சென்னை மும்பை உள்பட 30 நகரங்கள், பூகம்ப ஆபத்து பகுதிகளாக இருக்கின்றன என்று, தேசிய பேரழிவு தடுப்பு அதிகாரி கூறினார்.

தேசிய பேரழிவு தடுப்பு ஆணையத்தின் துணை தலைவர் சஷிதார் ரெட்டி கூறியதாவது:

இந்தியாவில் பூகம்ப ஆபத்து உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்தியாவில் உள்ள நிலத்தில் 58.6 சதவீத பகுதி, பூகம்ப ஆபத்து உள்ள பகுதியாக தெரிய வந்து இருக்கிறது. இவை 4 மற்றும் 5 ம் நிலையில் உள்ள அதிர்வு பகுதியாக கருதப்படுகிறது. இதில் மொத்தம் 235 மாவட்டங்கள் அடங்குகிறது.

சென்னை, டெல்லி, மும்பை, புனே, திருவனந்தபுரம், கொச்சி, கொல்கத்தா, பாட்னா, அகமதாபாத், டேராடூன் உள்பட 38 நகரங்கள் இந்த பகுதியில் வருகின்றன. இவை சராசரியான என்பது முதல், அதிகப்பட்சமான பூமி அதிர்ச்சி பகுதிகளாக கருதப்படுகின்றன.

நாம் முந்திய காலத்திலேயே தவறு செய்து விட்டோம். பூமி அதிர்வை தாங்கும் கட்டிடங்களை கட்ட தவறி விட்டோம். இப்போது பூமி அதிர்ச்சியை தாங்கும் 10 விதமான கட்டிடங்களை கட்ட பரிந்துரை செய்து இருக்கிறோம். புதிய கட்டிடங்கள் கட்டும் போது, அவை அதிர்ச்சியை தாங்கும் தரத்துக்கு கட்டப்பட வேண்டும் என்று கடுமையான கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.

இதுபற்றி மும்பை ஐ.ஐ.டி. உள்பட 6 முக்கிய என்ஜினீயரிங் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி. புதிய திட்டங்களையும் தயாரித்து வருகிறோம். இதுபற்றி மாநிலங்களுக்கு விளக்கமாக கடிதம் அனுப்பி இருக்கிறோம். ஆனால் மாநில அரசுகளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

இயற்கை பேரழிவை தடுத்தல் என்பது ஒரு நாள் பணி அல்ல. அதற்கு கூட்டு முயற்சி தொடர்ந்து தேவை. எனவே அனைத்து அதிகாரிகளும், மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

பூமி அதிர்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான் நாடு, இயற்கையிலேயே பூமி அதிர்வுக்கு உள்பட்ட பகுதியாகும். அங்கு பூமி அதிர்ச்சியை தாங்கும் கட்டிடங்கள்தான் கட்ட வேண்டும் என்று விதி அமலில் இருக்கிறது. இவ்வாறு அதிகாரி சஷிதார் ரெட்டி கூறினார்.


தமிழ்நாட்டுக்கும்,தமிழக மக்களுக்கும் இது வாழ்வா? சாவா? தேர்தல்; ஜெயலலிதா பேட்டி.

தமிழ்நாட்டுக்கும்,தமிழக மக்களுக்கும் இது வாழ்வா? சாவா? தேர்தல்; ஜெயலலிதா பேட்டி

சென்னையில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு போயஸ் கார்டனுக்கு திரும்பிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வீட்டு வாசலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:-அ.தி.மு.க.வுக்கு இது வாழ்வா? சாவா? தேர்தலா?

பதில்:-இது எங்களுக்கு அல்ல, தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் தான் வாழ்வா? சாவா? தேர்தல். எனவே தி.மு.க. தோற்கடிக்கப்பட வேண்டும்.

கேள்வி:-உங்களை ஊழல்வாதி என்று கருணாநிதி கூறியிருக்கிறாரே?

பதில்:-ஏற்கனவே இதுபற்றி நான் பலமுறை விளக்கி சோர்ந்துவிட்டேன். தி.மு.க. ஆட்சியில் என் மீது வேண்டுமென்றே போடப்பட்ட பொய் வழக்குகள் தான் அவை. அதனால் தான் 13 வழக்குகளை நான் சந்திக்க நேர்ந்தது. நானும் ஊழல்வாதி அல்ல, அ.தி.மு.க.வும் ஊழல் கட்சி அல்ல.

கேள்வி:-மத்திய நிதிமந்திரி பிரணாப் முகர்ஜி தமிழகத்தின் நிதிநிலைமை நல்ல நிலையில் இருப்பதாக கூறியிருக்கிறாரே?

பதில்:-முழுமையான தகவல்கள் தெரியாமல் அவர் பேசியிருக்கிறார். தமிழகத்தில் தொழில்துறை, விவசாயம் போன்ற அனைத்துமே சீரழிந்து இருக்கிறது.

கேள்வி:-நீங்கள் ஆட்சிக்கு வந்தால் தி.மு.க.வினர் மீது ஊழல் வழக்குகள் போடுவீர்களா?

பதில்:-தேர்தல் முடிந்து முதலில் முடிவுகள் வெளிவரட்டும். ஊழல் பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்தபின் தேவைப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கேள்வி:-6-வது முறை முதல்-அமைச்சராக வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளாரே?

பதில்:-அது அவரது விருப்பம். ஆனால் மக்கள் அவர் 6-வது முறையாக முதல்-அமைச்சராக வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

தே.மு.தி.க.வினருக்கு தோல்வி பயம்: ரிஷிவந்தியம் தொகுதியில் திட்டமிட்டபடி பிரசாரம்; நடிகர் வடிவேலு ஆவேசம்

தே.மு.தி.க.வினருக்கு தோல்வி பயம்: ரிஷிவந்தியம் தொகுதியில் திட்டமிட்டபடி பிரசாரம்; நடிகர் வடிவேலு ஆவேசம்

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் வடிவேலு சுறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரசாரத்துக்காக நேற்று சிதம்பரத்தில் தங்கியிருந்த முதல்-அமைச்சர் கருணாநிதியை, நடிகர் வடிவேலு சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தனக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக கருணாநிதியிடம் கூறினார்.

பிறகு மிரட்டல்களுக்கு பயப்படாமல் பிரசாரத்தை தொடருவேன் என நிருபர் களிடம் தெரிவித்தார். அதன்படி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நடிகர் வடிவேலு பிரசாரத்தை தொடர்ந்தார். நேற்று இரவு 10.30 மணி அளவில் திருக்கோவிலூரை அடுத்த கண்டாச்சிபுரம் பகுதியில் அவர் பொது மக்களை பார்த்து கையசைத் தவாறே சென்றபோது மர்ம மனிதர்கள் அவரை நோக்கி செருப்பு மற்றும் கல்லை வீசிவிட்டு தப்பினர்.

இதில் வேனில் இருந்த திருக்கோவிலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் தங்கம் தலையில் படுகாயமடைந்தார். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. கல்வீச்சில் காயமடைந்த தங்கம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். கல்வீச்சு சம்பவம் குறித்து திருக்கோவிலூரில் நிருபர்களிடம் வடிவேலு கூறியதாவது:-

திருக்கோவிலூரை அடுத்த கண்டாச்சிபுரத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக வேனில் வந்து கொண்டிருந்தேன். இரவு 10 மணிக்கு மேலாகி விட்டதால் தேர்தல் ஆணைய விதிப்படி வேட்பாளரை ஆதரித்து பேசாமல் கையை அசைத்தபடியே வந்தேன். அப்போது என்மீது ஒரு செருப்பு வந்து விழுந்தது. அதை நான் பிடித்து தூக்கி யெறிந்து விட்டேன்.

அடுத்து என்னை நோக்கி வீசப்பட்ட கல்லை தடுக்க முயன்ற தி.மு.க. வேட்பாளர் தங்கத்துக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இந்த காயம் எனக்கு ஏற்பட்டதாகவே கருதுகிறேன். தே.மு.தி.க.வினர் தோல்வி பயத்தால் இதுபோல் செயல்படுகின்றனர். இதுமாதிரியான தாக்குதல்களால் எனது பிரசாரத்தை தடுத்து நிறுத்த முடியாது.

கலைஞர் மீண்டும் முதல்-அமைச்சராகும் வகையில் அவரது திட்டங்களை பேசி மக்களிடம் கொண்டு சேர்ப்பேன். ரிஷிவந்தியம் தொகுதியில் திட்டமிட்டபடி எனது பிரசாரம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்வீச்சில் காயமடைந்த தி.மு.க.வேட்பாளர் தங்கம் கூறியதாவது:-

தேர்தலில் எனது வெற்றி நிச்சயிக்கப்பட்டு விட்டது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர் அணியினர் இதுபோன்ற அராஜகங்களில் ஈடுபடுகின்றனர். இதற்கு பொதுமக்கள் முடிவு கட்டுவார்கள். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எனது அரசியல் பணி முடிந்து விடாது. பொதுமக்களை தொடர்ந்து சந்திப்பேன்.

இவ்வாறு கூறினார். கல்வீச்சு சம்பவம் குறித்து கண்டாச்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலைஞர் தான் முதலமைச்சர் : சேலத்தில் நடிகர் நெப்போலியன் பிரசாரம்.

கலைஞர் தான் முதலமைச்சர்:மக்கள் தெளிவாக உள்ளனர்; சேலத்தில் நடிகர் நெப்போலியன் பிரசாரம்

சேலம் வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயப்பிரகாஷ், தெற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்தை ஆதரித்து நடிகரும், மத்திய மந்திரியுமான நெப்போலியன் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். இவரது பேச்சை திரளானோர் வந்து கேட்டு ரசித்தனர். அவர் பேசும் போது இடைஇடையே பாட்டுப்பாடினார். இதை பொதுமக்கள் கேட்டு ரசித்தனர். இந்த பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-
கலைஞர் மட்டும் தான் சொன்னதை செய்வார். இது மக்களுக்கு தெளிவாக தெரியும். தலைவர் கலைஞரை முதல்அமைச்சராக்க மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள். இதில் அவர்கள் தெளிவாக உள்ளனர். இதனால் மீண்டும் தலைவர் கலைஞர் ஆட்சி அமைவது உறுதி. இலவச திட்டங்களை தலைவர் கலைஞர் கொடுத்து மக்களை சோம்பேறி ஆக்குகிறார் என்கிறார்.

2ரூபாய்கு 1கிலோ அரிசி எப்படி தரமுடியும் என ஜெயலலிதா கூறி கலைஞர் அறிவித்த திட்டங்களை எல்லாம் கிண்டல் அடித்தார். ஆனால் இன்று நான் ஆட்சிக்கு வந்தால் 20கிலோ அரிசி இலவசமாக தருவேன் என்கிறார்.

இது மட்டும் எப்படி முடியும். ஏழைகள் நலன் காக்க பல திட்டங்களை தந்தவர் தலைவர் கலைஞர். அவர் முதலமைச்சராக உதய சூரியன், கை சின்னத்திற்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.


வடிவேலுவுக்கு வெடிகுண்டு மிரட்டல் : வேன் மீது கல்வீச்சு : அதிமுக பிரமுகர்கள் கைது.


வடிவேலுவுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிமுக பிரமுகர்கள் கைது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் வடிவேலு ரிஷிவந்தியம் தொகுதியில் பிரச்சாரத்தை முடிக்க திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் கார் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மிரட்டல் குறித்த புகாரை அடுத்து நடிகர் வடிவேலுவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரச்சாரம் தொடர்வது பற்றி திமுக தலைவர் கலைஞருடன் வடிவேலு சிதம்பரத்தில் ஆலோசனை மேற்கொண்டார். வெடிகுண்டு மிரட்டல் குறித்து வடிவேலு செய்தியாளர்களிடம் பேசுகையில், கலைஞர், பொதுமக்கள் தயவால் எனக்கு எந்த பயமும் இல்லை. ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த டெபாசிட் இழப்பார். வெடிகுண்டு மிரட்டலுக்கு ஒருபோதும் பயப்படமாட்டேன். உச்சக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடுவேன் என்றார்.

இதனிடையே வடிவேலுவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் கருப்புசாமி, கந்தசாமி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்த இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது


வடிவேலு வேன் மீது கல்வீச்சு: வேட்பாளர் காயம்.


விழுப்புரம் மாவட்டம் அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகர் வடிவேலு வேன் மீது கல்வீசப்பட்டது. இதில் தடுக்க முயன்ற தி.மு.க., வேட்பாளர் மண்டை உடைந்தது.

திருக்கோவிலூர் தொகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது 10 பேர் கொண்ட கும்பல் செருப்பு மற்றும் கற்களை வீசினர். இதில் வடிவேலுவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. வேட்பாளர் தங்கம் மீது கல்விழுந்ததில் அவரது மண்டை உடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வேட்பாளர் தங்கம் கூறியதாவது, பிரச்சார வேன் மீது திடீரென கல் வீசப்பட்டது. தொடர்ந்து கல் வீசப்பட்டதால் வடிவேலுவுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதற்காக அவரை மறைத்து நின்றேன். அப்போது என் மீது கல் பட்டுவிட்டது. இதனால் எனக்கு காயம் ஏற்பட்டுவிட்டது. இதனை தேமுதிகவினர்தான் செய்துள்ளனர். தண்டாச்சிபுரம் என்ற இடத்தில் டீ கடை வைத்துள்ள தேமுதிகவைச் சேர்ந்த அடியாட்கள் 10 பேர் ஒன்றாக கூடிக்கொண்டு கல் மற்றும் செருப்புகளை வீசினார்கள் என்றார்.

இதுகுறித்து வடிவேலு கூறுகையில், இதற்கு எல்லாம் பயந்து நான் பிரச்சாரத்தை நிறுத்தப்போவதில்லை. தோல்வி பயம் காரணமாக எதிரணியினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். குண்டு வீசப்படும் என்று போனில் மிரட்டினார்கள். இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டு. இதுதொடர்பாக போலீசார் மிரட்டல் விடுத்தவரை கைது செய்துள்ளனர் என்றார்.


விஜயகாந்த் சாதாரண அச்சாணி: வடிவேலு
.

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பொன்முடியை ஆதரித்து விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர்,

அ.தி.மு.க. கூட்டணியில் புதியதாக ஒருவரை அந்த கூட்டணியில் சேர்த்து உள்ளார்கள். அவரை கருப்பு எம்.ஜி.ஆர். என்று கூறு கிறார்கள். நான் கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

அ.தி.மு.க. மிகப்பெரிய கட்சி எம்.ஜி.ஆரின் உண்மை யான தொண்டர்கள் விஜயகாந்தை ஏற்றுக் கொள்கிறார்களா. நடிப்பதற்கு படம் இல்லை என்பதற்காக கட்சி ஆரம் பித்துவிட்டார். வேட்பாளர்களை அடிக்கக் கூடிய ஒரே தலைவர் விஜயகாந்த்தான்.

எம்.ஜி.ஆருக்கும், விஜயகாந்த்துக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா. என்னைக் கூட வந்த புதிதில் கருப்பு நாகேஷ் என்று கூறினார்கள். ஆனால் நான் அவர் எவ்வளவு பெரிய மனிதர் என்று கூறி அப்படியெல்லாம் பெயர் வைக்க கூடாது என்று தெரிவித்தேன். எனக்கு இருக்கின்ற அறிவுகூட உங்களுக்கு இல்லை.

இந்தியாவின் மிகப்பெரிய அரசியல்வாதி கலைஞர் மிகப்பெரிய அரசியல் விஞ்ஞானி கருணாநிதி. விஜயகாந்த் சாதாரண அச்சாணி என்றார்.