Saturday, May 28, 2011

கறுப்பு பணத்தை பறிமுதல் செய்ய உயர்மட்ட குழு அமைப்பு : மத்திய அரசு நடவடிக்கை.


கறுப்புப் பணத்தை மீட்பதற்காக நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் தலைவர் தலைமையில் ஆய்வுக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் சிலர் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், கறுப்பு பணத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய ஓர் உயர்மட்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இக்குழு, மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் தலைமையில் அமைக்கப்பட்டு உள்ளது.

இக்குழு, கறுப்பு பணத்தை கட்டுப்படுத்துவது, அதை வெளிநாடுகளில் கொண்டு சென்று பதுக்குவது, அதை பறிமுதல் செய்வது ஆகியவை தொடர்பான சட்டங்களை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை ஆராயும்.

சட்டவிரோதமான வழிகளில் கறுப்பு பணம் உருவாவதை கட்டுப்படுத்த, தற்போதைய சட்டரீதியான வழிமுறைகளையும், நிர்வாக வழிமுறைகளையும் ஆய்வு செய்யும். இந்த குழு, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தி, 6 மாதங்களுக்குள் மத்திய அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்.

சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் ரஜினி !


சென்னையில் அறிவித்தது போல, சிங்கப்பூர் கிட்னி பவுண்டேஷன் மருத்துவ மனையில் ரஜினி சிகிச்சை பெறவில்லை. சிங்கப்பூரில் மிகப் பிரபலமான மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த மருத்துவமனையில் இந்தியாவின் அமர்சிங் உள்ளிட்ட பிரபல விஐபிக்கள் சிகிச்சைப் பெற்று நலமுடன் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்திறங்கிய ரஜினியை, மவுன்ட் எலிசபெத் மருத்துமனையில் இப்போது சேர்த்துள்ளனர் அவரது மகள்களும் மருமகன்களும்.

இன்று இரவு விமானத்தில் செல்லும் லதா ரஜினி, மருத்துவமனையில் ரஜினியைப் பார்த்துக் கொள்கிறார். அவருடன் ரஜினியின் பேரக் குழந்தைகள் யாத்ரா, லிங்காவும் செல்கிறார்கள்.

விலைவாசி உயர்வு, ஊழல் பெருக காங்கிரஸ் அரசே காரணம்.


இந்தியாவில் ஊழலுக்கும், அத்தியாவசிய பொருள்கள் விலை உயரவும் காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என்று தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவர் என். சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இவை இரண்டையும் நாட்டிலிருந்து வெளியேற்ற ஒருங்கிணைந்த போராட்டம் அவசியம் என்று அவர் கூறினார். ஒவ்வொரு மாநிலத்திலிருந்து படிப்படியாக காங்கிரஸ் கட்சியை வெளியேற்றுவதன் மூலம்தான் நாட்டில் ஊழலற்ற ஆட்சியை உருவாக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

தெலுங்கு தேசம் கட்சியின் ஆண்டு கூட்டம் ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநாட்டில் சந்திரபாபு நாயுடு பேசியது:

அனைத்து பொருள்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்த்தப்படுகிறது. இதனால் பொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது. ரூ. 12 லட்சம் கோடி அளவுக்கு பட்ஜெட் போடும் அரசால், விவசாய பொருள்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க முடியாதது மிகவும் வெட்கக்கேடான விஷயம். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் அரசு பதவி விலகிவிடலாம். மக்களே விலையை நிர்ணயித்துக் கொள்வார்கள் என்று அவர் கூறினார்.

விவசாயிகள் சொல்ல மாட்டாத அளவுக்கு துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் பிரச்னைகளுக்கு அரசு தீர்வு காணாத பட்சத்தில் அவர்கள் விரக்தியின் உச்சத்துக்கு செல்கின்றனர். விவசாயிகளின் பிரச்னை மிகவும் சோகமானது. அவர்கள் பிறந்ததிலிருந்து இறக்கும்வரை கடனாளியாகவே இருக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. தாங்கள் விளைவித்த பொருள்களை ஏற்றுமதி செய்யக்கூட முடியாத நிலைக்கு அரசின் கட்டுப்பாடுகளே காரணமாகும்.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரையை அரசு செயல்படுத்தாதது ஏன்?, அதை செயல்படுத்தினால் விவசாயம் லாபகரமான தொழிலாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி அரசியல் அனுபவம் இல்லாதவர். இதனால் சிக்கலான பிரச்னைகளுக்கு அவரால் தீர்வு காணமுடியவில்லை. மாநிலத்தில் அரசு நிர்வாகம் செயலிழந்துவிட்டது. தங்கள் விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை ஆற்றில் கொட்டுகின்றனர், அல்லது எரித்துவிடுகின்றனர். மாநிலத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து 75 லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்ய இந்திய உணவுக் கார்ப்பரேஷன் (எப்சிஐ) தயாராக இருந்தபோதிலும், அதற்கு உரிய ஒருங்கிணைப்பை மாநில அரசு செய்யத் தவறிவிட்டது என்று அவர் குற்றம் சாட்டினார்.

தெலுங்கானா விவகாரம்: ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்குவது தொடர்பாக மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை வெளியிடவேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கருத்துகளை தெரிவித்துவிட்டன. இதற்குப் பிறகும் மத்திய அரசு தனது கருத்தை வெளியிடாமல் இருப்பது பிரச்னையை மேலும் சிக்கலாக்கும். இந்த விஷயத்தில் மத்திய அரசால் உறுதியான முடிவை எடுக்க முடியவில்லை என்பது தெரிகிறது. இதனால் மாநில அரசு எந்தவித உறுதியான முடிவையும் எடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. தெலுங்கு மொழி பேசும் மக்கள் விஷயத்தில் மத்திய அரசு துரோகம் இழைத்து வருகிறது என்று அவர் கூறினார்.

தெலுங்கானா விவகாரத்தை ஆந்திர அரசு அரசியலாக்குகிறது. தனித் தெலுங்கானா உருவாக்குவது தொடர்பாக டிசம்பர் 9, 2009-ல் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டு பின்னர் அரசியல் கட்சிகள் இரண்டு பிரிவாக பிளவுபட்டதையடுத்து அதை திரும்பப் பெற்றது ஆகிய நடவடிக்கைகள் மத்திய அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது.

அரசு அமைத்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் முன்பு அனைத்து அரசியல் கட்சிகளும் கருத்துகளைத் தெரிவித்துள்ளன. ஆனால் இதுவரை அறிக்கை குறித்து மத்திய அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை. ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டாலும், இருபகுதிகளிலும் உள்ள தெலுங்கு பேசும் மக்களின நலனை காக்க வேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதாக சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார்.

தனித் தெலுங்கானா கோரி போராடும் தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் இணைவது நடந்தே தீரும். அதனால்தான் தெலுங்கானா விவகாரம் குறித்து சோனியா காந்தியை எவ்வித கேள்வியும் கேட்காமல் டிஆர்எஸ் கட்சி உள்ளது.

அக்கட்சியின் முக்கிய நோக்கமே தெலுங்கு தேசம் கட்சியை முடக்குவதுதான். ஆனால் என்.டி. ராமாராவால் உருவாக்கப்பட்ட இக்கட்சியை எந்த ஒரு சக்தியாலும் முடக்க முடியாது. மக்கள் ஆதரவு எப்போதும் கட்சிக்கு உள்ளது என்று சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார்.

தயாநிதி மாறன்- சோனியா சந்திப்பின் பின்னணி என்ன?

ஜெ.வெங்கட்ராமன்


தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரனும் மத்திய ஜவுளித் துறை அமைச்சரு மான தயாநிதி மாறன், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்திருப்பது தில்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனிமொழி, 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைச் சந்தித்த கருணாநிதி ஒரு நாள் தில்லியில் தங்கியிருந்த போதும், மரியாதை நிமித்தமாகக் கூட காங்கிரஸ் தலைவரைச் சந்திக்காதது குறித்து சென்னையில் நிருபர்கள் கேட்டனர். இந்தத் தருணத்தில் அவரைச் சந்திப்பது முறையாக இருக்காது என்பதற்காகவே சந்திப்பு தவிர்க்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.

மேலும் ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் 2-ஜி அலைகற்றை ஒதுக்கீடு வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய இருப்பதாகவும் அதில் தமிழகத்திலிருந்து மேலும் சில முக்கிய புள்ளிகள் கைது செய்யப்படலாம் என்றும் தெரிகிறது.

ஆ.ராசாவைத் தொடர்ந்து, அவருக்கு முன்னதாக மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறனின் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுகவின் சார்பாக இதுவரை தில்லி பணிகளை கட்சி நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர். பாலு மேற்கொண்டு வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் திடீரென்று தற்போது சந்தித்திருப்பது தலைமையின் ஒப்புதலுடன் நடைபெற்று இருக்குமா என்பது போன்ற கேள்விகள் தில்லி அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்படுகின்றன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முதல் முறையாக ஆட்சி அமைத்தபோது அதில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பதவியில் தயாநிதி மாறன் இருந்தார். முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு மத்திய அரசுடனும் காங்கிரஸ் தலைமையுடனும் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வத் தூதராக செயல்பட்டது தயாநிதி மாறன்தான். அவரது அமைச்சர் பதவியை திமுக தலைமை பறித்த பிறகு, அவர் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தார். மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, முதல் முறையாக 2011 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே நடைபெற்ற கடைசி கட்டப் பேச்சுவார்த்தையின் போதுதான் தயாநிதி மாறனை மத்திய ரசாயனத் துறை அமைச்சர் மு.க.அழகிரியுடன் காங்கிரஸ் தலைமையுடன் சமரசம் பேச திமுக அதிகாரப்பூர்வமாக ஈடுபடுத்தியது.

தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது, தனது அமைச்சகம் முழு சுதந்திரத்துடன் முடிவெடுக்க உரிமை வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதாவது, 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தான் மட்டுமே தன்னிச்சையாக முடிவெடுக்க உரிமை கோரியதாகக் கூறப்படுகிறது.

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விசாரணையில், 1999-ம் ஆண்டு முதல் தொலைத்தொடர்புத் துறை சம்பந்தப்பட்டவர்களிடம் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்தக்கூடும் என்று தெரிகிறது. இத்தகைய சூழலில் சோனியா காந்தியை தயாநிதி மாறன் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக தலைமையின் ஒப்புதலுடன்தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தயாநிதி மாறன் சந்தித்தாரா, இல்லை, தனிப்பட்ட முறையில் சந்தித்தாரா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. தயாநிதி மாறன், சோனியா காந்தி சந்திப்பின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிப் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாதும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

மாநில தேர்தல் ஆணையராக சோ.அய்யர் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு.

மாநில தேர்தல் ஆணையராக சோ.அய்யர் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து அரசு தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கிற வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக இருந்த சையத் முனீர் ஹோடா ராஜினாமா கடிதம் அளித்தார்.

அவர் பதவி விலகலுக்கு கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா ஒப்புதல் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சோ.அய்யரை, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக நியமித்து அரசு ஆணையிடுகிறது.

இவரது பதவிக்காலம் 2011-ம் ஆண்டு மே 27-ந் தேதி முதல் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவைக் கொல்ல முயன்றதாக புகார் - அபாண்டமான குற்றச்சாட்டு என புலிகள் மறுப்பு.


தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கொலை செய்ய விடுதலைப் புலிகள் திட்டமிட்டார்கள் என்ற கே.பியின் குற்றச்சாட்டு அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டு என்றும், இந்தியாவில் தங்களுக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சி என்றும் விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

புலிகளின் தலைமைச் செயலகத்தின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ஆ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

2009 மே மாதம் 18ம் நாளிலிருந்து எமது ஆயுதப் போராட்டம் மெளனிக்கப் பட்டுள்ளதாக அறிவித்த நிலையில், எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தை நாம் ஜனநாயக வழியில் முன்னெடுத்து வருகிறோம்.

எமது சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச தியாகங்களை எமது போராளிகள் செய்திருக்கிறார்கள். காலத்துக்குக் காலம் எமது அமைப்பின் போராட்ட முறைகளை மாற்றியமைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்திருக்கிறோம்.

கரந்தடிப் படை நடவடிக்கையில் தொடங்கி எதிரியால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் படை நடவடிக்கைகள் பலவற்றை எதிர்த்தும், எதிரியின் படைத்தளங்களைத் தகர்த்தும், எமது நிலப்பகுதிகளை மீட்டெடுத்து, ஒரு நாட்டுக்குரிய முழுமையான நிர்வாக மற்றும் படைக் கட்டமைப்புக்களை நிலைநிறுத்தி, தனிச்சுதந்திர தேசத்துக்கான கட்டுமானங்களை உருவாக்கி மக்களின் சுதந்திர வாழ்வுக்கு உறுதிப்படுத்தப்பட்ட அரசொன்றை நடத்தி வந்தோம்.

எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலகம் புரிந்துகொள்ளாமல் எம்மைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்ததாலும், ராஜதந்திர சூழ்ச்சிகளாலும், பெரும்பலத்தோடு நடத்தப்பட்ட பன்னாட்டுப் போர் நெறிகளை மீறிய கொடூர போரினாலும் நாம் ஆயுதப் போராட்டத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளோம்.

எனினும், எமது மக்களின் தேசிய ஒருமைப்பாட்டுணர்வையும், தமிழீழ விடுதலை மீது கொண்ட அசைக்க முடியாத பற்றுதலையும், எமது மாவீரர்களின் தியாகத்தின் வழிகாட்டுதலையும் துணையாகக் கொண்டு நாம் எமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை உணர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

ஐ.நா நிபுணர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், வேறு பல நடுநிலையாளர்கள் வெளிப்படுத்திய ஆவணங்களிலும் சிங்கள அரசு தமிழர் மீது மேற்கொண்ட இனப் படுகொலை தொடர்பான உண்மைகள் மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் ராஜபக்சே அரசு செய்வதறியாது திணறிக் கொண்டிருக்கிறது.

இதேவேளை, தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் சிங்கள தேசத்தைக் கிலி கொள்ள வைத்துள்ளது. ஈழத் தமிழர் மேல் மேற்கொள்ளப்பட்ட இனப் படுகொலை தொடர்பான எதிர்ப்புணர்வும், ஈழத் தமிழரின் அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்கான ஆதரவும் தமிழகத்தில் பெருகிவரும் நிலையில் செல்வி ஜெயலலிதா அவர்கள் தமிழக முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தனக்குப் பாதகமாவே நோக்குகிறது சிங்களப் பேரினவாத அரசு.

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையும் தமிழகத் தேர்தல் முடிவும் ராஜபக்சே அரசுக்கு மிகப்பெரும் ஆபத்தாகவே முடியுமென்று உணர்ந்து கொண்ட சிங்கள அரசியல் ஆலோசகர்களின் மதிநுட்பமான சதித் திட்டமிடலில் முன்னிறுத்தப்படுவரே கே.பி என்ற செல்வராசா பத்மநாதன் என்ற குமரன் பத்மநாபன்.

இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கெதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சக நோக்கோடு கே.பி ஊடாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டு வருகிறது சிறிலங்கா அரசு.

சிறிலங்கா அரச படைகளின் பிடியிலுள்ள எவருமே விடுதலைப் புலிகள் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திச் செயற்பட முடியாது. இதுவரை காலமும் அவ்வாறு நடந்ததில்லை; இனியும் நடக்கப் போவதுமில்லை.

அவ்வகையில் பத்மநாதனும் தன்னை விடுதலைப் புலிகளின் உறுப்பினராக அடையாளப்படுத்துவதும், தான்தான் எஞ்சியிருக்கும் மூத்த போராளியென்று சொல்லிக் கொள்வதும், எமது அமைப்பின் சார்பில் பேசுவதும் தவறானது. அவர் எதிரியின் பிடிக்குட் சிக்கிய நாளிலிருந்து அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் கருத்துச் சொல்லும் தகுதியை இழந்துள்ளார்.

அதன் பின்னரான அவரது செயற்பாடுகள், கருத்துக்கள் எவையுமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினது அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறோம். எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நாசகாரத் திட்டங்களுக்கு கே.பி அவர்கள் துணை போகிறார் என்பதையே அவரின் நடவடிக்கைகள் வெளிக்காட்டுகின்றன.

பத்மநாதன் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தற்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களைக் கொலை செய்வதற்கு விடுதலைப் புலிகள் திட்டமிட்டார்கள் என்ற அவதூறை வெளிப்படுத்தியிருக்கிறார். இது அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டு. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சியோடே இந்தப் பேட்டி வடிவமைக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தமிழ்நாட்டு உறவுகளும் அரசியல் தலைவர்களும் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறோம்.

அன்பான தமிழ்பேசும் உறவுகளே,சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் ராஜதந்திர சதிவலைக்குள் புதைந்து போகாமலும் கே.பி போன்றோரை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் வஞ்சகச் சூழ்ச்சிக்குத் துணை போகாமலும் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நார்வே-நெடியவன் ஜாமீனில் விடுதலை:

இந் நிலையில் நார்வே நாட்டில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதியான நெடியவன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டியது தொடர்பான புகாரின் பேரில் அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், போலீஸாரின் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும், ஜூன் 1ம் தேதி அவர் மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,


சமச்சீர் கல்வி திட்டத்தை அரசு நிறுத்தி வைத்திருப்பதை ஏற்க முடியாது என்றும், இதுகுறித்து வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பப்படும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்,

தமிழகத்தில் புதிய அரசு மீது மக்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை பிரச்னைக்கு முன்னுரிமை அளித்து சீர்படுத்த வேண்டும்.

சமச்சீர் கல்வி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு முதலில் அறிவிப்பு வெளியிட்டது. இது தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கு விவாதத்தில் தமிழக அரசின் வழக்குரைஞர், இத்திட்டம் நல்ல திட்டமல்ல எனவேதான் கைவிடப்படுகிறது என வாதிட்டுள்ளார். இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. ஒரே மாதிரியான பாடத் திட்டம் கல்வியைக் கெடுத்து விடும் என்பதை ஏற்க இயலாது.

சமச்சீர் கல்வித் திட்டம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல், சமூகநீதியை நாம் காலங்காலமாக புறக்கணிப்பது போலாகும். சமச்சீர் கல்வி என்பது ஒரு கட்சி அல்லது ஆட்சியின் திட்டம் அல்ல. இதற்கென பல மாநாடுகள், ஆய்வரங்குகள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டு கொண்டு வரப்பட்ட பொதுவான திட்டம். சமச்சீர் கல்வித் திட்ட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டுப் பாடல் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதால், திட்டம் ரத்து செய்யப்படுவதாக அரசு இதுவரை தெரிவிக்கவில்லை.

புத்தகங்களில் பிழைகள் இருக்கின்றனவா என்பதும் தெரியவில்லை. எந்த காலத்திலும் புத்தகங்களில் தவறுகள் இடம்பெறாமல் இருந்ததில்லை. அதை களைய முயற்சிக்க வேண்டுமே தவிர, கைவிடுவது ஆரோக்கியமானதல்ல. கல்வித் துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்பது மிகவும் அவசியமானது. எனவே, தமிழக அரசு சமச்சீர் கல்வி தொடர்பாக தனது கொள்கையை வெளியிட வேண்டும். இதுகுறித்து வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பப்படும் என்றார்.

சிங்கப்பூர் கிட்னி பவுண்டேஷன் மருத்துவமனையில் ரஜினி.


சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகள் காரணமாக அவதிப்பட்டு வரும் ரஜினிகாந்த்துக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூருக்கு நேற்று அவரை அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர்.

நேற்று இரவு எட்டரை மணியளவில் முதலில் ரஜினிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் குழுவினர் விமான நிலையம் சென்றனர்.

பின்னர் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 10 மணியளவில் ராமச்சந்திரா மருத்துவமனையி்ன் பின்புறம் வழியாக கீழே அழைத்து வரப்பட்டார். சக்கர நாற்காலியில் வைத்து அவரை கூட்டி வந்தனர். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அணிவிக்கப்படும் வெள்ளை நிற உடையில் அவர் இருந்தார்.

அதன் பின்னர் அவரை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றினர். அப்போது வேனின் விளக்குகளை அணைத்து விட்டனர். ரஜினியை வேனில் ஏற்றிய பின்னர் வேன் கிளம்பிச் சென்றது. அப்போது மருத்துவமனைக்கு வெளியே பலத்த கெடுபிடிகளையும் தாண்டி கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ரஜினிகாந்த்தை வாழ்த்திக் கோஷமிட்டனர். அவரைப் பார்க்கவும் முண்டியடித்தனர். பலர் வேனுக்குப் பின்னால் ஓடவும் செய்தனர்.

உணர்ச்சிப் பெருக்குடன் ரசிகர்கள் காணப்பட்டதால் அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது.

யார் யார் சென்றனர்?:

ரஜினியுடன் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, மருமகன்கள் நடிகர் தனுஷ், அஸ்வின், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை சிறுநீரக மருத்துவ நிபுணர் பி.சௌந்தர்ராஜன், எலெக்ட்ரோ பிஸியாலஜிஸ்ட் டி.ஆர்.முரளீதரன் உள்ளிட்டோர் சென்றனர்.

இரவு 11.30 மணிக்கு புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ரஜினி புறப்பட்டுச் சென்றார்.

சிங்கப்பூரில் உள்ள நேஷனல் கிட்னி பவுண்டேஷன் மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜி.கே.வாசன் உதவி:

சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு ரஜினியும் அவரது குடும்பத்தினர், மருத்துவக் குழுவினர் செல்ல உடனடி விசாவுக்கும், விமான நிலையத்தில் விமானம் நிற்கும் இடம் வரை ஆம்புலன்ஸ் செல்வதற்கான சிறப்பு அனுமதி பெறவும் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உதவி செய்துள்ளார்.

உற்சாகத்துடன் இருக்கிறார் ரஜினி-லதா:

சிங்கப்பூர் செல்லும் முன் லதா ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ரஜினியின் உடல் நலம் பெற அவரது ரசிகர்கள் செய்துவரும் பூஜைகளுக்கும் கூட்டு பிரார்த்தனைகளுக்கும் என் குடும்பத்தின் சார்பில் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ரஜினி தற்போது நலமாக உள்ளார். நல்ல உற்சாகத்துடன் இருக்கிறார். அவருக்கு முழு ஓய்வு தேவைப்படுவதாலும், அவரின் உடல்நலத்தை கவனித்து கொள்வதற்காகவும் குடும்பத்துடன் சிங்கப்பூர் செல்கிறோம்.

ரஜினி பற்றி வரும் வதந்திகளை கண்டு யாரும் கவலைப்பட வேண்டாம். அவருக்கு முழு மருத்துவ கவனிப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் தினமும் செய்துவரும் பிரார்த்தனைகளுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

தனிமையில் இருக்க விரும்புகிறார்-ஐஸ்வர்யா:

ரஜினிகாந்த் குறித்து அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா கூறுகையில், அப்பா மற்ற பயணிகளுடன் தான் சிங்கப்பூர் செல்கிறார். அவருடைய உடல் நிலை சீராக உள்ளது. உடலில் உபரியாக இருக்கும் நீர்ச்சத்தை குறைக்கவும், புத்துணர்வுக்காகவும்தான் சிங்கப்பூர் போகிறார். அவர் கொஞ்ச காலம் குடும்பத்தினருடன் தனிமையில் இருக்க விரும்புகிறார்.

தமிழ்நாட்டில் அவர் ஓவ்வொரு வீட்டிலும் நேசிக்கப்படுபவராக-அந்த வீட்டில் ஒருவராக இருக்கிறார். அவரை பற்றி வரும் வதந்திகள் காரணமாக பொதுமக்கள் பீதியடைவது, அப்பாவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எங்கள் குடும்பத்தினரையும் அது வருத்தப்பட வைத்திருக்கிறது என்றார்.

ரூ.2400 கோடி கடன் : எரிபொருள் நிறுத்தம் , ஏர் இந்தியா விமானங்கள் ரத்து !


ரூ.2400 கோடி வரையிலான கடன் காரணமாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு எரிபொருள் சப்ளையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று திடீரென நிறுத்தின. இதனால், விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. எனினும், மாலையில் நிலைமை சீரானது.

விமானங்களை இயக்குவதற்கு பெட்ரோல் கலந்த 'ஏவியேசன் டர்பைன் ஃப்யூயல்' (ஏடிஎப்) என்ற எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இதை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து விமான நிறுவனங்கள் வாங்கி வருகின்றன. மத்திய அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு தேவையான 63 சதவீத எரிபொருளை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வழங்குகிறது.

தனியார் விமான நிறுவனங்களுக்கு கிலோ லிட்டருக்கு ரூ.1800 வரை சலுகையையும் பணம் செலுத்த 90 நாள் வரை அவகாசமும் அளிக்கப்படுகின்றன.

இதே போன்ற சலுகையை அளிக்குமாறு ஏர் இந்தியா நிறுவனமும் கோரிக்கை விடுத்தது. எனவே, மத்திய மந்திரிசபை செயலாளர் கே.எம்.சந்திரசேகர் தலைமையில் கடந்த மார்ச் மாதம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக முடிவு எட்டப்பட்டது.

ரூ.2400 கோடி கடன்

அதைத் தொடர்ந்து, ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.5 ஆயிரம் வரை ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சலுகை அளிக்கப்பட்டது. அதன்படி, தினந்தோறும் ரூ.18 கோடியே 50 லட்சம் வரை எரிபொருளுக்கு ஏர் இந்தியா வழங்க வேண்டும். ஆனால், சராசரியாக ரூ.13 கோடி மட்டுமே செலுத்தி வந்தது. இதனால், கடந்த ஒரு ஆண்டாக பெரும் கடன் தொகை நிலுவையில் உள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்துக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் கோடி வரை ஏர் இந்தியாவுக்கு பாக்கி உள்ளது. அதற்கான வட்டியையும் சேர்த்தால் ரூ.2400 கோடி ஆகிறது. இதுபோல, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ.300 கோடி வரை ஏர் இந்தியா நிறுவனம் கடன் வைத்துள்ளது.

விமானங்கள் ரத்து

தொடர்ந்து கடன் தொகை அதிகரித்து வருவதால், எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்தன. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமான எரிபொருள் வழங்குவதை திடீரென நிறுத்தின. குறிப்பாக கோழிக்கோடு, ஜெய்ப்பூர் உள்ளிட்ட விமான நிலையங்களில் எரிபொருள் சப்ளை செய்யப்படவில்லை.

"தனியார் விமான நிறுவனங்கள் அனைத்தும் வங்கி உத்தரவாதத்தை அளித்து தான் 90 நாள் வரை கால அவகாசத்தை பெறுகின்றன. தொடர்ந்து சலுகைகளை கேட்கும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இந்த தகவல் தெரியுமா?", என எண்ணெய் நிறுவனங்கள் கேள்வி எழுப்பின.

இதனால், பல்வேறு நகரங்களில் இருந்து ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. திருவனந்தபுரத்தில் மட்டும் அதிகபட்சமாக 6 விமானங்கள் ரத்தாகின.

மீண்டும் எரிபொருள் சப்ளை

உடனடியாக எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டது. இதில் சுமூக முடிவு எட்டப்பட்டகால், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் நேற்று மாலை முதல் மீண்டும் எரிபொருள் சப்ளை செய்தன. எனவே விமானங்கள் வழக்கம்போல இயங்கின.

சோனியாவுடன் தயாநிதி மாறன் சந்திப்பு.


திமுக எம்பியும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி சிறையில் உள்ள நிலையில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

நேற்று முன் தினம் இந்தச் சந்திப்பு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாதும் உடனிருந்தார்.

கனிமொழியை திகார் சிறையில் கருணாநிதி கடந்த திங்கள்கிழமை சந்தித்தார். ஆனால், சோனியாவையோ பிரதமரையோ அவர் சந்திக்கவில்லை. மாறாக கருணாநிதியை மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், பரூக் அப்துல்லா, நாராயணசாமி, காங்கிரஸ் எம்பி ஜெயந்தி நடராஜன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

இந் நிலையில் வரும் ஜூன் மாதத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 3வது குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த சிலருக்கு மேலும் சிக்கல்கள் ஏற்படலாம் என்று தெரிகிறது.

இதற்கிடையே காங்கிரஸ் கூட்டணியில் இடம் பிடிக்க அதிமுக பல மறைமுக முயற்சிகளில் இறங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் சோனியா காந்தியை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் திடீரென்று சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

சிறையில் கனிமொழியுடன் அழகிரி சந்திப்பு:

இந் நிலையில் திகார் சிறையில் உள்ள கனிமொழியை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேற்று மாலை சந்தித்தார்.

இந்த சந்திப்பு 5.15 முதல் 6 மணி வரை நடந்தது. அப்போது மத்திய இணையமைச்சர் நெப்போலியனும் உடனிருந்தார்.

கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை விசாரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவும் டெல்லி வந்துள்ளார்.

சித்தார்த் பெகுரா ஜாமீன் மனு-தீர்ப்பு ஜூன் 3க்கு ஒத்திவைப்பு:

இதற்கிடையே 2ஜி முறைகேட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த் பெகுராவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஜூன் 3ம் தேதிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி ஒத்தி வைத்துள்ளார்.

ஏர்செல் விவகாரம்: தயாநிதி மாறன் மீது வழக்கு?


ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் தொலைதொடர்பு நிறுவனத்திற்கு விற்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஏர்செல் நிறுவனத்தை வெளிநாட்டு வாழ் இந்தியரான சிவசங்கரன் என்பவர் நடத்தி வந்தார்.

இந்த ஏர்செல் நிறுவனத்திற்கு அலைக்கற்றை உரிமம் வழங்க அப்போதைய தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் மறுப்பு தெரிவித்ததாக பரவலான கருத்து இருந்து வருகின்றது.

இதனால் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் என்ற தொலைதொடர்பு நிறுவனத்திற்கு விற்க சிவசங்கரன் முடிவு செய்தார்.

அதன்படி கடந்த 2006-ம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் விலைக்கு வாங்கியது.

இலங்கை தமிழர் வம்சாவழியைச் சேர்ந்த, மலேசிய தொழிலதிபரான டி.அனந்தகிருஷ்ணன் என்பவர் மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸை நிர்வகித்து வருகிறார்.

கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டுவரை உள்ள 6 ஆண்டுகளில் தொலைதொடர்புத் துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இதன் அடிப்படையில் அடுத்து முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) ஒன்றை வரும் ஜூலை மாதம் முன்பு, அதாவது உச்ச நீதிமன்றத்தின் கோடை விடுமுறை காலம் முடிந்து மீண்டும் திறந்த பிறகு தாக்கல் செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த முதல் தகவல் அறிக்கையில் தான் அப்போதைய தொலைதொடர்புத் துறை அமைச்சரும் இப்போதைய ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறனின் பெயரை சேர்க்க சிபிஐ முடிவு செய்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இதே முதல் தகவல் அறிக்கையில் மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் கம்பெனியின் பெயரையும் சேர்க்க சிபிஐ திட்டமிட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது.

சென்னை : மின்சார நிறுத்தம் - கடற்கரை ரயில்கள் தாமதம்


சென்னை: தாம்பரம் முதல் கடற்கரை வரை செல்லும் ரயில்கள் மற்றும் கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் ரயில்கள் அனைத்தும் இன்று (28.05.2011) காலை மின்சார நிறுத்தம் காரணமாக ஆங்காங்கே நின்றன.

இதன் காரணமாக சுமார் அரை மணி நேரம் தாமதமாக ரயில்கள் சென்றன. இதனால் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர்.


சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டுவந்தது ஏன் ? கலைஞர் விளக்கம்.


கல்வியிலும் சமத்துவம் நிலைநாட்டவேண்டும் என்பதற்காகத்தான் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் விளக்கம் அளித்துள்ளார்.

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான கலைஞர் வெளியிட்டள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

2006 ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி முறையை தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கிட வழி அமைப்போம் என்று தி.மு.க. அறிவித்திருந்தது. சமச்சீர் பள்ளிக்கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறை சட்டம் 2010 ம் ஆண்டு இயற்றப்பட்டு; சமச்சீர் கல்வி முறை 2010 11 ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 மற்றும் 6 ம் வகுப்புகளில் நடைமுறை படுத்தப்பட்டதுடன் புதிய பாட நூல்களும் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.

அன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் 1.3.2010 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கல்வியாளர்களின் அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு சமச்சீர் கல்வி சட்டத்தின்படி 2010 2011 கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி முறை நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள் விரிவாக ஆராயப்பட்டன.

சமச்சீர் கல்விமுறையை இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தலாம் என்றும், முதற்கட்டமாக 2010 2011 கல்வி ஆண்டில் 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கும், அதனைத் தொடர்ந்து 2011 12 கல்வியாண்டில் பிற எஞ்சிய அனைத்து வகுப்புகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

முதற்கட்டமாக 2010 2011 ம் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு மற்றும் 6 ம் வகுப்புகளுக்கு பாடத் திட்டங்கள் வரையறுக்கப்பட்டு, பாடப்புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் முதலாம் வகுப்புக்கு தேவையான 61 லட்சம் பாடப்புத்தகங்களும் ஆறாம் வகுப்புக்கு தேவையான 84 லட்சம் பாடப் புத்தகங்களும் அச்சிடப்பட்டு அவைகள் முறையே மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்களும் கடந்த ஆண்டு அந்த புத்தகங்களை படித்து முடித்துள்ளார்கள்.

அரசின் கொள்கை முடிவின்படி 2011 2012 ம் ஆண்டு கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறையை மேலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக எஞ்சிய 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10 ம் வகுப்புகளுக்கான பாடபுத்தகங்கள் 200 கோடி ரூபாய் செலவில் அச்சிடப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும் விட்டன.

இந்த வகுப்புகளுக்கான பாட திட்டம் கல்வி வல்லுநர்களால் தயார் செய்யப்பட்டு பொது மக்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை வலை தளத்தில் வெளியிடப்பட்டது.

எல்லாவற்றிலும் சமமாக இருக்க வேண்டும் அனைவருக்கும் சம உரிமை தரப்பட வேண்டும் என்றெல்லாம் பேசப்படுகின்ற இந்த காலக்கட்டத்தில் கல்வியிலும் சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டுமென்பது தான் தி.மு.கழகத்தின், ஏன் தமிழகத்திலே உள்ள பெரும்பாலான கல்வியாளர்களின் நிலை. அதனை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டுமென்பதற்காகத்தான், எடுத்த எடுப்பிலேயே தான்தோன்றித் தனமாக அதனை அறிவித்து விடாமல், அதற்காக வல்லுநர்கள் குழு, கல்வியாளர்கள் குழு, அதிகாரிகள் குழு என்றெல்லாம் நியமித்து, அந்த குழுக்களை கொண்டு வெளிமாநிலங்களுக்கெல்லாம் சுற்றுப்பயணம் செய்ய செய்து, அதன் பிறகு தான் படிப்படியாக சமச்சீர் கல்வி முறை நடைமுறைக்கு தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, அது அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திடீரென்று அந்த திட்டத்தை கிடப்பில் போடப்போவதாக அறிவிப்பதும், 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து தயார் செய்யப்பட்ட புத்தம் புதிய புத்தகங்களையெல்லாம் வீணடிப்பதும், மேலும் 200 கோடி ரூபாய் செலவழித்து புதிய புத்தகங்களை இனிமேல் அவசர அவசரமாக தயாரித்து, அதன்பிறகு அச்சடித்து அவற்றை விநியோகிப்போம் என்பதும் சரியான நடைமுறை தானா என்பதை அரசினர் எண்ணி பார்க்க வேண்டும்.

சமச்சீர் கல்வித்திட்டம் என்பது பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவருக்கும் ஒரே சீரான கல்வியை வழங்கிட உருவாக்கப்பட்ட திட்டமாகும். மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் கல்வித் திட்டம், ஓ.எஸ்.எல்.சி., போன்ற பாடத்திட்டங்களில் பயிலும் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களோடு ஒப்பிடும்போது, ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் போட்டியிட முடியாமல் பெரிதும் பாதிக்கப்படும் நிலைமை இருந்ததை போக்குவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன.

சமச்சீர் கல்வித்திட்டம் குறித்து அ.தி.மு.க.வின் தற்போதைய முக்கிய கூட்டணி கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்ழூனிஸ்டு கட்சி 24 5 2011 அன்று விடுத்துள்ள அறிக்கையில், "சமச்சீர் கல்வி முறையை இந்த ஆண்டு நிறுத்தி வைத்திருப்பதும், ரூ.200 கோடிக்கு மேல் செலவிட்டு அச்சிடப்பட்டுள்ள பாடப் புத்தகங்கள் முழுமையாக கை விடப்படுவதும் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும், ஆசிரியர்கள் கல்வியாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது'' என்று தெரிவித்திருப்பதையும், அ.தி.மு.க.வின் மற்றொரு தோழமைக் கட்சியான இந்திய கம்ழூனிஸ்டு கட்சி இன்று விடுத்துள்ள அறிக்கையில் "சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக கல்வித் துறையில் சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழக அரசு அதனை தள்ளி வைப்பதாக அறிவித்திருப்பது விவாதத்தை கிளப்பியுள்ளது'' என்று குறிப்பிட்டிருப்பதையும், அ.தி.மு.க.வின் மற்றொரு தோழமை கட்சியான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி "தரமான கல்வியுடன் கூடிய சமச்சீர் கல்வி திட்டத்தை தொடர்ந்து வலியுறுத்து வோம்'' என்று கூறியிருப்பதையும் இந்த நேரத்தில் நினைவு கூர்வது பொருத்தமானதாகும்.

சமச்சீர் கல்வி திட்டம் குறித்து அ.தி.மு.க. அரசின் முடிவை எதிர்த்து வழக்கறிஞர் கே.சியாம்சுந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவின் மீது நீதியரசர்கள் எஸ்.ராஜேஸ்வரன், கே.பி.கே.வாசுகி ஆகியோர் நேற்றையதினம் கூறும்போது, "சமச்சீர் கல்வி சட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது. சிறந்த வல்லுநர்களைக் கொண்ட ஆய்வுக்குழு விரிவாக ஆராய்ந்து சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த பரிந்துரை செய்துள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை எளிதாகப் புறக்கணித்து விட முடியாது. இது தவிர, ஏற்கனவே பெரும் தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், மேலும் பெரும் தொகையை செலவிடுவது அவசியம் தானா? இவை பற்றியெல்லாம் அட்வகேட் ஜெனரல் அரசுக்கு தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும். மேலும் ஏற்கனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை இந்த நீதி மன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டத்தை அமைச்சரவை கூட்டத்தின் கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்ற கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசின் சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்'' என்று தெரிவித்து, அது இன்றைய ஏடுகளில் எல்லாம் பெரிதாக வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் நேற்றையதினம் இந்த துறையின் அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்த மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் அ.சவுந்தரராசன் மற்றும் அந்த கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் போன்றவர்களிடம் சமச்சீர் கல்வி திட்டம் கைவிடப்பட மாட்டாது என்று கூறியதாக "தீக்கதிர்'' நாளேட்டில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தி.மு.க. அரசினால் கொண்டு வந்ததை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தான் இந்த அரசின் அறிவிப்புக்கான காரணம் என்றால் அதைப் புரிந்து கொள்ள முடியும். தமிழகத்திலே அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் ஒன்றை பாடுவதற்காக மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்'' என்று தொடங்கும் பாடலில் "ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன்'' என்ற வரியை நீக்கி விட்டுத்தான் தமிழக அரசின் சார்பில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழகத்திலே அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஒலிக்கச் செய்தேன்.

அந்தப்பாடல் தற்போது சமச்சீர் கல்வி பாடத்திட்ட புத்தகங்களிலே இருப்பதால் இன்றைய அரசு சமச்சீர் கல்வி திட்டத்தையே எதிர்த்திட முனையுமா? மேலும் கோவையில் நடைபெற்ற உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக நான் தொகுத்து எழுதிய வாழ்த்துப் பாடல் அந்த புத்தகத்திலே இடம் பெற்றுள்ளது. அந்தப்பாடலில் தொல்காப்பியம், சிலம்பு, மணிமேகலை, சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, கம்பர், அவ்வை என்றெல்லாம் அனைத்து இலக்கியங்களையும் இலக்கிய கர்த்தாக்களையும் பாகுபாடு பாராமல், இணைத்து எழுதிய பாடல் சமச்சீர் கல்விப்பாட புத்தகங்களிலே இடம் பெற்றுள்ளது தான் அரசின் இந்த முடிவுக்கு காரணமா? ஆம் என்றால் அந்தப்பாடல் நான் தொகுத்து எழுதியது என்பதையே எடுத்து விட்டு அல்லது அந்த பாடலையே முழுமையாக எடுத்து விட்டு சமச்சீர் கல்விக்கான புத்தகத்தை வெளியிடுவதில் தவறு ஒன்றுமில்லையே?

இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா


தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜெயக்குமாரும், துணை சபாநாயகராக தனபாலும் 27.05.2011 அன்று பொறுப்பேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு பல்வேறு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

முதல் அமைச்சர் ஜெயலலிதா பேசுகையில்,

தாங்கள் பேரவைத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டவுடன் அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் தங்களுடைய கரங்களைப் பிடித்து, தங்களை அழைத்துச் சென்று சபாநாயகர் ஆசனத்தில் அமர வைத்தார்கள். இது சம்பிரதாயமாக நடைபெறுகின்ற ஒரு நடைமுறை.

நாடாளுமன்ற மக்களவையானாலும், மாநிலங்களிலுள்ள சட்டமன்றப் பேரவையானாலும் இந்த வழக்கம் உள்ளது. இந்த சம்பிரதாயம் எப்படி வந்தது? என்பதை எடுத்துச் சொன்னால் அனைவருக்கும் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்று கருதுகிறேன். இந்த மரபுக்கு பின்னால் ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. நம்முடைய இந்திய ஜனநாயகம் என்பது பிரிட்டிஷ் ஜனநாயகத்தை பின்பற்றியே அமைக்கப்பட்டது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள பாராளுமன்றம் எவ்வகையில் அமைக்கப்பட்டதோ அதே வகையில் அமைக்கப்பட்டது தான் இந்திய பாராளுமன்றமும், இந்திய சட்டமன்றங்களும். இங்கிலாந்து நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பாராளுமன்றம் வந்துவிட்டது. சர்வ வல்லமை படைத்த மன்னரும் இருப்பார். பாராளுமன்றமும் இருக்கும். இந்தியாவில் அந்த முறையைப் பின்பற்றிய போது மன்னர் இல்லை, ஜனாதிபதி இருக்கிறார்.

அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் மன்னர் ஏதாவது ஒரு காரியத்தை செய்ய வேண்டுமென்று விரும்புவார். அதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி வேண்டும். பெரும்பாலும் பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மன்னருடைய விருப்பத்தை நிராகரித்து விடுவார்கள். இந்தச் செய்தியை யார் போய் மன்னரிடம் கூறுவது? அவர் தான் பேரவைத் தலைவர். அதனால்தான் பாராளுமன்றத் தலைவர் என்று பெயரை வைக்காமல் ஸ்பீக்கர் என்று பெயர் வைத்தார்கள்.

நாம் தான் இங்கே பேரவைத் தலைவர் என்று அழைக்கிறோமே தவிர, இன்று வரை, அங்கே இங்கிலாந்தில் ஸ்பீக்கர் என்று தான் அழைக்கிறார்கள். அப்படி மன்னர் எதை விரும்பினாரோ அதை செய்ய இயலாது என்று ஒரு ஸ்பீக்கர் சென்று துணிச்சலுடன் மன்னரிடம் கூறும் போது என்ன நடக்கும்? சில காரியங்கள் செய்வதற்கு தான் மன்னருக்கு பாராளுமன்றத்தின் அனுமதி வேண்டுமே தவிர, அந்த ராஜ்யத்தில் உள்ள எந்தப் பிரச்சினைக்கும் மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் மன்னருக்கு உண்டு.

ஆகவே, தான் விரும்பியது நடக்காது என்று ஸ்பீக்கர் எடுத்துரைக்கும் போது, உடனே மன்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கும்படி ஆணையிடுவார். தலையை வெட்டி விடுங்கள் என்று ஆணையிடுவார். இது பலமுறை நடந்ததால் யாருமே அந்த ஸ்பீக்கர் பதவிக்கு வர விரும்ப மாட்டார்கள். ஆகவே புதியதாக பாராளுமன்றம் அமையும்போது, ஒரு ஸ்பீக்கரை தேர்ந்தெடுக்கும் போது, இன்னார் தான் ஸ்பீக்கர் என்று அறிவித்தவுடன் அவர் உடனே தப்பித்தால் போதும், தலை தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிப்பார்.

அப்போது அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் அவரை ஓட விடாமல் தடுத்து நிறுத்தி அவர் கைகளைப் பிடித்து, இழுத்து வந்து, ஆசனத்தில் அமர வைப்பார்கள். இதுதான் அந்தக் காலத்தில் இருந்து வந்த மரபு. காலப் போக்கில் அது மாறி இப்போது ஜனநாயக முறை ஏற்பட்ட பிறகு, ஸ்பீக்கர் இப்போது ஓட்டம் பிடிக்க வேண்டிய அவசியமும் இல்லை, ஸ்பீக்கரின் தலையை எடுங்கள் என்று சொல்லக்கூடிய மன்னரும் இங்கே இல்லை. ஆனால் இந்த மரபு மட்டும் அப்படியே இருக்கிறது.

நிச்சயமாக ஆளுங்கட்சி சார்பில் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன். நீங்கள் தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை நாங்கள் எந்த நாளிலும் உருவாக்க மாட்டோம் என்றார்.

விரைவில் உடல்நலம் பெற்று திரும்புவேன் : ரஜினிகாந்த் பேச்சு.


நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் புறப்பட்டார். மனைவி, மகள் மற்றும் மருமகன் தனுஷ் ஆகியோர் உடன் சென்றனர்.

ஆம்புலன்ஸ் மூலமாக அவர் விமானத்தின் அருகேயே அழைத்துச் செல்லப் பட்டார். இதற்காக சிறப்பு அனுமதி வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெறுகிறார்.

.ரஜினிகாந்த் பேசிய குரல் பதிவை ரஜினி மகள் சௌந்தர்யா ஊடகங்களுக்கு கொடுத்துள்ளார்.

ஹலோ நான் ரஜினிகாந்த் பேசுகிறேன்....... பரபரப்பு ஆடியோ

அவர் புறப்பட்டுப் போகும்போது ஏராளமான ரசிகர்கள் வழியனுப்பக் காத்திருந்தனர். ரஜினி முகத்தை பார்த்துவிடலாம் என்று இருந்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஆம்புலன்ஸில் ரஜினியை அழைத்துச்சென்றதால் பார்க்க முடியவில்லை. உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் முகத்தை காட்டாமல் ரசிகர்களுக்காக தனது குரலை பதிவு செய்து கொடுத்திருக்கிறார் ரஜினி.

அந்த ஆடியோவில் ரஜினியின் குரல் மிகவும் தளர்ந்திருக்கிறது. அவர் உடல் நிலையை அவரின் குரல் உணர்த்துகிறது.

அந்த ஆடியோ :

‘’ஹலோ நான் ரஜினிகாந்த் பேசுறேன். ஹா..ஹா...ஹா.... ஹேப்பியா போய்கிட்டு இருக்குறேன் நானு.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடுறேன் ராஜாக்களா. நீங்க கொடுக்கிற ஒரு அன்புக்கு நான் என்னத்த திருப்பி கொடுக்கிறது.

பணம் வாங்குறேன்... ஆக்ட் பண்றேன்... அதுக்கே இவ்வளவு அன்பு கொடுக்கிறீங்கன்னா, இதுக்கெல்லாம் நான் என்னத்த திருப்பி கொடுக்கிறது.

டெஃபனெட்டடா நீங்க எல்லோரும் தலை நிமிர்ந்து வாழும்படி, எங்க fans through out the world, தலை நிமிர்ந்து வாழும்படி நான் நடந்துக்கிறேன் கண்ணா. கடவுள் கிருபை என் மேல் இருக்கு. என் குருவின் கிருபை என் மேல் இருக்கு.

எல்லாத்துக்கும் மேல கடவுள் ரூபத்துல இருக்குற உங்களோட கிருபை எல்லாம் என் மேல, என் மேல இருக்கு. நான் சீக்கிரம் வந்துடறேன்.

ஓகே. பாய். குட்’’


ஆடியோவை கேட்க இங்கே கிளிக் செய்யவும்....

http://www.nakkheeran.in/WebTv.aspx?WTV=8


டீசல் விலை உயர்த்தப்பட்டால் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்.


டீசல் விலை உயர்த்தப்பட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரித்து உள்ளது.

இது குறித்து இச் சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி நாமக்கல்லில் வியாழக் கிழமை நிருபர்களிடம் கூறியது:

2008-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 132.47 டாலராக இருந்தது. இப்போது ஒரு பேரலுக்கு 97 டாலராக குறைந்துள்ளது.

ஆனால், கடந்த 2008-ம் ஆண்டு ஒரு லிட்டர் டீசல் ரூ.37.57-க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது ரூ.40.63-க்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்வதாகக் கூறி, மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே செல்கிறது. இதனால், ஏற்கெனவே கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் லாரி தொழில் மேலும் நலிவடையும் சூழல் உருவாகியுள்ளது.

சமீபத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 வரை மத்திய அரசு உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, டீசல் விலையை அதிகரிக்கவும் மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இச் சூழலில், வரும் 9-ம் தேதி அமைச்சரவை கூடுகிறது. இக் கூட்டத்தில் டீசல் விலை உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.

டீசல் விலை உயர்த்தப்படும்பட்சத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் முடிவெடுத்து உள்ளது. இதற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முழு ஆதரவை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் டீசல் விலை மாறுபடுகிறது. இந்தியா முழுவதும் டீசலுக்கு ஒரே மாதிரியான விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

கடந்த ஓராண்டில் மட்டும் லாரி டயர்களின் விலை 52 சதவீதம் வரை அதிகரிக்கத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.21 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு ஜோடி டயர்கள், இப்போது ரூ.32,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டயர் விலை மேலும் 5 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதனால், லாரி தொழில் கடுமையாகப் பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக உள்ள தனியார் டயர் தயாரிப்பு நிறுவனங்களைத் தனிமைப்படுத்தும் நோக்கில் அந்த நிறுவனங்களுக்காக யாரும் லாரிகளை இயக்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் வெளிநாடுகளில் இருந்து டயர்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றார் நல்லதம்பி.

சமச்சீர் கல்வித் திட்டம் கைவிடப்பட மாட்டாது.


சமச்சீர் கல்வித் திட்டம் கைவிடப்பட மாட்டாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் உறுதியளித்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு எடுத்துள்ள முடிவு பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருந்தது. எனவே, இது தொடர்பாக சட்டப் பேரவை மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் அ. சௌந்திரராஜன், மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் ஆகியோர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தை நேரில் சந்தித்து பேசினார்கள்.

இருவரும் கூறிய விஷயங்களை அமைச்சர் பொறுமையாகக் கேட்டறிந்தார். பின்னர் சமச்சீர் கல்வித் திட்டம் உறுதியாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும், அதனை கைவிடும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.

இப்போது அரைகுறையாக உள்ள இந்தத் திட்டத்தை அமல்படுத்துவது கல்வியின் தரத்தை உயர்த்தாது என்பதால் அமைச்சரவை முடிவின்படி, ஒரு வல்லுநர் குழு அமைத்து அதன் பரிந்துரைகள் வந்தபின் சமச்சீரான கல்வி விரைவில் அமலாக்கப்படும் என்றார்.

ஏழை, எளிய மக்களுக்கு தரமான கல்வி கிடைக்கும் பொருட்டு பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை எளிதில் கட்டக் கூடிய அளவில் நிர்ணயிக்க வேண்டும் எனவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமச்சீர் கல்வியை அமலாக்க வேண்டும் எனவும் அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது. அமைச்சரவை இது குறித்து பரிசீலினை செய்யும் என்றும் அவர் தெரிவித்ததாக மார்க்சிஸ்ட் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் சேர்ந்து விட்டதா?


தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்து வரும் மாணவர்கள், தங்களது விண்ணப்பம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவைச் சென்று விட்டதா என்பதைத் தெரிந்து கொள்ள இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை உள்பட 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள், 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 600-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 பி.டி.எஸ். இடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 900-த்துக்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில் சேர இதுவரை 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர்.

விண்ணப்பத்தைப் பெறவும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிக்கவும் ஜூன் 2-ம் தேதி கடைசி நாளாகும். எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க ஜூன் 21-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் ஜூன் 30-ம் தேதி, முதல் கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது.

இணையதளத்தில் வசதி: பள்ளிகளில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை (மே 25) முதல் வழங்கப்பட்டு வருவதால், எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பம் பெற்ற மாணவர்கள், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வருகின்றனர். சில மாணவர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் வளாகத்தின் தேர்வுக் குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் போட்டு வருகின்றனர்.

இதே போன்று டிப்ளமோ (நர்சிங்), பி.எஸ்ஸி. (நர்சிங்) உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேரவும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து அளித்து வருகின்றனர்.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். மற்றும் டிப்ளமோ (நர்சிங்), பி.எஸ்ஸி. (நர்சிங்) உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளித்துள்ள மாணவர்கள், தங்களது விண்ணப்பம் சேர்ந்துவிட்டதை தமிழக அரசின் இணையதளம் www.tn.gov.in மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.

இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள காலியிடத்தில் விண்ணப்ப எண் அல்லது பிளஸ் 2 தேர்வு பதிவு எண் ஆகிய ஏதாவது ஒன்றை "டைப்' செய்யும் நிலையில் விண்ணப்பம் சேர்ந்து விட்டதை எளிதாக உறுதி செய்து கொள்ள முடியும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி கூறினார்.

சமச்சீர் கல்விச் சட்ட அமலை நிறுத்த முடியுமா?


சமச்சீர் கல்விச் சட்டத்தை அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்பது பற்றி தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமச்சீர் கல்வி முறை நிறுத்தி வைக்கப்படும் என்றும், இந்தக் கல்வியாண்டில் பழைய பாடத்திட்ட முறையே தொடரும் என்றும் அண்மையில் தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அரசின் இந்த முடிவை எதிர்த்து வழக்கறிஞர் கே. ஷியாம் சுந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். சமச்சீர் கல்வி முறையை தொடர்ந்து அமல்படுத்த தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர் மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ். ராஜேஸ்வரன், கே.பி.கே. வாசுகி ஆகியோரைக் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு வியாழக்கிழமை வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே. பாலு கூறியதாவது:

சமச்சீர் கல்வி முறை பற்றி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ். முத்துக்குமரன் தலைமையிலான குழு விரிவான ஆய்வு மேற்கொண்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்துவதற்கான சட்டம் இயற்றப்பட்டு, 2010 - 2011-ம் கல்வியாண்டில் 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு இந்த புதிய பாடமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

2011-2012-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, ரூ.200 கோடி செலவில் 9 கோடி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

இது மாணவர்களையும், பெற்றோர்களையும் பெரிதும் பாதிக்கச் செய்துள்ளது. ஏற்கெனவே ரூ. 200 கோடி செலவு செய்துள்ள அரசு, புதிதாக புத்தகங்கள் அச்சடிக்க மேலும் சுமார் ரூ. 200 கோடி செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, சமச்சீர் கல்வி முறையை தொடர்ந்து அமல்படுத்த அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று பாலு வலியுறுத்தினார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கூறியதாவது:

பல்வேறு பாடத் திட்ட முறைகளிலிருந்து தங்களுக்கான சிறந்த பாடத் திட்டத்தை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் விருப்பமாக உள்ளது. இந்நிலையில், ஒரு மாணவன் குறிப்பிட்ட ஒரு பாடத் திட்ட முறையில்தான் படிக்க வேண்டும் என்பதை அரசால் கட்டாயப்படுத்த முடியாது.

இப்போதைய சமச்சீர் கல்வி முறை மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக் கூடியது. எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன்களுக்காகவே சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைப்பது என்ற கொள்கை முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்றார் நவநீதகிருஷ்ணன்.

இதற்கிடையே, சமச்சீர் கல்வி முறையை இந்த கல்வியாண்டிலேயே தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக பண்ருட்டியைச் சேர்ந்த எம். சேஷாச்சலம், சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை எஸ்.டி. மனோன்மணி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

அவர்கள் இருவர் சார்பிலும் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவையில் சமச்சீர் கல்விச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதன் அடிப்படையிலேயே சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ஏற்கெனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை, அமைச்சரவைக் கூட்டம் ஒன்றில் எடுக்கப்படும் ஒரு கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா?

தமிழக அரசின் சமச்சீர் கல்விச் சட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டு, ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஒரு கொள்கை முடிவின் மூலம் செல்லாதது ஆக்க முடியுமா?

முந்தைய அரசு எடுக்கும் கொள்கை முடிவை, அடுத்து பொறுப்புக்கு வரும் அரசு மாற்றுவது நல்லதல்ல என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் முந்தைய அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி முறையை, இப்போது புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அரசு கொள்கை முடிவு என்ற பெயரில் நிறுத்தி வைக்க முடியுமா என்பவை போன்ற கேள்விகளை நீதிமன்றத்தில் வில்சன் எழுப்பினார்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:

சமச்சீர் கல்விச் சட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது. சிறந்த வல்லுனர்களைக் கொண்ட ஆய்வுக் குழு விரிவாக ஆராய்ந்து சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த பரிந்துரை செய்துள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை எளிதாகப் புறக்கணித்து விட முடியாது. இது தவிர, ஏற்கெனவே, பெரும் தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், மேலும் பெரும் தொகையை செலவிடுவது அவசியம்தானா?

இவை பற்றியெல்லாம் அட்வகேட் ஜெனரல் அரசுக்கு தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

மேலும், ஏற்கெனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை, இந்த நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டத்தை அமைச்சரவைக் கூட்டத்தின் கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்பவை போன்ற கேள்விகள் மனுதாரர்கள் சார்பில் எழுப்பப்பட்டுள்ளன.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசின் சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மக்களுக்கு எதிராக மக்களாட்சி.

உதயை மு. வீரையன்


நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் நான்கு மாநிலங்களில் மக்களின் தீர்ப்பு ஆளும் கட்சிகளுக்கு எதிராகவே முடிந்திருக்கிறது.

தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் ஆளும் கட்சிகள் அதிரடித் தோல்வியைச் சந்தித்தன. அசாம் மட்டுமே தப்பிப் பிழைத்தது. இதற்கு என்ன காரணம்?

"மக்களாட்சி' என்பது மக்களுக்கு எதிராகவே நடத்தும் ஆட்சி எனப் புதிய கொள்கை உருவாக்கிக் கொண்டதுதான். எப்படியோ திரட்டிய கறுப்புப் பணத்தின் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி விடுகின்றனர். பிறகென்ன? ஐந்தாண்டுகளுக்குக் கவலையில்லை. கட்சிகளின் ஆட்சியில் மக்களை மதிப்பதில்லை. மக்கள் குரலுக்கு மதிப்பளிப்பதும் இல்லை.

உத்தரப் பிரதேசத்தில் யமுனா எக்ஸ்பிரஸ் பாதை, கங்கா எக்ஸ்பிரஸ் பாதை என்னும் திட்டங்களுக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குக் கூடுதல் இழப்பீடு கோரி நொய்டாவின் புறநகர்ப் பகுதியான பட்டா பர்சால் கிராமத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகளும், காவல்துறையினரும் என நான்குபேர் பலியாயினர்.

இதனால் அங்கே காவல்துறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் குடியிருப்புகள் சூறையாடப்பட்டுள்ளன. பலர் காணாமல் போய்விட்டனர். அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

நொய்டாவில் நடைபெற்ற வன்முறைகளுக்கு ஆளும் அரசே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. முதலமைச்சர் மாயாவதியின் சொந்த மாவட்டத்திலேயே விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது.

விவசாயிகளிடமிருந்து நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கிக்கொண்டு, அவர்களை கிராமங்களிலிருந்து விரட்டியடிக்கவும் அரசு முயல்வதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

விவசாயிகள் சங்கத் தலைவர் மீது இருபதுக்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விவசாய சங்கத் தலைவர் மற்றும் அவரது நெருங்கிய தோழர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தபட்டுள்ளது. அத்துடன் அவர்களைப் பற்றித் தகவல் கொடுப்பவர்களுக்கு ரொக்கப்பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு பதற்றம் நீடிக்கவே செய்கிறது.

நாட்டின் உயிர்நாடியான விவசாயம் மற்றும் விவசாயிகளின் நிலை உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்ல, எல்லா மாநிலத்திலும் கவலைக்குரியதாகவே மாறி வருகிறது. எதிர்க்கட்சியில் இருக்கும்போது அவர்களுக்காகக் குரல்கொடுப்பதும், அவர்களே ஆளும் கட்சியாக மாறியதும், அதே விவசாயிகளை ஒடுக்குவதும் வாடிக்கையாகிவிட்டது, இன்னும் சொல்லப்போனால், எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டுமே அரசியல் கட்சிகள் மக்கள் நலம் நாடுபவர்களாக இருக்கின்றனர்.

மாநிலத்தில் சட்டம், ஒழுங்கைச் சீர்குலைப்பதற்காகவே மக்களை எதிர்க்கட்சியினர் தூண்டிவிடுவதாக ஆளும் மாயாவதி குற்றம்சாட்டுகிறார். சட்டம் இயற்றி ஒழுங்குபடுத்த வேண்டிய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி விவசாயிகள் பிரச்னைகளை அரசியலாக்கவே விரும்புகிறார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல்பாடுகள் பற்றி எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையில் பிரதமர் மன்மோகன் சிங் மத்திய அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளார். நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பாக புதிய சட்டம் அவசியம் என்றும், வளர்ச்சிப் பணிகளுக்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உரிய நஷ்டஈடு, விவசாயிகளுக்கு மறுவாழ்வு ஆகியவை மத்திய அரசின் உத்தேச மசோதாவில் வலியுறுத்தபட்டுள்ளன என்றும் அக்குழு கூறியுள்ளது.

இத்தகைய பிரச்னைகளுக்குச் சட்ட அடிப்படையில் ஒருமித்த கருத்தை உருவாக்க இயலாது என்றும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மாநில அரசுதான் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

உழைத்து, உழைத்து ஓடாகிப்போன விவசாயிகள் குற்றவாளிகளைப்போல நடத்தப்படுகின்றனர். விவசாயிகள் சங்கத்தலைவர் மேல் இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுத்து தேடுதல் வேட்டை நடத்துவதும், அவர்களைப் பற்றிய தகவல் தருபவர்களுக்கு ரொக்கப் பரிசு அறிவித்திருப்பதும் கண்டிக்கத்தக்கது. ஒடுக்கப்பட்டவர் ஆட்சியில் உணவு உற்பத்தி செய்பவர் நிலங்களை இழந்து நிர்கதியாகத் தெருவில் நிற்க வைப்பது சரியாகுமா?

தேசிய மனித உரிமை ஆணையம் இதை வன்மையாகக் கண்டித்துள்ளது. நொய்டாவில் இப்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை கவலையளிக்கிறது என்றும், காவல்துறையினர் அத்துமீறி விவசாயிகளின் வீடுகளுக்குள் நுழைந்திருப்பது பற்றிப் புகார் வந்துள்ளது என்றும், இதன் அடிப்படையில் விசாரணைக்காக ஒரு குழு அனுப்பப்படும் என்றும் அது அறிவித்துள்ளது.

பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்குப் பின்னால் அரசியல் கட்சிகள் நின்றால் தூண்டிவிடுவதாகப் புகார் கூறுவது எல்லாம் ஆளும் கட்சிகளுக்கும் வழக்கமானதுதான். இதே ஆளும் கட்சிகள் எதிர்க்கட்சியாக இருந்தபோது இதைத் தானே செய்தன?

மகாராஷ்டிர மாநிலம் ஜெய்தாப்பூரில் அணுமின் நிûலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள் மீது, காவல்துறையினரைக் கொண்டு அரசு தாக்குதல் நடத்தியது. அப்போது காவல்நிலையம் அடித்து நொறுக்கப்பட்டது.

இதையடுத்து துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. இதனால் பலியானவருக்காக முழு அடைப்பும் அதைத் தொடர்ந்து வன்முறையும், பதற்றமும் பரவியது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர 144 தடையுத்தரவு போடப்பட்டது.

ஜெய்தாப்பூரில் அமைக்கவிருக்கும் 6 மின் உலைகளைக்கொண்ட இந்த மின் நிலையம் உலகிலேயே மிகப்பெரியதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பானில் ஏற்பட்டுள்ள பயங்கரமான நிலநடுக்கம், அதனால் ஏற்பட்ட சுனாமியால் அங்குள்ள அணு உலைகளின் குளிர்விப்பான்கள் செயலிழந்து கதிர்வீச்சுப் பரவியதால் இங்கும் போராட்டம் தீவிரமடைந்தது.

அணுமின் நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட அரசு மறுப்பது, துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானது ஆகியவற்றுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேநேரத்தில், "அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் அரசியல் சதி' என அரசு கூறியது.

இந்தத் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று கூறிய மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளது. "ஜெய்தாப்பூர் திட்டத்துக்காக பிரான்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கப்படும் அணு உலைகள் இதுவரை உலகில் வேறு எங்கும் பயன்படுத்தப்படவில்லை. அவற்றின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை சந்தேகத்துக்குரியது' என்று அது தெரிவித்துள்ளது.

ஆனால், இதை மகாராஷ்டிர அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. அத்துடன் காவல்நிலையம் அடித்து நொறுக்கப்பட்டது, அணுமின் நிலையம் அமையவிருக்கும் பகுதியில் வன்முறை நடந்தது ஆகியவற்றுக்குப் பின்னணியில் அரசியல் சதி ஏதும் இருக்கிறதா என்பது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார். இது எப்படி இருக்கிறது?

அணுமின் நிலையம் என்பது உலகம் முழுவதும் அழிவையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது. பெரிய வல்லரசு நாடான ரஷியாவின் செர்னோபிலில் நடந்த அணு உலை வெடிப்பை மறக்க முடியுமா? இப்போது ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுமின் நிலையத்தில் அணு உலைகள் வெடித்துச் சிதறி மக்களை ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியுமா?

நமது நாட்டில் போபால் நச்சுக்காற்றால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி, அவர்களது சந்ததியினரும் இன்னும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தலைமுறை தலைமுறையாகப் பாதிப்பை ஏற்படுத்தும் அணுக்கதிர் வீச்சுக்குப் பாதுகாப்புத் தேட முடியுமா?

மக்கள் எதிர்ப்புக்குக் காரணம் இதுதான். ஆனால், இதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அந்த மாநில அரசு இல்லை. இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் இதுவே.

இடதுசாரிக் கட்சிகளின் பிடியில் 34 ஆண்டுகள் இருந்த மேற்கு வங்க மாநில அரசு இந்தத் தேர்தலில் சரிந்து போனதற்குக் காரணம் என்ன? மாநில முதல்வராக ஜோதிபாசு இருந்தவரை சுமுகமாகவே இருந்தது. அவர் ஓய்வுபெற்ற பிறகு புத்ததேவ் பட்டாச்சார்யா முதல்வரானதும் பிரச்னைகள் ஆரம்பமாயின.

சிங்கூரிலும், நந்திகிராமிலும் தொழிற்சாலை அமைக்க வேண்டுமென விவசாய நிலங்களைக் கையகப்படுத்தியபோதுதான் விவசாயிகள் வெகுண்டெழுந்தனர்.

மேற்கு வங்க அரசு எல்லா அரசுகளையும்போல காவல்துறையைப் பயன்படுத்தி விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க முனைந்தது; கட்சிக்காரர்களையும் களத்தில் இறக்கியது. விவசாயிகளுக்கு ஆதரவாக திரிணமூல் காங்கிரஸ் களத்தில் இறங்கியது. இரண்டு பக்கமும், உயிர் இழப்புகளும், சேதங்களும் அதிகமாயின. தொழிலதிபர் டாடா வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது; இப்போது ஆளும் கட்சியே வெளியேற்றப்பட்டுவிட்டது.

அரசாங்கம் என்பது மக்களுக்கு விருப்பமானதைச் செய்வதல்ல; மக்களுக்குத் தேவையானதைச் செய்வதுதான். ஆனால், மத்திய, மாநில அரசுகள் தங்கள் சுயநலத் தேவைகளுக்காகச் செயல்படும்போது மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.

மக்களின் பொறுமையை அளவுக்கு மீறி சோதிக்கக் கூடாது. வாய்ப்புக் கிடைக்கும்வரை வாய்மூடியே இருப்பார்கள். எரிமலைகூட பார்ப்பதற்கு அமைதியாகத்தான் தெரிகிறது.

வீரியம் இழந்த புதிய விதைப்புரட்சி.

ஆர்.எஸ். நாராயணன்


எதிர்கால உணவுத் தேவையை நிறைவேற்ற இந்தியா 2020-ல் நுழையும்போது அரிசி உற்பத்தி மட்டும் 12.21 கோடி டன்னுக்கு உயர்த்தப்பட வேண்டும் என்று மத்திய திட்டக்கமிஷன் இலக்கு நிர்ணயித்தது.

இன்றுள்ள வளர்ச்சி வீதம் நீடித்தால்-அதாவது ஆண்டுக்கு 1.34 சதம் என்றால் 2020-ல் 10.6 கோடி டன் அரிசிதான் இயலும். 12.21 கோடி டன் இலக்கை எப்படி நிறைவேற்றுவது என்ற கேள்விவந்தபோது, 2007-ல் தேசியப் பசிப்பிணிப் பாதுகாப்பு மிஷன் உருவாக்கப்பட்டு, 2011-12-ல் அரிசி உற்பத்தியை 10 கோடி டன்னுக்கு உயர்த்த முடிவானது. அரிசியுடன் கோதுமை மற்றும் பருப்பு உற்பத்தி உயர்வுக்கான வரையறையும் தேசியப் பசிப்பிணிப் பாதுகாப்பு மிஷனில் செய்யப்பட்டது. இவற்றுக்காக 4,882 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இதில் அரிசி உற்பத்தி உயர்வுக்கான பங்கு 1963 கோடி ரூபாய். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ""கிழக்கு மாநிலங்களில் இரண்டாவது பசுமைப்புரட்சி'' என்று கோஷமிட்டு, ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா நிதியிலிருந்து 400 கோடி ரூபாய் பணத்தை மேற்படி மாநில அரிசி, பருப்பு, எண்ணெய் வித்து, உற்பத்தி உயர்வுக்காக ஒதுக்கியது நினைவிருக்கலாம். கிழக்கு மாநிலங்கள் என்றால் இவற்றில் பிகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஒரிசா, கிழக்கு உ.பி. அடங்கும்.

இந்தியாவின் கிழக்குப் பிராந்தியங்களில் அரிசியின் உற்பத்தித்திறன் - அதாவது தலா ஹெக்டேர் விளைச்சல் பஞ்சாப் - ஆந்திரப் பிரதேசம் - தமிழ்நாடு அளவைவிடக் குறைவாயிருப்பதன் காரணம் வீரிய ரகம் அல்லது ஒட்டுவீரிய ரக விதைப்பயன் குறைவு என்று கூறும் கிரிக்கெட் விவசாய அமைச்சர் சரத்பவார் சீனாவைப் பின்பற்ற வேண்டுமென்று கூறுகிறார்.

சீனாவில் சுமார் 3 கோடி ஹெக்டேர் நிலத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அதில் சுமார் 2 கோடி ஹெக்டேர் நிலத்தில் வீரிய ஒட்டு ரக நெல் பயிராகிறது. சீனாவில் வீரிய ஒட்டு ரகம் சுயம்பூ ஐ.ஆர்.ஆர்.ஐ. மணிலா தயாரிப்பு அல்ல. 1964-ல் சீனாவில் தொடங்கப்பட்டுள்ள அந்தத் தொழில்நுட்பத்தில் அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் ஒரு வரிசையில் மலட்டு நெல்லும் ஒரு வரிசையில் வீரிய ரகமும் நட்டு வீரிய ஒட்டு என்ற ஹைபிரீட் விதை நெல் உற்பத்தியாவதாக ஒரு கருத்துண்டு.

மலட்டு நெல்லையும் வீரிய நெல்லையும் கலந்து வீரிய ஒட்டு விதை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் அறிந்த இந்திய அரிசி விஞ்ஞானி ரிச்சாரியோ, இந்தியாவுக்கு ஐ.ஆர்.ஆர்.ஐ. நெல் வேண்டாம் என்று ஃபோர்டு பவுண்டேஷனை எதிர்த்துப் போர் தொடுத்தார். ரிச்சாரியோ, கட்டாக் அரிசி ஆய்வு நிலையத்தின் தலைமை விஞ்ஞானியாகவும் டைரக்டராகவும் செயல்பட்டார்.

ஐ.ஆர்.ஆர்.ஐ. நெல் வேண்டாம் என்றதால் அவரை ஓரம் கட்டினார்கள். அவர் வழக்குத் தொடர்ந்தார். அவருக்குச் சம்பளம் நிறுத்தப்பட்டது. முடிவில் இதய நோய் வந்து இறந்துபோனார். ஐ.ஆர்.ஆர்.ஐ. நெல் விதையை அப்போதே அவர் வேண்டாம் என்றார். இப்போதுதான் மத்திய அரசு ஐ.ஆர்.ஆர்.ஐ. நெல் வீரியம் இழந்ததை உணர்கின்றனர். இப்போது சீனாவிலிருந்து வீரிய ஒட்டு விதை நெல்லை இறக்குமதி செய்யலாமென்று யோசிக்கப்படுகிறது.

சீனாவின் உற்பத்தித்திறன் 6.61 டன் நெல். இந்தியா 3.37 டன். இதன் காரணம் வீரிய ஒட்டு ரக நெல் மட்டுமல்ல. சீனாவில் 90 சதவீத சாகுபடி நிலம் நீர்வளம் நிரம்பியது. இந்தியாவில் சுமார் 50 சதவீத நெல் சாகுபடி நிலம் மட்டுமே நீர்வளம் உள்ளது. மானாவாரி நெல் சாகுபடி சீனாவில் இல்லை. தவிரவும் இந்தியாவைவிட சீனாவில் ரசாயன உரம் அதிகம் வழங்கப்படுகிறது. ஆகவே, சீனாவிலிருந்து வீரிய ஒட்டு விதை நெல்லை இறக்குமதி செய்வதால் மட்டும் உற்பத்தியை உயர்த்த இயலாது. நமது சூழ்நிலைக்கு ஏற்ப நல்ல மகசூல் தரக்கூடிய நெல் விதைகளைத் தேர்வு செய்வது நல்லது.

அரிசி உற்பத்தியை உயர்த்த வீரிய ஒட்டு நெல் விதைகளே சரியான தீர்வு என்று கூறிய அமைச்சர் சரத் பவாரின் யோசனையை ஏற்று கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவில் உள்ள அனைத்து அரிசி ஆராய்ச்சி நிலையங்களும் முழு மூச்சில் செயல்பட்டு வெளியிட்ட வீரிய ஒட்டு எதுவுமே நல்ல பலன் தரவில்லை. குறிப்பாக, கிழக்குப் பிராந்தியத்தில் தோல்வியே. சுமார் 43 வீரிய ஒட்டு நெல் ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தோல்விக்கு என்ன காரணம் என்று யோசித்தபோது, இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட விதை ரகங்கள் முதற்கண் தடுமாறும் தட்பவெப்பத்தைத் தாக்குப் பிடிக்க வேண்டும்.

மழை வெள்ளத்தால் பாதிப்படையாத மடுவு முழுங்கி போன்ற பல ரகங்கள் கங்கைப் பிரதேசங்களில் உண்டு. இதற்கு நேர்மாறாக நீர் இல்லாமல் வறட்சியுறும் சூழ்நிலைக்கு ஏற்ப வறட்சி தாங்கும் நெல்விதை ரகங்களும் உண்டு. குளிரைத் தாங்கி வளரும் நெல் ரகங்களும் உண்டு. உவரைத் தாங்கி வளரும் நெல் ரகங்களும் உண்டு. மானாவாரி ரகங்களும் உள்ளன. மாநில அளவில் புவியியல் தட்பவெப்ப மாற்றங்களை அனுசரித்துப் பயிராகும் விதை ரகங்கள் வீரிய ஒட்டு ரகங்களை விடவும் விளைச்சல் கூடுதலாயுள்ளன.

வீரிய ஒட்டு ரகங்களை சிறு, குறு விவசாயிகளாலும் பழங்குடி விவசாயிகளாலும் ஏற்க முடியாது. வீரிய ஒட்டுரக நெல்லுக்கு ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். அவற்றின் சாகுபடி அடக்கச் செலவும் அதிகம் என்பதால் கிழக்குப் பிராந்திய விவசாயிகள் ஏற்க மறுக்கின்றனர். எனினும், பணவசதியுள்ள விவசாயிகளுக்கு தட்பவெப்பப் பிரச்னை இல்லாத புவியியல் சூழல் உள்ள நிலங்களில் மட்டுமே சீனாவில் விளையக்கூடிய உற்பத்தித்திறனைப் பெற முடியும், பெற்றும் உள்ளனர். ஆனால், தட்பவெப்பத்தை அனுசரித்து எல்லா நிலங்களுக்கும் பொருந்தும் விதை ரகங்கள்தான் இன்றைய தேவை.

குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே சிறப்பாக விளையும் சீன வீரிய ஒட்டு பெரும்பாலான இடங்களுக்குப் பொருந்தாது. எதிர்பார்க்கும் விளைச்சலைப் பெற முடியாது என்று வேளாண் துறைசார்ந்த விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரிசா மாநிலத்தில் பருவம் - பட்டம் - புவியியல் தட்பவெப்பத்தைத் தாங்கி வளரக்கூடிய பல பாரம்பரிய நெல் விதைகளைப் பயிர் செய்து வெற்றி கண்டுள்ள நடாபர் சாரங்கி என்ற விவசாயியின் வெற்றிக்கதை விவசாய விஞ்ஞானிகளின் கவனத்தை மிகவும் கவர்வதாயுள்ளது.

77 வயதாகும் சாரங்கி, ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர். கோர்தா மாவட்டத்தில் நரிஷோ என்ற கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் நிலத்தில் 350 வகையான நெல் ரகங்களை விதைப் பயனுக்கென்றே சாகுபடி செய்து உள்ளூர் மக்களுக்கு வழங்குகிறார். அவருடைய பாரம்பரிய விதைகளை வாங்கிச் செல்லும் விவசாயிகள் நல்ல லாபத்தில் விவசாயம் செய்வதுடன் விளைச்சலும் கணிசமாயுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

பசுந்தாள் உரம், இயற்கை உரம் கொண்டு நெல் பயிரிட்டு விளைந்ததை அறுவடை செய்து அரிசியாக்கி மணக்க மணக்க உண்பதுடன் நல்ல விலைக்கு விற்பனையும் செய்கின்றனர். சாரங்கி சேகரித்துள்ள பாரம்பரிய விதைகளின் பெயர்களில் பக்திமணமும் உண்டு. உதாரணம்: கேதார கௌரி, பத்ம கிஷோரி, கோவிந்த போக், காஸ்காமினி, ரத்னசூடி, கன்னையா பத்தியா, காலாஜீரா (கருப்பு சீரகச்சம்பா). இவரிடம் உள்ள மடுவு முழுங்கி விதைகள் வெள்ளம் வடிந்த பிறகும் 25 கிளைகள் (டில்லர்) வெடித்து வளர்கின்றன. வெள்ளத்தில் தலை உயர்ந்து வளரும். அதேபோல் சாரங்கி வழங்கும் வறட்சியைத் தாங்கி வளரும் நெல் பயிரின் தண்டு மிக மிக உறுதியுடன் விளங்குகின்றனவாம்.

நாட்டுக்கு ஏற்ற விதை நெல் ரகங்களை நல்ல முறையில் தேர்வு செய்து இனப்பெருக்கம் செய்யும் பணியை உண்மையில் வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டும். பணம் என்னவோ கோடிக்கணக்கில் நாட்டுக்குத் தேவையற்ற விதை ரகங்களைக் கண்டுபிடிப்பதில் பல்கலைக்கழகங்கள் செலவு செய்வது உண்மைதான்.

இதில் வேடிக்கை என்னவென்றால் பணச்செலவே இல்லாமல் சாரங்கி கண்டுபிடித்த நாடியா ஃபூலோ, சோரா, காலாக்கியரி போன்ற மானாவாரி நெற்பயிருக்கு ஈடாகப் பல கோடி ரூபாய் பணம் செலவழித்து இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் கண்டுபிடித்துள்ள ரகங்கள் போட்டி போடவே தகுதி இல்லை என்று அங்குள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆகவே பணம் முக்கியமல்ல. தேடுதல் வேட்டைதான் இன்றைய தேவை. அரசாங்கம் வழங்கும் விதைகள் வீரியம் இழந்து வரும் சூழ்நிலையில் - இனி எதிர்காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சாரங்கிபோல் ஒரு விவசாயி தோன்றிவிட்டால் எத்தனை பஞ்சம் வந்தாலும் அதை இந்தியா தாங்கி நிற்கும். எல்லோருக்கும் எல்லாமும் வழங்கக்கூடிய இந்தியாவில் என்றுமே சோற்றுக்குப் பஞ்சம் வரும் வாய்ப்பே இராது.