Friday, August 12, 2011

போலீசார் கைது செய்தால் தண்ணீர் கூட குடிக்க மாட்டேன்..



‘உண்ணாவிரதத்தின் போதோ அல்லது அதற்கு முன்போ என்னை கைது செய்தால், அதன் பிறகு தண்ணீர் கூட குடிக்க மாட்டேன்’ என்று அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார். லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகளை கொண்டு வர வலியுறுத்தி, டெல்லியில் வரும் 16ம் தேதி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதம் துவங்க உள்ளார்.

இதற்கு முதலில் அனுமதி மறுத்த டெல்லி போலீசார், பெரோஸ்ஷா கோட்லாவில் ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா அருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளித்துள்ளது. இதற்கு ஹசாரே திருப்தி தெரிவித்துள்ளார். போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது பற்றி, டெல்லியில் சிவில் சொசைட்டி நிர்வாகிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். பின்னர், இதன் நிர்வாகிகளில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதா பலமாக இல்லை. இதை திரும்பப் பெற்று, வலிமையான மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும். இந்த கோரிக்கையில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. திட்டமிட்டப்படி 16ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் துவங்கும். எங்கள் கோரிக்கை ஏற்கப்படும் வரை, எந்த சமாதானத்தையும் ஏற்க மாட்டோம்.

உண்ணாவிரதத்தை தொடங்கும் முன்போ அல்லது உண்ணாவிரதத்தின் போதோ போலீசார் கைது செய்தாலோ, கட்டாயப்படுத்தி சாப்பிட வைக்க முயன்றாலோ, அதன் பிறகு தண்ணீரை கூட குடிக்க மாட்டேன் என்று ஹசாரே எச்சரித்துள்ளார். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

‘இரவு 8 முதல் 9 வரை விளக்கை அணையுங்கள்’

கெஜ்ரிவால் மேலும் கூறுகையில், ‘ஊழலுக்கு எதிராக 16ம் தேதி நடத்தப்படும் போராட்டத்தில் பங்கேற்கும்படி சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு ஹசாரே அழைப்பு விடுப்பார். மேலும், ஊழலை ஒழிக்க வலியுறுத்தும் விதமாக வரும் 15ம் தேதி இரவு 8 மணி முதல் 9 மணி வரை மக்கள் விளக்கை அணைக்க வேண்டும். ஊழல், வறுமை, கல்வியறிவு இல்லாமை போன்ற விஷயங்களில் நமது சுதந்திரம் இன்னும் முழுமை பெறவில்லை. எனவே, ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாகவே, விளக்கை அணைக்கும்படி வேண்டுகோள் விடுக்கிறோம்’ என்றார்.

தமிழகத்தை வாழ விடுவதில்லை என்று மத்திய அரசு தீவிரமாக செயல்படுகிறது - ஜெ. ஆவேசம்.



தமிழகத்தை வாழ விடுவதில்லை, அதை அனுமதிப்பதில்லை என்று மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்திற்கு மத்திய அரசு இழைத்து வரும் அநீதியை தகர்த்து தமிழக மக்களுக்கு நாங்கள் நன்மை செய்வோம் என்று முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. அப்போது சிபிஐ உறுப்பினர் ஆறுமுகம் பேசுகையில்,

வால்பாறையில் இரவில் யானைகள் பயம் உள்ளது. தீப்பந்தங்களை காட்டினால் யானைகள் ஓடிவிடும். இதற்காக அங்குள்ள மக்களுக்கு கூடுதல் மண்எண்ணெய் வழங்க வேண்டும் என்றார்.

அப்போது எழுந்த முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசு என்ன காரணத்தினாலோ கடந்த ஜூன் மாதத்திலிருந்து தமிழகத்துக்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்து வருகிறது. இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதினோம். நேரிலும் வலியுறுத்தினோம்.

ஆனால் என்ன காரணத்தினாலோ நமக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைந்து வருகிறது என்றார்.

பின்னர் தொடர்ந்து பேசிய ஆறுமுகம், தமிழகத்தின் வளர்ச்சிக்கு இதன் மூலம் மத்திய அரசு தடையாக இருப்பதாகத்தான் தெரிகிறது. இதை எதிர்த்து இடதுசாரிகள் போராடி வருகிறோம். மக்கள் தான் வருவதில்லை என்றார். மக்கள் வருவதில்லை என்று அவர் கூறியதைக் கேட்டு உறுப்பினர்கள் வாய் விட்டுச் சிரித்தனர்.

பின்னர் பேசிய சிபிஎம் உறுப்பினர் பாலபாரதி, உறுப்பினர் ஆறுமுகம் சொல்வது தவறு. இடதுசாரிகள் கடந்த 5 ஆண்டுகளாக மக்களை திரட்டி போராடி வந்ததால்தான் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது. எனவே மக்கள் வரவில்லை என்று கூற வேண்டாம் என்றார்.

மீண்டும் தனது பேச்சைத் தொடர்ந்த ஆறுமுகம், நாம் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் வரவில்லை என்று தான் கூறினேன். ஆட்சி மாற்றத்துக்கு முக்கிய காரணம் உச்சபட்ச இமாலய ஊழலும், முறைகேடுகளும்தான் என்றார்.

இதையடுத்து குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, மக்களின் உரிமைக்காக மத்திய அரசை எதிர்த்து நாங்களும் போராடுகிறோம். நீங்களும் வாருங்கள். நீங்கள் எதிர்பார்ப்பதைவிட அதிகமாக மக்கள் நிச்சயம் வருவார்கள் என்று தெரிவித்தார்.

இதைடுத்துப் பேசிய ஆறுமுகம், இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். இடதுசாரிகளுடன் முதல்வர் சேர்ந்து போராடினால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்.

பின்னர் பேசிய சிபிஎம் தலைவர் செளந்தரராஜன், மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை பாரபட்சத்துடன் நடத்துகிறது என்றார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்து வருவது மட்டுமல்ல, நமது தேவைக்கு வெளியில் வாங்க விரும்பினாலும் அதற்கு அனுமதி வழங்குவதில்லை.

மண்ணெண்ணெய் மட்டுமல்ல தமிழகத்துக்கு தேவையான டி.ஏ.பி. உரத்தையும் போதுமான அளவுக்கு வழங்க வில்லை. பிரதமரிடம் வலியுறுத்தியும் கூட மத்திய அரசு இந்த வகை உரத்தை குறைத்துதான் வழங்குகிறது.

நான் பலமுறை தெரிவித்து விட்டேன். மாநில அரசின் நிதி ஆதாரம் மிகக் குறைவாக இருக்கிறது. அதை வைத்து எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு செய்து இருக்கிறோம். மத்திய அரசும் போதிய நிதி வழங்கவில்லை. நிதி பிரச்சனை மட்டுமல்ல மாநில அரசின் பல்வேறு அதிகாரங்களை வருவாய்களை அத்தனைஇனங்களிலும் மத்திய அரசு பறித்துவிட்டது. தற்போது மாநில அரசுக்கு வருவாய் வரக்கூடிய ஒரே இனம் வாட் வரி விதிப்பு தான்.

இதை வைத்துக்கொண்டு இத்தனை திட்டங்களையும் உருவாக்கி செயல்படுத்தி வருகிறோம். இதை விட கூடுதலாக செய்ய வேண்டும் என்ற மனமும் ஆசையும் எங்களுக்கு உண்டு. நீங்கள் முன் வைக்கிற கோரிக்கைகளை விட ஆயிரம் மடங்கு அதிகம் செய்ய வேண்டும் என்று எண்ணம் உண்டு. ஆனால் நிதி தட்டுப்பாடு காரணமாக எங்கள் கைகள் கட்டுப்பட்டுள்ளன. அந்த கட்டுப்பாட்டை தகர்த்து பகீரத முயற்சி செய்து தமிழக மக்களுக்கு நிச்சயம் நன்மை செய்வோம்.

மத்திய அரசு எத்தனை தடைகளை விதித்தாலும் அந்த தடைகளை எல்லாம் தகர்த்து தமிழக மக்களுக்கு நன்மை செய்வோம்.

தமிழ்நாட்டை வாழ விடுவதில்லை என்று மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதை சொல்வதற்கு நான் வேதனைப்படுகிறேன். ஆனால் அதுதான் உண்மை. தமிழகம் வாழக் கூடாது என்று மத்திய அரசு கருதுகிறது. அப்படித்தான் அது செயல்படுகிறது.

எனவே ஜனநாயகத்துக்குட்பட்டு தமிழக மக்களுக்கு நிச்சயம் நன்மை செய்தே தீருவோம் என்றார். இதைக் கேட்டதும் அதிமுக கூட்டணிக் கட்சிகளின்

உறுப்பினர்கள் மேசைகளைப் பலமாக தட்டி முதல்வரின் பேச்சை வரவேற்றனர்.

அடுத்தடுத்து மத்திய அரசுக்கு கடும் கண்டனம்

நேற்றுதான் சட்டசபையில் கோத்தபயாவின் பேச்சைக் குறிப்பிட்டு முதல்வர் ஜெயலலிதா மிகக் கடுமையாக பேசினார். அப்போது மத்திய அரசு வாய் மூடி மெளனமாக இருப்பதால்தான் கோத்தபயா போன்றவர்கள் தமிழகத்தை இழித்துப் பேசும் நிலை ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசை மிகக் கடுமையாக சாடியிருந்தார்.

இந்த நிலையில் மத்திய அரசு தமிழகத்தை வாழ விடக் கூடாது என்று செயல்பட்டு வருவதாக மிகக் கடுமையான குற்றச்சாட்டை அவர் வைத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செப்.11 தாக்குதலுக்கு 8 மாதங்களுக்கு முன், வெளியான ரகசியம் !



அமெரிக்காவைக் கதிகலங்க வைத்த செப்டம்பர் 11ம் தேதி தாக்குதல் நடைபெறுவதற்கு 9 மாதங்களுக்கு முன்னரே, அதுபற்றிய உளவுத் தகவல் கிடைத்த விஷயம் வெளியாகி, மற்றொரு சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்த உளவுத் தகவல் பிரென்ச் உளவுத்துறை DGSEயிடமிருந்து கிடைத்திருந்தது.

இந்தத் தகவலை வெளியிட்டு பரபரப்பு ஒன்றைக் கிளப்பிவிட்டிருக்கின்றது, பிரான்சில் இருந்து வெளியாகும் Le Monde பத்திரிகை.

பிரான்சின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் இந்த ரகசியத்தைத் தமக்குத் தெரிவித்ததாகக் கூறியிருக்கிறது அப் பத்திரிகை. அந்த அதிகாரி மூலம் பிரென்ச் உளவுத் துறையின் அதி ரகசிய பைல் ஒன்றையும் பெற்றிருக்கிறது Le Monde.

பிரென்ச் உளவுத்துறையில் அதி ரகசிய பைலில் 328 பக்கங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பைலில் உள்ள குறிப்புகள்தான், பத்திரிகை வெளியிட்டுள்ள தகவல்களின் ஆதாரம்.

இதில் ஒரு குறிப்பு, ஜனவரி 5ம் தேதி 2001ம் ஆண்டு தேதியிடப்பட்டு எழுதப்பட்டுள்ளது. அதன் தலைப்பு – “அல்-கய்தா இயக்கம், அமெரிக்காவுக்கு எதிரான விமானக் கடத்தல் ஒன்றைத் திட்டமிடுகிறது”

குறிப்புக்களில் கூறப்பட்டுள்ள சில விபரங்கள் துல்லியமானவை.

உதாரணமாக, அமெரிக்காவுக்கு எதிரான விமானக் கடத்தலுக்கு, அமெரிக்க விமான நிறுவனங்களில் விமானங்களை கடத்துவதே அல்-கய்தாவின் திட்டம் என்ற குறிப்பு, பிரென்ச் உளவுத்துறையால் எழுதப்பட்டிருக்கின்றது. குறிப்பு எமுதப்பட்டு 8 மாதங்களின்பின் நடைபெற்றதும், அதுதான்.

அத்துடன், எந்தெந்த விமான நிறுவனங்களின் விமானங்கள் கடத்தப்படலாம் என்பதும் பிரென்ச் உளவுக் குறிப்புகளில் எழுதப்பட்டுள்ளது. அதில், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் யுனைட்டட் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களும் இருக்கின்றன.

இவ்வளவு துல்லியமான சில குறிப்புக்கள் இருந்தும், வேறு சில குறிப்புக்களில் கோட்டை விட்டிருக்கிறது பிரென்ச் உளவுத்துறை DGSE.

அமெரிக்காவின் விமான நிலையங்களில் இருந்து புறப்படும் விமானங்களைக் கடத்தப் போகின்றார்கள் என்ற குறிப்பு அதில் இல்லை. மாறாக, அதற்குத் தலைகீழான குறிப்பு ஒன்று உள்ளது.

அதன்படி, ஐரோப்பிய விமான நிலையங்களில் இருந்து, முக்கியமாக ஜேர்மன் விமான நிலையங்களில் இருந்து, அமெரிக்கா நோக்கிப் புறப்படும் விமானங்களைத்தான் கடத்தல்காரர்கள் குறிவைப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல, ஒன்றுக்கு மேற்பட்ட விமானங்கள், ஒரே நேரத்தில் கடத்தப்படுவதுதான் திட்டம் என்ற தகவலும் இந்தக் குறிப்புகளில் இல்லை.

Le Monde பத்திரிகை, பிரென்ச் உளவுத்துறையின் ரகசிய பைலிலுள்ள குறிப்பு ஒன்றை முழுமையாகப் பிரசுரித்துள்ளது. அதிலுள்ள விபரங்களைப் பாருங்கள்-

செப். 11 தாக்குதல் நடைபெற்று சில நிமிடங்களில்...

2000ம் ஆண்டின் ஆரம்பத்தில், ஆப்கானிஸ்தானிலுள்ள காபுல் நகரில் பின்லேடன், ரகசியக் கூட்டம் ஒன்றைக் கூட்டியிருக்கிறார். கூட்டத்தில், தலிபான் தலைவர்கள் சிலரும், செஸ்னியா நாட்டு தலைவர்கள் சிலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்க விமானங்களைக் கடத்தி, அமெரிக்க இலக்குகள்மீது மோதுவது பற்றி அந்தக் கூட்டத்தில்தான் முதன் முதலில், பிரஸ்தாபித்திருக்கிறார் பின்லேடன்.

“ஜேர்மனியிலுள்ள பிராங்பேர்ட் விமானநிலையத்திலிருந்து புறப்படும் அமெரிக்க விமானம் ஒன்றை அல் – கய்தா கடத்த எற்பாடுகள் முடிந்துவிட்டன” என்று பின்லேடன் கூறியதாகத் தெரிவிக்கிறது அந்தக் குறிப்பு.

இந்தத் தகவல்கள் பிரென்ச் உளவுத்துறைக்கு எப்படிக் கிடைத்தன?

உஸ்பெக்கிஸ்தான் உளவுத்துறையிடம் இருந்து தங்களுக்கு இத்தகவல்கள் கிடைத்ததாக பிரென்ச் உளவுத்துறையின் குறிப்புக்கள் சொல்கின்றன.

பிரென்ச் உளவுத்துறையின் குறிப்புக்களில், 5 விமான நிறுவனங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், கன்டினென்டல், யுனைட்டட் ஏயார்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன், ஐந்தாவதாக யு.எஸ். ஏரோ என்ற நிறுவனத்தின் பெயரும் குறிக்கப்பட்டிருக்கிறது.

இது எதைக் குறிக்கின்றது என்பது சரியாகத் தெரியவில்லை. காரணம் யு.எஸ். ஏரோ என்ற பெயரில் அமெரிக்காவில் சர்வதேச விமான நிறுவனம் எதுவும் கிடையாது.

இப்படியொரு தகவல் பிரென்ச் உளவுத் துறையிடம் இருந்து கிடைத்ததை அமெரிக்கா ஒப்புக் கொள்கிறதா?

ஆம். ஆச்சரியகரமாக அமெரிக்கா ஒப்புக் கொண்டிருக்கிறது. சி.ஐ.ஏ.யின் பேச்சாளர்களில் ஒருவரான ஜோர்ஜ் லிட்டெல், பிரென்ச் உளவுத்துறை இந்தக் குறிப்புக்களை செப்.11ம் தேதி தாக்குதலுக்கு சில மாதங்களுக்கு முன்பே சி.ஐ.ஏ.யிடம் கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.

ஜோர்ஜ் லிட்டெல், “அவர்களுக்குக் கிடைத்தது போன்ற சில உளவுத்தகவல்கள் எங்களுக்கும் கிடைத்திருந்தன. ஆனால், தாக்குதல் நடைபெறப்போகும் தேதி அல்லது இடம் பற்றி அவர்களிடமும் தகவல் இல்லை. எங்களிடமும் தகவல் இருக்கவில்லை” என்றும் கூறியிருக்கிறார்.

பிரென்ச் உளவுத்துறை DGSEயின் முன்னாள் பாதுகாப்புத்துறைத் தலைவர் அலைன் சொவுட், “உளவுத்துறைகளைச் சேர்ந்த அனைவருக்குமே இப்படி ஒரு விவகாரம் திட்டமிடப்படுகின்றது என்பது தெரியும். அது ஒரு விமானக் கடத்தல் என்பதும் தெரியும். அல் – கய்தாவால் நடாத்தப்படவுள்ளது என்பதும் தெரியும்” என்று கூறியுள்ளார்.

“எமது அமெரிக்க உளவுத்துறை நண்பர்களுக்கும் தெரியும், ஐரோப்பிய உளவுத்துறை நண்பர்களுக்கும் தெரியும். எந்த நிமிடத்திலும் விமானக் கடத்தல் நடைபெறலாம் என்று, டைம் பாம் ஒன்றின் மேல் உட்கார்ந்திருப்பது போல இருந்தோம். ஆனால் கடத்தப்படப்போவது அமெரிக்காவில் இருந்து புறப்படப் போகும விமானங்கள் என்று எங்களில் யாரும் எதிர்பார்க்கவில்லை” என்று கூறியதாக எழுதியுள்ளது Le Monde பத்திரிகை.

சரி. இந்தத் தகவல்கள் உளவுத்துறைக்கு எப்படித் தெரியவந்தன? அதைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன.

அப்துல் ரஷீட் என்பவர் உஸ்பெக்கிஸ்தானைச் சேர்ந்த, ஆப்கான் ஆயுத வியாபாரி. தலிபான்களுக்கு ஆயுத சப்ளை செய்தவரும் அவர்தான். அதேநேரத்தில் உஸ்பெக் உளவுத்துறையுடனும் தொடர்புகளை வைத்திருந்திருக்கிறார்.

தலிபான்களின் தொடர்பு மூலமாக தனது ஆட்களை அல்-காய்தாவின் முகாம்களுக்குள் ஊடுருவ விட்டிருந்த அப்துல் ரஷீட், அல் – கய்தா முகாம்களில் இருந்துதான் விமானக்கடத்தல் பற்றிய தகவலைப் பெற்றிருக்கிறார்.

அதை அவர் உஸ்பெக் உளவுத்துறைக்குத் தெரிவிக்க, அவர்கள் பிரென்ச் உளவுத்துறைக்குத் தெரிவித்திருக்கிறார்கள். (தகவல் கொடுத்த அப்துல் ரஷீட் இப்போது ஆப்கான் ராணுவத்தின் தளபதிகளில் ஒருவர்!)

இப்படியொரு தகவல் கிடைத்தும், அமெரிக்க உளவுத்துறை அதில் முழுமையாகக் கவனம் செலுத்தாமல் விட்டதற்கும் ஒரு காரணம் உண்டு. அது என்னவென்றால் அந்தக் காலகட்டத்தில் அல்-காய்தா அமைப்பு சில தந்திரங்களைச் செய்துகொண்டிருந்தது. மேலை நாட்டு உளவுத்துறைகளை திசை திருப்ப, அல்-காய்தாவே வேண்டுமென்று சில தகவல்களை லீக் செய்துகொண்டிருந்தது.

அப்படி லீக் செய்யப்பட்ட எந்தத் தகவலும், நிஜமான தகவல்கள் கிடையாது.

செப். 11 தாக்குதலுக்குமுன் கடைசியாக அல்-காய்தாவால் லீக் செய்யப்பட்ட ‘போலி’ உளவுத் தகவல், பிரான்ஸை மையப்படுத்தியே அவிழ்த்து விடப்பட்டிருந்தது.

இதோ, இந்தத் திட்டத்தையும் பாருங்கள்:

பின்லேடனின் நெருங்கிய சகாவான ஜமால் பெகால் என்பவர் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரை விசாரணை செய்தபோது, அவரிடம் அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல் திட்டம் ஒன்று இருப்பது தெரியவந்தது. அந்தத் திட்டம், பாரிஸிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு தற்கொலைப் போராளிகளை அனுப்பி, அந்த கட்டடத்தையே தகர்க்கும் திட்டம்.

அவரிடம் இருந்த திட்டம் மிகத் துல்லியமாக இருந்தது. அமெரிக்க தூதரகம் பற்றி அவர் வைத்திருந்த விபரங்கள்கூட நிஜமானவையாகவே இருந்தன. இதுதான் அல்-காய்தாவின் நிஜமான தாக்குதலாக இருக்கப் போகின்றது என சி.ஐ.ஏ. நம்பும் அளவுக்கு, திட்டம் முழுவதும் பக்காவாக இருந்தது.

இந்த விபரங்கள் சி.ஐ.ஏ.க்கு தெரியவந்தது எப்போது தெரியுமா? செப். 11 ம் திகதிய தாக்குதலுக்கு, சில தினங்களுக்கு முன்பு!

அமெரிக்க மற்றும் பிரென்ச் உளவுத்துறைகள் பாரிஸிலுள்ள அமெரிக்கத் தூதரக தற்கொலைத் தாக்குதல் பற்றிக் கவனம் செலுத்திக் கொண்டிருக்க -

செப்டம்பர் 11ல், அமெரிக்காவில் தாக்குதல் நடைபெற்றது.

-Le Monde பத்திரிகையின் குறிப்புகளுடன், ரிஷி.

“விறுவிறுப்பு.காம்”

விண்வெளியில் மேலும் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிப்பு.

விண்வெளியில் மேலும் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிப்பு

விண்வெளியில் ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கெப்லர் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது விண்ணில் பறந்து ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது ஒரு புதிய கிரகம் இருப்பதை கெப்லர் விண்கலம் கண்டுபிடித்து போட்டோ எடுத்து அனுப்பியுள்ளது. அது அளவில் பெரிய கிரகமான வியாழனை விட மிக பெரியதாக உள்ளது. அதற்கு “ட்ரெஸ்-2 பி” என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்னர்.

இது மஞ்சள் நிறத்திலான நட்சத்திரங்களின் இடையே பதுங்கி கிடக்கிறது. அதன் மீது சூரியனின் 1 சதவீத வெளிச்சம் மட்டுமே விழுகிறது. இதனால் இந்த கிரகம் கரியைவிட மிகவும் கறுப்பு நிறத்தில் உள்ளது. இதன் மேற்பரப்பில் பல “கியாஸ்” பிரதிபலிக்கின்றன.

வியாழன் கிரகத்தில் சூரியனின் வெளிச்சம் அதிக அளவில் விழுகிறது. அதனால் வெள்ளை மற்றும் சிவப்பு நிற மேகங்கள் படர்ந்திருப்பது தெரிகிறது.

ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ட்ரெஸ் 2 பி கிரகத்தில் சூரிய கதிர்களின் வெளிச்சம் விழாததால் அதுபோன்ற மேக மூட்டங்கள் படர்ந்திருப்பதை காண முடியவில்லை. என விண்வெளி ஆராய்ச்சியாளர் டேவிட் கிப்பிங் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் இந்த கிரகம் கடும் வெப்பமாக உள்ளது. இங்கு 1800 டிகிரி பாரன்கீட் வெப்பம் நிலவுகிறது. அதிலிருந்து வெளியாகும் வெப்ப கதிர்கள் மங்கலான சிவப்பு கதிர்களாக தெரிகிறது. ட்ரெஸ் - 2 பி கிரகம் குறித்து கெப்லர் விண்கலம் மூலம் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சொத்து குவிப்பு வழக்கு : ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் ; பெங்களூர் கோர்ட்டு உத்தரவு.

சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும்; பெங்களூர் கோர்ட்டு உத்தரவு

ஜெயலலிதா 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை முதல்-அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணை முதலில் சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. 2001-ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார்.

சுப்ரீம் கோர்ட்டு அந்த மனுவை விசாரித்து, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி கடந்த 2003-ம் ஆண்டு உத்தரவிட்டது. கடந்த 7 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை பெங்களூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

முதல் கட்டமாக சாட்சிகள் விசாரணை முடிந்து விட்டது. அடுத்த குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 313-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. வாக்குமூலம் அளிக்க வருமாறு ஜெயலலிதாவுக்கு பெங்களூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து சிறப்பு கோர்ட்டில் ஜெயலலிதா இரண்டு மனுக்கள் தாக்கல் செய்தார். அதில் ஒரு மனுவில் அவர், நான் தமிழ்நாட்டு முதல்-அமைச்சராக இருப்பதாலும், தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதாலும், மேலும் இசட் பிளஸ் பாதுகாப்பு வளையத்தில் உள்ளதாலும் கோர்ட்டில் நேரில் ஆஜராக இயலாது எனவே வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மற்றொரு மனுவில், எனது வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக ஏற்கப்பட முடியாத பட்சத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

ஜெயலலிதாவின் மனுக்கள் மீது பெங்களூர் கோர்ட்டில் 3 நாட்கள் விவாதங்கள் நடந்தன. ஜெயலலிதா சார்பில் ஆஜரான வக்கீல் பி.குமார் வாதாடுகையில், வாக்குமூலம் கொடுப்பது என்பது குற்றம்சாட்டப்பட்டவரின் உரிமைதான் தவிர கோர்ட்டின் அதிகாரம் அல்ல என்றார்.

இதற்கு அரசு தரப்பு வக்கீல் அட்வகேட் ஜெனரல் பி.வி.ஆச்சார்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில் சுப்ரீம் கோர்ட்டு 2003-ல் அளித்த உத்தரவின்படி குற்றம் சாட்டப்பட்டவர், கோர்ட்டில் நேரில் ஆஜராகி, நேரில் வாக்குமூலம் அளிக்க வேண்டியது கட்டாயம் என்றார். இருதரப்பு வாதங்கள் முடிந்ததும் 12-ந்தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று பகல் 12 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி மல்லிகா ஜூனையா தீர்ப்பை வாசித்தார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய சிறப்பு கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் ஜெயலலிதா எந்த தேதியில் ஆஜராக வேண்டும் என்ற விவரத்தை நீதிபதி வெளியிடவில்லை. முன்னதாக அவர் ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த 2 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் சசிகலா சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டிருந்தாவது:-

என் மீதான சொத்து குவிப்பு வழக்கில் நல்லம்மா நாயுடு என்பவர் விசாரணை அதிகாரியாக இருந்தார். ஏற்கனவே விசாரிக்கப்பட்ட சாட்சிகளை அவர் மறுபடியும் விசாரித்தார். மறுவிசாரணையில் பல சாட்சிகள் பல்டி அடித்தனர். பலர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வெளியிட்டனர். சாட்சிகள் திடீரென அப்படி மாறியதற்கு என்ன காரணம்? இது தொடர்பாக பழைய விசாரணை அதிகாரி நல்லம்மாநாயுடுவை கோர்ட்டுக்கு நேரில் வரவழைத்து விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு சசிகலா தன் மனுவில் கூறி உள்ளார்.

சசிகலா மனுவை பெங்களூர் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. இந்த மனு மீது வரும் செவ்வாய்க்கிழமை (16-ந்தேதி) விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை முடிந்த பிறகே ஜெயலலிதா பெங்களூர் கோர்ட்டில் எப்போது நேரில் ஆஜராக வேண்டும் என்பது தெரியவரும்.

பத்மநாபசாமி கோவிலின் 6-வது அறையை திறப்பவரின் வம்சம் அழிந்துபோகும்.



திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள 6-வது ரகசிய அறையை(பி அறை) திறக்கக்கூடாது. அந்த அறையை திறந்தால் திறப்பவரின் வம்சம் அழிந்து போகும் என, தேவ பிரசன்னத்தில் தெரிய வந்துள்ளதாக ஜோதிட பண்டிதர்கள் கூறினர்.

பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள 5 ரகசிய அறைகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி திறந்து பார்க்கப்பட்டன. அப்போது அந்த அறைகளில் ரூ.11/2 லட்சம் கோடிக்கும் அதிகமான அரிய பொற்குவியல் இருப்பது தெரிய வந்தது. பி என்று பெயரிடப்பட்ட 6-து அறையை திறப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்த அறைகள் திறப்பு மற்றும் பொற்குவியல் பட்டியலிடும் பணிகள் தொடர்பாக கோவிலில் தேவபிரசன்னம் எனும் ஜோதிட நிகழ்ச்சி நடத்த திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கடந்த 8-ந்தேதி கோவிலில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில், கோவில் தந்திரி தரணநல்லூர் பரமேஸ்வரன் நம்பூதிரிபாடு, ஜோதிட பண்டிதர்கள் மதூர் நாராயண ரங்கபட், இரிங்காலக்குடை பத்மநாப சர்மா, அரிதாஸ், தேவிதாஸ் மற்றும் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தேவபிரசன்னத்தின் முதல் நாள் காலையில் சோழிகள் உதவியுடன் ராசி பூஜையும், தொடர்ந்து தங்க ஆரூடம் பார்த்தலும், அதன் பிறகு 12 ராசிகளை குறிக்கும் வகையில் 12 வெற்றிலைகள் உதவியுடன் தாம்பூல ஜோதிடமும் பார்க்கப்பட்டது.

முதல் நாளில் இருந்தே பல அபசகுன அறிகுறிகள் தோன்றியதாகவும், இதனால் நாட்டுக்கும், ராஜ குடும்பத்தினருக்கும் கெடுதல் ஏற்படும் என்பது உள்பட பல விளக்கங்கள் கூறப்பட்டன. இதில், 12 வெற்றிலைகள் பயன்படுத்தி ஜோதிடம் கூறும் தாம்பூல பிரசன்னம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.

நேற்று 4-வது நாளாக காலை 8 மணிக்கு தேவபிரசன்னம் நிகழ்ச்சி தொடங்கி மாலை வரை நடைபெற்றது. கடந்த 3 நாட்களாக கணித்து கூறப்பட்ட சம்பவங்கள் மற்றும் பார்க்கப்பட்ட சகுனங்கள் பற்றியும் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுவரை தோராயமாக கூறப்பட்ட பல விஷயங்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டன. நேற்று, குத்துவிளக்கு மற்றும் கண்ணாடி உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தி தேவபிரசன்னம் பார்க்கப் பட்டது. குத்துவிளக்கில் போடப்பட்டுள்ள திரிகள், அவற்றின் திசை, ஒளிரும் ஜோதியின் தன்மை- வடிவம் ஆகியவை மூலம் ஜோதிடர்கள் கணித்து கூறினார்கள். நேற்று தேவபிரசன்ன முடிவில் அதிர்ச்சி தரும் தகவல்களை ஜோதிட பண்டிதர்கள் வெளியிட்டனர்.

தேவ பிரசன்னத்தில் தெரியவந்துள்ளதாக ஜோதிட பண்டிதர்கள்,

’’பத்மநாப சாமி கோவிலில் பரிகாரமாக செய்யப்பட்டு வந்த சில பூஜைகள்- நிகழ்ச்சிகள் தடைபட்டதால் சாமி கோபத்துக்கு உள்ளானது, நாட்டுக்கும் ராஜ குடும்பத்துக்கும் கெடுதல் ஏற்படுத்தி உள்ளதாக தேவ பிரசன்னத்தில் தெரியவந்துள்ளது. இதனால் ராஜ குடும்பத்துடன் தொடர்பு உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.

கோவில் நம்பிகள் புறப்படா சாந்திகளாக கோவிலிலேயே தங்கி இருக்க வேண்டும் என்பது கடைப்பிடிக்கப்படவில்லை. கோவிலுக்குள் ரத்தம் சிந்தப்பட்டு உள்ளதும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இதற்கு பரிகாரமாக, கோவில் மற்றும் நாட்டின் ஐஸ்வர்யத்துக்காக பத்ர தீபம் ஏற்ற வேண்டும். (5 திரிகள் போட்டு தீபம் ஏற்றுவது தான் பத்ர தீபம் அல்லது பஞ்சாக்னி ஆகும்.)

பிராயசித்தமாக நடத்தி வந்த இந்த தீபம் ஏற்றும் வழக்கத்தை கோவில் ஆசாரப்படி, மீண்டும் தொடங்கி, தடைபடாமல் செய்வதாக கோவில் நிர்வாகிகள் தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது. பத்ர தீபம் ஏற்றுவதற்கு இந்த கோவிலில் தனி அறை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிலில் கொள்ளை முயற்சி நடக்கலாம் என்றும் பிரசன்னத்தில் தெரியவந்துள்ளது. நேபாள நாட்டின் கண்டகா நதியில் இருந்துதான், பத்மநாபசாமி மூலவர் சிலை அமைப்பதற்கு தேவையான சாளகிராமங்கள் திருவனந்தபுரத்துக்கு கொண்டுவரப்பட்டன.

இதில் தொடர்பு உடையவர்களை கவுரவிப்பது சம்பந்தமான பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகளை மீண்டும் தொடங்க வேண்டும்.

பத்மநாபசாமி கோவிலில் பணம் செலவிடுவதில் மோசடி நடந்துள்ளது. வரவு-செலவு கணக்குகளிலும், வழிபாடுகள் தொடர்பான கணக்குகளிலும் முறைகேடு செய்யப்பட்டு வருகிறது.

கோவில் நீண்ட காலம் சிறப்பாக செயல்படுவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அனந்தன்காடு உள்பட கோவிலுடன் தொடர்புடைய இடங்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். கோவில் குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்றும் தேவபிரசன்னத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

தெய்வீக காரியங்களுக்காக, தகுந்த ஆட்களையே நியமிக்க வேண்டும்.

திறக்கப்படாத 6-வது பாதாள அறைக்குள்(`பி' அறை) செல்ல சாமிக்கு மட்டுமே உரிமை உள்ளது. அதனால் இந்த அறையை எக்காரணம் கொண்டும் திறக்கக்கூடாது.

இந்த அறையை திறந்தால், திறப்பவருக்கு விரைவில் மரணம் நிச்சயமாக ஏற்படும். அறையை திறப்பவரின் வம்சம் அழிந்து போகும்.

அறையை திறப்பவரின் குடும்பத்தினர் பாம்பு உள்பட விஷ ஜந்துக்களால் பாதிக்கப்பட்டு அழிய நேரிடும். இந்த அறையை திறக்காமல் இருந்தால், தற்போதுள்ள நிம்மதி-அமைதியான நிலை தொடர்ந்து காணப்படும் என்றும் தேவ பிரசன்னம் மூலம் தெரிய வந்துள்ளது’’ என்று கூறினர்.

மனசாட்சி இல்லாத மாறன்கள்.



தயாநிதி மற்றும் கலாநிதி மாறனை இத்தனை நாளாக தழுவியிருந்த அதிர்ஷ்ட தேவதை சுத்தமாக கைகழுவி விட்டதாக தெரிகிறது.

2004 பாராளுமன்றத் தேர்தலின் போது, முரசொலி மாறனின் மறைவால், மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதிக்கு, கருணை அடிப்படையில் நியமிக்கப் பட்டவர்தான் தயாநிதி மாறன். அந்தப் பதவியே கனிமொழி போட்ட பிச்சைதான். முதலில் அந்தத் தொகுதிக்கு கனிமொழியை வேட்பாளராக நியமிக்கலாம் என்று, கருணாநிதி எடுத்த முடிவு, கனிமொழி அரசியலில் இறங்க அப்போது மறுத்ததால் தயாநிதிக்கு அந்த யோகத்தை அளித்தது.

அதற்குப் பிறகு, மாறன்களின் நடத்தையால் தான் அவர்கள் சிஐடி காலனியின் எதிர்ப்பை சம்பாதிக்க நேர்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன. எம்.பி பதவியை பெறுவதற்கு முன்பாக, ராசாத்தி அம்மாளின் தயவு வேண்டி, அவர்கள் வீட்டிற்கு நடையாக நடந்தவர்கள், பதவி கிடைத்து மந்திரியானதும், சிஐடி காலனியை சுத்தமாக புறக்கணித்ததாக தெரிகிறது. இந்தப் புறக்கணிப்பும் உதாசீனப்படுத்தலுமே, ராசாத்தி அம்மாளை கனிமொழிக்கும், அரசியல் அதிகாரம் இருந்தால் தான், குடும்பத்தில் கவுரவமான இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும், வெறுமனே கருணாநிதியின் பாசம் மட்டும் போதாது என்ற முடிவுக்கு வந்ததாகவும் தெரிகிறது.

2004ல் தேர்தல் முடிவுகள், திமுகவுக்கு, கணிசமான செல்வாக்கை பெற்றுத் தந்ததும், தொலைத் தொடர்புத் துறையை கேட்டுப் பெற்றால் தங்களின் தொழில்களுக்கு பெரும் அளவில் உதவியாக இருக்கும் என்று மாறன்கள் உணர்ந்தே, அந்தத் துறையை பெற வேண்டும் என்று கருணாநிதிக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. மாறன் சகோதரர்களின் உள்நோக்கத்தை அறியாத கருணாநிதியும், அவர்கள் விருப்பத்தின் படியே, தொலைத் தொடர்புத் துறையை மத்திய அரசோடு மல்லுக் கட்டி பெற்றுத் தந்தார்.

தொலைத் தொடர்புத் துறை தங்களது கையில் வந்த நாள் முதலாகவே, மாறன்கள், அந்தத் துறையை தங்களின் தனிப்பட்ட தொழில் வளர்ச்சிக்காக பயன்படுத்தி வந்துள்ளார்கள். எப்.எம் லைசென்ஸ், நேரடியாக வீட்டுக்கு வரும் டிடிஎச் சேவை, ஆகியவற்றில் தயாநிதி மாறன் அதிகார துஷ்பிரயோகம் செய்து, பல கோடிகளை சம்பாதித்தது கருணாநிதிக்குத் தெரியும் என்றாலும், இப்போது வெளியில் வந்திருக்கும் அளவுக்கு சம்பாதித்திருப்பார் என்று அவரே நினைக்கவில்லை.

மத்திய அமைச்சராக தயாநிதி ஆன பிறகு, அவர்களின் சொத்து நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது. மாறன்களின் வாழ்க்கை முறையும் மாறத் தொடங்கியது. 2006ல் அதிகாரத்துக்கு வந்த பின்னால், அழகிரி மற்றும் ஸ்டாலினிடம் ஏராளமான அதிகாரம் இருந்தாலும், மாறன்களின் லைப் ஸ்டைலைப் பார்த்து அவர்களுக்கு எரிச்சலே வந்தது. மிக மிக பகட்டான வாழ்க்கை முறை, ஏழு பென்ஸ் கார்கள் என்று ஆடம்பரமும், பகட்டும் நிறைந்த வாழ்க்கையை வாழத் தொடங்கினர்.

2006க்கு முன்பாக, கருணாநிதி குடும்பத்தினர் சன் டிவியில் வைத்திருந்த பங்குகளை திரும்பப் பெற்றுக் கொண்டு, ஒரு தொகையை அளித்தனர். அது வரை சன் டிவி பங்குச் சந்தையில் வெளியிடப்படவில்லை என்பதால், உத்தேசமாக ஒரு விலையை நிர்ணயித்து, தயாளுவுக்கும், கருணாநிதிக்கும் ஒரு பத்து கோடியை அளித்ததாக நினைவு.

ஆனால், பங்குச் சந்தையில் ஆகஸ்ட் 2006ல் மாறன் சகோதரர்கள் சன் டிவியின் பங்குகளை வெளியிடுகிறார்கள். வெறும் பத்து சதவிகித பங்குகளை வெளியிடுகிறார்கள். இந்த 10 சதவிகித பங்குகள் மொத்தம் 68 லட்சத்து 89 ஆயிரம் பங்குகள். இந்தப் பங்குக்கு மாறன் சகோதரர்கள் நிர்ணயித்த விலை 875 ரூபாய். இவ்வாறு சந்தைக்கு வந்த சன் டிவியின் பங்கு, சந்தையில் வெளியிடப் பட்ட அன்று, 1466 ரூபாய்க்கு முடிந்தது.

இவ்வாறு மாறன் சகோதரர்கள் இந்தப் பங்கு வெளியீட்டில் சம்பாதித்த பெரும் தொகை, கருணாநிதி குடும்பத்தினரை கடும் கோபம் கொள்ளச் செய்தது. அப்போது முதலே, மாறன்கள் மீதான கோபம் நீறு பூத்த நெருப்பாக இருந்தது.

நீறு பூத்த நெருப்பாக இருந்த கோபம், தினகரன் நாளேட்டில் சர்வே வெளியானதும் வெளிப்படையாக வெடித்தது. அந்நாளேட்டில் பணியாற்றிய 3 ஊழியர்கள் எரித்துக் கொல்லப் பட்டாலும், அது, மாறன் சகோதரர்களின் கொட்டத்தை அடக்க ஒரு வாய்ப்பாக கருணாநிதி குடும்பத்தாரால் பார்க்கப் பட்டது.

அப்போது ஏற்பட்ட பிரிவால் உருவானதுதான், கலைஞர் டிவி உதயம். பிரிந்து போன மாறன் சகோதரர்கள், மீண்டும் கருணாநிதியோடு இணைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதை விடுத்து, மோதிப் பார்த்து விடலாம் என்ற வழியையே தேர்ந்தெடுத்தனர். சன் டிவி மூலமாக தொடர்ந்து திமுக அரசுக்கு எதிரான செய்திகளை போட்டுத் தாக்கினர். ஸ்பெக்ட்ரம் விவகாரம் அரசல் புரசலாக கசியத் தொடங்கியதும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கண்ணாடி போல தெளிவான முடிவுகள் எடுத்ததாகவும், தயாநிதி மாறனை தொலைத் தொடர்புத் துறையிலிருந்து நீக்கியதாலேயே ஊழல் நடைபெற்றது என்றும், தவறாக எடுக்கப் பட்ட அனைத்து முடிவுகளுக்கும் ராசாவே காரணம் என்றும் வளைத்து வளைத்து செய்தி போட்டனர்.

சன் டிவியின் வளர்ச்சி என்பது, திமுக தொண்டனின் ரத்தத்தில் கிடைத்தது. திமுக தொண்டனின் போராட்டத்தாலும் திமுக வின் ஆட்சி அதிகார பலத்தாலும், அந்தக் கட்சியின் சொத்தான அறிவாலயத்திலும் வளர்ந்தது. அப்படிப் பட்ட வளர்ச்சியை மொத்தமாக மறந்து விட்டு, ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு, சன் குழுமத்தின் தினகரன் நாளேட்டில் முழுப்பக்க விளம்பரம் வெளியிட்டார்கள் மாறன் சகோதரர்கள். இதுதான் இவர்களின் மனசாட்சி.

திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் கிடைத்த அதிகாரத்தை கட்சியின் வளர்ச்சிக்கும், ஓரளவுக்கு தங்கள் சுயலாபத்திற்கும் பயன்படுத்தினார்கள் என்றால், மாறன் சகோதரர்கள் முழுக்க முழுக்க தங்களது, சுயலாபத்திற்காக மட்டுமே பயன்படுத்தினார்கள்.

பேரப்பிள்ளைகள் ஏதோ தொழில் செய்து பிழைக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த கருணாநிதிக்கு, 2006ல் சன் டிவி பங்கு வெளியிட்ட போதுதான், நூற்றுக்கணக்கான தொழில்களை நடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. இத்தனை தொழில்களை மாறன்கள் நடத்தி வருவது தெரிந்ததும் தான், தனது சொந்தப் பிள்ளைகளுக்கு எதுவுமே சேர்த்து வைக்கவில்லையே என்பதை கருணாநிதி உணர்ந்தார். இந்த விரக்தியின் வெளிப்பாடே, மகன்களையும், மகள்களையும் கண் மண் தெரியாமால் சம்பாதிக்க விட்டார் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.

ஏற்கனவே, மாறன்கள் மீது பொறாமையில் இருந்த அழகிரி, தயாநிதி மற்றும், மந்திரியானதும் தங்களை கண்டுகொள்ளமால் ஒதுக்கி உதாசீனப்படுத்தினார்கள் என்று எரிச்சலில் இருந்த ராசாத்தி அம்மாள் மற்றும், கனிமொழி ஆகியோர், அவர்களுக்கு நிகராக சொத்து சேர்க்க வேண்டும் என்று கச்சை கட்டிக் கொண்டு இறங்குகிறார்கள். பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபர்களாக இருக்கும் மாறன்களுக்கு நிகராக சொத்து சேர்க்க வேண்டுமென்றால், உழைத்தா சம்பாதிக்க முடியும் ?

அப்போது கிடைத்த வரப்பிரசாதம் தான், தொலைத் தொடர்புத் துறை என்ற அட்சயப் பாத்திரம். இந்த அட்சயப் பாத்திரத்திலிருந்து ஆ.ராசா, தயாளு, அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, ராசாத்தி அம்மாள், துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, ஜெகதரட்சகன், காமராஜ், ஜாபர்சேட், போலிப் பாதிரி என்று அள்ளித் தின்னாதவர்களே கிடையாது என்னும் அளவுக்கு, அந்த அட்சயப் பாத்திரம் அள்ளிக் கொடுத்தது.

மாறன்கள், தொடர்ந்து திமுகவுக்கு எதிராக செயல்படுவதை கவனமாக கூர்ந்து கவனித்துக் கொண்ட வந்தார் கருணாநிதி. ஆரம்பத்தில், ஏமாற்றி விட்டார்கள் என்று மாறன்கள் மேல் இருந்த கடும் கோபம், நாளுக்கு நாள், அவர்களின் பலத்தைப் பார்த்ததும் அச்சமாக மாறத் தொடங்கியது. மற்றவர்களுக்கு ஸ்பெக்ட்ரத்தில் என்ன நடந்தது என்று அப்போது தெரியாமல் இருந்தாலும், கருணாநிதிக்கு தெரியுமல்லவா ?

இது தவிரவும், இரண்டு குடும்பங்களுக்கும் இடையே இணைப்புப் பாலமாக இருந்தவர் செல்வி. இந்த செல்வி, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் செல்வித் தொடரில் வருபவர்களை விட, அபாரமாக நடிக்கும் திறமை படைத்தவர். இரண்டு குடும்பங்களும் மோதலில் இருந்த காலத்தில், இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றது போல, நடித்தவர் இந்த செல்வி.

சொந்த மகள் இறந்தாலும், தனது பிடிவாதத்தை விட்டுக் கொடுக்காதவர் தான் கருணாநிதி. ஆனாலும், இந்தப் பிரச்சினையை இத்தோடு விட்டால், கட்சிக்கு ஆபத்து, தனக்கும் ஆபத்த என்பதை உணர்ந்ததாலேயே, மாறனை மந்திரிப் பதவியை விட்டு நீக்க உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தை கூட்டியவர், இணைப்புக்கு கோபாலபுரம் குடும்பத்தோடே முடித்துக் கொண்டு, “இதயம் இனித்தது, கண்கள் பனித்தன” என்றார். ஸ்பெக்ட்ரம் விவகாரம் என்று நிருபர் கேட்ட கேள்விக்கு, “அது முடிந்து போன விவகாரம்” என்று பதிலளித்தார்.

அதற்குப் பிறகு, மாறன்களோடு இணைந்தது போல வெளிப்படையாக காட்டிக் கொண்டாலும், உடைந்த பானை ஒட்டாது என்பது போலவேதான், கட்டாயம் மற்றும் வசதியின் அடிப்படையிலான உறவாக (Relationship of convenience) அந்த உறவு தொடர்ந்தது.

ராசா மீது வட இந்திய ஊடகங்களில் குற்றச் சாட்டுகள் மெள்ள எழுந்த போதெல்லாம் கோபம் கொள்ளாத கருணாநிதி, மாறன்களுக்கு மிக மிக நெருக்கமான விகடன் குழுமமே, ராசாவைப் பற்றியும், தன்னைப் பற்றியும் கடுமையாக எழுதியதிலும், மாறன்களைப் பற்றி அமைதி காத்ததிலும் கடும் கோபம் அடைந்தார். இதன் பின்னணியில் இருப்பது மாறன்களே என்று கருணாநிதி சமீப காலத்தில் நன்கு உணர்ந்துள்ளதாக தெரிகிறது.

திமுக மிக மிக பலவீனமாக இருக்கும் இந்தச் சூழலில், மாறன்களை கட்சியை விட்டு நீக்குவது என்ற கடினமான முடிவு, கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் என்று கருணாநிதி உணர்ந்தாலும், மந்திரி பதவியை ராஜினாமா செய்யச் சொல்லலாமா என்று ஆலோசித்துள்ளார். ஆனால், திடீர் திருப்பமாக, அழகிரி, மாறன்களுக்கு ஆதரவாக, ஆதரவை வாபஸ் வாங்கக் கூடாது என்று கூறியிருக்கிறார். தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஏற்பட்டுள்ள நெருக்கடியால் எந்நேரம் வேண்டுமானாலும் சிறை செல்லலாம் என்ற அச்சத்தில், மந்திரி பதவியும் இல்லாவிட்டால், குறைந்த பட்ச பாதுகாப்பு கூட இல்லாமல் போய் விடும் என்று அழகிரி நினைப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தக் காரணத்தாலேயே அழகிரி, இப்போதைக்கு ஆதரவு வாபஸ் வேண்டாம் என்ற முடிவெடுத்திருக்கிறார் என்று தெரிகிறது.

ஒரு சர்வே வெளியிட்டதால், மாறன் சகோதரர்கள் மேல் கடும் கோபம் கொண்டு, மூன்று பேரை எரித்துக் கொன்று, அந்தக் கோபத்தை தணித்துக் கொண்ட அழகிரியும், மாறன்களும், இன்று ஒரே அணியில் இருப்பது காலத்தின் கோலமே…

ஆனால் இது போல எந்த நெருக்கடிகளும் இல்லாத ஸ்டாலின் மாறன்கள் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும், கடந்த வாரம் வீட்டுக்கு வந்த தயாநிதி மாறனிடம், தேவையின்றி வீட்டுக்கு வர வேண்டாம் என கடுமையாக சொல்லியிருப்பதாகவும் சொல்லப் படுகிறது. கருணாநிதியை தயாநிதி சந்தித்த போது கூட, “தாத்தா என்னை திஹாருக்கு அனுப்ப நிறைய பேர் வேலை செய்யிறாங்க தாத்தா” என்று சொன்னதற்கு “போயிட்டு வாப்பா” என்று சொன்னதோடு கருணாநிதி நிறுத்திக் கொண்டார் என்றும் கூறுகிறார்கள்.

மற்ற ஊடகங்கள் நெருக்கடி கொடுத்ததையெல்லாம் தங்கள் பண பலத்தால் சமாளித்த மாறன்கள், திமுக தலைவர் கருணாநிதியும் அவர் குடும்பத்தின் ஆதரவும் விட்டுப் போனதில், மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், பிரதமர் சிபிஐக்கு தயாநிதி மாறனை விசாரிப்பதற்கான அனுமதி கொடுத்து உள்ளதை அடுத்து, எந்நேரமும் தயாநிதி பதவி விலக வேண்டும் என்றும் தெரிவிக்கிறது.

ஈழப் போரின் போது, கருணாநிதி கூட ஒரு சமயத்தில் ஏன் ஆதரவை வாபஸ் வாங்கக் கூடாது என்று யோசித்த போது கூட, மாறன்களே கருணாநிதியை அம்முடிவிலிருந்து தடுத்ததாகவும், இதற்கு அவர்களின் வணிக நோக்கங்களே காரணமாக இருந்துள்ளன என்றும் திமுக வில் உள்ள சில மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள்.

மனசாட்சி என்பது துளி கூட இல்லாத இந்த மாறன்களின் சாம்ராஜ்யம் சரியத் தொடங்கியிருக்கிறது. விரைவில் தயாநிதிமாறன் திஹார்சிறையில் அடைக்கப் படும்போது, நமக்கு அல்ல… கருணாநிதிக்கு “இதயம் இனிக்கும். கண்கள் பனிக்கும்”

தயார்நிலை பயிற்சிகள், வக்ராசனம்.

தயார்நிலை பயிற்சிகள்.
தயார்நிலை பயிற்சிகள்Justify Full

பயிற்சி-1

இருகால்களையும் பக்கவாட்டில் சுமார் 3 அடி தூரம் அகலத்தில் அகட்டி வையுங்கள். தலையை முன்புறம் தொங்கவிட்டு, இடுப்பளவுக்கு முன்னே குனியவும். அப்போது உங்களின் கைகள், பின்னால் கோர்த்து இருக்கட்டும். இரண்டு கைகளையும் முடிந்தவரையில், மேலே தூக்குங்கள். அடுத்தபடியாக இதேமாதிரி உடம்பை பின்னால் வளைத்து, கோர்த்த கைகளை முன்பாக தூக்கவும்.

பயிற்சி-2

இருகால்களையும் பக்க வாட்டில் 3 அடிதூரம் அகலத்தில் அகட்டிவையுங்கள். கைவிரல்கள் பின்னால் கோர்த்து இருக்கட்டும். அப்படியே உடம்பை மட்டும் பின்னால் திருப்பி பார்க்கவும். இதுபோல இடப்பக்கமும் திருப்பி செய்ய வேண்டும்.

பயிற்சி-3

இருகால்களையும் பக்கவாட்டில் ஓரடி அகட்டிவையுங்கள். இருகைகளும் பின்னால் கோர்த்து இருக்கட்டும். முதுகுத்தண்டை மட்டும் வளைத்து குனியவும். தேவைப்பட்டால், முழங்கால்களை சற்று மடித்துக் கொள்ளலாம். அடுத்தபடியாக, நேராக நின்ற நிலையில் முதுகையும், தலையையும் பின்பக்கமாக வளையுங்கள்.

பயிற்சி-4

இருகால்களையும் 3 அடிதூரம் பக்கவாட்டில் அகட்டி வையுங்கள். கைகள் இரண்டையும் தலைக்கு மேல் கோர்க்கவும். முழங்காலை வளைக்காமல் இடுப்பை மட்டும், வலப்பக்கமாக சாய்த்துத் தரையை தொடவும். அடுத்தபடியாக நிமிர்ந்து இடப்பக்கமாய் சாய்ந்து தரையை தொடுங்கள். இப்படியாக பக்கங்களை மாற்றி ஒரு வட்டம் சுற்றவும்.

பயிற்சி-5

நேரே நிமிர்ந்து நிற்கவும். மூச்சை மெதுவாக உள்ளிழுத்தபடி, இரு கைகளையும் தலைக்கு மேல் கொண்டுபோய் கும்பிடுவதுமாதிரி குவியுங்கள். பிறகு, மூச்சை மெதுவாக வெளியேற்றியபடி, கைகளைப் பிரித்து, பக்கவாட்டில் தளரவிடவும்.
முடிந்தாயிற்று.

அடுத்தபடியாக யோகாசனம்.

இதில், `நின்றநிலை, உட்கார்ந்த நிலை, குப்புறடுத்த நிலை, மல்லாந்துபடுத்த
நிலை' -இப்படியாக பிரிவுகள் உண்டு. கடைசியாக சாந்தியாசனம்!


வக்ராசனம்.
வக்ராசனம்

செய்முறை:

இரண்டு காலையும் முன்னோக்கி நீட்டி உட்காருங்கள் வலது முழங்காலை செங்குத்தாக மடக்கி, பாதம்- பிருஷ்ட பாகத்தோடு ஒட்டிவைக்கவும். வலது கையை முழங்காலுக்கு வெளிப் பக்கமாக கொண்டுபோய், இடது மணிக்கட்டில் ஒன்றிணையுங்கள்.

இதே நிலையில் உடம்பை இடப்பக்கமாக திருப்பவும். முதுகுத்தண்டு வளையலாகாது. இப்படியாக 15 விநாடிகள் இயல்பான சுவாசத்தில் இருங்கள். அடுத்தபடியாக, ஆசனத்தை கலைத்து விட்டு, வலப்பக்கம் மாற்றி செய்யவும்.

பயன்கள்:

இடுப்பு மெலியும். உடலுக்கு அதிக சக்தி கிட்டும். மலச்சிக்கல், விரை வீக்கம், குடலிறக்கம், வாயுத் தொல்லை அகலும். பெருத்த தொந்தி காணாமல் போகும்.

சங்க காலச் சிறப்பு.



சங்க காலம்

தென்னிந்திய வரலாற்றில் சங்க காலம் ஒரு சிறப்பான அத்தியாயம் ஆகும். தமிழ்ப் பழங்கதைகளின் படி பண்டைய தமிழ்நாட்டில் முச்சங்கம் என்றழைக்கப்பட்ட மூன்று தமிழ் சங்கங்கள் இருந்தன. பாண்டிய மன்னர்களின் ஆதரவில் இந்த சங்கங்கள் தழைத்தோங்கின. தென்மதுரையில் இருந்த முதற்சங்கத்தில் கடவுளரும், முனிவர்களும் பங்கேற்றனர் என்று கூறப்பட்டிருந்தாலும், இச்சங்தத்தைச் சேர்ந்த நூல்கள் ஏதும் கிடைக்கவில்லை. இரண்டாவது சங்கம் கபாடபுரத்தில் நடைபெற்றது. தொல்காப்பியம் தவிர ஏனைய இலக்கியங்கள் யாவும் அழிந்து போயின. மூன்றாவது சங்கத்தை மதுரையில் முடத்திருமாறன் என்ற பாண்டிய மன்னன் நிறுவினான். அதிக எண்ணிக்கையிலான புலவர்கள் இதில் பங்கேற்றனர். ஏராளமான இலக்கியங்கள் படைக்கப்பட்டன என்றாலும் ஒருசிலவே எஞ்சியுள்ளன. இந்த இலக்கியங்கள் சங்க கால வரலாற்றை அறிந்து கொள்ள பெரிதும் உதவுகின்றன.

சங்க இலக்கியங்கள்

சங்க இலக்கியத்தொகுப்பில் தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ் கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன இடம் பெற்றுள்ளன. காலத்தால் தொன்மை பெற்றதான தொல்காப்பியத்தை இயற்றியவர் தொல்காப்பியர். இது ஒரு இலக்கண நூல் என்றாலும், சங்க கால அரசியல், சமூக பொருளாதார நிலைமைகளைப் பற்றிய தகவல்களைத் தருகிறது. எட்டுத் தொகை என்பது ஐந்குறுநூறு, நற்றிணை, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, கலித்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து என்ற எட்டு நூல்களின் தொகுப்பாகும். பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்ற பத்து நூல்கள் உள்ளன. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் அகம், புறம் என்ற இரண்டு திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பதினெண்கீழ்கணக்கில் அறத்தையும் ஒழுக்கத்தையும் வலியுறுத்தும் பதினெட்டு நூல்கள் உள்ளன. அவற்றில் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் குறிப்பிடத்தக்கதாகும். இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரமும், சீத்தலைச்சாத்தனார் இயற்றிய மணிமேகலையும் சங்க கால சமூகம் மற்றும் அரசியல் குறித்த தகவல்களைத் தருகின்றன.

பிற சான்றுகள்

சங்க இலக்கியங்களைத் தவிர, கிரேக்க எழுத்தாளர்களான பிளினி, டாலமி, மெகஸ்தனிஸ், ஸ்ட்ராபோ ஆகியோர் தென்னிந்தியாவிற்கும் மேலை நாடுகளுக்கும் இடையே நிலவிய வர்த்தகத் தொடர்புகளை குறிப்பிட்டுள்ளனர். மெளரியப் பேரரசுக்கு தெற்கேயிருந்த சேர, சோழ, பாண்டிய ஆட்சியாளர்கள் பற்றி அசோகரது கல்வெட்டுக்கள் கூறுகின்றன. கலிங்கத்துக் காரவேலனின் ஹதிகும்பா கல்வெட்டும் தமிழ்நாட்டு அரசுகளைப் பற்றி குறிப்பிடுகிறது. அரிக்கமேடு, பூம்புகார், கொடுமணல் போன்ற இடங்களில் மேற்கொள்ளபட்ட அகழ்வாய்வுகளும் தமிழர்களின் வாணிப நடவடிக்கைகளை வெளிப்படுத்துகின்றன.

சங்க இலக்கியத்தின் காலம்

சங்க இலக்கியத்தின் காலவரையறை பற்றி அறிஞர்களுக்கிடையே இன்னும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இலங்கை அரசன் இரண்டாம் கயவாகு, சேர அரசன் செங்குட்டுவன் இருவரும் சமகாலத்தவர் என்ற செய்தி சங்க காலத்தை நிர்ணயிப்பதற்கு அடிப்படையாகத் திகழ்கிறது. இச்செய்தியை சிலப்பதிகாரம், தீபவம்சம், மகாவம்சம் ஆகிய நூல்கள் உறுதிப்படுத்துகின்றன. மேலும், கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானியப் பேரரசர்கள் வெளியிட்ட ரோமானிய நாணயங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே, இலக்கியம், தொல்லியல், நாணயவியல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, சங்க இலக்கியங்களின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை என்ற முடிவுக்கு வரலாம்.

அரசியல் வரலாறு

சங்க கால தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய மரபுகள் ஆட்சி புரிந்தனர். இலக்கிய குறிப்புகளிலிருந்து இந்த மரபுகளின் வரலாற்றை ஓரளவு அறிந்து கொள்ளலாம்.

சேரர்கள்

தற்காலத்திய கேரளப் பகுதியில் சேரர்கள் ஆட்சிபுரிந்தனர். அவர்களது தலைநகரம் வஞ்சி. முக்கிய துறை முகங்கள் தொண்டி மற்றும் முசிறி. பனம்பூ மாலையை அவர்கள் அணிந்தனர். கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகலூர்க் கல்வெட்டு சேர ஆட்சியாளர்களின் மூன்று தலைமுறைகள் பற்றி குறிப்பிடுகிறது. சேர அரசர்களைப் பற்றி பதிற்றுப் பத்தும் கூறுகிறது. பெரும்சோற்று உதியன் சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகியோர் சேர மரபின் சிறந்த அரசர்களாவர்.

சேரன் செங்குட்டுவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். அவனது இளவலான இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார். செய்குட்டுவனின் படையெடுப்புகளில் அவன் மேற்கொண்ட இமாலயப் படையெடுப்பு குறிப்பிடத்தக்கதாகும். பல்வேறு வட இந்திய ஆட்சியாளர்களை அவன் முறியடித்தான். தமிழ்நாட்டில் கற்புக்கரசி கண்ணகி அல்லது பத்தினி வழிபாட்டை செங்குட்டுவன் அறிமுகப்படுத்தினான். இமாலயப் படையெடுப்பின்போது பத்தினிசிலை வடிப்பதற்கான கல்லைக்கொண்டு வந்தான். கோயில் குடமுழுக்கு விழாவில் இலங்கை அரசன் இரண்டாம் கயவாகு உள்ளிட்ட பல அரசர்கள் கலந்து கொண்டனர்.

சோழர்கள்

தற்காலத்திய திருச்சி மாவட்டத்திலிருந்து தெற்கு ஆந்திரப் பிரதேசம் வரையிலான பகுதியே சங்க காலத்தில் சோழ நாடு எனப்பட்டது. சோழர்களின் தலைநகரம் முதலில் உறையூரிலும் பின்னர் புகாரிலும் இருந்தது. சங்க காலச் சோழர்களில் சிறப்பு வாய்ந்தவன் கரிகால் சோழன். அவனது இளமைக்காலம், போர் வெற்றிகள் குறித்து பட்டினப்பாலை விவரிக்கிறது. சேரர்கள், பாண்டியர்கள், பதினொரு குறுநில மன்னர்கள் அடங்கிய பெரிய கூட்டிணைவுப் படைகளை கரிகாலன் வெண்ணிப் போரில் முறியடித்தான். இந்த நிகழ்ச்சி சங்கப் பாடல்கள் பலவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவன் மேற்கொண்ட மற்றொரு போர் வாகைப் பறந்தலைப் போராகும். அதில் ஒன்பது குறுநில மன்னர்களை மண்டியிடச் செய்தான். கரிகாலனின் போர் வெற்றிகள் தமிழ்நாடு முழுவதையும் சோழர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தன. அவனது ஆட்சிக் காலத்தில் வாணிகமும் செழித்தோங்கியது. காடுகளைத் திருத்தி விளை நிலமாக்கியவன் கரிகாலன். இதனால் நாட்டின் செல்வச் செழிப்பு பெருகியது. காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையை கரிகாலன் அமைத்தான். வேறு பல நீர்ப்பாசன ஏரிகளையும் அவன் வெட்டுவித்தான்.

பாண்டியர்கள்

தற்காலத்திய தெற்குத் தமிழ்நாட்டில் சங்ககாலப் பாண்டியர்கள் ஆட்சி புரிந்தனர். அவர்களின் தலைநகரம் மதுரை. நெடியோன், பலயாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, முடத்திருமாறன் போன்றோர் முற்காலத்திய பாண்டிய மன்னவர்களாவர். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், கோவன் கொல்லப்படவும், கண்ணகி சினமுற்று மதுரையை எரிக்கவும் காரணமாக இருந்தவர். மற்றொருவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். நக்கீரன் மற்றும் மாங்குடி மருதனார் ஆகிய புலவர்களால் போற்றப்பட்டவர். தற்கால தஞ்சை மாவட்டத்திலிருந்த தலையாலங்கானம் என்ற விடத்தில் நடைபெற்ற போரில் எதிரிகளை வீழ்தியதால் அவருக்கு இப்பெயர் வழங்கலாயிற்று. இவ்வெற்றியின் பயனாக, நெடுஞ்செழியன் தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். செழிப்பான துறைமுகமான கொற்கை பற்றியும், பாண்டிய நாட்டின் சமூக – பொருளாதார நிலைமைகளை குறித்தும் மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் விவரித்துள்ளார். உக்கிரப் பெருவழுதி மற்றொரு சிறப்பு மிக்க பாண்டிய அரசன். களப்பிரர்கள் படையெடுப்பின் விளைவாக சங்க காலப்பாண்டியர்கள் ஆட்சி வீழ்ச்சியடைந்தது.

குறுநில மன்னர்கள்

சங்க காலத்தில் குறுநில மன்னர்கள் முக்கிய பங்காற்றினர். பாரி, காரி, ஓரி, நல்லி, பேகன், ஆய், அதியமான் என்ற கடையெழு வள்ளல்கள் கொடைக்குப் பெயர் பெற்றவர்கள். தமிழ்ப் புலவர்களை ஆதரித்துப் போற்றினர். சேர, சோழ, பாண்டி ஆட்சியாளர்களுக்கு அவர்கள் கீழ்ப்படிந்தவர்கள் என்ற போதிலும் தத்தம் ஆட்சிப் பகுதிகளில் வலிமையும் புகழும் பெற்றுத் திகழ்ந்தனர்.

சங்க கால அரசியல்

சங்க காலத்தில் மரபுவழி முடியாட்சி முறையே வழக்கிலிருந்தது. அமைச்சர், அவைப்புலவர், அரசவையோர் போன்றவர்களின் ஆலோசனையை அரசன் கேட்டு நடந்தான். வானவரம்பன், வானவன், குட்டுவன், இரும்பொறை, வில்லவர் போன்ற விருதுப் பெயர்களை சேர மன்னர்கள் சூட்டிக் கொண்டனர். சென்னி, வளவன், கிள்ளி என்பன சோழர்களின் பட்டப் பெயர்களாகும். தென்னவர், மீனவர் என்பவை பாண்டிய மன்னர்களின் விருதுப் பெயர்களாகும். ஒவ்வொரு சங்ககால அரச குலமும் தங்களுக்கேயுரிய அரச சின்னங்களைப் பெற்றிருந்தனர். பாண்டியர்களின் சின்னம் மீன். சோழர்களுக்கு புலி, சேரர்களுக்கு வில், அம்பு. அரசவையில் குறுநிலத் தலைவர்களும் அதிகாரிகளும் வீற்றிருந்தனர். ஆட்சியில் அரசருக்கு உதவியாக பெரும்திரளான அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தனர் – அமைச்சர்கள், அந்தணர்கள், படைத்தலைவர்கள், தூதுவர்கள், ஒற்றர்கள். சங்க காலத்தில் படை நிர்வாகம் திறம்பட சீரமைக்கப்பட்டிருந்தது. ஒவ்டிவாரு ஆட்சியாளரும் நிரந்தரப் படையையும், தத்தமக்குரிய கொடிமரத்தையும் கொண்டிருந்தனர்.

அரசின் முக்கிய வருவாய் நிலவரி. அயல்நாட்டு வாணிகத்தின் மீது சுங்கமும் வசூலிக்கப்பட்டடது. புகார் துறைமுகத்தில் நியமிக்கப்பட்டிருந்த சுங்க அதிகாரிகள் பற்றி பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. போரின்போது கைப்பற்றப்படும் கொள்ளைப் பொருட்கள் அரசுக் கருவூலத்திற்கு முக்கிய வருவாயகத் திகழ்ந்தது. சாலைகளும் பெருவழிகளும் நன்கு பராமரிக்கப்பட்டுவந்தன. கொள்கை மற்றும் கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்காக இரவும் பகலும் அவை கண்காணிக்கப்பட்டன.

சங்க கால சமூகம்

ஐந்து வகை நிலப்பிரிவுகள் பற்றி தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

- குறிஞ்சி, மலையும் மலைசார்ந்த பகுதி
- முல்லை, மேய்ச்சல் காடுகள்
- மருதம், வேளாண் நிலங்கள்
- நெய்தல், கடற்கரைப் பகுதி
- பாலை, வறண்ட பூமி

இந்த நிலங்களில் வாழ்ந்த மக்கள் தத்தம் கடவுளர்களையும் தொழில்களையும் பெற்றிருந்தனர்.

1. குறிஞ்சி – முதன்மைக் கடவுள் முருகன் (தொழில்: வேட்டையாடுதல், தேன் எடுத்தல்)

2. முல்லை – முதன்மைக் கடவுள் மாயோன் (விஷ்ணு) (தொழில்: ஆடு, மாடு வளர்ப்பு, பால் பொருட்கள் உற்பத்தி)

3. மருதம் – முதன்மைக்கடவுள் – இந்திரன் ( தொழில்: வேளாண்மை)

4. நெய்தல் – முதன்மைக்கடவுள் – வருணன் (தொழில்: மீன் பிடித்தல், உப்பு உற்பத்தி)

5. பாலை – முதன்மைக் கடவுள் – கொற்றவை (தொழில்: கொள்ளையடித்தல்)
நான்கு வகை சாதிகள் – அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் – குறித்து தொல்காப்பியம் கூறுகிறது. ஆளும் வர்க்கத்தினர் அரசர் என்றழைக்பட்டனர். சங்க கால அரசியல் மற்றும் சமய வாழ்க்கையில் அந்தணர் முக்கிய பங்கு வகித்தனர். வணிகர்கள் வணிகத் தொழிலில் ஈடுபட்டனர். வேளாளர்கள் பயிர்த் தொழில் செய்தனர். பழங்குடி இனத்தவர்களான பரதவர், பாணர், எயினர், கடம்பர், மறவர், புலையர் போன்றோரும் சங்க கால சமுதாயத்தில் அங்கம் வகித்தனர். பண்டையக்கால தொல்பழங்குடிகளான தோடர்கள், இருளர்கள், நாகர்கள், வேடர்கள் போன்றோரும் இக்காலத்தில் வாழ்ந்தனர்.

சமயம்

சங்க காலத்தின் முதன்மைக் கடவுள் முருகன் அல்லது சேயோன் தமிழ்க்கடவுள் என அவர் போற்றப்பட்டார். முருக வழிபாடு தொன்மை வாய்ந்தது. முருகன் தொடர்பான விழாக்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அறுபடை வீடுகள் அவனுக்கே உரித்தானவை. மாயோன் (விஷ்ணு), வேந்தன் (இந்திரன்), வருணன், கொற்றவை போன்ற கடவுள்களையும் சங்க காலத்தில் வழிபட்டனர். வீரக்கல் அல்லது நடுகல் வழிபாடு சங்க காலத்தில் முக்கியத்துவம் பெற்று விளங்கியது. போர்க்களத்தில் வீரனது ஆற்றலையும் தியாகத்தையும் போற்றும் வகையில் அனவது நினைவாக வீரக்கல் நடப்பட்டடது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மறைந்த வீரர்கள் பற்றிய குறிப்புகள் அடங்கிய வீரக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய நீத்தோர் வழிபாடு மிகவும் தொன்மையானதாகும்.

மகளிர் நிலை

சங்க காலத்தில் மகளிர் நிலை குறித்து அறிந்து கொள்ள சங்க இலக்கியங்களில் ஏராளமான தகவல்கள் உள்ளன. அவ்வையார், நச்செள்ளையார், காக்கைபாடினியார் போன்ற பெண் புலவர்கள் இக்காலத்தில் வாழ்ந்து தமிழ் இலக்கியத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். மகளிரின் வீரம் குறித்து பல்வேறு பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கற்பு பெண்களின் தலையாய விழுமியமாகப் போற்றப்பட்டது. காதல் திருமணம் சாதாரணமாக வழக்கத்திலிருந்தது. பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை தெரிவு செய்யும் உரிமையைப் பெற்றிருந்தனர். இருப்பினும், கைம்பெண்களின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. சமுதாயத்தின் மேல்மட்டத்தில் ‘சதி’ என்ற உடன்கட்டையேறும் வழக்கம் பின்பற்றப்பட்டது. அரசர்களும், உயர்குடியினரும் நாட்டிய மகளிரை ஆதரித்துப் போற்றினர்.

நுண்கலைகள்

கவிதை, இசை, நாட்டியம் போன்ற நுண்கலைகள் சங்ககாலத்தில் புகழ்பெற்று விளங்கின. அரசர்கள், குறுநில மன்னர்கள், உயர்குடியினர் போன்றோர் புலவர்களுக்கு தாராளமாக பரிசுப் பொருட்களை வழங்கி ஆதரித்தனர். பாணர், விறலியர் போன்ற நாடோடிப் பாடகர்கள் அரசவைகளை மொய்த்த வண்ணம் இருந்தனர். நாட்டுப்புற பாடல்களிலும் நாட்டுப்புற நடனங்களிலும் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் சங்க காலத்தில் வாழ்ந்தனர். இசையும் நடனமும் நன்கு வளர்ச்சி பெற்றிருந்தது. சங்க இலங்கியங்களில் பல்வேறு வகையிலான யாழ்களும் முரசுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. கணிகையர் நடனத்தில் சிறந்து விளங்கினர். ‘கூத்து’ மக்களின் சிறந்த பொழுதுபோக்காக திகழ்ந்தது.

சங்க காலப் பொருளாதாரம்

வேளாண்மை முக்கியத் தொழில் ஆகும். நெல் முக்கியப் பயிர் கேழ்வரகு, கரும்பு, பருத்தி, மிளகு, இஞ்சி, மஞ்சள், இலவங்கம், பல்வேறு பழவகைகள் போன்றவையும் பயிரிடப்பட்டன. பலா, மிளகு இரண்டுக்கும் சேர நாடு புகழ் பெற்றதாகும். சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் நெல் முக்கிய பயிராகும்.

சங்க காலத்தில் கைத்தொழில்கள் ஏற்றம் பெற்றிருந்தன. நெசவு, உலோகத் தொழில், தச்சுவேலை, கப்பல் கட்டுதல், மணிகள், விலையுயர்ந்த கற்கள், தந்தம் ஆகியவற்றை பயன்படுத்தி ஆபரணங்கள் செய்தல் போன்றவை ஒருசில கைத்தொழில்களாகும். இத்தகைய பொருட்களுக்கு நல்ல தேவைகள் இருந்தன. ஏனென்றால் சங்ககாலத்தில் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வாணிகம் சுறுசுறுப்பாக நடைபெற்றது. பருத்தி மற்றும் பட்டு இழைகளைக் கொண்டு நெய்யப்பட்ட துணிகள் உயர்ந்த தரமுடையதாக இருந்தன. நீராவியைவிடவும், பாம்பின் தோலைவிடவும் மெலிதான துணிகள் நெய்யப்பட்டடதாக சங்க இலக்கியப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. உறையூரில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தியாடைகளுக்கு மேலை நாடுகளில் பெரும் தேவை காணப்பட்டடது.

உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வர்த்தகம் சங்க கால்தில் நன்கு சீரமைக்கப்பட்டிருந்தது. சங்க இலக்கியங்கள், கிரேக்க – ரோமானிய நூல்கள் மற்றும் தொல்லியல் சான்றுகள் இது குறித்த ஏராளமான தகவல்களைத் தருகின்றன. வண்டிகளிலும் விலங்குகள் மேல் ஏற்றப்பட்ட பொதிகளின் மூலமாகவும், வணிகர்கள் பொருட்களை கொண்டுசென்று விற்பனை செய்தனர். உள்நாட்டு வாணிகம் பெரும்பாலும் பண்டமாற்று முறையின் அடிப்படையிலேயே நடைபெற்றது.

தென்னிந்தியாவிற்கும், கிரேக்க அரசுகளுக்கும் இடையே அயல்நாட்டு வர்த்தகம் நடைபெற்றது. ரோமானியப் பேரரசு தோன்றிய பிறகு ரோமாபுரியுடனான வாணிபம் சிறப்படைந்தது. துறைமுகப்பட்டினமான புகார் அயல்நாட்டு வணிகர்களின் வர்த்தகமையமாகத் திகழ்நததது. விலை மதிப்பு மிக்க பொருட்களை ஏற்றிவந்த பெரிய கப்பல்கள் இந்த துறைமுகத்திற்கு வந்து சென்றன. தொண்டி, முசிறி, கொற்கை, அரிக்கமேடு, மரக்காணம் போன்றவை பிற சுறுசுறுப்பான துறைமுகங்களாகும். அயல்நாட்டு வாணிபம் குறித்து ‘பெரிப்புளூஸ்’ நூலின் ஆசிரியர் பல அரிய தகவல்களைக் கூறியுள்ளார். அகஸ்டஸ், டைபீரியஸ், நீரோ போன்ற ரோமானியப் பேரரசர்கள் வெளியிட்ட தங்கம் மற்றும் வெள்ளியாலான நாணயங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமாகக் கிடைக்கின்றன. சங்க காலத்தில் நடைபெற்ற வாணிகத்தின் அளவு மற்றும் தமிழ்நாட்டில் ரோமானிய வணிகர்களின் செயல்பாடுகள் ஆிகயவற்றை இவை வெளிப்படுத்துவதாக உள்ளன. பருத்தியாடைகள், மிளகு, இஞ்சி, ஏலக்காய், இலவங்கம், மஞ்சள் போன்ற நறுமணப் பொருட்கள், தந்தவேலைப்பாடு நிறைந்த பொருட்கள், முத்துக்கள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் போன்றவை சங்க காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டட பொருட்களாகும். தங்கம், குதிரைகள், இனிப்பான மதுவகைகள் ஆகியன முக்கிய இறக்குமதிகளாகும்.

சங்க காலத்தின் முடிவு

கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் சங்ககாலம் மெல்ல முடிவுக்கு வரத் தொடங்கியது. சுமார் இரண்டரை நூற்றாண்டுகள் தமிழகத்தை களப்பிரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். களப்பிரர்கள் ஆட்சிகுறித்து நமக்கு சொற்ப தகவல்களே கிடைக்கின்றன. இக்காலத்தில் புத்த சமயமும், சமண சமயமும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. பின்னர் களப்பிரர்களை விரட்டிவிட்டு வடக்கு தமிழ்நாட்டில் பல்லவர்களும், தெற்குத் தமிழ்நாட்டில் பாண்டியர்களும் தத்தம் ஆட்சியை நிறுவினர்.

Sinu Vasan, ARIYUR, PONDICHERRY

மெட்ரிகுலேஷன் என்ற பெயரை நீக்க மாட்டோம் - மெட்ரிக் பள்ளிகள் பிடிவாதம்.



மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டன் என்ற பெயர்களை விட்டுத் தர மாட்டோம். அவற்றை நீக்குமாறு அரசு கூறினால் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடருவோம் என்று தமிழ்நாடு நர்சரி, நடுநிலைப்பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து நந்தகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,தரமற்ற சமச்சீர் கல்வித் திட்டத்தைத்தான் நாங்கள் எதிர்த்து வந்தோம். தற்போது உச்சநீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் உத்தரவுகளை ஏற்று சமச்சீர் கல்வித் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளோம்.

அதேசமயம், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தனியாரிடமே சமச்சீர் கல்வி புத்தகங்களை வாங்குவோம். இதுதொடர்பாக ஏற்கனவே அரசு அனுமதித்துள்ளது. தமிழ் புத்தகங்களை மட்டும்தான் அரசிடமிருந்து பெறுவோம்.

எங்களது பள்ளிகளில் மெட்ரிகுலேஷன், ஓரியண்டன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் என்ற பெயர்களை ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம். அவைதான் எங்களது உயிர்நாடி. அவற்றை விட மாட்டோம். அவற்றை நீக்குமாறு அரசு கூறினால் நாங்கள் வழக்கு தொடர்ந்து போராடுவோம் என்றார் அவர்.

ஜாமீனில் வெளியே வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மீண்டும் கைது ! திருச்சி சிறையில் அடைப்பு !



சேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மிக நெருக்கமாக இருந்துகொண்டு பல சட்டவிரோத காரியங்களை செய்துள்ளார் என்று பலர் புகார் சொல்லிவந்தார்கள்.

ஐந்துரோடு பகுதியில் உள்ள பிரிமியர் மில்லை, அதன் உரிமையாளர்களை மிரட்டி வீரபாண்டி ஆறுமுகத்துக்கு வேண்டியவர்கள் பெயரில் எழுதிவாங்கியது மற்றும், அங்கம்மாள் நகர் குடிசிவாசிகளை, அவர்கள் குடியிருந்த இடத்திலிருந்து விரட்டிவிட்டு, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அந்த இடத்தை கைப்பற்ற முழுமூச்சாக செயல்பட்ட போலிஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மீதும் நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த இரு வழக்குகளிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வாங்கிவந்த லட்சுமணன், நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த மூன்று நாட்களாக சேலம் மாநகர் குற்ற புலணாய்வு துறை ஆய்வாளர் அலுவலகத்தில் போலீஸ் விசாரணைக்யை முடித்துக்கொண்டு, 11.08.2011 அன்று மாலை சேலம் ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு போலீசார் லட்சுமணனை அழைத்து சென்றார்கள்.

நடுவர் முன் நிறுத்தப்பட்ட லட்சுமணனை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தார் நடுவர். மகிழ்ச்சியுடன் தனது சக அதிகாரிகளுக்கு டாட்டா காட்டியபடி நீதிமன்ற அலுவலகத்திலிருந்து வெளியே வந்த லட்சுமணனை அலுவலக வாசலில் வைத்து சூரமங்கலம் உதவி காவல் ஆணையாளர் கோபி கைது செய்தார்.

பதட்டத்தில் இருந்த லட்சுமணன் குடிக்க தண்ணீர் கேட்டார், போகலாம் வா என்று இழுத்து செல்லப்பட்ட லக்சுமணனை சூரமங்கலம், காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

என்ன வழக்கு என்பதுகூட தெரியாமல் இருந்த பத்திரிக்கையாளர்களிடம், லட்சுமணன் மீது குண்டர் சட்டம் போட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு 8.30 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்தித்த மாநகர ஆணையாளர் சொக்கலிங்கம் லட்சுமணன் கைதுக்கான விபரத்தை வெளியிட்டார்.

சேலம், ஐந்து ரோடு பகுதியில் உள்ள புளுமூன் என்ற ஒட்டலில் நான், கடந்த ஏழு வருடங்களாக மேலாளராக வேலை பார்த்து வருகிரேன், நான் தாழ்த்தப்பட்ட்ட பழங்குடியினத்தை சேர்ந்தவன், கடந்த 09.07.2006 அன்று, அப்போது பள்ளபட்டி காவல்நிலையத்தில் ஆய்வாளராக இருந்த லட்சுமணன் என்னை காவல் நிலையத்திற்கு கூப்பிட்டு எனக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் மாமூல் தரவேண்டும் என்று கேட்டார்.

என்னால் அவ்வளவு தொகை தரமுடியாது என்று சொன்னேன், என்னப்பத்தி உனக்கு தெரியாது... நான் ஏற்கனவே ஒரு கொலை செய்துட்டுத்தான் வந்திருகிறேன். மரியாதியா நீ எனக்கு பணம் தரவேண்டும், தரவில்லையானால் உன்னையும் உங்க மொதலாளியையும் கஞ்சா கேசிலும், திருட்டு கேசிலும் புடிச்சு உள்ள போட்டுருவேன் என்று மிரட்டினர். எனது சாதியின் பெயரை சொல்லி திட்டியதுடன், என்னை தொடர்ந்து மிரட்டி பணம் வாங்கிவந்தார். இது பற்றி அப்போதைய
காவல்துறை ஆணையாளர் முதல் முதல் அமைச்சர் வரை 36 புகார்களை அனுப்பியுள்ளேன்.

ஆனால் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் லட்சுமணனுக்கு இருந்த செல்வாக்கால், அதிகாரிகள் இவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சேலம் மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் புகார் செய்துள்ளார் அருள் என்கிற பாபு.

இவரது புகாரை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி சேலம் மாநகர காவல்துறை ஆணையாளருக்கு நீதிமன்றம் உததரவிட்டதை தொடர்ந்து, நீதிமன்ற வாசலில் கைதுசெய்யப்பட்ட லட்சுமணனை சேலம், நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதி ஸ்ரீ வித்தியா முன்னர் ஆஜர் படுத்தப்பட்டார்.

லட்சுமணனை 15 நாள் நீதிமன்ற காவலில், வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இந்திய தண்டனை சட்டம் 387, 389, 506(2) 294 மற்றும் வன்கொடுமை தடைச்சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட்ட லட்சுமணன் சிறையில் அடைக்க திருச்சி சிறைக்கு கொண்டுபோயுள்ளார்கள் சூரமங்கலம் போலீசார்.

தமிழர்களிடம் மொழி, இன உணர்வுகள் குறைந்துவிட்டன ; பாரதிராஜா வருத்தம்.

தமிழர்களிடம்   மொழி, இன உணர்வுகள் குறைந்துவிட்டன;   டைரக்டர் பாரதிராஜா வருத்தம்

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் மக்கள் சிந்தனை பேவை சார்பில் கடந்த 29-ந் தேதி முதல் புத்தகதிருவிழா நடந்து வந்தது. நிறைவு விழாவில் சினிமா டைரக்டர் பாரதிராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த புத்தக திருவிழாவில் அறிவு சார்ந்தவர்கள் பலர் பேசி இருக்கிறார்கள்.ஆனால் எனக்கு அப்படி பேச தெரியாது. காட்டாற்று வெள்ளம் போல் பேசுவேன். என் இனிய தமிழ் மக்களே என்ற கரகரப்பான குரலில் பேசி நான் இன்னும் எத்தனை காலம் தான் உங்களை ஏமாற்றுவேன், எனினும் இந்த பாரதிராஜாவுக்கு அங்கீகாரம் கொடுத்தவர்கள் நீங்கள். சமுதாயநோக்கம் - சமூக பார்வை நமக்கு இருக்க வேண்டும்.

நாம் எந்த செயலை செய்தாலும் அதை துணிச்சலுடன் செய்ய வேண்டும். அப்போது தான் நாம் எதிலும் வெற்றி பெற முடியும். கருத்தம்மா படத்துக்கு கிடைத்த விருது இந்த தமிழ் மக்கள் எனக்கு கொடுத்த அங்கீகாரம். அதனால் தான் என் இனிய தமிழ் மக்களே... என்று கூறுகிறேன்.

நல்ல புத்தகங்களை படிப்பது போன்று மகிழச்சியான விஷயம் எதுவும் இல்லை. புத்தகங்களை படிப்பது குழந்தைகளை கொஞ்சுவது போன்றது. படைப்பாளிகள் எதிர்காலத்துக்கு வழி சொல்பவர்கள். இவர்கள் தமிழ்நாட்டில் அதிகம் பேர் உள்ளனர். வீடுகளில் பூஜை அறைக்கு பதில் புத்தகங்களை வாங்கி நூலகமாக வையுங்கள்.

அதில் உள்ள புத்தகங்களை கொண்டு உங்கள் குழந்தைகளை படிக்க வையுங்கள். நம்முடைய தொப்புள் கொடி உறவுகள் அறுந்த போது தமிழனாக இருந்து நாம் என்ன செய்தோம். பார்த்து கொண்டு தானே இருந்தோம். மொழி - இனம் என்ற உணர்வு நமது ரத்த நாளத்தில் குறைந்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.