Monday, December 26, 2011

முதல் முறையாக கைதான தேமுதிக தலைவர் விஜயகாந்த்.



அரசியலுக்குப் புகுந்த பின்னர், அரசியல்வாதியாக மாறிய பின்னர், எம்.எல்.ஏவான பின்னர், எதிர்க்கட்சித் தலைவரான பின்னர் முதல் முறையாக கைதாகியுள்ளார் விஜயகாந்த்.

விஜயகாந்த் பொதுவாக பெரிய அளவில் போராட்டங்கள் நடத்துபவரில்லை. நடத்த விரும்பியதும் இல்லை. இதுகுறித்து அவரே கூறுகையில், மக்களைப் பாதிக்கும் வகையில் எந்தவிதமான போராட்டத்தையும் நடத்த மாட்டேன் என்று கூறுவார். இதனால் அவர் இதுவரை ஒருமுறை கூட போராட்டம் நடத்திக் கைதானதில்லை.

விஜயகாந்த் தேமுதிகவை ஆரம்பித்து முறைப்படி அரசியலுக்கு வந்த பின்னர் பெரிய அளவில் போராட்டங்கள் எதையும் நடத்தியதில்லை. அதிகபட்சமாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் ஆகியவற்றில் அவர் ஈடுபட்டுள்ளார். மற்றபடி சாலை மறியல் உள்ளிட்ட எந்தவகையான போராட்டத்திலும் அவர் ஈடுபட்டதில்லை. அதுவும் சமீபத்தில்தான் அவர் பிரமாண்டமான வகையில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதுதான் அவரது கட்சி சார்பில் நடந்த பிரமாண்டமான போராட்டமாகும். இந்தப் போராட்டத்தையும் கூட தனது கட்சி தலைமை அலுவலக வளாகத்திலேயே வைத்துக் கொண்டார் விஜயகாந்த்.

இந்த நிலையில் முதல் முறையாக அவர் பிரதமருக்குக் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை அறிவித்தபோது கட்சியினர் உண்மையிலேயே குஷியடைந்தனர். காரணம், இப்போதுதான் முதல் முறையாக ஒரு வலுவான போராட்டத்தை விஜயகாந்த் அறிவித்துள்ளார் என்பதால். இதனால் இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த அவர்கள் ஆயத்தமாக இருந்தனர்.

ஆனால் இன்று காலை தனது வீட்டை விட்டு கிளம்பியுடனேயே விஜயகாந்த்தைப் போலீஸார் கைது செய்து பஸ்சில் ஏற்றிக் கொண்டு போய் விட்டனர்.

இதனால் விஜயகாந்த், நேரில் போய் பிரதமருக்குக் கருப்புக் கொடி காட்ட முடியாமல் போய் விட்டது. இருப்பினும் இதுவரை ஒருமுறை கூட கைதாகாத அரசியல்வாதி என்ற பெயருடன் வலம் வந்த விஜயகாந்த் அதை முறியடித்து முதல் முறையாக கைதாகியுள்ளார் என்பது தேமுதிகவினருக்கு ஆறுதலான விஷயம்தான்!

வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான், கவிஞர் தாமரை உள்ளிட்டோர் மீது திடீர் வழக்கு.



சென்னை மெரீனா கடற்கரையில் அனுமதியில்லாமல் பொதுக்கூட்டம் நடத்தியதாக கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இயக்குநர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான், கவிஞர் தாமரை உள்ளிட்ட10 பேர் மீது திடீரென சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மே 17 இயக்கம் சார்பில் சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று பொதுக் கூட்டம் நடந்தது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காக இந்த பொதுக்கூட்டம் நடந்தது.



இந்தநிலையில் வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான், கவிஞர் தாமரை உள்ளிட்ட 10 பேர் மீது திடீரென சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மெளன ஊர்வலம் என அனுமதி வாங்கி விட்டு பொதுக் கூட்டம் நடத்தியதாக கூறி இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.



இந்தக் கூட்டத்தில் பேசிய தங்கர்பச்சான், கேரளாவில அரசியல் தலைவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆனால் இங்கு அப்படி இல்லை, தனித் தனியாக இருக்கிறார்கள் என்று கடுமையாக சாடியிருந்தார்.



அதேபோல வைகோ பேசுகையில் தமிழகத்தின் உதவி இல்லாவிட்டால் கேரள மக்களால் வாழவே முடியாது என்று ஆவேசமாக கூறியிருந்தார். பாரதிராஜா பேசுகையில் தமிழ் சினிமாத்துறையினரை குறிப்பாக நடிகர்களை கடுமையாக சாடியிருந்தார். நடிகர் சங்கத் தலைவராக தற்போது இருப்பவர் சரத்குமார் என்பது நினைவிருக்கலாம்.



தமிழக அரசின் இந்த திடீர் வழக்கு நடவடிக்கையால் தமிழ் ஆர்வலர்கள் குறிப்பாக முல்லைப் பெரியாறுக்காக போராடி வரும் மக்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.