Monday, April 25, 2011

இரண்டு தலை, நான்கு கண்கள், இரண்டு மூக்கு, இரண்டு வாய் உள்ள குழந்தை - வீடியோவுடன்.

தமிழனாய் ஒன்றிணைந்து செயல்படுவோம்: காட்பாடியில் சீமான் பேச்சு.

தமிழனாய் ஒன்றிணைந்து செயல்படுவோம்: காட்பாடியில் சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சியின் வேலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.

கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆந்திரா, கேரளாவில் சாதி கட்சிகள் இல்லை. தமிழ்நாட்டில் தான் சாதி கட்சிகள் உள்ளது. அவர்கள் தமிழன் என்ற தேசிய இனத்தை சாதி என்ற பெயரில் கூறு போடுகிறார்கள். ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் கருணாநிதி வீட்டில் போய் நிற்காமல் தனியாக நின்று இருந்தால் சீமானுக்கு இந்த வேலையே இருந்து இருக்காது நானும் அவர்களுடன் சேர்ந்து இருப்பேன்.

தமிழர்கள் கொன்று குவிப்பு இலங்கையில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அது நடந்து ஒரு ஆண்டு கூட ஆகவில்லை. அப்படி இருந்தும் இந்த தேர்தலில் தமிழர் இனத்தை பற்றி ஒரு தலைவர் கூட பேசவில்லை. இனத்தை கொன்ற சோனியா அருகில் போய் அவர்கள் நிற்கின்றனர். தமிழ்நாட்டின் வரலாற்று எதிரி காங்கிரஸ். இந்த காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்ற காரணத்துக்காகதான் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள் கூறினேன்.

ஜெயலலிதாவை முதல்வர் ஆக்குங்கள் என்று நான் கூறவில்லை தமிழக மீனவர்கள் 554 பேர் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் நம்முடைய எதிரி நாடு. ஆனால் அவர்கள் யாரும் எல்லை மீறி வந்துவிட்டார்கள் என நம் மீனவர்களை கொல்ல வில்லை. இலங்கை அடிமை நாடு அவர்கள் நம் மீனவர்களை சுட்டு கொல்கின்றனர்.

ராஜபக்சேவுக்கு இந்தியா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கிறது. தேசிய கட்சிகள் நமக்கு தேவை இல்லை. மக்கள் தமிழர் என்ற தேசிய உணர்வுடன் இருக்க வேண்டும். சாதிக்குள் இருந்து கொண்டே சாதியை ஒழிக்க முடியாது. தமிழர் என்ற அடையாளத்தின் கீழ் அனைவரும் இணையும் போது தான் சாதி ஒழியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சாய்பாபா அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம் கோடி சொத்து: சேவை திட்டங்கள் முழு விபரம்.

சாய்பாபா அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம் கோடி சொத்து: சேவை திட்டங்கள் முழு விபரம்

ஆன்மிக வள்ளல் என்று உலகமே புகழும் ஸ்ரீசத்ய சாய்பாபா கடந்த 70 ஆண்டுகளாக செய்த சித்தாடல்கள் ஏராளம். அவர் கையை ஒரு சுழற்று சுழற்றினால் கைக்கடிகாரம், மோதிரம், பூ இனிப்பு என்று வந்தன. அவற்றை பெற்றவர்கள் வாழ்வில் பிரச்சினைகள் தீர்ந்தன.

சாய்பாபா முன்பு சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு சென்றாலே மனம் அமைதியாகி, பிரச்சினைகள் தீர்ந்து விடுவதாக லட்சக்கணக்கானோர் கூறினார்கள். இதன் காரணமாகத்தான் சாய்பாபாவிடம் கோடிக்கணக்கான பணம் நன்கொடையாக திரண்டது.

அதை வைத்து 1972-ம் ஆண்டு ஸ்ரீசத்ய சாய் அறக்கட்டளையை சாய்பாபா தொடங்கினார். இந்த அறக்கட்டளையின் தலைவராக சாய்பாபா இருந்தார். செயலாளராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சக்ரவர்த்தி உள்ளார். அறக்கட்டளை உறுப்பினர்களாக மும்பை தொழில் அதிபர் இந்துலால் ஷா, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி பி.என்.பகவதி, டி.வி.எஸ். நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன், சத்யசாய் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் எஸ்.வி.கிரி, சாய்பாபாவின் இளைய சசோதரர் ஜானகிராமின் மகன் ரத்னாகர் ஆகியோர் உள்ளனர்.

சாய்பாபா அறக்கட்டளைக்கு வருமான வரி தாக்கல் ஆவணத்தின்படி புட்டபர்த்தியில் ரூ.4 ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் ஆந்திர மாநில அரசு அதிகாரிகள் எடுத்த கணக்கெடுப்புப்படி ரூ.40 ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் சுமார் 180 நாடுகளில் சாய்பாபா அறக்கட்டளை நடத்தி வரும் பள்ளிகள், ஆசிரமங்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்களின் வருவாய், சொத்துக்களை கணக்கிட்டால் அது ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

இந்த சொத்து தகவல்களை தொகுக்கும் பணி நடந்து வருகிறது. அறக்கட்டளையை நிறுவிய சாய்பாபாபா தனது சமூக சேவையை தன் ஊரில் இருந்தே தொடங்கினார். புட்டபர்த்தியை எல்லா வசதிகளும் கொண்ட நகரமாக மாற்றினார். தனக்கு வந்த நன்கொடை பணத்தையெல்லாம் கல்வி, மருத்துவம் மற்றும் சமூக சேவை பணிகளுக்கு வாரி, வாரி வழங்கினார்.

ஐசக் டைகுரட் என்ற அமெரிக்க நாட்டுக்காரர் 1991-ம் ஆண்டு சாய்பாபா அறக்கட்டளைக்கு 300 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார். அந்த பணத்தை கொண்டு புட்டபர்த்தியில் 10 மாதத்தில் உலக புகழ் பெற்ற ஸ்ரீசத்யசாய் மருத்துவமனையை உருவாக்கினார். 360 படுக்கைகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்ட அந்த மருத்துவமனையில் இன்றுவரை அனைவருக்கும் இலவசமாக எல்லாவித சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதுபோல பெங்களூரில் ரூ.500 கோடி மதிப்பில் மற்றொரு நவீன மருத்துவ மனையை கட்டினார். புட்டபர்த்தியில் மருத்துவமனை தவிர பல்கலைக்கழகம், உலக ஆன்மீக மியூசியம், அறிவியல் கோளரங்கம், ரெயில் நிலையம், விளையாட்டு ஸ்டேடியம், இசை கல்லூரி, விமான நிலையம், உள்விளையாட்டு அரங்கம், விளையாட்டு வளாகம் போன்றவை சாய்பாபா ஆசீர்வாதத்தால் கட்டப்பட்டன.

இவை தவிர நாடெங்கும் 1200-க்கும் மேற்பட்ட சத்யசாய் வழிபாட்டு மையங்கள் உள்ளன. சுமார் 180 நாடுகளில் கல்வி, கலாச்சார மையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.4 .5 லட்சம் கோடி வரை இருக்கும் என்று முன்பு கூறப்பட்டது.

ஆனால் 5 லட்சம் கோடியை தாண்டும் அளவுக்கு சொத்துக்கள் உள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம்: கனிமொழி மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல்.


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் சிபிஐ இன்று தாக்கல் செய்த துணை குற்றப் பத்திரிகையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதே போல கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டியின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

அதே நேரத்தில் இன்றைய குற்றப் பத்திரிக்கையில் முதல்வரின் மனைவி தயாளு அம்மாளின் பெயர் அதில் இடம் பெறவில்லை.

முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டி.பி ரியாலிட்டி நிறுவனம் தனது இன்னொரு நிறுவனமான சினியுக் மற்றும் மற்றும் குசேகாவ் ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவனம் மூலம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடியளவுக்கு நிதியதவி அளித்தது. இதை கலைஞர் டிவி வட்டியோடு திருப்பித் தந்துவிட்டாலும், அந்த நிதியுதவியை டிபி ரியாலிட்டி ஏன் தந்தது என்பது கேள்வியாகியுள்ளது.

குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கித் தந்தததற்கு லஞ்சமாகவே இந்தப் பணத்தை கலைஞர் டிவிக்கு அந்த நிறுவனம் தந்ததாக சிபிஐ கருதுகிறது.

இதையடுத்து கலைஞர் டிவியின் நிர்வாகி சரத் குமார் ரெட்டியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. கலைஞர் டிவி அலுவலகத்திலும் சோதனை நடத்திய சிபிஐ, அதன் பங்குதாரர்கள் என்ற வகையில் தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோரிடமும் விசாரணை நடத்தியது.

இந் நிலையில் சிபிஐ இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள துணை குற்றப் பத்திரிக்கையில் தயாளு அம்மாள், கனிமொழி எம்.பி, சரத்குமார் ரெட்டி ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால், இன்றைய குற்றப் பத்திரிக்கையில் தயாளு அம்மாளின் பெயர் அதில் இடம் பெறவில்லை. கனிமொழி, சரத் குமாரின் பெயர்களே இடம் பெற்றன.

கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான கனிமொழி, 2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான குற்றச் சதியில் இணைந்து செயல்பட்டதாக குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் 80,000 பக்கங்களைக் கொண்ட முதல் குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது நினைவிருக்கலாம். அதில், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா, நீரா ராடியா, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அதிகாரிகள், ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாஹித் உஸ்மான் பல்வா, இயக்குனர் வினோத் கோயங்கா, யுனிடெக் வயர்லெஸ் நிறுவன இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் டெலிகாம் அதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை அதிகாரிகள் கெளதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகியோர் மீது சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மே 13ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், குற்றப் பத்திரிக்கையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றுள்ளது, திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலைஞர் தொலைக்காட்சியில் கனிமொழி, தயாளு அம்மாள் மற்றும் நிர்வாக இயக்குனர் சரத் குமார் ரெட்டி ஆகியோருக்கு முறையே 20, 60 மற்றும் 20 சதவீத பங்குகள் உள்ளன.

சிபிஐ இன்று தாக்கல் செய்த துணைக் குற்றப் பத்திரிகையிலும் ஆ.ராசாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. அவர் ஸ்பெக்ட்ரத்தை குறைந்த விலையில் ஒதுக்க தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டை சிபிஐ கூறியுள்ளது.

கனிமொழி, சரத்குமார் தவிர சினியுக் மற்றும் குசேகாவ் நிறுவனம் மற்றும் இந்த நிறுவனங்களின் பங்குதாரரான ஷாகித் உசேன் பல்வாவின் தம்பியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

அவதூறாகப் பேசி வரும் ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்படும் - கருணாநிதி.


திமுக அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து அவதூறாகப் பேசி வரும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இன்று முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு முதல்வர் அளித்த பதில்களும்:

கேள்வி: முக்கிய கோப்புகளை அழிக்க தி.மு.கழக அரசு முயற்சி செய்வதாக அ.தி.மு.க.வினர் சிலர் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு கொடுத்திருக்கிறார்களே?

முதல்வர்: அ.தி.மு.க.வின் தலைவர்களோ, தளபதிகளோ நான்கைந்து தளபதிகள் ஒரு புகார் எழுதி அரசு தலைமைச் செயலகத்தில் கோப்புகள் எல்லாம் மாற்றப்பட்டும், சிதைக்கப்பட்டும் வருகின்றன, அதை உடனடியாகத் தடுக்க வேண்டுமென்றும், அதைப் பற்றி விசாரிக்க வேண்டுமென்றும் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு மனு கொடுத்திருக்கிறார்கள். அதில் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார், வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

அந்த மனுவில் இப்போது நடைபெறுவது காபந்து சர்க்கார் என்று அழுத்தந்திருத்தமாக குறிப்பிட்டிருக்கிறார்கள். நான் பி.எச். பாண்டியனை பெரிய வழக்கறிஞர்களில் ஒருவர் என்று கருதிக் கொண்டிருக்கிறேன். அவருடைய மகன் மனோஜ் பாண்டியனும் அவரை விடத் திறமையான வக்கீல் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால் இந்தப் புகார்ப் பட்டியலில் கையெழுத்திட்டுள்ள மனோஜ் பாண்டியன் இந்தச் சர்க்காரை காபந்து சர்க்கார் என்று சொல்லியிருப்பது நகைப்புக்குரியதாகும்.

சட்டக் கல்லூரியின் வாசலைப் பார்த்தவர்கள் கூட காபந்து சர்க்காருக்கும், இப்போது நடைபெறுகின்ற சர்க்காருக்கும் உள்ள வித்தியாசத்தை நிச்சயமாக உணர்வார்கள். இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது தொடர்ச்சியான அரசு தான்.

தேர்தல் முடிவு வெளி வந்து அதுவரையில் ஆட்சியில் இருக்கிற கட்சி தோற்றுப் போய் வீட்டிற்கு அனுப்பப்படுமேயானால் அடுத்து ஒரு சர்க்கார் அமைவதற்கு முன்பு இடையில் அரசாங்க நிர்வாகத்தில் தடங்கலோ தொய்வோ ஏற்பட்டு விடாமல் புதிய அமைச்சரவை அமைகிற வரையில் கவர்னர் அவர்களால் அனுமதிக்கப்படுகிற அரசுக்குத் தான் காபந்து சர்க்கார் என்று ஒரு கிராம வாசிக்குக் கூடத் தெரியும்.

புதிய தலைமைச் செயலக வளாகம் இன்று நேற்றல்ல. 13 3 2010 அன்றே பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும், திருமதி சோனியா காந்தி அவர்களும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திறந்து வைக்கப்பட்டதாகும். அதற்குப் பிறகு பட்ஜெட் கூட்டம் இந்தக் கட்டிடத்தில் தான் நடைபெற்றது. ஆளுநர் உரையும் கூட இங்கே தான் நிகழ்த்தப்பட்டது. அதையொட்டிய பொது விவாதமும் இங்கே தான் நடைபெற்றது. 2011ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையும் இந்த வளாகத்தில் தான் படிக்கப்பட்டது. அதற்கான விவாதமும் இங்கே தான் நடைபெற்றது.

இன்று வரையில் இந்தக் கட்டிடத்தில் ஏழு அமைச்சரவைக் கூட்டங்கள் இங்கே நடைபெற்றிருக்கின்றன. திரிபுரா கவர்னர் என்னை வந்து இங்குள்ள முதலமைச்சர் அறையில் சந்தித்து நீண்ட நேரம் உரையாற்றி விட்டுச் சென்றிருக்கிறார். மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், நாராயணசாமி, ஆகியோர் இந்தக் கட்டிடத்திற்கு வருகை தந்திருக்கிறார்கள். தமிழக ஆளுநர் பர்னாலா அவர்கள் ஒரு நாள் முழுவதும் அவர் உடல் நிலையைக் கூடப் பொருள் படுத்தாமல் இந்தக் கட்டிடத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு பாராட்டிச் சென்றிருக்கிறார்.

வீடியோ கான்பரென்ஸ் நிகழ்ச்சிகள் பல குறிப்பாக கால்டுவெல் நினைவில்லத் திறப்பு விழா ஐந்திணை மரபணுப் பூங்காக்கள் திறப்பு விழா மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நடைபெற்ற விழா தேர்வாணையக் கழகக் கட்டிடக் கால்கோள் விழா போன்றவைகள் இங்கே தான் நடைபெற்றன.

அரசின் பல்வேறு துறைகள் பொதுத் துறை, உள்துறை, பொதுப்பணித் துறை, தொழில் துறை, சட்டப் பேரவைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை போன்றவைகள் எல்லாம் இந்தக் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு இங்கே பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்போது கோப்புகளைத் திருத்துகிறோம் அல்லது திருடுகிறோம் என்றெல்லாம் வழக்கம் போல் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு மக்களைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள். கோப்புகளைப் பற்றியும் அவைகள் எங்களுடைய நிர்வாகத்தில் பாதுகாப்பற்றுப் போய் விடும் என்பது பற்றியும் இந்த மூன்று நான்கு பேருக்கு முன்பே அம்மையார் ஜெயலலிதா அவர்களால் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

தேர்தல் தொடங்கியது முதல் இந்நாள் வரையில் பல அவதூறுகளை அ.தி.மு.க.வினர் குறிப்பாக அவர்களுடைய தலைவி ஜெயலலிதாவினால் இந்த அரசின் மீதும், என் மீதும் சுமத்துவதை எவராலும் பொறுத்துக் கொள்ள முடியாது. அதனால் சட்டப் பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகளில் இந்த அரசு ஈடுபட்டிருக்கின்றது.

கேள்வி: காபந்து சர்க்கார் அல்ல, தொடர் அரசு என்று சொல்கிறீர்கள். ஆனால் ஒரு சில அதிகாரிகள் உங்களைக் கேட்காமலேயே தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கிறார்களே, நேற்று கூட பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள், அந்தத் துறையின் அமைச்சரைக் கேட்காமலேயே தேர்வு முடிவு வரும் நாட்களை யெல்லாம் அறிவித்திருக்கிறார்களே?

முதல்வர்: அது அதிகாரிக்கும் அமைச்சருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு. நான் சொன்ன விஷயத்திற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை.

கேள்வி: அ.தி.மு.க. கொடுத்துள்ள புகார் குறித்து தேர்தல் ஆணையம் உங்களிடம் விளக்கமோ, தகவலோ கேட்டிருக்கிறதா?

முதல்வர்: தேர்தல் ஆணையத்திற்கு நேற்றிரவு தான் புகார் மனுவை அனுப்பியிருக்கிறார்கள். இன்று காலையில் பத்திரிகைகளில் அந்தச் செய்தி வந்திருக்கிறது. எல்லா பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருக்கிறீர்கள். ஏனென்றால் இது உங்களுக்கு மிகவும் சுவையான விஷயம். அதனால் வெளியிட்டிருக்கிறீர்கள். எனவே அதற்காக வழக்கு போடுகிறோம்.

கேள்வி: வழக்கு யார் மீது போடுகிறீர்கள்?

முதல்வர்: எங்கள் சட்ட வல்லுநர்கள் அதைப் படித்துப் பார்த்து விட்டு யார் மீது வழக்கு போடலாம் என்று சொல்கிறார்களோ, அவர்கள் மீது வழக்குப் போடுவோம்.

ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல்

கேள்வி: இலங்கை பிரச்சினை குறித்து ஐ.நா. நியமித்த விசாரணைக் கமிஷனின் அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது. அதற்குள் இது தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் இடையே உள்ள பரஸ்பர விஷயமாகக் கருதப்பட்டு அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றனவே?

முதல்வர்: இலங்கைப் பிரச்சினை பெரிய பிரச்சினை. இதை தி.மு.க. பிரச்சினை, அ.தி.மு.க பிரச்சினை என்று கருதி விட்டு விடாதீர்கள். ஏனென்றால் அ.தி.மு.க. பிரபாகரனை கைது செய்து இங்கே அழைத்து வர வேண்டுமென்று தீர்மானமே சட்டப் பேரவையில் நிறைவேற்றும்.

ஒரு நாள், பிரபாகரனை தியாகி என்று அ.தி.மு.க. பாராட்டும். இன்னொரு நாளைக்கு இலங்கை அதிபரைத் தாக்கிப் பேசும். ஒரு நாளைக்கு தாங்கிப் பேசும். அதனால் இலங்கைப் பிரச்சினையில் எங்களுக்கும், அ.தி.மு.க.விற்கும் கருத்து வேறுபாடு என்று சொல்லாதீர்கள். அவர்களுக்கு இலங்கைப் பிரச்சினை என்ன வென்றே தெரியாது. எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தவரை இலங்கைப் பிரச்சினை அவருக்குத் தெரியும்.

கேள்வி: இந்தச் சூழ்நிலையில் இலங்கைப் பிரச்சினையில் தி.மு.க.விற்கு அதிகப் பொறுப்பு இருக்கிறது. எனவே டெல்லியில் உள்ள காங்கிரஸ் அரசாங்கம் மத்திய அரசு இலங்கைப் பிரச்சினையில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?

முதல்வர்: மத்திய அரசை இலங்கைப் பிரச்சினையில் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம், வற்புறுத்திக் கொண்டிருக்கிறோம். இன்னும் சொல்லப் போனால் எங்கள் அணியில் உள்ளவர்கள் போராட்டமே நடத்தியவர்கள். இலங்கைப் பிரச்சினையிலே சட்ட மன்றத்தில் தீர்மானம் போட்டவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியும். விடுதலைப் புலிகளையெல்லாம் கைது செய்து நீதிமன்றத்திலே நிறுத்த வேண்டு மென்று சொன்னது யார் என்று உங்களுக்குத் தெரியும்.

பிரபாகரனைக் கொண்டு வந்து நிறுத்த வேண்டுமென்று சொன்னது யார் என்று உங்களுக்குத் தெரியும். போர் என்றால் பொது மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான் என்று சொன்னது யார் என்று உங்களுக்குத் தெரியும். இலங்கைப் பிரச்சினையில் நாங்கள் அவர்களை விடத் தீவிரமான ஆதரவாளர்கள். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களுக்கு தி.மு.கழகத்தைப் பொறுத்த வரையில் தீவிரமான ஆதரவு என்றைக்கும் உண்டு. ஆனால் அவர்கள் தான் எங்களை விட்டு விட்டு வேறு ஆதரவைத் தேடிப் போய் அதனால் நஷ்டம் அடைந்தார்கள். அதற்காக நாங்கள் அவர்களை கை விட்டு விட முடியாது.

மத்திய அரசை வலியுறுத்தி இலங்கைத் தமிழர்களுடைய சுதந்திரத்தைக் காப்பாற்ற அந்தத் தீவில் தமிழர்களும், சிங்களவர்களும் சம உரிமைப் பெற்று வாழ தொடர்ந்து குரல் கொடுப்போம்.

கேள்வி: ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்ற கருத்தினை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். உங்கள் அணியில் டாக்டர் ராமதாஸ் இருக்கிறார். இதிலே உங்கள் கருத்து என்ன?

முதல்வர்: இதிலே டாக்டர் ராமதாஸ் அவர்களின் கருத்திலிருந்து நான் வேறுபடவில்லை. அந்தக் கருத்தை எப்போது எந்தவிதமாக வலியுறுத்துவது என்பது தான் இதிலே முக்கியமே தவிர டாக்டர் ராமதாஸ் அவர்களின் கருத்திலிருந்து நான் வேறுபடுகிறேனா என்று கேட்டு, கருணாநிதியும் ராமதாசும் கருத்து வேறுபாடு என்று தலைப்பு போட்டு விட வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: ராஜபக்சேவுக்கு ஆதரவான நிலையை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறதே?

முதல்வர்: இவையெல்லாம் சர்வ தேச அளவில் சர்வ தேச நிலையையொட்டி விவாதிக்க வேண்டிய விஷயங்கள். இந்தியாவின் பாதுகாப்பை ஒட்டியும் நல்லுறவு எப்படியெல்லாம் வளர்க்கப்பட வேண்டும் என்பதையொட்டியும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள். உங்களின் ஒரு கேள்வியிலும், என்னுடைய ஒரு பதிலிலும் இந்த விஷயங்களை அடக்கி விட முடியாது.

மின் பற்றாக்குறைக்கு ஜெ.தான் காரணம்

கேள்வி: தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை அதிகமாகிக் கொண்டே போகிறது, சென்னையில் ஒரு மணி நேரம் மின் வெட்டு இருக்கிறதே?

முதல்வர்: மின்சாரப் பற்றாக்குறை இந்தியா முழுவதும் இருக்கிறது.

கேள்வி: மின் பற்றாக்குறைக்கு நீங்கள்தான் காரணம் என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறாரே?

முதல்வர்: அந்த அம்மையார் முன்பு ஐந்தாண்டு காலம் ஆட்சியிலிருந்தபோது, மின்சாரத் துறையில் எதையுமே செய்யாததால்தான் இப்போது இந்த விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: 2ஜி அலைக்கற்றை வழக்கில் இன்று இரண்டாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறதே?

முதல்வர்: தாக்கல் ஆனால் உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். தி.மு.க.வினர் மீது ஏதாவது ஒரு தூசி விழுந்தால் கூட, உங்களுக்கு அது தலைப்புச் செய்தியாகி விடுமே! அதற்காக நான் உங்களுடைய பத்திரிகைகளையெல்லாம் படிக்காமல் இருக்கப் போவதில்லை. ஆழ்ந்து படிக்கிறேன்.

கேள்வி: அந்தக் குற்றப்பத்திரிக்கையில் உங்கள் குடும்பத்தினர் பெயர் இடம் பெறும் என்று கூறப்படுகிறதே?

முதல்வர்: அதுபற்றி எனக்குத் தெரியாது.

கேள்வி: குற்றப்பத்திரிக்கையில் உங்கள் குடும்பத்தினரின் பெயர்கள் இடம் பெற்றால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறுமா?

முதல்வர்: பெண்ணாக இருந்துகொண்டு இதுமாதிரிப் பேசக்கூடாது. பெண் நிருபர் இப்படி இதயத்தை தூக்கி எறிந்துவிட்டு பேசக்கூடாது என்றார் கருணாநிதி.

காமன்வெல்த் ஊழல் : சுரேஷ் கல்மாடி கைது. சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை.

காமன்வெல்த் ஊழல்:    சுரேஷ் கல்மாடி கைது;    சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லியில் காமன் வெல்த் விளையாட்டு போட்டி நடந்தது. போட்டி அமைப்பு குழு தலைவராக ஒலிம்பிக் இந்திய சங்க தலைவர் சுரேஷ் கல்மாடி நியமிக்கப்பட்டு இருந்தார். போட்டிக்கான ஏற்பாடு களை செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும் ரூ.8 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.

இதை தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தர விடப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தியதில் ஊழல் நடந்து இருப்பது உறுதியாக தெரிந்தது. இதை தொடர்ந்து சில அதிகாரிகளும் ஊழலில் சம்பந்தப்பட்ட மற்றும் சிலரும் கைது செய்யப்பட்டனர். ஊழலில் போட்டி அமைப்பு குழு தலைவர் சுரேஷ்கல்மாடிக்கும் முக்கிய பங்கு இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்தது. போட்டிக்கு தேவையான பொருட்களை ஒப்பந்தம் மூலம் அதிக விலை கொடுத்து வாங்கியது மற்றும் வாடகைக்கு எடுத்ததில் அவர் முறைகேடு செய்து இருந்தார்.

மேலும் காமன்வெல்த் ஜோதி ஓட்டம் லண்டனில் நடந்த போது அதற்கான ஏற்பாடுகளை செய்ததிலும் அவர் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தார். இதை கண்டு பிடித்த சி.பி.ஐ. அவரிடம் ஏற்கனவே 3 முறை விசாரணை நடத்தியது. அப்போது பல்வேறு தகவல்கள் சி.பி.ஐ.க்கு கிடைத்தது. லண்டன் காமன்வெல்த் ஜோதி ஓட்டத்தின் போது அந்த நிகழ்ச்சிகளை படம் பிடிப்பது, ஒளிபரப்பு செய்வது மற்றும் வாகனங்கள் ஏற்பாடு செய்யும் பணிகள் ஏ.எம்.பிலிம்ஸ் என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தன.

வழக்கத்தை விட இந்த நிறுவனத்துக்கு அதிக பணம் கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் பெரிய அளவில் ஊழல் நடந்து இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்தது. இதுபற்றி விசாரிப்ப தற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் சமீபத்தில் லண்டன் சென்று இருந்தனர். இந்த நிறுவனத்தின் அதிபர் ஆஷிஸ்பட் டேலிடம் விசாரணை நடத்தினார்கள். அவர் ஊழல் நடந்ததை ஒப்புக் கொண்டார். அந்த அதிகாரிகள் இருவரும் டெல்லி திரும்பினார்கள்.

இதையடுத்து சுரேஷ் கல்மாடியை மீண்டும் விசாரணக்கு வருமாறு அழைத்தனர். அதை ஏற்று சுரேஷ் கல்மாடி இன்று டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் 1 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு அவரை கைது செய்தனர். இன்று மாலை அல்லது நாளை கல்மாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் அதன் பிறகு ஜெயிலில் அடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்மாடி கைது தொடர்பான விவரங்களை இன்று மாலை 4 மணிக்கு விரிவாக தெரிவிப்பதாக சி.பி.ஐ. தெரிவித்து உள்ளது.


கேரள முதல்வர் அச்சுதானந்தன் உண்ணாவிரதம்.


பூச்சிக் கொல்லி மருந்தான என்டோசல்பானை தடை செய்ய, மத்திய அரசை வலியுறுத்தி, கேரள முதல்வர் அச்சுதானந்தன் தலைமையில், இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன், கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில், முந்திரி காடுகளில் விவசாய பயிர்களை தாக்கி வந்த பூச்சி மற்றும் புழுக்களை அழிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, வானில் இருந்தபடியே என்டோசல்பான் என்ற பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது.

இதனால், நூற்றுக்கணக்கான மக்கள், குழந்தைகள், பெரியவர்கள் என, பலரும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மாநில அரசு நிவாரண உதவி வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் அம்மாவட்டத்தில் வசிக்கின்றனர். இப்பூச்சிக்கொல்லி மருந்தை ஒட்டுமொத்தமாக தடை செய்ய வேண்டுமென, கேரளாவில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் கோரி வருகின்றன. இந்நிலையில், இம்மருந்து குறித்து மீண்டும் ஆய்வு நடத்தப்பட வேண்டுமென, பிரதமர், சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கேரள முதல்வர் அச்சுதானந்தன், "இப்பூச்சிக்கொல்லி மருந்தால் கேரளாவில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் 11 ஊராட்சிகளிலும், தென் பகுதியில் உள்ள கர்நாடகாவில், 94 கிராமங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாநிலத்தைச் சேர்ந்த மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இப்பிரச்னையை கண்டுகொள்ளாமல் உள்ளார். அவர் சுற்றுச்சூழலுக்கு எதிரானவர்' என்றார்.

பாதிப்பு நிகழ்ந்த தினமான இன்று காலை, மாநில தலைநகரில் முதல்வர் அச்சுதானந்தன் தலைமையில், காலை 10 மணி முதல், மாலை 5.30 மணி வரை, ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என, மாநில அமைச்சர் விஜயகுமார் தெரிவித்தார். இதில் அரசியல் கட்சி வேறுபாடின்றி அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என, அவர் தெரிவித்துள்ளார்.

தூதர்களுக்கு இலங்கை அவசர அழைப்பு.


மேற்கத்திய நாடுகளில் உள்ள தமது தூதர்களை அவசரமாக கொழும்பு வருமாறு இலங்கை அரசு அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நியூயார்க், வாஷிங்டன், பாரீஸ், ஜெனிவா, பெல்ஜியம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள தூதர்களும், ஐநாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதர் உள்ளிட்டோர் இவ்வாறு கொழும்புக்கு உடனடியாக வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையின் போர்க்குற்றம் குறித்த ஐநா சபையின் அறிக்கை விவகாரத்தில், எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று தூதர்களுக்கு விளக்கம் அளிக்கப்படவுள்ளதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. அறிக்கை இன்று வெளியீடு.


இலங்கை போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. அறிக்கை இன்று முழுமையாக வெளியிடப்படுகிறது.

இலங்கை உள்நாட்டு போரில் அந்நாட்டு ராஜபக்சே அரசு நடத்திய இன படுகொலை குறித்து ஐ.நா. மூவர் குழு விசாரணை நடத்தியது. ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் உத்தரவின்படி நடந்த முடிந்த இந்த விசாரணை அறிக்கை ஐ.நா. சபையிடம் கடந்த சில தினங்களுக்கு முன் சமர்பிக்கப்பட்டது.

பாதுகாப்பு வளையத்திற்குள் வரவழைக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களை இலங்கை ராணுவம் படுகொலை செய்தது, மருத்துவமனைகள், முகாம்கள், உணவு பொருள் சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றை குண்டு வீசித் தகர்த்தது ஆகியவை உண்மைதான் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் பிரபல பத்திரிக்கை ஒன்று பரபரப்பு செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் ஐ.நா.வின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை இன்று முழுமையாக வெளியிடப்படுகிறது

இடி தாக்கியதால் அதிசயமா? சித்தம்பலம் குட்டையில் பொங்கி வரும் நீர்க்குமிழி.

இடி தாக்கியதால் அதிசயமா? சித்தம்பலம் குட்டையில் பொங்கி வரும் நீர்க்குமிழி: பல்லடம் பகுதியில் பரபரப்பு

பல்லடம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த இடி-மின்னலுடன் மழை கொட்டியது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

மழையின் போது பல்லடம் அருகேயுள்ள சித்தம்பலம் குட்டையில் இடி விழுந்ததாகவும், குட்டையில் இருந்து தொடர்ந்து நீர்க்குமிழிகள் வெளியேறிக் கொண்டிருப்பதாகவும் தகவல் பரவியது. பொது மக்கள் வந்து ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.

சித்தம்பலம் குட்டையில் நீர்க்குமிழிகள் வருவது குறித்து பஞ்சாயத்து துணை தலைவர் வேணுகோபாலிடம் கேட்டபோது கடந்த 10 ஆண்டாக சித்தம்பலம் குட்டையில் தண்ணீர் இல்லை. நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. அப்போது சித்தம்பலம் குட்டை அருகே இடி விழுந்ததுள்ளது. குட்டைக்குள் விழுந்ததாக தெரியவில்லை.

கடந்த ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் குட்டை தூர்வாரப்பட்டது. அதன் பின்னர் மழை நீர் தேங்கியுள்ளது. 10 ஆண்டாக குட்டையில் தண்ணீர் இல்லாததால் பூமியில் வெடிப்பு ஏற்பட்டிருந்தது. அந்த பிளவுகளில் தண்ணீர் இறங்குவதால் குமிழிகள் வெளிவரலாம் என்று சந்தேகிக்கிறோம் என்றார்.

இருப்பினும் பொது மக்கள் இடி விழுந்ததால் நீர்க்குமிழி வருகிறது என்று கூறி பார்த்து செல்கின்றனர்.

கார் உரிமையாளர்களே எச்சரிக்கை!

சொந்தமாகக் கார் வைத்திருப்பவர்களா நீங்கள்? அப்படியானால் லண்டனில் உள்ள
குவீன் மேரி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறும் தகவல்களை அறிந்தே தீர வேண்டும்.

சொந்தமாக கார் வைத்திருக்கிறவர்கள் போதிய நேரம் இல்லாமையினாலோ, சோம்பேறித்தனத்தாலோ தங்களுடைய காரை தண்ணீர்விட்டுக் கழுவி சுத்தம் செய்வதில்லை. கார் சர்வீஸýக்கு விடும்போது சுத்தமாவதே போதும் என்று இருந்துவிடுகின்றனர். ஆனால் ஆய்வு தெரிவிக்கும் தகவல்கள் வயிற்றைக் குமட்ட வைக்கிறது.

கார் ஸ்டீயரிங் வீலில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை, பொது கக்கூஸின் பேசினில் இருப்பதைவிட 900% அதிகமாக இருக்கிறதாம். உவ்வே...

காரில்போகும்போதுதான் நொறுக்குத்தீனி தின்பது வழக்கம். தெருவோர பஜ்ஜி கடையிலிருந்து வாங்கும் பண்டங்களையும் சாப்பிட்டுக்கொண்டே ஸ்டீயரிங் வீலில் எண்ணெயைத் தடவுகிறவர்களே அதிகம் (லண்டனிலுமா?).

பொது கக்கூஸில் ஒரு சதுர அங்குலத்துக்கு 80 கிருமிகள் இருந்தால் கார் ஸ்டீயரிங்கில் 720-க்கும் மேல் இருக்கிறதாம். (கிளவுஸ் போட்டுத்தான் இனி ஓட்ட வேண்டும்!)

கார் உரிமையாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஆண்டுக்கு ஒருமுறைதான் காரின் உள்ளே சுத்தம் செய்கின்றனர். காரில் சாப்பிடுவதால் மட்டும் அல்ல இருமுவதால், தும்முவதால், சளி ஒழுகும்போது மூக்கையும் துடைத்து கர்ச்சீப் இல்லாவிட்டால் கதவு, சீட், டாஷ் போர்டு, ஸ்டீயரிங் வீல், கூரை என்று எங்கு வேண்டுமானாலும் துடைப்பதால் கிருமிகள் பரவுகின்றன.

காரிலேயே டிக்கி என்று அழைக்கப்படும் அதன் பின் பகுதி இருக்கிறதே அதை தெரு குப்பைத்தொட்டி என்றே சொல்லிவிடலாம். அதை பெரும்பாலும் அடைத்தே வைத்திருப்பதால் கிருமிகள் ஆனந்தமாக அங்கே இனப்பெருக்கம் செய்து குடும்பம் நடத்துகின்றன. அதிகமில்லை, ஜென்டில்மென் - ஒன்றரை சதுர அங்குலத்துக்கு 1,000 பாக்டீரியாக்கள்தான் - இருக்கின்றனவாம்.

பாசிலஸ் செரியஸ், ஆர்த்ரோ பாக்டர் என்ற இருவகை பாக்டீரியாக்கள்தான் காரில் அதிகம் காணப்படுகின்றன. இது இருக்கும் பண்டத்தை சமைத்துச் சாப்பிட்டால் நான் ஸ்டாப் (வயிற்றுப் போக்கு) கொண்டாட்டம்தான்!

இதில் ஆர்த்ரோ பாக்டர் மண்ணில்தான் பெரும்பாலும் இருக்கும். கார் போகும்போது எழும் தூசியில் கலந்து காரில் வந்து விழும். மனிதர்களின் தோலிலும் இது இருக்கும்.

காரின் சுகாதாரம் ஒருபுறம் இருக்கட்டும், கார் பராமரிப்பு எப்படி என்றும் அவர்கள் ஆய்வு செய்தார்கள்.

66% கார் சொந்தக்காரர்களுக்கு காரை வெளியே எடுக்கும்போது ஆயில், வாட்டர் லெவல் பார்க்க வேண்டும் என்ற நினைவே வராது.

கார் பஞ்சராகிவிட்டால் ஸ்டெப்னியைக் கொண்டு டயரை மாற்ற 66% பேருக்குத் தெரியாது.

காரில் காற்று குறைந்தால் காற்று நிரப்ப 30% பேருக்குத் தெரியாது.

காரில் வைப்பர் வேலை செய்யாவிட்டால் அதைப் பழுது நீக்க 50% பேருக்குத் தெரியாது.

நல்ல வேளை, காரை பாதுகாப்பாக ஓட்ட, சிக்னல் போட, ரிவர்ஸ் எடுக்க, ஓவர்டேக் செய்ய, ஆஃப் கிளட்சில் ஓட்ட எத்தனை பேருக்குத் தெரியும் என்று ஆய்வு செய்திருந்தால் நிலைமை மோசமாக இருந்திருக்கும்.

இனி உங்கக் காரை தினமும் குளிப்பாட்டுவீர்களா, அல்லது குறைந்தபட்சம் அதன் முகத்தையும் வயிற்றையுமாவது சுத்தம் செய்வீர்களா?

ஒபாமாவின் செல்வாக்கு சரிவு கருத்துக் கணிப்பில் தகவல்.


அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு சரிந்திருப்பதாகவும், நாட்டின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதாக பெரும்பான்மை மக்கள் கருதுவதாகவும் அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு கூறுகிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் செயல்பாடு குறித்து 75 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையும், சிபிஎஸ் நியூஸ் தொலைக்காட்சியும் இணைந்து அண்மையில் தொலைபேசி மூலம் கருத்துக்கணிப்பு நடத்தின.
கடந்த 15-ம் தேதி முதல் 20-ம் தேதிவரை நடந்த இந்தக் கருத்துக் கணிப்பில் நாடு முழுவதும் கம்ப்யூட்டர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,224 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் செயல்பாடு குறித்து 45 சதவீதம்பேர் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். இது கடந்த ஜனவரி மாதத்தைவிட குறைவாகும்.

பொருளாதார நெருக்கடிகளை அவர் கையாளுவது குறித்து 57 சதவீதம் பேரும், பட்ஜெட் பற்றாக்குறையை அவர் கையாண்டது குறித்து கிட்டத்தட்ட அதே அளவினரும் அதிருப்தியில் இருப்பது தெரியவந்திருக்கிறது.

அடுத்த அதிபர் தேர்தலிலும் ஒபாமா போட்டியிடக்கூடும் என்று கூறப்பட்டுவரும் நிலையில், இது அவருக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் மூலம் பிரதிநிதிகள் அவையில் குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்றிருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தின் செயல்பாடு குறித்து 75 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.

எனினும், 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர்களுக்கு அதிகமாக வருமானம் பெறுவோருக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த வரிவிலக்கை ரத்து செய்யும் ஒபாமாவின் திட்டத்துக்கு 72 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

எந்த வகையில் செலவைக் கட்டுப்படுத்தலாம் என்கிற கேள்விக்கு ராணுவச் செலவுகளைக் குறைப்பதற்கு 45 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். சமூகப் பாதுகாப்புச் செலவுகளைக் குறைக்கலாம் என 17 சதவீதம் பேரும், மருத்துவத் திட்டங்களுக்கான செலவுகளைக் குறைக்கலாம் என 21 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

நாடு தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக 70 சதவீதம் அமெரிக்கர்கள் தெரிவித்துள்ளனர். லிபியா மீதான தாக்குதலுக்கும் பெரும்பான்மையினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

விடுமுறை நாளில் மின்வெட்டு இல்லை: கோடை மழையால் 700 மெகா வாட் மிச்சம்.


தமிழகம் முழுவதும் வழக்கமாக செய்யப்படும் மின்வெட்டு விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை இல்லை. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் 2,500 மெகா வாட் அளவுக்கு மின்சாரப் பற்றாக்குறை நிலவுகிறது. இதைச் சமாளிக்க சென்னையில் ஒரு மணி நேரமும், பிற மாவட்டங்களில் மூன்று மணி நேரமும் தினமும் மின்வெட்டு செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்வெட்டு மூலம் 1,600 மெகா வாட் அளவுக்கு மின்சாரம் சேமிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நாளில் ஒவ்வொரு பகுதியில் குறித்த நேரத்தில் மின்வெட்டு செய்யப்படுவது வழக்கம். ஆனால், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக மின்வெட்டு செய்யப்படும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பொது மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

எந்த இடத்திலும் வழக்கமான அளவான மூன்று மணி நேரம் மின்வெட்டு செய்யப்படவில்லை. அரை மணி நேரம் வரையிலே மின்வெட்டு செய்யப்பட்டது. சென்னையில் மின்வெட்டு இல்லை.

என்ன காரணம்? கோடை மழை பெய்து வருவதே மின்வெட்டு செய்யப் படாததற்குக் காரணம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். "கோடை மழை பெய்ததால் விவசாயிகள் அதிகளவுக்கு மின்மோட்டார்களை பயன் படுத்தவில்லை. இதன்மூலம், 700 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் சேமிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு சேமிக்கப்பட்ட மின்சாரம், வீட்டு உபயோகத்துக்காகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, வழக்கமாக செய்யப்படும் மின்வெட்டு கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் இல்லை' என்று மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடருமா? மின்வெட்டு இல்லாத நிலை தமிழகத்தில் தொடர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு, தமிழகம் முழுவதும் கோடை மழை தொடர வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

"தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை மழை நீடிக்கும்' என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், மின்வெட்டு இல்லாத நிலை மேலும் சில நாட்களுக்கு மாநிலத்தில் நீடிக்கும் எனத் தெரிகிறது.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு தேதி அறிவிப்புக்கு அமைச்சர் எதிர்ப்பு.


பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டதற்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முறையே மே 14, 25 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை செயலர் டி.சபிதா அறிவித்தார்.

இந்த அறிவிப்பு அரசைக் கலந்து ஆலோசிக்காமல் பள்ளிக் கல்வித் துறையே தன்னிச்சையாக அறிவித்துள்ளதாக அந்தத் துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர்,

தேர்வு முடிவு தேதிகளை அறிவிப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரிகள், அதன் அமைச்சரைக் கலந்து ஆலோசித்து விட்டு முதல்வரின் ஒப்புதலைப் பெறுவர். அவர் அனுமதி அளித்த பிறகு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மூலமாக தேர்வு முடிவு தேதி அறிவிக்கப்படும். இதுவே வழக்கமான நடைமுறை. ஆனால், இதற்கு மாறாக, பள்ளிக் கல்வித் துறை செயலரே தேர்வு முடிவு தேதியை அறிவித்துள்ளார். இந்த விஷயத்தில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது. தேர்தல் தேதி முடிவு அறிவிப்புக்கும், தேர்தல் நடத்தை நெறிமுறைகளுக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்தார்.

தொடரும் மோதல்:


நடத்தை நெறிமுறைகளால் மக்கள் நலப் பணிகள் தடைபடுவதாக முதல்வர் கருணாநிதி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, நலத் திட்டப் பணிகளை அமைச்சர்கள் பார்வையிடவும், அரசு வாகனங்களைப் பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது. இந்த நிலையில், பள்ளித் தேர்வு முடிவு தேதியை தங்களை கலந்து ஆலோசிக்காமல் பள்ளிக் கல்வித் துறை தன்னிச்சையாக அறிவித்துள்ளது என்ற அந்தத் துறை அமைச்சரின் திடீர் புகாரால் கல்வித் துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெயர் - “கெட்-அப்”பை மாற்றி சென்னையில் 7 வருடம் வேலை பார்த்த ஜான் டேவிட்: ஆஸ்திரேலியா தப்பி விட்டதாக வதந்தியை பரப்பினார்.


பெயர்,“கெட்-அப்”பை மாற்றி சென்னையில் 7 வருடம் வேலை பார்த்த ஜான் டேவிட்: ஆஸ்திரேலியா தப்பி விட்டதாக வதந்தியை பரப்பினார்

சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமியின் மகன் நாவரசு கடந்த 1996-ம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபோது துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அதே பல்கலைக்கழகத்தில் படித்த சீனியர் மாணவரான ஜான் டேவிட் இக்கொடூர கொலையை செய்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

இக்கொலை வழக்கில் கடலூர் செசன்சு கோர்ட்டு ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜான் டேவிட் மேல் முறையீடு செய்தார். இதனை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த 2004-ம் ஆண்டு ஜான் டேவிட்டுக்கு விதித்த இரட்டை ஆயுள் தண்டனையை ரத்து செய்தது.

இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஜான் டேவிட்டுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை செல்லும் என்றும், ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்வதாகவும் பரபரப்பான தீர்ப்பை கூறியது. ஜான் டேவிட்டை உட னடியாக கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியிருந்தனர்.

ஜான் டேவிட்டை பிடிக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னிஸ் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. நடராஜன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், ராமநாதன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் ஜான் டேவிட்டை பிடிக்க தமிழகம் முழுவதும் வலை விரித்தனர். அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன.

ஜான் டேவிட் சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நேற்று முன்தினம் சென்னை வந்தனர். அடையாறில் அவர் தங்கி இருந்த இடம், வேலை செய்த நிறுவனம் ஆகியவற்றை சுற்றி வளைத்தனர். போலீஸ் பிடி இறுகியதால் வேறு வழியின்றி கடலூர் மத்திய சிறையில் நேற்று மாலை ஜான் டேவிட் சரண் அடைந்தார். உடனடியாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 2004-ம் ஆண்டு தனக்கு விதிக்கப்பட்டிருந்த இரட்டை ஆயுள் தண்டனை ரத்து செய்யப்பட்டதும் கடலூர் சிறையில் இருந்து ஜான் டேவிட் விடுதலையானார். அப்போது அவர் நீண்ட தலைமுடி, தாடி, மீசையுடன் காட்சி அளித்தார். அதன் பிறகு அவர் பாதிரியாராக மாறி விட்டதாகவும், ஆஸ்திரேலியாவில் குடியேறி விட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இதன் பிறகு ஜான் டேவிட் பற்றி எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை.

ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவில் குடியேறி விட்டதாக வெளியான தகவல்கள் வதந்தி என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஜான் டேவிட் மற்றும் அவரது குடும்பத்தினர் திட்டமிட்டே இதனை பரப்பியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் ஜான் டேவிட் என்ற பெயருடனும், தமிழகம் முழுவதும் தெரிந்த அதே முகத்துடனும் வெளியில் சுற்ற முடியாது, பொது மக்களுடன் இணைந்து வாழ முடியாது என்பதை அவர் உணர்ந்தார்.

தனது “கெட்-அப்”-ஐ மாற்றி புது வாழ்க்கையை தொடங்க ஜான் டேவிட் திட்டமிட்டார். அதன்படி, தனது தாடி- மீசையை எடுத்த ஜான் டேவிட், தலையில் தொப்பி, அணிந்து கண்ணாடி போடத் தொடங்கினார். பின்னர், சென்னைக்கு வந்த அவர் வேளச்சேரியில் உள்ள தனியார் பி.பி.ஓ. நிறுவனத்தில் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் வேலையில் சேர்ந்தார். இப்பணியில் சேர ஜான் டேவிட்டின் நுனி நாக்கு ஆங்கிலம் பெரிதும் உதவி உள்ளது.

அடையாறு வால்மீகி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஜான் டேவிட் குடியேறினார். அவரது தந்தை மாரிமுத்து, தாய் எஸ்தர் லட்சுமி ஆகியோர் மட்டும் அடிக்கடி சென்னை வந்து அவரை பார்த்துச் சென்று உள்ளனர்.

கடந்த 7 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஜான் டேவிட் அங்கு நல்ல பிள்ளையாக பெயர் எடுத்துள்ளார். ஜான் மாரிமுத்து என்றும் தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.

கடந்த 20-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளிவந்த நாளில் இருந்து ஜான் டேவிட் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். பாஸ்போர்ட் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைக்கு பின்னர் ஜான் டேவிட் வெளிநாடு செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட போலீசார், அவர் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருவதை முதலில் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து ஜான் டேவிட்டை கைது செய்ய தனிப்படையினர் கடந்த 2 நாட்களாக சென்னையில் முகாமிட்டிருந்தனர். அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் சென்று விசாரணை நடத்தினர். அங்கிருந்த டேவிட்டின் போட்டோவும், போலீசார் வசமிருந்த போட்டோவும் ஒன்றாக இருந்தது.

இதையடுத்தே ஜான் மாரிமுத்து என்ற பெயரில் பணிபுரிந்து வருவது ஜான் டேவிட்தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். சென்னையில் வைத்து ஜான் டேவிட்டை எப்படியும் கைது செய்துவிட வேண்டும் என்று போலீசார் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் அதற்குள் அவர் உஷாராகி சரண் அடைந்து விட்டார். இதற்கிடையே ஜான் டேவிட்டின் வக்கீல் ஆறுமுகராஜ் கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுதாக்கல் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வெளிப்படையான ஊழல் வெட்கக்கேடானது : அத்வானி குற்றச்சாட்டு.

மத்திய அரசின் வெளிப்படையான ஊழல் வெட்கக்கேடானது; அத்வானி குற்றச்சாட்டு

2008-ம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எம்.பி.க்களுக்கு வெளிப்படையாகவே லஞ்சம் கொடுத்தது முதல் மத்திய அரசின் அனைத்து ஊழல்களும் வெட்கக் கேடானவை என பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார். பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, இணைய தளத்தில் தன்னுடைய பிளாக் பக்கத்தில் அவ்வப்போது அரசியல் விமர்சன கட்டுரையை எழுதி வருகிறார். நாடு முழுவதும் ஊழலுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்துள்ள நிலையில், சமீபத்தில் ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார்.

அந்த கட்டுரையில் அத்வானி கூறியுள்ளதாவது:-

2004-ம் ஆண்டு மே மாதம் முதல் நாட்டின் பிரதமராக மன்மோகன் சிங் இருந்து வருகிறார். 2008-ம் ஆண்டு ஜுலை மாதத்தில் தான் மிக தீவிரமான கட்டத்தை அவர் எதிர் நோக்கினார். பெரும்பான்மையை இழந்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக எம்.பி.க்களை வெளிப்படையாகவே விலைக்கு வாங்கியது மிகவும் வெட்கக் கேடான செயலாகும். அப்போது, தங்களுக்கு அளித்த பணத்தை பாராளுமன்றத்திலேயே பா.ஜனதா எம்.பி.க்கள் கொண்டு வந்து கொட்டினார்கள். இதை, `விக்கிலீக்` இணைய தளமும் தற்போது வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. சதீஷ் சர்மா வீட்டில் இரண்டு பெட்டி நிறைய அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.60 கோடி பணத்தை அமெரிக்க தூதரக அதிகாரியை அழைத்து வந்து காட்டி இருக்கின்றனர். அதை விக்கி லீக் அம்பலப் படுத்தியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது ஆட்சியில் போலவே, இரண்டாவது ஆட்சியிலும் ஊழல்கள் தொடருகின்றன. மன்மோகன் சிங் அரசின் தொடர்ச்சியான ஊழல்களும், சுப்ரீம் கோர்ட்டின் கிடுக்கிப்பிடி கேள்விகள் மற்றும் கண்டனங்களும் நாள் தோறும் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாகின்றன.

ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுஉலையில் நிகழ்ந்த கதிர்வீச்சு சம்பவத்துக்கு பிறகும் அதில் இருந்து பாடம் படிக்க மத்திய அரசு மறுக்கிறது. மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர்கள் அனைவருமே பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி எதுவும் பேசுவதில்லை. மாறாக, புதிய அணுமின் உலைகள் அமைப்பது பற்றிய பாதையிலேயே செல்கின்றனர். மராட்டிய மாநிலம் ஜெய்தாபுரில் அணுமின் நிலையத்தை அமைப்பதில் சுற்றுச் சூழல் மந்திரி ஜெய்ராம் ரமேஷ் பிடிவாதம் காட்டுகிறார். ஜப்பானில் ஏதாவது சுற்றுச் சூழல் ஆர்வலர் எச்சரிக்கை விடுத்திருந்தாலும் இந்த சம்பவம் நிகழ்ந்து இருக்காது. பூகம்ப அபாய பகுதியில் அந்த அணுமின் நிலையம் அமைந்திருக்கிறது.

இதை எதையும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கருத்தில் கொள்ளவில்லை. அமெரிக்க அணுமின் நிறுவனங்களின் வர்த்தக நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகிறது.

இவ்வாறு அத்வானி குறிப்பிட்டுள்ளார்.