Monday, April 25, 2011

தமிழனாய் ஒன்றிணைந்து செயல்படுவோம்: காட்பாடியில் சீமான் பேச்சு.

தமிழனாய் ஒன்றிணைந்து செயல்படுவோம்: காட்பாடியில் சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சியின் வேலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.

கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆந்திரா, கேரளாவில் சாதி கட்சிகள் இல்லை. தமிழ்நாட்டில் தான் சாதி கட்சிகள் உள்ளது. அவர்கள் தமிழன் என்ற தேசிய இனத்தை சாதி என்ற பெயரில் கூறு போடுகிறார்கள். ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் கருணாநிதி வீட்டில் போய் நிற்காமல் தனியாக நின்று இருந்தால் சீமானுக்கு இந்த வேலையே இருந்து இருக்காது நானும் அவர்களுடன் சேர்ந்து இருப்பேன்.

தமிழர்கள் கொன்று குவிப்பு இலங்கையில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அது நடந்து ஒரு ஆண்டு கூட ஆகவில்லை. அப்படி இருந்தும் இந்த தேர்தலில் தமிழர் இனத்தை பற்றி ஒரு தலைவர் கூட பேசவில்லை. இனத்தை கொன்ற சோனியா அருகில் போய் அவர்கள் நிற்கின்றனர். தமிழ்நாட்டின் வரலாற்று எதிரி காங்கிரஸ். இந்த காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்ற காரணத்துக்காகதான் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள் கூறினேன்.

ஜெயலலிதாவை முதல்வர் ஆக்குங்கள் என்று நான் கூறவில்லை தமிழக மீனவர்கள் 554 பேர் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் நம்முடைய எதிரி நாடு. ஆனால் அவர்கள் யாரும் எல்லை மீறி வந்துவிட்டார்கள் என நம் மீனவர்களை கொல்ல வில்லை. இலங்கை அடிமை நாடு அவர்கள் நம் மீனவர்களை சுட்டு கொல்கின்றனர்.

ராஜபக்சேவுக்கு இந்தியா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கிறது. தேசிய கட்சிகள் நமக்கு தேவை இல்லை. மக்கள் தமிழர் என்ற தேசிய உணர்வுடன் இருக்க வேண்டும். சாதிக்குள் இருந்து கொண்டே சாதியை ஒழிக்க முடியாது. தமிழர் என்ற அடையாளத்தின் கீழ் அனைவரும் இணையும் போது தான் சாதி ஒழியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments: