Sunday, April 17, 2011

இலங்கை தூதரகம் முன்பு நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.


இலங்கை அரசை கண்டித்து சென்னையில் நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

தமிழக மீனவர்கள் நான்கு பேர் உயிரிழந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு நாளை காலை 10 மணிக்கு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார்.


தமிழக மீனவர்களின் உயிருக்கு உத்திரவாதம் - சோனியாவின் வாக்குறுதி காதுகளில் எதிரொலிக்கிறது.


ராஜபக்சே கொலைப் படையை தமிழக மீனவர்கள் மீது ஏவியுள்ளார் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற எம் தாய்த்தமிழ் உறவுகள் விக்டர், அந்தோணிராஜ், ஜான்பால், மாரிமுத்து ஆகிய 4 மீனவர்கள் இன்று நம்மிடம் இல்லை. இதுவரை 3 மீனவர்களின் உடல்கள், கை, கால்கள் துண்டிக்கப்பட்டு முகம் சிதைந்த நிலையில் நமக்கு கிடைத்திருந்தது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள புதுக்குடியில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் கடலுக்குள் அழுகிய நிலையில் நேற்று தலை இல்லாத நிலையின் மீனவர் மாரிமுத்துவின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஓட்டு கேட்க வந்தபோது இனி ஒரு தமிழ் மீனவரின் உயிரும் பறிக்கப்பட மாட்டாது என்ற சோனியாவின் வாக்குறுதிகள் இன்னும் நம் காதுகளில் எதிரொலிக்கின்ற நிலையில் இப்பொழுது கொலை செய்யப்பட்டுள்ள 4 மீனவர்களின் உறவினர்களின் ஒப்பாரி நம் தேசமெங்கும் கேட்பாரற்று எதிரொலிக்கிறது.

நேற்று இதேபோல மீன் பிடிக்கச் சென்று அத்துமீறி நுழைந்த 22 இந்திய மீனவர்களை எதிரி நாடு என்று சொல்லப்படும். பாகிஸ்தான் அரசு சட்டப்படி கைது செய்துள்ள நிலையில் நட்பு நாடு என்று இவர்களால் சொல்லப்படும் இலங்கை அரசோ நம் நாட்டு எல்லையில் மீன் பிடித்த 4 தமிழ் மீனவர்களைக் கொலை செய்துள்ளது.

இங்கு கிரிக்கெட் பார்க்க வந்து இந்தியாவிடம் தோல்வியை சந்தித்த ராஜபக்சே அதனைச் சகிக்காமல் கொலைப் படையை தமிழக மீனவர்கள் மீது ஏவியுள்ளார்.

ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம், கண்டன ஊர்வலம், உண்ணாவிரதம் என நம் போராட்ட வழிமுறைகள் தொடரும் நிலையில் சிங்கள அரசால் தமிழக மீனவர்களின் படுகொலைகளும் நிற்காமல் தொடருகின்றன. இதற்கு என்ன தான் தீர்வு?

தனது உறுதிமொழியை மீறி மீனவர்களைக் கொன்ற இலங்கையின் மீது இந்தியா போர் தொடுக்குமா? அல்லது குறைந்தபட்சம் பொருளாதா ரத்தடை விதிக்குமா?

இது நடைபெறாத நிலையில் நம் மீனவர்கள் அவர்களின் பாதுகாப்புக்கு யாரையும் நம்பாமல் அவர்களே காத்துக்கொள்ளும் நிலை நோக்கி செல்லத் தொடங்கும் பயணத்தை எடுத்து வைப்பார்கள். என்று தெரிவித்துள்ளார்.



சகாயம் அதிரடி : மதுரை மேற்கு தொகுதியில் மறுதேர்தல் நடத்தப்படுமா?


மதுரையில் சட்டமன்ற தேர்தலையொட்டி 10 தொகுதிகளிலும் தேர்தல் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை அறியவும், கண் காணிக்கவும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் தீவிர சோதனை நடத்தி மதுரை மாவட்டத்தில் ரூ.4 கோடி வரை பறிமுதல் செய்தனர்.

மேலும் தொகுதிகளில் பணம் பட்டுவாடா செய்ய முயன்ற போது பல லட்சங்கள் கைப்பற்றபட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட நேரு நகரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் தேர்தல் அதிகாரி ஜெய்சிங் ஞானதுரை தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு ஒரு கார் நின்று கொண்டு இருந்தது. அந்த காரில் இருந்த ஒருவரிடம் அதிகாரிகள் விசாரித்தபோது அப்பள வியாபாரி என்றும், எந்த கட்சியையும் சாராதவர் என்றும் கூறி முன்னுக்குபின் முரணான தகவல்களை கூறினார். இதனால் அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே காரை சோதனையிட்டனர்.

அப்போது அதில் 40 பக்க கணக்கு வழக்குகள் அடங்கிய லிஸ்ட் இருந்தது தெரியவந்தது. அதை அதிகாரிகள் ஆய்வு செய்த போது மேற்கு தொகுதிக்குட்பட்ட 4 வார்டுகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவரங்கள் எழுதப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதில் ரூ.81 லட்சத்து 20 ஆயிரத்து 400 பட்டுவாடா செய்யப் பட்டதாக தெரிய வந்தது.

இதில் 65-வது வார்டுக்கு ரூ.16 லட்சத்து 35 ஆயிரமும், 66-வது வார்டுக்கு ரூ.18 லட்சத்து 96 ஆயிரத்து 200-ம், 67-வது வார்டுக்கு ரூ.21 லட்சத்து 11 ஆயிரத்து 800-ம், 69-வது வார்டுக்கு ரூ.24 லட்சத்து 41 ஆயிரத்து 400-ம் ஒதுக்கப்பட்டு இருந்தது இந்த லிஸ்ட் மூலம் தெரியவந்தது. இதில் ரூ.60 லட்சத்தை வார்டு வாரியாக வாக்காளர்களுக்கு விநியோகம் செய்த கணக்கு வழக்குகளும் அந்த லிஸ்டில் எழுதப்பட்டு இருந்தது.

கைப்பற்றப்பட்ட லிஸ்ட் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேற்கு தொகுதியில் அந்த லிஸ்டில் குறிப்பிட்டபடி பணம் பட்டுவாடா செய்யப் பட்டுள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தமிழக தேர்தல் கமிஷன் மதுரை மாவட்ட கலெக்டரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளது.

இதுபற்றி மதுரை கலெக்டர் சகாயம்,

மதுரை மேற்கு தொகுதியில் சம்பவத்தன்று ஒரு காரில் இருந்த ஒரு நபரை சோதனையிட்டபோது அவரிடம் ஒரு டாக்குமெண்ட் கைப்பற்றப்பட்டது. அதில் எந்ததெந்த வார்டுக்கு எவ்வளவு பணம் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் குறிப்பிட்ட பணம் எவ்வளவு என்று கணக்கு பார்த்து வருகிறோம்.

இந்த ஆய்வுக்கு பிறகு இதன் அறிக்கையை தமிழக தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும். இதில் தவறு நடந்து இருந்தால் மேற்கு தொகுதிக்கு மறுதேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்யும். என்று கூறியுள்ளார்.

இலங்கையில் அரங்கேறிய பயங்கரங்கள்-ஐ.நா. குழு அறிக்கை 'லீக்'!

ஐ.நா: இலங்கையில் கடைசிக் கட்ட போரின்போது கொடூரமான கொலைகள், கற்பழிப்புகள் உள்பட மிக பயங்கரமான சர்வதேச மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக ஐ.நா. விசாரணைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2009ம் ஆண்டில் 4 மாதங்களில் பல்லாயிரணக்கான தமிழர்கள் கொத்து, கொத்தாக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அந்தக் குழு ஐ.நாவுக்கு பரிந்துரை செய்துள்ளது.

புலிகளுக்கு எதிரான கடைசி கட்ட போரில் நடந்த கொடூரங்கள் தொடர்பாக உலகெங்கும் கடும் கண்டனங்களும், இந்த விவகாரத்தில் ஐ.நா. அமைதி காத்தது தொடர்பாக எதிர்ப்பும் கிளம்பியதையடுத்து இது குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்தார் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன்.

இந்தக் குழு தனது அறிக்கையை பான்-கி-மூனிடம் சமர்ப்பித்துள்ளது. அதை இன்னும் அவர் வெளியிடாத நிலையில், அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் 'லீக்' ஆகியுள்ளன.

அதில், இறுதிக் கட்ட போரின்போது சர்வதேச சட்டங்களை இலங்கை அரசு காலில் போட்டு மிதித்துள்ளது. கண்மூடித்தனமான கொலைகள், கற்பழிப்புகள், மிருகத்தனமான கொடூரங்களை இலங்கை ராணுவம் அரங்கேற்றியுள்ளது. பொது மக்களும் அப்பாவி மக்களும் திரண்டிருந்த இடங்களில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதோடு, no-fire zones என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட பள்ளிகள், முகாம்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அமைதிப் பகுதிகளிலும் மிக பயங்கரமான ராணுவத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு ஏராளமான மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

ராணுவத் தாக்குதலில் இருந்து மக்கள் தப்பியோட முடியாத வகையில் அவர்களை விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தி மனித கேடயங்களாக பயன்படுத்தியுள்ளனர்.

இந்தக் கொடூரங்கள் வெளியுலகுக்குத் தெரிந்துவிடாத வண்ணம் பல வகையான அடக்குமுறைகளிலும் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. இந்தக் கொலைகள் குறித்து தகவல்கள் வெளியிட்ட பத்திரிக்கையாளர்களை அரசே கடத்திச் சென்றுள்ளது. அவர்களில் பலர் மாயமாகிவிட்டனர். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

முழு விசாரணை நடத்த ஆம்னெஸ்டி கோரிக்கை :

ஐ.நா. குழு வெளியிட்டுள்ள இந்தப் புகார்களை இலங்கை அரசு ஒதுக்கித் தள்ளிவிட்டு தப்பிவிட முடியாது என ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் அமைப்பு கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என அன்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் யோலாண்டா பாஸ்டர் கோரியுள்ளார்.

மின்சார நாற்காலி தண்டனைக்கும் தயார்-ராஜபக்ச :

இந்தப் புகார்களை இலங்கை அரசு வழக்கம்போல் மறுத்துள்ளது.

தேசத்துக்காக மின்சார நாற்காலி தண்டனை அளிக்கப்பட்டாலும் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

அதிபர் மாளிகையில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், 30 ஆண்டுகளாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டு வந்ததை தாங்க முடியாத சிலர் சர்வதேச அளவில் போலியான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

குறுகிய அரசியல் லாபத்துக்காகவே சிலர் தாய் நாட்டுக்கு எதிராக குற்றச் சாட்டுகளை கூறி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


சித்ராவின் மகள் நந்தனா உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி - படங்கள் .

பிரபல திரைப்பட பிண்ணனிப் பாடகி சித்ராவின் மகள் நந்தனா துபாயில் மரணமுற்ற செய்தியை அறிந்து நாம் மிகுந்த மனவேதனை அடைந்தோம். அவர் ஆன்மா அமைதியடைய வேண்டி பிரார்த்தித்தோம். நம்மைப் போலவே திரையுலகைச் சார்ந்த பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். அவற்றில் சில படங்கள் உங்கள் பார்வைக்கு..


















www.tamilcnn.com

'நீதிபதிகளை சில கோடிகள் கொடுத்தால் விலைக்கு வாங்கிவிடலாம்' - முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷண்.


ஊழலுக்கு எதிராக உருவாக்கப்படவுள்ள லோக் பால் மசோதா வரைவுக் குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உள்ள முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷண், 'நீதிபதிகளை சில கோடிகள் கொடுத்தால் விலைக்கு வாங்கிவிடலாம்' என்று கூறியதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக ஒரு ஆடியோ சிடி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அமர் சிங் (பின்னர் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார்) ஆகியோருடன் சாந்தி பூஷண் தொலைபேசியில் உரையாடுகிறார்.

அதில், நீதிபதிகளை லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கிவிட முடியும். எனது மகன் பிரசாந்த் பூஷண் (மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான இவரும் லோக் பால் மசோதா வரைவுக் குழுவில் உறுப்பினராக உள்ளார்) நினைத்தால் ரூ.4 கோடி வரை கொடுத்து நீதிபதிகளை விலைக்கு வாங்கிவிடுவார் என்று கூறுவது போல உரையாடல் பதிவாகியுள்ளது.

லோக் பால் மசோதா வரைவு தொடர்பான கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் நேற்று நடந்த நிலையில் இந்த சிடி சில மீடியா நிறுவனங்களுக்கு வந்து சேர்ந்தது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை சாந்தி பூஷண் மறுத்துள்ளார். இந்த சிடி தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி டெல்லி போலீஸில் அவர் மனு அளித்தார். நிருபர்களிடம் பேசிய சாந்தி பூஷண், நான் முலாயம் சிங் யாதவ், அமர் சிங்குடன் பேசியதே இல்லை. அந்த உரையாடலே பொய்யானது. அந்த சிடியை தடயவியல் சோதனைக்கு உள்படுத்தினால் உண்மை வெளிவரும். சிடி விவகாரத்தின் பின்னணியில் பலர் எனக்கும் எனது மகனுக்கும் எதிராக திட்டமிட்ட சதி இது என்றார்.

இது குறித்து அமர் சிங் கூறுகையில், சாந்தி பூஷண்-முலாயம் சிங் இடையே தொலைபேசி உரையாடலுக்கு நான் அப்போது ஏற்பாடு செய்தது உண்மை தான். ஆனால், அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியாது. அவர்கள் பேசியதை விட இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் எனது தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதைத் தான். எனது தொலைபேசி உரையாடல்கள் மீடியாக்களில் வெளியானபோது அதை தடை செய்யக் கோரி நான் வழக்குத் தொடர்ந்தேன்.

ஆனால், தடை விதிக்கக் கூடாது என்று வாதாடியவர் தான் பிரஷாந்த் பூஷண். இப்போது அதே டேப்கள் பூஷண்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளது என்றார். இதன்மூலம் இந்த சிடி உண்மையானது தான் என்பது போல கருத்துத் தெரிவித்துள்ளார் அமர் சிங்.

மேலும் இந்த சிடியை ஆராய்ந்த சில தடயவியல் நிபுணர்கள், இது உண்மையான சிடி தான் என்று கூறியுள்ளனர்.

அதே போல பிரஷாந்த் பூஷண் நிருபர்களிடம் கூறுகையில், அந்த சிடியில் உள்ளது எனது தந்தை சாந்தி பூஷணின் குரலாக இருக்கலாம். ஆனால், அதை முழுமையாக தடயவியல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றார்.

இந் நிலையில் இந்த சிடி தொடர்பாக டெல்லி போலீசார் ஒருவரைக் கைது செய்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அது தொடர்பான விவரங்களை வெளியிட அவர்கள் மறுத்துவிட்டனர்.


சர்வதேச மீன்பிடிக் கப்பல்களை கண்காணிக்க வேண்டும்: வைகோ.


மதிமுக பொதுச்செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மனிதர்களைத் தவிர உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் இனப்பெருக்கம் செய்ய பருவகாலங்கள் உண்டு . தமிழகத்தில் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் மே 29-ஆம் தேதி வரை 45 நாள்கள் மீன்களின் இனப்பெருக்கக் காலம். இதில் மீனவர்களுக்கு நன்மை இருப்பினும் இக்காலகட்டத்தில் விசைப்படகுகள், இழுவைப்படகுகளில் கடலுக்குள் சென்று மீன் பிடிக்கக் கூடாது.

இருப்பினும், கட்டுமரம், ஃபைபர் போட் மீனவர்களுக்கு இந்தத் தடை பொருந்தாவிடினும் கோடைக்காலங்களில் கடலில் திடீர் என்று ஏற்படும் சூறைக்காற்று மற்றும் புயல் காற்றால் கடலில் பெருமளவில் பாதிப்பு ஏற்படும்.

எனவே, ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி என 1,076 கி.மீ. பரந்துபட்ட கடலில் 45 நாள்கள் மீன்பிடிக்காததால் ஏற்படும் பொருளாதார இழப்பால் அவர்கள் படும் துயரம் அதிகம்.

வசந்தத்தை வரவேற்கும் சித்திரை முதல் நாளில் நெய்தல் நில மக்கள் வறுமையை வரவேற்பதாய் இந்த 45 நாள்கள் அமைகின்றது. ஆண்டின் 365 நாள்களில் இனப்பெருக்கக் காலம், புயல், மழைக்காலம், கடல் சீற்றம், கடல் பஞ்சம், பண்டிகை, திருவிழாக் காலங்கள் என்று போக மீதம் 150 நாள்கள்தான் மீன்பிடித் தொழிலில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக, அரசு அறிவித்துள்ள இந்த மீன்பிடித் தடைக்காலத்தில்தான் பள்ளி, கல்லூரிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பிக்கக் கட்டணம், கல்லூரிப் படிப்பு முடிந்தவர்களுக்குத் திருமணம், சித்திரை வெயிலின் தாக்கத்தால் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் ஏற்படும் நோய்கள் என்று அடுக்கடுக்காக செலவுகள் வந்துகொண்டே இருக்கும்.

45 நாள்கள் மீன்பிடி தடைக்காலத்தில் அரசு தரப்பில் தரப்படும் உதவித் தொகை என்பது விலைவாசி உயர்ந்துள்ள இக்காலகட்டத்திற்குப் போதுமானதாக இல்லை. குடும்ப அட்டையைக் கணக்கில் கொண்டு உதவித் தொகை வழங்கப்படுவதால் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தந்தை, மகன்கள் என்று கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் இதில் ஏமாற்றம் அடைகின்றனர்.

இதற்கு மாறாக மீனவர் கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்துள்ள மீன்பிடித் தொழில் செய்யும் ஆண்களுக்கும், மீன்களை விற்பனை செய்யும் பெண்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்.

விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை உறுதி திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ. 100/- வழங்குவதைப் போன்று மீனவர்களைப் பாரம்பரிய மீனவப் பழங்குடி இனத்தவராக அறிவித்து, குறைந்தபட்சம் 45 நாள்கள் வேலை உறுதித் திட்டத்தை உருவாக்கி நாள் ஒன்றுக்கு ரூ. 100 வீதம் 45 நாள்களுக்கு ரூ. 4,500 உதவித் தொகை வழங்குவது நன்மை பயக்கும்.

வட தமிழ்நாட்டில் மீன்பிடித் தொழிலில் குறைந்தபட்ச வருமானத்திற்கு உத்தரவாதம் இல்லை. தென் தமிழ்நாட்டில் கடலில் மீன்பிடிக்கச் சென்று உயிரோடு கரை திரும்புவோம் என்ற உத்தரவாதம் இல்லாத நிலையை சிங்கள ராணுவம் உருவாக்கியுள்ளது.

இதனால் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் திருமணமாகாத இளைஞர்களுக்குப் பெண் கொடுக்க மறுக்கும் நிலை உருவாகியுள்ளது.

மேலும் கடல் கடந்து பிற நாட்டுப் பட்டினங்களில் வாணிபம் செய்து செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்த பட்டினத்தவர்களான நெய்தல் நில மக்கள் இன்று பட்டினி கிடக்கும் நிலையும் உருவாகியுள்ளது. கடலாளிகளான பருவதராஜகுல மக்களுக்கு கடல் சொந்தமாக உள்ளதோ இல்லையோ, அவர்கள் கடனாளியாக உள்ளார்கள் என்பது மட்டும் உண்மை.

இந்த நிலை மாறி, மீன்பிடித் தொழிலை ஊக்குவித்திட இயற்கை முகத்துவாரங்கள் அருகில் மீன்பிடித் துறைமுகங்களை மத்திய - மாநில அரசுகள் அமைத்துத் தந்திட வேண்டும். முகத்துவாரம் இல்லாத பகுதிகளில் தேவைப்படும் இடங்களில் போதுமான தூண்டில் வளைவு மீன்பிடித் துறைமுகங்களை அமைத்துத் தர வேண்டும்.

கடலும் ஆறும் சேருகின்ற இயற்கை முகத்துவாரப் பகுதிகளில்தான் இறால், நண்டு போன்றவை இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால், தற்போது அப்பகுதிகளில் சாக்கடை நீர், ரசாயனம் கலந்த ஆலைக் கழிவு நீரால் மாசு அடைந்து இனப்பெருக்கம் தடைபடுகிறது. எனவே, இதை கருத்தில் கொண்டு நீர் மாசுபடாமல் இருக்க தூய்மைப்படுத்தப்பட்ட நீர் மட்டுமே முகத்துவாரம் வழியாக வந்து கடலில் கலப்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

இந்த 45 நாள்கள் மீன்பிடித் தடைக் காலங்களில் பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்கள் தடையை மீறி மீன் பிடிக்காமல் இருக்க கண்காணிப்பது மிகவும் அவசியம்.

ஊதியம் பெறாமல் பரந்துபட்ட 1,076 கி.மீ. கடல் எல்லையைப் பாதுகாத்து வரும் தமிழக மீனவர்களைப் பாதுகாப்பது மத்திய - மாநில அரசுகளின் கடமையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.


மம்தாவுக்கு 100 கோடி கறுப்பு பணம் : கம்யூனிஸ்டு குற்றச்சாட்டு.


மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் 5 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (18-ந்தேதி) நடக்கிறது. கடைசி கட்ட ஓட்டுப்பதிவு மே 10-ந்தேதி நடக்கிறது. ஆளும் இடதுசாரிக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தேர்தலில் மம்தா பானர்ஜி கறுப்பு பணத்தை பயன்படுத்துவதாக மம்தா பானர்ஜி மீது மாநில வீட்டு வசதித்துறை மந்திரி கவுதம் தேவ் குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம்,

தேர்தல் பிரசாரத்துக்காக மம்தா பானர்ஜி கறுப்பு பணத்தை பயன்படுத்துகிறார். தேர்தலுக்கு ரூ.100 கோடி செலவழிக்கப்படுகிறது. ஒரு வேட்பாளருக்கு ரூ.15 லட்சம் வீதம் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் 226 பேருக்கு ரூ.34 கோடி வழங்கப்படுகிறது.

மத்திய மந்திரி சூகுல்ராய் தேர்தல் பிரசாரத்துக்காக இதை வழங்கி உள்ளார். மம்தா பானர்ஜியின் மேற்பார்வையில் வழங்கப்பட்டுள்ளது. தன்னை ஊழலற்ற அரசியல்வாதி போன்று மம்தா காட்டிக் கொள்கிறார். விரைவில் தேர்தல் கமிஷனிடம் இது குறித்து புகார் கூறப்படும். இதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது.

இதேபோல டெலிவிசனில் விளம்பரம் செய்வதற்கு திரிணாமுல் காங்கிரஸ் ரூ.20 கோடி முதல் ரூ.30 கோடி வரை செலவழித்துள்ளது. ரூ.10 கோடியில் 2 ஹெலிகாப்டர் வாங்கப்பட்டுள்ளது’’ என்று உள்ளார்.


மின்சார நாற்காலி தண்டனையையும் மகிழ்சியாக ஏற்றுக்கொள்வேன்: ராஜபக்சே.


இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று அதிபர் மாளிகையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, 30 ஆண்டுகளாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டு வந்ததை தாங்க முடியாத சிலர் சர்வதேச ரீதியில் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகிறார்கள்.

குறுகிய அரசியல் லாபத்துக்காகவே சில தரப்பினர் தாய் நாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

தேசத்துக்காக மின்சார நாற்காலி தண்டனை அளித்தாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்


தேர்தலில் இதுவரை இல்லாத அளவு வாக்குப்பதிவு ஏன்?


இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குகள் பதிவானது ஏன்? என்பதற்கு முன்னாள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும், இந்த தேர்தலில் 78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இது, கடந்த 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளைவிட 5 சதவீதம் அதிகம். 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவைவிட 7 சதவீதம் கூடுதல் ஆகும்.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததால் அதிகளவு வாக்குகள் பதிவாகின. அதைப்போல இல்லாமல், இந்த தேர்தலில் வாக்காளர்களின் ஆர்வம் மற்றும் உயர் நடுத்தர மக்கள் ஆர்வமாக வந்து ஓட்டுப்போட்டதே அதிக வாக்குப்பதிவிற்கு காரணம் என்று தெரிகிறது.

கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து 5 ஆண்டுகளாக வாக்காளர் பட்டியலை சரிபார்த்து புதிதாக பெயர் சேர்க்கப்பட்டதும் காரணமாக இருக்கலாம். கடந்த தேர்தல்களைவிட இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது குறைவுதான்.

உள்ளூர் போலீசாரின் செயலற்ற தன்மை, ஆள்பலம், வேட்பாளரின் செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் வாக்காளருக்கு பணம் கொடுப்பது தொகுதிக்கு தொகுதி வேறுபடுகிறது. இருந்தபோதிலும், தேர்தல் கமிஷன் மற்றும் மாநில தேர்தல் அலுவலகம் எடுத்த உறுதியான நடவடிக்கையால் பணம் கடத்தப்படுவதும், பண விநியோகமும் தடுக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தமிழ்நாட்டில் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அதனால்தான் பண பட்டுவாடாவை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்காமல், அதை ஒரு சவாலாக எடுத்து அதைத் தடுக்க தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த தேர்தலில் வேட்பாளரின் செலவை கண்காணிக்கவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும் ஏராளமான துணை ராணுவத்தினரும், வருமானவரித்துறை அதிகாரிகளும் பணி அமர்த்தப்பட்டனர். இதன்காரணமாக கணக்கில் காட்டப்படாத ரூ.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

யாருக்கும் ஓட்டுப்போட விருப்பம் இல்லாத வாக்காளர்கள், வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருக்கும் பதிவேட்டில் 49ஓ என்று எழுதி கையெழுத்திட வேண்டும். இதுபற்றி தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நாளிதழ்களிலும் விளம்பரம் செய்யப்பட்டது.

மேலும், வாக்குச்சாவடிகளின் வெளிப்பகுதியில் அதுகுறித்த நடைமுறை விவரங்கள் அடங்கிய சுவரொட்டியும் ஒட்டப்பட்டிருந்தது.

49ஓ பற்றி வாக்காளர்களுக்கு அதிக விழிப்புணர்வு இருந்தது. ஆனால், பெரும்பாலான வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு 49ஓ பற்றிய நடைமுறைகள் தெரியவில்லை.

கடந்த தேர்தலில் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையுடன் ஓட்டுப்போட்டதாகவும், இந்த தேர்தலில் வாக்களிக்க சென்றபோது வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று கூறி ஓட்டுப்போட அனுமதிக்கவில்லை என்றும் ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் கூறி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், ஜனவரி மாதங்களில், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

அந்த காலகட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், திருத்தம் செய்தல் போன்றவற்றை செய்வதற்காக அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதன்பிறகு அந்த மாற்றங்கள் செய்யப்பட்டு, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளதா? இல்லையா? என்பதை தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் ஆண்டு திருத்தம் செய்யும் பணியை செப்டம்பர் அல்லது ஆகஸ்டு மாதம் மத்தியில் தொடங்கிவிட வேண்டும். அவ்வாறு செய்தால், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தல், கம்ப்யூட்டரில் வாக்காளர் விவரங்களை பதிவு செய்தல், வீடு, வீடாகச் சென்று விவரங்களை சரிபார்த்தல், திருத்தத்திற்கான உத்தரவு பிறப்பித்தல், வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை இடம்பெறுவதை தவிர்த்தல், வாக்காளர் பட்டியலை அச்சிடுதல் ஆகிய அனைத்துப் பணிகளையும் முடித்து வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு 4 அல்லது 41/2 மாதங்கள் காலஅவகாசம் கிடைக்கும். இரண்டாவதாக, ஆன்-லைனில் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியையும் முன்கூட்டியே முடித்துவிட வேண்டும்.

வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் சரிபார்க்கும் பணியில் குடியிருப்போர் நல சங்கத்தினர், சமூக சேவை அமைப்பினரையும் ஈடுபடுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். வீடு, வீடாகச் சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்க்கும்போது, மேற்கண்ட அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களது பிரதிநிதிகளை அனுப்பி, வாக்காளரை அடையாளம் காணவும், விண்ணப்பத்தை வழங்கிடவும், வயது, முகவரி தொடர்பான ஆவணங்களையும், புகைப்படத்தையும் வாங்குவதற்கும் உதவியாக இருப்பார்கள். இத்தகைய தனியார்-அரசு கூட்டு முயற்சி திட்டத்தை, பெங்களூர் நகரில் உள்ள ஒரு தொகுதியில் வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார்கள்’’ என்று கூறினார்.


49-ஓ - வுக்கு நல்ல வரவேற்பு : நரேஷ்குப்தா.


தமிழகம் முழுவதும் ஏறக்குறைய 26000 வாக்குகள் 49 ஓ-விற்கு கிடைத்துள்ளது.

"49 ஓ' குறித்து தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கருத்து தெரிவித்துள்ளார்.

அவர், ‘சட்டசபை தேர்தலில், 78 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. கடந்த 2006ம் ஆண்டு நடந்த தேர்தலை விட, 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஒவ்வொருவரும், ஓட்டளிப்பது ஜனநாயக கடமை என்பது வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலில், யாருக்கும் ஓட்டு போட விரும்பவில்லை என்கிற, "49 ஓ' பிரிவு, குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

வாக்காளர்களுக்கு செய்தித்தாள், ஓட்டுச்சாவடி ஆகியவற்றில் "49 ஓ' பிரிவு குறித்து விளம்பரப்படுத்தப்பட்டது.

தேர்தல் கமிஷனின், இந்த நடவடிக்கையால், தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் மத்தியில், "49 ஓ' பிரிவு குறித்து மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.


பாகிஸ்தான் கடற்படையால் 22 இந்திய மீனவர்கள் கைது.


22 இந்திய மீனவர்கள் பாகிஸ்தானியை கடற்படை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகவும், அவர்களுடைய பகுதியில் மீன் பிடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 7 படகுகளையும் பாகிஸ்தான் கடற்படை கைப்பற்றியுள்ளது.

மீனவர்கள் அனைவரையும் கராச்சி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி. - புதிய பணி நியமனம்.


இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை உதவி கமிஷனர் மற்றும் மருத்துவ அதிகாரி பதவிகளில் 21 காலி இடங்கள் டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும்.

தமிழக அரசின் வெவ்வேறு துறைகளுக்கு தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.

இதற்காக குரூப்-1, குரூப்-2, குரூப்-4 என்ற பல்வேறு நிலைகளில் போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப்-1, குருப்-2 நிலையிலான போட்டித்தேர்வுகளை பட்டதாரிகள் எழுதலாம். இதேபோல், குரூப்-4 தரத்திலான தேர்வுகளை எழுத 10-ம் வகுப்பு தேர்ச்சியே போதுமானது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அதிகாரி பணி இடங்களை நிரப்ப போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நடத்தப்பட்ட குரூப்-2 தேர்வுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டு, எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண்ணும் வெளியிடப்பட்டுள்ளன. இறுதி தேர்வுபட்டியல் மே மாதம் முதல் வாரத்தில் வெளியாகும்.

இந்த நிலையில், புதிய பணி நியமனம் பற்றிய அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்பட உள்ளது. அதன்படி, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் 9 உதவி கமிஷனர் பணி இடங்களும், பொது சுகாதாரத்துறையில் 12 மருத்துவ அதிகாரி இடங்களும், கால்நடை மருத்துவ துறையில் 6 பால்வள உதவியாளர் பணி இடங்களும் டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.

இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் பதவிக்கு பி.எல். பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க எம்.பி.பி.எஸ். பட்டதாரிகள் தகுதியுடையவராவர்.

இந்த அறிவிப்புகளை தொடர்ந்து, இளநிலை உதவியாளர், தொழிலாளர் உதவி கமிஷனர், மாவட்ட கல்வி அதிகாரி, ஆவண காப்பக உதவி ஆசிரியர் என்று அடுத்தடுத்து பல்வேறு பணி நியமனங்கள் வர இருக்கிறது.


திருப்பதிக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்கும் வழிமுறைகள்..


தமிழகத்தில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்க இருப்பதால், பொதுமக்கள் திருத்தலங்களுக்கு சுற்றுலா செல்ல தொடங்குவர். அதிலும் திருமலை திருப்பதி கோயிலுக்கு வருவோரின் எண்ணிக்கை மிக அதிகமாகும்.

அவ்வாறு திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு பயன்படும் வகையில் ஏழுமலையானை தரிசிக்க உள்ள வழிமுறைகளை பற்றிய விவரம்:

திருமலையில் திவ்ய தரிசனம், இலவச தரிசனம், சுதர்ஸன தரிசனம் மற்றும் சிறப்பு நுழைவு தரிசனம் ஆகிய தரிசனங்கள் நடைமுறையில் உள்ளன. இது தவிர கட்டண சேவை முறையும் உண்டு.

திவ்ய தரிசனம்: இது திருப்பதியிலிருந்து நடைபாதை வழியாக நடந்து வருபவர்களுக்கு இலவசமாக கோயில் நிர்வாகத்தால் அளிக்கப்படும் தரிசனமாகும். இதில் திருப்பதியிலிருந்து அலிபிரி வழியாகவும், சீனிவாச மங்காபுரத்திலுள்ள ஸ்ரீ வாரி படிக்கட்டுகள் என இரண்டு வழியாகவும் செல்லலாம்.

அதிகாலை 3 மணியிலிருந்து இரவு 10 மணி வரை பக்தர்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் நடைபாதையில் பாதி தூரத்தில் கோயில் ஊழியர்களால் வழிபாட்டிற்கு செல்வதற்கான சீட்டு வழங்கப்படும். அதனை எடுத்துச்சென்று திருமலையில் நடந்து வரும் பக்தர்கள் சிறப்பு வழியில் சென்று வழிபடலாம்.

இலவச தரிசனம்: திருமலையில் கட்டணம் ஏதும் இல்லாமல் பக்தர்கள் வைகுண்டம் 1 வழியாக இலவசமாக தரிசிக்கும் முறையாகும். இதில் பக்தர்கள் உள்ளே சென்ற உடன் அவர்களுக்கு அனுமதி அட்டை (அக்சஸ் கார்டு) வழங்கப்படும். இதில் தரிசன நேரம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. இந்த அட்டையை கொண்டு பக்தர்கள் காத்திருக்காமல் அதில் குறித்த நேரத்திற்கு வந்தால் போதுமானது.

சுதர்ஸன தரிசனம்: இந்த தரிசனம் ரூ. 50 செலுத்திச் செல்லும் தரிசனமாகும். இது திருப்பதி மற்றும் எல்லா நகரங்களிலுள்ள திருமலை திருப்பதி தகவல் மையங்களிலும் விவரங்களை அளித்து பெற்றுக்கொள்ளலாம்.

இதில் தரிசனத்திற்குச் செல்வதற்கான நேரம் குறிக்கப்பட்டிருப்பதால், அந்த நேரத்தில் சென்று வழிபடலாம்.

சிறப்பு நுழைவு தரிசனம்: இது ரூ. 300 செலுத்தி எந்த வித முன் பதிவுமின்றி வழிபாட்டிற்குச் செல்லும் முறையாகும். இம்முறையில் நேரடியாக திருமலையில் வந்து வரிசையில் நின்று டிக்கட் பெற்றுக்கொள்ளலாம்.

இது தவிர மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கோயிலின் எதிரே உள்ள வரிசையில் காத்திருந்தால், கோயில் ஊழியர்களால் மகா துவாரம் வழியாக வழிபாட்டிற்காக அழைத்துச் செல்லப்படுவர். இந்த முறை நாளொன்றுக்கு 4 முறை அனுமதிக்கப்படும். மேலும் 1 வருட கைக் குழந்தையை எடுத்து வரும் பெற்றோர் கோயிலின் அருகே உள்ள சுபதம் நுழைவாயில் வரிசையில் அனுமதிக்கப்படுவர்.

இது தவிர சில கட்டண சேவைகள் உள்ளன. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் திருமலையில் உள்ள விஜயா வங்கியில் சென்று கைரேகை மற்றும் அடையாள அட்டையைக் காட்டிப் பெற்றுக்கொள்ளலாம். இது குறிப்பிட்ட அளவு மட்டுமே வழங்கப்படும்.

மேற்கண்ட வழி முறைகளை பின் பற்றி திருமலையில் ஏழுமலையானை பக்தர்கள் வழிபடலாம். இதில் எந்த முறையில் சென்று வழிபட்டாலும் அவர்களுக்கு புகழ்பெற்ற பிரசாதமான இரண்டு லட்டுகள் கோயில் நிர்வாகத்தால் வழங்கப்படும்


குற்றம்சாட்டப்பட்ட நீதிபதிகளை பாதுகாக்கக் கூடாது.



ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நீதிபதிகளைப் பாதுகாக்கும் முயற்சிகளை யாரும் மேற்கொள்ளக் கூடாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா வலியுறுத்தினார்.

தில்லியில் சனிக்கிழமை நடந்த 5-வது எம்.சி.சீதல்வாட் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியது:

மிகவும் அவசியமான காரணங்கள் இருந்தாலன்றி, வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் ஆகியோருடன் தொடர்பு வைத்துத் கொள்வதை நீதிபதிகள் தவிர்க்க வேண்டும்.

கீழ்நீதிமன்றத்தின் நிர்வாக விவகாரங்களில் உயர்நிலையில் உள்ள நீதிபதிகள் தலையிடக்கூடாது. இப்படித் தலையிடும் உயர்நிலை நீதிபதிகளுக்கு சாதகமான நிலை ஏற்படாவிட்டால், கீழ் நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படவோ, அவர்களது பதவி உயர்வு மறுக்கப்படவோ வாய்ப்பு ஏற்படுகிறது. இது தடுக்கப்பட வேண்டும். அதுபோல ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நீதிபதிகளுக்கு அரசியல் ரீதியான பாதுகாப்பு வழங்கப்படக்கூடாது.

எந்த வகையான ஆதரவையும் முன்னுரிமை தரப்படுவதையும் நீதிபதிகள் ஏற்கக்கூடாது. ஓய்வுக்கு முன்பே வேறு பணிகளை ஒப்புக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும். இவைதான் ஊழலுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன பாரபட்சமற்ற, அச்சமில்லாத, சுதந்திரமான நீதி வழங்கும் அமைப்பின் அங்கமாக நீதிபதிகள் இருக்க வேண்டும். நீதி வழங்கும் பொறுப்பில் உள்ளவர்கள், சமூகத்தில் பிற பிரிவினருடன் கலந்து பழகுவதால், அவர்களது பணியில் பிறர் செல்வாக்குச் செலுத்த முடிகிறது என சந்தேகிக்கும் போக்கு அதிகரித்திருக்கிறது.

இப்படி சமூக ரீதியாகக் கலப்பதை நான் தவிர்த்துவிடுகிறேன். வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோருடன் பழக வேண்டியிருக்கும் என்பதால் கோல்ஃப் கிளப்புகளில் கூட நான் உறுப்பினராகச் சேரவில்லை.

நீதிபதிகள் மற்றும் தீர்ப்புகள் மீது ஊடகங்களும் மக்களும் முன்வைக்கும் விமர்சனங்கள் இப்போது வழக்கமான ஒன்றாகிவிட்டது. மற்ற பொது நிறுவனங்களைப் போலவே ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை நீதித்துறையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால் பொறுப்பற்ற விமர்சனங்கள் கவலையளிக்கின்றன என்றார் தலைமை நீதிபதி.

இந்த நிகழ்ச்சியில் பேசிய வேறு சிலர், ஊழல் குற்றம்சாட்டப்பட்டு விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் நீதிபதிகள் பி.டி.தினகரன், செமித்ர சென் ஆகியோரைக் குறிப்பிட்டனர்.

நீதிபதிகள் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாவது குறித்து மூத்த வழக்கறிஞர்கள் அனில் திவான், பி.பி.ராவ் ஆகியோர் கவலை தெரிவித்தனர்.