Wednesday, June 1, 2011

தப்பிப்பாரா தயாநிதி ?



அது குற்றமென்றால் இது என்ன? எனக் கேள்வி எழுப்புகிறது ஆங்கில புலனாய்வு இதழான தெஹல்கா. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் திகார் சிறையில் உள்ள ஆ.ராசா மீது சி.பி.ஐ. சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் முக்கியமானவை, 2001ஆம் ஆண்டுக்கான விலையிலேயே அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது என்பதும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பதும்தான்.

இந்த நடைமுறை, ஆ.ராசா வுக்கு முன் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் காலத்திலும் நடைமுறையில் இருந்தது என்பதை, நீதிபதி சிவராஜ் பாட்டீல் கமிஷனின் அறிக்கை தெளிவாகச் சுட்டிக்காட்டுவதால், தயாநிதி கையில் இத்துறை இருந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி சுழன்றடிக்கிறது .

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக 2001ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரையிலான நடைமுறைகளை விசாரிப்பதற்காக மத்திய அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான குழு அளித்துள்ள அறிக்கையில், ஒதுக்கீட்டு விதிமுறைகளை பல முறை தயாநிதி மாறன் மீறியிருக்கிறார்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இது போன்ற ஒரு விதிமீறல்களால் தயாநிதியின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. நிர்வாகம் 700 கோடி ரூபாய் பலனடைந்திருப்பது பற்றிய செய்தியை தெஹல்கா வெளியிட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்தபோது, 2004 மார்ச் 5-ம் தேதி , 8 ஏரியாக்களுக்கு யுஏஎஸ்எல் எனப்படும் உரிமம் கோரி சிவா குரூப் நிறுவனத்தின் சிவசங்கரனின் டிஷ்நெட் ஒயர்லெஸ் லிமிட்டெட் (ஏர்செல்) விண்ணப்பித்தது. அப்போது, தகவல் தொடர்புத்துறை அமைச்சராக அருண்ஷோரி இருந்தார். விண்ணப்பிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து, ஏழு ஏரியாக்களுக்கான உரிமங்களுக்கு கையெழுத்தானது. மத்தியபிரதேசம் மாநிலத்திற்குக் கோரப்பட்டிருந்த உரிமம் மட்டும் கையெழுத்தாகவில்லை.

2004 ஏப்ரல் 21-ந் தேதியன்று உ.பி. (கிழக்கு), உ.பி. (மேற்கு) பகுதிகளில் உரிமம் கோரி டிஷ்நெட் விண்ணப்பித்தது. இந்நிலையில், டிஷ்நெட் நிறுவனத்தின் மதிப்பு, அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்து 2004 மே 5-ந் தேதியன்று கேள்வி எழுப்பிய தொலைத் தொடர்புத்துறை, மத்தியபிரதேசத்திற்கான உரிமத்தையும், மற்ற பகுதிகளுக்காக போடப்பட்ட விண்ணப்பத்தையும் நிறுத்தி வைத்தது.

தே.ஜ.கூ. ஆட்சிக்குப்பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி அமைய, தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக 2004 மே 26-ந் தேதியன்று தயாநிதி மாறன் பொறுப் பேற்றார். ஜூன் மாதத்தில், தொலைத் தொடர்புத்துறை கேள்விகளுக்கு விரிவான பதிலைத் தாக்கல் செய்தது டிஷ்நெட் நிறுவனம். இதனைப் பரிசீலித்த தொலைத் தொடர்புத்துறை செயலாளர், உ.பி. மேற்கு- கிழக்கு பகுதிகளுக்கான விண்ணப்பம் குறித்தும் ம.பி. மாநிலத்திற்கான லைசென்ஸ் வழங்குவதற்கான அவகாசம் குறித்தும் ஒப்புதல் தெரிவிக்கும் திட்டத்தை முன் வைத்தார். இந்த திட்டம், அமைச்சர் தயாநிதி மாறன் முன்வைக்கப்பட்டது.

அவருடைய செயலாளர், 2004 மார்ச் 24 அன்று டிஷ்நெட் நிறுவனத்தின் நிதி நிலை மற்றும் ஈக்விட்டி குறித்து விளக்கம் கேட்டு நோட் போட்டார். அதற்கும் டிஷ்நெட் விரிவான விளக்கம் கொடுத்தது. இந்நிலையில், 2005 மார்ச் 1ஆம் நாள் ஹரியானா, கேரளா, கொல்கத்தா, பஞ்சாப் மாநிலங்களில் உரிமம் கேட்டு டிஷ்நெட் விண்ணப்பித்தது.

அதே மாதம் 30ஆம் நாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் ஒரு நோட் போட்டார். அதில், தொலைத்தொடர்பு அமைச்சருடன் (தயாநிதி) ஆலோசித்ததில், துறை சார்பிலான நோட்டீஸ்கள், அறி வுறுத்தல் கடிதங்களுக்கு உரிய பதிலளிக்கக் கோரி விண்ணப்பதாரரின் ஃபைல்கள் அனைத்தும் திருப்பி அளிக்கப் படுகின்றன என்று தெரிவித்திருந்தார். இதன்பின், எந்த முடிவுகளும் எடுக்கப்படாமல் டிஷ்நெட் நிறுவனத்தின் ஃபைல்கள்மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் அவை தொலைத் தொடர்புத்துறையின் பல பகுதிகளிலும் சுற்றியது.

அதே நேரத்தில், தொலைத்தொடர்புத்துறையில் அந்நிய முதலீட்டை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, அக்டோபர் 2005ஆம் ஆண்டில் மலேசியாவைத் தலைமையகமாகக் கொண்ட மேக்ஸிஸ் குரூப் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தை வாங்குவதற்காக சிவா குரூப் சிவசங்கரனை அணுகியது. அதே ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி, உரிமங்கள் வழங்குவதற்கான புதிய வழி காட்டுதல்களை தொலைத் தொடர்புத் துறை அறிவித்தது. இதன்மூலம் ஏற்கனவே இருந்த பல கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டன.

2005ஆம் ஆண்டு 30ஆம் நாள் ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனம் ஏற்பதாக கையெழுத்தானது. இதையடுத்து, ஏற்கனவே நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் தொலைத்தொடர்புத் துறையில் அவசரமாக பரிசீலிக்கப்பட்டன. அதன்பின் கர்நாடகா, ராஜஸ்தான், மும்பை, மகாராஷ்ட்ரா, டெல்லி, ஆந்திரா, குஜராத், என எல்லா மாநிலங்களுக்கும் உரிமம் கோரியது ஏர்செல். 2ஆண்டகளாக நிலுவையில் இருந்த பீகார், ஹிமாச்சல்பிரதேசம் மாநிலங்களுக்கான உரிமங்கள் ஏர்செல்லுக்கு வழங்கப்பட்டன.

2006ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதியன்று மத்தியபிரதேசம் உள்பட 14 சர்க்கிள் களுக்கு உரிமங்கள் வழங்குவது தொடர்பான கடிதம் அளிக்கப்பட்டு, 15 நாட்களில் அதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டன. இதற்காக 1,399,47 கோடி ரூபாயை செலுத்தி உரிமங்களைப் பெற்ற ஏர்செல் நிறுவனம், இந்தியாவின் முன்ன்னி செல்போன் நிறுவனமாக மாறியது.

இந்த உரிமங்கள் வழங்கப்பட்ட நான்கே மாதங்களில், அதாவது 2007 பிப்ரவரி மாதத்தில் அனந்தகிருஷ்ணனின் மேக்ஸிஸ் குரூப் நிறுவனத்தின், துணை நிறுவனங்களில் ஒன்றான சவுத் ஏசியா என்டர்டெய்ன்மென்ட் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனம், கலாநிதிமாறனின் சன் குரூப் நிறுவனத்தின் சன் டைரக்ட் டி.வி. பிரைவேட் லிமிடெட் - சன் டி.டி.ஹெச்சில் சுமார் 600 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. சன் எஃப்எம் ரேடியோ நெட்வொர்க்கில் சுமார் 100 கோடி ரூபாயை மேக்ஸிஸ் குரூப் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. ஆக 700 கோடி ரூபாயை சன் குரூப் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது இயல்பாக நடந்தவையா என தெஹல்கா பத்திரிகை கேள்வி எழுப்பியுள்ளது.

ஏர்செல் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அலைக்கற்றையின் மதிப்பு சுமார் 22,000 கோடி ரூபாய். ஆனால் அந்நிறுவனம் 1,399 கோடி ரூபாய் மட்டுமே செலுத்திப் பெறுகிறது. இதில் சுமார் 20,600 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

முதலில் வந்தவர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அலைக்கற்றைகள் ஒதுக்கப்பட்டன என்பது ராசா மீதுள்ள குற்றச்சாட்டு அதேபோலத்தான், ஏர்செல் நிறுவனத்திற்கும் தயாநிதிமாறனால் குறைந்த கட்டணத்தில் அலைக்கற்றைகள் ஒதுக்கப்பட்டன.

ஒதுக்கீட்டின் பிரதிபலன் என்ற கோணத்தில் பார்த்தால் ராசா மீதான வழக்கில் உள்ளவை அனைத்தும் தயாநிதிமாறனுக்கும் பொருந்துகிறது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

2ஜி விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. தனது 3வது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யவிருக்கும் நிலையில் சோனியாவை தயாநிதிமாறன் சந்தித்தது டெல்லி முதல் சென்னை வரை பரபரப்பை ஏற்படுத்தினாலும், தயாநிதி மேற்கொண்ட சரணாகதி படலம்தான் சோனியாவுடனான சந்திப்பு என்கிறது டெல்லி வட்டாரம்.

நன்றி - நக்கீரன்.

கேரள கோர்ட்டில் மாஜிஸ்திரேட் மீது ஷூ வீச்சு.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் எடக்கரா பகுதியைச் சேர்ந்தவர் பென்னி, 37. இவர், நிலம்பூரில், பூட்டிக்கிடந்த மரத் தொழிற்சாலையில் இருந்து, பல பொருட்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் மீதான வழக்கு விசாரணை, நிலம்பூர் முதல் வகுப்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் தினேஷ் முன்னிலையில் நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று, கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற இருந்தது. அதில் பங்கேற்க, சிறையில் இருந்து பென்னியை போலீசார் அழைத்து வந்தனர்.

கோர்ட்டில், சாட்சி கூண்டின் அருகே அவர் நின்று கொண்டிருந்தார்.அவரது வழக்கு, பல மாதங்களாக விசாரணை முடியாமல் இருந்து வந்ததால், ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

அன்றைய தினமும் அவருடைய வழக்கை முதலில் எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, வேறொரு வழக்கு விசாரணை முதலில் துவங்கியது.

ஏற்கனவே மெதுவாக நடந்து வரும் விசாரணையால், ஆத்திரத்தில் இருந்த பென்னி, தான் அணிந்திருந்த, "ஷூ'வை கழட்டி, மாஜிஸ்திரேட்டை நோக்கி எறிந்தார். ஆனால், இலக்கு தவறி, வேறொரு வழக்கு குறித்தான விசாரணை நடத்திக் கொண்டிருந்த வக்கீல் முனீர் என்பவரது பின்னந்தலையில் பட்டது.

இதை பார்த்து, கோர்ட்டில் இருந்த மாஜிஸ்திரேட் உட்பட அனைவரும், செய்வதறியாது திகைத்தனர். பென்னி ஓடி விடாதபடி போலீசார் அவரை சூழ்ந்து கொண்டனர். இச்சம்பவம், அங்கு சிறிது நேரத்திற்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

தயாநிதி-ஏர்செல் விவகாரம்: சிபிஐ விசாரணை ஆரம்பம்?


ஏர்செல் நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் வழங்கப்பட்டது குறித்தும், அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய மலேசிய நிறுவனம் சன் டிவி குழுமத்தில் முதலீடு செய்தது குறித்தும் சிபிஐ விசாரணையைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்த விவகாரத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனிடம் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்தவுள்ளதாகவும் தெரிகிறது.

முன்னதாக இது குறித்து தெகல்கா இதழில் வெளியான செய்திகளை மையமாக வைத்து தயாநிதி மாறனுக்கு பாஜக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. இது குறித்து அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறுகையில்,

2004ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்து வந்தார். அப்போது இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் வெளிநாட்டினர் முதலீடு செய்யும் விதிமுறைகள் மாற்றப்பட்டன. இந்திய நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை 24 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயரித்திக் கொள்ள அனுமதி தரப்பட்டது.

தமிழகத்தில் ஏர்செல் நிறுவனம் முதலில் ஒரு மண்டலத்தில் செயல்பட்டு வந்தது. பின்னர் இந்த நிறுவனத்துக்கு 14 மண்டலங்களில் சேவை வழங்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்த ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவை சேர்ந்த மாக்சிஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 74 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. ஏர்செல் நிறுவனத்திடம் இருந்து பங்குகள் வாங்கியதால் ஆதாயமடைந்த இந்த மாக்சிஸ் நிறுவனம் தனது மற்றொரு நிறுவனமான அஸ்ட்ரோ நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் முதலீடு முதலீடு செய்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது குறித்து தயாநிதி விளக்க வேண்டும்.

2ஜி ஊழல் விவகாரத்தில் கடந்த காலத்தில் பிரதமர் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்தது போல் இந்த விவகாரத்தில் நடந்து கொள்ளக்கூடாது. மீண்டும் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சனை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

இந்த விவகாரம் குறித்து தெகல்கா இதழ் வெளியிட்டுள்ள செய்தி அபாண்டமானது என்று அமைச்சர் தயாநிதி மாறன் ஏற்கனவே கூறி்யுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இது தொடர்பாக தெகல்காவுக்கு அவர் நோட்டீசும் அனுப்பியுள்ளார்.

இந் நிலையில் இந்த விவகாரத்தில் தயாநிதி மாறன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். அதே போல மாறனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜகவும் கோரியுள்ளது.

கருத்து கூற காங்கிரஸ் மறுப்பு:

இந் நிலையில் தயாநிதி மாறன் தொடர்பாக எழுப்பபடும் பிரச்சனைகளுக்கு பதிலளிக்க காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.

அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி நிருபர்களிடம் கூறுகையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்க மிகவும் பொருத்தமானவர் தயாநிதி மாறன்தான்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் விசாரித்து வருகிறது. பாஜக ஆட்சி உள்ளிட்ட கடந்த காலங்களில் தொலைத்தொடர்புக் கொள்கை பின்பற்றப்பட்ட விதம் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் அந்தக் குழு ஆய்வு செய்து வருகிறது.

எனவே தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது, ஏதேனும் முறைகேடுகள் நடந்திருந்தால் அவை குறித்தும் அக் குழு விசாரிக்கும். பாஜக ஆட்சியிலிருந்த 1999ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை தொலைத்தொடர்புத் துறையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க கூட்டுக் குழுவுக்கு நாடாளுமன்றம் அதிகாரம் அளித்துள்ளது என்றார்.

இந் நிலையில் இது குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு தயாநிதி மாறனை அழைத்து விசாரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து சிபிஐயும் விசாரிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் பாஜக உள்ளிட்ட எதி்ர்க் கட்சிகள் போர்க் கொடி உயர்த்தலாம் என்றும் தெரிகிறது.

இதற்கிடையே தயாநிதி-ஏர்செல் விவகாரம் குறித்து சிபிஐ அமைதியாக தனது விசாரணையை ஆரம்பித்துவிட்டதாகவும், தயாநிதி மாறனிடம் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் விசாரணை நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

வாஜ்பாய்க்கும் ஜேபிசி சம்மன்?:

இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பாஜகவையும் இழுக்க காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. அதன் ஒரு பகுதியாக பாஜக ஆட்சியில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் குறித்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரையும் சாட்சிகள் பட்டியலில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு சேர்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கும் சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரிக்கவும் காங்கிரஸ் எம்பி சாக்கோ தலைமையிலான இந்தக் குழு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

வாஜ்பாய் கடந்த சில வருடங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர அரசியலில் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்கும் அவருக்கு சம்மன் அனுப்ப திட்டமிட்டிருப்பது பாஜக தலைவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயகாந்த் பற்றி சுவையான சில குறிப்புகள்.

விஜயகாந்த்தின் நிஜப் பெயர் நாராயணன். அது தாத்தாவின் பெயர் என்பதால், விஜயராஜ் என வீட்டில் அழைக்கிறார்கள். சினிமாவுக்கு வந்த பின் டைரக்டர் எம்.ஏ.காஜா வைத்த பெயர் விஜயகாந்த். பின், அடுத்த படத்திலேயே டைரக்டர் விஜயன் அதை அமிர்தராஜ் என மாற்றியும் நிலைத்தது விஜயகாந்த்தான் !




வீட்டுப் பூஜை அறையில் மெக்கா மதீனா படங்களும், இயேசு, மேரி, மாதா, படங்களும், திருப்பதி வெங்கடாசலபதியும்,முருகனும்,பிள்ளையாரும் சிறப்பிடம் பெறுகிறார்கள். இப்பவும் மனசு சரி இல்லை என்றால், கண்ணூர் தர்காவுக்குப் போய் வழிபாடு செய்வார் விஜயகாந்த்!

ஐயப்பன் கோயிலுக்கு 18 வருடங்களாகச் சென்று வந்தவர், நடுவே பக்தர்கள் இவர் காலில் விழுந்து வணங்குவதைப் பழக்கமாகக்கொண்டவுடன், இப்போது கோயிலுக்கு செல்வது இல்லை !



எல்லாத் தம்பி, தங்கைகளுக்கும் திருமணம் செய்து கடமையை முடித்த போது விஜயகாந்த்துக்கு வயது 37 ஆகிவிட்டது. அதற்குப் பிறகுதான் அக்காவின் வற்புறுத்தலின் பேரில் பிரேமலதாவைக் கைபிடித்தார். விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் !




தமிழ் சினிமாவில் பெரும் சாதனையாக 1984 – ல் ‘மதுரை சூரன்’ முதல் ‘ஜனவரி 1’ படம் வரை 18 படங்களும் 1985 –ம் ஆண்டில் மட்டும் ‘அலை ஒசை’யில் ஆரம்பித்து ‘நானே ராஜா நானே மந்திரி’ வரை 17 படங்களும் ஹீரோவாக நடித்திருக்கிறார்.இந்தச் சாதனை வேறு எந்த ஹீரோவும் செய்யாதது !

அதே போல் எந்த நடிகரின் 100 வது படமும் அவ்வளவு பிரமாதமாக ஹிட் ஆனது கிடையாது
, அதறகு விதிவிலக்கு கேப்டன் பிரபாகரன்

பள்ளியில் படிக்கும்போது ஃபுட் பால் பிரமாதமாக விளையாடுவார். இப்போதும் ஃபுட்பால் வெறியர். இங்கிலாந்து வரை போய் நேரில் ஃபுட்பால் போட்டிகளைப் பார்த்து ரசிப்பார். அவரது மகன்களுக்கும் இப்போது ஃபுட்பால் பிரியம் வந்து விட்டது.

விஜயகாந்த் வில்லனாக நடித்த ஒரே படம்... ‘இனிக்கும் இளமை’ அதற்குப் பிறகு எல்லாமே ஹீரோ வேடம்தான் !

இதுவரை விஜயகாந்த் 152 படங்களில் நடித்திருக்கிறார். 153 – வது படம் அவரது டைரக்ஷனில் வருகிறது. இவ்வளவு நாள் ஃபில்டில் இருந்ததற்கு ஒரு படம் டைரக்ட் செய்தாக வேண்டும் என்பது அவரது விருப்பம் !

நடிகர் ராஜேஷின் தம்பி திருமணத்தில்தான் எம்.ஜி.ஆரோடு கைகுலுக்கிச் சந்தித்துப் பேசினார் விஜயகாந்த். அதை ஒருவரும் புகைப்படம் எடுக்கவில்லையே என்ற ஆறாத வருத்தம் விஜயகாந்த்துக்கு உண்டு !

‘செந்தூரப் பாண்டி’யில் விஜய்யோடு நடித்து, ‘பெரியண்ணா படத்தில் சூர்யாவோடு நடித்து அவர்களை பி அண்ட் சி-க்கு கொண்டு சேர்த்த பெருமை விஜயகாந்த்க்கு உண்டு. இதை விஜய்யே ஒரு விழா வில் ஒப்புக்கொண்டு இருக்கிறார் !

விஜயாகாந்த்தின் மூத்த மகன் பிரபாகரன் இன்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படிக்கிறார். இளையமகன் சண்முக பாண்டியன் +1 படிக்கிறார். இரண்டு பேருக்கும் சினிமாப் பக்கம் வரும் ஐடியாவே இல்லையாம். யாரிடமும் நாங்கள் விஜயகாந்த்தின் மகன் என்று அடையாளப்படுத்திக் கொள்வதை விரும்பாமல் பழகுவார்கள் !

வீட்டில் செல்லமாக ராக்கி, சீசர், டேனி என்ற மூன்று நாய்களை வளர்த்து வருகிறார். விஜயகாந்த்தின் மீது அன்பைப் பொழியும் செல்லங்கள் !

செயின் ஸ்மோக்கராக இருந்த விஜயகாந்த், திருமணத்துக்கு பிறகு அந்தப் பழக்கத்தை அறவே விட்டுவிட்டார். அசைவப் பிரியரான அவர், இப்போது அயிரை மீன் குழம்பைச் சாதத்தில் பிசைந்து சாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்கிறார்!

இதுவரை இரண்டே படங்களில் சிறு வேடங்களில் விஜயகாந்த்தாகவே வந்திருக்கிறார்.ஒன்று, ராமநாராயணன் அன்புக்காக ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’, அடுத்து டைரக்டர் பாலா கேட்டுக் கொண்டதற்கு இணங்க ‘மாயாவி’ !

கமல், ரஜினி போன்றவர்கள் விஜயகாந்த்தை ‘விஜி’ எனவும், நெருங்கிய நண்பர்கள் ‘பாஸ் எனவும்,கட்சி வட்டாரத்தில் ‘கேப்டன்’ எனவும் அழைக்கிறார்கள்.

திருநாவுக்கரசு, ஜெயலலிதா, ஆர்.எம்.வீ. கேட்டும் தராத எம்.ஜி.ஆரின் பிரசார வேனை விஜயகாந்த்துக்குக் கொடுத்திருக்கிறார் ஜானகிஎம்.ஜி.ஆர் அதோடு, எம்.ஜி.ஆர். - ஜானகிஎம்.ஜி.ஆர். எனப் பெயர் பொறித்த மோதிரங்களையும் தம்பதியினருக்கு வழங்கி மகிழ்ந்திருக்கிறார் திருமதி ஜானகி !

முதலில் வாங்கிய டி.எம்.எம். 2 நம்பர் அம்பாஸடர் காரை இன்னும் பாதுகாப்பாக வைத்திருக்கிறார் விஜயாகாந்த். இன்றைக்கும் அதை ஆபீஸுக்கு எடுத்து வருவது உண்டு !

சினிமாவுக்கு வர வேண்டும் என்ற ஆசை அத்துமீறிவிட்டதால் விஜயகாந்த் எஸ்.எஸ்.எல்.சி – யைத் தாண்டவில்லை. ஆனால், வீட்டு வேலைக்காரர்களின் பிள்ளைகளை இன்ஜினீயரிங் வரைக்கும் படிக்கவைக்க உதவி செய்கிறார் !

ஞாயிற்றுக்கிழமை கேப்டன் வீட்டில் 100பேராவது சாப்பிடுவார்கள். ஒவ்வொரு நாளும் அலுவலுகத்திலும் அந்த அளவுக்குச் சாப்பாடு நடக்கும். வந்து செல்கிறவர்களை வெறும் வயிறோடு திரும்ப அனுமதிக்க மாட்டார் விஜயகாந்த் !

விஜயகாந்த்தின் குலதெய்வம் வீரசின்னம்மா. மதுரைக்குப் பக்கத்தில் திருமங்கலம் அருகில் இருக்கிறது. பாழடைந்து கிடந்த கோயிலை சுற்றுச்சுவர் எழுப்பி, கும்பாபிஷேகம் நடத்தி புதுபிக்க உதவியிருக்கிறார்!

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்ஷனில் 17 படங்களும், ராமநாராயணன் டைரக்ஷனில் 17 படங்களும் நடித்திருக்கிறார் விஜயகாந்த். அவரோடு அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் நளினி !

பாரதிராஜா தவிர்த்து பெரிய டைரக்டர்களின் படங்களில் நடித்ததே இல்லை விஜயகாந்த் !

கறுப்புப் பணம்: ராம்தேவின் உண்ணாவிரத திட்டத்தை கைவிட வைக்க 'தலைகீழாய் நிற்கும்' மன்மோகன் !


வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்கக் கோரியும் ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி வரும் ஜூன் 4ம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ள யோகா குரு பாபா ராம்தேவை சமாதானப்படுத்த பிரதமர் மன்மோகன் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் லோக்பால் சட்டத்தைத் திருத்தக் கோரியும் சமூக சேவகர் அன்னா ஹசாரே சமீபத்தில் டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். அவருக்கு நாடு முழுவதும் கிடைத்த ஆதரவைக் கண்டு மத்திய அரசு மிரண்டுவிட்டது.

அவரது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற வைக்காவிட்டால், தேசிய அளவில் அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்த மத்திய அரசு, ஹசாரே உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், மத்திய அமைச்சர்கள் அடங்கிய லோக்பால் வரைவு மசோதா குழுவை நியமித்தது.

இந்நிலையில் நாட்டை சுரண்டும் ஊழல்வாதிகளுக்கு, கறுப்புப் பணம் வைத்திருப் போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளக் கோரி யோகா குரு பாபா ராம்தேவ் போராட்டத்தில் குதித்துள்ளார்.

முதலில் அன்னா ஹசாரேவைப் போலவே இவரையும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. ஆனால், தேசிய அளவில் இவருக்குக் கிடைத்துவிட்ட ஆதரவைக் கண்டு அதிர்ந்து போயுள்ள மத்திய அரசு, அவரை சமாதானப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளது.

வரும் ஜூன் 4 தேதி முதல் டெல்லி ராம் லீலா மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் துவக்கினால், அவருக்கு நாடு முழுவதுமே ஆதரவ அலை உருவாகும், இதனால் தேசிய அளவில் மத்திய அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்று மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.

மேலும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான சமூக அமைப்புகளும் பாபா ராம்தேவை தொடர்பு கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து பிரதமரும் பிரணாப் முகர்ஜியும் ஆலோசனை நடத்தி, கறுப்புப் பணம் வைத்திருப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் சிறப்பு அதிகாரங்களுடன் கூடிய வருமானவரித் துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவை புதிதாக உருவாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. ராம்தேவ் போராட்ட அறிவிப்பையடுத்தே இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டது.

ஆனால், மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ராம்தேவ் திருப்தி அடைய வில்லை. வெறும் குழுக்களை அமைப்பதால் மட்டுமே தனது கோரிக்கைக்கு நியாயம் கிடைக்காது என்றும் கறுப்புப் பணம் வைத்திருப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளார்.

ஆனாலும் எப்படியாவது அவரது உண்ணாவிரதத்தைக் கைவிட வைக்கும் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார் பிரதமர். முதலில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவரை பாபாவிடம் நேரில் அனுப்பி வைத்த பிரதமர், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அவரிடம் விளக்கினார்.

ஆனால், இப்படியெல்லாம் என்னை ஏமாற்றிவிட முடியாது என்று கூறிவிட்ட ராம்தேவ், திட்டமிட்டபடி தனது உண்ணாவிரதம் தொடங்கும் என்று அறிவித்தார்.
அதே நேரத்தில் லோக்பால் சட்டத்தின் வரம்புக்குள் பிரதமரைக் கொண்டு வர வேண்டியதி்ல்லை என்று கூறி, அன்னா ஹசாரேவின் முக்கிய கோரிக்கையை மட்டும் பாபா நிராகரித்தார். இதனால் இவரை வைத்து லோக்பால் குழுவை பலவீனமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந் நிலையில் கறுப்புப் பணம், ஊழலை ஒழிக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து நேரில் விளக்க விரும்புவதாகவும், இதற்காக தன்னை டெல்லியில் சந்திக்குமாறும் ராம்தேவுக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கோரிக்கை வைத்தார். இதை ஏற்று இன்று டெல்லி வந்தார் ராம்தேவ்.

இதையடுத்து அவருக்கு எப்படியெல்லாம் ஐஸ் வைக்க வேண்டுமோ அப்படியெல்லாம் ஐஸ் வைக்கும் வேலைகளில் மத்திய அரசு இறங்கியது. டெல்லி வந்த அவரை வரவேற்க மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், பி.கே.பன்சால், சுபோந்த் காந்த் சகாய், பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ.நாயர் ஆகியோர் விமான நிலையத்துக்கே சென்றனர்.

அவரை மிக மிக மிக முக்கியமான விஐபி போல நடத்தி, கிட்டத்தட்ட ரெட் கார்பெட் வரவேற்பு அளித்து அழைத்துச் சென்றனர். இவருக்கு ஏன் இவ்வளவு பெரிய வரவேற்பு அளிக்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

கறுப்புப் பண விவகாரத்தில் பிரதமரின் கருத்தை பிரணாப் முகர்ஜி இவரிடம் விளக்கவுள்ளார். இதையடுத்து உண்ணாவிரதத் திட்டத்தை பாபா கைவிடுவாரா அல்லது திட்டமிட்டபடி தொடங்குவாரா என்பது தெரியவரும்.

அன்னா ஹசாரேவின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட மத்தியஅரசு, இப்போது ராம்தேவிடம் மாட்டியுள்ளது குறிப்பிடத் தக்கது.

1.65 லட்சம் என்ஜினீயரிங் விண்ணப்பம் விற்பனை: 50 ஆயிரம் இடங்கள் காலியாக வாய்ப்பு.


பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் ஒரு லட்சத்து 65 ஆயிரம் விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 34 ஆயிரம் குறைவாகும்.

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றில் ஒற்றை சாளர கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இதற்கான விண்ணப்பங்கள் மே மாதம் 16-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை விற்பனை செய்யப்பட்டன. கடைசி நாளான நேற்று வரை மொத்தம் ஒரு லட்சத்து 65 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன.

ஆன்-லைன் மூலம் 5 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். கலந்தாய்வில் பங்கேற்பதற்காக 1.70 லட்சம் பேர் விண்ணப்பங்களை பெற்று சென்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 34 ஆயிரம் விண்ணப்பங்கள் குறைவாக இந்த ஆண்டு வினியோகிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு 2 லட்சத்து 4 ஆயிரத்து 541 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே பி.இ. விண்ணப்ப வினியோகம் தொடங்கியதால் விண்ணப்ப விற்பனை அதிகமாக இருந்தது.

இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகுதான் பி.இ. விண்ணப்ப வினியோகம் தொடங்கியதால் விண்ணப்ப விற்பனை குறைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய கல்லூரிகள் மற்றும் ஏற்கனவே உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டை காட்டிலும் பி.இ. இடங்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கு மேல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பி.இ. இடங்கள் அதிகரிப்பதால் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை உயரும் என்ற எதிர்பார்ப்பில் இந்த ஆண்டு 2.20 லட்சம் விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு குழு அச்சடித்து இருந்தது. ஆனால் ஒரு லட்சத்து 70 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே விற்பனை ஆனதால் 50 ஆயிரம் விண்ணப்பங்கள் வீணாகியுள்ளன.

இதுவரை 55 ஆயிரம் மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளித்துள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிக்க ஜூன் 3-ந் தேதி கடைசி நாளாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளித்துள்ள மாணவர்கள் தங்களது விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு குழுவிற்கு சேர்ந்து விட்டதை www.annauniv.edu/tnea2011என்ற இணைய தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பி.இ. விண்ணப்ப எண்ணை இணைய தளத்தில் அளிக்கப்பட்டுள்ள காலியிடத்தில் “டைப்” செய்யும் நிலையில், விண்ணப்பம் சென்று சேர்ந்து விட்டதை எளிதாக உறுதி செய்து கொள்ளமுடியும்.

ஜூன் இறுதியில் தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். ஜூலை முதல் வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும்.

கனிமொழி ஜாமீன் மனுமீது 3-ந் தேதி தீர்ப்பு.


2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடுக்கு துணை போனதாக கனிமொழி எம்.பி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் இருவர் மீதும் சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. இதையடுத்து கனிமொழி, சரத்குமார் இருவரும் கடந்த மாதம் 20-ந் தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார்கள்.

சி.பி.ஐ. கோர்ட்டு அவர்களது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்ததால் இருவரும் அன்றே உடனடியாக கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் தங்களை ஜாமீனில் விடக்கோரி கடந்த 23-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

அந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது கனிமொழி தரப்பிலும், சி.பி.ஐ. தரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகி வாதாடினார்கள். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பரிகோகே தீர்ப்பை தள்ளி வைத்தார்.டெல்லி ஐகோர்ட்டுக்கு வரும் 4-ந் தேதி கோடை விடுமுறை தொடங்குகிறது. எனவே நாளை மறுநாள் (3-ந்தேதி) கனிமொழி எம்.பி. ஜாமீன்மனு மீதான தீர்ப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்று தி.மு.க.வினர் நம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால் சட்ட நிபுணர்கள் கூறுகையில், கனிமொழியை ஜாமீனில் விட்டால் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை பாதிக்கப்படுமா என்பதை பொறுத்தே அவருக்கு விடுதலை கிடைக்கும் என்றனர்.

ஸ்வான் டெலிகாம் நிறுவன நிர்வாக இயக்குனர் வினோத் கோயங்கா, யுனிடெக் நிறுவன நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, அனில் அம்பானி குழுமத்தின் அதிகாரிகள் கவுதம் ஜோஷி, அரிநாயர், சுரேந்திரபிபாரா ஆகியோரது ஜாமீன் மனுக்களை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: வாஜ்பாய்க்கு “சம்மன்” அனுப்ப பாராளுமன்ற கூட்டுகுழு முடிவு.


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு, பாராளுமன்ற பொது கணக்கு குழு, பாராளுமன்ற கூட்டுக் குழு ஆகியவை தனித் தனியாக விசாரணை நடத்தி வருகின்றன. இதில் பாராளுமன்ற கூட்டுக்குழு, காங்கிரஸ் எம்.பி. சாக்கோ தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு விரைவான விசாரணையை நடத்தி வருகிறது. மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வினோத்ராய் சமீபத்தில் கூட்டுக்குழு முன்பு ஆஜராகி, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்தார். அவரிடம், பா.ஜ.க. ஆட்சி நடத்த 1998-ம் ஆண்டு முதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு எப்படி செய்யப்பட்டது? என்பது பற்றி அறிக்கை தயாரித்து தருமாறு கூட்டுக்குழு தலைவர் சாக்கோ கேட்டுக் கொண்டார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் மிகவும் வெளிப்படையாக நடந்து கொண்டதாக பா.ஜ.க. தலைவர்கள் ஏற்கனவே பல தடவை கூறி உள்ளனர். காங்கிரஸ் தலைமையில் ஆட்சி ஏற்பட்ட பிறகு ஸ்பெக்ட்ரம் முடிவுகளில் தவறு நடப்பதை பா.ஜ.க. ஏற்கனவே சுட்டி காட்டியதையும், பா.ஜ.க. தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

என்றாலும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பா.ஜ.க.வையும் இழுக்க காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரையும் சாட்சிகள் பட்டியலில் பாராளுமன்ற கூட்டுக்குழு சேர்த்து இருக்கிறது. அதுமட்டுமின்றி சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரிப்பது போல, வாஜ்பாய்க்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க சாக்கோ தலைமையிலான பாராளுமன்ற கூட்டுக்குழு முடிவு செய்து இருக்கிறது.

1999-ம் ஆண்டு சிறிது நாட்கள் தொலை தொடர்புத் துறையை வாஜ்பாய் தன் வசம் வைத்திருந்ததால், அவருக்கு, அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான கொள்கைகள் முழுமையாக தெரிந்து இருக்கும் என்ற அடிப்படையில் அவருக்கு சம்மன் அனுப்ப தீர்மானித்துள்ளதாக சாக்கோ கூறினார்.

வாஜ்பாய்க்கு எப்போது சம்மன் அனுப்புவது என்ற முடிவை வரும் 6-ந் தேதி எடுக்கப் போவதாகவும் சாக்கோ கூறினார். வாஜ்பாய்க்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்பதில் காங்கிரஸ் எம்.பி.க்கள் மிகவும் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார். மிகவும் வயதாகி விட்ட வாஜ்பாய், கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தீவிர அரசியலில் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்கும் அவர் எந்தவித குற்றச்சாட்டுக்கும் உள்ளாகாத தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட அனைவரிடமும் நன்கு பழகும் வாஜ்பாய்க்கு சம்மன் அனுப்ப சாக்கோ திட்டமிட்டிருப்பது பா.ஜ.க. தலைவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எத்தனால் உற்பத்தியால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியும்.

எம். குப்புசாமி



பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைக்கும்பொருட்டு பிரேசிலில் 1927-ம் ஆண்டே எத்தனால் வாகன எரிபொருளாக விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டது. 1942-43-ல் எத்தனால் உற்பத்தி 16,000 டன்னாக இருந்தது. இன்று 2.5 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 2019-ல் உற்பத்தியை 5 கோடி டன்னாக உயர்த்தத் திட்டமிட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.

உலகிலேயே கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் இன்றைய எத்தனால் உற்பத்தி 4,80,000 டன்தான். 2.5 கோடி டன் எங்கே? 4.8 லட்சம் டன் எங்கே? உற்பத்தியைப் பெருக்குவதற்கு மத்திய அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ஆனால், மாதமொரு முறை பெட்ரோல், டீசல் விலையை மட்டும் உயர்த்தத் தவறுவதில்லை.

இந்த ஆண்டு இறுதிக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 100 ஆகவும், டீசல் விலை ரூ. 70 ஆகவும் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மக்கள் செயலிழந்து நிற்கின்றனர்.

எத்தனால் உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டு 1982-லேயே தமிழ்நாட்டிலுள்ள ஒரு தனியார் நிறுவனம் தமிழக அரசுக்கு விண்ணப்பித்துள்ளது. இன்றுவரை அந்தக் குழுமத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. 1984-ல் ஏற்றுமதிக்கான அனுமதியை மத்தியப் பிரதேசத்தில் ஆரம்பிக்க அனுமதி கொடுத்துத் திட்டத்தை நிறைவேற்றாமல் இருக்க என்னென்ன இடையூறுகள் உண்டோ அவ்வளவையும் செய்து திட்டம் வராமலேயே செய்துவிட்டனர்.

2007-ல் திட்டத்தின் மகிமையை உணர்ந்து திட்டத்துக்கான அனுமதியை இந்தக் குழுமத்துக்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு வழங்கியது. எங்கு நிதீஷ் குமாருக்கு நல்ல பெயர் வந்துவிடுமோ என்று கருதித் திட்டத்தை நிறைவேற்றாத வண்ணம் மத்திய அரசு தலையிட்டுத் திட்டத்துக்கு இடையூறு செய்து வருகிறது. இவ்வாறு இருப்பின் எப்படி பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க இயலும்?

பிரேசிலில் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் எத்தனால் பம்ப் இருக்கும். வாகன ஓட்டிகள் தங்கள் விருப்பப்படி பெட்ரோலுடன் எத்தனாலைக் கலந்து கொள்ளலாம். எத்தனாலில் மட்டுமே ஓடும் வாகனங்களும் உண்டு. எத்தனாலின் விலையும் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 20 தான். இது மட்டுமன்றி, எத்தனால் அல்லது பெட்ரோலில் ஓடும் வாகன என்ஜின்களையும் உற்பத்தி செய்கின்றனர். மற்ற நாடுகளைப் பார்த்தாவது இந்தியா திருந்துமா என்பது விடை காண முடியாத கேள்வி.

24% பெட்ரோலுடன் எத்தனால் கலந்து வாகனத்தில் எந்த மாற்றமுமின்றி வாகனத்தை ஓட்டலாம். வாகனத்தின் திறன் கூடுமேயொழியக் குறையாது. 85% எத்தனாலுடன் 15% பெட்ரோல் மட்டும் கலந்து உபயோகிக்கலாம். இதற்கு என்ஜினில் மாற்றங்கள் செய்ய வேண்டும். எத்தனால் மட்டுமே பயன்படுத்தலாம். இதற்கான என்ஜின்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. போர்டு குழுமம் பிரேசிலில் இந்த என்ஜின்களை உற்பத்தி செய்கிறது. எனவே, சென்னையிலும் போர்டு நிறுவனத்தால் உற்பத்தி செய்ய இயலும்.

இந்திய அரசு எத்தனால் விலையை லிட்டருக்கு ரூ. 27 என்று நிர்ணயித்துள்ளது. ஒரு டன் கரும்புக்கு ரூ. 2,500 கொடுக்க வேண்டுமெனில் எத்தனால் விலையைக் குறைந்தபட்சம் ரூ. 32 ஆக நிர்ணயிக்க வேண்டும். பங்கில் எத்தனால் விலை ரூ. 32; மத்திய அரசின் வரி 16% - ரூ. 5.12; பங்குக்குக் கமிஷன் 5% - ரூ. 1.85; போக்குவரத்துச் செலவு 50 பைசா மற்றும் இதர செலவுகள் 53 பைசா ஆக மொத்தம் ஒரு லிட்டர் எத்தனால் விலை ரூ. 40.

அமெரிக்காவில் ஒரு லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்து கொடுத்தால் உற்பத்தியாளருக்கு ஒரு லிட்டருக்கு ரூ. 6 அமெரிக்க அரசு இனாமாக வழங்குகிறது. 2022-ல் 11 கோடி டன் எத்தனால் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. மக்காச்சோளம் மட்டுமன்றி "ப்ரையாரிக்ராஸ்' என்ற புல்லையும் எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்த முயன்று வருகின்றனர். ஆனால், இந்தியாவில் இந்திய அரசு ஒரு லிட்டருக்கு ரூ. 5.12 வரியாக உற்பத்தியாளரிடமிருந்து வாங்குகிறது. இந்தச் சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை எப்படி இந்தியாவில் குறைக்க முடியும்?

எத்தனால் கலப்பதால் மாசு 50% கட்டுப்படுத்தப்படும். மத்திய அரசின் வரியை நீக்கிவிட்டால் எத்தனால் ஒரு லிட்டர் ரூ. 35-க்குக் கிடைக்கும். மக்கள் ரூ. 70-க்கு பெட்ரோல் போடுவதைவிட்டு ரூ. 35-க்கு எரிபொருளைப் பயன்படுத்தி மகிழ்வர். 24% எத்தனாலைக் கலக்கும்பொழுது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 8.75 குறையும். 85% எத்தனாலைக் கலக்கும்பொழுது ஒரு லிட்டருக்கு ரூ. 30 குறைந்து ரூ. 40-க்கு வாகன எரிபொருள் கிடைக்கும். இதைச் செய்ய பிரேசிலைப்போல் ஒரு குடியரசுத் தலைவர் இந்தியாவுக்குத் தேவை.

எத்தனால் உற்பத்திக்கான மூலப்பொருள்கள் கரும்பு, மக்காச்சோளம், குச்சிக் கிழங்கு, உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைச் சத்துள்ள எல்லா பொருள்களும்.

உற்பத்தியும், லாபகரமுமான பொருள்கள் கரும்பு மற்றும் மக்காச்சோளம் மட்டுமே. இவை இரண்டிலும் கரும்பின் திறனே அதிகம். இந்தியா, பிரேசிலில் கரும்பு உற்பத்தியே அதிகம். அமெரிக்காவில் மக்காச்சோளம் பரவலாகப் பயிரிடப்படுவதால் எத்தனால் உற்பத்திக்கு மக்காச்சோளமே பயன்படுத்தப் படுகிறது. ஒரு டன் கரும்பிலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள். (கரும்பு ஒரு டன்னுக்கு விலை ரூ. 2,500) சர்க்கரை - 100 கிலோ; சக்கை - 280 கிலோ. இதிலிருந்து 50 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மொலாஸஸ் - 40 கிலோ. இதிலிருந்து 12 லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய இயலும். மட்டி - 50 கிலோ.

எத்தனாலைத் தமிழகம் பயன்படுத்தத் தொடங்கினால் 10 ஆண்டுகளில் ஆண்டு ஒன்றுக்கு 40 லட்சம் டன் தேவைப்படும். மொலாஸûஸ மட்டும் பயன்படுத்தி 40 லட்சம் டன் எத்தனால் உற்பத்தி செய்ய வேண்டுமெனில் 4,156 கோடி டன் சர்க்கரையும் உடன் உற்பத்தியாகும். எனவே, இத்திட்டம் சாத்தியப்படாது.

ஆகவே, இன்றுள்ள கரும்பு உற்பத்தியாகும் நில அளவை வைத்தே ஏக்கருக்கான உற்பத்தித் திறனைப் பெருக்கி 40 லட்சம் டன் எத்தனாலை 5 ஆண்டுகளில் உற்பத்தி செய்ய இயலும். அதற்கு கரும்பிலிருந்து சர்க்கரை உற்பத்தி செய்யாமல் நேரடியாக எத்தனாலை உற்பத்தி செய்வோமானால் இது சாத்தியமான திட்டம் மட்டுமன்றி, உடன் அமல்படுத்தவும் முடியும்.

இதற்கான முடிவை அரசு உடனே எடுக்குமானால், பெட்ரோல், டீசல் விலையை வெகுவாகக் குறைத்துவிட முடியும். ஒரு டன் மக்காச்சோளத்திலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள் (ஒரு டன் மக்காச்சோளத்தின் விலை ரூ. 12,000) எத்தனால் 360 லிட்டர்; மக்காச்சோள எண்ணெய் - 25 கிலோ; கழிவு (தீவனம்) - 330 கிலோ.

மக்காச்சோளத்தை எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்த இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் வாய்ப்பே இல்லை. மக்காச்சோளத்திலிருந்து மிக உயர்ரக குடி சாராயத்தைத் தயாரிக்கலாம்.

தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் மக்காச்சோளம் விளைவிக்கப்படுகிறது. சராசரியாக 4 லட்சம் டன் உற்பத்தியாகிறது. இதிலிருந்து 1,15,200 டன் குடிசாராயம் தயாரிக்க முடியும். மக்காச்சோளத்துக்கு டன்னுக்கு ரூ. 12,000 உறுதி செய்யப் பட்டால் உற்பத்தியை 8 லட்சம் டன்னாக உயர்த்த இயலும்.

தமிழகத்தின் குடிசாராயத் தேவையே 2,50,000 டன்தான். இப்போது குடிசாராயம் மொலாஸஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கும்.

தமிழகத்தில் 7.2 லட்சம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. சராசரியாக ஏக்கருக்கு 40 டன் விளைகிறது. இதிலிருந்து உற்பத்தியாகும். ஆல்கஹால் 2,76,400 டன்.

இது குடிசாராயத்துக்கும் ரசாயனத் தொழிற்சாலைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப் படுகிறது. குடிசாராயத்துக்கு மக்காச்சோளத்தைப் பயன்படுத்துவோ மேயானால் மொலாஸஸ முழுமையாகப் பயன்படுத்தலாம்.

இதன் மூலம் ரசாயனத் தொழிற்சாலை அபரிமிதமான வளர்ச்சியை அடையும். உற்பத்தியாகும் பொருள்களின் விலைகளையும் வெகுவாகக் குறைக்க இயலும். குறிப்பாக, பிளாஸ்டிக் பொருள். எத்தனால் உற்பத்தியைக் கரும்பிலிருந்து நேரடியாக உற்பத்தி செய்து கொள்ளலாம்.

கரும்பு உற்பத்தியை இப்பொழுது விளைவதைவிட இரு மடங்காக நிச்சயம் உயர்த்த வாய்ப்பு உள்ளது. மகாராஷ்டிரத்தில் ஏக்கருக்கு 120 டன் என்பது பெரிய செய்தியல்ல. இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் அவைகளைப் பயன்படுத்தாமல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதிலேயே அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதன் மர்ம முடிச்சுகளை அவிழ்த்தால் இந்தியாவில் 2ஜியை விட மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும்.

ஏர்செல் விவகாரம் : தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா.


2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் வகையில் மத்திய அமைச்சர் தயாநிதிமாறனை பிரதமர் மன்மோகன் சி்ங் பதவி விலகச் சொல்ல வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவை சேர்ந்த மாக்சிஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 74 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. ஏர்செல் நிறுவனத்திடம் இருந்து பங்குகள் வாங்கியதால் ஆதாயமடைந்த இந்த மாக்சிஸ் நிறுவனம் தனது மற்றொரு நிறுவனமான அஸ்ட்ரோ நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் முதலீடு முதலீடு செய்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா, தயாநிதிமாறன் பிரதமரைச் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தயாநிதிமாறன் தன் மீதுள்ள குற்றச்சாடுகளை எதிர்கொள்ளும் வகையில் அவர் பதவி விலக வேண்டும். பிரதமர் மன்மோகன் சிங் அவரிடமிருந்து பதவி விலகல் கடிதத்தைக் கேட்டுப் பெற வேண்டும். என ஜெயலலிதா கூறியுள்ளார்.

2ஜி சிக்கலில் மாட்டுவாரா மன்மோகன்?


ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பிரமதருக்கும் தனக்கும் நிகழ்ந்த 18 கடித பரிமாற்றங்களை முன் வைத்து வாதாட உள்ளதால், ஸ்பெக்ட்ரம் ஊழலின் விசாரணை வளையத்தில் மன்மோகன்சிங்கும் இழுக்கப்படலாம் என்று தெரிகிறது.

2007ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2010 ஜூலை வரையிலான காலகட்டத்தில் தான் அமைச்சராக இருந்தபோது பிரதமருக்கு எழுதிய 18 கடிதங்களுடன் தானே வாதாட ராசா திட்டமிட்டிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் அமைச்சரவை யின் ஒப்புதலின் பேரில்தான் மேற்கொண்டேன் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் இந்த 18 கடிதங்களையும் ராசா முக்கிய ஆதாரமாகக் காட்டக்கூடும் என்று தெரிகிறது.

இந்த விவகாரத்தில் நான் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை, அதற்கு உரிய அனுமதியைப் பெற்றிருந்தேன், எனவே நான் நிராபராதி என்று வாதாட ராசா தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கடிதங்களை ஆதாரமாக வைத்து ராசா வாதாடும்போது மத்திய அரசுக்கு, குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடும் நெருக்கடி ஏற்படலாம்.

ராசாவின் வாதத்தை வைத்து பிரதமர் மன்மோகன்சிங்கையும் சிபிஐ தனது விசாரணைக்குள் கொண்டு வரவும் வாய்ப்புள்ளது.

ராசா அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

29 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள்.


தமிழகத்தில் 29 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திங்கள்கிழமை இரவு 21 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாற்றப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக புதிய ஆட்சியர்களை நியமித்து தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார். (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)

1. அனுஜார்ஜ்- அரியலூர் மாவட்ட ஆட்சியர் - (சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர்)

2. எம். கருணாகரன்- கோவை மாவட்ட ஆட்சியர் - (ஆவின் நிறுவன இணை மேலாண் இயக்குநர்)

3. வி. அமுதவல்லி- கடலூர் மாவட்ட ஆட்சியர் - (கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்)

4. ஆர். லில்லி- தருமபுரி மாவட்ட ஆட்சியர் - (உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இணை ஆணையாளர்)

5. கே. நாகராஜன்- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் - (வருவாய் நிர்வாக இணை ஆணையாளர்)

6. ஆர். ஆனந்த குமார்- ஈரோடு மாவட்ட ஆட்சியர் - (தருமபுரி மாவட்ட ஆட்சியர்)

7. எஸ்.சிவசண்முக ராஜா- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் - (பொதுத் துறை துணைச் செயலாளர்)

8. ஆஷிஷ் குமார்- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் - (சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர்)

9. வி. ஷோபனா- கரூர் மாவட்ட ஆட்சியர் - (சென்னை மாவட்ட ஆட்சியர்)

10. சி.என். மகேஸ்வரன்- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் - (தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்)

11. டி. முனுசாமி- நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் - (நில நிர்வாக இணை ஆணையாளர்)

12. ஜெ. குமரகுருபரன்- நாமக்கல் மாவட்ட ஆட்சியர் - (வணிக வரி கள் துறை இணை ஆணையாளர்)

13. தாரேஷ் அகமது- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் - (சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர்)

14. பி. மகேஸ்வரி- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் - (அம்பத்தூர் நகராட்சி ஆணையாளர்)

15. வி. அருண் ராய்- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் - (கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்)

16. கே. மகரபூஷணம்- சேலம் மாவட்ட ஆட்சியர் - (சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குநர்)

17. வி. சாந்தா- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் - (வணிக வரிகள் துறை இணை ஆணையாளர்)

18. கே. பாஸ்கரன்- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் - (திருவாரூர் மாவட்ட ஆட்சியர்)

19. கே.எஸ். பழனிசாமி- தேனி மாவட்ட ஆட்சியர் - (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை துணை செயலாளர்)

20. ஆர். செல்வராஜ்- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் - (தமிழ்நாடு மாநில தகவல் ஆணைய செயலாளர்)

21. ஜெய ஸ்ரீ முரளிதரன்- திருச்சி மாவட்ட ஆட்சியர் - (உள்துறை இணைச் செயலாளர்)

22. எஸ். நடராஜன்- திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் - (சிப்காட் நிர்வாக இயக்குநர்)

23. எம். மதிவாணன்- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் - (சர்க்கரைத் துறை கூடுதல் ஆணையாளர்)

24. ஆஷிஷ் சாட்டர்ஜி- திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் - (காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்)

25. அன்சுல் மிஸ்ரா- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் - (கோவை மாநகராட்சி ஆணையாளர்)

26. சி. முனியநாதன்- திருவாரூர் மாவட்ட ஆட்சியர் - (நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்)

27. எஸ். நாகராஜன்- வேலூர் மாவட்ட ஆட்சியர் - (ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கூடுதல் இயக்குநர்)

28. சி.டி. மணிமேகலை- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் - (மாற்றுத் திறனாளிகள் நலத் துறை முன்னாள் ஆணையாளர்)

29. எம். பாலாஜி- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் - (சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர்)