Thursday, May 12, 2011

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு அமைதிப் புரட்சி.

ஜி. சுந்தரராஜன்



நடந்து முடிந்த தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் சற்று வித்தியாசமான தேர்தலாக அமைந்திருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஏனென்றால், தேர்தல் என்றால் தொடர் பிரசாரம், பொதுக்கூட்டங்கள், டிஜிட்டல் பேனர்கள், பட்டாசு, சாரம் ஆகியவை இல்லாமல் குறுகிய இடைவெளியில் மக்களுக்கு அதிக அளவு பாதிப்பு இல்லாத தேர்தலாக அமைந்தது, மக்களை நிம்மதிப் பெருமூச்சு விடவைத்துள்ளது.

இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு தனித்துவம் உண்டு. எந்தக் கட்சித் தலைவரும் எல்லாத் தொகுதிகளிலும் பிரசாரம் செய்யவில்லை. ஓரளவுக்கு மிக அதிகமான தொகுதிகளில் பிரசாரம் செய்தவர் என்கிற பெருமை துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இருக்கக்கூடும்.

ஏப்.13-ம் தேதி தமிழகம் முழுவதும் எவ்வித அசம்பாவிதமும் இன்றி தேர்தல் நடைபெற்றது. அதுவும் அதிக அளவு மக்கள் ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

இத்தேர்தலைப் பொறுத்தவரை திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் கீழ்மட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் தேர்தல் நாளன்று அமைதி காத்தனர்.

ஆளும் கூட்டணியினர் தேர்தல் நாளன்று மக்களைச் சந்தித்து வாக்களிக்க அழைக்காததால், எந்தக் கிராமத்திலும் எவ்வித சண்டை சச்சரவின்றி தேர்தல் அமைதியாக நடைபெற்றது. மக்கள் சுதந்திரமாக வாக்களித்ததைக் காண முடிந்தது. சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முடியும் முன்பே திமுக, பாமக ஏஜெண்டுகள் பூத்தை விட்டு வெளியேறிய சம்பவமும் நடைபெற்றது.

ஏப்.13-ம் தேதி வாக்குப்பதிவு நாளனறு காலை 8 மணிக்குத் தொடங்குவதற்கு முன்பே வாக்குச்சாவடிகளில் மக்கள் வரிசையில் நின்றது குறிப்பிடத்தக்கது. சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்ட நேரம் காலதாமதமாக 8 மணியைக் காட்டியதால் 10 முதல் 20 நிமிடங்கள் வரை காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. அப்போது அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பூத் ஏஜெண்டுகளைவிட வாக்காளர்களே வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த அளவுக்குக் கிராமங்களில்கூட மக்கள் மத்தியில் விழிப்புணர்வு காணப்பட்டது.

வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து முடியும்வரை மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தது இந்தத் தேர்தலில்தான் என்பதை வாக்குச்சாவடிகளில் இருந்த பூத் ஏஜெண்டுகள் தெரிவிக்கின்றனர். தேநீர் அருந்தவோ, சாப்பிடவோகூட நேரமில்லாமல் இடைவெளி இன்றி இந்தத் தேர்தலில்தான் வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அமைதியாக வாக்களித்தனர் என வாக்குச்சாவடிகளில் பணியாற்றிய பூத் ஏஜெண்டுகள் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு நேரம் முடிந்தபின்னும் வாக்குச்சாவடிக்குள் இருந்த வாக்காளர்கள் டோக்கன் பெற்று, மாலை 6,7 மணி வரை வாக்களித்தனர்.

கிராமப்புறங்களில் மக்கள் எவ்வித அச்சுறுத்தலின்றி இத்தேர்தலில் சுதந்திரமாகவும், சுயமாகவும் வந்து வாக்களித்தனர். தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியாலோ அல்லது அதிருப்தியாலோ எந்தக் கட்சியினரும் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை அழைத்து வரும் செயலில் ஈடுபடவில்லை.

எந்தத் தேர்தலிலும் இல்லாமல் இத்தேர்தலில் சற்று வித்தியாசமாகத் தேர்தல் ஆணையம் வழங்கிய பூத் சிலிப்புடன் மக்கள் தானாகவே சென்று அமைதியாக, ஆர்வத்துடன் வாக்களித்து அமைதிப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

கிராமப்புறங்களிலும் சரி, நகர்ப்புறங்களிலும் சரி புதிய வாக்காளர்கள், அதாவது முதன்முறையாக வாக்களிக்கும் இளைய தலைமுறையினர் மிகப்பெரிய அளவில் வாக்களிக்க வரிசையில் வந்து நின்றது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் அதிக அளவில் வாக்களித்ததுபோலவே இந்த இளைய தலைமுறை வாக்காளர்களும் ஆர்வத்துடன் தேர்தலில் பங்கு கொண்டனர் என்பதுதான் இந்தத் தேர்தலில் காணப்பட்ட மிகப்பெரிய மாற்றம்.

அதேபோல, தேர்தல் என்று சொன்னாலே, வாக்குச்சாவடியிலிருந்து சற்று தூரத்தில், பல்வேறு கூட்டணிக் கட்சிகளின், சுயேச்சைகளின் ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலுடன் பூத் சிலிப்பும் கையுமாக நின்று கொண்டிருப்பார்கள். இந்த முறை அந்தத் தொந்தரவே கிடையாது.

அப்படியே சிலர் வாக்காளர் பட்டியலுடன் நின்று கொண்டிருந்தாலும்கூட, வாக்காளர்கள் அவர்களைச் சட்டையே செய்யாமல் வாக்குச்சாவடிக்குள் தேர்தல் ஆணைய பூத் சிலிப்புடன் நுழைந்தது, ஓர் இன்ப அதிர்ச்சி.

ஆளும்கட்சியினர் வழங்கிய இலவசம் மற்றும் திட்டங்களால் வாக்களித்தார்களா அல்லது ஊழல், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, குடும்ப ஆட்சி ஆகியவற்றால் ஆட்சி மாற்றம் தேவை என்பதால் அதிக அளவு ஆர்வத்துடன் வாக்களித்தார்களா என்பது மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தெரியவரும்.

இத்தாலிக்கு சென்ற கப்பல் உடைந்ததால் 600 பேர் சாவு.


ஜெனிவா,லிபியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு சென்ற கப்பல் உடைந்ததால் அதில் இருந்த 600 பேர் கடலில் மூழ்கி இறந்தனர்.

லிபியா நாட்டில் அதிபர் கடாபிக்கு எதிராகப் புரட்சி நடந்து வருகிறது. புரட்சியாளர்களை ஒடுக்க கடாபி அரசு ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறது. மக்களையும், புரட்சியாளர்களையும் பாதுகாக்க அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகள் லிபிய ராணுவம் மீது விமானம் மூலம் குண்டு வீசுகிறது. அங்கு ஏராளமானவர்கள் பலியாகி வருகின்றனர். இதனால் குழப்பமான சுழ்நிலை நிலவுகிறது. உயிருக்கு பயந்து மக்கள் அண்டை நாடுகளுக்கு கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள்.

லிபியாவில் புரட்சி நடப்பதற்கு முன்பு அங்கு சோமாலியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த ஏராளமானவர்கள் வேலை செய்து வந்தனர். புரட்சி வெடித்த பின்னர் இங்குள்ள ஆப்பிரிக்க மக்கள் பாதுகாப்புக்காகவும், நல்ல வேலை தேடியும் அருகில் உள்ள இத்தாலி நாட்டுக்கு கப்பலில் திருட்டுத்தனமாக செல்கின்றனர். லிபிய ராணுவம் பலரை துப்பாக்கி முனையில் கப்பலில் ஏற்றி நாடு கடத்துவதாகவும் கூறப்படுகிறது. இப்படி அளவுக்கு அதிகமாக மக்களை ஏற்றுவதால் கப்பல்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு ஏற்படுகிறது.

இதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை 600 பேரை ஏற்றிக்கொண்டு ஒரு சிறிய கப்பல் இத்தாலிக்கு சொந்தமான லம்பிடிசா தீவை நோக்கி சென்றது. நடுக்கடலில் சென்றபோது கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த சிறிய கப்பல் பாரம் தாங்காமல் இரண்டாக உடைந்து கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த 600 பேரும் கடலில் மூழ்கி இறந்து விட்டானர். இதில் பலர் சோமாலியா நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களில் 3 படகுகள் கடலில் மூழ்கி 800 பேர் வரை இறந்துவிட்டனர். கடத்தல்காரர்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு அதிகான மக்களை சிறிய கப்பலில் ஏற்றி வருவதால் விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதுவரை 5 கப்பல்களில் 2400 பேர் இத்தாலியின் லக்பிடிசா தீவுக்கு வந்துள்ளனர்.

இது பற்றி லிபியா அதிபர் கடாபியின் அதிகார பூர்வ பேச்சாளர் கூறியது:

லிபிய அதிபர் கடாபியின் அரசை கவிழ்ப்பதற்காக புரட்சிக்காரர்களுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவுகின்றன. அதன் விளைவாகத் தான் ஐரோப்பிய நாடுகளுக்குள் இங்கிருந்து மக்கள் ஊடுருவுகின்றனர். எங்கள் நாட்டின் கடற்கரை பகுதி தினசரி நேட்டோ விமானங்களால் குண்டு வீசி தாக்கப்படுகிறது. இதனால் எங்கள் நாட்டில் இருந்து கப்பலில் செல்பவர்களை தடுக்க முடியவில்லை என்றார் அவர்.

உலகின் உயரமான கட்டிடத்தில் இருந்து குதித்து தமிழக வாலிபர் தற்கொலை.


துபாயில் உலகின் உயரமான கட்டடத்திலிருந்து குதித்து சிவகங்கையைச் சேர்ந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் துபாய் நகரில் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா உள்ளது. 2,716 அடி உயரம் கொண்ட இந்த கட்டிடம் மொத்தம் 160 மாடிகளைக் கொண்டது. இதில் 45 மற்றும் 108 மாடிகளில் வீடுகளும், மற்ற 158 மாடிகளிலும் கார்ப்ரேட் நிறுவன அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

இதில் அராப் டெக் என்ற கட்டுமான நிறுவனத்தில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அதியமான் கண்ணன் (38) என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிறுவன அலுவலகம் 120வது மாடியில் உள்ளது.

அதியமான் தன் சொந்த ஊருக்கு வர விடுமுறை கேட்டார். ஆனால் அவருக்கு விடுமுறை கிடைக்கவில்லை. இதனால் விரகத்தி அடைந்த அவர் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு 147வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார்.

கட்டடத்தின் சுவற்றில் பல முறை மோதிய அவரது உடல், சிதறியது. 39 மாடிகள் வரை சுவரில் மோதியவாரே வந்த அவரது உடல் 108வது மாடியின் பால்கனியில் வந்து விழுந்தது. போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முழு விசாரணையும் முடிந்த பிறகே அவரது உடலை இந்திய தூதரகம் மூலம் அராப் டெக் நிறுவனம் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகின் உயரமான கட்டிடத்தில் நடந்துள்ள முதல் தற்கொலை சம்பவம் இதுவாகும்.

அல் காய்தாவின் அடுத்த இலக்கு ஒபாமாவின் பாட்டி?


அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாட்டி உறவுமுறையான ஒருவருக்கு ஆப்ரிக்க அல் காய்தா பிரிவு அச்சுறுத்தல் விடுத்துள்ளது. இதையடுத்து கென்யாவில் உள்ள அவரது வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சோமாலியாவை அடிப்படையாகக் கொண்ட அல் காய்தா பிரிவான அல் ஷபாப் அமைப்பு, ஷாரா ஒபாமாவுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதால் அவரது வீட்டைச் சுற்றிலும் 24 மணி நேரமும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கென்ய போலீசார் தெரிவித்தனர்.

பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு பழிவாங்கும் நடவடிக்கையாக தாக்குதல் நடைபெறலாம் என்ற அச்சத்தில் ஒபாமா பாட்டியின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. தற்போது அல் ஷபாபின் எச்சரிக்கை வெளியானதில் இருந்து பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அவர் வீடு உள்ள ஒட்டுமொத்த கிராமத்துக்கும் ரோந்துப் பணியில் ஈடுபட போதுமான அதிகாரிகள் உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால் 88 வயதான ஒபாமாவின் பாட்டி, பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்கள் குறித்து கவலைப்படவில்லை. கூடுதல் பாதுகாப்பு குறித்தும் அவர் கவனத்தில் கொள்ளவில்லை.

அச்சுறுத்தல் எதுவும் எந்தவிதத்திலும் என்னுடைய வாழ்க்கை பாதிக்காது என ஷாரா ஒபாமா தெரிவித்தார்.

அச்சுறுத்தலால் என்னுடைய நடவடிக்கையை கட்டுப்படுத்த முடியாது. கூடுதல் பாதுகாப்பு வழங்க அரசு முடிவெடுத்தால் அதற்கு நாங்கள் உடன்படுகிறோம் என அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணக் கடற்பிரதேசம் திடீரென சிவப்பு நிறமாக மாற்றம்.


இலங்கையில் யாழ்ப்பாணம் வடமராட்சிக் கடற்பிரதேச நீர் திடீரென சிவப்பு நிறமாக மாற்றமடைந்துள்ளதாக இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமராட்சி வடக்கு பிரதேச கடல் நீரே அவ்வாறு சிவப்பு நிறமாக காட்சியளிப்பதாக தெரியவந்துள்ளது. வடமராட்சி வடக்கு கடற்கரையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை அவ்வாறு கடலில் சிவப்பு நிறமாக நீர் தென்படுவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடல் நீர் திடீரென சிவப்பு நிறமாக மாறியதற்கான காரணத்தை அறிந்து கொள்ளும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அதற்காக அந்த கடற்பரப்பில் உள்ள நீர் எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

சிங்கப்பூரில் 60,000 இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு.


உலகிலேயே அதிக அளவில் வேலைக்கு ஆட்களை எடுக்கும் நாடாக சிங்கப்பூர் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் வேறு எந்த நாட்டையும் விட சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்கள்தான் அதிக அளவிலான ஆட்களைத் தேர்வு செய்ய திட்டமிட்டு உள்ளன.

குறிப்பாக இந்தியர்களுக்கு பெரும் ஜாக்பாட் அடிக்கப் போகிறது. அதாவது 60,000 இந்தியர்களை வேலைக்கு எடுக்க சிங்கப்பூர் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாம்.

2011ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 3 லட்சம் பேரை வேலைக்கு தேர்வு செய்ய சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது. இதில் 50 சதவீதத்தினர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். 20 சதவீதத்தினர், அதாவது 60,000 பேரை இந்தியாவிலிருந்து தேர்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. மற்றவர்கள் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

சிங்கப்பூரில் அனைத்துத் துறைகளிலும் நல்ல வளர்ச்சி இருப்பதால் ஆளெடுப்பில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பெரும் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளதே இதற்குக் காரணம். மேலும் பல நிறுவனங்களும் இந்தியர்களை அதிகம் விரும்புகின்றன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த பல்வேறு வங்கிகளின் பிராந்திய தலைநகராக சிங்கப்பூர்தான் விளங்குகிறது. இது போக முன்னணி நிதி நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், சுரங்க நிறுவனங்கள், சுகாதாரம், எண்ணை நிறுவனங்கள் என பல தரப்பு நிறுவனங்களும் சிங்கப்பூரில் தான் தங்களது பிராந்திய தலைமையிடங்களை வைத்துள்ளன.

இவை அனைத்தும் தற்போது சிங்கப்பூரில் தங்களது பணிகளை விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளன.

புதிதாக இந்த ஆண்டு தேர்வு செய்யப்படவுள்ள 3 லட்சம் பேரில் 40 சதவீதத்தினர் சிங்கப்பூரிலேயே பணியமர்த்தப்படுவர். மற்றவர்கள் ஆசியா பசிபிக் பிராந்திய அலுவலகங்களுக்கு அனுப்பப்படுவர்.

இந்தியாவில் கடந்த ஆண்டு சாலை விபத்தில் 1.6 லட்சம் பேர் பலி.

இந்தியாவில் கடந்த ஆண்டு சாலை விபத்தில் 1.6 லட்சம் பேர் பலி

இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இதில் பலியானவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு (2010) நாடு முழுவதும் நடந்த சாலை விபத்துக்களில் 1.6 லட்சம் பேர் இறந்தனர். இது 2009-ம் ஆண்டைக் காட்டிலும் 35 ஆயிரம் பேர் அதிகம் ஆகும். அந்த ஆண்டில் 1.25 லட்சம் பேர் பலியாகி இருந்தனர்.

சாலை விபத்துக்களில் 5 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்கள் அதிகம் பேர் உயிரிழக்கிறார்கள். 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்புக்கு 10 காரணங்களில் சாலை விபத்தும் ஒன்றாக உள்ளது.

நாட்டில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. 2004-ல் பதிவு செய்யப்பட்ட 720 லட்சம் வாகனங்களில் 71 சதவீதம் இரு சக்கரவாகனங்கள் ஆகும்.

போக்குவரத்து அமைச்சகம் 2009-ல் அளித்த அறிக்கையில் 22.4 சதவீத விபத்துக்கள் ஏற்பட இரு சக்கர வாகனங்களே காரணம் என தெரிய வந்துள்ளது. 20.2 சதவீதம் பேர் இரு சக்கர வாகன விபத்துக்களில் சிக்கி காயம் அடைகிறார்கள்.

இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகமும், சாலை போக்குவரத்து துறையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:-

சாலை விபத்துக்கள் அதிகரிக்க மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப் படவில்லை. இதில் அரசியல்விதிகள் போதிய கவனம் செலுத்தவில்லை. இரு சக்கர வாகனங்களின் பெருக்கத்தால் சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கையும், காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுதோறும் சாலை விபத்துக்களில் 13 ஆயிரம் பேர் பலியாகிறார்கள். சாலை விபத்து இறப்புகளை தடுக்க 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் நேற்று பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளன. “சாலை பாதுகாப்பு 10 ஆண்டு 2010- 2020-ம் என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் உலகிலேயே அதிக அளவில் விபத்துக்கள் நடைபெறும் இந்தியாவில் சாலை பாதுகாப்பு குறித்த எந்த திட்டத்தையும் அரசு முன்வைக்கவில்லை. உலக நாடுகள் நேற்று சாலை பாதுகாப்பு திட்டத்தை அறிவித்தபோது இந்தியா அதை வெள்ளிக்கிழமைக்கு (நாளை) தள்ளி வைத்தது. இப்போது அது இந்த மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கோழி இறைச்சி ருசியாக இருப்பது ஏன்?

நாட்டுக்கோழி இறைச்சி ருசியாக இருப்பது ஏன்?; கால்நடை அதிகாரி தகவல்

பிராய்லர் கோழிகறியைவிட நாட்டுக்கோழியின் கறிக்கு அதிக மவுசு உள்ளது.

தொழில்ரீதியாக கூண்டு முறையில் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு நோய்த்தடுப்பு முறைகளும் கச்சிதமாக பின்பற்றப்படுகிறது.

கிராமப்புறங்களில் சாதாரணமாக நாட்டுக்கோழிகள் வளர்ப்பது சகஜமாக உள்ளது. நாட்டு கோழிகளை சமைப்பதால் ஏற்படும் மணமும், ருசியும் இறைச்சி சாப்பிடும் நான்வெஜ் பிரியர்களை வெகுவாக கவர்ந்திழுக்கின்றன.

இதனால் நாட்டு கோழிகளை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு மக்கள் தயங்குவதில்லை. இயற்கையிலேயே நாட்டு கோழி கறியின் சதைப்பகுதியில் உள்ள திசுக்கள் ருசியாக இருக்கும்படி அமைந்துள்ளன.

மேலும் வெளியே சென்று குப்பைகளை கிளரியும் நிலக்கழிவுகளையும் பச்சை புல்லுடன் சேர்த்து சாப்பிடுவதால் நாட்டுக்கோழியின் கறி சமைக்கும்போது வாசனையை பரப்புகிறது.

இதனால் நாட்டுக் கோழிக்கறி தனி மவுசுடன் மற்ற கோழிகளின் இறைச்சியை விட முதலிடம் பெறுகிறது. நாட்டுக்கோழி கிலோ ரூ.250. இதனால் பெரும் கிராக்கியுடன் விற்கப்படுகிறது.

ஸ்கேனில் பெண் குழந்தை என்று தெரிந்ததால் கர்ப்பிணி மனைவியை கொன்ற தொழிலாளி ; ஆஸ்பத்திரிக்கு சீல் வைப்பு.

ஸ்கேனில் பெண் குழந்தை என்று தெரிந்ததால்    கர்ப்பிணி மனைவியை கொன்ற தொழிலாளி;     ஆஸ்பத்திரிக்கு சீல் வைப்பு

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பழையாகரத்தை சேர்ந்தவர் பிரகாஷ். நகை தொழிலாளி. இவரது மனைவி சுரேகா. இவர்களுக்கு காவ்யா (5), ஸ்வீட்டி (3) என்ற மகள்கள் உள்ளனர். இதனால் பிரகாஷ் ஆண் குழந்தை பெற விரும்பினார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு சுரேகா 2 முறை கருதரித்தார். அப்போது அங்குள்ள பவன் நர்சிங் ஹோமில் ஸ்கேன் செய்த போது பெண் குழந்தை என்பது தெரிந்தது. இதனால் 2 முறை கருக்கலைப்பு செய்தார். சில மாதங்களுக்கு முன்பு சுரேகா மீண்டும் கர்ப்பமானார். அங்குள்ள பவன் நர்சிங்ஹோமில் ஸ்கேன் செய்தபோது மீண்டும் பெண் குழந்தை வயற்றில் இருப்பது தெரியவந்தது.

இதையறிந்ததும் பிரகாஷ் கடும் ஆத்திரம் அடைந்தார். சுரேகாவை கருக்கலைப்பு செய்யும்படி மிரட்டினார். இதையடுத்து அங்குள்ள டாக்டரிடம் சென்றார். சுரேகா 6 மாத கர்ப்பிணி என்பதால், கருக்கலைப்பு செய்ய முடியாது என்று கூறிவிட்டார். இதனால் பிரகாசுக்கு மனைவி மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது. 3 தடவை கருத்தரித்தும் உன்னால் ஆண் குழந்தை பெற முடிய வில்லையே. நீ இனி உயிரோடு இருக்ககூடாது என்று கூறி சுரேகாவின் கழுத்தை நெரித்தார். இதில் அவர் இறந்து போனார்.

இதுபற்றி பழையாகர போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஸ்கேன் மூலம் பெண் குழந்தை கண்டு பிடித்து கூறியது பவன் நர்சிங்ஹோம் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆந்திர சுகாதாரத்துறை அதிகாரிகள் பவன் நர்சிங் ஹோமை சீல் வைத்தனர்.

வைட்டமின் மருந்துக்கு பதில் பினாயில்.

வைட்டமின்  மருந்துக்கு பதில் பினாயில்

மகாராஷ்டிராவில் அமராவதியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டில் சேர்க்கப்பட்ட 7 பெண்களுக்கு வைட்டமின் மருந்து தருவதற்கு பதிலாக பினாயில் கொடுக்ககப்பட்டுள்ளது. அவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டது.

பினாயில் வழங்கப்பட்ட அனைவருக்கும் சமீபத்தில்தான் குழந்தை பிறந்துள்ளது. அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய் பால் கொடுக்க மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை.

இதனால் அவர்களுக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது . வைட்டமின் மருந்து தருவதற்கு பதிலாக பினாயில் கொடுத்த செவிலியர் அதிகாரிகளால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இச்சம்பவம் மருத்துவமனையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆதிவாசிகள் நிலத்தை குத்தகைக்கு விட்டதால் தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. மீது சாணம் வீசிய பெண்கள் ; அலறியடித்து ஓட்டம்.

ஆதிவாசிகள் நிலத்தை குத்தகைக்கு விட்டதால் தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. மீது சாணம் வீசிய பெண்கள்; அலறியடித்து ஓட்டம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்குலோயா பகுதியில் ஜாடிகள் தயாரிக்க உதவும் களிமண் அதிக அளவில் உள்ளது. இப்பகுதியில் ஏராளமான ஆதிவாசிகள் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அரக்குலோயா தொகுதி தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. விவேரி சோமா அந்த நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டார். இதற்கு ஆதிவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் விவேரி சோமா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்தார். ஏற்கனவே அவர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த பெண்கள் சாணத்தை எடுத்து சரமாரியாக வீசினார்கள்.

இதை சற்றும் எதிர்பாராத எம்.எல்.ஏ. தனது பாதுகாவலர்களுடன் ஓட்டம் பிடித்தார். ஆனாலும் பெண்கள் விடவில்லை. எம்.எல்.ஏ.வின் காரை அடித்து நொறுக்கினர்.

இதனால் அவர் உயிர் பிழைத்தால் போதும் என்று அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆதிவாசிகள் கூறும் போது, தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. விவேரிசோமா ஊழல் பேர் வழி. நாங்கள் வாழும் நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்க முயன்று வருகிறார். அவர் இனியும் இங்கு வந்தால் வெட்டிக் கொல்வோம் என்றனர்.

ஜொள்ளு விட்ட கிரிக்கெட் வீரர்கள் - சியர் லீடர்.


தன்னிடமும், பிற சியர்லீடர் அழகிகளிடமும் ஜொள்ளு விட்டு, முத்தமிட, கட்டியணைக்க முயன்ற ஐபிஎல் வீரர்கள் குறித்து பெயர் குறிப்பிடாமல், பிளாக்கில் எழுதிய தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சியர்லீடர் அழகியை ஐபிஎல் நிர்வாகம் ஊருக்கு அனுப்பி வைத்து விட்டது.

ஐபிஎல் போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை விட ஒவ்வொரு அணியின் சியர்லீடர் அழகிகள் தான் அனைவரையும் கவருகிறார்கள். இப்படி சியர்லீடர்களாக செயல்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகுப் பெண்கள் ஐபிஎல் சியர்லீடர் குழுக்களில் இணைந்து செயல்படுகின்றனர்.

இவர்களிடம் வீரர்கள் ஜொள்ளு விட்டது குறித்து பிளாக்கில் எழுதப் போய் சிக்கலில் மாட்டி, வேலையை இழந்து நாடு திரும்பிள்ளார் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கேப்ரியலா பாஸ்குவாலோட்டோ.

இவர் ஆஸ்திரேலிய வீரர்களின் சேஷ்டைகள் குறித்து பிளாக்கில் பெயர் குறிப்பிடாமல் எழுதியிருந்தார். மேலும் தன்னிடமும், பிற அழகிகளிடமும் ஜொள்ளு விட்டவர்கள் குறித்தும் எழுதியிருந்தார். இதுகுறித்து ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் புகார் கூறவே, தற்போது கேப்ரியலா நீக்கப்பட்டு நாடு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து கேப்ரியலா தனது பிளாக்கில் கூறுகையில், ஒவ்வொரு போட்டி முடிந்ததும் இரவில் பார்ட்டி நடப்பதுண்டு. .அப்போது கிரிக்கெட் வீரரர்கள், எங்களிடம் வழிந்து வழிந்து பேசுவார்கள்.

தென் ஆப்பிரிக்க வீரர் கிரீம் ஸ்மித் தனது காதலி அருகில் இல்லாவிட்டால் மற்றவர்களிடம் வழிவார். ஆஸ்திரேலியர்கள்தான் மிகவும் சேஷ்டை பிடித்தவர்கள். குறிப்பாக ஐடன் பிளிஸ்ஸார்ட், டேன் கிறிஸ்டியன் ஆகியோரைச் சொல்லலாம்.

ஒரு முறை போட்டி முடிந்ததும் ஒரு வீரர் எங்களை அணுகி உங்களையெல்லாம் முத்தமிட விரும்புகிறேன். அவர்களில் குறிப்பாக 3 பேரிடம் மட்டும் அவர் அதிகமாகவே ஜொள்ளு விட்டார். இத்தனைக்கும் அந்த வீரருக்கு அவரது ஊரில் அழகான கேர்ள் பிரண்ட் இருக்கிறார். இருந்தாலும் எங்கள் அத்தனை பேர் மீதும் அவர் வெறியாக இருந்தார்.

என்னைப் பார்த்து என்னுடன் வா, பேசலாம் என்று கூட கேட்டார். நான் போகவில்லை.

இந்திய வீரர்கள் அப்படி இல்லை. சில வீரர்கள் மிக நன்றாகப் பழகுகிறார்கள். கேப்டன் டோணி, ஹோரித் சர்மா ஆகியோர் அமைதியானவர்கள். சச்சின் டெண்டுல்கர் இதுபோன்ற இடங்களுக்கு வருவதே இல்லை என்று கூறியுள்ளார் கேப்ரியலா.

கேப்ரியலாவின் இந்த பிளாக் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி விட்டது. ஆஸ்திரேலிய வீரர்கள் இதுகுறித்து அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து தற்போது கேப்ரியலாவை நீக்கி விட்டது ஐபிஎல் நிர்வாகம். மேலும் அவரை தென் ஆப்பிரிக்காவுக்கும் அனுப்பி வைத்து விட்டது.

இதை கண்டித்துள்ளார் கேப்ரியலா. நான் நடந்ததைத்தான் சொன்னேன். உண்மையைச் சொன்னதற்காக எனது வேலையைப் பறித்து விட்டது நியாயமல்ல என்று கூறியுள்ளார் கேப்ரியலா.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கான சியர்லீடர்கள் குழுவில் இடம் பெற்றிருந்தவர் கேப்ரியலா என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை வருமானவரி அலுவலகத்தில் கனிமொழி எம்.பி. ஆஜர்.

சென்னை வருமானவரி அலுவலகத்தில்    கனிமொழி எம்.பி. ஆஜர்

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டி.வி. பங்குதாரர் கனிமொழி எம்.பி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் மீதும் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் கடந்த 6-ந் தேதி இருவரும் ஆஜர் ஆனார்கள். நேற்று அமலாக்கப்பிரிவு முன்பு ஆஜரான போது சென்னையில் வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு முன்பு இன்று ஆஜராக வேண்டியது இருப்பதால் இன்னொரு நாளில் விசாரணைக்கு வருவதாக தெரிவித்தனர்.

இதற்கு அனுமதி வழங்கப்பட்டது, இதைத் தொடர்ந்து கனிமொழியும், சரத்குமாரும் இன்று காலை 11.45 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரிதுறை அலுவலகத்தில் வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு இணை இயக்குனர் வித்யா ராமச்சந்திரன் முன்பு ஆஜர் ஆனார்கள். 2007-ம் ஆண்டு டெல்லி மேல்சபை எம்.பி. பதவிக்கு போட்டியிட்ட போது கனிமொழி காண்பித்த சொத்துக்கணக்கில் கலைஞர் டி.வி. பங்கு குறித்து குறிப்பிட்டிருந்தாரா என்பது குறித்து விசாரிப்பதற்காக வருமான வரித்துறை புலனாய்வு பிரிவினர் சம்மனை அனுப்பி இருந்தனர்.

அதுபற்றி இன்று விசாரணை நடந்தது அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு கனிமொழி விளக்கம் அளித்தார். கனிமொழி வரும் தகவல் அறிந்ததும் ஏராளமான வெளி மாநில பத்திரிகையாளர்கள், டி.வி. நிறுவனத்தினர் குவிந்து இருந்தனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

திடீரென கைது செய்யப்பட்ட ராகுல்காந்தி விடுதலை.

திடீரென கைது செய்யப்பட்ட  ராகுல்காந்தி விடுதலை

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் விவசாயிகள் நிலம் அதி விரைவு சாலை போடுவதற்காக கையகப்படுத்தப்பட்டது. அந்த நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு தொகை கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் 2 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதால் அவர்களது போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி நேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தார். விவசாயிகளோடு அமர்ந்து தர்ணா செய்தார். போலீசார் பல தடவை பாதுகாப்பு பிரச்சினைகள் பற்றி எடுத்து சொன்ன பிறகும் அவர் போராட்டத்தை கைவிடவில்லை.

இதனால் உத்தரபிரதேச மாநில போலீசார் ராகுல்காந்தியை இரவு 11 மணிக்கு கைது செய்தனர்.ராகுல் காந்தியை போலீசார் வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். அவர் எங்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது மர்மமாக இருந்தது. அவர் இன்று மாஜிஸ் திரேட் முன்பு ஆஜர் படுத்தப் படுவார் என்று எதிர்பார்க் கப்பட்டது.

சுமார் ஒரு மணி நேரம் அங்கும்-இங்குமாக அழைத்து செல்லப்பட்ட அவர் பிறகு கஸ்னா போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டார். அங்கு போலீஸ் காரர்களிடம் அவர், எந்த அடிப்படையில் என்னை கைது செய்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு போலீசார் எந்த பதிலும் கொடுக்க வில்லை.

இதையடுத்து ராகுல் காந்தியை சொந்த ஜாமீனில் விடுவிப்பதாக போலீசார் கூறினார்கள். அதை ராகுல் ஏற்றுக் கொண்டதால் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்.ராகுல்காந்தியை உத்தர பிரதேச மாநில போலீசார் தங்களது பாதுகாப்புடன் டெல்லிக்கு அழைத்து சென்றனர். இரவு 2.15 மணி அளவில் அவர் சாரை காலேகான் என்ற பகுதியில் இறங்கி விடப்பட்டார்.

இதைத் தொடர்ந்து ராகுல் கைதான பிறகு நிலவிய 3 மணி நேர பரபரப்பு முடிவுக்கு வந்தது. ராகுலுடன் கைதான காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங், உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ரீடா பகுகுனா, காங்கிரஸ் எம்.பி.ராஜ்ப்பர் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது திக்விஜய்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகள் பிரச்சினைக்காக ஜெயிலுக்கு செல்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மாயாவதி அரசுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும். பட்டா பரகலில் கூடுதல் இழப்பீடு கேட்ட விவசாயிகள் மீது மனித உரிமை மீறப்பட்டுள்ளது. இது பற்றி தேசிய மனித உரிமைக் கமிஷன் விசாரிக்க வேண்டும். ராகுலை கைது செய்ததற்காக நாடெங்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.

மாயாவதி அரசு எல்லை மீறி நடந்து கொள்கிறது. ராகுல்காந்தி 144 தடை உத்தரவை மீறி விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராகுல் போராட்டத்தை தொடங்கிய பிறகே இந்த தடை உத்தரவை அவசரம், அவசரமாக பிறப்பித்துள்ளனர்.

இது கண்டனத்துக்குரியது. நாங்கள் நடத்தியது அமைதியான போராட்டம், விவசாயிகளுடன் அமர்ந்து இருந்த போது ராகுல் "மைக்" கில் கூட பேசவில்லை. விவசாயிகளின் போராட்டம் மாயாவதி அரசின் தோல்வியைக் காட்டுகிறது. விவசாயிகளுக்காக உண்மையிலேயே பாடுபடும் ஒரே கட்சி காங்கிரஸ் கட்சிதான்.

இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்.

ராகுல்காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

மாயாவதி அரசு விவசாயிகளிடம் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறது. பெண்கள், இளைஞர்கள் மீது வன்முறை நடத்தப் பட்டுள்ளது. இந்தியன் என்று சொல்லிக் கொள்ள வெட்கமாக உள்ளது மாயாவதி தன் சொந்த மாநில மக்கள் மீது தாக்குதல் நடத்துவது வேதனை தருகிறது.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

ராகுல்காந்தி, திக்விஜய்சிங் குற்றச்சாட்டுக்களுக்கு முதல்-மந்திரி மாயாவதி பதில அளித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உத்தரபிரதேச மாநிலத்தில், விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதாக கூறிக்கொண்டு, சட்டத்தை மீறுவோர் யார் என்றாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் போராட்டம் என்று கூறிக்கொண்டு, ராகுல்காந்தி அரசியல் நாடகம் ஆடுகிறார். விவசாயிகளுக்கு குறைவான இழப்பீடு தொகை வழங்கப்பட்டதாக பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். இதை கண்டிக்கிறோம் .

ராகுல்காந்தி ஏழை-எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடும் தலைவர் அல்ல. விவசாயிகள் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ள அவருக்கு எந்த தகுதியும் இல்லை. ராகுல்காந்தி மீது தடையை மீறியதற்காக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராகுல் போராட்டம் நடத்த வரும் முன்பே தடை உத்தரவு அமலில் உள்ளது.

இவ்வாறு மாயாவதி கூறினார்.

சிவகங்கை தொகுதி வெற்றி குறித்து விமர்சனம் : ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் கண்டனம்.

சிவகங்கை தொகுதி வெற்றி குறித்து விமர்சனம்:    ஜெயலலிதாவுக்கு    காங்கிரஸ் கண்டனம்

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜரத்தினம், புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் புஷ்பராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை உயர்நீதி மன்றத்தில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது அந்த வழக்கில் கூறப்பட்டுள்ள ஒரு புகாரைப் பற்றி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருப்பது ஒரு பொறுப்பற்ற செயல் என்று நாங்கள் கூற விரும்புகிறோம். அவருடைய அறிக்கையில் அவர் யாரை குற்றம் சாட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் தேர்தல் கமிஷனையும், தேர்தல் அதிகாரிகளையும் குற்றம் சாட்டுகிறார். அவருடைய அறிக்கையை நாங்கள் பொருட்படுத்தவில்லை. அதே நேரத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வரும் பொழுது ஜெயலலிதா ஒரு சாட்சியாக வந்து சாட்சியம் அளிக்க விரும்பினால் அதனை நாங்கள் வரவேற்போம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா மீது விரைவில் தாக்குதல் நடத்துவோம் ; அல்கொய்தா மீண்டும் எச்சரிக்கை.

அமெரிக்கா மீது விரைவில் தாக்குதல் நடத்துவோம்; அல்கொய்தா மீண்டும் எச்சரிக்கை

பின்லேடன் கொல்லப்பட்டதால் அல்கொய்தா இயக்கத்தினர் கடும் கோபத்தில் உள்ளனர். பழிக்கு பழி வாங்க விரைவில் தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் அல்கொய்தா இயக்கத்தின் ஏமன் பிரிவு மீண்டும் ஒரு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

அல்கொய்தா மூத்த தலைவர்களில் ஒருவரான நசீர்-அல்-வகிஷி இணையத்தளம் ஒன்றில் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

எங்களது புனித போர் ஓய்ந்து விடவில்லை. இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்கர்களுக்கு எதிராக மிகப்பெரிய போர் நடத்தப்படும். பின்லேடனை கொன்று விட்டதால் எல்லாம் முடிந்து விட்டதாக அமெரிக்கர்கள் முட்டாள் தனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

விரைவில் நாங்கள் நடத்தப்போகும் புனிதப் போர் மிகப் பெரியதாகவும் மோசமானதாகவும் இருக்கும். இதற்காக அமெரிக்கா காத்திருக்கிறது. இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

அதன் பிறகு புனிதப் போர் தாக்குதல்கள் அணிவகுத்து வரும். பின்லேடன் மரணம் மூலம் எங்களது புனிதப் போர் பணி தீவிரம் அடைந்துள்ளது. இவ்வாறு அந்த எச்சரிக்கை தகவலில் கூறப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் காய்கறி விலை மீண்டும் உயரும் அபாயம்.


கடந்த மாதம் சற்று விலை குறைவாக இருந்த காய்கறிகள் மீண்டும் விலை உயர்ந்து வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரே வாரத்தில் 10 முதல் 15 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. வழக்கமாக தினமும் 500 லாரிகளில் கோயம்பேட்டுக்கு காய்கறிகள் வரும்.

ஆனால் இப்போது 250 லாரிகளில் மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடுமையான வெயிலால் காய்கறி விளைச்சல் குறைவே தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் எதிர்வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியமான பொருட்களின் விலைகள் உயரும் நிலை உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியமான பொருட்களின் விலைகள் உயரும் என்பது மத்திய, மாநில அரசாங்கத்திற்கு தெரிந்த உண்மை.

அதே நேரம் பெட்ரோல், டீசல் விலை குறைந்தால் விலைவாசியும் கணிசமாகக் குறையும் என்பதும் தெளிவு.

தேர்தல் முடிவிற்கு பின் மத்திய அரசாங்கம் மீண்டும் தனது விளையாட்டை துவங்கவுள்ளது.

மக்களின் முன்னால் அமைதிகாக்கவோ அல்லது வேறு காரணங்கள் சொல்லவோ நமது பிரதமரும் அவர்தம் சகாக்களும் தயாராகிவிடுவார்கள்.

எதிர்கட்சிகளும் போராட்டம், எதிர்ப்பு என்று களம்காணும்.

ஆனால் மக்கள் தம் சட்டைப் பையில் உள்ள காசுகளை செலவழித்து திணறுவர்.

அதற்குள் அடுத்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு வந்துவிடும்.

மறுபடியும் ஆரம்பத்தில் இருந்து தொடங்கவேண்டும்.