Friday, July 1, 2011

எட்டு வயது மகளை கதறக் கதற கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூர தாய் .

பரமத்திவேலூர் அருகே கழுத்தை அறுத்து சிறுமி கொலை: என் கணவருக்கு பல பெண்களுடன்  தொடர்பு  இருந்ததால் கொன்றேன்;  கைதான தாய் பரபரப்பு வாக்குமூலம்

பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல் பாளையம் அருகே உள்ள சின்னாகவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (29). நடன கலைஞராகவும், கட்டிட மேஸ்திரியாகவும், வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி ராதா (27). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு தீபக்காந்த் (10) என்ற 5-வது படிக்கும் மகனும், நிவேதா (8) என்ற 3-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இவர்கள் நல்லாகவுண்டம் பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து வந்தனர்.

அய்யப்பனுக்கும், ராதாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அய்யப்பன் ராதா மீதும், ராதா அய்யப்பன் மீதும் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி மோதிக் கொண்டனர். இந்நிலையில் நேற்று மாலை நிவேதா பள்ளிக்கூடம் சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது ராதா வீட்டிற்குள் நிவேதாவை அழைத்து சென்றார்.

பின்னர் திடீரென அரிவாளை எடுத்து வந்து ஆட்டை அறுப்பது போல பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் கதற கதற அறுத்தார். இதில் அலறி துடித்த சிறுமி ரத்த வெள்ளத்தில் பிணமானாள். பின்னர் கொலை வெறி தீராத ராதா மகன் தீபக்காந்த்தையும் பிடித்தார். அரிவாளில் ரத்தம் சொட்ட...சொட்ட...

ராதா கொலை வெறியில் இருந்ததை பார்த்த அவன் அலறினான். அப்போது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்து வீட்டில் உள்ளவர்கள், மற்றும் வீட்டின் மற்றொரு அறையில் படுத்து தூங்கி கொண்டிருந்த அய்யப்பன் ஆகியோர் ஓடிவந்தனர். அப்போது நிவேதா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதையும், தீபக்காந்த்தை கொலை செய்ய ராதா அரிவாளுடன் இருப்பதையும் கண்டு திடுக்கிட்டனர்.

இதையடுத்து அய்யப்பன், ராதாவிடம் இருந்த மகன் தீபக்காந்த்தை உயிருடன் மீட்டார். மகள் நிவேதாவின் பிணத்தை பார்த்து கதறி அழுதார். ஆனால் ராதா பித்து பிடித்தது போல் வெறியுடன் காணப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராதாவையும், அய்யப்பனனையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பெற்ற மகளையே கொடூரமாக கொலை செய்த ராதாவை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

என் கணவர் அய்யப்பனும், நானும் கட்டிட வேலை செய்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்தனர். ஆரம்பத்தில் சந்தோசமாகத்தான் இருந்தோம்.திடீரென எங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது.

என் கணவர் அய்யப்பனுக்கும், நாங்கள் குடியிருக்கும் பகுதியை சேர்ந்த திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கும் ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. பின்னர் அவர்கள் இருவரும் ஒரு நாள் ஊரை விட்டு ஓடிவிட்டனர். இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் போலீசில் புகார் செய்தார். அவர் எனது மனைவியை அய்யப்பன் கடத்தி சென்று விட்டார் என்று கூறியிருந்தார்.

இதையறிந்த என் கணவர் அய்யப்பன் அந்த பெண்ணை மீண்டும் அவளது கணவரிடமே ஒப்படைத்தார்.பின்னர் என் கணவருக்கும் திருமணம் ஆகாத ஒரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண் தற்போது 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், எனவே அந்த பெண்ணை அழைத்து வந்து குடும்பம் நடத்துவேன், நீ உன் வீட்டிற்கு சென்று விடு என்றார்.

இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் என் கணவர் அய்யப்பனுக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. காதலித்து திருமணம் செய்து கொண்ட என்னை ஏமாற்றியதால் நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன்.

நான் மட்டும் தற்கொலை செய்து கொண்டால் குழந்தைகள் அனாதையாகி விடுவார்களே என்று கருதி குழந்தைகளை கொலை செய்து விட்டு நானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து பள்ளி விட்டு திரும்பிய எனது மகள் நிவேதாவை அரிவாளால் கழுத்தை அறுத்து கொன்றேன்.

எனது மகனை கொலை செய்ய முயன்ற போது அவன் அலறியதால் அனைவரும் ஓடிவந்து அவனை என்னிடம் இருந்து காப்பாற்றினர் என்று கூறினார். இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ராதாவை ஜெயிலில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே ராதாவின் கணவர் அய்யப்பனிடம் போலீசார் விசாரித்த போது, எனது மனைவி ராதாவுக்கும், எங்கள் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், கள்ளத்தொடர்பு இருந்தது. இதுப்பற்றி நான் கேட்டதால் அவள் வெறிப்பிடித்து எனது மகளை கொன்று விட்டாள் என்று கூறினார். அய்யப்பனை போலீசார் விசாரணைக்கு பின்னர் அனுப்பி விட்டனர்.கணவன் மனைவி மீதும், மனைவி கணவன் மீதும் மாறி, மாறி கள்ளக்காதல் இருப்பதாக புகார் கூறியதால் குடும்பமே சீரழிந்து விட்டது.

மத்திய பிரதேசத்தில் சிறுமிகளை ஹார்மோன் ஊசிபோட்டு ஆண்களாக மாற்றும் கொடுமை.

மத்திய பிரதேசத்தில் சிறுமிகளை ஹார்மோன் ஊசிபோட்டு ஆண்களாக மாற்றும் கொடுமை

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் ஏறத்தாழ 300 சிறுமிகளை சிறுவர்களாக மாற்றும் முயற்சியில் அவர்களது பெற்றோர்களே இறங்கியுள்ள தகவல் வெளிவந்துள்ளது.

இதற்காக மேற்கொள்ளப்படும் ஜெனிட்டோபிளாஸ்டி என்ற சிகிச்சையின்படி, ஆண் ஹார்மோன்கள் பெண்களின் உடலினுள் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் தங்களது பெண்கள், ஆண்களாக மாறி விடுவர் என நம்புகின்றனர்.

இந்த சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் வரை செலவிடுகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஆராய்ந்து இன்னும் 15 நாட்களில் தகவல் அளிக்குமாறு தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பு அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இது பற்றி மருத்துவர் வி.பி. கோஸ்வாமி கூறும்போது, இது போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளும் போது அந்த குழந்தைகளின் உடல் மற்றும் மன நலத்தை பார்க்க வேண்டும் எனவும், இதனால் அவர்கள் மலட்டு தன்மையை அடையும் அபாயம் மற்றும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படும் நிலை உள்ளது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதனை சமூகத்தில் நடைபெறும் முட்டாள்தனம் என்றும் சாடியுள்ளார்.

மனித உணர்ச்சிகள் நாய்களுக்கும் புரியும் !

மனிதர்களின் உணர்ச்சிகளை நாய்கள் இனம் கண்டறிந்து கொண்டு அதற்கேற்ப நடந்துகொள்வதாக நியூசிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மகிழ்ச்சியான மற்றும் கோபமான மனிதர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளையும், சிரிக்கின்ற மற்றும் அழுகின்ற மனிதர்களுக்கு இடையே எழும் வேறுபாடுகளையும் நாய்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியுமாம்.

தெற்கு தீவில் உள்ள ஒடாகோ பல்கலைக்கழகம் 90 டியூனிடின் வகை நாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியது. ஆய்வின் போது குழந்தைகளின் சிரிப்பு, அழுகை, கொஞ்சல் போன்ற உணர்வுகளை பதிவு செய்தும் மனிதர்களின் பல்வேறுபட்ட உணர்வுகளை பிரதிபலிக்கும் படங்களையும் நாய்களிடம் காட்சிப்படுத்தினர் ஆய்வாளர்கள்

உடல்மொழியை வெளிப்படுத்தும் நாய்கள்

அந்த காட்சியில் இருந்த உணர்வுகளை நாய்களை புரிந்து கொண்டு உணர்ச்சிகளை சரியாக வெளிப்படுத்தியதாக டெட் ரப்மென் என்ற ஆஸ்திரேலிய பேராசிரியர் தெரிவித்துள்ளார். மனிதர்களின் உணர்வுகளை உடனடியாக புரிந்து கொள்வதில் நாய்கள் மிகச்சிறந்தவை என்று ஒடாகோவில் இருந்து வெளிவரும் டெய்லி டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மனித உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப நாய்கள் அவற்றின் உடல்மொழியை வெளிப்படுத்தி யதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றியுள்ள பிராணிகள்

நாய்கள் நன்றியுள்ளவை, விசுவாசம் மிக்கவை அதனால்தான் உலகம் முழுவதும் செல்லப்பிராணியாக வளர்க்கப்படுகின்றன. வீட்டு எஜமானர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப காரியங்களை நிறைவேற்றுவதில் கில்லாடிகளாக உள்ளன. இது நாய்களிடம் இயல்பிலேயே அமைந்துள்ள சிறப்பம்சமாகும்.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மேஜிக் எதுவுமில்லை - மன்மோகன் சிங்.



கறுப்புப் பணம் மற்றும் ஊழலை உடனே ஒழித்துவிடும் மேஜிக் எதுவும் தன்னிடம் இல்லை என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

நேற்று டெல்லியில் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங்,கறுப்புப் பண விவகாரம் மற்றும் ஊழல் ஒழிப்பு குறித்து விரிவாகப் பேசினார்.

அவர் கூறுகையில், "நாட்டில் கறுப்புப் பணம் மற்றும் ஊழல் பிரச்சினை இருப்பது உண்மைதான்.

ஆனால் ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே இந்தப் பிரச்சினையில் சிக்கியுள்ளன. இவற்றின் பொருளாதாரத்தில் 25 சதவீதம் அளவுக்கு கறுப்புப் பணம் பிரதான பங்கு வகிக்கிறது.

கறுப்புப் பணம், ஊழல் இரண்டுமே ஒழிக்கப்பட வேண்டியவைதான். அதற்கான வேலையில் இறங்கியுள்ளோம். ஆனால் நினைத்த மாத்திரத்தில் இந்தப் பிரச்சினைகளை தீர்த்துவிடும் மேஜிக் எதுவும் என்னிடமில்லை. கடினமான இந்த சமூகப் பிரச்சினைக்கு படிப்படியாகத்தான் தீர்வு காணவேண்டும்.

கறுப்புப் பண விவகாரத்தில், அந்நிய நாடுகளுடன் மிகவும் போராடி தகவல்களைப் பெற்று வருகிறோம். இது ஒரு தொடர்ச்சியான நடவடிக்கை. பல்வேறு சட்டச் சிக்கல்கள் கொண்டது. எனவே கொஞ்சம் அவகாசம் பிடிக்கும்," என்றார்.

சென்னையில் இருந்து மதுரை, திருவனந்தபுரத்திற்கு ஏ.சி. சொகுசு ரெயில் : இடையில் நிற்காமல் செல்லும்.


சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரை, திருவனந்தபுரத்திற்கு தூரந்தோ ரெயில் புதிதாக விடப்படுகிறது.

தெற்கு ரெயில்வே கால அட்டவணையில் இரண்டு தூரந்தோ ஏ.சி. ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு செல்லும் இந்த குளு குளு வசதி ரெயில் வழியில் எங்கும் நிற்காது.

வாரத்திற்கு இரண்டு நாள் இந்த ரெயில் சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல் வழியாக சென்றடையும். திங்கள், மற்றும் புதன்கிழமைகளில் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும். செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மதுரையில் இருந்து புறப்பட்டு சென்னை வரும்.

இதே போல் சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வாரம் இருமுறை செல்லக்கூடிய தூரந்தோ எக்ஸ்பிரஸ் இடையில் எங்கும் நிற்காது. செவ்வாய், மற்றும் வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து புறப்படும். புதன் மற்றும் சனிக்கிழமை மறு மார்க்கத்தில் இருந்து புறப்படும். இந்த 2 புதிய ரெயில் அறிமுகப்படுத்தபடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.


68 ரெயில்
கள் வேகம் அதிகரிப்பு : திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விரைவில் தினமும் இயக்கப்படும் ; பொது மேலாளர் அறிவிப்பு.

தெற்கு ரெயில்வே கால அட்டவணையை வெளியிட்ட பொதுமேலாளர் தீபக் கிருஷ்ணன் பின்னர் நிருபர்களிடம கூறியதாவது:-

தெற்கு ரெயில்வே மூலம் ஒரு நாளைக்கு 220 ரெயில்களை 266 முறை இயக்கப்படுகின்றன. மின்சார ரெயில்கள் 700 முறை இயக்கப்படுகிறது. கடந்த 2009-10-ம் ஆண்டில் 69 கோடி மக்கள் ரெயிலில் பயணம் செய்தனர். 2010-11-ம் ஆண்டில் இது 73 கோடியே 75 லட்சமாக உயர்ந்தது.

2009-10-ம் ஆண்டு வருவாய் ரூ.2463 கோடியாகும். 2010-2011-ம் ஆண்டு ரூ.2049 கோடியாக குறைந்தது. கடந்த ஆண்டு 2230 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. ஆனால் 1651 ஆக தற்போது குறைக்கப்பட்டுள்ளன. சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்ட பல ரெயில்கள் நிரந்தரமாக்கப்பட்டதே இந்த குறைவுக்கு காரணமாகும்.

41 ரெயில்களின் வேகம் 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை வேகம் அதிகரிக்கப் பட்டுள்ளது. 27 ரெயில்களின் வேகம் 15 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை அதிகரிக்கப் பட்டுள்ளது. பயணிகள் வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.1750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்டிகள் பற்றாக்குறையாக உள்ளது. இதற்கான பெட்டி தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பெட்டிகள் அதிகரிக்கப்பட்டவுடன் தினசரி விடப்படும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.


சென்னை எழும்பூர் வழியாக புதுச்சேரி-டெல்லிக்கு சூப்பர் பாஸ்ட் புதிய ரெயில்; வாரந்தோறும் இயக்கப்படும்


புதுச்சேரி - புதுடெல்லிக்கு புதிய ரெயில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் இருந்து டெல்லிக்கு வாரத்தில் ஒரு நாள் புதன்கிழமை தோறும் இந்த ரெயில் இயக்கப்படுகிறது.
காலை 9.05-க்கு புறப்பட்டு எழும்பூருக்கு பகல் 1 மணிக்கு வருகிறது. பின்னர் பகல் 1.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 4 மணிக்கு டெல்லி சென்றடைகிறது.
டெல்லியில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு மதியம் 2.30 மணிக்கு வருகிறது. பகல் 2.40 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரிக்கு ஞாயிற்றுக் கிழமை இரவு 11.50 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரெயில் அதிவேக ரெயிலாக இயக்கப்படுகிறது. புதுச்சேரியில் இருந்து 6-ந்தேதி முதல் இந்த புதிய ரெயில் புறப்பட்டு செல்கிறது.


கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் 2 மின்சார ரெயில்கள் செங்கல்பட்டு வரை நீட்டிப்பு.

சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் (எண்.40107) செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து 7.50 மணிக்கு புறப்பட்டு 8.35 மணிக்கு செங்கல்பட்டை அடையும்.

இதேபோல மாலை 4.50 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்படும் மின்சார ரெயிலும் (40007) செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு மாலை 6.40 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும்.

இதேபோல செங்கல்பட்டில் இருந்து காலை 8.35 மணிக்கும், மாலை 6.55 மணிக்கும் கடற்கரைக்கு புறப்படும். காலை 10.23 மணிக்கும், இரவு 8.35 மணிக்கும் அந்த ரெயில்கள் கடற்கரையை வந்தடையும்.

இதேபோல ஆவடி- சென்னை கடற்கரை (பிற்பகல் 1, 2.40 மணி), சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி (மாலை 3.45), கும்மிடிப்பூண்டி-சென்ட்ரல் (மாலை 5.30 மணி), சென்ட்ரல்- திருவள்ளூர் (மாலை 6.50 மணி), திருவள்ளூர்-சென்ட்ரல் (இரவு 8.45) ஆகிய வழித்தடங்களில் கூடுதலாக மின்சார ரெயில் சர்வீஸ் இயக்கப்படுகிறது.

கொல்கத்தா மருத்துவமனையில் கடந்த 36 மணி நேரத்தில் 17 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் .

கொல்கத்தா மருத்துவமனையில் கடந்த 36 மணி நேரத்தில் 17 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்

கொல்கத்தாவில் உள்ள பி.சி.ராய் மருத்துவமனையில் கடந்த 36 மணி நேரத்தில் 17 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து உறவினர்கள் இன்று மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், பி.சி ராய் மருத்துவமனை கண்காணிப்பாளர், டி.பால் கூறுகையில் இறந்த குழந்தைகள் செப்டிகேமியா மற்றும் குறைந்த எடை ஆகிய பிரச்சினைகள் பாதிக்கப்பட்டு இருந்தனர் என தெரிவித்தார்.

கொல்கத்தா மருத்துவமனையில் 17 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்த அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறுகையில் இந்த குழந்தைகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தில்தான் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்தார் .

மேற்கு வங்கத்தில் சுகாதாரத் துறையையும் மம்தா பானர்ஜியே கவனித்து வருகிறார். முன்னதாக செப்டம்பர் 2002-ல் நிமோனியா, இரைப்பை-குடல் பிரச்னை காரணமாக 2 மாதக் குழந்தை உள்ளிட்ட 14 குழந்தைகள் இந்த மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

அழிந்து கொண்டிருக்கும் சிட்டுக் குருவிகள்.



திருவனந்தபுரம், உலகில் உள்ள குருவிகள் இனம் வேகமாக அழிந்து வருவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த பறவைகள் பாதுகாப்பு மையம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த மையம், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆராய்ச்சி மேற்கொண்டது. இந்த ஆராய்ச்சியின் முடிவில் குருவிகள் இனம் வேகமாக அழிந்து வருவது தெரியவந்துள்ளது. இந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் செல்போன் கோபுரங்களாலும், பிற காரணங்களாலும் குருவிகள் இனம் அடியோடு அழிந்து வருவதாக கூறியுள்ளது.

கடந்த 2008-2009 ல் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் படி கேரளத்தில் குருவிகள் கிட்டத்தட்ட அழிந்துவிட்டதாக கொல்லத்தில் உள்ள எஸ்.என் கல்லூரி விலங்கியல் துறை துணை பேராசிரியர் டாக்டர் சயீனுதின் கூறியுள்ளார்.

மீண்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 27 பைசா, டீசல் 15 பைசா அதிகரிப்பு - கவலைப்படாத மக்கள்.



ஏற்கனவே டீசல், காஸ் விலை உயர்த்தப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், லாரி உரி்மையாளர்கள் ஸ்டிரைக்கில் குதிக்கத் தயாராகி வரும் நிலையில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி விட்டது அரசு.

பெட்ரோல் விலையை லிட்டருக்கு 27 பைசாவும், டீசல் விலையை லிட்டருக்கு 15 பைசாவும் உயர்த்தியுள்ளது அரசு. இன்று நள்ளிரவு முதல் இது அமலுக்கு வருகிறதாம். பெட்ரோல் பங்க் டீலர்களின் கமிஷன் தொகை உயர்த்தப்பட்டதால் பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்தி வேண்டியதாகப் போய் விட்டதாக அரசு காரணம் கூறியுள்ளது.

பெட்ரோல் பங்க்குளுக்கு, பெட்ரோலுக்காக தரப்படும் டீலர் கமிஷன் தொகையை கிலோ லிட்டருக்கு ரூ. 1218 என்பதிலிருந்து ரூ. 1499 ஆக உயர்த்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல டீசலுக்கான டீலர் கமிஷன் தொகையை ரூ. 747 என்பதிலிருந்து ரூ. 912 ஆக உயர்த்த அரசு அனுமதித்துள்ளது. இதையடுத்து தற்போது பெட்ரோல், டீசல் விலையில் கையை வைத்து மக்கள் தலையில் கையை வைக்க வைத்து விட்டனர்.

சில தினங்களுக்கு முன்புதான் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தியது அரசு. இந்த நிலையில் மீண்டும் டீசல் விலையை உயர்த்தியுள்ளதால் லாரிகள் ஸ்டிரைக் நிச்சயம் நடக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் எழுந்துள்ளது.