Monday, June 27, 2011

அப்பாவி ஈழதமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா.வில் மீண்டும் தீர்மானம்.

அப்பாவி ஈழதமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா.வில் மீண்டும் தீர்மானம்: பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் முயற்சி

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த ஈழப்போரின் போது 1 1/2 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. ஈழத்தில் ரத்த ஆறு ஓடிய போதும், இந்தியா உள்பட வெளிநாடுகள் மவுனம் சாதித்தன.

தமிழ் இனத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இந்த படுகொலை தொடர்பான கொடூரங்களை பல்வேறு ஆதாரங்கள் மூலம் மேலை நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். ராஜபக்சே போர்க் குற்றவாளிதான் என்ற உண்மையை இப்போதுதான் பல நாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக உணரத் தொடங்கி உள்ளன.

எனவே ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்று வருகிறது. இதன் ஒரு நடவடிக்கையாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இரு நாடுகளும் கூட்டாக இணைந்து இந்த திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகின்றன. இந்த நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படும்.

பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி சிங்கள அரசுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளிடம் இது பற்றி கூறி ஆதரவு திரட்ட ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.

இதற்காக அவர் அறிக்கைகள் தயாரித்து தங்கள் ஆதரவு நாடுகளுக்கு அனுப்பி வருகிறார். கடந்த தடவை இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, இந்தியா அதை எதிர்த்தது.இது ஈழத் தமிழர்களுக்கு மத்திய அரசு செய்த துரோகம் என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஐ.நா.சபையில் மீண்டும் இலங்கையை காப்பாற்ற இந்தியா முயலுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

இதற்கிடையே இலங்கையில் ராஜபக்சேயும் அவரது சகோதரர்களும் சர்வாதிகாரிகள் போல ஆட்டம் போட தொடங்கி உள்ளனர். பெரிய அளவில் ஊழல்கள் செய்து அரசு சொத்துக்களை அவர்கள் கொள்ளையடிப்பதாக கூறப்படுகிறது.

கோதபயராஜபக்சேயின் மகனுக்கு வரும் 30-ந் தேதி கொழும்பில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக ஐரோப்பிய நாடுகளில் இருந்து 2 விமானங்கள் நிறைய ரோஜா பூ கொண்டு வந்துள்ளனர். ராஜபக்சே குடும்பத்தினரின் இந்த ஆடம்பரம் மக்களிடம் கடும் எரிச்சலையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம் : மருத்துவர்கள் தகவல்.



தற்போதைய அறிவியல் யுகத்தில் உடலில் இழந்த உறுப்புகளை மீண்டும் புதிதாக பொருத்துவதற்கு எந்தவித தடையும் இல்லை. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கண்டுபிடிப்பை மருத்துவ உலகம் கண்டுவருகிறது.

நமது உடலில் மிக மென்மையான பகுதி கண்ணாகும். வயதான காலத்தில் பாரம்பரியம் காரணமாக பார்வை இழப்பு ஏற்படுவதுண்டு. இந்த பார்வை இழப்பை சரி செய்து பாதிக்கப்பட்டவருக்கு மீண்டும் பார்வை பெற புதிய ஆதார செல்களை (ஸ்டெம் செல்) கண்களுக்குள் செலுத்தும் சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பார்வை இழந்த இரண்டு பெண்களுக்கு லட்சக்கணக்கான கரு ஆதார செல்கள் செலுத்தப்பட்டு அவர்களுக்கு பார்வை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கண்களுக்குள் ஆதார செல்களை செலுத்தும் துவக்க கட்ட சோதனை அமெரிக்காவில் நடைபெறுகிறது.

இருப்பினும் இந்த ஆதார செல் சோதனை பிரிட்டன் நோயாளிகளுக்கு வரவிருக்கும் இளவேனிற்காலத்தின் போது மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பார்வை இழப்பு ஏற்பட்ட விலங்குகளுக்கு ஆதார செல் செலுத்தும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் போது மிக அற்புதமான முடிவு கிடைத்தது. ஆதார செல்கள் செலுத்தப்பட்ட விலங்குகள் புதிய கண் பார்வை பெற்றுள்ளன. இந்த அதிநவீனமான சிகிச்சை மனிதர்களுக்கு மேற்கொள்ளப்படும் போது நல்ல பலனளிக்கும் என மருத்துவ விஞ்ஞானிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆதார செல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இரண்டாவது பரிசோதனை தற்போது மேற்கொள்ளப்படுகிறது. முதல் பரிசோதனை கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்றது.

புதிய சிகிச்சை முறை குறித்து மாசாசூட்ஸ் அதிநவீன செல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் மருத்துவர் லாங்சா கூறுகையில்,"முற்றும் சிகிச்சை அளிக்க முடியாத நோய்களுக்கு மட்டுமல்லாமல் பலவீனம் அடைந்த கண் நோய்களுக்கும் சிகிச்சையை இந்த ஆதார செல்கள் மூலம் அளிக்க முடியும்" என்றார்.

தமிழர் பகுதியில் சிங்களக் குடியேற்றம் : போருக்கு பின் தமிழர்களின் நிலை குறித்து அதிர்ச்சி தகவல்.



தமிழர் பகுதியில் சிங்களக் குடியேற்றம்: போருக்கு பின் தமிழர்களின் நிலை குறித்து அதிர்ச்சி தகவல்

இலங்கையில் 2009ம் ஆண்டு மே மாதம் நடந்த போருக்குப் பிறகு தமிழ் மக்களின் நிலை குறித்த உண்மை நிலை அறிய மலேசியாவில் இருந்து ஒருவரும், தமிழ்நாட்டில் இருந்து நான்கு பேரும் ஆகிய ஐந்து பேர் கொண்ட உண்மை அறியும் குழு கடந்த 25.05.2011 அன்று இலங்கை சென்றது.

அக்குழுவில் இடம்பெற்றுள்ள பர்னாட் பாத்திமா, பத்மாவதி, சண்முக பிரியா, இருதய ராஜ், தென்பாண்டியன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இலங்கையில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18, 19ம் தேதி நடந்த போருக்குப் பின் தமிழ் மக்களின் சமூக அரசியல், பொருளாதார, பண்பாட்டுச் சூழல் எப்படியிருக்கிறது என்பதை அறிய ஐவர் குழு தமிழகத்தில் இருந்து இலங்கை வடகிழக்குப் பகுதிக்கு சென்றது.

இலங்கை அரசு சர்வதேசக் குழுமத்திடம் சொல்வது போல நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களை முழுமையாக மீள்குடியேற்றம் செய்து விட்டோம் என்பதெல்லாம் உண்மையில்லை என்பதை நேரடியாகக் கண்டுணர்ந்தது. மேலும் யுத்த களத்தில் தமிழர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர்.

30 ஆண்டுகால போரில் 90,000 பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரம் பேர் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களாய் இருக்கின்றனர்.

ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு உயிரிழப்பு அல்லது ஒருவர் உடல் உறுப்பு பாதிக்கப்பட்டவராய் இருக்கின்றனர். முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட எல்லோரும் முழுமையாக மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை.

இன்னும் இரண்டு பெரிய முகாம்கள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன.

1. மீள் குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகட்டுவதற்கு பொருளாதார உதவி ஏதும் செய்யாமல் வெறும் நிலத்தை மட்டும் கொடுத்திருக்கிறார்கள்.

2. அடிப்படை வசதிகளான வீடு, குடிதண்ணீர், மின்சாரம், கழிப்பறை வசதி, மருத்துவ வசதி, சாலை வசதி போன்றவை செய்துதரப்படவில்லை.

3. தமிழர்கள் பகுதியில் சிங்களக் குடியேற்றங்கள் நடைப்பெற்று வருகின்றன.

4. இந்து கோயில்கள், வழிபாட்டுத் தலங்களை அழித்துவிட்டு புத்த சிலைகளை நிறுவி பௌத்த மதக் கொடியைப் பறக்கவிட்டுள்ளனர்.

5. தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளான வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், திரிகோணமலை, மட்டக்களப்பு, யாழ்பாணம் ஆகிய பகுதிகளில் ராணுவ முகாமகள் அடர்த்தியாக காணப்படுவதால் மக்கள் பீதியிலும் நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கியும் நாட்களை நகர்த்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.

6. போர் இனவாதத்தைத் தூக்கிப் பிடிக்கும் மகிந்த ராஜபக்சே நாட்டைப் பிளவுப்படுத்தும் பயங்கரவாதத்த்திற்கான யுத்தத்திலே நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என்று தொடர்ந்து கூறுவது சிங்கள இனவெறியை தூண்டுகின்ற வகையில் இருக்கிறது.

7. யுத்தம் முடிந்த பிறகு தமிழ் மக்கள் தங்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பிவிட்டனர் என்று இலங்கை அரசு சொல்வது உண்மையில்லை.

8. போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான மீள்குடியேற்றம் செய்வதற்கான ஒருங்கிணைந்த திட்டங்களை இலங்கை அரசு உருவாக்கவில்லை. இந்தியாவிலிருந்தும் மற்ற சர்வதேச நாடுகளில் இருந்தும் உதவியாக வந்த பொருட்களையும், பணத்தையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மறுவாழ்வுக்காகப் பயன்படுத்தவில்லை என்பதை மக்களே கூறுகிறார்கள்.

9. யுத்தம் முடிந்து விட்டதாகக் கூறும் இலங்கை அரசு வடகிழக்கு மாவட்டங்களில் அளவுக்கு அதிகமான ராணுவ முகாம்களை அமைத்திருக்கிறது.

10. இன்னும் உள்ள இரண்டு அகதிகள் முகாம்களில் 12,000 மக்கள் அகதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தடுப்பு முகாம்களில் போர் கைதிகள் எவ்வளவு பேர் உள்ளனர் என்றும் தெளிவாகத் தெரியவில்லை.

11. வடகிழக்கு பகுதியில் பேச்சு சுதந்திரம் தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறி யாராவது கூட்டமோ அல்லது அக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர் யாரோ அந்த நபர் திடீரென்று காணாமல் போய்விடுவதாவும் கூறுகிறார்கள்.

12. ஒரு இடத்தில் வாழ்ந்த மக்கள் சண்டைக் காரணமாக பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து உள்நாட்டுக்குள்ளேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

13. போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்க் குடும்பங்களில், மனைவிகள் கணவர்களைத் தேடி அலைகின்றனர். பிள்ளைகள் பெற்றோரை தேடி அலையும் நிலையில் உள்ளனர்.

14. குடும்பத்தை தலைமையேற்கும் பெண்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் இல்லை.

15. 17 வயது முதல் 28 வயது வரை இளம் விதவைகள் 12,000 பேர்கள் உள்ளனர். இந்தப் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். இவர்கள் ராணுவம், காவல்துறை, உளவுத்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

16. 18 வயதிற்கும் குறைவாக உள்ள 6 ஆயிரம் இளம் பெண்கள் திருமணமாவதற்கு முன்பே கருவுற்றிருக்கிற அவலநிலை உருவாகியுள்ளது.

17. போரில் குண்டடிப்பட்டு உடல் உறுப்புகளை இழந்து மாற்றுத் திறனாளிகளாக காலம் முழுவதும் மாற்றப்பட்டுள்ள தமிழர்களுக்கு முறையான மறுவாழ்வு திட்டம் இல்லாததால் நடுக்கடலில் விடப்பட்ட படகு போல விடப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களின் நிலையை அறிந்து இந்த உண்மையறியம் குழு சில பரிந்துரைகளை செய்துள்ளது.

பரிந்துரைகள்:

1. இலங்கைத் தமிழர்களுக்கு அரசு அதிகாரத்தில் பங்களிக்க வேண்டும்.

2. நிலம் மற்றும் காவல்துறை சார்ந்த அதிகாரங்களை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசுகளுக்கு வழங்க வேண்டும்.

3. இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் தொடர்பான தீர்வு காண வேண்டும்.

4. 1987-ல் 13வது அரசியல் சாசன சட்ட திருத்தத்தின்படி ஈழத்தமிழர் பகுதிக்கு சுய அதிகாரம் வழங்க வேண்டும்.

5. முக்கியமான அரசியல் அதிகாரங்கள், வசிப்பிடங்கள் மீதான அதிகாரம் ஆகியவற்றை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வழங்க வேண்டும்.

6. வடக்கு, கிழக்கு மாகாண கவுன்சில்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.

7. தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நெருக்கடி நிலைமை, காவல்துறை மற்றும் ராணுவமும் திரும்ப பெற வேண்டும்.

8. இலங்கையில் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த பாதிக்கப்பட்டதமிழ் மக்களோடு இணைந்த குழு ஏற்படுத்த வேண்டும்.

9. தடுப்பு முகாம்களில் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற வெள்ளையறிக்கையை வெளியிட வேண்டும்.

10. போரினால் தனித்து விடப்பட்ட கணவனை இழந்த, பிள்ளைகளை இழந்த பெண்களின் மறு வாழ்வுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும். (உம்) வேலை வாய்ப்பு, விவசாய நிலம் வழங்குதல், தொழிற்ப் பயிற்சி போன்றவைகள் செய்துதர உத்திரவாதம் அளிக்க வேண்டும்.

11. தடுப்பு முகாம்களில் உள்ளவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்து, அவர்களுடைய மறுவாழ்வுக்கு உறுதி செய்ய வேண்டும்.

12. இதுவரை பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த காவல்துறை, ராணுவம், ஆண்கள் இவர்களை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுத்து சட்ட ரீதியான தண்டனை வழங்க வேண்டும்.

13. முகாம்களில் இருக்கும் பெண்களுக்கு அந்தந்த முகாம்களில் இருக்கும் நாட்களில் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

14. போரினால் பெற்றோர்களை இழந்து காப்பகங்களில் இருக்கும் ஆண், பெண், குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர்களிடமும், உறவினர்களிடமும் ஒப்படைக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்டவைகள் உண்மை அறியும் குழுவின் சார்பில் பரிந்துரை செய்யப்படுகிறது என்றனர்.

மத்திய அமைச்சரவையில் எங்களுக்கு இடம் தந்தது தப்பு ! ப.சிதம்பரம்.



நான் உள்பட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தரக் கூடாது. எங்களுக்குப் பதில் இளையவர்களை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில், அமைச்சரவையில் 40 வயது, 50 வயதானவர்கள் தான் இடம் பெற வேண்டும். நான் உள்பட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் விலகி நிற்க வேண்டும். இளைய தலைமுறை மீதும், இளம் அரசியல்வாதிகள் மீதும் எனக்கு நம்பிக்கை அதிகம் உண்டு என்றார்.

ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று கூறி வரும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங்கின் கருத்துடன் உங்கள் கருத்து ஒத்துப் போவதாக சொல்லலாமா என்று கேட்டதற்கு பதிலளித்த சிதம்பரம், நான் அந்த விஷயத்தைப் பற்றியே பேசவில்லை. ஒவ்வொரு தலைமுறையும் ஒரு தலைவரைத் தருகிறது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு பிரதமர் பதவிக்குத் தகுதியான நபர் கிடைக்கிறார். ராகுல் காந்தி உரிய நேரத்தில் பிரதமரானால் காங்கிரஸ் கட்சி மிகவும் மகிழ்ச்சியடையும் என்றார்.

பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங் இந்த நாட்டை 7 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக ஆண்டு வருகிறார். அவரது வழிகாட்டுதலில் பல வெற்றிகளையும் சில பிரச்சனைகளையும் சந்தித்து இருக்கிறோம். ஆனால், இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்பதே உண்மை. இந்தக் கருத்தை பிரதமரும் காங்கிரஸ் தலைவர் சோனியாவும் ஏற்பார்கள் என்றே நினைக்கிறேன் என்றார்.

நீங்கள் பிரதமராக விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு, எனது மிச்சமுள்ள காலத்தை எப்படி செலவிட வேண்டும் என்பதை நான் அறிவேன். நான் நிறைய படிக்க விரும்புகிறேன். நிறைய பயணம் செய்ய ஆசைப்படுகிறேன். அதைவிட மேலாக எழுதவும் விரும்புகிறேன். எனக்குள் ஒரு எழுத்தாளனும் இருக்கிறார். அருந்ததி ராய் மாதிரி எழுத என்னாலும் முடியும். அருந்ததியின் கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடே கிடையாது, ஆனால், அவரது எழுத்து நடையை ரசிப்பவன் நான் என்றார்.

விரைவில் நடக்கவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது உள்துறை அமைச்சர் பதவியை தொடர்ந்து வைத்திருக்க ஆசைப்படுகிறீர்களா என்ற கேள்விக்கு, எனக்கு வேறு வழி இருக்கிறதா... எனக்கு வேறு சாய்ஸ் இல்லை என்றே நினைக்கிறேன். இதைப்பற்றி முடிவு செய்ய வேண்டியது இருவர். ஒருவர் காங்கிரஸ் தலைவர். இன்னொருவர் பிரதமர். அவர்களது முடிவுகளை நான் எப்போதும் ஏற்பவன். இந்த நாளோடு நான் உள்துறை அமைச்சர் பதவிக்கு வந்து இரண்டரை வருடங்கள், 25 நாட்கள் ஆகிவிட்டன என்றார் சிதம்பரம்.

அமைச்சரவை மாற்றத்தின்போது சிதம்பரத்தின் இலாகாவும் மாற்றப்படக் கூடும் என்று டெல்லியில் கிசுகிசுக்கள் பரவியுள்ள நிலையில் அவரது இந்தப் பேட்டி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

கோகைன் இரவு விருந்து..60 பெண்கள், 240 வாலிபர்கள் சிக்கினர் - போதைத் தடுப்பு இன்ஸ்பெக்டரும் கைது !


நேற்றிரவு மும்பை ரிசார்ட்டில் கஞ்சா, கோகைன் உள்ளிட்ட போதை மருந்துகள் வினியோகத்துடன் நடந்த இரவு நேர களியாட்டத்தில் கலந்து கொண்ட 60 இளம் பெண்கள் உள்பட 300 பேர் பிடிபட்டனர். இந்த போதை ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு உதவிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டரும் கைது செய்யப்பட்டார்.

மும்பை போலீசார் மற்றும் கிரைம் பிராஞ்ச் போலீசார் இணைந்து மும்பையில் பல ஹோட்டல்கள், டிஸ்கோத்தேக்கள், தாபாக்கள், ரிசார்ட்கள், பார்களில் சோதனையிட்டனர்.

அப்போது மும்பை-புனே நெடுஞ்சாலையில் காலாபூரில் உள்ள மவுண்ட் வியூ ரிசார்ட்டில் போதை மருந்துகள் வினியோகத்துடன் இரவு நேர ஆட்டம், பாட்டம் நடந்து கொண்டிருந்தது. இதையடுத்து போலீசார் 60 இளம் பெண்கள் உள்பட 300 பேரை சுற்றிவளைத்தனர். இவர்கள் அனைவருமே வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் போதை மருந்துகளை பயன்படுத்தியிருந்ததால் கடும் போதையில் இருந்தனர். இவர்களது ரத்தம், சிறுநீர் மாதிரிகள் எடுக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர். அந்த மாதிரிகள் சோதனையிடப்பட்டு வருகின்றன. அதன் முடிவுகள் வந்தவுடன் இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இவர்களுக்கு போதை மருந்து சப்ளை செய்த நபர்கள், இந்த இரவு நேர விருந்துக்கு ஏற்பாடு செய்தவர்கள், ரிசார்ட்டின் மேனேஜர் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களுடன் போதை மருந்து தடுப்புப் பிரிவின் இன்ஸ்பெக்ட்ரான அனில் ஜாதவ் என்பவரும் சிக்கினார். போதை மருந்துகள் இருந்த அறையில் ஜாதவ் அமர்ந்திருந்து, அதை சிறிது சிறிதாக பிரித்துக் கொடுத்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார். இவரது முழு உதவியுடன் தான் இந்த போதை களியாட்டம் நடந்துள்ளதும் உறுதியாகியுள்ளது.

இந்த ரிசார்ட்டில் இருந்து கஞ்சா, சராஸ், கோகைன், சிறிஞ்சுகள், ஊசிகள் மற்றும் ரூ. 3 லட்சம் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சீனாவை சேர்ந்த "டிங்டிங்' கிற்கு தேவகோட்டையில் "டும் டும் டும்'.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நமது கவனத்திற்கு தெரிந்து இரண்டு சீனப்பெண்கள் தமிழ்நாட்டு மருமகள்களாகியுள்ளனர். வாழ்த்துவோம்!



ஜூன் 27,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில், சீனாவைச் சேர்ந்த பெண், "டிங்டிங்' கிற்கு, இந்திய கலாசாரப்படி, "டும் டும் டும்' நடந்தது. தேவகோட்டையைச் சேர்ந்த சேதுக்கரசு - காளியம்மாள் தம்பதிகளின் மகன் லெட்சுமண பெருமாள், 29; சிங்கப்பூரில் பொறியாளராக உள்ளார். அந்நிறுவனத்தில், சீனாவைச் சேர்ந்த உபென்ஜிசியங் - சன்சான்குவா தம்பதியரின் மகள், டிங்டிங், 26, பணிபுரிந்தார். அங்கு, இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டது.

நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும், பெற்றோரின் ஒப்புதலுடன் திருமணம் முடிக்க எண்ணினர். ஒப்புதல் கிடைத்ததும் இந்திய கலாசாரப்படி திருமணம் நடத்த முடிவு செய்தனர். மணமகளுக்கு, இந்தியா வர கடந்த வாரம் விசா கிடைத்தது. இருவரும் திருமணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன், தேவகோட்டை வந்தனர். நேற்று, இருவருக்கும் திருமணம் நடந்தது.

இது குறித்து மணமகள் டிங்டிங் கூறுகையில், "தமிழ் இணையதளம் மூலம் தமிழ் கற்றுவருகிறேன். சீன முறைப்படி மோதிரம் மாற்றுவதோடு திருமணம் முடிந்துவிடும். தமிழக கலாசாரம் என்னை அதிகளவில் ஈர்த்துவிட்டது. என் பெற்றோருக்கு விசா கிடைக்காததால், என்னை ஆசீர்வாதம் செய்து அனுப்பி வைத்தனர். இந்திய குடும்பத்தில் ஒருவராக நான் மாறியிருப்பது, எனக்கு பெருமையை தருகிறது' என்றார்.


இவருக்கு முன்பே ஜூன் 21ல், சேலம்மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செந்தில்ராஜாவிற்கும், சீன நாட்டின் ஜுயாங்ஷு மாநிலத்தை சேர்ந்த ஆத்திங் என்கிற ஹுசென்திங்கிற்கும் பெத்தநாயக்கன்பாளையத்தில் இந்து முறைப்படி, திருமணம் நடைபெற்றது.



மணமக்கள் சீனாவிலுள்ள கே.ஜே.கே., குரூப் கம்பெனியின், என்டெக் ஜுவல்லரி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் திருமணத்துக்கு, இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.

மத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறது - சீமான்.



"உலக எரிபொருள் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் டீசல் விலையை உயர்த்துவதா? மத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறது" என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மத்திய அரசுமீது சாடியுள்ளார்.

சமீபத்தில் சமையல் கேஸ், மண்ணெண்ணெய் மற்றும் டீசல் விலையினை மத்திய அரசு உயர்த்தியது. இது நாட்டு மக்களிடையே பெரும் எதிர்ப்பு அலைகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைவரும் திரைப்பட இயக்குனருமான சீமான் மத்திய அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

"தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் நடைபெற்ற நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலைகளை உயர்த்தினால் மக்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டியது வரும் என்பதால் தேர்தல் முடிந்தபின் விலையேற்றம் செய்தது மத்திய அரசு. பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அனுமதி தந்தது.

இந்த விலையேற்றத்தைச் செய்தபோது பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110 டாலராக இருந்தது. அதை வைத்துக் கணக்கிட்டே எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.458 கோடி இழப்பு ஏற்படுகிறது என்றும், அது இந்த நிதியாண்டு முழுவதும் கணக்கிட்டால் ஒட்டுமொத்த இழப்பு ரூ.1,67,000 கோடியாக ஆகும் என்றும் கூறி செய்திகளைப் பரப்பியது.

ஆனால், இன்றைக்கு டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை மத்திய அரசு உயர்த்தியபோது, பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 91.23 டாலராக குறைந்துள்ளது. ஆயினும் அதே இழப்பு கணக்கை - ரூ.1,71,000 கோடியை - பெட்ரோலியத்துறை மந்திரி கூறுகிறார். இது மக்களை ஏமாற்றுவதாக ஆகாதா?.

2008-ம் ஆண்டு ஜுன் மாதம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 145 டாலராக உயர்ந்தது. அப்போது பெட்ரோல் விலை அதிகபட்சமாக ரூ.50.60 (டெல்லி விலை) ஆக இருந்தது. டீசல் விலை ரூ.35.86 ஆக உயர்த்தப்பட்டது. அதன்பிறகு கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கி 100 டாலருக்கும் கீழ் வந்தவுடன் அதே ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதியன்று பெட்ரோல் விலை ரூ.5-ம், டீசல் விலை ரூ.2-ம் மத்திய அரசு குறைத்தது.

ஆனால், இப்போது கச்சா எண்ணெய் விலை 91 டாலர்கள் என்று நிலவும் போது விலையை ரூ.43.80 ஆக உயர்த்தியது ஏன்?. பெட்ரோல் விலை ரூ.70-க்கு உயர்ந்த பின்னரும், இன்னமும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு இழப்புதான் ஏற்படுகிறது என்றால் எப்படி?. இந்த வினாக்களுக்கு மத்திய அரசு பதில் கூற வேண்டும்.

எனவே, பொதுமக்களுக்கு எழும் வினாக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் புரியும்படியான ஒரு வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்." என்று அந்த அறிக்கையில் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொடைக்கானலில் அமர்நாத் பனிலிங்க தரிசனம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

கொடைக்கானலில் அமர்நாத் பனிலிங்க தரிசனம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கொடைக்கானலில் உள்ள பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயாவின் சார்பில் 75-வது சிவ ஜெயந்தி பவல விழாவினையொட்டி 12 ஜோதிர்லிங்கம் மற்றும் அமர்நாத் பனிலிங்க சிவ தரிசன தொடக்க விழா கொடைக்கானலில் உள்ள கோல்டன் பார்க் இன் ஓட்டலில் நடைபெற்றது.

இதில் தியானம், தீப தியானம், ஒலி-ஒளி காட்சிகள், சொர்க்க காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. தரிசன நிகழ்ச்சியினை ஏராளமான பொதுமக்கள் தரிசித்தனர். இத்தரிசன நிகழ்ச்சி வரும் 29-ம்தேதி வரை நடைபெறுகின்றனது.

போலீசாருக்கு சவால் விடும் போலி அடகு கடைகள்.

போலீசாருக்கு சவால் விடும் போலி அடகு கடைகள்

கோவையில் காலம் காலமாக தொழில் செய்து வரும் நல்ல அடகு கடைக்காரர் களின் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் போலி அடகு கடைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

போலி அடகு கடை உரிமையாளர்கள் ஒரு இடத்தில் நிலையாக தொழில் செய்வதில்லை. 6 மாதம் ஒரு இடம் என்று மாற்றி அமைத்து கொள்கிறார்கள். கொள்ளையர்களுடன் கூட்டணி வைத்து திருட்டு நகைகளை வாங்கி குவிக்கிறார்கள்.

அரசு அனுமதியுடன் நியாயமான வட்டிக்கு நகைகளை அடகு பிடிக்கும் கடைகளில் அரசு விதிப்படி நகை கொடுப்பவரின் விவரம், நகையின் எடை,ரசீது, அடகு நகை கொண்டு வருபவர் நம்பிக்கையானவரா? என்று சரிபார்க்கப்படுகிறது.

ஆனால் போலி அடகு கடைக்காரர்கள் இது போன்று எதையும் சரிபார்ப்பது இல்லை. தைரியமாக திருட்டு நகைகளையும், வெள்ளி பொருட்களையும்,பித்தளை பாத்திரங்களையும் அடகு பிடிக்கின்றனர். போலீசாரிடம் சிக்கி கொண்டால் தெரியாமல் வாங்கி விட்டோம். பொருளை எடுத்து செல்லுங்கள். எங்கள் மீது நடவடிக்கை வேண்டாம் என்று கெஞ்சுகின்றனர்.

இத்தகைய போலி அடகு கடைக்காரர்கள்தான் நகரில் திருட்டு சம்பவங்கள் நடைபெற காரணமாக இருப்பதாக போலீசார் குற்றம் சாட்டுகிறார்கள். இவர்களது இந்த சமூக விரோத செயல்பாட்டால் நீண்ட காலமாக நியாயமாக தொழில் செய்யும் அடகு கடை உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட நகை அடகு கடை உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் நாராயணன் கூறியதாவது:-

திருட்டு நகைகளை எல்லா அடகு கடைகளிலும் வாங்குவதில்லை. குறிப்பாக எங்களது சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் அடகு கடைகள் அனைத்தும் முறையான அரசு உரிமம் பெற்று சட்டப்படி தொழில் செய்து வருகின்றோம்.

சமீபத்தில் கோவையில் நடந்து வரும் நகை திருட்டு வழக்குகள் எதிலும் எங்கள் உறுப்பினர்களின் அடகு கடைகள் சம்பந்தப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
எனவே கொள்ளையர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு போலீசுக்கு சவால் விடும் போலி அடகு கடைகளை கண்டறிந்து போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தால் திருட்டு குறையும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

ஓமலூர் போலீஸ் நிலையத்தில் குடிபோதையில் சப்-இன்ஸ்பெக்டர் - எஸ்.ஆர். பார்த்திபன் எம்.எல்.ஏ., பரபரப்பு குற்றச்சாட்டு.

டீசல் விலையை குறைக்காவிட்டால் அகில இந்திய அளவில் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கும் : லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு.

டீசல் விலையை குறைக்காவிட்டால் அகில இந்திய அளவில் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கும்: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

மத்திய அரசு கடந்த 24-ந் தேதி சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை 50 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாயும், மண்எண்ணெய் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தியது.

இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஆங்காங்கே இந்த விலை உயர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் டீசல் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. டீசல் விலையை குறைக்காவிட்டால், லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கும் என எச்சரிக்கையும் விடுத்து உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறியதாவது:-

தனியார் சுங்க சாவடிகளில் அதிக கட்டணம் வசூல், டிரைவர்கள் பற்றாக்குறை, டயர் விலை ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் லாரி தொழில் மிகவும் நசுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி அடிக்கடி டீசல் விலையை உயர்த்தி வருவதால், லாரி தொழிலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.

டீசல் விலையை குறைக்காவிட்டால், அகில இந்திய அளவில் உடனடியாக லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளோம். இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) புதுடெல்லியில் நடைபெறும் அகில இந்திய மோட்டார் காங்கிரசின் ஆலோசனை கூட்டத்தில் இறுதி முடிவு செய்ய உள்ளோம். அந்த கூட்டத்திற்கு பிறகு லாரிகள் வேலைநிறுத்தம் தொடர்பான அதிகாரபூர்வ முடிவு வெளியிடப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு லாரிகள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டால், தமிழகத்தில் மட்டும் 23/4 லட்சம் லாரிகள் நிறுத்தப்படும். இவ்வாறு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறினார். லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கும் பட்சத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு தரை வழி சரக்கு போக்குவரத்து முற்றிலும் தடைபட வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு தரைவழி போக்குவரத்து தடைபட்டால், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். அதன் காரணமாக காய்கறி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

சட்ட மசோதா தயாரிப்பில் இனிமேல் சமூக ஆர்வலர்களுக்கு இடம் கிடையாது ; மத்திய மந்திரி கபில்சிபல் பேட்டி.

சட்ட மசோதா தயாரிப்பில் இனிமேல் சமூக ஆர்வலர்களுக்கு இடம் கிடையாது; மத்திய மந்திரி கபில்சிபல் பேட்டி

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா தயாரிக்கும் பணியில், அன்னா ஹசாரே உள்ளிட்ட சமூக ஆர்வலர்களுடன் மத்திய மந்திரிகள் ஈடுபட்டனர். அம்முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

இந்நிலையில், லோக்பால் மசோதா தயாரிப்பு குழுவில் இடம் பெற்றுள்ள மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரி கபில் சிபல் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:- மத்திய அரசின் மசோதா தயாரிப்பு பணியில் சமூக ஆர்வலர்களை இனி மேல் சேர்க்க மாட்டோம்.

அதனால் இப்போது ஏற்பட்ட அனுபவம், இனி வருங்காலத்தில் ஏற்படாது. மசோதா தயாரிப்பு குழுவில் சேர்க்காவிட்டால், சில சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடும். அதையும் நான் ïகிக்கவே செய்துள்ளேன். மத்திய மந்திரிகள் தயாரித்துள்ள லோக்பால் வரைவு மசோதாவை இறுதியானதாக கருத முடியாது.

அனைத்துக் கட்சிகளுடனும், வேறு சில சமூக ஆர்வலர்களுடனும் ஆலோசனை நடத்திய பிறகு, மசோதாவில் சில திருத்தங்களை செய்யப் போகிறோம். மசோதாவை நிறைவேற்றாவிட்டால், ஆகஸ்டு 16-ந் தேதி முதல், உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.

அந்த சூழ்நிலை வரும் போது, அதை மத்திய அரசு சமாளிக்கும். உண்ணாவிரதம், சரியான வழிமுறை அல்ல என்று சமூக ஆர்வலர் தரப்பைச் சேர்ந்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார். எனவே, தனக்கும், நாட்டுக்கும் எது நல்லது என்று முடிவு எடுக்கும் ஞானம், அன்னா ஹசாரேவுக்கு இருக்கும் என்று நம்புகிறேன்.

லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரை கொண்டு வருவதா? இல்லையா? என்பதுதான், எங்கள் பேச்சுவார்த்தையின் மையப்பிரச்சினை என்று கருதுவது சரியல்ல.

அரசுக்கு நிகரான அதிகாரம் கொண்ட ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும், அந்த அமைப்பு யாருக்கும் பதில் சொல்ல வேண்டியது இல்லை என்றும் அன்னா ஹசாரேவும், அவருடைய ஆதரவாளர்களும் கூறினர். அது தான் கருத்து வேறுபாட்டுக்கு வழிவகுத்தது.

சி.பி.ஐ., ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஆகியவற்றுக்கு நிகரான அமைப்பை அவர்கள் விரும்பினார்கள். இத்தகைய அமைப்பில் இருப்பவர்கள், ஊழலுக்கு இடம் கொடுக்காமல், தூய்மையாக நடந்து கொள்வார்கள் என்று எப்படி உறுதிப்படுத்த முடியும்? எனவேதான், கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பாபா ராம்தேவ், எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வாக்குறுதி அளித்துக் கொண்டே, ராம்லீலா மைதானத்தில், அதற்கு நேர்மாறான காரியத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அதனால் அவர் எப்படிப்பட்டவர் என்பதை மத்திய அரசு அம்பலப்படுத்தியது. விமான நிலையத்தில், அவரை வரவேற்றதால் மத்திய அரசுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டதாக கூற முடியாது. அவரை சந்தித்ததால்தான், அவரை அம்பலப்படுத்த முடிந்தது.

புதிதாக அமைக்கப்படும் தேசிய உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கமிஷனில் மருத்துவ கல்வியையும் சேர்ப்பது தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டு விட்டது. இது தொடர்பான வரைவு மசோதா, மத்திய மந்திரி சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பின்னர், அது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு கபில் சிபல் கூறினார்.