Monday, June 27, 2011

டீசல் விலையை குறைக்காவிட்டால் அகில இந்திய அளவில் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கும் : லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு.

டீசல் விலையை குறைக்காவிட்டால் அகில இந்திய அளவில் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கும்: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

மத்திய அரசு கடந்த 24-ந் தேதி சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை 50 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாயும், மண்எண்ணெய் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தியது.

இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஆங்காங்கே இந்த விலை உயர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் டீசல் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. டீசல் விலையை குறைக்காவிட்டால், லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கும் என எச்சரிக்கையும் விடுத்து உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறியதாவது:-

தனியார் சுங்க சாவடிகளில் அதிக கட்டணம் வசூல், டிரைவர்கள் பற்றாக்குறை, டயர் விலை ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் லாரி தொழில் மிகவும் நசுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி அடிக்கடி டீசல் விலையை உயர்த்தி வருவதால், லாரி தொழிலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.

டீசல் விலையை குறைக்காவிட்டால், அகில இந்திய அளவில் உடனடியாக லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளோம். இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) புதுடெல்லியில் நடைபெறும் அகில இந்திய மோட்டார் காங்கிரசின் ஆலோசனை கூட்டத்தில் இறுதி முடிவு செய்ய உள்ளோம். அந்த கூட்டத்திற்கு பிறகு லாரிகள் வேலைநிறுத்தம் தொடர்பான அதிகாரபூர்வ முடிவு வெளியிடப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு லாரிகள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டால், தமிழகத்தில் மட்டும் 23/4 லட்சம் லாரிகள் நிறுத்தப்படும். இவ்வாறு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறினார். லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கும் பட்சத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு தரை வழி சரக்கு போக்குவரத்து முற்றிலும் தடைபட வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு தரைவழி போக்குவரத்து தடைபட்டால், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். அதன் காரணமாக காய்கறி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

No comments: