Saturday, May 14, 2011

மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!

எஸ். ரவீந்திரன்



மின் தட்டுப்பாடு ஒருபக்கம் இருக்க மின் கட்டணம் செலுத்துவதில் புதிய முறையை அமல்படுத்தியிருக்கும் வாரியத்தின் முடிவை என்னவென்று சொல்ல?

ஊரெல்லாம் இருட்டு. ஏதோ மீண்டும் கற்காலத்தில் வாழ்கிறோமா என்ற நிலையில் ஓடாத மின்சாரத்துக்கு ஏகப்பட்ட மின்கட்டணம் வசூலித்தால் அதை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் மக்களின் கவலை.

அரசு இலவச மின்சாரம் அளிக்கிறது. நிலமில்லாமல் தவிக்கிறார் விவசாயி. இதுதான் யதார்த்த நிலை.

இந்நிலையில் மின்தட்டுப்பாட்டைச் சமாளிக்க என்ன செய்யலாம் என்பதை விட்டுவிட்டு எப்படி மக்களை ஏமாளியாக்கலாம் என்ற வித்தையைக் கற்றுள்ளது மின்வாரியம்.

வழக்கமாக இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை இருந்து வந்தது. அதன்படி 15-ம் தேதிக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

இந்நிலையில் மின்கட்டணத்தை இனி மாதாமாதம் செலுத்த வேண்டும் என்ற அதிரடி அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. மின்கட்டணம் கணக்கீடு செய்ததில் இருந்து 20 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என்பதுதான் புதிய நடைமுறை. இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.

பயன்படுத்திய மின்சாரத்துக்குக் கட்டணம் செலுத்தவேண்டும். இது நியாயம்தான். ஆனால், புதிய முறையால் யாருக்கு லாபம் என்பதை மின்வாரியம் நன்கு உணர்ந்திருக்கிறது. அதேவேளையில் பயனீட்டாளர்களுக்குப் பல வழிகளில் இது உபத்திரவத்தைத்தான் ஏற்படுத்தும்.

புதிய அறிவிப்பின்படி மின்அளவீடு செய்த நாளிலிருந்து 20 தினங்களுக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அதேநேரத்தில் இதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதை ஏனோ மின்வாரியம் கண்டுகொள்ளவில்லை.

பெரும்பாலும் அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு மாதத்தின் முதல்வாரத்தில் கட்டணம் செலுத்துவதில் சிரமம் இருக்காது. ஆனால், தனியார் நிறுவன ஊழியர்கள் பிற வகையினர் 7-ம் தேதிக்குள் மின் கட்டணம் செலுத்துவார்களா என்பது அந்த மின்வாரியத்தில் இருக்கும் புண்ணியவான்களுக்குத்தான் தெரியும். இதுபோக மின் கணக்கீடு செய்பவர்கள் அடிக்கும் கூத்து இருக்கிறதே அது கொஞ்சநஞ்சமல்ல.

ஒப்பந்த அடிப்படையில் கணக்கீட்டுப் பணி மேற்கொள்பவர்கள், மின்வாரியத்துக்கும் இந்தப் பணிக்கும் சம்பந்தபட்டவர்கள் அல்ல. அவர்களில் பலர் நிர்ணயிப்பதுதான் கட்டணம். ஏன், எதற்கென கேட்கக் கூடாது. இந்த லட்சணத்தில் மின்வாரியத்தின் ஓசைப்படாத அத்துமீறலை யாரும் கவனிக்கவில்லை.

அதாவது, வீட்டில் உரிமையாளர்கள் இல்லாதபோது அட்டை இருக்காது. இதனால் அவர்களுக்குச் சராசரி கட்டணம் கணக்கிடப்படும்.

உதாரணமாக, இரு மாதங்களுக்கு ஒருமுறை குறைந்தது ரூ.40 முதல் ரூ.100 வரை செலுத்துபவர்கள் பலர் உண்டு. இனி அவர்கள் மாதாமாதம் இதே தொகையைத்தான் செலுத்த வேண்டியிருக்கும். அப்படிபார்த்தால் இரு மாதங்களுக்கு ரூ.40 என்பது இனி ரூ. 80-ஆக இருக்கும்.

இதுதவிர, தப்பித்தவறிக் கட்டணம் செலுத்த மறந்தானைல் அபராதக் கட்டணம் செலுத்தவேண்டிய நிலை. இது நடைமுறைக்கு வர இன்னும் சில காலங்கள் பிடிக்கும்.

மேலும், மின்வாரியம் அஞ்சலகங்களில் மின்கட்டணத்தைச் செலுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது. இதற்குத் தனியாகச் சேவைக் கட்டணம் வேறு கொடுக்க வேண்டுமாம். இதற்குப் பதிலாக நடமாடும் மின்வசூலிப்பு மையத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரலாமே.

இதுபோன்று சட்டங்களை அமல்படுத்தும் மின்வாரியம் பிற சங்கடங்களை மனதில் கொள்வதில்லை. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட, பல மடங்கு கட்டணத்தை வாடகைதாரர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் வசூலிக்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது அதே தொகையை செலுத்துமாறு வலியுறுத்த வேண்டும்.

இன்னும் இலவச மின்சாரம் என்ற பெயரில் பலர் மின்சாரத்தை விரயமாக்குகின்றனர். எனவே இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக, இலவச மின்சாரத் திட்டத்தில் சில மாறுதல்களைக் கொண்டுவர வேண்டும். பயன்படுத்தப்படும் மின்சாரத்தைக் கணக்கீடு செய்து அதற்கு மானியம் வழங்கலாம்.

பெரும்பாலானோர் இலவச மின்சாரத்தைப் பயன்படுத்திப் பிறருக்குத் தண்ணீர் பாய்ச்சுவதும், அதற்காகக் கட்டணம் பெறுவதும் நடந்து வருகிறது. இதை மின்வாரியம் கண்காணித்தல் அவசியம்.

இப்படிப் பல்வேறு மாறுதல்களைக் கொண்டு வந்தால் மின் தட்டுப்பாடு குளறுபடிகளைத் தீர்க்க முடியும்.

கருணாநிதியின் மவுனம் எளிதில் கலையக் கூடாது ; கி.வீரமணி.


அரசியல் மட்டுமே தி.மு.க.வின் களமல்ல என்று சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் முடிவுகள், அதிர்ச்சி தரத்தக்கவை வெற்றி பெற்ற அணிக்கும், தோல்வியுற்ற அணியினரான அனைவருக்கும். வெற்றி பெற்ற அ.தி.மு.க. அணியினர்கூட இவ்வளவு சாதகமான அலை போன்ற முடிவைப் பெறுவோம் என்று எண்ணவில்லை. அங்கே இடம் பெற்ற கூட்டணிக் கட்சியினர் பலரும் இதை நேற்று குறிப்பிட்டுள்ளார்கள்!

இந்தத் தோல்வி, தி.மு.க. அரசு சொன்னதையெல்லாம் செய்த அரசு, மேலும் சொல்லாததையும் கூடுதலாகச் செய்த அரசு என்பதால் அதற்குக் கிடைத்த வாக்காளர் பரிசா என்றால், “ஆம்” என்று ஒப்புக் கொள்ளுவதில் உண்மை பேசுவோர் எவரும் வெட்கப்படத் தேவையில்லை.

ஜனநாயகம் என்ற மக்களாட்சியின் விசித்திரங்களில் இதுவும் ஒன்று! இவ்வளவு சாதனைகளுக்குப் பிறகுமா இப்படி ஒரு தேர்தல் முடிவு என்று கேட்கின்றனர் பல நண்பர்கள்.

பெரியார் ‘குடிஅரசில்’ எழுதிய வைர வரிகளை நினைவூட்டிக் கொண்டாலே அதற்குத் தக்க பதில் கிடைக்கும்.

“நன்றி என்பது பலனடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பாகும்; உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எதிர்பார்த்தால் அது சிறுமைக் குணமேயாகும்”

இவ்வரிகள் மக்களின் இயல்புகளைக் காட்டும் கண்ணாடிகள் அல்லவா?

"இவ்வளவு பெரிய தோல்வி கண்டும் சிறிதும் கலங்காமல், மனந் தளராமல், “மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்துள்ளனர்; அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்’’ என்று சிரித்துக் கொண்டே கருணாநிதி சொன்னார் நேற்று! எந்த நிலையிலும் எதிர்நீச்சல் போடத் தயங்காத ஈரோட்டுக் குரு குல வாசத்தின் பண்பையும், பழக்கத்தையும், எதையும் தாங்கும் அண்ணாவின் இதயமும் கொண்டவர் என்பதை இதன் மூலம் காட்டியுள்ளார்!

1967 இல் காமராசர்கூட தோற்ற நிலையில், “சாதனைகளை அதிகமாகச் செய்தோம் என்றாலும் நம்மைத் தோற்கடித்தார்கள் மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்” என்றார்!

ஏன் இப்படிப்பட்ட தோல்வி தி.மு.க. கூட்டணிக்கு என்று அலசி ஆராய்வதற்கு போதிய அவகாசம் உள்ளது.

தமிழ்நாட்டு வாக்காளர்கள் என்றுமே கேரளத்தைப் போல, மேற்கு வங்கத்தைப் போல கூட்டணி ஆட்சியையோ, தொங்கு சட்டசபையையோ விரும்பியதில்லை என்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே அ.தி.மு.வுக்கு அதன் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவிற்கு தனித்த மெஜாரிட்டியைத் தந்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது!

புதிய முதலமைச்சர் பொறுப்பேற்று, ஒன்றரை ஆண்டுகளுக்குள் தனது தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகளையெல்லாம் செய்து முடிப்பதாகக் கூறியுள்ளார். அதனை எதிர்பார்க்க, வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு. ஜனநாயகத்தில் அதோடு அதை வற்புறுத்தும் உரிமையும் உண்டு எதிர்க்கட்சிகளுக்கு குறிப்பாக தி.மு.க.வுக்கு; கடுகு சிறுத்தாலும் காரம் போகாதல்லவா?

நல்ல சாதனைக்கு பிறகும் தோல்விகளை சந்திப்பது திராவிடர் இயக்கமான நீதிக்கட்சி காலம் முதல் ஜனநாயகத்தில் இது முதல் தடவை அல்ல. புதிதும் அல்ல.

திராவிடர் இனத்தின் தலைவர் கருணாநிதியின் மவுனம் எளிதில் கலையக் கூடாது ; தொடர வேண்டும் என்பதே நமது விழைவு.

தி.மு.க.விற்குப் பல களங்கள் உண்டே!

கருணாநிதிக்கு, “ஓய்வு” என்பது சட்டசபை ஆட்சி அரசியல் களத்திலிருந்துதான் ஓய்வே தவிர, அவரது தொண்டறத் தொடர் பணிகளுக்கு அல்ல; இனமானப் போர்க்களம், சுயமரியாதைப் பிரச்சாரக் களம், சமூக நீதிக் களம், பகுத்தறிவு, எழுத்துப் பேச்சு, ஊடகம், களம் போன்றவை காத்துக் கொண்டிருக்கின்றன. வரலாற்றின் பல பகுதிகள் அவரால் எழுதப்படுவதற்காக!

திராவிடர் தமிழர் இனமானப் பிரச்சினைகள் என்ற பணிகள், ஈழத் தமிழர் வாழ்வுரிமை விடியல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உட்பட பகுத்தறிவுப் பிரச்சாரம் வரை எத்தனையோ களங்கள் காத்திருக்கின்றன தி.மு.க.விற்கு அரசியல் களத்திற்கும் அப்பால்! இவற்றில் சாதிக்கப்பட வேண்டியவை நிரம்பவே உண்டு. அரசியலோடு வலிமையாக அந்தப் பணிகளும் தொடரப்பட வேண்டும்.

வெறும் பதவி அரசியலுக்காகத் துவங்கப்பட்டதல்ல தி.மு.க. என்பது நிரூபிக்கப்பட வேண்டும். மக்கள் வழங்கியுள்ள வாய்ப்பாக இதனைக் கருதி தி.மு.க.வின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

சமுதாயப் புரட்சி இலட்சியங்களை செயல்படுத்த ஆட்சியைக் கருவியாக்கிடத்தான் அரசியல் கட்சியானோம் என்பதுதானே அண்ணா தந்த விளக்கம்? அரசியல் நாகரீகப்படி நமது வாழ்த்துக்கள்.

இவ்வாறு வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இளைஞர் காங்கிரசார் 10 பேரும் தோல்வி : ராகுல் பிரசாரம் எடுபடவில்லை.

இளைஞர் காங்கிரசார் 10 பேரும் தோல்வி: ராகுல் பிரசாரம் எடுபடவில்லை

தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. 63 தொகுதிகளில் போட்டியிட்ட அந்த கட்சிக்கு 5 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது.

மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு மயிலாப்பூர் தொகுதியில் 29 ஆயிரத்து 204 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜலட்சுமியிடம் படுதோல்வியை தழுவினார்.

அவரை போலவே காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ், டி.யசோதா, ஆகியோரும் தோல்வி அடைந்தனர். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்களில் ஒருவரான ஜெயக்குமார், தொழில் அதிபர் வசந்தகுமார், செல்வப்பெருந்தகை, ஆகியோரும் தோல்வியை தழுவி உள்ளனர்.

வேலூர் தொகுதியில் போட்டியிட்ட ஞானசேகரன், அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் ஆகியோருக்கும் தோல்வி கிடைத்துள்ளது. இந்த தடவை இதற்கு முன்பு எப்போதும் இல்லாதபடி இளைஞர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா (ஈரோடு மேற்கு), அறிவழகன் (அண்ணா நகர்), விஜய் இளஞ்செழியன் (ஆம்பூர்), அர்த்தநாரி (ஆத்தூர்), ஜோதிமணி (கரூர்), மகேந்திரன் (பேராவூரணி), வரதராஜன் (மதுரை தெற்கு), மயூரா ஜெயக்குமார் (சிங்காநல்லூர்), பெருமாள்சாமி (விளாத்திக்குளம்), நவீன் ஆம்ஸ்ட்ராங் (விருதுநகர்) ஆகிய 10 பேர் களத்தில் இறக்கப்பட்டனர்.

இவர்கள் 10 பேரும் தோல்வி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய வந்த ராகுல்காந்தி இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு மட்டும் சென்று பிரசாரம் செய்தார். அவரது பிரசாரம் எடுபடாமல் போய்விட்டது.

நான் எப்போதும் மன அமைதியாக உள்ளேன் : கனிமொழி.

நான் எப்போதும் மன அமைதியாக  உள்ளேன் : கனிமொழி

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த துணைக் குற்றப்பத்திரிகையில் கனி மொழியை கூட்டு சதியாளர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த வாரம் 6-ந் தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்தது. அதில் கனிமொழி ஜாமீன் மனு தீர்ப்பு 14-ந் தேதிக்கு தள்ளிவைத்தது .

இந்நிலையில் நேற்றிரவு அவர் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் கனிமொழியிடம் நிருபர்கள் தேர்தல் முடிவு குறித்து கருத்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த கனிமொழி, மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்றார். இன்று காலை 10 மணிக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் கனிமொழி எம்.பி. ஆஜர் ஆனார். அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? என்ற பரபரப்பான எதிர் பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வரும் 20-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாக சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்தார். கலைஞர் டி.வி.நிர்வாக இயக்குனர் சரத்குமார் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதும் 20-ந் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி. பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் இருந்து வெளியில் வந்தார் அவருடன் அவரது கணவர் அரவிந்தன் மற்றும் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு வந்திருந்தார்.

அப்பொழுது கனிமொழியிடம் நிருபர்கள் ஜாமீன் மனு மீது 20-ந் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதுபற்றி உங்கள் கருத்து என்ன என கேட்டனர்

அதற்க்கு கனிமொழி -நான் எப்போதும் மன அமைதியாக( ரிலாக்சாக) உள்ளேன் , ஜாமீன் மனுமீதான தீர்ப்பு எவ்வாறு வரும்என்பதை மே 20ம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்

மேலும் கோர்ட் வளாகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவுடன் கனிமொழி சிறிது நேரம் பேசிவிட்டு சென்றார். அப்பொழுது ராசாவுடன் அவரது மனைவி மற்றும் மகள் உடன் இருந்தனர்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு - ஜெயலலிதா என்ன செய்யப் போகிறார்?


பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் இன்று இரவு முதல் உயருகிறது. நாடு முழுவதும் நள்ளிரவு 12 மணி முதல் புதிய விலை அமலுக்கு வருகிறது.

கடந்த 8 மாதங்களில் 9வது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் தற்போது பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தற்போது பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.61.48க்கு விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.67.48 என அறியப்படுகிறது.

சில நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு இப்போதைக்கு இருக்காது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன

ஜெயலலிதா என்ன செய்யப் போகிறார்?

மாநில அரசின் வரியைக் குறைத்து, பெட்ரோல், டீசல், விலையேற்றத்தை தடுத்து அதன் மூலம் விலைவாசியை கட்டுக்கு கொண்டுவருவாரா? இல்லை ஆட்சிக்கு வந்த வேலையைப் பார்ப்பாரா?

காங்கிரசின் வீழ்ச்சி தமிழினத்தின் விடியலுக்கான அறிகுறி - சீமான் அறிக்கை .


ஈழத்தில் ரத்தம் சிந்திய யுத்தத்தில் எம் இனத்தை நயவஞ்சகத்தோடு வீழ்த்திய காங்கிரசை, தமிழர்கள் ரத்தம் சிந்தாத தேர்தல் யுத்தத்தில் நேர்மையுடன் வீழ்த்தியிருக்கிறார்கள். இது தமிழ் இனத்திற்குக் கிட்டிய வெற்றி. காங்கிரசின் வீழ்ச்சி தமிழினத்தின் விடியலுக்கான அறிகுறி என்று நாம் தமிழர் இயக்க அமைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் அமைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத திமுக - காங்கிரசுக் கூட்டணியை படுதோல்வியடைந்துள்ளது.

பணபலம், அதிகார பலம், இவற்றிற்கு பணியமாட்டோம் வாக்கு என்ற ஆயுதத்தால் அவற்றை வீழ்த்துவோம் என்று மெய்ப்பித்த எம் தமிழ்ச் சொந்தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வரலாறு காணாத வகையில் ஊழல்,வன்முறை,குடும்ப ஆதிக்கம், அராஜகம், மணற் கொள்ளை, திரைத்துறையில் ஏகபோகம், நிர்வாகச் சீர்கேடு, இனத் துரோகம் ஆகியவற்றில் மலைக்கத்தகும் மலையாய் எழுந்து நின்றது காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி. அந்த மலையை சுக்குசுக்காய் உடைத்து தரை மட்டமாக்கி இருக்கிறார்கள் தமிழர்கள்.

மக்களின் எதிர்ப்புக்கு சிறிதளவும் மதிப்பளிக்காமல் தான் பெற்ற மக்களின் அதிகாரத்திற்காகவே ஆட்சி நடத்தினார் கருணாநிதி.

மக்கள் எதிர்ப்பையும்,அரசியல் கட்சித்தலைவர்களின் எதிர்ப்பையும் அடக்குமுறைச் சட்டங்கள் மூலமும் காவல் துறையின் ஒடுக்குமுறைகள் மூலமும் பொது அரங்கிற்குக் கொண்டு வராமல் செய்தார்.

இதன் பின்னும், ஓயாத திமுக காங்கிரசு அரசுகள் ஈழத்தில் எம் மக்களை பல்லாயிரக்கணக்கில் சிங்களப் பேரினவாதம் கொன்றொழிக்க பல வகையில் பேருதவி புரிந்தன. இனப்படுகொலைக்கு எதிரான எம் மக்களின் ஒப்பாரியைக்கூட யாருக்கும் கேட்காமல் அச்சுறுத்தி தடை செய்தன.

இந்த மக்கள் விரோத, இனவிரோத ஆட்சி தொடர்ந்து நீடித்தால் என்றும் மீட்க முடியாத அபாயச் சூழலில் தமிழ்நாடு சிக்கிக் கொள்ளும் நிலைமை இருந்தது.

ஆனாலும் தேர்தலில் பணபலத்துடன் மக்களை விலைக்கு வாங்கி மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விடலாம் என்ற பாசிச ஆட்சியாளர்களின் ஆசையில் மண் அள்ளிப் போட்டிருக்கின்றார்கள் எம் மக்கள். தி.மு.க.காங்கிரசுக் கூட்டணியைப் படு தோல்வி அடையச் செய்துள்ளனர்.

ஈழத்தில் நமது ரத்த உறவுகளை சிங்களன் கொன்று குவிக்க பேருதவி புரிந்த சோனியாவின் காங்கிரசை இந்தத் தேர்தலில் முழுவதுமாக வீழ்த்த வேண்டும் என்னும் நிலைப்பாட்டை நாம் தமிழர் கட்சி எடுத்தது.

காங்கிரஸ் கட்சி தான் நமக்கு முதல் எதிரி. இனத்தை அழித்த காங்கிரசுக் கட்சி வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்கப்படவேண்டும் என முடிவெடுத்து களத்தில் இறங்கினோம்.

அதற்காக அனைத்து தொகுதியிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தியும் வீடு வீடாகச் சென்றும் காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்று தீவிரப் பரப்புரை செய்தோம். இனத்திற்காக நாம் செய்த கடமையை மக்கள் அங்கீகரித்து இன எதிரிக்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர்.

தி.மு.கவிடம் மிரட்டிப்பெற்ற 63 தொகுதிகளில் 6 தொகுதியில் கூட வெல்லமுடியாதபடி காங்கிரசை வீழ்த்தியிருக்கிறார்கள். தமிழர்கள் வீரமும் விவேகமும் மட்டுமல்ல தன்மானமும் இனமானமும் உள்ளவர்கள் என்பதை தற்பொழுது மற்றுமொரு முறை நிரூபித்துள்ளனர்.

ஈழத்தில் ரத்தம் சிந்திய யுத்தத்தில் எம் இனத்தை நயவஞ்சகத்தோடு வீழ்த்திய காங்கிரசை,இங்குள்ள தமிழர்கள் ரத்தம் சிந்தாத தேர்தல் யுத்தத்தில் நேர்மையுடன் வீழ்த்தியிருக்கிறார்கள். இது நம் இனத்திற்குக் கிட்டிய வெற்றி.காங்கிரசின் வீழ்ச்சி தமிழினத்தின் விடியலுக்கான அறிகுறி.

இனத்தின் வெற்றிக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த நாம் தமிழர் உறவுகளுக்கும் இணைந்து பாடுபட்ட அனைத்து உணர்வாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இனி வரும் காலங்களில் தமிழினத்திற்கு எதிரான எண்ணமோ செயலோ எந்த அரசியல் கட்சியிடம் இருந்து வெளிப்பட்டாலும் அவர்களுக்கும் இதே கதி தான் ஏற்படும். புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் திறம்பட செயல்பட வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஊழல் பணத்தை கொண்டு இனி எவரும் வெல்ல முடியாது - வைகோ.


தமிழக மக்கள் பணநாயகத்திற்கு விடைகொடுத்து ஜனநாயகத்தை வெற்றி அடையச் செய்துள்ளனர் என்று தேர்தல் முடிவுகள் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஐந்து ஆண்டுகளில், தலைவிரித்து ஆடிய ஆளுங்கட்சியின் ஊழல், அராஜகம், திரைப்படத் துறை, தொழில் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் கபளீகரம் செய்ய முயன்ற ஒரு குடும்ப ஆதிக்கம்,

பன்னாட்டுப் பகாசுரக் கம்பெனிகளுக்குத் தடையற்ற மின்சாரம் தந்துவிட்டு, நிர்வாகச் சீர்கேட்டால் தமிழகத்தை இருளில் தள்ளிய கடுமையான மின்வெட்டு, தாங்க முடியாத விலைவாசி ஏற்றம், தமிழக வாழ்வாதாரங்களைக் காக்கும் கடமையில் தவறிய குற்றம், அனைத்துக்கும் மேலாக ஈழத் தமிழ் இனப் படுகொலைக்கு, காங்கிரஸ் அரசுக்குத் துணைநின்ற துரோகம், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பை இழந்த அபாயம்,

இவை அனைத்தையும் எதிர்த்து ஆழிப்பேரலையாய் மக்கள் சக்தி எழுந்து, ஆளுங்கட்சியின் ஊழல் பணநாயகத்தையும், அதிகார வன்முறையையும் வாரிச் சுருட்டி எறிந்துவிட்டது.

நடைபெற்று முடிந்த தேர்தல் களத்தில் மதிமுக பங்கு ஏற்காவிடினும், கடந்த ஐந்து ஆண்டுகளாக, தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து, மக்கள் மன்றத்தில் இடையறாத பிரச்சாரத்திலும் அறப்போரிலும் அர்ப்பணிப்போடு ஈடுபட்டது.

எதிர்காலத்தில், இனி அதிகார துஷ்பிரயோகத்தையும், ஊழல் பணத்தையும் கொண்டு எவரும் தேர்தலில் வெல்ல முடியாது எனும் எச்சரிக்கை தரும் சரியான பாடத்தை, வாக்காளர்கள் கற்பித்து உள்ளனர். தேர்தல் ஆணையம் தன் கடமையில் வென்று உள்ளது என்று கூறியுள்ளார்.

மதுரையிலேயே தங்கிவிட்ட வடிவேலு !


உருட்டுக்கட்டையுடன் தேமுதிகவினர் அச்சுறுத்துவதாக வடிவேலு புகார்!

மதுரையில் நடிகர் வடிவேலு வீட்டை தேமுதிகவினர் முற்றுகையிட்டு முழுக்கம் செய்வதாகவும், உருட்டுக்கட்டையுடன் வந்து அச்சுறுத்துவதாக நடிகர் வடிவேலு போலீசில் புகார் கொடுத்துள்ளார். மேலும் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வடிவேலு கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரையிலேயே தங்கிவிட்ட வடிவேலு !

தேர்தல் முடிவு காரணமாக சென்னைக்கு இப்போது வரவேண்டாம் என போலீசார் அட்வைஸ் செய்ததால், நடிகர் வடிவேலு மதுரையிலேயே தங்கிவிட்டார்.

சட்டசபை தேர்தலில் திமுகவின் பிரச்சார பீரங்கியாக, விஜயகாந்த்தை தனிப்பட்ட முறையில் தாக்கி பிரச்சாரம் செய்தார் நடிகர் வடிவேலு. ஆனால் தேர்தலில் திமுக படுதோல்வியடைந்தது.

நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்த போது மரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வீட்டுக்கு வடிவேலு வந்தார். அவரை சந்தித்த பின்னர் 11.30 மணி அளவில் பாண்டியன் ஹோட்டலுக்கு சென்றார். 15 நிமிட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் மத்திய அமைச்சர் அழகிரி வீட்டுக்குச் சென்று, சில நிமிடங்கள் அவரிடம் பேசிவிட்டு புறப்பட்டார்.

அப்போது செய்தியாளர்கள் வடிவேலுவிடம், 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொன்னீர்களே எனக் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், இரண்டு சுற்றுகள் தான் எண்ணப்பட்டுள்ளன. இன்னும் நிறைய சுற்றுகள் உள்ளன. தேர்தல் முடிவுகள் முழுமையாக வரட்டும் என்றார்.

இதுவரை வந்த முடிவுகள் பற்றி சொல்லுங்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இப்போதைக்கு எதுவும் வேண்டாம் எனக் கூறிவிட்டு சென்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் பேட்டி எடுக்க வேண்டும் என்று பாண்டியன் ஹோட்டலை முற்றுகையிட்டதையடுத்து, அவர் செய்தியார்களை சந்திப்பதை தவிர்த்தார்.

வடிவேலு வீட்டை தேமுதிக தொண்டர்கள் சூழ்ந்து கொண்டுள்ளதாகவும், தற்போதைக்கு சென்னை வர வேண்டாம் என்றும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் வடிவேலுவுக்கு தகவல் அனுப்பப்பட்டது. மேலும் உடனடியாக சென்னை வருவதை வடிவேலு தவிர்க்க வேண்டும் என்றும் போலீசார் கூறினராம்.

இதைத் தொடர்ந்து அவர் மதுரையிலேயே தங்கியுள்ளதாகத் தெரிகிறது.

காங். தலைவர் பதவி: தங்கபாலு ராஜினாமா.


தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து தங்கபாலு ராஜினாமா செய்துள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று விலகுவதாகவும், ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்ப உள்ளதாகவும் தங்கபாலு கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளை பெற்றது. ஆனால் 5 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.

ஜெயலலிதாவுக்கு - மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் வாழ்த்து.


தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தனர்.

அதே போல மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், ஜெயலலிதா, தனது இதயம் நிறைந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார் என்று கூறப்பட்டுள்ளது.

தென் மாவட்டத் தோல்வி : அதிர்ச்சியில் மு.க. அழகிரி !


மத்தி்ய அமைச்சர் மு.க.அழகிரியின் கட்டுப்பாட்டில் உள்ள தென் மாவட்டங்களை மொத்தமாக திமுக பறிகொடுத்தது மட்டுமல்லாமல் அந்த மாவட்டங்களில் போட்டியிட்ட அமைச்சர்களும், கூட்டணிக் கட்சியினரும், சபாநாயகரும் படுதோல்வியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2001ம் ஆண்டு திமுக, காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்து தனிப்பெருபான்மையின்றி ஆட்சியை கைப்பற்றியது. மெஜாரிட்டி எம்எல்ஏக்கள் இல்லாமல் மைனாரிட்டி அரசாக இருந்து பல்வேறு, சலுகைகள் திட்டங்களை கொண்டு வந்தாலும் இடை இடையே பல குழப்பங்கள், அதிமுக எம்எல்ஏக்கள், மதிமுக எம்எல்ஏக்கள் கட்சித் தாவல், இடைத்தேர்தல் இப்படி குழப்ப சூழ்நிலைகள் தமிழகத்தில் ஏற்பட்டாலும், வாதத்திறமையால் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றி பெறுவதை போல் திமுக அணி தன்னை ஒரு வலுவான ஆளும் கட்சியாக பல்வேறு தருணங்களில் காட்டி கொண்டு அதிகாரத்தை பலப்படுத்தி மத்திய அரசையை ஆட்டி படைத்தது.

காரணம் பிரதான எதிர்கட்சியான அதிமுக வலுவிழந்து விட்டதாக ஒரு கற்பனை காட்சி சூழ்நிலையை ஏற்படுத்தியது. இந்த வலுவிழந்துள்ளதாக நிலைப்பாடுதான் தமிழகத்திலுள்ள திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை மக்களிடமிருந்து வேறுபடுத்திட என்பதை விட விலகிட வழி வகுத்தது.

திமுக அமைச்சர்களாகட்டும், சபாநாயகராட்டும், எம்எல்ஏக்களாகட்டும் யாரையும் மக்கள் நெருங்க முடியாத நிலைக்கு ஆட்படுத்தியது.

இந்த விலகி நின்ற செயல்தான் விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள திமுக அமைச்சர்கள், சபாநாயகர்கள், எம்எல்ஏக்கள் தோல்வியை நோக்கி சுனாமி பேரலையால் அடித்து ஒதுக்கியது எனலாம்.

2006ல் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமைச்சர் கேகேஎஸ்ஆர் ராமசந்திரன், 15 ஆயிரம் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமைச்சர் கீதாஜூவன், 7 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமைச்சர் பூங்கோதை, 16 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சபாநாயகர் ஆவுடையப்பன், 11 ஆயிரம் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமைச்சர் சுரேஷ்ராஜன், ஆகியோர் பெரும் தோல்வியை சந்தித்தனர். எம்எல்ஏக்களில் காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ், கருப்பசாமி பாண்டியன், வசந்தகுமார், உள்ளிட்டோர் அமைச்சர்களாகவே தங்களை கருதி கொண்டு தனி ஆவர்த்தனம் செய்ததும் தொண்டர்களையும், மக்களையும் மதிக்காத நிலைப்பாடு ஒரு புறம் இருந்தாலும் கருப்பசாமி பாண்டியன், மாலைராஜா, ஆவுடையப்பன் உள்ளிட்டோர் மணல் ராஜாங்கத்தில் கொடிகட்டி பறந்ததும் ஒரு பெரும் காரணம் இவர்கள் தோல்விக்கு உண்டு.

கடந்த தேர்தலில் 42 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை தேற்கடித்து வெற்றி பெற்ற அமைச்சரான மைதீன்கானின் வெற்றி இம்முறை வெறும் 605 வாக்குகளில் தான் நிர்ணயம் செய்யப்பட்டது. அதேபோல் பூங்கோதை தோல்வியும் 279 வித்தியாசத்தில்தான். அதிமுக அணியில் நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டையை தவிர அனைத்து தொகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் தவிர அனைத்து தொகுதிகளிலும், குமரி மாவட்டத்தில் 2 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றியை தட்டி பறித்துள்ளது.

தென் மாவட்டங்களிலுள்ள 58 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அழகிரி அசைமெண்டின்படி திருமங்கலம் பார்மூலாப்படி வெற்றியை தக்க வைக்கலாம் என கருதி காய நகர்த்திய திமுகவுக்கு பெருத்த அடி விழுந்துள்ளது. 47 தொகுதிகளை இழந்துள்ளது திமுக. ஒட்டு மொத்ததில் தென் மாவட்டத்தில் திமுக அணி தோல்வியை தழுவியதற்கு காரணம் மணல் பிரச்சனை, மின் தட்டுபாடு, வேலைவாய்ப்பின்மை, எம்எல்ஏக்கள் மக்களோடு நெருங்காமல் ஒதுங்கியது, கூடவே ஸ்பெக்டரம் போன்றவை மக்களை வெறுப்படைய செய்ததும் குறிப்பிடத்தக்கது.

மொத்ததில் எதிர்பார்க்காத வெற்றியை அதிமுகவும், எதிர்பார்க்காத தோல்வியை திமுகவும் தென்மாவட்டத்தில் சந்தித்துள்ளது.

கனிமொழி வழக்கு மே 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு


2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சிபிஐ நீதிமன்றம் வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி வந்தது குறித்து தற்போது சர்ச்சையாகியுள்ளது. இது ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்த பணம் என்பது சிபிஐயின் வாதம். ஆனால் இது கடன் என்றும், திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டது என்றும் கலைஞர் டிவி கூறி வருகிறது. இந்த வழக்கில் கூட்டுச் சதியாளராக கனிமொழி சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர் சிபிஐ கோர்ட்டில் ஆஜரானார். அவருக்காக ராம்ஜேத்மலானி ஆஜரானார். கனிமொழி ஒரு பெண், தாய், எங்கும் ஓடி விட மாட்டார். அவருக்கு முன் ஜாமீன் தர வேண்டும் என்று வாதாடினார் ராம்ஜேத்மலானி. ஆனால், அவரை கைது செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சிபிஐ கோரியது.

இந்த வழக்கில் இன்றைக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று கனிமொழி மீண்டும் கோர்ட்டில் ஆஜரானார்.

அப்போது இந்த வழக்கில் தீர்ப்பை நீதிபதி சைனி வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் - சில நிலவரங்கள்.

ஆர். கண்ணன்


ஒரு நாட்டிலிருந்து பிற நாடுகளுக்குச் சென்று வாழ்ந்த மனிதர்களின் வம்சாவளியினரை ஆங்கிலத்தில் "டயஸ்போரா' என்றும், இவர்களைப் பற்றிய பாடப்பிரிவை "டயஸ்போரிக் ஸ்டடீஸ்' எனவும் அழைக்கின்றனர்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் என உலகெங்கிலும் 3 கோடி இந்தியர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என அறியப்படுகிறது. 2010-ல் வெளியான யுஎன்டிபி அறிக்கையின்படி, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்திய வம்சாவளியினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகியோரின் எண்ணிக்கையே மிக அதிகமானதாக உள்ளது.

இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. முசாபர் சிஷ்டி எனும் ஆராய்ச்சியாளர் 2007-ல் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ள கருத்து குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி 1990-91-ம் ஆண்டு அயல்நாடுகளில் வசித்த இந்தியர்கள் நமது நாட்டுக்கு அனுப்பிய தொகை 2.1 பில்லியன் டாலர்களாகும். கடந்த 15 ஆண்டுகளில் குறிப்பாக, 10 ஆண்டுகளில் பிரமிக்கத்தக்க வகையில் அந்நியச் செலாவணி உயர்ந்தது.

1996-97-ல் 12.3 பில்லியன் டாலர் என்ற அளவில் இருந்த இவர்கள் அனுப்பிய தொகை, 2003-04-ல் ஏறத்தாழ 22 பில்லியன் டாலராக உயர்ந்தது. இது 2005-ம் ஆண்டு 23.5 பில்லியன் டாலர் எனும் அளவை எட்டியது. அந்தவகையில் சீனா மற்றும் மெக்ஸிகோ போன்ற நாடுகளை இந்தியா முந்திவிட்டதாகவும் உலக வங்கியின் மதிப்பீடு தெரிவிப்பதாக முசாபர்சிஷ்டி குறிப்பிடுகிறார்.

மாறிவரும் இந்தியா பற்றி "ஃபோர்ப்ஸ் இந்தியா' இதழில் தேவேஷ்கபர் எனும் கட்டுரையாளர் 2009-ல் வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து நமது நாட்டுக்கு வரவு 50 பில்லியன் டாலர்கள் எனத் தெரிவிக்கிறார்.

1830-களில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்த இந்தியர்களில் பெரும்பாலோர் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த நலிந்த பிரிவினராவர். 1834-க்கும் 1937-க்கும் இடையே, அதாவது 103 ஆண்டுகளில் 3 கோடி இந்தியர்கள் கடல்கடந்து சென்றதாகவும் அவர்களில் ஐந்தில் நான்கு பேர் மீண்டும் தாய்நாட்டுக்கே திரும்பிவிட்டதாகவும் தேவேஷ்கபர் கூறுகிறார்.

இந்திய விடுதலைக்குப் பிறகு இடம்பெயர்ந்த இந்தியர்கள் பெரும்பாலும் சமூகப் பொருளாதாரப் பிடிமானங்கள் உள்ள குடும்பங்களைச் சார்ந்தவர்கள் என்பதும் இவரின் கருத்தாகும். எண்ணிக்கையைப் பொறுத்தவரை பிறநாடுகளுக்குச் சென்றவர்களோடு ஒப்பிடுகையில் அமெரிக்காவுக்குப் பயணப்பட்டோர் அதிகக் கல்வித்தகுதி கொண்டவர்களாக இருந்தனர். 1990-ம் ஆண்டுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையில் திறன்சார் மக்கள் இந்தியாவிலிருந்து, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு வேலை தேடிச் சென்றனர் என்கிறார் தேவேஷ்கபர்.

புலம் பெயர்ந்த இந்தியர்கள் தாங்கள் குடியமர்ந்த நாடுகளின் வளர்ச்சிக்காக மிகக் கடினமாக உழைத்தனர் என்பது வரலாறு. தேயிலை, கோகோ மற்றும் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்த இவர்களின் ஐந்தாவது அல்லது ஆறாவது தலைமுறையினர் இன்றைக்கும் உலகின் பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

அரசியல், நிர்வாகம், கலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் இன்னோரன்ன துறைகளில் இந்தியர்களின் பங்களிப்பு மிகச் சிறப்பாக விளங்கியது. இன்றும் விளங்குகிறது என்பதை காலம் உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

உழைப்பு, திறமை, அறிவு இவற்றால் உலகின் பல பகுதிகளை மேம்படச் செய்த இவர்களும், இவர்களின் வாரிசுகளும் ஏதாவது ஒருவகையில் இன்னலுக்கு ஆட்படுகிறார்கள் என்பது குறித்து செய்தித்தாள்கள் மூலமாகவும், தொலைக்காட்சியின் வாயிலாகவும் நமக்கு அவ்வப்போது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாடுகளில் குடியமர்ந்த காலத்திலும் இவர்கள் அடைந்த துயரங்களை பல ஆராய்ச்சிக் கட்டுரைகளிலிருந்து அறிந்து கொள்கிறோம்.

டிரினிடாடில் வாழ்ந்த இந்தியர்களின் வாழ்க்கையை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

1845-லிருந்து 1917-வரை இந்தியாவிலிருந்து டிரினிடாட் தீவுக்கு அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களில் பெரும்பாலோர் கிழக்கு உத்தரப் பிரதேசத்தையும், பிகாரையும் சேர்ந்தவர்கள். ஜாதி, சமுதாய, கலாசார அடிப்படையில் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த இவர்கள் டிரினிடாடுக்கு அழைத்துவரப்பட்ட பின் பல்வேறு இடங்களிலுள்ள தோட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர். உறவுகள், பந்தங்கள் போன்ற எந்தச் சமூகஉறவின் அடிப்படையிலும் இவர்கள் இணைந்து செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை. இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள் எனும் பொதுவான அடையாளத்தைத் தவிர, அடுத்த வீட்டில் வாழ்பவருடைய மொழியும் கலாசாரமும்கூட தெரியாமல் இந்தத் தொழிலாளர்கள் வாழ்ந்ததாகப் பிரமோத்குமார் மிஸ்ரா எனும் மானுடவியல் பேராசிரியர் "ஈஸ்டர்ன் ஆந்த்ரோபாலஜிஸ்ட்' எனும் ஆய்விதழில் 1995-ம் ஆண்டு வெளியிட்ட கட்டுரையில் டிரினிடாடுக்கு புலம்பெயர்ந்த இந்தியர்களின் நிலை குறித்து தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

கனடா நாட்டுக்கு 19-ம் நூற்றாண்டின் கடைசியில் சென்ற இந்தியர்களின் நிலையும் ஏறத்தாழ இவ்வாறே இருந்தது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சில நூறு இந்தியர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எட்டு லட்சத்தைத் தாண்டி, கனடாவின் மொத்த மக்கள்தொகையில் 2.8 விழுக்காடு எனும் அளவை எட்டியது. வளமான வாழ்க்கைத் தரத்தோடு உயர்கல்வி கற்றோர் எனும் நிலையை அடைந்த சிறுபான்மைச் சமூகமான இந்திய வம்சாவளியினர் குடியமர்ந்த ஆரம்ப காலங்கள் சோதனைகள் நிரம்பியதாகவே இருந்தன. கடின உழைப்பு மற்றும் நம்பகத்தன்மை கொண்டவர்களாக இந்தியப் பணியாளர்கள் இருந்தமையாலும் குறைந்த ஊதியத்துக்கு இவர்கள் தயாராக இருந்ததாலும், முதலாளிகள் இவர்களை வேலைக்கு அமர்த்தினர். ஆனால், இந்தியர்கள் பொருளாதார ரீதியாக சுரண்டப்பட்டதோடு, சமூக மற்றும் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே வாழ்ந்தனர் என அஜயகுமார்சாகு எனும் ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.

1907-ம் ஆண்டு அந்த நாட்டில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி இந்தியர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதாக இந்த ஆராய்ச்சியாளர் தெரிவிக்கிறார். படிப்படியாக கனடாவில் குடியேறிய இந்தியர்கள் தங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்தாக அஜயகுமார்சாகு குறிப்பிடுகிறார். முதலில் வான்கூவரிலும், பின்னர் விக்டோரியாவிலும் குருத்துவாராக்களை கட்டிக்கொள்ள அனுமதிக்கப் பட்டனர் என்கிறார் இந்த ஆய்வாளர்.

உலகெங்கிலும் குடியமர்ந்த இந்தியர்கள் இன்றளவும் இன்னல்களை ஏதோ ஒருவகையில் சந்தித்துக் கொண்டிருப்பதற்கு எண்ணற்ற உதாரணங்களைக் கூறலாம்.

அமெரிக்காவிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களுக்கு கால்களில் கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தியது, ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் எனப் பிரச்னைகள் இன்றளவும் ஓய்ந்த பாடில்லை.

கடல் கடந்த இந்தியர்களின் திறமையும் அனுபவ அறிவும் வெளிநாடுகளுக்கே பயன்படுகின்றன என்பதில் ஆதங்கமும் வருத்தமும் இருந்தாலும் தங்கள் மூதாதையரின் வேர்களைத் தேடி அவர்கள் நம் நாட்டுக்குவர முயற்சிக்கும்போது பிரிவும் ஏக்கமும் பரஸ்பரம் மனதை வாட்டினாலும் அவர்களால் நாம் பெறும் அந்நியச் செலாவணி நமது பொருளாதாரத்தை உயர்த்தும் உந்து சக்தியாக விளங்குகிறது என்பதில் ஆறுதலும் ஏற்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

பல நாடுகளில் இந்திய வம்சாவளியினர் பாராளுமன்ற உறுப்பினர்களாக செனட்டர்களாக, அமைச்சர்களாகப் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் திறம்படப் பணிபுரிந்து வருகிறார்கள்.

பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாக, ஐ.நா.சபையின் பல்வேறு பிரிவுகளில் நிர்வாகிகளாக, எழுத்தாளர்களாக தடம் பதித்துக் கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் சிங்கப்பூரின் ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட ரவீந்தர்சிங்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரே. பல்லாயிரக்கணக்கான நமது இளைஞர்கள் வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் பணியமர்ந்திருக்கிறார்கள் என்றால் நமது நாட்டினரின் திறமைக்கும், உழைப்புக்கும், நாணயத்துக்குமான ஒரு சர்வதேச அங்கீகாரம் என்பதையே இது உணர்த்துகிறது.

(கட்டுரையாளர்: மதுரை காமராசர் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர்)

ஊழலுக்கு மரண அடி...

அருண் நேரு.


இந்தியாவில் இயங்கும் மக்களாட்சியின் வலிமையை சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றன. தங்களுக்கு விருப்பமில்லாத ஆட்சிகளை மக்கள் அகற்றியிருக்கிறார்கள். நன்மை செய்தவர் களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள்.

தேர்தல் ஒன்றே மிகப்பெரும் மாற்றத்துக்கு ஒரே வழி என்று ஊழலுக்கு எதிரான போராட்டம் நடத்தும் அண்ணா ஹஸரேவும் அவரது நண்பர்களும் இப்போது எண்ணத் தொடங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

தமிழ்நாட்டில் காங்கிரஸம் அதன் கூட்டணிக் கட்சியான திமுகவும் படுதோல்வியைச் சந்தித்திருக்கின்றன. 234 தொகுதிகளில் 200-க்கும் அதிகமான தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியிருக்கிறது.

ஊழல் செய்ததற்காகத்தான் திமுக தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. எல்லா ஊழல்களையும் பின்னுக்குத் தள்ளிய 2ஜி ஊழல் ஒன்றே அவர்களை நெருக்கடியில் தள்ளியது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் நாட்டுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று கூறிக்கொண்டு திமுகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டிவிட்டார்கள். 65 தொகுதியில் போட்டியிட்ட அந்தக்கட்சியால் இரட்டை இலக்கங்களில்கூட வெற்றிபெற முடியவில்லை.

புதுச்சேரியிலும் காங்கிரஸக்கு எதிராகவே மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். கேரளத்திலும் காங்கிரஸக்கு தெளிவான வெற்றி கிடைக்கவில்லை என்றே கூறவேண்டும்.

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி பெற்றிருக்கும் பிரமாண்ட வெற்றியில் காங்கிரஸக்கு எந்தப் பங்கும் இல்லை. அது முழுக்க முழுக்கு மம்தா பானர்ஜிக்காக மட்டுமே கிடைத்த வெற்றி.

அசாம் மாநிலத்தில் தருண் கோகோய் மீண்டும் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் அவர் மீது மக்கள் நன்னம்பிக்கை வைத்திருப்பது உறுதியாகியிருக்கிறது. ஷீலா தீட்சித் போல் அவரும் வளர்ச்சிப் பணிகள் மூலமாக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவராக உருவெடுத்திருக்கிறார்.

2014-ம் ஆண்டில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படலாம் என்பதை இந்தச் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் பிராந்திய கட்சிகளின் ஆதிக்கம் தெரிகிறது. இது தேசியக் கட்சிகளுக்கு நல்லதல்ல.

மக்களவையில் 206 இடங்களைப் பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இப்போதைய நிலைமையில் தேர்தல் நடந்தால் 160 முதல் 170 வரையே கிடைக்கும். பாஜகவும் 120 முதல் 125 இடங்கள் வரையே பெறும். திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு இப்போதைய 19 இடங்களில் இருந்து 30 இடங்கள்வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அதிமுகவும் தனது பலத்தை 9-ல் இருந்து 25-ஆக உயர்த்திக் கொள்ளும். மாயாவதியையும் குறைத்து மதிப்பிட முடியாது. அவரும் 35 தொகுதிகளில் வெற்றி பெறுவார்.

கடந்த பல ஆண்டுகளாக நாட்டில் கூட்டணி ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. சிறிய கட்சிகளை தாஜா செய்து கூட்டணி அரசை எப்படி நடத்த வேண்டும், என்னென்ன சவால்களையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும், அவற்றை எப்படிக் கையாள வேண்டும் என்பதில் பாஜகவும் காங்கிரஸம் அனுபவம் வாய்ந்த கட்சிகளாகிவிட்டன. அதிகாரப் பகிர்வெல்லாம் அவர்களுக்கு அத்துபடி.

2ஜி விவகாரம் ஆக்டோபஸôக தனது கரங்களை விரிக்கத் தொடங்கிவிட்டது. தேர்தலில் திமுக தோற்றுப் போய்விட்டதுடன் விவகாரம் முடிந்துவிடப் போவதில்லை.

எத்தனையோ மோசமான நெருக்கடிகளை திமுக இனிமேல்தான் சந்திக்க வேண்டியிருக்கிறது. திமுகவைச் சேர்ந்த 18 மக்களவை உறுப்பினர்களின் ஆதரவுடன் மத்திய அரசை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பினால், இன்னும் பல தோல்விகளை அந்தக் கட்சி சந்திக்க வேண்டியிருக்கும். பஞ்சாபும், உத்தரப் பிரதேசமும் பாடம் புகட்டக் காத்திருக் கின்றன.

பிகாரின் நிதீஷ்குமார், ஒரிசாவின் நவீன் பட்நாயக், தேசியவாத காங்கிரஸின் சரத் பவார் ஆகியோருடன் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவும், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பாஜனர்ஜியும் வலுவான பிராந்தியத் தலைவர்களாகி இருக்கின்றனர். இப்போதைக்கு எந்தச் சர்ச்சையிலும் சிக்காமல் அவர்கள் வருங்காலத்துக்காகத் திட்டமிடுவார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இப்போதைக்கு திமுகவிடம் 18 எம்.பி.க்களைத் தவிர வேறு எதுவும் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் 2ஜி வழக்கு நடந்துவரும் நிலையில், கனிமொழியையும் கட்சியையும் காப்பாற்றுவதற்கு காங்கிரஸின் தயவு திமுகவுக்கு நிச்சயம் தேவை.

திமுக குடும்பத்துக்கு இப்போதைக்கு வேறு எந்தப் பாதுகாப்புக் கவசமும் இல்லை. பேரவைத் தேர்தல் தோல்வியாலும் 2ஜி விவகாரத்தாலும் குடும்பச் சண்டை மீண்டும் வீதிக்கு வரலாம். அவர்களது சொத்துகள் கண்காணிக்கப்படலாம்.

இருந்தாலும், முதல்வராகப் போகும் ஜெயலலிதா எச்சரிக்கையுடனேயே செயல்படுவார். என்னதான் நடக்கிறது என்று பொறுமையாக இருப்பார் என்றே தெரிகிறது. அதுதான் அவருக்கும் நல்லது.

மம்தா பானர்ஜிக்கு 225 இடங்கள் கிடைத்திருக்கின்றன. காங்கிரஸ் கட்சியை அவர் பொருள்படுத்தப் போவதில்லை. மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, அவர்தான் கூட்டணியின் தலைவர். அவர் சொற்படிதான் காங்கிரஸ் நடந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் திமுகவுக்கு நேர்ந்ததைப்போல மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் நசுங்கிவிடவில்லை.

தங்களது வாக்கு வங்கியை அவர்கள் ஓரளவு தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மம்தா புரிந்து வைத்திருப்பார்.

கிராமப்புறங்களில் இடதுசாரித் தொண்டர்களைச் சமாளிக்க உள்துறை அமைச்சரின் உதவி தமக்குத் தேவைப்படும் என்பதும் மம்தாவுக்குத் தெரியும். தோல்வியுற்றவர்கள் வரும் நாள்களில் வன்முறையில் இறங்கக்கூடும் என்பதால், அதற்கான முன்னேற்பாடுகளையும் அவர் செய்து கொள்ள வேண்டும். இருந்தாலும் 34 ஆண்டுகாலம் அரியணையில் இருந்தவர்களை சமாளிப்பது அவருக்கு அவ்வளவு எளிதான பணியாக இருக்கப் போவதில்லை.

மாநிலத்தில் ஆட்சி கிடைத்திருந்தாலும், மத்தியில் தமக்கு இருக்கும் செல்வாக்கை மம்தா விட்டுவிடமாட்டார். 7 அமைச்சர்களைக் கொண்டு தமது மாநிலத்துக்கு தேவையானதைப் பெறுவதில் அவர் மும்முரமாக ஈடுபடுவார். 9 எம்.பி.க்களை மட்டும் வைத்துக் கொண்டு சரத் பவார் எப்படி மத்திய அரசையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறாரோ, அந்த அளவுக்குச் செயல்பட மம்தாவுக்கும் திறமை உண்டு.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைப் பெருமைப்பட வைத்திருக்கும் ஒரே தலைவர் தருண் கோகோய்தான். தனது நிர்வாகத்தாலும், அரசியல் திறமையாலும் அசாம் கண பரிஷத், பாஜக ஆகிய கட்சிகளை தடம் தெரியாமல் செய்துவிட்டார்.

தனது பொறுமையான அணுகுமுறையில் ஸ்திரமான அரசு அமைவதற்கு வழிவகுத்திருக்கிறார். அவர் வெற்றிபெறுவார் என மிகச் சிலர்தான் கணித்திருந்தார்கள்.

அசாமின் பாதுகாப்புக்கும் மேம்பாட்டுக்கும் இந்த வெற்றி உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடந்த 3 தொகுதிகளும் பாஜகவுக்கு சென்றிருக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தில் நடந்த மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் ஜகன்மோகன் ரெட்டி 5 லட்சத்துக்கு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார்.

சட்டப் பேரவைத் தொகுதியில் அவரது தாயார் 85 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். மொத்தத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தென்மாநிலங்களில் இருந்து நல்லசேதி ஏதும் இல்லை.

பண நடமாட்டத்தைக் கட்டுப்பட்டுப்படுத்தி நேர்மையாகவும் வெளிப்படையாகவும் தேர்தலை நடத்தியதற்காகத் தேர்தல் ஆணையத்தப் பாராட்டியே ஆக வேண்டும்.

தேர்தல் முடிந்துவிட்டது என்பதால் அரசியலில் ஆசுவாசிப்படுத்திக் கொள்வதற்கு நேரம் கிடையாது. இங்கு விடுப்பு எடுக்கவும் முடியாது. இதோ 2ஜி வழக்கு இன்று விசாரிக்கப்பட இருக்கிறது. கனிமொழி மனு மீது தீர்ப்பும் வழங்கப்படுகிறது.

கறுப்புப் பணம் மீட்கப்படுமா?

எஸ். லெஷ்மிநாராயணன்.



என்னதான்... ஓடி... ஓடி... வியர்வை சிந்த உழைத்தாலும் ஒரு ரூபாய்கூட சேமிக்க முடியாத மக்களும் இந்த நாட்டில் உள்ளனர். ஆனால், அரசை ஏமாற்றி வெள்ளையைக் கறுப்பாக மாற்றி வெளிநாட்டு வங்கியில் கோடிக்கணக்கான பணத்தைப் பதுக்கி வைத்திருப்போரும் இங்குதான் உள்ளனர்.

ஊழல், லஞ்சம், வருமான வரிஏய்ப்பு செய்த (கறுப்புப் பணம்) பணத்தைப் பத்திரப்படுத்துவதற்காக உலகின் பல நாடுகளில் வங்கிகள் உள்ளன. இவற்றில் முக்கியமானது ஸ்விட்சர்லாந்தில் உள்ள வங்கிகள்.

ஸ்விட்சர்லாந்தில் மொத்தம் 327 வங்கிகளும், நிதி நிறுவனங்களும் உள்ளன. இவற்றில் மிகப்பெரிய அளவில் பணப்புழக்கம் உள்ளவை இரண்டு வங்கிகள்தான். அந் நாட்டு வைப்பு நிதியில் 50 சதத்துக்கும் மேல் இந்த இரு வங்கிகளில்தான் பணம் உள்ளது.

ஸ்விஸ் வங்கிகளில் கணக்குத் தொடங்க சில நடைமுறைகள் உள்ளன. அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் ஸ்விஸ் நாட்டுக் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். வெளிநாட்டவராக இருந்தால் அந் நாட்டுடன் வியாபாரத் தொடர்போ அல்லது வீடோ அந் நாட்டில் இருக்க வேண்டும். மற்றபடி கணக்கு வைத்திருப்பவர் வங்கிக்கு அடிக்கடி வந்து செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒருமுறை அந்த வங்கி எங்கு உள்ளது என்று தெரிந்து வைத்துக்கொண்டால் மட்டும் போதும். மற்றபடி அனைத்துப் பரிவர்த்தனைகளையும் ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல், வங்கியில் கணக்குத் தொடங்குவதும், முடித்துக் கொள்வதும் எளிதான வழிமுறைதான்.

இப்படி ஓர் எளிமையான முறையை ஏற்படுத்தியுள்ளதால்தான் இந்த வங்கிகளில் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் தங்களது கறுப்புப் பணத்தைப் போட்டுவைத்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 80,000 பேர் ஸ்விட்சர்லாந்துக்குப் பயணம் செய்கிறார்கள். இவர்களில் 25,000 பேர் ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையோ போய் வருகின்றனர். ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் சேமித்து வைத்துள்ள பணம் மட்டும் ரூ. 70 லட்சம் கோடியைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பட்டியலில் இந்தியர்களும் இடம்பெற்றுள்ளதாக அண்மையில் விக்கி லீக்ஸ் நிறுவனத் தலைவர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார். இந்தப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். இந்தியர்களின் பெயர்கள் நினைவில் இல்லை. இருப்பினும், இந்தப் பட்டியலில் இந்தியர்கள் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த மிக முக்கியப் பிரமுகர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் பணத்தைப் போடுவதற்கு குறைந்தபட்சம் 10 லட்சம் டாலர்களாவது இருக்க வேண்டும். அப்படி வைத்துள்ள இந்தியர் சாதாரண ஆளாக இருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தாராளமயப் பொருளாதாரக் கொள்கை அமலாக்கத்தால் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் ஊழல்களுக்கு வித்திட்டுள்ளது. காமன்வெல்த் விளையாட்டு ஏற்பாடுகளில் ஊழல், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல், நிலபேர ஊழல், ஆதர்ஷ் வீடு ஒதுக்கீட்டில் ஊழல் போன்ற மெகா ஊழல்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. தாராளமயக் கொள்கை அமலாக்கத்துக்குப் பிறகு பெரு முதலாளிகள் எண்ணிக்கையும், அவர்கள் சேர்த்த சொத்துகளும் அதிகரித்துள்ளன. உலகப் பணக்காரர்கள் தர வரிசையில் இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர். தாராள மயமாக்கத்தால் சாதாரண மக்களின் வாழ்க்கை பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.

ஒருநாளைக்கு ரூ. 20 கூட ஊதியம் கிடைக்காமல் 74 சதவீத மக்கள் இருப்பதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஊழல்களைக் கண்டுபிடித்து அம்பலப்படுத்திய போதெல்லாம் அதை மூடிமறைக்கவும், அதில் ஈடுபடுபவர்களைக் காப்பாற்றுவதற்கு மட்டுமே அரசு முயற்சிக்கிறது. இப்படி ஊழல் புரிந்தவர்களின் பணம்தான் ஸ்விஸ் வங்கியில் பதுக்கப்பட்டு வருகிறது.

இப்படி முறைகேடான வழியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை நமது அரசு வெளியில் கொண்டு வந்தால், நமது வெளிநாட்டுக் கடன்களை ஒரே நாளில் அடைத்துவிட முடியும். அது மட்டுமன்றி இன்னும் பிற திட்டங்களையும் நிறைவேற்ற ஏதுவாக இருக்கும்.

கடந்த 2010-ல் இந்தியா-ஸ்விஸ் நாடுகளிடையே இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, 2011 ஜனவரி முதல் ஸ்விஸ் வங்கியின் கணக்குகளைக் கோரலாம் என்று சொல்லப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது பேசிய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்பதற்கு அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.

கறுப்புப் பணத்துக்கு எதிராக உலகளாவிய அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இந்திய அரசும் சேருவது, கறுப்புப் பணத்தை வெளிக்கொணர உரிய சட்டங்களை இயற்றுவது, சட்டவிரோதமாக ஈட்டப்படும் வருவாயைக் கண்டுபிடிக்கவும் அவற்றைப் பறிமுதல் செய்யவும் உரிய துறைகளையும், ஏற்கெனவே உள்ள துறைகளில் புதிய பிரிவுகளையும் உருவாக்குவது, கறுப்புப் பணத்தைக் கண்டுபிடித்து கைப்பற்ற இயற்றிய சட்டங்களையும், ஏற்படுத்திய துறைகளையும் நன்கு பயன்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் உரிய நிர்வாக அமைப்பை ஏற்படுத்துவது, இந்தப் பணிகளை விரைவாகவும் சரியாகவும் செய்ய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் உரிய பயிற்சிகளை அளிப்பது ஆகிய 5 அம்சங்கள் கறுப்புப்பணத்தை மீட்க மத்திய அரசின் உத்தியாகும் என நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தாகத் தெரியவில்லை.

எனவே, ஸ்விஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்க முனைப்போடு செயல்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!

மக்களுடைய உறுதிக்கு கிடைத்த வெற்றி : ஜெயலலிதா.


மக்களுடைய உறுதிக்கு கிடைத்த வெற்றி. தமிழகத்தின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதி அளிக்கிறேன் என்று ஜெயலலிதா கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இறுதிக் கட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருந்தபோது, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பேட்டி கண்டது.

கேள்வி: தேர்தல் முடிவு குறித்து பல கருத்து கணிப்புகள் வெளியாகின. ஆனால், இந்த பரிமாணத்தில்தான் இருக்கும் என்று சொன்ன ஒரே நபர் நீங்கள் மட்டும்தான். இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட காரணம் என்ன?.

பதில்: நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிந்தது. தி.மு.க. ஆட்சியை மக்கள் வெறுத்தார்கள். அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்த பொதுமக்கள் காத்திருந்தார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்தது. ஆகவே, கருத்து கணிப்பு என்ன சொன்னாலும், மக்கள் இந்த முடிவுடன் இருக்கிறார்கள். உறுதியாக இருக்கிறார்கள். எக்காரணத்திற்காகவும் இந்த முடிவை மாற்ற மாட்டார்கள் என்று எனக்கு நன்றாகவே தெரிந்தது. அதனால்தான், யார் எதைப்பற்றி சொன்னாலும் நான் கவலைப்படவில்லை.

கேள்வி: இந்த தேர்தல் முடிவுக்கு பிறகு உங்களுடைய அரசியல் பயணம் என்பது புதுடெல்லியை நோக்கி இருக்குமா?.

பதில்: அதை இப்போதே எப்படி சொல்ல முடியும். இன்றுதான் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் தேர்தல் முடிவுகள் முழுமையாக வரவில்லை. அடுத்த பணி ஆட்சி அமைப்பதாகும். அதன்பின்னர், தமிழ்நாட்டில் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழகம் சீரழிக்கப்பட்டுவிட்டது. சீரழிவு என்றால், எல்லாமே நாசம் செய்யப்பட்டுவிட்டது.

சட்டம் ஒழுங்கு சீர்குழைவு, மின்வெட்டு, விலைவாசி உயர்வு, விவசாய தொழில் சீரழிவு, நெசவுத் தொழில் அழிக்கப்பட்டது. பொதுவாக தொழில் துறையை பலவீனமடையச் செய்தது. மக்களுக்கு வாழ்வாதாரமே இல்லாமல் செய்தது. வேலை இல்லா திண்டாட்டம் பெருகியது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த மாநிலத்தையே கடனாளியாக்கி விட்டார்கள். ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மாநில கடன் சென்றுவிட்டது என்று செய்திகள் வருகின்றன. 2006 ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளில், ஏதோ கற்காலத்திற்கே சென்றுவிட்ட சூழல் ஏற்பட்டுவிட்டது.

அதனால், நாம் இப்போது மேற்கொள்ள வேண்டிய பணி சாதாரணமானது அல்ல. மிகவும் கடினமான பணி. ஆகவே, தமிழ்நாட்டையே மீண்டும் நிர்மாணிக்க வேண்டும்.

இப்போது தமிழ்நாடு இருக்கின்ற அவலநிலையில் இருந்து அதை மீட்டு, மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் மிகப்பெரிய பொறுப்பு என்மீது சுமத்தப்பட்டுள்ளது. மக்களுக்காக இதை ஏற்று நிறைவேற்றி ஆக வேண்டும்.

கேள்வி: இந்த சிறப்பு பேட்டி வழியாக, தமிழக மக்களுக்கு, இந்திய மக்களுக்கு நீங்கள் சொல்வது என்ன?.

பதில்: இப்படிப்பட்ட ஒரு உறுதியான தேர்தல் முடிவுகளை தந்த தமிழக மக்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தலைவணங்கி தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயகம் என்பதே மக்கள் ஆட்சிதான். மக்கள் விரும்பினால் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர முடியும் என்பதை தமிழக மக்கள் மீண்டும் இன்று உலகத்திற்கே எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். ஆகவே, இன்று தேர்தல் வெற்றி என்று சொல்லி, பலர் பாராட்டு தெரிவித்தாலும், இது உண்மையிலேயே மக்கள் வெற்றிதான். மக்களுடைய உறுதிக்கு கிடைத்த வெற்றி.

ஆகவே, தமிழக மக்களுக்கு நான் சொல்ல விரும்புகின்ற செய்தி, கடந்த 5 ஆண்டுகாலமாக எவ்வளவோ அல்லல்பட்டுவிட்டீர்கள். துன்பப்பட்டுவிட்டீர்கள். எத்தனையோ முறை நீங்கள் ரத்தக் கண்ணீர் வடித்திருக்கிறீர்கள். அதையெல்லாம் துடைத்துவிடுங்கள். துயரத்தை மறந்துவிடுங்கள். இனி சிரித்துக் கொண்டே இருங்கள். உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும். அதை நான் உறுதியளிக்கிறேன் என்று கூற விரும்புகிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

அதிமுகவின் வன்முறை ஆரம்பம் : நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டில் தாக்குதல்.


மைலாப்பூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான எஸ்.வி.சேகர் வீட்டின் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். சென்னை மந்தைவெளியில் வெள்ளிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்றது.

ஆட்டோ மற்றும் மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த சில மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டனர். இநத் சம்பவத்தில் எஸ்.வி.சேகர் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், அலமாறி கண்ணாடிகள் சேதமாகின. சத்தம் கேட்டு வெளியே வந்து பார்ப்பதற்குள், தாக்குதல் நடத்தியவர்கள் தப்பித்துவிட்டனர் என்றும், இந்த சம்பவம் இரவு 10.30 மணிக்கு நடந்தது என்றும் எஸ்.வி.சேகர் கூறினார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2006 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் எஸ்.வி.சேகர் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் மைலாப்பூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.வி.சேகர், அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

தேர்தல் முடிவுகள் வெளியான அன்று எஸ்.வி.சேகர் வீடு தாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மக்களுக்குத்தான் தோல்வி : நடிகை குஷ்பு.


தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு தோல்வி அல்ல, மக்களுக்கு தான் என்று நடிகை குஷ்பு கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு 13.05.2011 காலை வெளியானது. வாக்கு எண்ணிக்கையையொட்டி தி.மு.க., அ.தி.மு.க. தேர்தல் அலுவலங்களில் தொண்டர்கள் காலை முதலே குவிய தொடங்கினர்.

திமுக தலைவர் கலைஞர் இல்லமான கோபாலபுரத்தில் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் குவிந்து இருந்தனர்.

காலை 10.30 மணியளவில் கலைஞரை பார்க்க மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, நெப்போலியன், நடிகை குஷ்பூ ஆகியோர் வந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு,

இது தி.மு.க.விற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. தி.மு.க. கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான திட்டங்களை வழங்கி மக்களை காப்பாற்றியிருக்கிறது. இதை அவர்கள் உணரவில்லை.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் மீடியாக்கள் அதிகமாக விளையாடி விட்டன. இந்த வழக்கில் இருந்து தி.மு.க. மீண்டு வரும், மீண்டும் வரும் என்றார்.

புதிய ஆட்சிக்காக பழைய தலைமை செயலகம் புதுப்பொலிவு பெறத் தொடங்கிவிட்டது.

பழைய தலைமை செயலகத்தில் புதிய அமைச்சர்களுக்கு அறைகள் தயாராகின்றன. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

2011 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கிறது என்று தெரிந்ததும், பழைய தலைமை செயலகத்தை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது.

இதற்கிடையே, கோட்டையில் உள்ள கேண்டீன் முன்பு அ.தி.மு.க. ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். அரசு ஊழியர்களுக்கும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

அமைச்சர்களுக்கான அறைகளும் சுத்தம் செய்யப்படுகின்றன. ஏ.சி. மிஷின்கள் துடைக்கப்பட்டு பளிச்சிடுகின்றன. அமைச்சர்களின் கார்களில் உள்ள சுழல் விளக்கு, முகப்பு விளக்குகள், கார்களில் உள்ள இருக்கைகள் அனைத்தும் புதுப்பிக்கப்படுகின்றன.

கடந்த ஆட்சியில் தலைமை செயலாளர், நிதித்துறை, உள்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலகங்கள் பழைய தலைமை செயலகத்தில் இருந்து புதிய தலைமை செயலகத்திற்கு மாற்றப்பட்டன.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் புதிய ஆட்சி பொறுப்பேற்க உள்ள நிலையில், முதல் அமைச்சர் உள்பட அனைத்து அமைச்சர்களின் அலுவலகங்களும் பழைய தலைமை செயலகத்திலேயே செயல்படும் என்றும், சட்டசபை கூட்டமும் அங்கேயே நடைபெறும் என்றும் தெரிகிறது.

அமைச்சர்கள் பயன்படுத்திய அரசு கார்கள் பழைய தலைமை செயலகத்திற்கு வந்த வண்ணம் இருந்தன. மொத்தத்தில் பழைய தலைமை செயலகம் புதிய ஆட்சிக்காக புதுப்பொலிவு பெறத் தொடங்கிவிட்டது.

ஈழத்தமிழர்கள் விவகாரம்: முதல் அமைச்சர் என்ற முறையில் ஓரளவுக்குத்தான் செயல்பட முடியும் : ஜெயலலிதா.


தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இறுதிக் கட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருந்தபோது, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பேட்டி கண்டது.

கேள்வி: உலகத் தமிழர்கள் அனைவரும் இன்றைக்கு உங்களிடம் இருந்து ஒரு துணையை, ஒரு பாதுகாப்பை எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக, ஈழத் தமிழர்கள். அவர்களுக்கு உங்கள் நம்பிக்கை வார்த்தைகள் என்ன?.

பதில்: இலங்கை தமிழர்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆள்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதை பற்றி பல பொதுக் கூட்டங்களில் பேசியிருக்கிறேன். பல அறிக்கைகளையும் வெளியிட்டு இருக்கிறேன். இதற்கு எல்லாம் காரணம் இலங்கை அரசுதான். ஆகவே தமிழர்கள் என்ற முறையில், இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தர வேண்டியது, நம் அனைவருடைய கடமை. இதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதற்கு நம்மால் முயன்றதை அனைவரும் செய்ய வேண்டும்.

மாநில முதல் அமைச்சர் என்ற முறையில் ஓரளவுக்குத்தான் இதில் செயல்பட முடியும். ஏனென்றால் இது சர்வதேச பிரச்சினை. இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினை. நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசு. மத்திய அரசு என்ன செய்யலாம் என்று ஆலோசனை தெரிவித்து ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு இருக்கிறேன். முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நான் மத்திய அரசை வலியுறுத்துவேன்.

இந்திய அரசு 2 வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஒன்று, இனப்படுகொலைக்காக, போர் குற்றங்களுக்காக, இலங்கை அதிபரை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்த இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். அடுத்தபடியாக இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு கவுரவமான வாழ்க்கையை, கண்ணியமான வாழ்க்கையை அளிக்க இலங்கை அரசை வற்புறுத்துவதற்காக. இலங்கை அரசு பணியவில்லை என்றால், இலங்கைக்கு எதிரான பொருளாதார தடைகள் கொண்டுவர இந்தியா மற்ற நாடுகளுடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை செய்தால் நிச்சயமாக இலங்கை அதிபர் பணிந்தாக வேண்டும். இலங்கை அரசு பணிந்தாக வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.