Friday, May 20, 2011

கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்.

கனிமொழி கைது குறித்து  கருணாநிதி விளக்கம்


ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில், சம்மன் அனுப்பப்பட்டதால், கடந்த 6-ந் தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் கனிமொழி ஆஜரானார். அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 20-ந் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கனிமொழியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சைனி உத்தரவிட்டார். இதேபோல் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதியின் உத்தரவுப்படி கனிமொழி கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி கனிமொழி கைது குறித்து நிருபர்களிடம் பேசியது :

கனிமொழி கைது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை கட்சியின் உயர்நிலை செயற்குழு கூடி முடிவெடுக்கும் என்றும் கனிமொழி கைதால் தி.மு.க., காங்கிரஸ் இடையேயான உறவு பாதிக்கப்படாது என்றும் தெரிவித்தார்

மேலும் கனிமொழி கைது குறித்து உங்கள் மனநிலை என்ற கேள்விக்கு உங்களுக்கு ஒரு பெண் இருந்து அவர் கைது செய்யப்பட்டால் நீங்கள் எந்த மனநிலையில் இருப்பீர்களோ அந்த மனநிலையில் தான் நான் இருக்கிறேன் என தெரிவித்தார்.

விண்வெளியில் மிதக்கும் 10 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு.

விண்வெளியில் மிதக்கும் 10 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு

விண்வெளியில் கோடிக்கணக்கான விண்மீன்களும், பல கிரகங்களும் உள்ளன. இருந்தும் வானவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து தினந்தோறும் புது கண்டுபிடிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விண்வெளியில் மிதக்கும் 10 புதிய கோள்கள் இருப்பதை சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இவை வியாழன் கோள் அளவில் உள்ளன.

25 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கோள்களை நியூசிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இக்குழுவில் சர்வதேச விஞ்ஞானிகளும் உள்ளனர்.

கேரளா: புதிய எம்.எல்.ஏ.க்களில் 67 பேர் மீது கிரிமினல் வழக்கு.

கேரளாவில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களில் 67 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மீது மட்டும் 5 வழக்குகள் உள்ளன.

சமீபத்தில் 5 மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தல் குறித்து கேரளாவைச் சேர்ந்த எலக்ஷன் வாட்ச் என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. தமி்ழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 31 சதவீத எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

இதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தான் அதிகம். புதுச்சேரி கிரிமினல் வழக்குகள் உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணி்க்கை குறைவு. ஐந்து மாநிலங்களிலும் 33 சதவீத எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள்.

கேரளாவில் 67 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கூட்டணியில் 40 பேர், மீதமுள்ள 27 எம்.எல்.ஏ.க்கள் இடதுசாரி கூட்டணியைச் சேர்ந்தவர்கள். 12 பேர் மீது கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன. காங்கிரஸ்எம்.எல்.ஏ.க்கள் அன்வர் சாதத், ஹைபி ஈடன் ஆகியோர் மீது அதிகபட்சமாக 15 வழக்குகள் உள்ளன. முஸ்லீம் லிக் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான முனீர் மீது 14 வழக்குகள் உள்ளன.

மார்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜெயராமன் மீது 10-ம், காங்கையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மீது 7 வழக்குகளும் உள்ளன. முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மீது 5 வழக்குகள் உள்ளன.

முதல்வராக பதவியேற்ற உம்மன் சாண்டி மீது ஒரேயொரு வழக்கு மட்டுமே உள்ளது. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களில் 35 பேர் கோடீஸ்வரர்கள். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போர் குற்றவாளி ராஜபக்சேயை கூண்டில் நிறுத்தி தூக்கிலிட வேண்டும் ; வைகோ ஆவேசம்.

இலங்கை போர் குற்றவாளி  ராஜபக்சேயை கூண்டில் நிறுத்தி  தூக்கிலிட வேண்டும்;  வைகோ ஆவேசம்

சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் இலங்கை முள்ளி வாய்க்கால் படுகொலை 2-ம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-

2 ஆண்டுகளுக்கு முன்னர் மே 17-ம் நாள், தமிழ் இனத்தை அழிக்க மாபாதகம் செய்த ராஜபக்சே கூட்டத்தை, சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தித் தண்டிப்பதற்குச் சூளுரைக்கவும், தாய்த் தமிழகம் ஆர்த்து எழவும் இந்த நிகழ்ச்சியை இங்கே நாம் நடத்திக் கொண்டு இருக்கின்றோம்.

தமிழ் இன படுகொலையில் இந்திய மக்கள் குற்றவாளிகள் அல்ல, இந்திய அரசுதான் குற்றவாளி. இந்திய அரசை இயக்குகின்ற காங்கிரஸ் தலைமை, அதன் கைப்பாவையாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்ற பிரதமர் மன்மோகன் சிங், அவரது அமைச்சரவையில் பங்கு ஏற்ற அமைச்சர்கள், அரசியல் கட்சிகள், இவர்கள் எல்லோரும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்றால், இந்திய அரசு கொடுத்த ஆயுதங்கள், ரடார்கள், அள்ளிக்கொடுத்த ஆயிரம் கோடி பணம், அனுப்பி வைத்த முப்படைத் தளபதிகள், அவர்கள் கொடுத்த ஆலோசனைகள், தந்து உதவிய நவீனக் கருவிகள், துல்லியமாக இலக்குகளைக் கண்டறிந்து குண்டு வீசுவதற்குச் செய்து தந்த ஏற்பாடுகள்தான் காரணம்.

இந்தியாவை நேசிக்கிறோம். இந்திய மக்களை நேசிக்கிறோம் என்றார் பிரபாகரன். ஆனால், சோனியாகாந்தி திட்டமிட்டு, ஈழத்தமிழ் இனத்தைக் கரு அறுப்பதற்கு, மன்மோகன் சிங் அரசைப் பயன்படுத்திக் கொண்டார். எலும்புத் துண்டுகளைப் போடுவது போல சில மந்திரி பதவிகளைக் கருணாநிதிக்குத் தூக்கி எறிந்தார்.

அதையே சாசுவதம் என்று நினைத்து, இன்றைக்குத் தீராத பழியைத் தேடிக்கொண்டார் கருணாநிதி. அவருக்காக நான் வேதனைப்படுகிறேன். அது அண்ணா உருவாக்கிய இயக்கம், ரத்தத்தை வியர்வையாகக் கொட்டி நாங்கள் வளர்த்த இயக்கம். எல்லாவற்றையும் பாழாக்கி விட்டீர்களே? பழிதானே மிஞ்சியது? இழிவுச்சொல்தானே மிஞ்சியது? இனத்துரோகி என்ற பட்டம்தானே மிஞ்சியது? இப்போது, கலைஞர் மிகவும் நொந்து போயிருக்கிறார். அவரை மேலும் கஷ்டப்படுத்த நான் விரும்ப வில்லை.

ஆனால், அவர் செய்த துரோகங்களுக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது. குற்றவாளிக் கூண்டில் ராஜபக்சேவை நிறுத்த வேண்டும். ஆனால், ஏழு கோடித் தமிழர்கள் இருக்கின்ற இந்தியாவே சும்மா இருக்கிறதே என்றுதான், மற்ற நாடுகள் இதில் தலையிட முன் வரவில்லை. கேடே நாம்தான். அதைத்தானே நார்வே நாட்டுக்காரர்கள் சொல்லுகிறார்கள்.

இப்படி ஒரு சிக்கலில் நாம் தவித்துக் கொண்டு இருந்தாலும், இதில் இருந்து மீள முடியும். அதற்காகத்தான், முத்துக்குமார் உள்பட நேற்றைய கிருஷ்ணமூர்த்தி வரை 17 பேர் தங்கள் உயிர்களைத் தாரை வார்த்துக் கொடுத்து இருக்கின்றார்கள். இந்த வீர வணக்கத்தைச் செலுத்துகின்றபோது, முள்ளி வாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் நிராதரவராய்த் தவித்தார்களே, பதறினார்களே, பச்சைக்குழந்தைகளைப் பறி கொடுத்தார்களே, அந்தப் பாவத்துக்கு மன்னிப்பு உண்டா? நாதியே இல்லையா தமிழ்ச்சாதிக்கு? இதைத் தமிழர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

ராஜபக்சேயைக் கூண்டில் நிறுத்தித் தூக்கில் இட்டால் தான் தமிழன் சாப்பிட்ட சோறு செரிக்கும். தமிழ் ஈழம் மலர்வதை நாம் காணத்தான் போகிறோம். செய்த தியாகம் வீண் போகாது. சிந்திய ரத்தத்தின் மீது ஆணை. எரியும் தழல் நெருப்பின் மீது ஆணை. மாவீரர்கள் செய்த தியாகத்தின் மீது ஆணை. தமிழ் ஈழத்தை மீட்டெடுக்க, தமிழகத்து இளைஞர் கூட்டம் கிளர்ந்து எழ வேண்டும்.

இவ்வாறு வைகோ பேசினார்.

புதிய சட்டசபை கட்டிடத்தை அரசு கைவிட்டது ஏன்? புதிய தகவல்கள்.

புதிய சட்டசபை கட்டிடத்தை  அரசு கைவிட்டது ஏன்?  புதிய தகவல்கள்

சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை ராணுவத்துக்கு சொந்தமானது. இங்கு நெருக்கடி ஏற்பட்டதால் தி.மு.க. ஆட்சியில் புதிய தலைமை செயலகம்-சட்ட சபை கட்டிடத்தை சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு தோட்டத்தில் கருணாநிதி கட்டினார்.

9 லட்சத்து 31 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டது. அரசு தோட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் விடுதியும் அரசு அலுவலகங்களும் உள்ளன. புதிய தலைமை செயலகம் கட்டுமான பணி ரூ.425.57 கோடியில் கட்ட திட்டமிடப்பட்டது. பின்னர் 704 கோடியாக திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்டது. ஆனால் அதையும் தாண்டி ரூ.1200 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்தவில்லை. புனித ஜார்ஜ் கோட்டையிலேயே முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றார். அங்குள்ள சட்டமன்ற கூட்ட அரங்கும் இரவு-பகலாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்களுக்கும் கோட்டையில் உள்ள அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

புதிய தலைமை செயலகத்தை அவசர அவசரமாக கட்டிய போதே ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார். எந்த பாரம்பரிய அடையாளமும் இல்லாமல், கலைநயமும் இல்லாமல் சர்க்கஸ் கூடாரம் போல் இருப்பதாக குறை கூறினார். புதிய சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் நடந்த போது அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.

புதிய தலைமை செயலகத்தை தற்போது பயன்படுத்தாததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. புதிய தலைமை செயலகம் எதிரில் மிக அருகிலேயே கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில் பாதை செல்கிறது. அந்த மேம்பாலத்தில் இருந்து எளிதில் சட்டமன்றத்தை தாக்க முடியும். எனவே, இது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

ரூ.425 கோடிக்கு திட்டமிட்டு இதுவரை ரூ.1200 கோடி செலவிடப்பட்டு உள்ளது. அவசரமாக கட்டியதால் கட்டிடத்தின் பல பகுதிகளில் தண்ணீர் கசிவு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு முறைகேடுகள் காரணமாகவே செலவு பல மடங்காக உயர்ந்து இருக்கிறது என்று புகார்கள் வந்துள்ளன. வேலையும் இன்னும் முடியவில்லை. அதுபற்றி விசாரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதுவரை புதிய தலைமை செயலகத்தை எந்த அலுவலுக்கும் பயன்படுத்த அரசு விரும்பவில்லை என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய கட்டிடம் கட்டப்பட்டதால் திருவல்லிக்கேணி, வாலாஜா சாலை, அண்ணா சாலை பகுதியில் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவார்கள். இதை தவிர்க்க அரசு விரும்புகிறது. புதிய சட்டசபை கட்டிடத்தை பயன்படுத்துவது குறித்து அமைச்சரவையை கூட்டி முடிவு செய்யப்படும் என்று ஜெயலலிதா கூறி உள்ளார். எனவே வருங்காலத்தில் சென்னை மாநகராட்சி மற்றும் வாடகை கட்டிடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்கள் இங்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

நகைபறிப்பு, கொள்ளை என தலைவிரித்தாடும் தமிழகம்.

தான் ஆட்சிப் பொறுப்பேற்ற 16-05-2011 அன்றையதினமே சங்கிலி பறிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துவிட்டது என்றும் சங்கிலியை பறிக்கும் திருடர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். நாமும் நம்புவோம்!!!

ரோட்டில் நடந்து சென்ற பெண்ணின் வாயை பொத்தி நகை பறிப்பு
ரோட்டில் நடந்து சென்ற     பெண்ணின் வாயை பொத்தி நகை பறிப்பு

தொண்டாமுத்தூர் அருகே உள்ள பூச்சியூரைச் சேர்ந்தவர் நடராஜன். விவசாயி. இவரது மனைவி விஜயலட்சுமி (60). நேற்று இரவு 8 மணியளவில் இவர் தொண்டாமுத்தூர் ரோடு ஓணாம்பாளையம் அய்யப்பன் கோவில் அருகில் நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் விஜயலட்சுமியின் வாயை பொத்தினார்கள்.

பின்னர் அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்தனர். அந்த வழியாக இருட்டுக்குள் சென்று விட்டனர். நகையை பறி கொடுத்த விஜயலட்சுமி திருடன்.. திருடன் என கத்தினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை பார்த்ததும் நகையை பறித்தவர்கள் அப்பகுதியில் உள்ள காட்டுக்குள் தலைமறைவாகி விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்த மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பண்ருட்டியில் பயங்கரம்: அடகு கடை காரரை கொன்று கொள்ளை; ரூ.5 கோடி நகைகளை அள்ளிச் சென்றனர்
பண்ருட்டியில் பயங்கரம்: அடகு கடை காரரை கொன்று கொள்ளை;  ரூ.2 கோடி நகைகளை அள்ளிச் சென்றனர்

பண்ருட்டியை சேர்ந்தவர் சண்முகம் செட்டியார் (வயது 75). இவர் பண்ருட்டி ராஜாஜி ரோட்டில் அடகு கடை வைத்திருந்தார். கடையின் ஒரு பகுதியில் உள்ள வீட்டில் அவர் வசித்து வந்தார். நேற்று இரவு அவர் கடையை மூடி விட்டு கடையின் மாடி அறையில் தூங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவில் சில மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். கடையின் பின்பக்க ஜன்னலை பெயர்த்து உள்ளே நுழைந்தனர். கொள்ளையர்களை பார்த்ததும் சண்முக செட்டியார் திடுக்கிட்டு எழுந்தார்.உடனே கொள்ளையர்கள் அவர் மீது பாய்து கை, கால்களை கட்டிப்போட்டனர். அவர் வாயில் துணியை கட்டி முகத்தை அமுக்கினார்கள்.இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

பின்னர் கொள்ளையர்கள் அந்த வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அங்கிருந்த கோடிகணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.சண்முக செட்டியார் நகைக்கடையில் எப்போதுமே ரூ.5 கோடிக்கு மேல் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருக்கும் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். அவை அனைத்தையும் கொள்ளையர்கள் அள்ளி சென்று விட்டனர்.

இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப் பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அங்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து ரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளையர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓசூர் அருகே துணிகர சம்பவம்: சமையல் அறை வெண்டிலேட்டரை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை;ராணுவ வீரர் வீட்டில் 50 பவுன் நகைகள்- ரூ20 ஆயிரம் பணம் கொள்ளை.

முழுமையாக கட்டி முடிக்கப்படாத புதிய தலைமைச் செயலகத்திலிருந்து எப்படி செயல்படுவது? - ஜெயலலிதா கேள்வி.


திமுக ஆட்சிக்காலத்தில் அவசரம் அவசரமாக கட்டப்பட்ட, இன்னும் கட்டி முடிக்கப்படாத புதிய தலைமைச் செயலக கட்டட்டத்திலிரு்து செயல்பட்டால் அரசு நிர்வாகத்திற்கு பெரும் ஊறு ஏற்படும் என்பதால்தான் புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து செயல்படும் முடிவை தான் எடுத்ததாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

தற்போது ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சட்டசபைக் கட்டிடத்தில் போதுமான வசதிகள் இல்லை. கட்டடப் பணிகள் நிறைவு பெறாமலேயே அவசரம் அவசரமாக துவக்க விழா நடத்தப்பட்டுள்ளது.

19.3.2010ல் புதிய கட்டடத்தில் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்ற போது, சட்டமன்றத் தரையில் புதிய தரைவிரிப்புதான் போடப்பட்டிருந்தது. கேலரி உள்ள முதல் மாடி முடிக்கப்படாமல், பெரிய திரைச்சீலை ஒன்றால் சுவர்கள் மறைக்கப்பட்டு சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது.

மேலும், அப்போதைய அரசில் அனைத்து அமைச்சர்களின் துறைகளும் புதிய கட்டிடத்துக்கு மாற்றப்படாமல், முந்தைய அரசு இரண்டு கட்டிடங்களிலுமாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருந்தது.

தற்போது கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் இன்னமும் முழுமையான வசதிகள் அனைத்தும் செய்து முடிக்கப்படவில்லை. மின் தூக்கிகள் கூட முழுமையாக முடிக்கப்படவில்லை. எனவே அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கட்டிடத்தின் மேல் மாடிக்குச் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படுவதற்கு வணிகர்களும், புதுப்பேட்டை மோட்டார் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்பவர்களும், ரிச்சி தெரு மின்னணு சாதன வியாபாரிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தக் கடைகள் விரைவில் அங்கிருந்து காலி செய்யப்படும் என்ற அச்சத்திலேயே இருந்து வந்துள்ளனர்.

எனவே, பாதுகாப்பு காரணங்கள் மற்றும் இயங்குவதற்கு வசதியாக அனைத்துத் துறைகளையும் ஒரே இடத்தில் வைப்பதற்கு ஏற்ற வகையில் உள்ள பழைய புனித ஜார்ஜ் கோட்டையையே மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளோம். இன்னும் ஒன்றரை வருடத்துக்குள் தேர்தல் வாக்குறுதிகளை கூடுமான வரையில் நிறைவேற்ற வசதியாக, அனைத்து அரசு அலுவலகத் துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட புனித ஜார்ஜ் கோட்டையே வசதி என்பதால், அதையே தேர்ந்தெடுத்துள்ளோம்.

ஆட்சி நிர்வாகம் நடத்த அங்கு சரியான வசதிகள் இல்லாத காரணத்தினாலேயே, ‌ செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு சட்டசபையை மாற்றியுள்ளோம். இதில் எவ்வி‌த அரசியல் உள்‌நோக்கமும் கிடையாது.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நான் எந்த முடிவையும் எடுப்பதில்லை என்பதை நடுநிலையாளர்கள் உணர்வார்கள் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

கனிமொழி கைது: திஹார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி எம்.பியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் வைக்கப்பட்டனர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக கடந்த மாதம் இரண்டாவது குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பு இருப்பதாக அந்த குற்றப்பத்திரிகையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு இணையான பங்கு கனிமொழிக்கும் உள்ளது என்று அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து சி.பி.ஐ.உத்தரவுப்படி கனிமொழி எம்.பி.யும், சரத்குமாரும் கடந்த 6-ந் தேதி டெல்லி சிறப்பு கோர்ட்டில் அஜரானார்கள்.

கனிமொழி சார்பில் ஆஜரான பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி வாதாடுகையில், ஸ்பெக்டரம் முறைகேடுக்கும், கனிமொழிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.

ஆனால் சிபிஐ தரப்பு, கனிமொழிக்கும் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுக்கும் தொடர்பு உண்டு என்று வாதிட்டது.

பிறகு கனிமொழி, சரத்குமார் இருவரும், தங்களை நீதிமன்றக் காவலில் வைக்கக்கூடாது என்று கூறி முன்ஜாமீன் மனு செய்தனர். அந்த மனு மீது 14-ந் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி சைனி கூறி இருந்தார். ஆனால் உத்தரவு நகல்கள் தயாராகாததால் அன்று தீர்ப்பு வழங்காமல் 20-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதனால் கனிமொழி கடந்த 5 நாட்களாக சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராகி வந்தார்.

தீர்ப்பு நாளான இன்று அவர் 9.30 மணிக்கெல்லாம் பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டுக்கு வந்து விட்டார். 10 மணிக்கு அவர் கோர்ட்டில் ஆஜரானார். மேலும் கனிமொழி முன்ஜாமீன் மனு மீது பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று சி.பி.ஐ. கோர்ட் நீதிபதி சைனி அறிவித்தார்.

2.30க்கு நீதிபதி பரபரப்பு தீர்ப்பு கூறினார். கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். கனிமொழி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மதியம் 2.30 மணியளவில் பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் கனிமொழிக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் அங்கிருந்து 3.30 மணியளவில் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பெண் என்பதால் தனி வேனிலும், சரத்குமார் ஒரு வேனிலும் அழைத்துச் செல்லப் பட்டனர். சிறையில் கனிமொழிக்கு பெண்களுக்கான தனி அறை ஒதுக்க அறிவுறுத்தப்பட்டது.

கனிமொழிக்கு வீட்டில் இருந்து மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. கனிமொழி திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் முன்பாக தன் மகன் ஆதித்யா மற்றும் கணவர் அரவிந்தனுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

14 - தேசிய விருதுகள் பெற்ற தமிழ் சினிமா.

டெல்லியில் இன்று 58வது தேசிய விருதுகளுக்கான பெயர்கள் அறிவிக்கப் பட்டன.

சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது, தங்கத் தாமரை விருது ஆடுகளம் படத்தை இயக்கிய வெற்றிமாறனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஆடுகளம் படத்தின் கதாநாயகன் தனுஷ்,

சிறந்த நடிகைக்கான தேசிய விருது தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்த சரண்யா,

சிறந்த துணைநடிகருக்கான தேசிய விருது மைனா படத்தில் நடித்த தம்பி ராமையா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ், தயாரிப்பு வடிவமைப்பு, என 2 தேசிய விருதுகள் எந்திரன் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடன இயக்குநர், சிறந்த படம் என 6 தேசிய விருதுகளை ஆடுகளம் தட்டிச் சென்றது.



சிறந்த பாடலாசிரியர், சிறந்த நடிகை, தமிழில் சிறந்த படம் என மூன்று விருதுகளை தென் மேற்குப் பருவக் காற்று அள்ளியுள்ளது.


இதுவரை 5 முறை சிறந்த பாடலாசிரியருக்கான விருதைப் பெற்றிருந்த வைரமுத்து தற்போது 6வது முறையாக இந்த விருதை தட்டிச் சென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

தற்போது தென் மேற்குப் பருவக் காற்று படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

கனிமொழி : தந்தையின் சாயல்.

, சாத்தூர்.


எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் ஒருமுறை உடல்நலமில்லாமல், இசபெல்லா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தபோது அவருடன் நானும் அவரது நண்பர்கள் சிலரும் இருந்தோம். முதலமைச்சராக இருந்த கருணாநிதி போன் செய்தார். அப்பல்லோ மருத்துவமனையில் ஜே.கே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டும். அவருக்கே உரித்தான பாணியில் ஜே.கே, “இது அன்புக்கட்டளையா, அரசாங்க கட்டளையா?” எனக் கேட்டார். கருணாநிதியின் பதிலுக்குப் பிறகு, “அப்படியானால் வருகிறேன்” என்று ஜே.கே சம்மதித்தார்.

சிறிதுநேரத்தில் கனிமொழி அங்கு வந்தார். ஜே.கேவிடம் உடல்நலம் விசாரித்தார். வெளியே காவல்துறை தலைகள் தெரிந்தன. ஆஸ்பத்திரியில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டதைப் பார்த்தேன். அருகில் நின்றிருந்தாலும் மிக உயரத்தில் கனிமொழி காட்சியளித்தார். முன்பெல்லாம் அவர் எழுத்தாளர் சங்கக் கூட்டங்களில், ஜனநாயக மாதர் சங்கக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு இருக்கிறார். ஆட்டோவில் வந்து ஆட்டோவில் சென்றிருக்கிறார். அப்போதும் அவர் கருணாநிதியின் மகள்தான். ஆனால் அதிகாரத்தின் வளையத்திற்குள் இல்லை. அதுதான் வித்தியாசம்.

ஸ்டாலின், அழகிரி என அரசியல் வாரிசுகள் உருவாகி வலம் வந்த காலத்தில் கனிமொழி ஒதுங்கியே இருந்தார். பெண்ணியம் குறித்த விவாதங்களில், இலக்கியக் கூட்டங்களில் அவரது தலை சிலசமயங்களில் தெரிந்தது. அதுகுறித்த செய்திகள் எப்போதாவது பத்திரிகைகளில் வந்தது. சாத்தூரில் எழுத்தாளர் சங்கம் சார்பில் திட்டமிடப்பட்ட கலை இலக்கிய இரவுக்கு கவிஞர் கனிமொழியை அழைக்க வேண்டும் எனச் சொன்னார்கள். கனிமொழியின் போன் நம்பர் வாங்கி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன். மிக இயல்பாகப் பேசினார். முதலில் வருவதாக ஒப்புக்கொண்டார். அதன்பின் எந்த தேதி அவருக்கு சரியாக இருக்கும் என்றும், அவர் எப்படி வருகிறார் என்றும் மூன்று நான்கு முறை பேசினேன். பிறகு சில முக்கிய சொந்த வேலைகள் இருப்பதாகச் சொல்லி, வர இயலாமைக்கு வருத்தம் தெரிவித்தார். அருகில் இருக்கிற நபரோடு பேசுவதாய்த்தான் அவருடனான உரையாடல்கள் இருந்தன. அப்போது அவர் கவிஞர் மட்டுமே.

சில வருடங்களில் கனிமொழி என்னும் பெயர் ஊடகங்களில் அடிக்கடி தென்பட ஆரம்பித்தது. சென்னை சங்கமம் தொட்டு அது நிகழ்ந்தது. உடனடியாக எம்.பியானார். அவரும் ஒரு அரசியல் வாரிசானார். தறிகெட்டு வேகமாக பறக்க ஆரம்பித்தார். கவிதைகள், இலக்கியக் கூட்டங்களில் இருந்து வேறு இடத்திற்கு பெயர்ந்து போனார். திரும்பிப் பார்க்க முடியாத தூரம் அது. ராடியாவுடனான தொலைபேசி உரையாடல்களுக்கும் அவரது கவிதைகளுக்கும் எந்த சம்பந்தம் இருக்க முடியும்? இப்போது விழுந்து கிடக்கிறார். அரசியல் அதிகாரத்தின் போதை எப்பேர்ப்பட்டது என்பதை அவரது வீழ்ச்சி சொல்லிக்கொண்டு இருக்கிறது.

முதன்முதலாக சுபமங்களாவில்தான் அவரது கவிதையொன்றை படித்தேன். அதைப் பற்றி அப்போது நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது, எழுதியவர் தி.மு.க தலைவரின் மகள் கனிமொழியென்றார்கள். ஆச்சரியமாய் இருந்தது. பின்னாளில் எழுத்தாளர் சா.கந்தசாமியும் அதே ஆச்சரியத்துடன், ‘கருவறை வாசனை’ புத்தகத்தைப் படித்துவிட்டு, ‘தந்தையின் சாயலற்ற எழுத்து’ எனச் சொன்னதையும் கேட்டு இருக்கிறேன். கனிமொழி என்னும் கவிஞர் அப்படித்தான் தெரிந்தார். உண்மையின் அருகில் நின்று பேசுவதாகவும், நவீன இலக்கியக் கூறுகள் கொண்டதாகவும் அவரது கவிதைகள் பொதுவாக இருந்தன. ஆனால் அவரது அரசியல் அப்படியில்லை. அச்சு அசலாய் தந்தையின் சாயல். அரசியலில் அதிகார உன்மத்தம் கொண்டவர்கள் எல்லோருக்கும் ஒரே சாயல்தான்.

கைது செய்யப்படுவோம் என எதிர்பார்த்ததாகச் சொன்னாலும், கணவரைப் பிடித்தபடி கண்ணீர் விட்டிருக்கிறார். சிறையில் வாசிப்பதற்கு கண்ணாடியும், புத்தகங்களும் கேட்டு இருக்கிறார். முதலில் அவரது இந்தக் கவிதையை அவரேப் படிக்கட்டும்....

அப்பா சொன்னாரென
பள்ளிக்குச் சென்றேன்
தலைசிவினேன்,
சில நண்பர்களைத் தவிர்த்தேன்
சட்டைபோட்டுக் கொண்டேன்,
பல்துலக்கினேன், வழிபட்டேன்,
கல்யாணம் கட்டிக்கொண்டேன்
காத்திருக்கிறேன்
என் முறை வருமென்று...


www.mathavaraj.com

ஏற்காட்டில் சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள்.

ஏற்காட்டில் சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள்

ஏழைகளின் ஊட்டி என செல்லமாக அழைக்கப்படும் ஏற்காட்டில் தற்போது எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கழிவுகளாக காணப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட கலெக்டர் சந்திரக்குமார் அவ்வப்போது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியதால் பிளாஸ்டிக் பொருட்கள், கழிவுகள் கொட்டுவது குறைந்தது.

ஆனால் தற்போது கோடைக்காலத்தால் திரளான சுற்றுலா பயணிகள் ஏற்காடு வந்து செல்கிறார்கள். இவர்கள் பிளாஸ்டிக் பைகள் மற்றும் கழிவுகளை அப்படியே ரோட்டிலும், மலைப்பகுதியிலும், மலைப்பாதையிலும் வீசி செல்கிறார்கள். இதனால் ஏற்காட்டின் அழகு கெடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி சேலம் வந்து இருந்த நடிகர் விவேக் கூறும்போது, இயற்கை அழகை ரசிக்கலாம் என பலரும் ஏற்காட்டிற்கு வருகிறார்கள். மலைகளையும், இயற்கை காட்சிகளையும் பார்த்து ரசிக்கலாம் என நினைத்து ஏற்காடு வருபவர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருக்கும்.

காரணம் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பொருட்களாக கிடக்கிறது. இவைகளை போட குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். இன்னும் சில நாட்களில் கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி தொடங்க இருக்கிறது.

இதனால் ஏற்காடு முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கலெக்டரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

ஏற்காடு கோடை விழா 27-ம்தேதி தொடங்குகிறது.


சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு தேர்தல் காரணத்தால் கோடைவிழா நடக்குமா? நடக்காதா? என பொதுமக்கள் பரபரப்பாக பேசிக்கொண்டனர். இப்போது தேர்தல் நடந்த முடிந்து விட்டது. இதனால் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி வருகிற 27-ம் தேதி தொடங்குகிறது.

பின்னர் விழா 29-ம்தேதி வரை நடக்கும். இந்த விழா குறித்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் சந்திரக்குமார் தலைமை வகித்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

ஏற்காட்டில் ரூ.11கோடி செலவில் பொட்டானிக்கல் கார்டன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு மலர்கண்காட்சியில் ஒரு லட்சம் மலர்களை கொண்டு விதவிதமான அலங்கார வடிவங்கள் வடிவமைக்கப்பட உள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பொழுது போக்கு அம்சங்கள் இந்தாண்டும் இருக்கும். ஏற்காடு ஏரி தூர்வாரும் பணி 50 சதவீதம் முடிந்து விட்டது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்காட்டில் அனைத்து பகுதிகளையும் சுற்றிப்பார்க்க ஏற்காடு டூ ஏற்காடு என்ற பெயரில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு போட்டிகளும் , கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோடை விழா மற்றும் மலர்கண்காட்சியை தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைக்க உள்ளார். இதுதவிர சுற்றுலாத்துறை அமைச்சர் உள்பட பலரும் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட உள்ளதாக கலெக்டர் சந்திரக்குமார் தெரிவித்தார்.

நம்ப வைத்து மோசடி செய்துவிட்டார் ரங்கசாமி - ஜெயலலிதா கடும் தாக்கு.


புதுச்சேரி அரசில் அதிமுகவுக்கு இடமளிக்காததற்கு முதல்வரும், என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவருமான ரங்கசாமிக்கு அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து என்.ஆர்.காங்கிரஸ் 20 இடங்களிலும், அதிமுக 10 போட்டியிட்டன. இதில் என்.ஆர். காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

ஆட்சியமைக்க 16 இடங்கள் தேவை என்ற நிலையில் ரங்கசாமிக்கு காரைக்காலில் சுயேட்சையாக வென்ற வி.எம்.சிவக்குமார் ஆதரவு அளித்தார். இதையடுத்து தனித்து ஆட்சி அமைத்தார் ரங்கசாமி.

இதற்கு ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனித்து ஆட்சியமைத்து கூட்டணிக்கு ரங்கசாமி துரோகம் இழைத்துவிட்டதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனித்தே ஆட்சி” என்று தன்னிச்சையாக புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வர் என்.ரங்கசாமி அறிவித்திருப்பதைப் பார்க்கும்போது, “சொல்வது ஒன்று, செய்வது ஒன்று” என்ற பழமொழி தான் எனக்கு நினைவிற்கு வருகிறது.

தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சி தனக்கு துரோகம் செய்துவிட்டது என்று கூறிய ரங்கசாமி, தேர்தலுக்குப் பிறகு அதே துரோகத்தை அதிமுகவுக்கு இழைத்திருக்கிறார்.

நடந்து முடிந்த புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்திந்திய அதிமுகவுடன் இணைந்து ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. தேர்தல் சமயத்தில், தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரசாரம் செய்த நான், புதுச்சேரிக்கு சென்று என்.ரங்கசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய ஆதரவு அளிக்குமாறு புதுச்சேரி வாக்காளப் பெருமக்களைக் கேட்டுக் கொண்டேன்.

இது மட்டுமல்லாமல், தேர்தலுக்கு முன்பு அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதிமுக மீதும், என் மீதும் நம்பிக்கை வைத்தும், கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை மனதில் வைத்தும் தான் புதுச்சேரி மக்கள் அதிமுக- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தனர். அதிமுக- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது.

கழகக் கூட்டணி வெற்றி பெற்றதும், புதுச்சேரி யூனியன் பிரதேச வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, புதுச்சேரி முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் என்.ஆர்.ரங்கசாமி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் நான் தெரிவித்திருந்தேன். ஆனால், ரங்கசாமி அவர்களுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற எனக்கு வாழ்த்து தெரிவிக்கக்கூட மனமில்லை.

நன்றி மறந்து நாணயமற்ற முறையில் நடந்து கொண்டிருக்கிறார் ரங்கசாமி. எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை என்ற வள்ளுவரின் வாய்மொழியை இந்தத் தருணத்தில் நான் அவருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதிமுக ஆதரவுடனும், செல்வாக்குடனும் வெற்றி பெற்றுவிட்டு ஆட்சி அமைக்க துணைநிலை ஆளுநரிடம் உரிமை கோரச் செல்லும்போது ஒரு வார்த்தை கூட எனக்குத் தெரிவிக்காமல், கழக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேட்சை உறுப்பினரின் ஆதரவுடன் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைத்திருப்பது கூட்டணி தர்மத்திற்கு விரோதமான செயல் ஆகும்.

நம்ப வைத்து மோசடி செய்துவிட்டார் ரங்கசாமி. முதுகில் குத்துவதில் எல்லோரையும் மிஞ்சிவிட்டார் ரங்கசாமி. கூட்டணிக் கட்சியுடனேயே நாணயமற்ற முறையில் நடந்து கொண்டுள்ள ரங்கசாமி மக்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறார்?. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் ஏமாற்று நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆளும் கட்சியில் வளரும் சர்வாதிகாரத்தை கண்டிப்பது, ஆளும் கட்சியினால் ஏற்படும் அவதியை எடுத்துக் காட்டுவது, ஆளும் கட்சியின் சட்ட திட்டங்களும், நிர்வாக முறைகளும் நாட்டை எவ்விதத்தில் கெடுக்கிறது என்பதை எடுத்துரைப்பது, உரிமையும், உடமையும் பறிபோகும் போக்கில் ஆளும் கட்சி நடந்து கொள்ளும் போது அதனைக் கண்டிப்பது, எதிர்த்து கிளர்ச்சி நடத்துவது போன்றவை தான் எதிர்க்கட்சிக்கு இருக்க வேண்டிய லட்சணங்கள் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியதற்கிணங்க, ஓர் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக அதிமுக புதுச்சேரியில் செயல்படும் என்பதையும், புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் அதிமுக தொடர்ந்து பாடுபடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

இது குறித்து என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் கூறுகையில், அதிமுகவை கூட்டணியில் சேர்த்துக் கொண்டோமே தவிர, வேறு எந்த வகையிலும் அந்தக் கட்சிக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கவில்லை. வென்றால் ஆட்சியில் பங்கு தருவோம் என்றும் கூறவில்லை என்றனர்.

மத்திய உற்பத்தி மற்றும் சேவை வரிகள்: ரூ.5,700 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு.

மத்திய உற்பத்தி மற்றும் சேவை வரிகள்: ரூ.5,700 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு


மத்திய அரசுக்கு, மத்திய உற்பத்தி மற்றும் சேவை வரிகள் மூலம் பெருமளவு வருமானம் கிடைத்து வருகிறது. இதில் பல கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்து இருப்பது தெரிய வந்து இருக்கிறது.

இது குறித்து உற்பத்தி வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது

இந்தியா முழுவதும் மத்திய உற்பத்தி வரி, சேவை வரிகளில் பலர் வரி ஏய்ப்பு செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டு இது பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டு 1,190 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதன்படி உற்பத்தி வரி ஏய்ப்பாக ரூ.1,356 கோடியும், சேவை வரி ஏய்ப்பில் ரூ.4,353 கோடியும் ஆக மொத்தம் ரூ.5,700 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்து இருக்கிறது என்று கணக்கிட்டு இருக்கிறோம்.

இந்த வரி ஏய்ப்பு செய்வோருக்கு கடும் தண்டனைகள் அளிக்கக்கூடிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசை கேட்டு இருக்கிறோம் என்று அவர் கூறினார்.