Friday, May 20, 2011

புதிய சட்டசபை கட்டிடத்தை அரசு கைவிட்டது ஏன்? புதிய தகவல்கள்.

புதிய சட்டசபை கட்டிடத்தை  அரசு கைவிட்டது ஏன்?  புதிய தகவல்கள்

சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை ராணுவத்துக்கு சொந்தமானது. இங்கு நெருக்கடி ஏற்பட்டதால் தி.மு.க. ஆட்சியில் புதிய தலைமை செயலகம்-சட்ட சபை கட்டிடத்தை சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு தோட்டத்தில் கருணாநிதி கட்டினார்.

9 லட்சத்து 31 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டது. அரசு தோட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் விடுதியும் அரசு அலுவலகங்களும் உள்ளன. புதிய தலைமை செயலகம் கட்டுமான பணி ரூ.425.57 கோடியில் கட்ட திட்டமிடப்பட்டது. பின்னர் 704 கோடியாக திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்டது. ஆனால் அதையும் தாண்டி ரூ.1200 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்தவில்லை. புனித ஜார்ஜ் கோட்டையிலேயே முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றார். அங்குள்ள சட்டமன்ற கூட்ட அரங்கும் இரவு-பகலாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்களுக்கும் கோட்டையில் உள்ள அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

புதிய தலைமை செயலகத்தை அவசர அவசரமாக கட்டிய போதே ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார். எந்த பாரம்பரிய அடையாளமும் இல்லாமல், கலைநயமும் இல்லாமல் சர்க்கஸ் கூடாரம் போல் இருப்பதாக குறை கூறினார். புதிய சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் நடந்த போது அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.

புதிய தலைமை செயலகத்தை தற்போது பயன்படுத்தாததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. புதிய தலைமை செயலகம் எதிரில் மிக அருகிலேயே கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில் பாதை செல்கிறது. அந்த மேம்பாலத்தில் இருந்து எளிதில் சட்டமன்றத்தை தாக்க முடியும். எனவே, இது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

ரூ.425 கோடிக்கு திட்டமிட்டு இதுவரை ரூ.1200 கோடி செலவிடப்பட்டு உள்ளது. அவசரமாக கட்டியதால் கட்டிடத்தின் பல பகுதிகளில் தண்ணீர் கசிவு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு முறைகேடுகள் காரணமாகவே செலவு பல மடங்காக உயர்ந்து இருக்கிறது என்று புகார்கள் வந்துள்ளன. வேலையும் இன்னும் முடியவில்லை. அதுபற்றி விசாரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதுவரை புதிய தலைமை செயலகத்தை எந்த அலுவலுக்கும் பயன்படுத்த அரசு விரும்பவில்லை என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய கட்டிடம் கட்டப்பட்டதால் திருவல்லிக்கேணி, வாலாஜா சாலை, அண்ணா சாலை பகுதியில் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவார்கள். இதை தவிர்க்க அரசு விரும்புகிறது. புதிய சட்டசபை கட்டிடத்தை பயன்படுத்துவது குறித்து அமைச்சரவையை கூட்டி முடிவு செய்யப்படும் என்று ஜெயலலிதா கூறி உள்ளார். எனவே வருங்காலத்தில் சென்னை மாநகராட்சி மற்றும் வாடகை கட்டிடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்கள் இங்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

No comments: