Friday, May 20, 2011

கனிமொழி கைது: திஹார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி எம்.பியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் வைக்கப்பட்டனர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக கடந்த மாதம் இரண்டாவது குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பு இருப்பதாக அந்த குற்றப்பத்திரிகையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு இணையான பங்கு கனிமொழிக்கும் உள்ளது என்று அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து சி.பி.ஐ.உத்தரவுப்படி கனிமொழி எம்.பி.யும், சரத்குமாரும் கடந்த 6-ந் தேதி டெல்லி சிறப்பு கோர்ட்டில் அஜரானார்கள்.

கனிமொழி சார்பில் ஆஜரான பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி வாதாடுகையில், ஸ்பெக்டரம் முறைகேடுக்கும், கனிமொழிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.

ஆனால் சிபிஐ தரப்பு, கனிமொழிக்கும் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுக்கும் தொடர்பு உண்டு என்று வாதிட்டது.

பிறகு கனிமொழி, சரத்குமார் இருவரும், தங்களை நீதிமன்றக் காவலில் வைக்கக்கூடாது என்று கூறி முன்ஜாமீன் மனு செய்தனர். அந்த மனு மீது 14-ந் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி சைனி கூறி இருந்தார். ஆனால் உத்தரவு நகல்கள் தயாராகாததால் அன்று தீர்ப்பு வழங்காமல் 20-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதனால் கனிமொழி கடந்த 5 நாட்களாக சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராகி வந்தார்.

தீர்ப்பு நாளான இன்று அவர் 9.30 மணிக்கெல்லாம் பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டுக்கு வந்து விட்டார். 10 மணிக்கு அவர் கோர்ட்டில் ஆஜரானார். மேலும் கனிமொழி முன்ஜாமீன் மனு மீது பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று சி.பி.ஐ. கோர்ட் நீதிபதி சைனி அறிவித்தார்.

2.30க்கு நீதிபதி பரபரப்பு தீர்ப்பு கூறினார். கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். கனிமொழி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மதியம் 2.30 மணியளவில் பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் கனிமொழிக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் அங்கிருந்து 3.30 மணியளவில் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பெண் என்பதால் தனி வேனிலும், சரத்குமார் ஒரு வேனிலும் அழைத்துச் செல்லப் பட்டனர். சிறையில் கனிமொழிக்கு பெண்களுக்கான தனி அறை ஒதுக்க அறிவுறுத்தப்பட்டது.

கனிமொழிக்கு வீட்டில் இருந்து மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. கனிமொழி திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் முன்பாக தன் மகன் ஆதித்யா மற்றும் கணவர் அரவிந்தனுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

No comments: