Wednesday, November 30, 2011

ஹம்சாசனம், மயூராசனம், உஸட்டாசனம்.

ஹம்சாசனம்.
ஹம்சாசனம்

செய்முறை:

விரிப்பில் வடக்கு நோக்கி வஜ்ராசனத்தில் அமருங்கள். முழங்காலை சற்று அகலமாக பக்கவாட்டில் விரித்து, இரு கைகளையும் தரையில் ஊன்றவும். இரு கால்களையும் மெதுவாக பின்புறம் நீட்டுங்கள். இருகால்களின் பெருவிரல்களும் தரையில் படுமாறு இருக்கட்டும். இரு முழங்கைகளின் மேல் உடல்பாரத்தை நிலை நிறுத்தவும். அடுத்தபடியாக, உடலை 25 டிகிரி என்கிற அளவில், காலில் இருந்து தலை வரை நிறுத்தி, நிமிர்ந்து பார்க்க எத்தனியுங்கள்.

பயன்கள்:

ஆன்மிக குணம் மேலோங்கும். வாயுத்தொல்லை, தொந்தி, குடலிறக்கம், சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல் வராது. மாதவிடாய் பிரச்சினைகள் தீரும்.


மயூராசனம்.
மயூராசனம்

செய்முறை:

குத்தவைத்து உட்காரவும். இரண்டு கைகளையும் இரண்டங்குல இடைவெளிவிட்டு, தரையில் பதிக்கவும். இரு முழங்கைகளின் மேலும், முதுகை சற்று மேல்நோக்கி தூக்குங்கள். தொப்புளின் அடிப்பகுதி, முழங்கை மேல் இருக்கட்டும். கால்களை மெதுவாக நீட்டி, தலையை நிமிர்த்தியநிலையில், 15 விநாடிகள் ஆசனத்தில் இருங்கள். அதற்கு பிறகு, மீண்டும் பழைய நிலைக்கு வரவும்.

பயன்கள்:

முகம் அழகு பெறும். நரை, திரை பாதிப்புகள் நெருங்காது. இளமை நீடிக்கும். புத்திர பேறுக்கான ஆசனமிது. ஜனன உறுப்புகனின் இயக்கம் சீராக இருக்கும். விந்து கெட்டிப்படும். விரை வீக்கம் குணமாகும். பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சி, துரிதமாக அமையும். கர்ப்பப்பை-மாதவிடாய் கோளாறுகள் அகலும்.

குறிப்பு:

மயூராசனம் செய்வோருக்கு போகஇச்சை கட்டுப்படும். கட்டுக்கடங்காத காம-குரோத எண்ணம் மாறி, சாந்த சொரூபியாக-ஒழுக்கம் மிகுந்தவர்களாக திகழுவர். பயம் வேண்டாம். இச்சை கட்டுப்படுமே தவிர, அற்றுப்போகாது. ராட்சச எண்ணங்கள் மாறி சாத்வீக எண்ணம் மேலோங்கும்.


உஸட்டாசனம்.
உஸட்டாசனம்

செய்முறை:

விரிப்பில் வஜ்ராசனத்தில் அமரவும். இடுப்பை மெதுவாக தூக்கி நிமிர்ந்து, அல்லது முழங்காலில் நின்றபடியே சற்று பின்னால் வளையுங்கள். வலதுகையால் வலதுகுதிகாலையும், இடதுகையால் இடதுகுதிகாலையும் பிடிக்கவும். தலையை சற்று தளர்வாக பின்னால் தொங்கவிடுங்கள். ஒட்டுமொத்தமாக பார்க்கும்மேபாது- முதுகின் மேற்புற பகுதி மற்றும் பிருஷ்டபாகம், கால் பகுதி ஆகியவை, நீள்சதுரவடிவில் அமைய வேண்டும்.

பயன்கள்:

இடுப்பு மெலியும். வாய்வு தொல்லை, அல்சர் வராது. மலச்சிக்கல் நீங்கும். இதய நோய்கள் வராது.

Saturday, November 19, 2011

இந்தப் புவியே ஜெயலலிதா புகழ் பாடட்டும் ! கலைஞர் கருணாநிதி கடிதம் !



திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடிக்கின்ற செயல்

தமிழ்நாட்டு மக்களின் ஏமாளித்தனத்தின் காரணமாக எப்படியோ ஆட்சிக்கு வந்துவிட்ட ஜெயலலிதா, வந்ததும் வராததுமாக வரவு செலவு திட்டத்தை அவையிலே வைப்பதற்கு முன்பாகவே தமிழக மக்கள் தலையில் சுமார் 4000 கோடி ரூபாய் அளவிற்கு வரியை சுமத்திவிட்டு, அத்துடன் இல்லாமல் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் செய்யப்பட்ட நல்ல காரியங்களையெல்லாம் தொடர்ந்து கெடுத்து வரும் முயற்சியை மேலும் தொடர்ந்து, ''ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடிக்கின்ற'' செயலாக இப்போது எல்லா மட்டத்திலும் வரி உயர்வு - கட்டண உயர்வு, பால் விலை உயர்வு - என்று பல உயர்வுகளை அறிவித்திருக்கிறார்.

ஜெயலலிதாவுக்கு நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்த தெரியவில்லை

''உயரப் போகிறோம்'' என்றுதானே அவருக்கும், அவர் அணியின் வேட்பாளர்களுக்கும் அபரிதமான வாக்குகளை அளித்து அரியாசனத்தில் அமர்த்தியிருக்கிறார்கள். அய்யோ பாவம். நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்த தெரியாமல், ஜெயலலிதா படும் பாட்டையும், அவர் மக்களை படுத்தி வைக்கும் பாட்டையும் ஏழை, நடுத்தர மக்கள் இதயம் வெடித்து சாகிற அளவுக்கு வரி உயர்வு, கட்டண உயர்வு, விலை உயர்வு என்று இப்படி உயர்வு, உயர்வு எனக்கூறி தமிழக ஏழைபாழைகளை குழியில் தள்ளி வேடிக்கைப் பார்க்கும் விளையாட்டை அல்லவா இப்போது அவர் நடத்தி வருகிறார்.

மக்களை பழிவாங்கும் காரியத்தை நடத்திக்கொண்டே, அந்தப் பழியைக் கடந்த கால அரசின் மீதும், மத்திய ஆட்சியின் மீதும் போடுவதற்கு அவர் பகீரதப் பிரயத்தனம் செய்திருக்கிறார்.

மக்கள் தலையில் இந்தச் சுமைகளையெல்லாம் ஏற்றி வைத்துள்ள ஜெயலலிதா, தன்னைக் காப்பாற்றிக் கொள்கின்ற வரையில் இதற்கெல்லாம் காரணம் கடந்த கால திமுக ஆட்சிதான், அந்த ஆட்சியில் கடன் பளு அதிகமாகிவிட்டது, அவற்றைக் குறைக்கத் தான், என்று பழியை நம்மீது போட்டியிருக்கிறார்.

பொதுத்துறை நிறுவனங்களுக்கு கடன் சுமை இருப்பது உண்மைதான் என்ற போதிலும், அந்தச் சுமையை ஏழையெளிய பொதுமக்கள் தலையிலே சுமத்தக் கூடாது என்பதற்காகத் தான் இந்தக் கட்டணங்களையெல்லாம் கழக ஆட்சியிலே அதிகப்படுத்தவில்லை.

ஆட்சி என்பது மக்களுக்கு நன்மை செய்வதற்காக, கொடுமைப்படுத்த அல்ல

ஆட்சி என்பது மக்களுக்கு நன்மை செய்வதற்காக இருப்பதே தவிர, அவர்களைப் கொடுமைப்படுத்தி, கட்டணங்களை உயர்த்தி அதிலே இன்பம் காண்பதற்காக அல்ல. கழக ஆட்சிக் காலத்தில் அதிகாரிகள் நிறுவனங்களுக்குள்ள கடன் சுமைகளைக் குறைக்க இந்த கட்டணங்களையெல்லாம் அதிகப்படுத்த வேண்டுமென்று என்னிடமும் கூறுவார்கள். ஆனால் பொதுமக்கள்தானே, அதை ஏற்க வேண்டும்? அவர்கள் எங்கே போவார்கள்? அரசு கடன் பெற்றாவது மக்களுக்கு கெடுதல் வராமல் பாதுகாப்போம் என்றுதான் கூறியிருக்கிறேன்.

யார் பாதிக்கப்பட்டால் எனக்கென்ன, மக்கள்தானே இந்த உயர்வுகளையெல்லாம் சந்திக்கப்போகிறார்கள், ஏற்றுங்கள் கட்டணங்களை, அதிலும் ஒரே நேரத்தில் மின் கட்டணம், பேருந்து கட்டணம், பால் கட்டணம் என்று அறிவிக்கலாம் என்று சொல்கின்ற மனப்பான்மை எனக்கில்லை. ஏனென்றால் என் இதயத்தில் இரக்கம் இருக்கிறது.

மூத்த அமைச்சர்களாவது முதல்வருக்கு யோசனை கூற வேண்டாமா?

ஒரு அரசு சிந்திக்க வேண்டாமா? ஒரே நேரத்தில் இந்த மூன்று கட்டணங்களையும் உயர்த்தினால் சாதாரண ஏழை, நடுத்தர மக்கள், மாதச் சம்பளத்தில் திட்டமிட்டு குடும்பம் நடத்துவோர் ஒவ்வொரு மாதமும் தங்கள் செலவு 500 ரூபாய் அதிகமானால் எப்படி அவர்களால் சமாளிக்க முடியும் என்றெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டாமா? மற்ற மூத்த அமைச்சர்களாவது இதுபற்றி முதல்வருக்கு யோசனை கூற வேண்டாமா? அமைச்சரவைக் கூட்டம் அதற்காகத்தானே நடந்தது. கொலு பொம்மைகளைப் போல வீற்றிருந்து, பாராட்டுக்களை, புகழுரைகளை வழங்குவதிலேயே கவனத்தைச் செலுத்துவது மட்டும் நல்லதா?

குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்கு பதில், பாலில்லாத கறுப்பு டீ கொடுக்க வேண்டிய நிலை

இந்த உயர்வுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பொதுமக்களில் திருவள்ளூரைச் சேர்ந்த குடும்பத் தலைவி ஒருவர், விலை உயர்வு காரணமாக, இனி குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்கு பதில், பாலில்லாத கறுப்பு டீ கொடுக்க வேண்டிய நிலை, மீண்டும் கற்காலத்திற்குத் திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறியிருக்கிறார்.

ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த மற்றொரு குடும்பத் தலைவி, விலை ஏற்றத்தால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர், பட்ஜெட்போட்டு குடும்பம் நடத்துபவர்கள் மிகவும் சிரமப்படுவர் என்று கூறியிருக்கிறார்.

''ஆக்சிஜன்'' குழாயைக் கழற்றி விட்டிருக்கிறார்

ஜெயலலிதா தனது அறிக்கையில் இறுதியாக வெள்ளம் வரும் முன்பே அணை போட வேண்டும், மரணப் படுக்கையில் உள்ள இந்தப் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தற்போது ஆக்சிஜன் வழங்கவில்லை என்றால், அவை செயலற்றுவிடும் என்பதற்காகத்தான் இந்த முடிவினை மேற்கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.

உண்மையில் அவர் ''ஆக்சிஜன்'' தருக்கிற முயற்சியில் ஈடுபடவில்லை. பொதுமக்கள் தலையிலே இந்தச் சுமைகளையெல்லாம் சுமத்தி, இதுவரை அவர்களுக்குச் செலுத்தப்பட்டு வந்த ''ஆக்சிஜன்'' குழாயைக் கழற்றி விட்டிருக்கிறார் என்பது தான் உண்மையாகும்.

இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஒரே நேரத்தில் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு ஆகிய மூன்று சுமைகளை தமிழக ஏழை, நடுத்தர மக்களின் தலையில் ஏற்றி அவர்கள் தலைகளை நொறுக்கிட வைத்த பெருமைக்குரியவர் ஜெயா என்று இந்தப் புவியே அவர் புகழ் பாடட்டும்.

இவ்வாறு கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார்.

Friday, November 18, 2011

வாமதேவ ஆசனம், ஸ்வஸ்திகா ஆசனம், ஏகபாத ஊர்த்துவ பாதாசனம்.

வாமதேவ ஆசனம்.
வாமதேவ ஆசனம்

செய்முறை:

வஜ்ராசனநிலையில் அமரவும். இடுப்பை இடப்பக்கமாக கீழே சரிந்து உட்கார்ந்து, மேலிருக்கும் வலதுகாலை, அப்படியே பின்னால் கொண்டு போங்கள். அதாவது, பிருஷ்டபாகம் முழுவதுமாக பின்னால் போகவேண்டும். இடது முழங்காலை தொடையோடு ஒட்டியிருக்குமாறு மடியுங்கள். அடுத்தபடியாக இரண்டு கால் விரல்களையும், கரங்களின் உதவியோடு ஒன்றிணையுங்கள் அடுத்த படியாக, இதுபோல் பக்கம் மாற்றி செய்யவும்.

பயன்கள்:

மூட்டு பிடிப்பு, கால்பாத வலி, குதிகால் வலி மற்றும் முழங்கால் மூட்டு வீக்கம் மறையும். திருமணமான பெண்களுக்கு இடை, தொடையில் அதிக சதை போட்டு பிருஷ்டங்கள் பெரிதாகும். தினந்தோறும் வாமதேவ ஆசனம் செய்துவந்தால், `மெலிய வேண்டிய' அத்தனை உறுப்புகளும் மெலிந்து உடம்பு சிக் அழகோடு திகழும். பருவ பெண்களுக்கு யானையின் துதிக்கை போல, வாளிப்பான கால்கள் அமையும்.


ஸ்வஸ்திகா ஆசனம்.
ஸ்வஸ்திகா ஆசனம்

செய்முறை:

இரண்டு கால்களையும் முன்னோக்கி நீட்டி உட்காரவும். வலதுகாலை மடக்கி, இடது முழங்கால் பின்புறசந்தில் வையுங்கள். வலது முழங்கால் பின்புற சந்தில், இடது கால் மடங்கிய நிலையில் இருக்கட்டும். இரண்டு கைகளையும் முழங்காலின் மேல், மாற்றி வைத்து நிமிர்ந்து உட்காரவேண்டும்.

பயன்கள்:

முழங்கால்-மூட்டுவலி நீங்கும். இடுப்பு எடை, அடித்தொடை சதை குறையும். இது தியான ஆசனங்களில், குறிப்பிடத்தக்க ஒன்று!


ஏகபாத ஊர்த்துவ பாதாசனம்.
ஏகபாத ஊர்த்துவ பாதாசனம்

செய்முறை:

முழங்காலை மடக்கி மண்டியிட்டு உட்காரவும். வலதுகாலை மட்டும் செங்குத்தாக முன்னோக்கி நீட்டவும். அப்போது உங்களின் இரு கைகளும், வலது உள்ளங்காலை மேவியநிலையில், கும்பிட்டபடி இருக்கட்டும். இந்த நிலையில் மூச்சு இயல்பாக இருக்க வேண்டும். ஆசனத்தை கலைத்து இயல்பு நிலைக்கு வாருங்கள். அடுத்த படியாக, இடதுகாலை மாற்றி போட்டு, முன்புபோல ஆசனத்தை செய்யவும்.

பயன்கள்:

கால் சம்பந்தமான நோய்கள் வராது. இடுப்பு, தொடை எடை குறையும். குதிகால் வெடிப்பு, பாதவலி இருந்தால் பறந்துபோகும். யானைக்கால் வியாதியை தடுக்கும், மிகச்சிறந்த ஆசனமிது!

Thursday, November 17, 2011

எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் செய்த மதிப்பெண் முறை மாற்றம் சட்ட விரோதமானது. உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு.


தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பு பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் புதிய தேர்வு மதிப்பீடு முறையை கொண்டு வந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட எம்.பி.பி.எஸ். மாணவர்கள், இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

எம்.பி.பி.எஸ். நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஜெனரல் சர்ஜரி என்ற ஒரு தேர்வு உள்ளது. அதில் 50 சதவீத மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் இதில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

அதன்படி, ஜெனரல் சர்ஜரி தேர்வு என்பது கிளினிக்கல் சர்ஜரி (செய்முறை), ஆர்த்தோ கிளினிக்கல் (செய்முறை) என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

இதன்படி கிளினிக்கல் சர்ஜரி (செய்முறை) தேர்வில் 100-க்கு குறைந்தபட்சம் 50 மதிப்பெண்களும், ஆர்த்தோ கிளினிக்கல் (செய்முறை) தேர்வில் 50-க்கு குறைந்தபட்சம் 25 மதிப்பெண்களும் பெற்றால் மட்டுமே தேர்ச்சி அளிக்கப்படும் என்று மதிப்பெண் முறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். நான்காம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களில் தேர்ச்சி பெறாத சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். ஜெனரல் சர்ஜரி தேர்வில் ஒட்டுமொத்தமாக 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்பதே இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதியாகும். அதன்படி நாங்கள் தேர்ச்சி பெற தகுதி பெற்றிருக்கிறோம்.

இந்த விதிமுறைக்கு முரணாக, அந்தப் பாடத்தை இரண்டாகப் பிரித்து, மதிப்பெண் முறையில் பல்கலைக்கழக நிர்வாகம் செய்த மாற்றத்தால் நாங்கள் தேர்ச்சி பெற இயலவில்லை. இந்த மாற்றம் சட்ட விரோதமாகும்.

எனவே, மதிப்பெண் முறையில் பல்கலைக்கழக நிர்வாகம் செய்த மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுக்களில் வலியுறுத்தப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் மீது கடந்த ஜூன் மாதம் விசாரணை நடத்திய நீதிபதி என். ஜோதிமணி, மதிப்பெண் முறையில் பல்கலைக்கழக நிர்வாகம் செய்த மாற்றத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.



இதனை எதிர்த்து எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நர்மதா சம்பத், கடந்த 30 ஆண்டுகளாக தேர்வு முறையில் மாற்றம் செய்யவில்லை. நவீன மருத்துவ உலகில் அனைத்து பாடங்களிலும் மாணவர்கள் புலமை பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜெனரல் சர்ஜரி பாடத்தில் ஒரு பகுதியில் கவனம் செலுத்தும் மாணவர்கள், ஆர்த்தோ போன்ற பகுதிகளில் கவனம் செலுத்துவதை தவிர்த்து விடுகின்றனர்.

எனவே, ஆர்த்தோ உள்பட மருத்துவப் படிப்பின் எல்லா பகுதிகளிலும் மாணவர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதாலும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டது என்று வாதிட்டார்.

மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் எஸ். தங்கசிவன், நடப்பு கல்வி ஆண்டு மத்தியில் இந்த முறையை கொண்டு வந்ததால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட பாடத்தை இரண்டாகப் பிரித்து தேர்வு நடத்துவதன் மூலம் மருத்துவக் கல்வியின் தரம் உயரும் என்ற முடிவுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் எவ்வாறு வந்தது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை என்று குறிப்பிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களுக்குப் பின் நீதிபதிகள் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவில், பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய மதிப்பீட்டு தேர்வு முறையானது இந்திய மருத்துவ கல்வி கவுன்சில் சட்டத்துக்கு எதிரானதாக உள்ளது.

மேலும் இந்த புதியமுறை தன்னிச்சையாக உள்ளது. ஆகவே, மதிப்பெண் முறையில் பல்கலைக்கழக நிர்வாகம் செய்த மாற்றத்தை ரத்து செய்து தனி நீதிபதி ஜோதிமணி பிறப்பித்த உத்தரவு செல்லும். பல்கலைக்கழகத்தின் அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கலாம். எனினும், ஆர்த்தோ போன்ற மருத்துவப் படிப்பின் எல்லா பிரிவுகளிலும் மாணவர்களை கவனம் செலுத்தச் செய்ய என்ன செய்யலாம் என்பது பற்றி இந்திய மருத்துவக் கவுன்சிலுடன் கலந்தாலோசித்து, பல்கலைக்கழக நிர்வாகம் உரிய முடிவை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால், இப்போது மதிப்பெண் முறையில் பல்கலைக்கழக நிர்வாகம் செய்த மாற்றம் சட்ட விரோதமானது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

Wednesday, November 16, 2011

சித்தாசனம், சுகாசனம், மாலாசனம்.

சித்தாசனம்.
சித்தாசனம்

செய்முறை:Justify Fullவலதுகாலை மடக்கி உடலோடு ஒட்டிவைத்து, குதிகால் அடிவயிற்றில் படுவதுபோல் நிலைநிறுத்துங்கள். அதன்மேல் இடதுகால், மடிந்திருக்கட்டும். நேராக நிமிர்ந்து உட்காருங்கள். உங்களின் இடது உள்ளங்கையின் மேல், வலது புறங்கை (பைரவி முத்திரை) இருக்கட்டும். கண் பார்வையை கூர்மையாக்கி, அப்படியே மூக்கு நுனியை பாருங்கள்.

பயன்கள்:

பூரண உடல்நலம் கிட்டும். மனக்குழப்பங்கள் அகலும். புத்தர் தவம் செய்து புனிதம் பெற்ற ஆசனமிது. சிந்தனையில் தெளிவில்லாமல் உழல்பவர்கள், குழப்பத்தில் இருப்போர் அனைவரும், சித்தாசனத்தின் வாயிலாக, சிந்தனை தெளிவை பெறலாம்.


சுகாசனம்.
சுகாசனம்

செய்முறை:

விரிப்பில் இரண்டு கால்களையும் நீட்டி உட்காரவும். முதலில் வலதுகாலை மடக்கி உடலோடு ஒட்டிவையுங்கள். வலது காலின் மேல் இடதுகால் இருக்கட்டும். முதுகு தண்டை நிமிர்த்தி உட்கார்ந்த நிலையில், `சின் முத்திரை'யோடு, அந்தந்த பக்கத்து முழங்காலில் உள்ளங்கை மேலே தெரியுமாறு வையுங்கள். இதில் அவரவர்களுக்கு சுமமான நேரம் வரை இருக்கலாம். அதற்கு பிறகு, பழைய நிலைக்கு வரலாம். மாற்று ஆசனமாக கால் மாற்றி செய்யவேண்டும்.

பயன்கள்:

இது தியான ஆசனங்களில் ஒன்று. முழங்கால், மூட்டு வலி குணமாகும்.


மாலாசனம்.
மாலாசனம்

செய்முறை:

விரிப்பில் கிழக்கு நோக்கி குத்தவைத்து உட்காரவும். இரு முழங்காலையும் விரித்து, குனிந்து உடம்பை முன்னோக்கி கொண்டு வாருங்கள். இரண்டு கைகளும் முழங்காலுக்கு வெளிப்பக்கமாக சுற்றியநிலையில், முதுகுப் பக்கத்தோடு ஒன்றிணையட்டும்.

பயன்கள்:

உடல் எடை அளவோடு இருக்கும். கால்கள் வலுப்பெறும். மலச்சிக்கல் தீரும். மூலம், விரைவீக்கம் குணமாகும். மார்பு எலும்புகள் நன்கு விரியும். திரண்ட தோள்கள் அமையும். இடுப்பு சுருங்கும். பெண்களுக்கு பிடியிடை கிட்டும்.

Tuesday, November 15, 2011

எம்.பி.பி.எஸ். மாணவர்களின் வாழ்க்கையில் வேண்டுமென்றே விளையாடும் துணைவேந்தர் மயில்வாகணன் நடராஜன்.



புதிய மதிப்பெண் விதிமுறையால் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்கள் 1300பேர் தோல்விக்குள்ளாக்கப்பட்டனர். இதையடுத்து தோல்வியடைந்த மாணவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

9-11-2011 அன்று இறுதி விசாரணைக்கு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்சிற்கு இந்த வழக்கு வந்தது.

முன்னதாக சென்னை மற்றும் தமிழகமெங்கும் போராட்டம் நடத்திய மாணவர்கள், சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய்யை சந்தித்து, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் புதிய மதிப்பெண் விதிமுறையை ரத்து செய்ய ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனையைப் பெற்று, அவரது உத்தரவின்படி புதிய மதிப்பெண் முறையை ரத்து செய்யும் முடிவை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் எடுத்தது.

உயர் நீதிமன்ற விசாரணையின்போது, தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் அவர்களிடம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் நர்மதாசம்பத், பழைய முறைப்படி தேர்வு முடிவுகள் வெளியிட அரசு கூறிய ஆலோசனையை ஏற்று, புதிய மதிப்பெண் முறையை ரத்து செய்வதாக கூறினார்.

இதனைக் கேட்டு கடுங்கோபம் கொண்ட தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் அவர்கள், வழக்கறிஞர் நர்மதாசம்பத்திடம் எங்களது மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி இவ்வழக்கில் அளித்த தீர்ப்பை நீங்கள் மதிக்கவில்லை., ஆனால், அதே நேரத்தில் அரசாங்கம் கூறியது என்று புதிய மதிப்பெண் விதிமுறையை திரும்பப்பெறுகிறீர்கள். நாங்கள் சொன்னதும் இதைத்தானே! எங்கள் உத்தரவிற்கு என்ன மதிப்பு கொடுத்தீர்கள் என்று தனது கண்டனத்தை தெரிவித்தார்.

பின்னர், முதல்தாள்-100, இரண்டாம்தாள்-100 இவற்றின் கூடுதலான 200மதிப்பெண்ணிற்கு, 100மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என்னும் பழையமதிப்பெண் முறைப்படி தேர்வு முடிவுகள் வெளியிட ஆணை பிறப்பித்தார்.

இவ் வழக்கில் ஒரு பிரிவினர் 200க்கு 100மதிப்பெண்ணிற்கு மேல் பெற்று தோல்விக்குள்ளாக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு இந்தத் தீர்ப்பு மகிழ்வைத் தந்தது. அவர்கள் அனைவரின் கோரிக்கையும் ஏற்கப்பட்டுவிட்டதால் தங்கள் மனுக்களை திரும்பப் பெறுவதாகக் கூறினார்கள்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகமும் மேற்கண்ட மாணவர்களுக்கு மட்டுமே விதிமுறையை ரத்து செய்வதாகக் கூறியது. எனவே நீதிபதி வழக்குகள் ஆனைத்தையும் தள்ளுபடி செய்தார்.

அதிர்ச்சியுற்ற மாணவர்களின் மற்றோரு பிரிவினர் கோரிக்கை வேறுமாதிரியானது. அதாவது, முதல்தாள்-100, இரண்டாம்தாள்-100, வாய்மோழித்தேர்வு-100. இம்மூன்றின் கூடுதலான 300மதிப்பெண்ணிற்குக்கு 150மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என்னும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் மதிப்பெண் வழங்கும் விதியினை சுட்டிக்காட்டி, இவ்விதிப்படியும் தேர்ச்சி வேண்டும் என்றனர்.

தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், இவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டு உணவு இடைவேளைக்கு சென்றுவிட்டார்.

பிற்பகல் வாதத்தின் முடிவில் அவர்களின் கோரிக்கையும் ஏற்று இந்திய மருத்துவக் கவுன்சிலின் மதிப்பெண் வழங்கும் விதிகள்படி இவர்களுக்கும் தேர்ச்சியினை வழங்க உத்தரவிட்டார். மேலும் இதுநாள் வரை இம்மாணவர்களுக்கு வருகைப் பதிவையினையும் தர தலைமை நீதிபதி உத்தரவிட்டு வழக்கினை முடித்தார்.

புதிய மதிப்பெண் முறையை ரத்து செய்த பிறகு, திருத்தப்பட்ட தேர்வு முடிவில் 85 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் கருத்து தெரிவித்திருந்தார்.



தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு முடிவை நவம்பர் 13 - ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு வெளியிட்டது

ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளின்படி 70 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய மதிப்பெண் முறை ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்த நிலையில், இந்திய மருத்துவக் கவுன்சிலின் மதிப்பெண் வழங்கும் விதிகள் முழுமையாக அமல்படுத்தவில்லை. இதனால்தான் மீண்டும் 30 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளதாக மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தரப்பிலும், மாணவர்கள் தரப்பிலும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் நீதிமன்ற உத்தரவிற்கு கட்டுப்படாததால் அவர் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்கு ஆளாகிறார். எனவே அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போகிறோம் என்று அறிவித்தனர்.

பெற்றோர்களோ, எம்.பி.பி.எஸ். மாணவர்களின் வாழ்க்கையில் வேண்டுமென்றே விளையாடுகிறார் துணைவேந்தர் மயில்வாகணன் நடராஜன். எங்களக்கு இது இரண்டுமாத மன உளைச்சள். இதற்கு தீர்வுகாணமல் விடப்போவதில்லை என்றனர்.

எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு மாணவர்களைப் போலவே இறுதி ஆண்டு முடித்த மாணவர்களுக்கும் புதிய மதிப்பெண் முறையால் பாதிப்பு ஏற்படவே அவர்களும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, பழைய மதிப்பெண் முறைப்படி இவர்கள் அனைவரும் தேர்ச்சியுற்றவர்கள் என்றும், எனவே இவர்கள் அனைவரையும் பயிற்சி மருத்துவராக பணிபுரிய உத்தரவிடுகிறேன் என்று தீர்ப்பு வழங்கி இரண்டு மாதமாகிறது,

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் இதுவரை எங்களை பயிற்சி மருத்துவராக பணிபுரிய அனுமதிக்கவில்லை. இதுவும் நீதிமன்ற அவமதிப்பு குற்றம் என்றனர்.

புதியவிதி முறையால், எம்.பி.பி.எஸ். மாணவர்களைத் தொடர்ந்து பல்மருத்துவம் பயிலும் பி.டி.எஸ். மாணவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளதால் அவர்களும் போராட்டக் களத்தில் நிற்கின்றனர்.

இதுபோலவே, இந்தியமருத்துவம் பயிலும் மாணவர்களும், மருத்துவ துணைப் படிப்பான செவிலியர் பயிலும் மாணவர்களும் புதியவிதி முறையினை எதிர்த்துப் போராடுகின்றனர்.

இப்படிச் சுற்றிச்சுற்றி அதிருப்தியின் விளிம்பில் இருக்கும் துணைவேந்தர் மயில்வாகணன் நடராஜன் என்ன செய்யப்போகிறார்?

திருத்தப்பட்ட தேர்வு முடிவில் இந்த ஒட்டுமொத்த மதிப்பெண் கணக்கிடுவதில் தவறான முறை கடைப்பிடிக்கப்பட்டு மீண்டும் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. வேண்டுமென்றே மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடும் துணைவேந்தர் மயில்வாகணன் நடராஜன், தானாக முன்வந்து தனது பதவியை இராஜினமா செய்யும்வரை விடப்போவதில்லை என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் சன் தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியுள்ளார்.

Monday, November 14, 2011

தீராத வலிப்பு நோய்க்கு அறுவைச் சிகிச்சை மூலம் தீர்வு.


சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அப்போலோ மருத்துவமனையில் வலிப்பு நோய்க்கு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட சந்தனா (இடமிருந்து 2-வது)

தீராத வலிப்பு நோயை குணப்படுத்தும் வகையில் அப்போலோ மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அப்போலோ மருத்துவமனையின் நரம்பியல் துறை அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ப்ரீதிகா சாரி மற்றும் டாக்டர் செந்தில்நாதன் ஆகியோர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உலகம் முழுவதும் 150 பேர்களில் ஒருவருக்கு வலிப்பு வருகிறது. சுமார் 36 வகையான வலிப்பு நோய்கள் உள்ளன. இதில் 75 முதல் 80 சதவீதம் வரையிலான வலிப்பு நோயாளிகளை மருந்து மூலம் குணப்படுத்த முடியும். ஆனால், 15 முதல் 20 சதவீதம் வரையிலான நோயாளிகளை மருந்து மூலம் குணப்படுத்த முடியாது. அதுதான் தீராத வலிப்பு நோய் எனக் கூறப்படுகிறது.

இதில் 8 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் காரணமாக மூளைப் பகுதியில் சுமார் 1 செ.மீ முதல் 2 செ.மீ வரை வடு ஏற்படும். இதன் காரணமாக பிற்காலத்தில் வலிப்பு நோய் ஏற்படும். மேலும் மூளைக் காய்ச்சல், விபத்து போன்ற காரணங்களால்கூட தீராத வலிப்பு நோய்க்கு உள்ளாக நேரிடும்.

தீராத வலிப்பு நோயை மாத்திரை மூலம் குணப்படுத்த முடியும் என கருதி நோயாளிகள் ஆண்டுக்கணக்கில் மத்திரை சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் மாத்திரை எடுத்துக் கொண்ட பின்னரும் மாதத்துக்கு 2 முறை வலிப்பு ஏற்பட்டால் அவை தீராத வலிப்பு நோய் ஆகும். இதன் பாதிப்பு தொடர்ந்துகொண்டே இருந்தால் மூளை பாதிப்பு ஏற்படும்.

இப்பிரச்னைக்கு அறுவைச் சிகிச்சை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும். அப்போலோ மருத்துவமனையில் இதுவரை 100-க்கு மேற்பட்ட வலிப்பு நோய் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அறுவைச் சிகிச்சைக்கு பின்னர் வலிப்பு வராமல் தடுக்க முடியும். இதனால் எந்தவித பக்க விளைவும் ஏற்படாது.

அப்போலோ மருத்துவமனையின் நரம்பியல் துறை சார்பில் தீராத வலிப்பு நோய்க்கு தீர்வு காணும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய "சிக்கலான வலிப்பு நோய் சிகிச்சை மையம்' தொடங்கப்பட்டுள்ளது. இங்கு நோயாளிகளுக்கு நவீன எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் மூளைப் பகுதியில் உள்ள வடுவை துல்லியமாகக் கண்டறிந்து அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற முடியும்.

இலவச ஆலோசனை முகாம்: இப்போது வலிப்பு நோய் தொடர்பாக உலக அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனை முன்னிட்டு அப்போலோ மருத்துவமனையில் நவம்பர் 14-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை வலிப்பு நோய் தொடர்பாக இலவச ஆலோசனை முகாம் நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 044- 42291295 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று டாக்டர்கள் கூறினர்.

Saturday, November 12, 2011

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு : தேர்ச்சிக்கான மதிப்பெண் எவ்வளவு ?



எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வை எழுதி இரண்டாம் ஆண்டுக்குச் செல்ல காத்திருக்கும் மீதமுள்ள 1,217 மாணவர்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின்படி மதிப்பெண் கணக்கிடப்பட்டு திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளை வெளியிடும் பணியில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் தேர்வுத் துறை உயர் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மற்ற படிப்புகளைப் போன்று அல்லாமல் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி அடைந்தால்தான், இரண்டாம் ஆண்டு படிப்பைத் தொடர முடியும் என்ற வகையில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் (எம்.சி.ஐ.) "பிரேக் சிஸ்டம்' அமலில் உள்ளது.

புதிய முறை: இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின்படி எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்புக்கு ஒட்டுமொத்த குறைந்தபட்ச மதிப்பெண் 50 சதவீதம் என்ற விதிமுறை இருந்து வந்தது.

ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இந்த மதிப்பெண் விதிமுறையை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் மாற்றி அமைத்தது. அதாவது, ஒவ்வொரு பாடப் பிரிவிலும் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் எடுத்தால்தான் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்வு முடிவுகள் வெளியிட்டது.

இதில் தேர்வு எழுதிய 3,184 மாணவர்களில் 1,967 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். புதிய மதிப்பெண் முறை காரணமாக 1,217 மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தனர்.

தேர்ச்சிபெறாத மாணவர்களில் பலர் சென்னை உயர் நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில், இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின்படி மாணவர் தேர்ச்சிக்கு பழைய மதிப்பெண் முறையையே பின்பற்றுமாறு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். புதிய மதிப்பெண் முறை ரத்தாகி பிரச்னை முடிவுக்கு வந்தது.

எனினும், புதிய மதிப்பெண் விதிமுறை மட்டுமின்றி எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வின் ஒவ்வொரு மருத்துவப் பாடத்தின் மொத்த மதிப்பெண்ணையும் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் மாற்றி அமைத்தது. இதனால், வெளியாக உள்ள திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் - பெற்றோர்கள் -மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எம்.சி.ஐ. விதிகளின்படி... தற்போது இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டுக்கு உரிய "அனாடமி', "பிஸியாலஜி', "பயோகெமிஸ்ட்ரி' ஆகிய மூன்று பாடங்களில் மாணவர் எடுத்துள்ள மதிப்பெண்ணைக் கணக்கிட்டு திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளை வெளியிட தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.

உதாரணமாக, அனாடமி தாள் 1, தாள் 2 மற்றும் வாய்மொழித் தேர்வு (தலா 100 வீதம் இவற்றின் மொத்த மதிப்பெண்கள் 300). இதை ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டால், 300-க்கு 150-க்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர் தேர்ச்சிபெற்றதாகக் கருதப்படும். இதில் வாய்மொழித் தேர்வுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் விகிதம் எதுவும் கிடையாது.

அதாவது, தாள்-1 மற்றும் தாள்-2 என ஆகியவற்றில் அதிக மதிப்பெண் எடுத்து, வாய்மொழித் தேர்வில் குறைவாக இருந்து ஒட்டுமொத்த மதிப்பெண் 150 அல்லது அதற்கு மேல் எடுத்தாலே போதுமானது.

மேலும் அனாடமி செய்முறைத் தேர்வில் மொத்த மதிப்பெண் 100-க்கு குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணை ஒரு மாணவர் கட்டாயம் எடுக்க வேண்டும். இது தவிர அனாடமி பாடத்தில் மருத்துவக் கல்லூரியின் உள் மதிப்பீட்டுத் தேர்வின் மொத்த மதிப்பெண் 100 ஆகும். ஆக, செய்முறைத் தேர்வு மற்றும் உள் மதிப்பீட்டுத் தேர்வு இரண்டிலும் சேர்த்து 200-க்கு 100 மதிப்பெண் எடுக்க வேண்டும். இதில் உள் மதிப்பீட்டுத் தேர்வில் தேர்ச்சிபெற குறைந்தபட்ச மதிப்பெண் எதுவும் கிடையாது.

எனவே, இந்த விதிமுறைகளின்படி அனாடமி பாடத்தில் தேர்ச்சி பெற தாள்-1, தாள்-2, வாய்மொழித் தேர்வு, செய்முறைத் தேர்வு, உள் மதிப்பீட்டுத் தேர்வு ஆகிய அனைத்தையும் சேர்த்து 500-க்கு 250 மதிப்பெண் எடுத்தால் போதும்.

இதே போன்று "பிஸியாலஜி', "பயோகெமிஸ்ட்ரி' ஆகிய இதர பாடங்களிலும் தேர்ச்சி மதிப்பெண் கணக்கிடப்படும்.

இந்தப் பாடங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டுக்குச் செல்ல முடியும் என்று பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Wednesday, November 9, 2011

எம்.பி.பி.எஸ். புதிய மதிப்பெண் முறை இரத்தாகிறது. - இன்று வரை நடந்தது என்ன?



14-01-2011 அன்று எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மதிப்பெண் முறையை ரத்து செய்ய தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது. இம்முடிவால் புதிய மதிப்பெண் விதி காரணமாக தேர்வில் தோல்விக்குள்ளான நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன்அடைவர்.

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அனாடமி, ஃபிஸியாலஜி, பயோ கெமிஸ்ட்ரி என்ற மூன்று பாடங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடமும் பிரிவு 1 மற்றும் பிரிவு 2 என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முன்பிருந்த தேர்வு மதிப்பெண் விதிமுறையின்படி, ஒரு பாடத்தின் இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து குறைந்தபட்சம் 100 மதிப்பெண்கள் பெற்றாலே, அந்தப் பாடத்தில் தேர்ச்சி அளிக்கப்பட்டு வந்தது. இது நீண்டகால நடைமுறை ஆகும்.

ஆனால்,எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வில் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் குறைந்தபட்சம் 50 மதிப்பெண் எடுத்தால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற சர்ச்சைக்குரிய புதிய விதிமுறையை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் 14-01-2011 அன்று அறிமுகப்படுத்தியது. இதன் விளைவாக, கடந்த ஆகஸ்ட் மாதம் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வு எழுதிய 3,184 மாணவர்களில், 1,967 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர்; 1,217 மாணவர்கள், 40 சதவீதம்பேர் தோல்விக்கு உள்ளாக்கப்பட்டனர்.

புதிய மதிப்பெண் விதிமுறை காரணமாக சென்னை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாத நிலை உருவாக்கப்பட்டது.

தோல்விக்கு உள்ளாக்கப்பட்ட மாணவர்கள் விவரம்;

சென்னை மருத்துவக் கல்லூரி - 40/165
ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரி - 48/150
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி - 47/100
மதுரை மருத்துவக் கல்லூரி - 46/155
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி - 11/58
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி - 59/153
கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி - 21/150
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி - 58/153
சேலம் மருத்துவக் கல்லூரி - 44/77
திருச்சி மருத்துவக் கல்லூரி - 35/100
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி- 48/101
கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி- 45 /100
வேலூர் மருத்துவக் கல்லூரி - 21/99
தேனி மருத்துவக் கல்லூரி - 43/100
தர்ம்புரி மருத்துவக் கல்லூரி - 57/100
விழுப்புரம் மருத்துவக் கல்லூரி - 42/100
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி - 54/100
பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி, கோவை - 68 /150
மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி - 48 /100
ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி - 62 /150
கற்பகவிநாயகர் மருத்துவக் கல்லூரி - 54/100
முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி - 63 /150
தாகூர் மருத்துவக் கல்லூரி - 105/150
சென்னை மருத்துவக் கல்லூரி, திருச்சி - 79/150

இப்படி அதிர்ச்சி தோல்விப் பட்டியல் தொடர்கிறது. இவர்களெல்லாம் +2வில் 200% முதல் 190% வரை பெற்றவர்கள். 6லட்சம்பேர் தேர்வெழுதிய +2விலிருந்து 3000 பேரை தகுதி அடிப்படையில் அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அரசு கல்லூரிகள் 17லிலும், தனியார் கல்லூரிகள் 7லிலும் இவர்களுக்கு எம்.பி.பி.எஸ் சேர்க்கை அளிக்கப்பட்டது.

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள், இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின்படி இரண்டாம் ஆண்டு படிப்புக்குச் செல்ல முடியாத வகையில் "பிரேக் சிஸ்டம்' நடைமுறையில் உள்ளது.

இதனால் தேர்வில் தோல்வி அடைந்த 40 சதவீத மாணவர்களில் பெரும்பாலான மாணவர்கள், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் புதிய மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்கு தொடர்ந்தனர்.

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு ஃபிஸியாலஜி பாட முதல் பிரிவில் 100-க்கு 59 மதிப்பெண்ணும், இரண்டாம் பிரிவில் 100-க்கு 42 மதிப்பெண்ணும் பெற்று, மொத்தம் 101 மதிப்பெண் பெற்றும்கூட தேர்ச்சி அடையாத மாணவி பூர்ணசௌந்தரி உள்பட 23 மாணவர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

அக்டோபர் 10ந்தேதி மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் புதிய தேர்வு மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும் மாணவர்களை இரண்டாமாண்டு வகுப்பில் அனுமதிக்க உத்தரவிட்டார். பல்கலைக்கழகப் பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, மருத்துவக் கல்வி இயக்குநர், இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

இருந்தபோதும் இந்த உத்தரவை, மதுரை மருத்துவக் கல்லூரியைத் தவிர மற்ற கல்லூரிகள் இன்றுவரை மதித்தாகத் தெரியவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இணையானதுதானா? மதுரை உயர்நீதிமன்றம்! எனும் வினா தோன்றாமல் இருக்க வாய்ப்பில்லை.

இருந்தபோதும் மதுரை உயர்நீதிமன்ற நீதியரசர் டி.ராஜா அவர்களின் தீர்ப்பு அதிரடியானதுதான். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஒளியாய் திகழ்ந்தது என்னவோ உண்மைதான்.

ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன ?

4-10-2011 அன்று சென்னை உயர்நீதிமன்ற கோர்ட் -2ல் இவ்வழக்கு, நீதிபதி ஹரிபரந்தாமனிடம் விசாரணைக்கு வந்தது. அவரால் வழக்கு 14-10-2011க்கு தள்ளிவைக்கப்பட்டது.

14-10-2011 அன்று நீதிபதி பால்வசந்தகுமாரிடம் விசாரணைக்கு வந்தது. அவர் வழக்கினை ஏற்க மறுத்ததால், 19-10-2011க்கு தள்ளிவைக்கப்பட்டது.

19-10-2011 அன்று நீதிபதி சித்ராவெங்கட்ராமனிடம் விசாரணைக்கு வந்தது. அவரால் வழக்கு , 1-11-2011க்கு தள்ளிவைக்கப்பட்டது.

1-11-2011 அன்று நீதிபதி சித்ராவெங்கட்ராமன், டிவிஷன் பெஞ்சிற்கு மாற்றிவிட்டார்.

2-11-2011 அன்று தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணைக்கு வந்த வழக்கு, 9-11-2011க்கு தள்ளிவைக்கப்பட்டது. இப்படியாக மாணவர்களின் வாழ்க்கை பந்தாடப்பட்டது.

ஒவ்வொறு முறையும் நீதிமன்றத்தில் குவியும் நூற்றுக்கணக்கான மாணவர்கள்,பெற்றோர்கள், 30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் என இவர்கள் யாவரும் நீதியரசர்களின் கண்களில் படவில்லை போலும்..

மாணவர்களின் போராட்டம் தமிழகமெங்கும் வெடித்தது. இது சுகாதாரத்துறை அமைச்சர் வழியாக முதல்வரின் கவனத்திற்கு சென்றது.

இறுதியாக சென்னை-மதுரை நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்கை சேர்த்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை புதன்கிழமை நவம்பர். 9. இன்று நடைபெற உள்ளது; அப்போது புதிய மதிப்பெண் விதிமுறை ரத்து செய்த தகவலைத் தெரிவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய்யை அண்மையில் சந்தித்து, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் புதிய மதிப்பெண் விதிமுறையை ரத்து செய்ய ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனையைப் பெற்று, அவரது உத்தரவின்படி புதிய மதிப்பெண் முறையை ரத்து செய்யும் முடிவை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.

Friday, November 4, 2011

அர்த்த மச்சேந்திராசனம், அர்த்த மாலாசனம், அர்த்த தனுராசனம்.

அர்த்த மச்சேந்திராசனம்.
அர்த்த மச்சேந்திராசனம்

செய்முறை:

முழங்காலை மடக்கி மண்டியிட்டு உட்காரவும். வலது முழங்காலை மெதுவாக தூக்கி, இடதுதொடைக்கு பக்கத்தில் நிலைநிறுத்துங்கள். அப்போது உங்களின் வலதுகை, முதுகை சுற்றிக்கொண்டுபோய், வலது கணுக்காலை தொடட்டும். இடது கை விரகள், மடிந்திருக்கும் இடதுகால் மூட்டில் இருக்கவேண்டும். இந்த நிலையில் முகம் வலப்பக்கமாக திரும்பியிருக்கவேண்டும். இயல்பான சுவாசத்தில் 15 விநாடி இருந்தபின் இதேபோல் பக்கம் மாற்றிசெய்யுங்கள்.

பயன்கள்:

இடுப்பு- தோள்பட்டை வரையிலான நாளமில்லா சுரப்பிகள் மற்றும் கல்லீரல், மண்ணீரல், கணையம் ஆகியவை நன்கு இயங்கும். நீரிழிவு குணமாகும். மூட்டுப்பிடிப்பு, செரிமான கோளாறு ஏற்படாது. உடல்எடை குறைந்து அழகிய தோற்றம் கிட்டும். இளமையும் சுறுசுறுப்பும் நீடிக்கும்.


அர்த்த மாலாசனம்.
அர்த்த மாலாசனம்

செய்முறை:

முழங்காலை மடக்கி மண்டியிட்டு உட்காரவும். வலது பாதத்தை மட்டும் செங்குத்தாக தூக்கி, தரையில் ஊன்றுங்கள். அப்போது உங்களின் வலதுகை, இடதுகை மணிக்கட்டையை பிடித்தநிலையில் இருக்கட்டும். இடுப்புக்கு மேல் உறுப்புகளை திருப்பி பின்புறமாக பார்க்கவும். இது மாதிரி இடப் பக்கமாக மாற்றி செய்யுங்கள்.

பயன்கள்:

வயிற்று கோளாறு, மலச்சிக்கல், மூலநோய், சளி சம்பந்தமான நோய்கள் நீங்கும். அடிவயிற்று தசைகள் வலுப்பெறும். முதுகு தண்டுக்கு நல்ல பயிற்சி. சளி, இதய கோளாறு உள்ளளோருக்கு ஏற்றது. மார்பு விரியவும், இடுப்பு குறையவும் வழிவகுக்கும், மிகச்சிறந்த ஆசனமிது!


அர்த்த தனுராசனம்.
அர்த்த தனுராசனம்

செய்முறை:

விரிப்பில் வடக்கு நோக்கி தலை வைத்து குப்புறப்படுங்கள். வலது காலை முழங்கால் அளவு பின்னால் மடக்கவும். வலதுகையை பின்னால் கொண்டு சென்று, வலது கணுக்காலை பிடித்து சற்று உள்நோக்கி இழுக்கவும். தலை-வலது முழங்காலை சற்று மேல் நோக்கி தூக்குங்கள். இயல்பான சுவாசத்தில் செய்யவும்.

அதற்கு பிறகு கால்களை இயல்பு நிலைக்கு கொண்டுவந்து, சில நிமிடங்கள் ஓய்வு எடுக்கலாம். வலது காலை தரையில் வைத்து, இடது காலை முழங்கால்வரை மடக்குங்கள். இடதுகையால் இடது கணுக்காலை பிடித்து, முன்புபோல மேலே தூக்க முயற்சிக்கவும்.

பயன்கள்:

முதுகு தண்டு இளக்கம் பெறும். வயிற்றுப்பகுதி களர்ச்சி அடையும். மலச்சிக்கல் நீங்கும். கர்ப்பப்பை கோளாறுகள், வாயு கோளாறுகள், முதுகு தண்டுவலி ஆகிய நோய்கள் நீங்கும்.

600 அறைகள், நவீன வசதிகளுடன் கிண்டியில் உருவாகும் பிரமாண்ட ஓட்டல்.



சென்னை கிண்டியில் ஸ்பிக் பில்டிங் அருகே ஐ.டி.சி. நிறுவனம் பிரம்மாண்டமான நட்சத்திர ஓட்டலை கட்டி வருகிறது. 8 ஏக்கர் பரபரப்பளவில் தரை தளம் மற்றும் 10 மாடி கொண்டதாக கட்டப்பட்டு வரும் இந்த ஓட்டலில் 600 அறைகள் நவீன வசதிகளுடன் உள்ளன.

இந்த ஓட்டலின் மாடியில் ஹெலிகாப்டர் வந்திறங்கும் வகையில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கேட்டு சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ., விமான நிலைய அதிகாரிகள், தீயணைப்பு துறை ஆகியோரிடம் ஓட்டல் நிர்வாகம் அனுமதி கேட்டுள்ளது.

ஆனால் சென்னை மாநகராட்சியும், சி.எம்.டி. ஏ.வும் தீயணைப்பு துறையும் ஹெலிகாப்டர் தளத்துக்கு அனுமதி தரமுடியாது என்று கூறி தடையில்லா சான்று (என்.ஓ.சி.) கொடுக்க மறுத்து விட்டது.

ஓட்டலின் மாடியில் ஹெலிகாப்டர் வந்திறங்கும்போது பக்கத்து கட்டிடங்களுக்கு அதனால் பாதிப்பு ஏற்படும் என்றும் ஜன்னல் கண்ணாடிகள் உடைய வாய்ப்பு ஏற்படும் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர். ஆனால் ஐ.டி.சி. அதிகாரிகள் கூறுகையில் நாங்கள் கட்டி வரும் கிராண்ட் சோழா ஓட்டலில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

பெங்களூரில் உள்ள ஐ.டி.சி. குரூப் ஓட்டலான கார்டினியாவில் ஹெலிகாப்டர் இறங்கும் வசதி இருப்பதால் அதேபோல் இங்கும் ஹெலிகாப்டர் இறங்க வசதி ஏற்படுத்துகிறோம். ஆரம்பத்தில் ஹெலிபேட் இல்லாத வகையில் பிளான் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் பிறகுதான் ஹெலிபேட் அமைக்கப்பட்டது.

இதனால் திருத்திய பிளான் வடிவமைப்பை சி.எம்.டி.ஏ.வில் வழங்கினோம். ஆனால் அவர்கள் அனுமதி தரவில்லை. இந்த ஓட்டலை மார்ச் மாதத்திற்குள் திறக்க முடிவு செய்திருப்பதால் ஹெலிபேட் வசதி இன்றி திறக்க முடிவு செய்துள்ளோம்.

ஆனால் விரைவில் ஓட்டல் மாடியில் ஹெலிகாப்டர் வந்திறங்க அனுமதி வாங்கி விடுவோம் என்றனர். சென்னையில் உள்ள ஓட்டல்களில் இதுவரை ஹெலிகாப்டர் வந்திறங்கும் வசதி எந்த ஓட்டலிலும் கிடையாது.

கிண்டியில் கட்டப்பட்டு வரும் கிராண்ட் சோழா ஓட்டலில்தான் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய அரண்மனை போல் காட்சியளிக்கும் இந்த ஓட்டலை அந்த வழியாக செல்பவர்கள் வியப்புடன் பார்த்து செல்கிறார்கள்.

Thursday, November 3, 2011

அழியப் போகிறது இலட்ச்சக்கணக்கான புத்தகங்கள்.



கோட்டூர்புரத்தில் 200 கோடி செலவில், கட்டப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாக தரைத் தளம் உள்பட 9 தளங்களில் கட்டப்பட்டது. இதில் 8 தளங்களில் புத்தகப் பிரிவும், ஒரு தளத்தில் நிர்வாகப் பிரிவும் இயங்கி வருகின்றன. இந்த நூலகத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளின் போது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.

ரூ.40 முதல் ரூ.1 லட்சம் வரை மதிப்புள்ள புத்தகங்கள் இங்குள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு தயார் செய்பவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், துறை வல்லுநர்கள், நல்ல சூழலில் படிப்பதற்காக புத்தகங்களுடன் வருபவர்கள், பார்வையற்றவர்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினர் இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., ஐ.டி. நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அருகில் இருப்பதால் இந்த நூலகத்துக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது.

5 லட்சம் புத்தகங்கள்

இந் நூலகத்திற்காக 24075 தலைப்புகளில் 92440 தமிழ் நூல்கள் வாங்கப்பட்டுள்ளன. அச்சிட்ட நூல்கள் தவிர 50000 மின் நூல்கள், 11000 மின் இதழ்கள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ள இந் நூலகத்தில் ஒரே நேரத்தில் 1250 பேர் அமர்ந்து படிக்க முடியும். இந்த நூலகம் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் தினமும் 2000 பேருக்கு மேல் வந்து செல்கின்றனர். வார நாட்களில் 3ஆயிரம் பேர் வரை இங்கு வந்து இங்குள்ள நூல்களை வாசித்து இங்கு வீசும் அறிவுக்காற்றினை சுவாசித்து செல்கின்றனர்.



அதிநவீன வசதி கொண்ட நூலகம்

தரமிக்க நூலகங்களில் காணப்படும் அனைத்து தொழில் நுட்பங்களும் இணைந்த மின் நூலகம்,இதனுடன் யுனெஸ்கோவும் இணைந்துள்ளது. முழுவதும் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நூலகம் பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டது.

இந்த நூலகத்தில் திரையரங்கு, கூட்ட அரங்கு, கண்காட்சி அரங்குகள் உள்ளன. மிகப்பெரிய முகப்பு கூடம், வரவேற்பு அறை, இண்டர்நெட் மையம் ஆகியவை உள்ளன. பார்வை இல்லாதவர்கள் பிரெய்லி முறையில் படிக்கும் நூலக அரங்கும் இருக்கிறது.

பார்வையற்றோருக்கான பிரெய்லி பிரிவு, புத்தகம் கொண்டு வந்து படிக்கும் பிரிவு, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற போட்டித் தேர்வுகளுக்கானப் புத்தகங்கள் தரைத்தளத்தில் உள்ளன. முதல் தளத்தில் சிறுவர்-சிறுமிகளுக்கான புத்தகங்கள், இயற்கை எழில் கொண்ட வாசிப்பு அறை உள்ளது. 2-வது தளத்தில் தமிழ் நூல்களும், 3-வது தளத்தில் ஆங்கில நூல்களும், 4-வது தளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட பல்வேறு மொழி நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.



டிஜிட்டல் நூலகம்

5-வது தளத்தில் பத்திரிகைகளின் பழைய பதிப்புகள், 6-வது தளத்தில் அரசு ஆவணங்கள், 7-வது தளத்தில் நன்கொடையாளர்கள் கொடுத்த நூல்கள் மற்றும் ஆடியோ-வீடியோ தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன. டிஜிட்டல் நூலகமும், புகைப்பட தொகுப்புகளும் 8-வது மாடியில் இருக்கிறது.

இங்கு 70 ஆயிரம் ஓலைச்சுவடிகள், அரிய புத்தகங்கள், டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நூல்கள் குழந்தைகளுக்காக வைக்கப்பட்டுள்ளன. 20 ஆயிரத்துக்கும் அதிகமான பல்வேறு ஊடக சி.டி.க்கள் உள்ளன.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வழங்கிய அரிய நூல்கள் மற்றும் பொதுமக்களிடம் பெறப்பட்ட நூல்கள் உலக முன்னணி பதிப்பாளர்களிடம் இருந்து வாங்கப்பட்ட ஆங்கில மற்றும் பிறமொழி நூல்கள் அனைத்தும் இந்த நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. ஸ்மார்ட் கார்டு மூலம் இந்த நூலகத்தை பொதுமக்கள் பயன்படுத்தலாம்.

இந்த டிஜிட்டல் நூலகம் மூலம் உலகின் புகழ்பெற்ற எந்த நூலகத்தில் இருந்தும் தகவல்களை பெற முடியும். இங்கு 500-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் உள்ளன. இந்த நூலகத்துக்கு உலக டிஜிட்டல் நூலகத்தின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.



நூலகத்திற்கான தர நிர்ணயம்

நூலகத்துக்கு என்று இந்தியத் தர நிர்ணய அமைப்பின் வழிகாட்டுதல்கள் உள்ளன. சுவரின் அகலம், கட்டட உயரம், ஸ்திரத்தன்மை என்று அனைத்தும் அதைப் பின்பற்றியே கட்டப்பட்டுள்ளன. சூரியனின் ஒளிக்கதிர்கள் அனைத்து அறைகளுக்கும் வந்து செல்லும் வகையில் கண்ணாடிகள் பதிக்கப்பட்டுள்ளன. முற்றிலும் பசுமைக் கட்டடமாக இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது. கருணாநிதி ஆட்சியில் உருவான ஒரே காரணத்திற்காக இந் நூலகம் மூடப்பெற்று..அங்கு குழந்தைகள் நல மருத்துவமனை இயங்கும் என முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நூல்களை இடம் மாற்றித்தானே வைக்கிறோம் என்று அரசு தெரிவித்துள்ளது. ஆனால்..நூல் நிலையத்திற்காகவே உருவாக்கப் பட்ட இடத்திலிருந்து ஏன் மாற்ற வேண்டும் என்பதே லட்சக்கணக்கான நூல் ஆர்வலர்களின் கேள்வியாகும்.