Friday, March 4, 2011

பிரபாகரனும் ராஜீவ் காந்தியும் - பகுதி-2.


கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கைத்தமிழர்களுக்கு சிங்களப் பேரினவாதிகள் இழைத்த கொடுமைகளை விவரமாகக் கூறும் வலைத் தளங்கள் நிறைய இருக்கின்றன.

எனவே நான் அந்த விவரங்களுக்குள் போகவில்லை. சுருக்கமாக -

அன்று முதல் – இன்று வரை இலங்கையில் ஆட்சியில் இருக்கும் அரசுகள் அனைத்துமே ஈழத்தமிழர்களுக்கு எதாவது ஒரு வகையில் துரோகம் செய்து கொண்டு தான் இருக்கின்றன.

அப்பாவித் தமிழர்களுக்கு ஆதரவாக – எப்போதாவது இந்தியா எதாவது செய்ய முயற்சித்தால், அந்த தமிழர்களுக்குப் பரிந்து பேச வந்தால் நேரடியாக இந்தியாவைப் பகைத்துக் கொள்ளும் தைரியம் இல்லாததால், சுற்றி வளைத்து எந்த விதத்திலாவது இந்திய அரசுக்கு சிக்கலை உருவாக்குவதிலேயே இலங்கைஅரசு முனைப்புடன் இருந்துள்ளன.

எழுபதுகளில் - எண்பதுகளில் - பனிப்போர் தொடர்ந்து இருந்து வந்த காலங் களில், இந்தியா ரஷ்யாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்த நேரம். அமெரிக்கா பாகிஸ்தானைக் கையில் போட்டுக்கொண்டு இந்தியாவுக்கு தன்னால் இயன்ற வகையில் எல்லாம் தொந்திரவுகள் கொடுத்து வந்த காலம்.

அந்த சமயத்தில் - இலங்கை அரசும் திரிகோணமலையில் இந்தியாவுக்கு விரோதமாக அமெரிக்காவுக்கு ராணுவ தளம் அமைத்துக் கொடுப்பதில் ஆர்வம் காட்டியது.

தமிழ்ப்போராளிகள் சிறு சிறு குழுக்களாக சிங்கள அரசை எதிர்த்து வந்த நேரம். இலங்கை அரசுக்கு எதிராக இந்த போராளிக்குழுக்களை வளர்த்து விட்டால், இலங்கை அரசை ஒரு கட்டுக்குள் வைக்கலாம் என்று நினைத்த இந்திரா அம்மையார் தமிழ்ப் போராளிக்குழுக்கள் அனைத்துக்கும் தமிழ் நாட்டில் ஆயுதப் போராட்டத்திற்கான பயிற்சியைக் கொடுத்து ஆயுதங்களுடன் அவர்களை இலங்கை செல்ல ஊக்குவித்தார். இலங்கை அரசுக்கு எதிரான அவர்களது போராட்டங்களுக்கு மறைமுகமான ஆதரவைக் கொடுத்தார்.

இந்திரா தமிழ்ப் போராளிகளை வளர்த்து விட்டது இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனேவுக்கு தொல்லை கொடுக்கத்தானே தவிர தனி ஈழம் அமைத்துக் கொடுக்க அல்ல.

தனித் தமிழ் ஈழம் அமைவதில் இந்திராவுக்கு விருப்பமில்லை. அது தமிழ் நாட்டில் பிரிவினை வாதத்துக்கு வழி கோலும் என்றே அவர் நினைத்திருந்தார். இந்தியா தன் சுயநலத்திற்காகவே தங்களை வளர்க்கிறது என்பதை பிரபாகரனும், விடுதலைப் புலிகளும் உணர்ந்தே இருந்தனர்

1984-ல் இந்திரா மறைந்தார். ராஜீவ் பிரதமர் பொறுப்புக்கு வந்தார். இந்தியா -இலங்கை உறவில் பெரிய அளவில் மாறுதல்கள் ஏற்பட்டன.

இந்திராவுக்கு இருந்த அரசியல் அனுபவமும் முதிர்ச்சியும் ராஜீவுக்கு இல்லை. இலங்கைத தமிழர்களின் பிரச்சினைகளோ, அங்கு போராடும் தமிழ் மக்கள் படும வேதனைகளோ அவருக்குப் புரியவே இல்லை.

லண்டனில் படித்து, விமானியாகத் தொழில் ஏற்று, காதல் மணம் புரிந்து, மனதுக்குப் பிடித்த வகையில் சந்தோஷமாக வாழ்ந்த பணக்கார இளைஞர் அவர்.

என்றாவது ஒரு நாள், தான்அரசியலுக்கு வரக்கூடும் என்று அவர் கனவிலும் கூட நினைத்திராததால், நம்மைச் சூழ்ந்துள்ள அரசியலையோ, கடந்த கால வரலாறுகளையோ அவர் அறிந்திருக்கவில்லை.

இந்திரா எந்த காரணங்களுக்காக ஈழப்போராளிகளை ஊக்குவித்து வந்தார் என்பதை அவர் உணரவில்லை.

அனுபவமும், திறமையும் வாய்ந்த பார்த்தசாரதி, வெங்கடேஸ்வரன் போன்ற வயதான தமிழ் அதிகாரிகளை அவருக்குப் பிடிக்கவில்லை. அவர்களை எல்லாம் வெளியேற்றினார்.

தனக்குப் பிடித்த அதிகாரிகளை, அந்த இடத்திற்கு கொண்டு வந்தார். துரதிருஷ்டவசமாக அவர்கள் அத்தனை பேரும் மலையாளிகளாகவும்,
தமிழர் விரோதிகளாகவுமே அமைந்தார்கள்.

இலங்கை அரசு தனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று ராஜீவ் காந்தி எதிர்பார்த்தார். பிராந்திய வல்லரசான இந்தியா விரும்புகிற வழியில்இலங்கை நடக்க வேண்டும் என்று ராஜீவ் விரும்பினார்.

அதற்கு ஜனாதிபதி ஜெயவர்த்தனே ஒத்து வரவில்லை. இலங்கை அரசுக்கு பெருத்த தலைவலியாக இருந்த தமிழ்ப் போராளிக் குழுக்களை கட்டுப்படுத்தி இலங்கையில் உள்நாட்டு அமைதி ஏற்ப தான் உதவி செய்தால், ஜனாதிபதி ஜெயவர்த்தனே தனக்கு கட்டுப்படுவார், இலங்கை தனக்கு கட்டுப்பட்டு நடக்கும் என்று ராஜீவ் நினைத்தார்.

எனவே ஈழப்போராளிகளை, போர் நிறுத்தம் செய்ய வைத்து, ஆயுதங்களையும் ஒப்படைக்கச் செய்வதாக ராஜீவ் காந்தி ஜெயவர்த்தனேவுக்கு உறுதிஅளித்தார். இதற்கு அடிப்படையாக இந்தியா -இலங்கை நாடுகளிடையே ஒரு ஒப்பந்தம் போடுவது என்றும் இந்த ஒப்பந்தம் நிறைவேறும் விதத்தில், இந்தியா ஒரு அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி உதவுவது என்றும் இருவருமாகப் பேசி முடிவெடுத்தனர்.

தமிழர் பிரச்சினையைப் பற்றி ராஜீவ் காந்திக்கு தெளிவான பார்வை கிடையாது என்கிற நிலையில், இலங்கையின் முக்கிய போராளிக் குழுவான விடுதலைப் புலிகளை – பிரபாகரனை கலந்து ஆலோசியாமலே ராஜீவும் ஜெயவர்த்தனே யும் மட்டுமே கலந்து பேசி, இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் கருத்துக்கள் உருவாக்கப்பட்டன.

விடுதலைப்புலிகள் எப்படியும் இதற்கு ஒப்பமாட்டார்கள் என்று ஜெயவர்த்தனேவிற்கு நன்கு தெரியும். எனவே இந்தியாவிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே பிளவை உண்டு பண்ணி அவர்களிடையே விரோதத்தை வளர்க்கும் விதமாகவே ஜெயவர்த்தனே இந்த ஒப்பந்தத்தை உருவாக்க தீவிரமாக முயற்சித்தார். இந்த பின்னணியை அறியாத ராஜீவ் காந்தி ஜெயவர்த்தனே விரித்த வலையில் வலியப் போய் விழுந்தார்.

வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்படும் என்றும், தேர்தல்கள் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்படும் வடகிழக்கு மாகாணத்திற்கு அதிகாரங்கள் பரவலாக அளிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.

இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகளுடனான போரை நிறுத்திக்கொண்டு, தெற்கே உள்ள படை முகாமுக்குத் திரும்பும். அனைத்துபோராளிக்குழுக்களும் இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்டு விட்டு, தங்கள் வசம் உள்ள ஆயுதங்களை அமைதி காக்கும் இந்தியப்படையின் (IPKF) வசம் ஒப்படைக்க வேண்டும்.

இத்தனை செயல்களும் நடைபெறுவதை உறுதிப் படுத்தும் பொறுப்பினை இந்திய அமைதி காக்கும் படை மேற்கொள்ள வேண்டும்.

இதன் தொடர்ச்சியாக, அனைத்து போராளிக் குழுக்களையும் இந்தியா திம்புவில் அழைத்து வைத்துப் பேசியது.

தமிழர்களுக்குத் தேவையான சுயாட்சியைத் தான் பெற்றுத் தருவதாகவும், அனைத்துப் போராளிக்குழுக்களும், ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சமாதானத்திற்கு உடன்பட வேண்டும் என்று ராஜீவ் வற்புறுத்தினார். மற்ற சில குழுக்கள் உடன்பட்டாலும், பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் அமைப்பு இதற்கு உடன்படவில்லை. பேச்சுவார்த்தைகள் முறிந்தன.

ராஜீவுக்கு இது தன்மானப் பிரச்சினை ஆயிற்று.

ஆத்திரமும், கோபமும் இங்கே தலையெடுக்கின்றன.

இந்தியா-இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி, பிரபாகரனுடன் பேசவிரும்புவதாக புலிகளுக்குத் தெரிவிக்கப் பட்டது.

என்ன பணி என்று கூறப்படாமலே, 6 விமானங்கள் அடங்கிய இந்திய விமானப்படைப்பிரிவு ஒன்று தில்லியிலிருந்து முதலில் பெங்களூருக்கும் பின்னர் அங்கிருந்து சூலூருக்கும் விரைந்து அனுப்பப்பட்டது. பின்னர் குரூப் கேப்டன் அஹுலுவாலியா தலைமையில் இரண்டு MI-17 ஹெலிகாப்டர்கள் சூலூர் விமான தளத்திலிருந்து இலங்கையிலுள்ள பலாலி விமான தளத்தை சென்றடைந்தன. இந்திய விமானப்படை விமானம் ஒன்று இலங்கை பலாலி விமான தளத்தில் இறங்கியது இதுவே முதல் தடவை.

விருப்பம் இல்லாமலே பிரபாகரன் வற்புறுத்தப்பட்டு அந்த விமானத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார். அங்கிருந்து அந்த ஹெலிகாப்டர் திருச்சியை அடைந்தது. திருச்சியிலிருந்து ஒரு விசேஷ ராணுவ விமானத்தில் பிரபாகரன் தில்லி அழைத்துச் செல்லப்பட்டார்.

தில்லியில், அசோகா ஓட்டலின் மேல்தளத்தில் பிரபாகரன் கிட்டத்தட்ட சிறையில் வைக்கப்பட்டது போல் தங்க வைக்கப்பட்டார். ஒப்பந்த நகல் அவரிடம் அளிக்கப்பட்டது. அவர் அதில் கையெழுத்திட வற்புறுத்தப் பட்டார். பிரபாகரன் மறுத்தபோது – ஒப்பந்த நகலில் கையெழுத்திடாமல் அவர் அந்த இடத்தை விட்டு வெளியேற முடியாது என்று அவருக்கு உணர்த்தப்பட்டது.

பிரபாகரன் முற்றிலும் எதிர்பாராத ஒரு புதிய சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இந்த ஒப்பந்தத்தை நம்பி புலிகள் ஆயுதங்களை ஒப்படைப்பது, தற்கொலைக்கு ஒப்பாகும் என்பது அவரது உறுதியாக எண்ணம். பிரச்சினையின் ஆழத்தை புரிந்து கொள்ளாத ராஜீவ் காந்தியின் போக்கு அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.

இங்கு தான் விரோதம் ஆரம்பிக்கிறது.

தன் அன்னை வளர்த்து விட்ட”பசங்க” தானே இவர்கள். தன் சொல்லுக்கு கட்டுப்படாமல் போவதா என்று ராஜீவிற்கு கோபம்.

இந்திரா சொல்லி ஆரம்பிக்கக்ப்பட்டதல்ல ஈழ விடுதலைப் போராட்டம். தொடர்ந்து சிங்களப் பெரும்பான்மையாளர்களால் துன்புறுத்தப்பட்டு வந்த தமிழர்கள் விடுதலை பெற்று சுயமரியாதையுடனும், சுதந்திரமாகவும், வாழ்வதற்காக துவக்கப்பட்ட இயக்கம்,

இந்திரா பயிற்சி கொடுத்து ஊக்குவித்தார் என்கிற காரணத்தால், இயக்கத்தின் அடிப்படையான தனிஈழ லட்சியத்தை விட்டுக் கொடுக்க முடியுமா என்பது புலிகளின் – பிரபாகரனின் வினா.

இது வரை இலங்கை அரசு போட்ட எவ்வளவோ ஒப்பந்தங்களை தமிழர்கள் பார்த்தாயிற்று. இலங்கை அரசு எதையும் நடைமுறையில் நிறைவேற்றாது என்பது தமிழர்களின் அனுபவம்.

எனவே தனித் தமிழ் ஈழத்திற்கு குறைவாக எதற்கும் விடுதலைப்புலிகள் தயாரில்லை என்பது பிரபாகரனால் எடுத்துக்கூறப்பட்டது.

ராஜீவ் காந்தி தன் பிடிவாதத்தை விடுவதாக இல்லை. விடுதலைப் புலிகளின் லட்சிய வேட்கையையும், தாகத்தையும் புரிந்து கொள்ள அவர் அக்கரை எடுத்துக்கொள்ளவில்லை. நான் சொல்வதை நீங்கள் கேட்டே ஆக வேண்டும். இல்லையேல் பலப்பிரயோகத்திற்கு உட்படுவீர்கள் என்பது அவர் பயமுறுத்தல்.

இறுதியில், அந்த இடத்தை விட்டு வெளியேற வேறு வழி இல்லாததால், பிரபாகரன் ஒப்புக்கொள்வதாகக் கையெழுத்திட்டார்.

இங்கு விரோதம் மேற்கொண்டு வளர்கிறது !

ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, பிரபாகரன் ஒப்பந்தம் ராஜீவ் காந்தியால் தம் மீது எப்படி திணிக்கப்பட்டது என்பதையும் தான் எந்த சூழ்நிலையில் இருக்கிறார் என்பதையும் ஈழத் தமிழ் மக்களுக்குத் தெரிவித்து, சுதுமலையில், அம்மன் கோயில் திடலில் 04/08/1987 அன்று நிகழ்த்திய உரையின் சாரம் -

“நமது அரசியல் தலைவிதியை இந்தியா என்கின்ற எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவுசெய்திருக்கும் நிலையில் எம்மால் என்ன செய்ய முடியும்?

இந்தியப்பிரதமர் எனக்கு சில உறுதிப்பாடுகளை வழங்கினார். எமது மக்களின் பாதுகாப்பிற்குரிய உறுதியினையும் அவர் வழங்கினார்.

இந்தியப் பிரதமரின் ஒளிவுமறைவற்ற நேர்மையில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. அவரளித்த உறுதியிலும் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. பேரினவாத சிங்கள அரசாங்கம் மீண்டும் தமிழின ஒழிப்பைத்தொடங்குவதற்கு இந்தியா அனுமதியமளிக்க மாட்டாது என்று நாம் நம்புகின்றோம்.

இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்திய அமைதிப்படையிடம் எமது ஆயுதங்களை ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளோம்.

ஆயுதங்களை நாங்கள் ஒப்படைக்கவில்லையானால் நாம் இந்தியப் படை களுடன் மோதுகின்ற சூழ்நிலை உருவாகும். இது எமக்குத் தேவையில்லை.

நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம். இந்தியப் படைகளுக்கு எதிராக நாம் எமது ஆயுதங்களைப் பயன்படுத்தும் கேள்விக்கே இடமில்லை.

எமது எதிரிகளிடம் இருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பினை இந்தியப் படைகள் ஏற்கின்றன.

எமது ஆயுதங்களை நாம் இந்தியப்படையினரிடம் ஒப்படைப்பதன் மூலம் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரது உயிருக்கும் முழுப்பாதுகாப்பை வழங்கும் பொறுப்பினை இந்திய அரசாங்கம் ஏற்கின்றது என்பதை வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.


(Reference : Intervention in Sri Lanka : the IPKF Experience Retold by Major General Harkirat Singh (Retd)


வளரும்.