Wednesday, April 27, 2011

மாணவிகளிடம் சில்மிஷம் : போலீஸ்காரருக்கு செருப்படி.

கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி இன்று காலை ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சில் 3 கல்லூரி மாணவிகள் ஒரு இருக்கையில் அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு பின்னால் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் உட்கார்ந்து இருந்தார்.

அந்த நபர் முன் இருக்கையில் அமர்ந்து இருந்த மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். மாணவிகள் இருக்கையின் முன் பகுதிக்கு சென்றாலும் அந்த நபர் விடாமல் தனது சில்மிஷத்தை அரங்கேற்றி வந்தார்.

அந்த நபரின் சில்மிஷம் அதிகமானதால் அந்த 3 மாணவிகளும் வேறு இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டனர். ஆனாலும் அந்த நபர் அந்த இருக்கை அருகே சென்றும் அந்த மாணவிகளிடம் சில்மிஷம் செய்தார்.

மாணவிகள் அவரை முறைப்பார்த்து திட்டினர். ஆனாலும் அந்த நபர் இதைப்பற்றி கண்டு கொள்ளாமல் அத்துமீறலில் இறங்கியுள்ளார்.

பஸ் தர்மபுரி பஸ் நிலையத்திற்கு வந்து நின்றது. அப்போது 3 மாணவிகளும் கீழே இறங்கி கொண்டனர். அந்த நேரத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய அந்த நபரை 3 மாணவிகளும் சுற்றிவளைத்து தாங்கள் அணிந்திருந்த செருப்பால் சரமாரியாக அடித்தனர்.

இதைப்பார்த்த மற்ற பயணிகள் அந்த மாணவிகளிடம் ஏன் அடிக்கீறிர்கள் என்றனர். அப்போது நடந்த விபரங்களை மாணவிகள் கூறியதும், அருகில் இருந்த பஸ் பயணிகள் அனைவரும் சேர்ந்து தாக்க தொடங்கினர்.

வலி தாங்க முடியாத அந்த நபர் தான் போலீஸ்காரர் என்று கூறிக்கொண்டே அவர்களிடம் இருந்து தப்பி தர்மபுரி பஸ்நிலையத்தில் உள்ள போலீஸ் புறக்காவல் நிலையத்திற்குள் ஓடி ஒளிந்தார்.

இதையடுத்து 3 மாணவிகளும் தங்களது செல்போனில் அந்த சில்மிஷ போலீஸ்காரரை போட்டோ எடுத்தனர். மேலும் உன்னை சும்மா விட மாட்டோம் போலீசில் உன்மீது புகார் கூறுகிறோம் என்றனர். இந்த சம்பவம் காரணமாக பஸ்நிலையம் முழுவதுமே பரபரப்பாக காணப்பட்டது.

அப்போது அங்கு வந்த போலீசார் மற்றும் பஸ்நிலைய தாதாக்கள் சிலர் அந்த மாணவிகளை பார்த்து நீங்கள் படிக்கின்ற மாணவிகள் போலீசில் புகார் செய்தால், உங்கள் படிப்பு வீணாகி விடும். போய் விடுங்கள், இந்த பிரச்சினையை இத்துடன் முடித்துக்கொள்ளுங்கள் என்று கூறி அந்த மாணவிகளை புகார் கொடுக்க விடாமல் அனுப்பி வைத்தனர்.

நடிகர் கார்த்தி திருமணம்.


பருத்திவீரன், பையா, ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல படங்களில் நடித்து முன்னணி இடத்தில் இருக்கும் நடிகர் கார்த்தியின் திருமணம் முடிவாகியுள்ளது.

ஈரோட்டைச்சேர்ந்த பெண்ணை கரம் பிடிக்கிறார்.

இது குறித்து கார்த்தியின் தந்தை சிவக்குமார், ‘’ஈரோட்டைச்சேர்ந்த ரஞ்சனியை கார்த்தி திருமணம்

செய்கிறார். மணப்பெண் ரஞ்சனி எம். ஏ. ஆங்கில இலக்கியத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். ஜூலை 3ம் தேதி கார்த்தி -ரஞ்சனி திருமணம் நடைபெருகிறது’’ என்று அறிவித்துள்ளார்

யாருக்காக இந்த ஐ.நா. அறிக்கை?


இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான தமது அறிக்கையை ஐ.நா. நிபுணர் குழு, செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளித்து உள்ளது. இந்த அறிக்கை முழுமையாக வெளியிடப்படப்போவதாகவும், கிடப்பில் போடப்படவிருப்பதாகவும் பலவிதமான செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன.

இதனிடையே, இந்த அறிக்கை ஏதோ தமிழர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி போலவும், இத்தோடு தமிழர்களுடைய பிரச்சினைகள் யாவும் தீர்ந்துவிடும் என்பது போலவும் சில உள்நாட்டு, வெளிநாட்டுத் தமிழ்த் தரப்புக்களும், ஊடகங்களும் இதற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து மாறி மாறி கருத்து வெளியிட்டு வருகின்றன.

அறிக்கையின் முக்கியத்துவம்

இறுதி யுத்த காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பல்வேறு போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்களும் வெளிப்படையாக உலகளவில் முக்கிய தரப்பு ஒன்றிடமிருந்து வெளியிடப்பட்டிருப்பது இந்த அறிக்கையின் முக்கிய அம்சம். இதில், அரசாங்கத் தரப்பு மட்டுமன்றி, புலிகள் தரப்பு மேற்கொண்ட குற்றங்க ளையும் அது விலாவாரியாகப் பட்டியலிட்டுள்ளது.

அரச படைகள் ஷெல் தாக்குதல்கள், உணவுத் தடை, யுத்தப் பகுதிகளிலிருந்து வந்த மக்களைத் துன்புறுத்தியமை, புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டது என்றால, புலிகள் தரப்பும் பொதுமக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தியமை, அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு தப்பியோட முயன்றவர்களைச் சுட்டுக்கொன்றமை, சிறுவர்களைப் பலாத்காரமாகப் படையில் சேர்த்தமை உள்ளிட்ட குற்றங்களைப் புரிந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

இந்த அறிக்கையில் கூறப்பட்ட விடயங்கள் எதுவும் இப்போதுதான் தெரிய வந்துள்ள புதிய விடயங்கள் என்று சொல்வதற்கில்லை. போர் நடைபெற்ற பகுதி களில் வாழ்ந்த மக்களும், அவர்கள் மூலமாக ஏனையோரும் அறிந்திருந்த விடயங்களே, ஐ.நா. அறிக்கையாக வந்திருக்கிறது. புலிகள் தரப்பு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் பற்றி வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருப்பதே இதில் புதிதாக உள்ளது.

நோக்கம் என்ன?

இறுதிப் போர்க் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக இப்போது அக்கறைப்படும் ஐ.நா., போர்க்குற்றங்கள் நடைபெற்ற காலத்தில் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது ஏன்? இப்போது என்ன புதிய அக்கறை வந்துள்ளது?

உச்சக்கட்டப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில், புலம்பெயர் தேசங்களெங்கும் வீதிகளில் இறங்கிப் போரை நிறுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு எந்தத் தரப்பும் செவிமடுக்கவில்லை. மக்களைக் காப்பாற்றுவதற்கு அப்போது ஐ.நா.வோ, அல்லது எந்தவொரு மேற்குலக நாடோ முன்வரவில்லை.

மக்கள் செத்துக்கொண்டிருக்கும்போது வாளாதிருந்தவர்கள், இப்போது திடீர் அக்கறை கொள்ளும் நோக்கமென்ன? இந்த அறிக்கையும், இதன் மூலமாக எடுக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகளும், இறந்துபட்டவர்களை மீட்டுத் தருமா என்ன?

போரை நடத்தியவர்கள்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை இலங்கை அரசாங்கத்தோடு சேர்ந்து முழு உலகமுமே நடத்தியது என்பதுதான் உண்மை. புலிகளின் ஆனையிறவு முகாம் தாக்குதல், கட்டுநாயகா விமானத்தளத் தாக்குதல் போன்றவற்றால் விழித்தெழுந்த உலக வல்லரசுகள், விடுதலைப் புலிகளை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவே போர்நிறுத்த உடன்படிக்கை ஒன்று ஏற்பட வழிசெய்தனர்.

புலிகள் அதைப் புறந்தள்ளி போர் வழிமுறையை மீண்டும் நாடியபோது, அவர்களை அழித்துவிடக் முடிவு செய்தனர்.

ஏன்?

இந்துசமுத்திரப் பிராந்தியம் என்பது முழு உலகத்தினதும் முக்கியமான கப்பல் போக்குவரத்து மார்க்கம். இதனால்தான் காலனித்துவக் காலம் முதல் உலக நாடுகள் இலங்கை மீது ஒரு கண் வைத்து வருகின்றன.

இந்த இந்துசமுத்திரப் பிராந்தியத்திலுள்ள இலங்கை என்ற குட்டித் தீவில், ஒரு அரசு அல்லாத அமைப்பு, வான்படை, கடற்படை, பீரங்கிப் படைகள், தற்கொலைப் படை என்று அதீத பலத்துடன் இருப்பதை எந்த நாடும் விரும்பவில்லை. அரசாங்கம் ஒன்றைப் போலன்றி, அரசு அல்லாத அமைப்பொன்றை எந்தவொரு சர்வதேச சட்டங்களும் கட்டுப்படுத்தாது. இந்த நிலையில், அத்தகைய அமைப்பிடமிருக்கக்கூடிய அதீத போர்வலு, முழு உலகுக்குமே ஆபத்தாகிவிடும் என்பதே உலக வல்லரசுகளின் கணி்ப்பாக இருந்தது.

இதனாலேயே, போர்நிறுத்த உடன்படிக்கை, பேச்சுவார்த்தை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு நோர்வே மூலமாக மேற்குலகம் அதிக பணத்தையும், முயற்சிகளையும் அள்ளிக் கொட்டியது. நீண்ட காலப் பேச்சுவார்த்தைகள் மூலம் விடுதலைப் புலிகளின் போர் வலுவைக் குறைத்து அல்லது சிதைத்து, ஏதோவொரு தீர்வை ஏற்படுத்துவதன் மூலம் தொடர்ந்து போர் நடைபெறாமல் செய்வது அவர்களது நோக்கமாக இருந்தது.

ஆனால், மேற்குலகின் செல்லப்பிள்ளையாக இருந்த ரணில் விக்கிரமசிங்காவை தேர்தலில் தோற்கச் செய்து, தொடர்ந்து மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் காலத்தில் மீண்டும் போரை ஆரம்பிப்பதற்கான வழிமுறைகளை விடுதலைப் புலிகள் கடைப்பிடித்தபோது, சாம, பேத, தானம் கடந்து, தண்டமே ஒரே வழி என்ற முடிவுக்கு உலக வல்லரசுகள் வந்துவிட்டன.

இந்த உலக வல்லரசுகள் அனைத்தினதும் ஒத்துழைப்புடன்தான் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முன்னெடுக்கப்பட்டது. அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்கு படைக்கல உதவிகளையும், பயிற்சிகளையும், கடற் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், புலனாய்வுத் தகவல் மற்றும் சற்றலைட் தகவல் உதவிகளையும் வழங்கின. இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.

அரசியல் இராஜதந்திர நகர்வுகளை அதன் வழியிலேயே எதிர்கொள்ளாமல் போர் வழியைத் தெரிவுசெய்த விடுதலைப் புலிகள், இந்த அனைத்துலகப் போர் முகத்துக்கு முகம் கொடுக்க முடியாமல் தோற்றுப்போக நேர்ந்தது.

புதிய சூழல்

எனினும், போரின் இறுதி நாட்கள் மற்றும் போருக்குப் பிந்திய சூழலை இந்தியாவும், சீனாவும் வேகமாகத் தமக்குச் சாதகமாக்கிக்கொண்டுவிட்டன. இதனால், இதுவரை காலமும் மேற்குலகின் பிடிக்குள் இருந்த இலங்கை, அதிலிருந்து விடுபட்டு இந்திய, சீன, ரஷ்ய ஆதரவுடன் அதற்குச் சவால் விட முடிந்தது.

இதுவே மேற்குலகுக்கு ஏற்பட்ட சங்கடம். இதனால்தான் இப்போது அவர்களுக்குப் போர்க்குற்ற விசாரணை தேவைப்படுகிறது. போர்க்குற்ற விசாரணை என்ற நெருக்குவாரத்தின் மூலம் இலங்கை அரசாங்கத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் முடிந்தளவுக்குக் கொண்டுவருவதே இதன் பிரதான நோக்கம்.

மேற்குலகின் இந்த நெருக்குவாரத்துக்கு ஓரளவுக்கேனும் இலங்கை அரசு பணிந்து அசைந்து கொடுக்குமானால், இந்தப் போர்க்குற்ற விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டுவிடும். அரசியலில் இதெல்லாம் சகஜம்.

இந்த சர்வதேச அரசியல் யதார்த்தம் புரியாமல், ஐ.நா. வின் நிபுணர் குழு அறிக்கையால் ஏதோ தமிழர்களுக்கு நீதி கிடைத்துவிட்டதுபோல் மகிழ்ச்சி யடைவது சுத்த மடமைத்தனம். நீதி கிடைக்கவேண்டும் என்பது நியாயமான கோரிக்கையேயாயினும், மேற்குலகின் நலன்களுக்காக முன்னெடுக்கப்படும் இந்த அரசியல் சாணக்கியத்தால் தமிழர்களுக்கு நீதி கிடைத்துவிடும் என்று பகல் கனவு காண்பது முட்டாள்த்தனம்.

ஒருவேளை இந்த விசாரணைகள் மூலம் இலங்கை அரசாங்கம் தண்டிக்கப் பட்டுவிட்டால், அதன்மூலம் தமிழர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிடுமா என்ன? அதற்கு என்ன உத்தரவாதத்தை இந்த அறிக்கை தமிழர்களுக்கு வழங்குகிறது?

எப்படித் இலங்கைத் தீவில் தமிழர் பிரச்சினையை இலங்கை, இந்திய, மேற்குலக நாடுகள் இத்தனை காலமும் தமது நலன் நோக்கிலிருந்து பந்தாடி வந்தனவோ, அதுவே இப்போதும் மீண்டும் அரங்கேறுகிறது. இதைப் பார்த்து மயங்கினால் இன்னும் ஆபத்துக்களை நோக்கித்தான் தமிழர்கள் செல்லவேண்டியிருக்கும்.

பாதிக்கப்பட்ட மக்கள் VS புலம்பெயர் மக்கள்

மேற்குலக நாடுகளின் நலன்களை மையப்படுத்தும் இந்த அறிக்கை, அந்த நாடுகளில் அதிகளவில் வாழும் புலம்பெயர் தமிழர்களை அதிகளவில் மகிழ்வித்திருப்பதை அவதானிக்க முடிகிறது. மேற்குலக நாடுகளில் தங்கியிருக்கும் இந்த மக்களுக்கு அந்த நாடுகளின் நலன்களும் அவசியமே என்பதால், அவர்கள் பக்கத்தில் இது சரியாக இருக்கலாம்.

ஆனால், இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களுடைய நிலைமை அப்படியல்ல. மேற்குலகின் நலன்களுக்கோ அன்றி வேறெந்த நாடுகளின் நலன்களுக்கோ துணைபோவதால் அவர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு கிட்டிவிடப் போவதில்லை. இன்னும் மோசமாகவே செய்யும்.

போரின் இறுதி நாட்களில், ஒரு கவளம் சோற்றுக்கும் வழியின்றி, தினம்தினம் பிணங்களாகக் குவிந்துகொண்டிருந்தபோது திரும்பிப் பார்க்காத தேசங்களும், சர்வதேச மனித உரிமைகளும், சட்டங்களும், எல்லாம் முடிந்தபின் இப்போது விழித்தெழுவதால் என்ன ஆகிவிடப்போகிறது என்பதே இவர்களது கேள்வியாக இருக்கிறது.

சட்டம் எப்போதும் குற்றம் புரிபவர்களைத் தண்டிப்பதிலேயே குறியாக இருக்கும். இனிமேல் அத்தகைய குற்றங்கள் நடப்பதைத் தடுப்பது அதன் நோக்கம் என்று அது வக்காளத்து வாங்கும். ஆனால், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர் போனபின், எஞ்சியிருப்பவர்களின் நிலை பற்றி சட்டங்கள் ஒருபோதும் பேசுவதில்லை.

கொலைசெய்தவரைக் கழுவேற்றுவதால் இறந்துபோனவர் உயிர்த்துவிடுவாரா? ஐ.நா. கூறுவதுபோல் மக்கள் மீது ஷெல் அடித்தவர்கள் மீதும், தப்பிவர முனைந்த வர்களைச் சுட்டுக் கொன்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா என்ன?

நடந்துபோன விடயங்களுக்கு அரசாங்கத்தையோ, புலிகளையோ குற்றஞ் சாட்டிக்கொண்டிருப்பது, ஏசி அறைகளுக்குள்ளிருந்து அறிக்கை தயாரித்து அளவளாவுபவர்களுக்கு வேண்டுமானால் சௌகரியமாக இருக்கலாம்.

போரில் இழந்தவர்களும், இழந்தவைகளும் போக, மிஞ்சியிருப்பவர்கள் தமது வாழ்வைக் கட்டியெழுப்ப ஏதாவது உருப்படியாகச் செய்ய முடிந்தால், அதுவே இப்போது புண்ணிய காரியமாக இருக்கும்.

http://www.jaffnatoday.com/?p=770

தமிழக எல்லையில் எண்டோசல்பான் : நடிகர் கலாபவன் மணி ஆய்வு.


கோவை மாவட்டம், வால்பாறையில் நடிகர் கலாபவன்மணி செய்தியாளர்களிடம்,

கேரளாவில் பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்தாக பயன்படுத்தப்படும் எண்டோசல்பான் நிலத்தையும், நீரையும் பாதித்துள்ளது. விவசாயிகள் பலர் உடல், மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இந்த மருந்தை தடை செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட விவசாயிகள், தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும் கேரளாவில் முதல்வர் அச்சுதானந்தன் உண்ணாவிரதம் இருந்தார். இதில் நடிகர்கள், எழுத்தாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர். எண்டோசல்பான் பூச்சி மருந்தை தடை செய்ய நடிகர்களும் வலியுறுத்தி வருகிறோம்.

வால்பாறைக்கு சூட்டிங் லொகேஷன் பார்க்க வந்தேன். வரும் வழியில் சோலையார் அணை அருகே கேரள பகுதியான மழுக்குப்பாறையில் உள்ள தேயிலை தோட்டங்களில் எண்டோசல்பான் பயன்பாடு மற்றும் பாதிப்பு குறித்து நானே ஆய்வு நடத்தினேன்.

எண்டோசல்பான் பூச்சி மருந்தை தடை செய்யக்கோரும் போராட்டத்திற்கு வலு சேர்ப்பதற்காக தன்னார்வமாக இதை மேற்கொண்டேன். அங்கு கிடைத்த தகவலை கேரள அரசுக்கு தெரிவிப்பேன்’’என்று கூறினார்.

தமிழக எல்லைப்பகுதியில் அமைந்த கேரள தேயிலை தோட்டங்களில் கலாபவன்மணி ஆய்வு மேற்கொண்டது வால்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் பட்டியலை இலங்கை அரசு வெளியிடவேண்டும் : ஐ.நா. விசாரணை குழு வற்புறுத்தல்.

சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள   விடுதலைப்புலிகள் பட்டியலை இலங்கை அரசு வெளியிடவேண்டும்:   ஐ.நா. விசாரணை குழு வற்புறுத்தல்

இலங்கையில் இறுதி கட்ட போரின்போது நடந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.நா, குழு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதில் இலங்கை போர் குற்றம் செய்ததாக சுட்டிகாட்டி இருப்பதுடன் இனி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு பரிந்துரைகளையும் செய்து உள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

இலங்கை அரசும், ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து பின்வரும் நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசு நீதியான விசாரணையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.

இலங்கை அரசின் விசாரணைகளை கண்காணிக்க ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அனைத்துலக கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

கண்காணிப்பு குழு இலங்கை அரசின் விசாரணைகளை உன்னிப்பாக கண்காணித்து ஐ.நா. பொதுச் செயலாளருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஆதாரங்களை சேகரித்து, அதனை பாது காத்து வழங்க வேண்டும்.

இலங்கை அரசினாலும், அதனுடன் இணைந்து இயங்கும் துணை ராணுவக் குழுக்களினாலும் மேற் கொள்ளப்படும் வன்முறைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

போரில் கொல்லப்பட்டவர்களின் இறுதி சடங்குகளை மேற்கொள்ளும் வகையில் அவர்களின் எச்சங்கள் வழங்குவதுடன் அதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

காணாமல் போனவர் கள் மற்றும் இறந்தவர் களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

போரில் தப்பியவர்களுக்கு சமூக மற்றும் உள வியல் உதவிகளை வழங்க வேண்டும்.

தடுப்புக்காவலில் உள்ளவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு அவர்கள் விரும்பிய இடங்களில் குடிய மர்த்தப்பட வேண்டும்.

விடுதலை செய்யப்பட்டவர்கள் தமது இயல்பு வாழ்வுக்கு திரும்பும்வரை தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

காணாமல் போனவர்கள் தொடர்பாக அரசு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

அவசர காலச்சட்டம், பயங்கரவாத தடுப்புச்சட்டம் என்பன நீக்கப்பட வேண்டும். அல்லது அதனை அனைத் துலக தராதரத்திற்கு மாற்ற வேண்டும்.

தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப்புலிகள் பெயர் விபரங்களும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடமும் வெளியிடப்பட வேண்டும்.

அவர்களை பார்வை யிடுவதற்கு உறவினர் களும், வக்கீல்களும் அனுமதிக் கப்பட வேண்டும்.

நீதிமன்றத்தின் மூலம் அவர் களுக்கு நீதி வழங்கப் பட வேண்டும். * குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படு வதுடன், ஏனையவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

சுதந்திரமான நடமாட்டங்களை தடை செய்யும் இலங்கை அரசின் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்.

பொது அமைப்புக் களுடன் இணைந்து சமூகப் பிரச் சினைகளை இலங்கை அரசு ஆராய வேண்டும். அதற்கு நல்லிணக்க ஆணைக் குழுவின் தகவல்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

போரின் இறுதி நாட்களில் இடம் பெற்ற பொது மக்களின் இழப்புக்களுக்கு அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

இறுதிகட்ட போரின் போது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளில் பாதிக்கப் பட்டவர்களுக்கு இலங்கை அரசு அனைத்துலக தரத்தில் சிறப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.

2009-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன் வைத்த தீர்மானத்தை ஐ.நா. மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்.

மனித உரிமைகளை மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளை நடை முறைப்படுத்துவது தொடர் பாக போரின் போதும், போரின் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கனிமொழி மீது குற்றப் பத்திரிகை: சட்டப்படி சந்திப்போம் ; கருணாநிதி தலைமையில் நடந்த தி.மு.க. உயர்நிலை குழுவில் தீர்மானம்.

கனிமொழி மீது குற்றப் பத்திரிகை: சட்டப்படி சந்திப்போம்; கருணாநிதி தலைமையில் நடந்த தி.மு.க. உயர்நிலை குழுவில் தீர்மானம்

ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான 2-வது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. அதில் கனிமொழி எம்.பி. பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருகிற 6-ந்தேதி கோர்ட்டில் ஆஜர் ஆகும்படி சி.பி.ஐ. கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.

இதுகுறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் இன்று நடைபெறும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று காலை தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் கூடியது.

காலை 10 மணிக்கு முதல்- அமைச்சர் கருணாநிதி வந்தார். அதன் பிறகு அவரது தலைமையில் கூட்டம் தொடங்கியது. தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன், துணை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி மு.க.அழகிரி, கனிமொழி எம்.பி., ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, கோ.சி. மணி, வீரபாண்டி ஆறுமுகம், டி.ஆர்.பாலு, பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன், டி.கே.எஸ். இளங்கோவன், கல்யாணசுந்தரம், சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஸ்பெக்ட்ரம் குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர் இடம் பெற்றுள்ளதால் ஏற்பட்டுள்ள பிரச்சினை, அதை எப்படி சட்டப்படி அணுகுவது, இன்றைய அரசியல் நிலவரம், எதிர்கால நடவடிக்கைகள் உள்பட பல்வேறு கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஸ்பெக்ட்ரம் பிரச்சினை குறித்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

பூதத்தைப் பூனைக்குட்டி விழுங்கி விட்டதாகக் கூறுவது போல, அனுமானமாக பலபல கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி விட்டதாக இந்தியாவின் தலைமைக் கணக்காயர் தெரிவித்தது முதலாக, இந்தப் பிரச்சினையில் அரசியல் சதுரங்கம் ஆடுவதற்கு ஓர் ஆதிக்க வட்டாரம் தொடர்ந்து முயற்சித்து வருவதை நாடறியும்.

2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை வழங்கியதில் பின்பற்றப்பட்ட நடைமுறையால், அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டின் மீது சி.பி.ஐ. விசாரணை தொடங்கப்பட்டு, அதன் தொடர்பாக தொலைத் தொடர்பு துறை மந்திரி ஆ.ராசாவை கைது செய்து திகார் சிறையில் வைத்துள்ளதோடு, பல்வேறு நிறுவனங்களின் இயக்குநர்களையும் கைது செய்துள்ள நிலையில், அவற்றில் ஒரு நிறுவனத்தினிடமிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்காக 200 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டு, பின்னர் வட்டி யுடன் திரும்பச் செலுத்தியுள்ள விவரத்தை, வருமான வரித்துறை சான்று ஆவணங்களுடன் ஒப்படைத்திருப்பினும், கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் பங்குதாரரான மாநிலங்கள் அவை உறுப்பினர் கனிமொழியையும், இயக்குநர் சரத்தையும் சி.பி.ஐ. துறையினர் நீதிமன்றத்திற்கு அளித்த 2-வது குற்றப்பத்திரிகையில் சேர்த்திருக்கும் செய்தி இந்தக் குழுவை வியப்பில் ஆழ்த்துகிறது.

2-ஜி அலைக்கற்றை வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகள் வெளிவரத் தொடங்கியதில் இருந்து, எப்படியாவது தி.மு.க. தலைமை மீது பழி சுமத்துவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பாக கருதி, தொடர்ந்து பல ஏடுகளும், ஊடகங்களும் செய்தி பரப்பி வருவதுடன், இதை ஒரு அரசியல் பிரச்சினையாக்கி, இன்று தொடரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின ரிடையே அவநம்பிக்கையை உருவாக்கிடவும், பிரச்சினையைப் பெரிதுபடுத்தி மாறுபாடுகளை வளர்த்து கூட்டணியை உடைக்கும் நோக்கத்துடனேயே ஊழல் செய்வதையே தமது கலாச்சாரமாகவும், வாழ்க்கை முறையாகவும் கொண்ட சில அரசியல் கட்சி தலைவர்களும் திராவிட இயக்கத்தின் ஆணிவேராக உள்ள தி.மு.க.வையும் அதன் செல்வாக்கு மிகுந்த தமிழக முதல்வர் தலைவர் கலைஞரையும், எப்படியேனும் அரசியல் தலைமையில் இருந்து வீழ்த்திவிட வேண்டும் என்னும் அவலாசை கொண்டு அலையும் ஏடு களும், இந்தச் செய்தியை மூல தானமாகக் கொண்டு, கழகத்திற்கு அதிர்ச்சி ஏற் படுத்தி, அதைக் கலகலக்கச் செய்யலாம் என்னும் உள் நோக்கத்துடன், பல வகை யிலும் செயல்படுவதை, ஊடகங்களின் நிருபர்கள் எழுப்பும் கேள்விகளாலும், வெளியிடும் செய்திகளாலும் அறியலாம்.

அப்படிப்பட்ட ஒரு பிரச்சார மாயைக்கு கழகம் இரையாகாது என்பதுடன், எதையும் அளவறிந்தும், முறை அறிந்தும், செயற் படுவதன் மூலம் உண்மையை நிலைநாட்டிடும் சிறப்புடைய தி.மு.க., இந்த வழக்கிலும், உண்மையை நிலைநாட்ட முடியும் என்று நம்புவதுடன், அதற்குரிய சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்வதே நம் கடமை என்று இந்த உயர்மட்டக் குழு தீர்மானித்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதென முடிவெடுக்கிறது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


வளர்ச்சியை பொறுக்க முடியாமல் கனிமொழி மீது எதிர்ப்பு காட்டுகிறார்கள் : உயர் நிலை குழு கூட்டத்தில் கருணாநிதி பேச்சு.

வளர்ச்சியை பொறுக்க முடியாமல் கனிமொழி மீது எதிர்ப்பு காட்டுகிறார்கள்: உயர் நிலை குழு கூட்டத்தில் கருணாநிதி பேச்சு

தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் கனிமொழி பற்றி முதல்- அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-

என்னைப் பொறுத்த வரையில் நம்மை மக்களிடத்தில் காட்டிக் கொடுக்கின்ற சூழ்ச்சிக்கு என்றைக்கும் அடி பணிந்தவனல்ல. என்னைத் தலைவனாகக் கொண்டு இயங்குகின்ற இந்த இயக்கமும் அடி பணிய வேண்டு மென்று கருதுகிறவனும் அல்ல.

நானே கைது செய்யப்பட்டபோது கூட- என்னை இழிவான அடக்குமுறைகளுக்கு ஆளாக்கியபோது கூட அவைகளை சிரித்த முகத்தோடு தான் ஏற்றுக் கொண்டேன். இன்றைக்கு கனிமொழியை நான் இந்தக் கட்சியின் தொண்டர் என்ற முறையிலேதான் பார்க்கிறேனே தவிர, கனிமொழி என்னுடைய மகள் என்பதால் மாத்திரம் வளர்ச்சி பெற்றதாக யாரும் கருத முடியாது.

நான் இன்று காலையில் ஒரு புள்ளி விவரத்தை எடுத்துப் பார்த்தேன். அரசு சார்பில் வேலையில்லாதோருக்கு பணிகள் கிடைக்கப்பாடுபட்டிருக்கிறோம் என்ற போதிலும் -தொண்டறம் பேணும் அமைப்புக்களின் துணையுடன்; மாநிலங்களவை உறுப்பினர், கவிஞர் கனிமொழி அந்தந்த மாவட்ட அமைச்சர்களோடும், மாவட்ட ஆட்சியர்களோடும், தொழில் நிறுவனங்களோடும் இணைந்து, காரியாபட்டி, நாகர்கோவில், வேலூர், உதகமண்டலம், விருதுநகர், கடலூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் வேலை வாய்ப்பினைத் தேடித்தரும் முகாம்களை நடத்தி, இந்த அனைத்து இடங்களிலும் 2 லட்சத்து 33 ஆயிரத்து 712 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நேர் காணலுக்கு அழைக்கப்பட்டு, அவர்களில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 998 பேர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவர்களில் குறிப்பாக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 36 ஆயிரத்து 297 பேர்கள் -திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 22 ஆயிரத்து 408 பேர் - கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 19 ஆயிரத்து 98 பேர் - வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் 17 ஆயிரத்து 2 பேர் - து£த்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 16 ஆயிரத்து 663 பேர் -குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் 5 ஆயிரத்து 77 பேர் - நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 2 ஆயிரத்து 165 பேர் - காரியாப்பட்டியில் 1 ஆயிரத்து 196 பேர்.

இவ்வாறு வேலை வாய்ப்பு கிடைத்தவர்களை அணியில் 55 ஆயிரத்து 656 பேர்களின் வேலை வாய்ப்பு ஆய்விலே உள்ளது. இவர்களுக்கும் பணி கிடைப்பதற்கான வாய்ப்புக் கூறு கள் உள்ளன என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

எனவே கனிமொழி கருணாநிதியின் மகள் என்ற முறையிலே மட்டும் இந்த இயக்கத்திலே பயன்படவில்லை. அவர் தொண்டுள்ளத்தோடு பாடுபட்டு வருகிறார். இன்னும் சொல்லப்போனால், நாட்டுப்புற கலைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் காரணமாக அவருக்கு எந்த அளவுக்கு பெயரும், புகழும் ஏற்பட்டுள்ளது என்பதையெல்லாம் நான் நன்றாக அறிவேன்.

சென்னையிலே பல இடங்களில் மக்களைக் கவருகின்ற அளவிற்கு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. மேலும் குறிப்பாகவும் சிறப்பாகவும் கிறித்தவ பெருமக்கள் இந்த நிகழ்ச்சிகளின் வாயிலாக தங்களை இந்த இயக்கத்திலே ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த இயக்கத்தின் மீது அன்பைப் பொழிந்து கொண்டிருக்கிறார்கள். இதை யெல்லாம் பார்த்துப் பொறாமை காரணமாக, பொறுத்துக் கொள்ள முடியாமல், சகித்துக் கொள்ள முடியாமல் கனிமொழி மீது எதிர்ப்பைக் காட்டுகிறார்கள்.

இன்று காலையில் கூட இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு கனிமொழி தயக்கம் காட்டினார். ஏனென்றால் நூற்றுக்கணக்கான புகைப் படக் கருவிகளோடு செய்தியாளர்கள் வீட்டின் வாயி லிலே நின்று கொண்டு பல கேள்விகளைக் கேட்ககாத்துக் கொண்டிருந்த காரணத்தால் நானே நேரில் சென்று அழைத்துக் கொண்டு வந்தேன்.

அப்படிப்பட்ட நிலையில் நான் என்னுடைய மகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தோடு அல்ல -கட்சி சார்பாக கனிமொழியைக் காப்பாற்றுவது என்பது கட்சியின் செல்வாக்குக்கு ஊனம் வந்து விடாமல் பாதுகாப்பது தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கனிமொழி மாத்திரமல்ல, வீட்டிலே உள்ளவர்கள், அவருடைய தாயார் மற்ற உறுப்பினர்கள் வீட்டிலே படுகின்ற பாடு எனக்குத் தான் தெரியும். நான் மூன்று நாட்களாக அந்த வீட்டிற்கே செல்வதில்லை. கோபாலபுரத்திலேயே தங்கி விடுகிறேன். எனக்குள்ள சங்கடங்களை பெரிது படுத்தி, நான் என்றைக்கும் யாருக்கும் கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்பதை எடுத்துச் சொல்லத்தான் இதையெல்லாம் கூறினேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இலங்கை போர் குற்ற புதிய ஆதார படங்கள்.






















இலங்கையில் இறுதி கட்டப் போரில் படுகொலைசெய்யப்பட்ட சுமார் 134 பேரின் புகைப்படங்கள் தற்போது இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் வெளிவந்துள்ளது.

இப்புகைப்படங்களில் சிலர் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டது தெள்ளத் தெளிவாகக் காட்சியாக்கப்பட்டுள்ளது. மேலும் சில புகைப்படங்களில் எரிகுண்டுகளால் தாக்குதல் நடந்ததற்கான அடையாளங்களும் காணப்படுகிறது.

பெண் போராளிகளை, மானபங்கப்படுத்தியுள்ள இலங்கை இராணுவம் அவற்றை வீடியோவாகவும் எடுத்துள்ளது. செல்போனில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் இலங்கை இராணுவம் சுடும் துப்பாக்கிச் சூட்டுச் சந்தங்களும் கேட்பதோடு, பெண்கள் உடைகளைக் களைந்து அவர்களை நிர்வாணமாக்கி இராணுவம் இழுத்துச்செல்கின்றமையும் பதிவாகியுள்ளது.

நித்யானந்தாவிற்கு அனுமதி மறுத்த சாய்பாபா உறவினர்கள் .


சத்ய சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்த நித்யானந்தா தனது பாதுகாவர்களுடன் பந்தாவாக வந்ததால் அந்தப் பகுதியில் தேவையற்ற சலசலப்பு ஏற்பட்டது. தன்னை விவிஐபிக்கள் இருந்த வரிசையில் அனுமதிக்குமாறு அவர் கோரியதற்கும் சாய்பாபா உறவினர்கள் மறுத்துவிட்டனர்.

பிரசாந்தி நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சாய்பாபா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நேற்று முக்கிய அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள், பீடாதிபதிகள் உள்பட பலர் வந்தனர். அவர்களுக்கு தனி வரிசை ஒதுக்கப்பட்டிருந்தது. இவ்வரிசையில் செல்வோர் சாய்பாபா உடல் அருகே சென்று அஞ்சலி செலுத்தலாம்.

சாதாரண பொதுமக்கள் பல மீட்டர் தூரம் தள்ளி நின்றுதான் உடலை பார்க்க முடியும். இந்நிலையில் ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கி, கைதாகி இப்போது ஜாமீனில் வந்துள்ள நித்யானந்தாவும் சாய்பாபா உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார். அப்போது அவருடன் 4 பாதுகாவலர்களும் வந்தனர்.

பாதுகாவலர்கள் புடைசூழ அவர் அஞ்சலி செலுத்தச் சென்றார். விவிஐபிக்கள் இருந்த வரிசையில் தன்னை அனுமதிக்குமாறு அவர் கோரியதற்கு பாபாவின் ஊழியர்களும் உறவினர்களும் அனுமதி மறுத்துவிட்டனர். அவருடன் சென்ற பாதுகாவலர்களை தடுத்து நிறுத்திவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சிறிது நேரம் சாய்பாபா உடல் அருகே அஞ்சலி செலுத்திய நித்யானந்தா, வெளிய்றும் போதாவது விவிஐபி கேட் பக்கம் போக முயன்றார். ஆனால் அங்கும் தடுக்கப்பட்டு, பொதுமக்கள் வெளியேறும் வழியாகவே செல்லுமாறு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் வேகமாக ஆசிரமத்தை விட்டு வெளியேறினார்.

இதுகுறித்து சாய்பாபா பக்தர் ஒருவர் கூறும் போது, “சாய்பாபா உடலுக்கு அஞ்சலி செலுத்த மிகப் பெரிய தலைவர்கள் வந்தனர். அவர்கள் யாரும் தங்களுடன் பாதுகாவலர்களை பாபா உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அழைத்து செல்லவில்லை.

ஆனால் நித்யானந்தா மட்டும் பாதுகாவலர்களுடன் உள்ளே சென்றது சரியல்ல. தன்னை அவர் விவிஐபி வரிசையில்தான் அனுமதிக்க வேண்டும் என்றார். அதற்கும் நாங்கள் அனுமதிக்கவில்லை. அவர் வந்ததை எந்த சாய் பக்தரும் விரும்பவில்லை. பாபாவின் உறவினர்கள் மிகப் பெரிய சங்கடத்துக்கு உள்ளாயினர் அவரது வருகையால்" என்றார்.

இலங்கையின் போர்க் குற்றம்-மத்திய அரசுக்கு திமுக 'திடீர்' நெருக்கடி.


இலங்கை அரசின் போர்க் குற்ற செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயர் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ளது. இந் நிலையில் திமுக இன்று தனது உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டியது.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கை போர்க்குற்ற செயல்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி,

இலங்கை போர் குற்றங்களுக்காக ஐ.நா. அமைப்பு நடத்திய விசாரணையில் இலங்கை கடற்படையினர் ஈழத்தமிழர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் நடைபெற்று இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஐ.நா. குழு தெரிவித்துள்ளது. இறுதி கட்டப்போரில் 40 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த போர்க்குற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை திமுக வலியுறுத்துகிறது. தமிழர்கள், சிங்களர்கள் இடையே சமத்துவ நிலை ஏற்பட வழி வகுக்கப்பட வேண்டும்.

போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. குழு பரிந்துரைத்தவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். போர் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்று மத்திய அரசை திமுக உயர்நிலை செயல்திட்ட குழு வலியுறுத்துகிறது.

இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கருணாநிதி தெரிவித்தார்.

தனி ஈழமே திமுகவின் குறிக்கோள்:

முன்னதாக கூட்டத்தில் பேசிய கருணாநிதி, தனி ஈழமே திமுகவின் குறிக்கோள். இலங்கை போர் குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைப் போரில் மனித உரிமை மீறலுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை தேவை. சர்வதேச ஆணையம் விசாரிக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றார்.

காங்கிரஸுக்குப் பதிலடியாக இலங்கை விவகாரம்:

சிபிஐ மூலம் மத்திய அரசு திமுகவுக்கு அடுத்தடுத்து நெருக்கடி கொடுத்து வருவதைத் தொடர்ந்து பதிலடியாக தற்போது இலங்கை விவகாரத்தை கையில் எடுத்துள்ளது திமுக என்று தெரிகிறது.

இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.நா. நிபுணர் குழு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து இதுதொடர்பாக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தீர்மானம் போட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் இதுதொடர்பாக திமுக போராட்டங்களையும் அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சத்ய சாய்பாபா உடல் அடக்கம்.


மறைந்த சத்ய சாய்பாபாவின் பூத உடல் பிரசாந்தி நிலையத்தில் அவர் பக்தர்களை சந்திக்கப் பயன்படுத்திய இடத்துக்கு வெகு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

முழு அரசு மரியாதையைத் தொடர்ந்து வேதிக சம்பிரதாயப்படி 'சாய்' மந்திரங்கள் முழங்க சாய்பாபாவின் சகோதரர் மகன் ஆர்.ஜே.ரத்னாகர் இறுதிச் சடங்குகளைச் செய்தார். அதன் பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கில் ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ஆளுநர்கள் இ.எஸ்.எல். நரசிம்மன் மற்றும் சிவராஜ் வி.பாட்டீல், பாஜக தலைவர் எல்.கே.அத்வானி, வெங்கையா நாயுடு, பண்டாரு தத்தாத்ரேயா, தெலுங்கு தேசத் தலைவர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிர முன்ளாள் முதல்வர் அசோக் சவாண் மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக பல்வேறு உடல்நலக் கோளாறுகள் காரணமாக ஏறக்குறைய ஒரு மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாய்பாபா கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார்.

பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், மாநில முதல்வர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்த கடந்த 2 நாட்களாக புட்டபர்த்திக்கு வந்தவண்ணம் இருந்தன

கலைஞர் டிவியை இயக்குவது கனிமொழி தான் : சிபிஐ.


முதல்வர் கருணாநிதியின் மகளும் திமுக எம்பியுமான கனிமொழி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான முறைகேட்டில் சதிக்கு உடந்தையாக இருந்ததாக சிபிஐ தாக்கல் செய்த துணைக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 7 மற்றும் 11 ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது

கலைஞர் டிவி பங்குதாரரான கனிமொழி மற்றும் அதன் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி ஆகிய இருவரும் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை கடந்த 2ம் தேதி தாக்கல் செய்திருந்தது. அதில் முன்னாள் அமைச்சர் ராசா உட்பட ஒன்பது பேர் மீது 5 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி 120 பி (கிரிமினல் சதித் திட்டம் தீட்டுதல்), ஐபிசி 420 (ஏமாற்றுதல்), ஐபிசி 468 (போலி ஆவணங்களைத் தயாரித்தல்), ஐபிசி 471 (போலி ஆவணங்களை பயன்படுத்துதல்) மற்றும் இந்திய ஊழல் தடுப்புச் சட்டம் 1988 (அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தங்களுக்கு வேண்டப்பட்டோருக்கு ஆதரவாகச் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இந் நிலையில் டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன் சிபிஐ நேற்று தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில்,

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு லைசென்ஸை ஸ்வான் நிறுவனத்திற்கு வழங்கியதற்காக பிரதி பலனாக கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி லஞ்சம் தரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி லஞ்சம் பெற்றதாக ராசாவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல கனிமொழி, சரத்குமார் ஆகிய இருவர் மீதும் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர்கள் மீதும் கலைஞர் டிவிக்கு பணம் வழங்கியதாக டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் துணை நிறுவனமான குசேகான் மற்றும் சினியுக் நிறுவனங்களின் அதிகாரிகளான கரீம் மொரானி, ராஜிவ் அகர்வால் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த 5 பேர் மீதும், இந்திய குற்றவியல் சட்டம் 120 பி (ஊழல் தடுப்பு) பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன்படி ராஜாவின் மீது லஞ்சம் பெற்றதாகவும், கனிமொழி, சரத்குமார் ஆகியோர் மீது கிரிமினல் சதியில் ஈடுபட்டதாகவும், மொரானி, ராஜிவ் அகர்வால், அசீப் பல்வா ஆகியோர் மீது லஞ்சம் அளித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

48 பக்கங்கள் கொண்ட இந்தக் குற்றப் பத்திரிகையில், ஸ்பெக்ட்ரம் ஊழலின் பிரதான குற்றவாளியான ராஜாவுடன் அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் கனிமொழி தொடர்ச்சியாக தொடர்பில் இருந்தார். கலைஞர் டிவி துவக்கப்படுவதற்கு முக்கிய பங்காற்றினார். தொலைத்தொடர்புத் துறையை ராஜாவுக்கு திரும்பவும் கிடைக்கச் செய்ததில் மிக முக்கிய பங்கு வகித்தார். இப்போதும் அந்தத் தொலைக்காட்சியை இயக்குவதில் ('active brain') முக்கிய நபர் கனிமொழி தான் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த இரண்டாவது குற்றப் பத்திரிகையின் முகப்பில், 'சப்ளிமென்டரி-1'என்று கூறப்பட்டிருப்பதால் அடுத்தடுத்து மேலும் துணை குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

இந்த குற்றப் பத்திரிக்கையை ஏற்ற நீதிபதி சைனி, கனிமொழி மே 6ம் தேதி நீதி மன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். சரத்குமார், கரீம் மொரானி ஆகியோ ருக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டதோடு, ராஜிவ் அகர்வாலையும், அசீப்பல்வா வையும் செவ்வாக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்னொரு துணை குற்றப் பத்திரிகை அடுத்து மாதம் 30ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

40,000 தமிழரைக் கொன்று குவித்தது இலங்கை! ஐ.நாவின் அறிக்கை முழு விவரம் .


இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய இறுதிப் போரில் 40,000 தமிழர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர் என்றும், அனைத்து போர் விதிமுறைகளையும் அந்நாடு மீறிவிட்டதாகவும், போர் தொடர்பாக பொய்யான தகவல்களையே கூறி வந்ததென்றும் ஐநாவின் நிபுணர் குழு அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பான விசாரணை நடத்த ஐ.நா.சபை இந்தோனேசிய அட்டர்னி ஜெனரல் மார்சுகி தருஷ் மென் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது. அவர்கள் முழுமையாக விசாரணை நடத்தி 214 பக்க அறிக்கையை ஐ.நா. சபையிடம் தாக்கல் செய்தனர்.

இப்போது ஐ.நா.சபை இந்த அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

ஐ.நாவின் அறிக்கை முழு விவரம் :

http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf

ஐ.நா.அறிக்கை எதிரொலி: ராஜபக்சே தம்பி அமெரிக்கா பயணம் - இலங்கை அரசுக்கு ஆதரவு திரட்ட முயற்சி.

ஐ.நா.அறிக்கை எதிரொலி: ராஜபக்சே தம்பி அமெரிக்கா பயணம்- இலங்கை அரசுக்கு ஆதரவு திரட்ட முயற்சி

இலங்கை போர் குறித்த ஐ.நா. விசாரணை அறிக்கை வெளிவந்து இருப்பதை அறிந்து இலங்கை அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த அறிக்கையால் இலங்கை அரசு மீது போர் குற்ற விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போர் குற்ற விசாரணை நடக்காமல் தடுக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டு உள்ளது. இதற்காக அதிபர் ராஜ பக்சேவின் தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோதபயா ராஜபக்சே ரகசியமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா மற்றும் சில நாடுகளை தங்களுக்கு ஆதரவாக மாற்றும் முயற்சி யில் அவர் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

இறுதிப் போர் குறித்து பொய் தகவல்களைச் சொன்னது... 40,000 தமிழரைக் கொன்றது இலங்கை! - ஐநா.


இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய இறுதிப் போரில் 40,000 தமிழர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர் என்றும், அனைத்து போர் விதிமுறைகளையும் அந்நாடு மீறிவிட்டதாகவும், போர் தொடர்பாக பொய்யான தகவல்களையே கூறி வந்ததென்றும் ஐநாவின் நிபுணர் குழு அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது இலங்கை அரசு போர் விதிமுறை களை மீறி அப்பாவி மக்களை கொன்று குவித்ததாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பான விசாரணை நடத்த ஐ.நா.சபை இந்தோனேசிய அட்டர்னி ஜெனரல் மார்சுகி தருஷ் மென் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது. அவர்கள் முழுமையாக விசாரணை நடத்தி 214 பக்க அறிக்கையை ஐ.நா. சபையிடம் தாக்கல் செய்தனர்.

இந்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமல் இருந்தது. ஆனாலும் அறிக்கையில் உள்ள பல தகவல்கள் ரகசியமாக வெளிவந்தன. இப்போது ஐ.நா.சபை இந்த அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

முன்பு வெளிவந்த அத்தனை தகவல்களுமே உறுதியாகியுள்ளது, இந்த அதிகாரப்பூர்வ அறிக்கையைப் பார்க்கும்போது.


இந்த அறிக்கையின் சில முக்கிய பகுதிகள்:


இறுதிக்கட்ட போர் நடந்த நேரத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் தமிழர்கள் ஒரே இடத்தில் முடக்கப்பட்டனர். அவர்கள் மனித கேடயமாகவும் பயன் படுத்தப்பட்டனர். அதில் இருந்து தப்பி ஓட முயன்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிஹ்களப் படை, விடுதலைப் புலிகள் இருதரப்புமே மனித உரிமைகளை மீறி போர் குற்றங்களைச் செய்துள்ளனர்.

பொதுமக்கள் தங்கி இருந்த இடங்களில் ராணுவம் தெரிந்தே குண்டுகளை வீசியது. மருத்துவமனை மற்றும் மனிதாபிமான முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் குண்டுவீசி தாக்கினார்கள். இதன் மூலம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டோர் எண்ணிக்கை இதற்கு மேலும் கூட இருக்கலாம்.

போரில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட குண்டுகளை இலங்கை படைத் தரப்பு வீசியுள்ளது. இரு தரப்பினரும் பொதுமக்கள் அருகில் இருந்தபடியே ஆயுதங்களை பயன்படுத்தினார்கள். போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி செய்யவில்லை. அடிப்படை உரிமைகள் மீறப்பட்டன. போர் பகுதிக்குள் ஊடக அடக்குமுறை கையாளப்பட்டது.

தமிழ்ப் பெண்களை மிகக் கொடூரமாக மானபங்கப்படுத்தியுள்ளது இலங்கை படைத்தரப்பு. கற்பழிப்புகள் சர்வசாதராணமாக நடந்துள்ளன. முழுமையாக நிர்வாணமாக்கப்பட்டு

அங்கு நடந்த படுகொலைகள் போர் குற்றமாகும். எனவே இலங்கை அரசு மீது போர் குற்ற விசாரணை நடத்தலாம்.

அனைத்துமே பொய்யான தகவல்கள்

இலங்கையின் இறுதிக் கட்டப் போர் குறித்தும், கொல்லப்பட்ட தமிழர்கள் குறித்தும், தமிழர் பாதுகாப்பு குறித்தும் இலங்கை சொன்ன அனைத்துமே பொய்யான தகவல்கள் என்பது ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது.

1 லட்சம் பேருக்கு மேல் காணவில்லை

அதேபோல இறுதிப் போரின் போது, பாதுகாப்பு வலயப் பகுதிக்கு வந்த தமிழர்களில் 1 லட்சம் பேருக்கு மேல் காணவில்லை அல்லது கணக்கில் காட்டப்படவில்லை. இந்த எண்ணிக்கையை இலங்கை அரசு வேண்டுமென்றே குறைத்துக் காட்டியுள்ளது.

கொல்லப்பட்ட புலிகளின் தலைவர்கள்

புலிகளின் முக்கியத் தலைவர்கள் சரணடைய வந்தபோது, அவர்களை சர்வதேச சட்டங்களை மீறி சுட்டும் சித்திரவதைப்படுத்தியும் கொன்றுள்ளது இலங்கைப் படை.

இசைப்பிரியா போன்ற ஆயுதமேந்தாத கலைஞர்களையும் சிவிலியன்களையும் மிக மோசமாக சிதைத்துள்ளனர் ராணுவத்தினர்.

தங்களிடம் பிடிபட்ட போராளிகள், குறிப்பாக பெண் போராளிகளை உலகிலேயே இதுவரை யாரும் செய்யாத அளவு கொடூரமான முறையில் கொன்று குவித்திருப்பது தெரிகிறது. சில பெண்களை கொல்லப்பட்ட பிறகு ராணுவத்தினர் கற்பழித்து சிதைத்திருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவை மனித இனத்துக்கே எதிரான மிகப் பெரிய குற்றங்கள். இதற்கு சேனல் 4 மற்றும் பல ஊடகங்களிடம் உள்ள வீடியோ ஆதாரங்கள் தகுதியான சான்றுகளே.

பட்டினியால் பல ஆயிரம்பேரைக் கொன்ற இலங்கை

போருக்குப் பின் சரணடைந்த தமிழர்கள் பாதுகாப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். இவர்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே இலங்கை அரசு குறைத்துச்சொன்னது நிரூபணமாகியுள்ளது. இதனால், அன்றாடம் வழங்கப்படும் உணவு குறைந்துவிட்டதால், பல ஆயிரம் தமிழர்கள் பட்டினியாலும் கொடிய நோய்களாலும் இறந்துள்ளனர்.

இப்படி இலங்கைக்கு எதிரான ஐநாவின் குற்றப்பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. உலகில் வேறு எந்த நாடும் செய்யாத அளவு, மனிதகுலமே கண்டிராத கொடுமைகளை இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக அரங்கேற்றியதையும், செய்து வருவதையும் எந்த தயக்கமும் இன்றி தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது ஐநா நிபுணர் குழு.

இப்போது சர்வதேச சமூகம் கேட்பது, என்ன செய்யப் போகிறது இந்தியா?, என்ற கேள்வியைத்தான்!

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ 3 வரை உயர்த்துகிறது இந்தியன் ஆயில்!!


பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்படும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

பெட்ரோலுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தை, கடந்த ஜுன் மாதம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு ஒப்படைத்தது. அப்போதிருந்து, 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வந்தது. கடைசியாக, ஜனவரி மாதம் விலை உயர்த்தப்பட்டது.

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நெருங்கியதால், மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், அதன்பிறகு பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை.

இந்நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்து விட்டது. மேற்கு வங்காளத்தில் மே 10ம் தேதியுடன் தேர்தல் முடிவடைகிறது. எனவே, பெட்ரோல் விலை உயர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி கேட்டபோது, பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் தலைவர் ரன்பீர் சிங் புடோலா கூறுகையில், மக்களும், அரசும் அடங்கிய அமைப்பின் ஒரு அங்கமாகவே நாங்கள் உள்ளோம். குறிப்பிட்ட முடிவை எடுத்தால், எங்களுக்கு எதிராக சூழ்நிலை திரும்பி விடும். எனவே, சிறிது காலத்துக்கு இந்த நஷ்டத்தை தாங்கிக்கொள்ளலாம் என்று விலையை உயர்த்தாமல் இருந்தோம். தற்போது, கூடிய விரைவில் பெட்ரோல் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளோம்.

இன்றைய நிலையில், பெட்ரோலை லிட்டருக்கு ரூ.7.50 நஷ்டத்தில் விற்று வருகிறோம். டீசலை 18 ரூபாய் 11 காசுகளும், மண்ணெண்ணெயை 28 ரூபாய் 33 காசுகளும், கியாஸ் சிலிண்டரை 315 ரூபாய் 86 காசுகளும் நஷ்டத்தில் விற்று வருகிறோம்.

இதனால் தினமும் எங்களுக்கு ரூ.297 கோடி நஷ்டம் ஏற்படுறது. மாதத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி முதல் ரூ.6 ஆயிரம் கோடிவரை நஷ்டத்தைச் சந்தித்து வருகிறோம். இதன்மூலம், கடந்த மார்ச் மாதத்துடன், எங்களது கடன் அளவு ரூ.53 ஆயிரம் கோடியாக உயர்ந்து விட்டது என்றார்.

லிட்டருக்கு ரூ. 3 உயரும்.

வரும் மே 15ம் தேதி பெட்ரோல் விலை உயர்வு பற்றி அறிவிக்கப்படும் என்றும், லிட்டருக்கு ரூ. 3 வரை இந்த உயர்வு இருக்கும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரூ.50க்கு கீழ் இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் ,கடந்தாண்டு தொடர்ந்து ஆறு முறை உயர்த்தப்பட்டு, தற்போது, ரூ.60யை தாண்டிவிட்டது.

இந் நிலையில் மே 10ம் தேதி இரவில் பெட்ரோல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு வரலாம். இதன்மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 70 ஆக உயர வாய்ப்புள்ளது.

மதுரையில் மருந்து கடை பெண் ஊழியர் கடத்தி கொலை ; உடல்களை வெட்டி “டிரங்கு” பெட்டியில் வீசிய கொடூரம்.

மதுரை விராட்டிபத்து இருளாண்டித்தேவர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் லதா (வயது 23) இவர் ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த குணசேகரனுக்கும் கடந்த 2 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

சுரேஷ் கல்மாடி மீது செருப்பு வீச்சு.

சுரேஷ் கல்மாடி மீது செருப்பு வீச்சு

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் நடந்த ஊழல் தொடர்பாக போட்டியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சுரேஷ் கல்மாடியை சி.பி.ஐ. நேற்று கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து இன்று கல்மாடியை டெல்லியில் சி.பி.ஐ. தனிக்கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கோர்ட் வளாகத்தில் கல்மாடி மீது ஒருவர் செருப்பை தூக்கி வீசினார்.

அவரை போலீசார் உடனடியாக பிடித்து விசாரனை நடத்தினர். அப்போது அவர் பெயர் கபில் தாகூர் என்றும் மத்திய பிரதேஷ் குவாலியரை சேர்ந்தவர் என்று விசாரனையில் தெரியவந்தது.

சாய்பாபா உடலுக்கு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி இறு‌தி அ‌ஞ்ச‌லி.


ஸ்ரீ சத்ய சாய்பாபா‌ கட‌ந்த 24ஆ‌ம் தே‌தி உட‌ல் நல‌‌க்குறைவா‌ல் மரண‌ம் அடை‌ந்தார் உட‌ல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.

புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் மண்டபத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக லட்சகணக்கான பொதுமக்கள் ,பக்தர்கள் , உயர்அதிகாரிகள், தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் சாய்பாபாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
சாய்பாபா உடலுக்கு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி  இறு‌தி அ‌ஞ்ச‌லி


மேலும் பிரதமர் மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் 26-04-2011 அன்று மாலை பிரசாந்தி நிலைய‌ம் வந்தனர் . மன்மோகன்சிங், சோனியா காந்தியும் சாய்பாபாவின் உடலுக்கு முன் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து அஞ்சலி செலுத்தினர் .

மாலை 6 ம‌ணி வரை சாய்பாபாவின் உடலுக்கு ம‌க்க‌ள் அ‌ஞ்ச‌லி செலு‌த்த அனும‌தி‌க்க‌ப்பட்டிருந்தது .ஆனால் அ‌ஞ்ச‌லி செலு‌த்த பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளதால் இரவு முழுவதும் அனுமதிக்கப்பட்டுள்ளது .

சா‌ய்பாபா‌வி‌ன் உட‌ல் 27-04-2011 காலை 9 - 9.30 இறுதி சடங்கு செ‌ய்ய‌ப்பட உ‌ள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது .இவ் இறுதி சடங்கில் ஆந்திர மாநில கவர்னர் மற்றும் ஆந்திர மாநில முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை சரிதை புத்தகத்தை வெளியிட தடை : ஐகோர்ட்டு உத்தரவு.

எழுத்தாளர் வாசந்தி எழுதிய "ஜெயலலிதா-ஒரு சித்திரம்'' என்ஜெயலலிதாவின் வாழ்க்கை சரிதை புத்தகத்தை வெளியிட தடை; ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தாக்கல் செய்த சிவில் வழக்கில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஒருவரைப்பற்றிய தகவல்களை வெளியிட வேண்டுமானால், சம்பந்தப்பட்ட அந்த நபரிடம் தகவலை சரிபார்த்துவிட்டு, அவரது கருத்தையும் சேர்த்து வெளியிடுவதுதான் பத்திரிகைகளின் நடைமுறையில் இருந்து வரும் விஷயமாகும். ஒருவரது வாழ்க்கை சரிதையை வெளியிடுவதற்கு முன்பதாக இந்த நடைமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இந்த நிலையில் வாசந்தி, "ஜெயலலிதா ஒரு சித்திரம்'' (ஜெயலலிதா எ போர்ட் ரெய்ட்) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தை புதுடெல்லியில் உள்ள பென்குயின் புக்ஸ் இந்தியா என்ற தனியார் நிறுவனம் வரும் மே மாதம் வெளியிட உள்ளது. வெளியாக இருக்கும் அந்த புத்தகத்தில் உள்ள ஒரு பகுதி ஆங்கில வாரப்பத்திரிக்கை ஒன்றில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதில், எனது பிறப்பு, எனது ஆரம்பகால பெயர் விவரங்கள், "ஜெயா'' என்ற பெயர் எங்கள் குடும்பத்தில் வந்த விதம், எனது தந்தையைப் பற்றிய தகவல்கள், எனது சினிமா வாழ்க்கை, எனது நட்பு வட்டாரம், என்னிடம் பாசம் காட்டியவருக்கு நான் எழுதிய கடிதங்களின் விவரம், எனது அரசியல் பொது வாழ்க்கை, அதில் நான் சந்தித்த சவால்கள், வழக்குகள், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை குறிப்பிட்டு எழுதப்பட்டு உள்ளது.

இந்த விவரங்கள் வெளியானால் என்னைப்பற்றி மக்களிடம் உள்ள நல்லெண்ணம் பாதிக்கப்படும். அரசியல் வாழ்க்கையில் எனது நிலையில் பாதிப்பு உருவாகும். எனது பொது வாழ்க்கைக்கு பங்கம் நேரிடும். இந்த விவரங்களை வெளியிடுவது, ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையின் உரிமைகளை மீறுவது போன்றது. என்னைப்பற்றி வாசந்தி எழுதியுள்ள சரிதை, பொய்யானது, மரியாதை குறைவானது, உள்நோக்கம் கொண்டது, அவதூறானது, நாகரீகமற்றது, எல்லை தாண்டிய அநாகரீகமானது. எனது வாழ்க்கை பற்றி அவர் எழுதியுள்ள சரிதையில் சில விஷயங்கள் மறைமுகமாக தெரிவிக்கப்படுகின்றன. அவை உண்மைக்கு மாறானவை மற்றும் களங்கத்தை ஏற்படுத்தக் கூடிய அவதூறான தகவல்களாகும். எனவே அந்த புத்தகத்தை எந்த வடிவிலும், எந்த பெயரிலும், எந்த நாளிலும், எனது சரிபார்த்தல் இல்லாமல் வெளியிட தடை விதிக்க வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனுவை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- தன்னால் சரிபார்க்கப்படாத தகவல்கள் அவரது சரிதையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும் அவை பொய்யானவை என்றும் அவதூறானவை என்றும் வழக்கில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். அங்கீகாரம் இல்லாமல் எழுதப்பட்ட தகவல்களை சரிதை (பயோகிராபி) என்று குறிப்பிடமாட்டேன் என்று ஆங்கில நாளிதழில் வாசந்தி கூறியிருப்பதையும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அந்த வகையில் பார்க்கும்போது, சரிதை எழுதுவதற்கு ஜெயலலிதாவின் ஒப்புதல் பெறப்படவில்லை. வழக்கு வாதத்தின்போது ஜெயலலிதா தரப்பு வக்கீல், "ஜெயலலிதாவின் சரிதை புத்தகத்தை வாங்குவதற்கு இணைய தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டார். வெளியிடப்படும் கட்டுரையில் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை விவரங்கள் இருக்கிறது

என்றால், அதை வெளியிடுவதற்கு முன்னதாக உண்மை நிலவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு இருக்க வேண்டும் என்று ஒரு வழக்கில் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. எனவே வாசந்தி எழுதிய "ஜெயலலிதா எ போர்ட்ரெய்ட்'' என்ற சரிதையை வெளியிடுவதற்கு ஜுன் 7-ந் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது. வழக்கு விசாரணை ஜுன் 7-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அன்று பென்குயின் நிறுவனம், வாசந்தி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கேன்சர், மஞ்சள் காமாலையை பரப்பும் தரமற்ற ஐஸ்கிரீம் குளிர்பானம்.

கேன்சர், மஞ்சள் காமாலையை பரப்பும் தரமற்ற ஐஸ்கிரீம் குளிர்பானம் பறிமுதல்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

உயர் தொழில்நுட்பம், நவீன வசதிகள் அனைத்தும் நிறைந்த சென்னையில் உணவு பண்டங்கள் மூலம் பரவி வரும் வியாதிகள் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சென்னையில் தினமும் ஓட்டல்களில் 15 முதல் 25 லட்சம் பேர் சாப்பிடுகிறார்கள். பிரபல ஓட்டல்களில் எல்லோராலும் சாப்பிட வசதி இருக்காது. எனவே பெரும்பாலோனோர் தெருவோர கடைகளில் குறைந்த விலையில் உணவு பண்டங்களை சாப்பிடுவதை விரும்புகிறார்கள்.

தெருவோரங்களில் விற்கப்படும் தரமற்ற உணவு பண்டங்கள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் ஆகியவற்றால் பலவிதமான நோய்கள் பரவுவதாக புகார் வந்தது.

இதையடுத்து மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் நகர் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையில் சுமார் 2 டன் எடையுள்ள தரமற்ற ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இது பற்றி மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் குகானந்தம் கூறியதாவது:-

தெருவோர குளிர்பான கடைகளில் அழுகிய பழங்கள், தரமற்ற தண்ணீர் மூலம் பழ ஜூஸ் தயாரிக்கிறார்கள். ஒருநாள் விற்பனையாகாத பழஜூசை மறுநாள் மீண்டும் புதிய பழஜூசுடன் கலந்து விற்கிறார்கள். அதை வைத்து இருக்கும் பாத்திரங்களையும் சுத்தமாக பராமரிப்பது இல்லை.

பழ ஜூஸ் தயாரிப்போர் கைகளால் பழங்களை பிசைகிறார்கள். இதனால் உருவாகும் கிருமிகள் மூலம் வயிற்றுபோக்கு ஏற்படுகிறது. கோடைகாலத்தில் விற்பனை அமோகமாக இருக்கும் என்பதால் குளிர்பானத்துக்கு அடுத்ததாக ஐஸ்கிரீம் தயாரிப்பு முக்கிய இடம் பெற்றுள்ளது.

சாய பொடி கலந்து ஐஸ்கிரீம் தயாரிக்கிறார்கள். இதனால் கேன்சர், வயிற்று புண், தொண்டை ரணம், மஞ்சள் காமாலை, டைபாய்டு காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படும்.

வடை போன்ற உணவு பலகாரங்கள் தயாரிப்பதற்கு குறைந்த பட்சம் இரண்டு முறைதான் எண்ணையை பயன்படுத்த வேண்டும். ஆனால் தெருவோர கடைகளில் ஆறு, ஏழு முறை ஒரே எண்ணையை பயன்படுத்துகிறார்கள்.

சமைத்து வைத்த பொருட்களையும் ஈக்கள் மொய்க்கும் படி வைத்துள்ளனர். நேதாஜி நகர், தியாகராய நகர் உள்பட சில இடங்களில் குடிசை தொழில்கள் போன்று போலியான தர மற்ற குளிர்பானங்கள் தயாராகிறது.

அதிகாரிகள் பல பிரிவுகளாக சென்று சோதனை நடத்தி வருகிறார்கள். சுகாதாரமான முறையில் தரமாக தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்படமாட்டாது.

இவ்வாறு அவர் கூறினார்.

வியாபாரிகள் தரப்பில் கூறும் போது ஸ்டார் ஓட்டல்களில் வசதி படைத்தவர்கள்தான் சாப்பிட முடியும். நாங்கள் குறைந்த விலைக்கு தருவதால் எங்களிடம் சாப்பிடுகிறார்கள். எங்கள் தொழிலில் அதிகாரிகள் தலையீட்டால் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளோம். சுகாதாரமான முறையில்தான் உணவு பொருட்களை தயாரிக்கிறோம் என்றனர்.

சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியல் : விக்கிலீக்ஸ் - ஜுலியன் அசாங்கே.

சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியல் : ஜுலியன் அசாங்கே

சுவிஸ் வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமே அதிகம் என்றும், அதுகுறித்து தகவல் தெரிந்தும் பணத்தை மீட்க இந்திய அரசு மெத்தனம் காட்டுகிறது என்றும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ஜே, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் வங்கியில் மற்ற நாடுகளின் பணத்தை விட இந்தியக் கறுப்புப் பணமே அதிகம் உள்ளது.

இதனை மீட்க வேண்டும் என பொதுநல வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.

இந்த விஷயத்தில் இந்தியாவின் செயல்பாடு உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.

இந்த நிலையில் விக்கிலீக்ஸ் இணையதளம் இந்தியர்களின் கறுப்புப் பண விவரங்கள், கணக்குகள் குறித்து பல தகவல்களை வெளியிட்டு வருகிறது.

இதுகுறித்து கூறிய ஜூலியன் அசாஞ்ஜே, "நாங்கள் வெளியிட்டு வரும் கறுப்பு பணம் விவகாரம் குறித்த தகவல்களில் இந்திய அரசு மட்டும்தான் மெத்தனப் போக்கை பின்பற்றிவருது.

தற்போது சுவிஸ் வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமே அதிகம் உள்ளது.

இதைத் தொடர்ந்து, சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலை வங்கியின் முன்னாள் அதிகாரியான ருடால்ப் எல்மரிடம் இருந்து `விக்கிலீக்ஸ்' பெற்றது.

இந்நிலையில், அந்த பட்டியலை வெளியிடப்போவதாகவும், அதில் இந்தியர்களின் பெயரும் இருப்பதாகவும் விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜுலியன் அசாங்கே தெரிவித்துள்ளார்.

இதே போலே சுவிஸ் வங்கியில் கறுப்பு பணத்தை வைத்திருக்கும் ஜெர்மனி மிக வேகமாக சுவிஸ் வங்கியிலிருந்து அப் பணத்தை மீட்டு வருகிறது.

ஆனால் இந்திய அரசு இந்த விசயத்தில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறது. நாங்கள் இன்னும் பலரது கணக்கு விவரங்களை வெளியிடவிருக்கிறோம். எனவே இந்திய மக்கள் நம்பிக்கையோடு காத்திருங்கள். கறுப்புப் பணம் பதுக்கியிருப்போர் பற்றி விவரங்கள் உங்களுக்குத் தெரிய வரும்," என்று அசாஞ்ஜே தெரிவித்தார்.

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை, பரிந்துரைகளுக்கு அமெரிக்கா வரவேற்பு.

இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் அதில் இடம் பெற்றுள்ள பரிந்துரைகளை ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சூசன் ரைஸ் வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.

நிபுணர் குழு மிகவும் விரிவான முறையில், தங்களது விசாரணை மற்றும் ஆய்வை மேற்கொண்டுள்ளது வரவேற்புக்குரியது, பாராட்டுக்குரியது. அடுத்து என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து தெளிவாக குழு வரையறுத்துப் பரிந்துரைத்துள்ளது. நீதி கிடைக்கச் செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதும் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஜனநாயகத்தை தழைக்கச் செய்வது, மறு கட்டமைப்பு, மறுசீரமைப்பு, மனித உரிமையை நிலைநாட்டுவது தொடர்பாக அது பலவற்றைப் பரிந்துரைத்துள்ளது.

இந்த அறிக்கையை வெளிப்படையாக வெளியிட பொதுச் செயலாளர் பான் கி மூன் முடிவெடுத்ததை நாங்கள் வரவேற்றுப் பாராட்டுகிறோம்.

போருக்குப் பின்னர் இலங்கையில் ஒளிவுமறைவற்ற வகையில் அனைத்து நடவடிக்கைகளும் இருக்க வேண்டும். புண்பட்ட தமிழ் மக்களின் புணர்வாழ்வுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மறு சீரமைப்பு, மறு குடியமர்த்தல் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

தற்போது இந்தக் குழுவின் அறிக்கை மூலம் சுயேச்சையான, விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்பது உறுதியாகியுள்ளது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என்ற வாதம் வலுப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு விரிவான பதிலைத் தர வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் கூறியிருப்பதற்கு அமெரிக்கா தனது முழு ஆதரவைத் தெரிவிக்கிறது என்றார் ரைஸ்.