Monday, August 1, 2011

மம்முட்டி - மோகன்லாலின் நிழல் உலகத் தொடர்புகள்... அதிர்ச்சிப் பின்னணி !



பிரபல மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய தொடர் சோதனைகளின் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் இப்போது வெளியாகி வருகின்றன.

மத்திய கிழக்கு நாடுகளில் சில சந்தேகத்துக்கிடமான நபர்களுடன் இருவரும் தொடர்பு வைத்திருந்ததே இந்த சோதனைக்கு பிரதான காரணம் என்கிறார்கள்.

இந்த நபர்கள்தான் இப்போது இந்திப் பட உலகையே ஆட்டுவிக்கிறார்களாம். நிழல் உலக தாதாக்களுடன் நெருங்கிய நட்பு கொண்டுள்ள இந்த நபர்கள், மம்முட்டி மற்றும் மோகன்லாலுடன் தொடர்பிலிருப்பது துபாயில் உள்ள உளவுத் துறை அதிகாரிகள் மூலம் இந்தியாவுக்கு தெரிய வர, உடனடியாக இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

மேலும் இந்த நிழலுலக நபர்களுக்கு தங்களின் படங்களின் செயற்கைக்கோள் உரிமையை வழங்கவும் மம்முட்டியும் மோகன்லாலும் ஒப்பந்தம் போட்டிருந்தார்களாம். இதற்காக பெரும் பணம் கைமாறியுள்ளதாக தெரிகிறது. இந்தப் பணம் மும்பையில் ஏற்கெனவே ஐடி துறையின் சந்தேகப் பார்வையில் உள்ள சிலர் மூலமே மம்முட்டி- மோகன்லாலுக்கு வந்துள்ளது.

இன்னொரு பக்கம், மம்முட்டியும் மோகன்லாலும் இப்போது கோடிகளில் சம்பளம் வாங்கினாலும், கணக்கில் காட்டுவது அதிகபட்சம் ரூ 80 லட்சம்தானாம். இதனை ஆதாரங்களுடன் கண்டுபிடித்த பிறகே இவர்களின் வீடுகளில் சோதனையை நடத்தியதாம் வருமான வரித்துறை.

இந்த சோதனை, அதன் காரணங்கள், பிடிபட்ட பொருள்கள் குறித்து விரைவிலேயே முழு அறிக்கை வெளியிடவிருக்கிறோம் என வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியிருப்பது, மம்முட்டிக்கும் மோகனலாலுக்கும் மேலும் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

திமுக ஆர்ப்பாட்டத்துக்கு ஊன்றுகோலுடன் வந்த நடிகை குஷ்பு - படத்துடன்.

திமுக ஆர்ப்பாட்டத்துக்கு ஊன்றுகோலுடன் வந்த நடிகை குஷ்பு.





























இன்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே திமுகவினர் நடத்திய போராட்டத்தில் நடிகை குஷ்பூ கலந்துகொண்டார். அவர் போராட்டத்திற்கு ஊன்றுகோலுடன் வந்தார்.

நடிகை குஷ்புவுக்கு திமுகவில் பதவி எதுவும் கொடுக்காவிட்டாலும், அவர் கட்சிப் பணிகளை தீவிரமாக செய்து வருகிறார். ஆளும் அதிமுக அரசு திமுகவினருக்கு எதிராக பொய் வழக்குகள் போடுவதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வட சென்னையில் முக ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றபதற்காக குஷ்பூ ஊன்றுகோலுடன் வந்தார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு மலையாளப் படபிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கையில், படிகட்டு செட் போட்டு அதில் குஷ்பு நடிப்பது மாதிரி காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த காட்சியில் நடித்தபோது படிக்கட்டு இடிந்து விழுந்ததில் குஷ்புவின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொச்சின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்றார்.

இந்நிலையில் அதிமுக அரசுக்கு எதிராக 01.08.2011 அன்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு 9.47 மணிக்கு நடிகை குஷ்பு வந்தார். அவர் கையில் ஊன்றுகோலுடன் வந்தார். அவரை பார்த்ததும் மகளிர் அணி நிர்வாகிகளும் தி.மு.க. தொண்டர்களும் ஆரவாரம் செய்து அவருடன் கை குலுக்கினர்.

பின்னர் அவரை தி.மு.க. நிர்வாகிகள் ஒரு ஓரமாக அழைத்து சென்று நிற்க வைத்தனர். இது தொடர்பாக குஷ்புவிடம் கேட்ட போது, 10 நாட்களுக்கு முன்பு நடந்த படப்பிடிப்பில் காலில் காயம் ஏற்பட்டது என்று தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டபோது செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, இந்த ஆர்ப்பாட்டம்

எதற்காக என்றால் திமுகவினர் மீது தேவையில்லாமல் பொய் வழக்கு போட்டு கைது செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு என்ன மாற்றம் வருகிறது என்று பார்ப்போம் என்றார்.

லாரியே மேடையானது

போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் வழக்கமாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் இடத்தில் மேடை எதுவும் அமைக்கப்படாமல் இருந்தது. ஆனால் ஒரு லாரியை மேடையாக்கி தி.மு.க. நிர்வாகிகள் அங்கு நிறுத்தி இருந்தனர்.

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட திமுகவின் முன்னணி தலைவர்கள் மு.க. ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு, தாமோ. அன்பரசன், நடிகை குஷ்பு உள்பட பல்லாயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரையும் போலீஸார் விடுவித்தனர்.

அரசு மருத்துவ கல்லூரிகள் இன்று திறப்பு : புதிய மாணவ - மாணவிகளை மூத்த மாணவர்கள் வரவேற்றனர்- ராக்கிங் செய்யமாட்டோம் என்று உறுதிமொழி .

அரசு மருத்துவ கல்லூரிகள் இன்று திறப்பு: புதிய மாணவ- மாணவிகளை மூத்த மாணவர்கள் வரவேற்றனர்-  ராக்கிங் செய்யமாட்டோம் என்று உறுதிமொழி

தமிழ்நாட்டில் 17 அரசு மருத்துவ கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் உள்ள 1653 எம்.பி.பி.எஸ். இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன. மருத்துவ கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளில் சேர்ந்தனர். சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன.

சென்னையில் உள்ள மெட்ராஸ் மருத்துவ கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டிற்கான திறப்பு விழா வித்தியாசமாக நடத்தப்பட்டது.

புதிய மாணவ - மாணவிகளை சீனியர் மாணவர்கள் வாசல் வரை வந்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர்.

சென்னை மருத்துவ கல்லூரியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சீனியர் மாணவர்கள் “நாங்க ராக்கிங் செய்யமாட்டோம்” நண்பர்களாக இருப்போம்” என்று கூறி புதிய மாணவர்களை வரவேற்றனர். பின்னர் முதல்வர் கனகசபை தலைமையில் “ராக்கிங்” செய்யமாட்டோம் என மூத்த மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தமாட்டோம் என முதல்வர் உறுதிமொழியை படிக்க மூத்த மாணவர்கள் பின் தொடர்ந்து வாசித்து உறுதிமொழி செய்தனர்.

பின்னர் முதல்வர் கனகசபை மாணவர்கள் இடையே பேசியதாவது:-

ராக்கிங்கை தடுக்க துறை வாரியாக கண்காணிக்கப்படுகிறது. போராசிரியர், வார்டன், தலைமை வார்டன் மாணவர்களை தினமும் கண்காணிப்பார்கள். விடுதியில் திடீர் சோதனை நடத்துவார்கள். மேலும் மாணவ- மாணவிகள் விடுதியில் பேராசிரியர் ஒருவர் தங்கி இருப்பார்.

சுழற்சி முறையில் மாறிமாறி ஆண் - பெண் பேராசிரியர்கள் தங்கி ராக்கிங் நடைபெறுகிறதா? என்பதை ரகசியமாக கண்காணிப்பார்கள். இதுதவிர என்னுடைய ஆபீஸ் முன்பு புகார் பெட்டி ஒன்றும் வைக்கப்படும். அதில் ராக்கிங் பற்றி புகார் தெரிவிக்கலாம்.

ஒருவேளை ராக்கிங் செய்வது தெரியவந்தால் அந்த மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அதற்கான அவசியம் இருக்காது என்று கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய மாணவ- மாணவிகளை பெற்றோர்கள், உறவினர்கள் ஒன்றாக வந்து வகுப்பில் விட்டு சென்றனர். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் சுந்தரம் கலந்து கொண்டார்.

உலகை மிரட்டிய அமெரிக்காவின் கடன் பிரச்சனை...!



உலகையே மீண்டும் பொருளாதார நெருக்கடியில் தள்ளிவிடும் அபாயகரமான நிலையில் இருந்து கடைசி நேரத்தில் தப்பியுள்ளது அமெரிக்கா.

அமெரிக்காவின் கடன் அளவு எவ்வளவு இருக்கலாம் என்பது குறித்து நிர்ணயிக்க அந் நாட்டு நாடாளுமன்றம் கடந்த 1971ம் ஆண்டில் ஒரு விதியை வகுத்தது. அதன்படி, இந்தக் கடன் அளவு குறித்து நாடாளுமன்றத்தில் (US congress) அந் நாட்டு அரசு ஒப்புதல் பெற வேண்டும்.

இப்போது அமெரிக்காவின் கடன் சுமை 14.3 டிரில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (இது அமெரிக்காவின் மொத்த உற்பத்தியில் (GDP) 95 சதவீதமாகும்.) நாளை (ஆகஸ்ட் 2ம் தேதி, செவ்வாய்க்கிழமை) இந்த அளவை அமெரிக்கா தொட உள்ளது.

இதனால், இந்தக் கடன் அளவை உயர்த்தி நி்ர்ணயிக்க வேண்டிய நிலைக்கு அதிபர் பராக் ஒபாமா அரசு தள்ளப்பட்டது. ஆனால், பிரதிநிதிகள் சபை (House of representatives) எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு ஒபாமாவின் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை.

கடன் அளவை உயர்த்த குடியரசுக் கட்சி ஒப்புக் கொள்ளாததால், செனட் சபையில் ஒபாமா கட்சிக்கு பெரும்பான்மை இருந்தாலும், பிரதிநிதிகள் சபையில் அது தொடர்பான தீர்மானம் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டது.

இது தொடர்பான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமானால், அரசு தனது பொருளாதார ஊக்குவிப்பு செலவுகளைக் குறைக்க வேண்டும் என குடியரசுக் கட்சியினர் நிபந்தனை விதி்க்க, அதை ஏற்றால், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதால், ஒபாமா அதை ஏற்க மறுக்க, அமெரிக்கா இன்னொரு மாபெரும் நிதிச் சிக்கலை நோக்கி சென்றது.

கடன் அளவை உயர்த்தாவிட்டால், எந்த அமைப்பிடமிருந்தும் அமெரிக்காவால் நிதி திரட்ட முடியாது. அந்த நிலை ஏற்பட்டால், அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் தர முடியாது, ஓய்வூதியதாரர்களுக்கு பணம் தருவது உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கு நிதி இருக்காது, ராணுவ காண்ட்ராக்டர்களுக்கு பணம் தர முடியாது, அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து கூட வாங்க முடியாது என்ற நிலை உருவானது.

கடன் நெருக்கடியால் பாதிக்கப்படாமல் இருக்க, முதலீட்டாளர்கள் தங்களது பணத்துக்கு அதிக வட்டி கோரினால், அவர்களைச் சமாளிக்க வீட்டுக் கடன், கார் கடன், பர்சனல் லோன் உள்ளிட்டவற்றுக்கு வட்டியை வங்கிகள் அதிகரிக்கும் அபாயமும் உருவானது.

அமெரிக்கா இப்படி சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்தால், அந் நாட்டு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடுகள் கூட வாபஸ் ஆகி, முழுப் பொருளாதாரமும் மூழ்கும் நிலை உருவானது.

அமெரிக்காவுக்கு சளி பிடித்தால், உலகமே தும்மியாக வேண்டுமே.. இந்த நிதி நெருக்கடி உலகம் முழுவதும் எதிரொலித்து பெரும் பொருளாதார சிக்கல் உருவாகியிருக்கும்.

இதையடுத்து கடந்த ஒரு வாரமாக சரியாக தூங்கக் கூட நேரமில்லாமல் எதிர்க் கட்சி, தனது கட்சி பிரதிநிதிகள், அதிகாரிகளுடன் இரவு, பகலாக இந்த விவகாரம் குறித்துப் பேச்சு நடத்தி வந்தார் ஒபாமா.

இன்று ஒருவழியாக இந்தத் தீர்மானத்தை ஆதரி்ப்பதாக குடியரசுக் கட்சி அறிவி்த்துவிட்டதால், ஒட்டு மொத்த அமெரிக்காவே நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டுள்ளது.

ஆமாம், அமெரிக்காவின் கடன் அளவு ஏன் இவ்வளவு ஆனது என்கிறீர்களா.. அதற்கு முக்கிய காரணங்கள், அந்த நாடு நடத்தி வரும் போர்கள் தான். ஜார்ஜ் புஷ் காலத்தில் ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களுக்காக செலவிடப்பட்ட தொகை 6.1 டிரில்லியன் டாலர். பராக் ஒபாமா இதுவரை போர் செலவுக்காக ஒதுக்கிய தொகை 2.4 டிரில்லியன் டாலர்!

இப்போது அமெரிக்காவின் கடன் அளவு மேலும் 2.5 டிரில்லியன் டாலர்கள் வரை உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

2013-க்குள் 30 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் ஹெச்.எஸ்.பி.சி.



லாபம் பார்க்க போராடும் நாடுகளில் சுமார் 30 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்க சர்வதேச வங்கியான ஹெச்எஸ்பிசி முடிவு செய்துள்ளது.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வங்கி ஹெச்எஸ்பிசி. வங்கியின் புதிய தலைவராக ஸ்டூவர்ட் கலிவர் பொறுப்பேற்றுள்ளார். இந்த வங்கியில் உலகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பணி புரிகின்றனர். அதிலும் ஆசியாவில் தான் அதிகமானோர் பணி புரிகின்றனர்.

ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்த முதல் அரையாண்டில் வரிக்கு முந்தைய லாபம் 11.5 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்த வங்கிப் பங்குகளின் விலை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு வரிக்கு முந்தைய லாபம் 11.1 பில்லியனாக இருந்தது.

லத்தீன் அமெரிக்கா, அமெரி்க்கா, இஙகிலாந்து, பிரான்ஸ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வங்கியை மறுசீரமைக்கவுள்ளதால் 5 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்கியதாக வங்கி அறிவித்துள்ளது. வரும் 2013-ம் ஆண்டிற்குள் மேலும் 25, 000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது.

இது குறித்து வங்கியின் தலைவர் ஸ்டூவர்ட் கூறியதாவது,

ஹெச்.எஸ்.பி.சி. வரும் 2013-ம் ஆண்டிற்குள் 30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகின. இதை அந்த வங்கியின் தலைவர் மறுத்துள்ளார்.

நாங்கள் யாரையும் வீட்டுக்கு அனுப்பப் போவதில்லை. ஏற்கனவே காலியாக இருக்கும் இடங்களுக்கே ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. பொருளாதாரம் மேலும் வளர்ந்தால் நாங்கள் இன்னும் அதிகமானோரை பணியமர்த்துவோம். மொத்த உற்பத்தி 7.5 சதவீதமாக இருந்தால் நல்லது. இந்தியாவின் மொத்த உற்பத்தி அதே அளவில் தான் உள்ளது. அதனால் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

இந்தியா முழுவதும் அதிக ஆட்களை எடுப்போம் என்று உறுதியளிக்க முடியாது. வங்கி சீரமைப்பின் ஒரு பகுதியாக கடன் மீட்புப் பிரிவில் உள்ள ஒரு சிலரை மட்டும் வங்கியின் பிற பிரிவில் சேருமாறு கூறினோம் என்றார்

காந்திய வழியில் செல்லும் நாம் ஆயுதம் தயாரிப்பது ஏன்? மாணவியின் கேள்விக்கு அப்துல்கலாம் பதில்.

காந்திய வழியில் செல்லும் நாம் ஆயுதம் தயாரிப்பது ஏன்? மாணவி கேள்விக்கு அப்துல்கலாம் பதில்

கோவை பாலக்காடு மெயின் ரோடு நவக்கரையில் ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் யூத் மீட் - 2011 நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஏ.ஜே.கே. கல்லூரி தலைவர் லால்மோகன் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் அஜ¤த்குமார் லால் மோகன் முன்னிலை வகித்தார்.

விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது. :-

நான் கடந்த 10 ஆண்டுகளில் 11 மில்லியன் இளைஞர்களை சந்தித்து உள்ளேன். அதில் அதிகமான இளைஞர்கள் தனித் தன்மையுடன் விளங்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அவ்வாறு விளங்க வேண்டுமானால் உடனடியாக தனித் தன்மை கிடைத்து விடாது. அதற்கு கடுமையாக போராட வேண்டும். மாணவர்கள் 4 திட்டங்களை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.

பெரிய அளவிலான குறிக்கோள், தொடர்ச்சியான அறிவு தேடல், கடின உழைப்பு, பொறுமை. இந்த 4 குறிக்கோளோடு செயல்பட்டால் தனித் தன்மையோடு செயல் பட முடியும். செல்போன் கண்டுபிடித்த கிரகம்பெல், மின்சார பல்பு கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், டெல்லி மெட்ரோ ரெயில் திட்டத்தை கண்டு பிடித்த ஸ்ரீதரன் போல் ஒவ்வொரு மாணவரிடமும் கண்டு பிடிப்பு எண்ணங்கள் வளர வேண்டும்.

2020 - ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக வேண்டும் என ஒவ்வொரு மாணவரும் ஆசைப்படுகிறார்கள். இந்தியாவின் வளர்ச்சி, பொருளாதாரத்தில் முன்னேற ஒவ்வொரு மாணவரும் தனித்திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அப்துல்கலாம் பேசினார்.

பின்னர் அப்துல் கலாமிடம் 3 மாணவிகள் கேள்விகள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்தார்.

கேள்வி:-நாம் காந்திய வழியில் செல்கிறோம். ஏன் ஆயுதம் தயாரிக்க வேண்டும்.

அப்துல்கலாம் பதில்:- அண்டை நாடுகள் ஆயுதங்களை பெரிய அளவில் தயாரித்து வைத்துள்ளது. நாம் சும்மா இருக்க முடியாது. நாமும் தயாரித்து வைத்து கொள்வோம். நாம் அதை முதலில் பயன்படுத்த மாட்டோம். பிற நாடுகள் தாக்குதல் நடத்தும் போது பயன்படுத்தவே இந்த ஆயுதங்களை தயாரித்து வைத்துள்ளோம்.

கேள்வி:- வெளி நாடுகளில் இருந்து யூரேனியம் கிடைப்பதில்லையே?

அப்துல் கலாம்:- இந்தியாவில் தற்போது தேவையான அளவு யூரேனியம் உள்ளது. தட்டுப்பாடு இல்லை.

கேள்வி :- இந்தியாவில் பெண்களுக்கு செக்ஸ் கொடுமை கூடுதலாக உள்ளதே?

அப்துல் கலாம் :- பெண்கள் தான் அதிக அளவில் கல்வி, வேலை வாய்ப்பில் முன்னேறி வருகிறார்கள். செக்ஸ் கொடுமையை தடுக்க ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு நாளும் சுமார் 1 மணி நேரம் நல்லொழுக்கத்தை கற்று கொடுக்க வேண்டும். இது வருங்காலத்தில் செக்ஸ் கொடுமையை தடுக்க வழி வகுக்கும்.

என்று கூறினார்.

டீசல், கியாஸ் விலை உயர்வை எண்ணை நிறுவனங்களே முடிவு செய்யும் : பிரணாப்முகர்ஜி தகவல்.



பெட்ரோல்- டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணை ஆகியவற்றின் விலையை நிர்ணயம் செய்யும் உரிமை மத்திய அரசிடம் இருந்தது. உற்பத்தி செலவை விட இவற்றின் விலை குறைவாக இருந்ததால் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தன.

இதனால் எரிபொருள் விலை நிர்ணய உரிமையை தங்களுக்கு தரவேண்டும் என்று கோரின. இதையடுத்து பெட்ரோல் நிர்ணய உரிமை எண்ணை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

உடனடியாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டது. எனினும் எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வரும் நஷ்டம் குறையவில்லை. இதனால் எண்ணை நிறுவனங்களுக்கு அரசு மானியம் அளிக்க வேண்டியுள்ளது.

எனவே டீசல், சமையல் கியாஸ் விலை நிர்ணய உரிமையையும் எண்ணை நிறுவனங்களுக்கே கொடுக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

இதுபற்றி மத்திய நிதி மந்திரி பிரணாப்முகர்ஜி கூறியதாவது:-

பெட்ரோலுக்கான விலைக் கட்டுப்பாடு ஏற்கனவே விலக்கி கொள்ளப்பட்டது. அதேபோல டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணை ஆகியவற்றுக்கான விலைக் கட்டுப்பாட்டையும் விலக்கி கொள்ள முடிவு செய்துள்ளோம். இவற்றின் விலைகளை எண்ணை நிறுவனங்களே நிர்ணயிக்கும்.

அதேநேரத்தில் ஏழைகளுக்கும், மின்சார வசதி இல்லாமல் மண்எண்ணை விளக்கை பயன்படுத்துவோருக்கும் மானிய விலையில் தொடர்ந்து மண்எண்ணை அளிக்கப்படும்.

பணவீக்க விகிதம் தற்போது மிகவும் அதிகமாக (9.44 சதவீதம்) உள்ளது. இது ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவு அல்ல. பணவீக்கத்தை 5 முதல் 5.5 சதவீதம் அளவுக்கு குறைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். நடப்பு நிதியாண்டின் முடிவில் பணவீக்க விகிதம் 6 முதல் 7 சதவீதம் அளவுக்குள் கட்டுப்படுத்தப்படும்.

இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

பெட்ரோலை போல இனி டீசல், கியாஸ் விலையை எண்ணை நிறுவனங்களே உயர்த்தும். இதனால் அவற்றின் விலைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

மண்எண்ணை, சமையல், கியாஸ், உரம் ஆகியவற்றிற்கான மானியத்தை பயனாளிகளுக்கு நேரடியாக பணமாக அளிப்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தமிழ்நாடு, அசாம், மராட்டியம், அரியானா, டெல்லி, ராஜஸ்தான், ஒரிசா ஆகிய மாநிலங்களில் அக்டோபர் மாதம் முதல் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும். பின்னர் மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மருத்துவம், என்ஜினீயரிங் படிப்புகளுக்கு 2013-ல் பொது நுழைவுத் தேர்வு : மத்திய மந்திரி கபில்சிபல் தகவல்.

மருத்துவம், என்ஜினீயரிங் படிப்புகளுக்கு 2013-ல் பொது நுழைவு தேர்வு: மத்திய மந்திரி கபில்சிபல் தகவல்

என்ஜினீயரிங் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை திட்டம் வகுத்துள்ளது. ஆனால் இந்த திட்டத்துக்கு தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த மாநில அரசுகளை சமாதானப்படுத்தி, எப்படியாவது பொது நுழைவுத் தேர்வு முறையை செயல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டும் பொது நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாக சமீபத்தில் தீர்ப்பு அளித்துள்ளது.

இந்நிலையில், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை மந்திரி கபில்சிபல் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது எனது கனவாகும்.

எனது இந்த கனவு 2013-ம் ஆண்டு நனவாகி விடும். அகில இந்திய பொது நுழைவுத் தேர்வை நடத்திய பெருமை எனக்கு கிடைக்கும். பொது நுழைவுத் தேர்வு முறையை இந்தியர்களில் 80 சதவிகிதம் பேர் வரவேற்றுள்ளனர் என்றார்.

12 மணி நேரம் “வீடியோ கேம்” விளையாடிய வாலிபர் ரத்தம் உறைந்து சாவு .

12 மணி நேரம் “வீடியோ கேம்” விளையாடிய வாலிபர் ரத்தம் உறைந்து சாவு

இங்கிலாந்தை சேர்ந்தவர் டேவிட். இவரது மகன் கிறிஷ் ஸ்டேனிபோர்த் (20). வீடியோகேம் விளையாடுவதில் இவருக்கு அலாதி பிரியம். அதில் ஈடுபட்டால் தன்னையே மறந்து விடுவார். நேரம் போவது தெரியாமல் மணிக்கணக்கில் விளையாடுவார்.

அது போன்று சமீபத்தில் வெளியான மராத்தான் விளையாட்டு சம்பந்தப்பட்ட “வீடியோகேம்” விளையாடினார். அதை தொடர்ந்து விளையாடினார். பரபரப்பும், “திரில்”லும் தொற்றிக் கொள்ளவே 12 மணி நேரம் இடைவிடாமல் விளையாடினார்.

அப்போது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் பலனின்றி இறந்தார். தொடர்ந்து விளையாடியதால் மூளையின் செயல்பாடு அதில் தீவிரமாக இருந்ததால் நரம்புகளில் ரத்தம் உறைவு ஏற்பட்டது. அதனால் அவர் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து அந்த வீடியோ கேம் தயாரித்த தனியார் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அதை இறந்த கிறிஷின் தந்தை டேவிட் மறுத்துள்ளார். வீடியோ கேம் நிறுவனத்தை நான் குற்றம் சுமத்த மாட்டேன். விளையாட்டை ரசிக்காமல் தீவிரமாக அதில் தொடர்ந்து ஈடுபடுவது விளையாடுபவர்கள் செய்யும் தவறாகும். எனது மகன் போன்று இதை தொடர்ந்து விளையாடினால் அது ஆபத்தில் தான் முடியும் என்றார்.

வீடியோகேம் தயாரிப்பு நிறுவனத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற விளையாட்டின் மூலம் கல்வி அறிவை பரப்பி வருகிறோம். ஆனால் விளையாடுபவர்கள் இதற்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். தொடர்ந்து அதில் மூழ்கி விடக்கூடாது என விளக்கம் அளித்துள்ளனர்.

சீனாவில் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் ; 20 பேர் பலி.

சீனாவில் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள்    தாக்குதல்;  20 பேர் பலி

சீனாவின் ஷின்ஜியாங் மாகாணம் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் உள்ளது. பாகிஸ்தானின் கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் என்ற தீவிரவாத அமைப்பு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயிற்சிமுகாம்கள் அமைத்துள்ளது. அங்கு பயிற்சி பெறும் தீவிரவாதிகள் ஷின்ஜியாங் மாகாணத்தில் உள்ள காஷ்கார் என்ற இடத்தில் புகுந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதல் 2 நாட்கள் நடந்தது. அதில் 20 பேர் பலியாகினர்.

இதுகுறித்து சீன அரசு விசாரணை நடத்தியது. அதில் சீனாவுக்குள் தீவிரவாதிகள் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் நுழைந்தது தெரிய வந்தது. இச்சம் பவத்துக்கு சீனா, கண்டனம் தெரிவித்துள்ளது.

யோக்கியர்கள் போல எதிர்க்கட்சிகள் பேசுவது சரியல்லை - பிரதமர்.



நாடாளுமன்றத்தில் எந்தப் பிரச்சினை குறித்தும், எந்தவிதமான விவாதத்தையும் சந்திக்க நாங்கள் தயார். எதிர்க்கட்சிகள் ஊழல் புகார்களை எழுப்பினால் அவர்களது ஊழல்களை நாங்கள் எழுப்புவோம் அவர்கள் மட்டும் என்ன யோக்கியர்களா என்று அதிரடியாகப் பேசியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்

வழக்கமாக மென்மையாக பட்டும் படாமல், புரியாதது போல பேசுவார் ம்ன்மோகன் சிங். ஆனால் தற்போது எதிர்க்கட்சிகளின் அதிரடி வியூகத்திற்கு பதிலடியாக பேசியுள்ளார் பிரதமர்.

எதிர்க்கட்சிகள் வகுத்து வரும் வியூகத்தை அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்று செய்தியாளர்கள் மன்மோகன் சிங்கிடம் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில்,

ஊழலைப் பற்றி அவர்கள் பேசட்டும். பதிலுக்கு அவர்களுடைய ஊழல்களைப் பற்றி நாங்களும் பதிலுக்குப் பேசிவிட்டுப் போகிறோம். எங்கள் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்களை விட எதிர்க்கட்சிகள் மீதுதான் நிறைய ஊழல் மண்டிக் கிடக்கிறது. அவர்கள் மட்டும் என்ன ரொம்ப யோக்கியமா?.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரம் இப்போது உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால் நாடாளுமன்றத்தில் அதுகுறித்துப் பேசக்கூடாது. இது குறித்து நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கட்டும், நாடாளுமன்றம் தீர்ப்பளிக்கக் கூடாது என்றார் பிரதமர்.

இதற்கிடையே, பிரதமர் விடுத்துள்ள இந்த எச்சரிக்கையை நாங்கள் பொருட்படுத்த மாட்டோம் என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாடாளுமன்றம்தான் எல்லா அமைப்புகளையும்விட உயர்வானது. மக்களை பாதிக்கும் பிரச்னைகளை அங்கே பேசாமல் இருக்க முடியாது. அரசின் ஊழல்களைப் பற்றிப் பேசக்கூடாது என்று எதிர்க்கட்சிகளுக்கு யாரும் வாய்பூட்டு போட முடியாது.

அரசின் எல்லா ஊழல்கள் குறித்தும் கட்டாயம் பேசுவோம், ஏன் என்றால் இந்த ஊழல்கள் மீது அரசு தானாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பத்திரிகைகள், எதிர்க்கட்சிகள், பொதுநல வழக்கு தொடுத்த மனுதாரர்கள் ஆகியோரின் மனம் தளராத முயற்சிகளுக்குப் பிறகே ஊழல்களை விசாரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்பட்டிருக்கிறது என்றார்.

கடந்த தொடர் போல ஸ்தம்பிக்குமா?

கடந்த ஆண்டு மழைக்காலக் கூட்டத் தொடரில் ஒரு நாள் கூட அலுவல் நடக்கவில்லை. காரணம், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசா பதவி விலகக் கோரி அந்தத் தொடரையை முடக்கிப் போட்டன எதிர்க்கட்சிகள். இந்த நிலையில் இந்தக் கூட்டத் தொடராவது முழுமையாக நடக்குமா என்ற கவலையில் அரசுத் தரப்பு உள்ளது.

நோய்களை தீர்க்கும் யோகா, தாளாசனம், கோணாசனம்.

நோய்களை தீர்க்கும் யோகா.
நோய்களை தீர்க்கும் யோகா

யோகா என்றால் ஏதோ நமக்கெல்லாம் வராது. அதற்கெல்லாம் நேரம் ஏது என்று நினைப்பவர்களும், சொல்பவர்களும்தான் அதிகம். ஆனால் யோகா என்பது நம்மை விட்டு தனியாக இருக்கும் செயல் அல்ல. நமக்காக, நமது ஆரோக்கியத்திற்காக அவசியம் செய்ய வேண்டிய ஒரு விஷயமாகும்.

எல்லா யோகாக்களையும் செய்யாவிட்டாலும், சூர்ய நமஸ்காரம் போன்ற முக்கியமான யோகாக்களையாவது தினமும் ஒரு சில நிமிடங்கள் செலவழித்து செய்வதால் நமது ஆரோக்கியத்திற்கு உத்திரவாதத்தை அளிக்க முடியும். நாம் உடலை கெடுத்துக் கொள்வதற்காக எத்தனையோ விஷயங்களைச் செய்கிறோம்.

காசு கொடுத்து சிகரெட் வாங்கி புகைப்பது, மது அருந்துவது, கண்ணைக் கெடுக்கும் அளவிற்கு தொலைக்காட்சி பார்ப்பது என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். இப்படி உடலைக் கெடுத்துக் கொள்ள எத்தனையோ விஷயங்களைச் செய்யும் நாம், ஆரோக்கியமாக இருக்க ஏன் இந்த யோகாவைப் பின்பற்றக் கூடாது.

வினை விதைத்தவன் தானே வினையை அறுக்க வேண்டும். ஆரோக்கியத்தைக் கெடுக்கக் கூடிய செயல்களை செய்த நாம்தானே ஆரோக்கியத்திற்கு தேவையான யோகாவையும் செய்தாக வேண்டும். நாம் ஆரோக்கியமாக வாழவும், வந்த நோயை விரட்டவும் கூட யோகா பயன்படுகிறது.

ரத்த அழுத்தம், தைராய்டு பிரச்சினை, கருப்பை பிரச்சினை, மூட்டு வலி, கழுத்து வலி என பல நோய்களுக்கும் யோகாவின் மூலமாக தீர்வு காணலாம். யோகாவைச் செய்ய வயது வித்தியாசமோ, உடல் எடையோ, பாலினமோ எந்த தடையும் இல்லை. எந்த வயதினரும், எவ்வளவு எடை கொண்டவர்களும் இதனை செய்து பயன்பெறலாம்.


தாளாசனம்.
தாளாசனம்

செய்முறை:

நேராக நிமிர்ந்து நில்லுங்கள். இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கவும். உள்ளங்கைகள் ஒன்றுக்கொன்று பார்த்திருக்கட்டும். இரண்டு குதிகால்களும் சற்று உயரும் வகையில், எக்கிப்பாருங்கள். இப்பொழுது உங்கள் கால் விரல் அடிச்சதையில், ஒட்டுமொத்த உடம்பும் இருந்கும். இயல்பான சுவாசத்தில் 15 வினாடி நின்று, பின் பழைய நிலைக்கு வரவும்.

பயன்கள்:

பாதத்தில் உள்ள குதிகாலில் இருந்து தலையிலிருக்கும் பிட்யூட்டரி சுரப்பி வரை, எல்லா நரம்புகளும் ஒரு முறை இழுத்து விடப்படுவதால், ஒட்டுமொத்த உடம்புக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். பாதம், கால், தொடை, தசைகள் வலுப்பெறுவதால், உடம்பு, ' சும்மா ' பனை மரம் போல் உறுதியாக இருக்கும்.


கோணாசனம்.
கோணாசனம்

செய்முறை:

முதலில் நேராக நின்று கொண்டு கால்களை 2 அடிக்கு அகற்றி வைக்கவும். பின்னர் கைகளைப் தலைக்கு மேலே தூக்கிக் சேர்த்துக் கொள்ள வேண்டும். முதலில் வலப்பக்கம் உடலை வளைக்காமல் சாய வேண்டும். 20 எண்ணிக்கை ஆசன நிலையில் இருந்து பின் இடப் பக்கம் சாய வேண்டும். இவ்வாறு 3 முறை செய்யலாம். பின் படிப்படியாக எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம்.
Justify Full
பலன்கள்:

விலா எலும்புகள் பலப்படும். கபநோய் நீங்கும். இடுப்பு வலிகள் குறையும். பெண்கள் இவ்வாசனத்தைச் செய்வதால் இடுப்பில் சதை போடாமல் தடுக்கலாம்