Monday, May 9, 2011

சென்னை, கோவையில் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி.

இந்தியாவில் மொத்தம் 18 இஎஸ்ஐ கார்ப்பரேஷன் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. சென்னை கே.கே.நகரில் ரூ.600 கோடி மதிப்பிலும், கோவை வரதராஜபுரத்தில் ரூ.430 கோடி மதிப்பிலும் 2 கல்லூரிகள் கட்டப்பட்டு வருகின்றன.

சென்னையில் மருத்துவ பட்ட மேற்படிப்பு நிறுவனம் அமைய உள்ளது. கோவையிலும் இதேபோல் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை வரதராஜபுரத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் குடியிருப்பு, கல்லூரி முதல் மாடி மற்றும் ஆடிட்டோரிய கட்டிடப் பணிகள் 85 சதவீதம் முடிந்துவிட்டது.

மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்குத் தேவையான கருவிகள் டிசம்பரில் வாங்கப்படுகிறது. புதிய ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

இஎஸ்ஐ மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் கூறுகையில், ''கட்டிட பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு இவற்றை இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஆகஸ்டில் ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வுக்கு பின் மருத்துவப் படிப்புக்கு பரிந்துரை செய்யப்படும்” என்றார்.

முதுமலை புலிகள் காப்பகம் திறப்பு : வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி.


வனவிலங்குகள் கணக்கெடுப்புக்காக மூடப்பட்ட முதுமலை புலிகள் காப்பகம் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

முதுமலை காப்பகம்

தமிழகத்தில் உள்ள 6 புலிகள் காப்பகத்தில் முக்கியமானது முதுமலை புலிகள் காப்பகம். முதுமலையில் யானை, சிறுத்தை, கரடி, காட்டெருது, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. வறட்சி மற்றும் வனத்தீ காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதுமலை காப்பகம் மூடப்பட்டது.

கணக்கெடுப்பு

எதிர்பாராமல் பெய்த கோடை மழை காரணமாக காட்டின் பல இடங்களிலும் நீர் தேக்கம் ஏற்பட்டது. இதனால் கடந்த 1-ம் தேதி புலிகள் காப்பகம் திறக்கப்பட்டது. இந்நிலையில் வன விலங்கு கணக்கெடுப்பு பணிக்காக கடந்த 3-ம் தேதி மீண்டும் காப்பகம் மூடப்பட்டது. நேற்று வரை கணக்கெடுப்பு பணிகள் நடந்தன. கடைசி நாளான நேற்று வனவிலங்குகள் கணக்கெடுப்பு குறித்த விபரங்கள் சம்மந்தப்பட்ட குழுக்களிடம் இருந்து வனத்துறையினரால் சேகரிக்கப்பட்டன.

மீண்டும் திறப்பு

வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படுகிறது என வனத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை வனக்கோட்டம்

கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட போளுவாம்பட்டி, பெரியநாயக்கன் பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரகங்களில் கடந்த மார்ச் 11,12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வன உயிரினக் கணக்கெடுப்பு துவங்கியது. ஆச்சர்யமாக காரமடையில் 3 இடங்களிலும், மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதிகளில் 2 இடங்களிலும் புலிகள் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது.

புலிகள் நடமாட்டம்

புலிகள் நடமாட்டம் இருப்பதாக யூகிக்கின்ற இடங்களில் ‘காமிரா டிராப்’ கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. காரமடை வனச்சரகத்தில் வைக்கப்படிருந்த காமிரா டிராப்பில் ஏப்ரல் 17ம்தேதி புலி ஒன்றின் போட்டோ பதிவாகியுள்ளது.

வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி

கோவை வனச்சரகத்தில் இதுவரை நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளில் தற்போதுதான் முதன்முறையாக புலிகளின் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலால் கோவையிலுள்ள வன உயிரின ஆர்வலர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். புலிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் இப்பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் இதனால் வனங்களையும், பிற விலங்குகளையும், அரிய மரங்களையும் காப்பாற்ற முடியும் என்பதே இவர்களது மகிழ்ச்சிக்குக் காரணம்.

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 1706 ஆக உயர்வு

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை நல்ல உயர்வைக் கண்டுள்ளது. 2006ல் 1411 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2010ல் 1706 ஆக அதிகரித்துள்ளது.

2006ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்போது புலிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது தெரிய வந்தது. அதன் பின்னர் புலிகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இதன் விளைவாக தற்போது புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மின்தடை நேரம் குறைகிறது - காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு.


காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து வருவதை தொடர்ந்து மின்தடை சுழற்சி நேரம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மின்தடை அதிகமாக காணப்பட்டு வருகிறது. மின் பற்றாக்குறை காரணமாக இரண்டு மணி நேரம் இருந்த மின்தடை தற்போது 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோக அவ்வப்போது வேறு கரண்ட்டைப் பிடுங்கி விடுகிறார்கள்.

தொடர் மின்தடை காரணமாக உபயோகிப்பாளர்களும், விவசாயிகளும், தொழிற் சாலைகளும், சிறு தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. மின்தடையை கண்டித்து தமிழகத்தில் பகுதிகளில் பேரணிகளும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசுகிறது. நெல்லை மாவட்டத்தில் காற்றாலை முலமாக பெறக்கூடி.ய மின்சாரம் அதிகரித்துள்ளது.

இந்த போதிலும அதிகபட்சமாக 2 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி கிடைக்கப்பெரும். தென்காசி பகுதியை பொறுத்தவரை காற்றாலை மூலம் 600 மெகா வாட் தேவைப்படுகிறது. வீராணம், அமுதாபுரம், கீழவீராணம், செங்கோட்டை, தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், வீரசிகாமணி, சுரண்டை, ஊத்துமலை, அச்சன்புதூர், உபமின் நிலையங்களுக்கு காற்றாலை மூலம் பெறக்கூடிய மின் உற்பத்தி போக மீதமுள்ள மின்சாரம் பவர் கீரிட் நிறுவனத்துக்கு அனுப்பப்படுகிறது.

இந்த காற்றாலை உற்பத்தி அதிகரிப்பு காரணமாக அதிகரிக்கப்பட்டிருந்த மின்தடை சுழற்சி நேரம் கடந்த சில நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. சில நாட்களாக மின்தடை ஏற்படுவது இல்லை. இதனால் மின் உபயோகிப்பார்களும், விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 10 தினங்களாக விவசாயிகளுக்கு முழுமையான அளவில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த மின் உற்பத்தி நெல்லை மாவட்டத்தை பொறுத்துவரை வரும் ஜூலை மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனிமொழி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி மனு செய்கிறார்.


2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான விசாரணையில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி திமுக ராஜ்யசபா எம்.பியும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி மனு தாக்கல் செய்யவுள்ளார்.

மே 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வழக்கு விசாரணைக்கு வரும்போது தான் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரவுள்ளார் கனிமொழி.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கடுமையான குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளார் கனிமொழி. அவரை கூட்டுச் சதியாளராக சிபிஐ வழக்கில் சேர்த்துள்ளது. அவர் தவிர கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி, சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் கரீம் மொரானி, குஸேகான் ரியால்ட்டியின் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் 6ம் தேதி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார் கனிமொழி. அப்போது அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, கனிமொழி ஒரு பெண், எம்.பி. முதல்வரின் மகள் என்ற காரணத்தால் அவரைப் பழிவாங்க வழக்கில் சேர்த்துள்ளனர். அவருக்கும் இந்த ஊழலுக்கும் தொடர்பில்லை. எல்லாவற்றுக்கும் ராசாதான் காரணம். அவர்தான் பொறுப்பு என்று வாதிட்டார்.

கனிமொழி சார்பில் முன்ஜாமீன் கோரி மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை 7ம் தேதியும் நடந்தது. விசாரணைக்குப் பின்னர் மனு மீதான தீர்ப்பை மே 14ம் தேதி வழங்குவதாக நீதிபதி அறிவித்தார்.

இந்த நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கு 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு வருகிறது. அப்போது தான் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரவுள்ளார் கனிமொழி.

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மே 13ம் தேதி வெளியாவது நினைவு இருக்கலாம்.

அமெரிக்கா தாக்குதல் பீதி : இந்திய எல்லையில் பாகிஸ்தான் படைகள் குவிப்பு.

அமெரிக்கா தாக்குதல் பீதி: இந்திய எல்லையில் பாகிஸ்தான் படைகள் குவிப்பு

பாகிஸ்தானில் பதுங்கி இருந்த அல்கொய்தா இயக்க தலைவர் பின்லேடன் அமெரிக்க அதிரடிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த மத்திய மந்திரி ப.சிதம்பரம் “பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது. அதனால்தான் அங்கு பின்லேடன் பதுங்கி இருந்துள்ளார். இதே போல் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் அடைக்கலம் கொடுக்கிறது” என்று கூறினார்.

இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தான் ராணுவ தளபதி கயானி கூறும் போது,

பின்லேடன் பிரச்சினையை வைத்து இந்தியா ஆதாயம் தேட முயற்சிக்கிறது. இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் நாங்கள் கடும் எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என்று எச்சரித்தார்.

இதேபோல பாகிஸ்தானை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்தியாவுக்கு எதிராக கருத்து வெளியிட்டன. இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென இந்திய எல்லை முழுவதும் படைகளை குவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 740 கிலோமீட்டர் தூரத்திற்கு எல்லை கட்டுப்பாட்டு பகுதி உள்ளது. இங்கு அதிக அளவில் பாகிஸ்தான் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதைபோல பனி படர்ந்த பகுதியான சியாச்சின் பகுதியிலும் 110 கிலோமீட்டர் தூரத்திற்கு படைகளை குவித்துள்ளது. இதை இந்திய ராணுவ அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இதனால் எல்லைப் பகுதியில் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் அத்துமீறினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய படைகளும் உஷாராகி வருகின்றன.

இதுபற்றி ராணுவ அதிகாரி ஒருவர் கூறும் போது, நாங்கள் எல்லா நிலைகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தேவைப்படும் நேரத்தில் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம். எப்போதுமே இந்த பகுதியில் நாங்கள் விழிப்புடன் இருப்பது வழக்கம் எனவே எந்த இக்கட்டான சூழ்நிலைக்கும் இடம் தரமாட்டோம் என்றார்.

பின்லேடனுக்கு பாகிஸ்தான் அரசு அடைக்கலம் கொடுத்து வந்ததை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. இதனால் பாகிஸ்தானை அமெரிக்கா நம்பவில்லை எனவே அமெரிக்க படைகள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அமெரிக்க படைகளை பாகிஸ்தானால் எதிர்கொள்ள முடியாது. எனவே திசை திருப்பும் முயற்சியாக இந்தியாவுடன் வம்பு இழுக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால்தான் இந்திய எல்லையில் படைகளை குவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ.491 கோடி சொத்து குவித்த 5 உயர் அதிகாரிகள் ; வருமான வரித்துறை கண்டுபிடித்தது.

ரூ.491 கோடி சொத்து குவித்த 5 உயர் அதிகாரிகள்; வருமான வரித்துறை கண்டுபிடித்தது

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அரவிந்த் ஜோஷி, டினு ஜோஷி, ராஜேஷ் ரஜோரா, பி.எல்.அகர்வால், வனத்துறை அதிகாரி ஆர்.கே.சின்கா ஆகியோர் மொத்தம் ரூ.491 கோடி சொத்து குவித்து இருப்பதாக மத்திய நிதி அமைச்சகத்திடம் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

அவர்கள் பெயரில் உள்ள நிலம் மற்றும் வீடுகளின் மதிப்பு, இதில் சேர்க்கப் படவில்லை.

இவர்களில், அகர்வால் தன்னிடம் வேலை பார்க்கும் வேலைக்காரர்கள் பெயரில் 220 வங்கி கணக்குகளை தொடங்கி, அதில் பணம் போட்டு வைத்திருப்பதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.

அமெரிக்க உளவுப்படை துப்பு துலக்கிய விதமும் பின்லேடன் வீழ்ந்த கதையும்.

அமெரிக்க உளவுப்படை துப்பு துலக்கிய விதமும் பின்லேடன் வீழ்ந்த கதையும்

அன்னிய மண்ணில் 4 ஹெலிகாப்டர்களுடன் நுழைந்து பாகிஸ்தான் ராணுவத்தின் கண்ணில் மண்ணை தூவி விட்டு அமெரிக்க படையினர் சாதித்துகாட்டிய இந்த துணிச்சல் வேறு எந்த நாட்டு ராணுவத்துக்கும் வருமா என்பது கேள்விக்குறியே!

அசகாய சூரர்களாக மாறி ஓசாமாவை வீழ்த்திய கமாண்டோ படையினரை அதிபர் ஒபாமா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது தீவிரவாதத்தின் தலையை துண்டித்துவிட்டோம் என்று வர்ணித்துள்ளார்.

இதற்காக அமெரிக்காவுக்கே தேவைப்பட்ட காலம் ஓரிரு ஆண்டுகள் அல்ல! 10 ஆண்டுகள்!! காலம் கடந்தாலும் பின்லேடனை பழி தீர்த்து தனக்கு ஏற்பட்ட களங்கத்தை அமெரிக்கா துடைத்துக் கொண்டது பாராட்டுக்குரியது.

பின்லேடன் இருப்பிடத்தை மோப்பம் பிடித்தது முதல் அவனை சுட்டு வீழ்த்தியதை அதிபர் ஒபாமா நேரடி சாட்சியாக பார்த்தது வரையிலான சம்பவங்களை பிரபல எழுத்தாளர் பாப் உட்வர்ட் என்பவர் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் விவரித்துள்ளார்.

அல்ஜசீரா தொலைக்காட்சி பேட்டியில் மட்டும் பின்லேடனை பார்த்திருந்த அமெரிக்க உளவுத்துறைக்கு அவர் கருப்பா? சிவப்பா? எத்தனை அடி உயரம் இருப்பார் என்பதெல்லாம் துல்லியமாக தெரியாது. ஆனால் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் தனது கழுகு கண்களை அமெரிக்கா படர விட்டது.

அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை எல்லாம் பயன்படுத்தி பார்த்தார்கள். ஆனால் எதிலும் பின்லேடன் பதுங்கி இருக்கும் இடம் பற்றிய “சிக்னல்” விழவில்லை. ஆனாலும் அமெரிக்க உளவுப்படை சோர்ந்து போகவில்லை.

பின்லேடனின் மிக நெருங்கிய நண்பர் அபு அகமது அல்குவைதி. பின்லேடனின் நட்பு வட்டாரத்தையும், நெருங்கிய வட்டாரத்தையும் துப்பறிந்து வைத்திருந்த உளவுத்துறையினர் அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்தனர். இதற்கு ஒசமா பின்லேடனும் சளைத்தவன் அல்ல. போன், செல்போன், இன்டர்நெட் என்று எதையாவது வைத்திருந்தால் கேபிள் வழியாக கூட அமெரிக்க உளவு படை துப்பறிந்துவிடும் என்று நினைத்து இதை எதையுமே தனது பங்களாவில் வைத்திருக்கவில்லை.

தனது நண்பர் அல்குவைதி மூலம் தகவல்களை பரிமாறியதிலும் புதிய யுக்தியை பின்லேடன் கடைபிடித்தான். அல்குவைதி செல்போன் பேட்டரியை கழட்டிவிட்டுத்தான் பின்லேடன் பங்களாவிற்கு வருவார். யாருக்காவது தகவல் கொடுக்க வேண்டுமென்றால் அல்குவைதி பங்களாவில் இருந்து வெளியே வந்து கால்போன போக்கில் ஓரிரு கிலோ மீட்டர் தூரம் செல்வார். பின்னர் செல்போனுக்கு பாட்டரியை பொருத்தி உயிர் கொடுத்து பேசுவார்.

அப்படி ஒருநாள் அல்குவைதி தனது நண்பருடன் பேசிய தொலைபேசி உரையாடல்தான் அமெரிக்க உளவு படைக்கு துப்பறிய உதவியது. தொலைபேசியில் பேசிய அல்குவைதியின் நண்பர், என்னப்பா, இப்போ நீ எங்கே இருக்கிறாய்? ரொம்ப நாட்களாகவே உன்னை பார்க்க முடியவில்லையே? என்ன நடக்கிறது உன் வாழ்க்கையில்? இப்போது என்ன செய்கிறாய்? என்று கேட்டார்.

அதற்கு சுரத்தே இல்லாமல் அல்குவைதி பதில் சொன்னார். முன்னால் இருந்த அதே மக்களுடன்தான் இப்போதும் இருக்கிறேன் என்றார். அதன்பிறகு சிறிது நேரம் மவுனம் நிலவியது. பின்னர் அப்படியா, கடவுள் எல்லாம் நல்லபடியா இருக்க உதவட்டும் என்றார்.

இந்த பதில் தான் அமெரிக்க உளவுப்படைக்கு பொறியில் தட்டியது. யாரோ ஒரு முக்கிய பிரமுகருடன்தான் அல்குவைதி தங்கி இருக்கிறான் என்பதை உறுதி செய்தனர்.

உளவுப்படை கண்டு பிடித்து விடக்கூடாது என்பதால் சங்கேத வார்த்தைகளாலே பேசிய அல்குவைதியின் பேச்சை கூட உளவுப்படை கண்டுபிடித்து அபோதாபாத்தில் பின்லேடன் பதுங்கி இருந்த மாளிகையையும் கண்டுபிடித்தார்கள்.

அதன்பிறகு அந்த வீட்டருகே வேறு ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்தி அமெரிக்க உளவுப்படையினர் தங்கி இருந்து கண்காணித்து வந்தனர். அந்த வீட்டில் சூழ்நிலைக் கைதி போல் ஒருவர் அடைபட்டு கிடந்ததை பார்த்தார்கள். அவர் எப்போதாவது வெளியே வந்து உலாவுவார்.

அவருடைய உயரத்தை அறிந்து கொள்ள செயற்கைகோள் உதவியை நாடினார்கள். செயற்கை கோளும் அந்த வீட்டை அங்குலம் அங்குலமாக ஊடுருவி படம் பிடித்தது. அந்த நபரின் உயரமும் சுமார் 6 அடி என்று கணக்கிட்டு கொடுத்தது.

இப்படி ஒவ்வொரு விஷயமாக தொகுத்துதான் பின்லேடன் பங்களாவை உறுதிபடுத்தினார்கள். பின்லேடன் பங்களாவில் புகுந்து சுட்டுக் கொன்ற அமெரிக்க வீரர்கள் பின்லேடனின் உயரத்தை அளவிட கையில் “டேப்” இல்லாமல் சுற்றும் முற்றும் பார்த்தனர்.

பின்னர் வேறு வழியின்றி 6 அடி உயரம் உள்ள ஒரு வீரரை பின்லேடன் உடல் அருகே படுக்க வைத்தனர். அதை வைத்து பின்லேடனின் உயரத்தை கணக்கிட்டு குறித்துக் கொண்டார்கள். இந்த காட்சியை வெள்ளை மாளிகையில் உயர் அதிகாரிகளுடன் அமர்ந்து நேரடியாக பார்த்து கொண்டிருந்தார் ஒபாமா.

ராணுவ வீரர் ஒருவர் பின்லேடன் உடல் அருகே படுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதை ஒபாமாவால் சகிக்க முடியவில்லை. அருகில் இருந்த அதிகாரிகளிடம் 600 லட்சம் டாலர் மதிப்புள்ள ஹெலிகாப்டரையே அங்கேயே அழிய விட்டிருக்கிறோம். ஒரு சிறிய இஞ்ச் டேப்பை கையோடு எடுத்து போயிருக்க கூடாதா? என்று கேட்டார்.

எந்தவித பின்னணி குரலும், ஓசையும் இல்லாமல் வீடியோ காட்சிகள் பின்லேடன் பங்களாவில் இருந்து நேரடியாக ஒளிபரப்பாகியது. இமை மூடாமல் அந்த காட்சிகளை பார்த்து கொண்டிருந்த ஒபாமாவும் அதிகாரிகளும் மட்டும் பொருள் பொதிந்த விமர்சனங்களை அவ்வப்போது தங்களுக்குள் பேசி கொண்டிருந்தார்கள்.

பின்லேடனை சுட்டு வீழ்த்திவிட்டு அமெரிக்க படையினர் அவனது உடலுடன் வெளியேறியதை பார்த்த பிறகுதான் அதிபர் ஒபாமாவும் அங்கிருந்து எழுந்து சென்றார்.

+2 தேர்வு முடிவுகள் ஒரு பார்வை.


பிளஸ் 2 தேர்வில் ஓசூர் மாணவி முதலிடம் .

பிளஸ் 2 தேர்வில் ஓசூரைச் சேர்ந்த ரேகா என்ற மாணவி முதல் ராங்க் பெற்றுள்ளார்.

ஓசூர் விஜய் வித்யாலயா மெட்ரிக் மேலநிலைப்பள்ளி மாணவியான இவர் 1,190 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.


மாணவி ரேகா பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் :


தமிழ் : 195

ஆங்கிலம் : 195

கணிதம் : 200

இயற்பியல் : 200

வேதியியல் : 200

உயிரியல் 200

ரேகாவின் தந்தை கேசவன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தாயார் மலர்விழி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். ரேகாவுக்கு ஒரே தங்கை, கிருத்திகா. கிருத்திகா பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாணவன் 2ஆம் இடம் பிடித்தார்.

2010-2011 ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 1200க்கு 1187 மதிப்பெண்கள் பெற்று கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த மாணவன் வேல்முருகன் 2ஆம் இடம் பிடித்தார் பெற்றார்.

3வது இடத்தில் 4 மாணவர்கள்

4 மாணவர்கள் 1186 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 3வது இடத்தைப் பிடித்தனர்.

நெல்லை எஸ்ஜெஎஸ்எஸ்ஜெ பள்ளி மாணவி வித்ய சகுந்தலா.

பெரியகுளம் ரகுநாதன்,

நாமக்கல் சிந்துகவி,

ஓசூர் பி.எஸ்.ரேகா.


+2 தேர்வு முடிவு: 85.9 சதவீத தேர்ச்சி
.

பிளஸ் 2 தேர்வு எழுதியதில் 85.9 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தமிழில் முதல் 3 இடம்: விழுப்புரம் மாணவர்கள் சாதனை.


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., அகடெமி மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்கள் தமிழில் மாநில அளவில் முதல் 3 இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

மாணவன் கோகுலகிருஷ்ணன் 198 மார்க்குகள் பெற்றுள்ளார். அவரது மொத்த மதிப்பெண் 1172.

2வது இடம் பிடித்த மாணவர் எஸ். மகேஸ்வரன் 198 மதிப்பெண்கள் தமிழில் பெற்றுள்ளார். அவரது மொத்த மார்க்குகள் 1156.

3வது இடம் பிடித்த மாணவர் தினகரன். தமிழில் 198 மார்க்குகள் பெற்றுள்ளார். அவரது மொத்த மதிப்பெண் 1144 ஆகும்.

ஆங்கிலத்தில் முதல் 3 இடம் : ஒசூர் மாணவிகள் சாதனை.

பிளஸ் 2 தேர்வில் ஆங்கில மொழி பாடத்தில், ஓசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவிகள் மாநிலத்தில் முதல் 2 இடங்களை பிடித்துள்ளனர்.

மாணவி கே.ரேகா ஆங்கிலத்தில் 200க்கு 195 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அவரது மொத்த மார்க்குகள் 1190. இவர் பிளஸ் 2 தேர்வில் மாநிலத்திலேயே முதல் ரேங்க் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இடத்தையும் ஓசூர் விஜய வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிதான் பெற்றுள்ளார். 2ம் இடம் பிடித்த மாணவியின் பெயர் பி.எஸ்.ரேகா. இவர் பெற்ற மார்க் 195. மொத்த மதிப்பெண்: 1186.

ஆங்கிலத்தில் 3வது இடத்தை சென்னை சூளைமேடு டி.ஏ.வி., மெட்ரிக் பள்ளி மாணவி கே.அட்சயா பிடித்துள்ளார்.

கணிதத்தில் 2720 பேர் 200க்கு 200

பிளஸ் 2 தேர்வில் கணிதத் தேர்வில் 2720 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

வேதியியலில் 1243 பேர் 200க்கு 200

வேதியியல் பாடத்தில் 1243 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இயற்பியலில் 646 பேர் 200க்கு 200

+2 தேர்வில் இயற்பியல் பாடத்தில் 646 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

உயிரியலில் 615 பேர் 200க்கு 200

பிளஸ் 2 தேர்வில் 615 மாணவர்கள் உயிரியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்

கணித அறிவியலில் 223 பேர் 200க்கு 200

பிளஸ் 2 தேர்வில் கணித அறிவியலில் 223 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்

தாவரவியல் பாடத்தில் 4 பேர் 200க்கு 200

பிளஸ் 2 தேர்வில் தாவரவியல் பாடத்தில் 4 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 223 பேர் 200க்கு 200

கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 223 பேர் 200க்கு 200 மார்க்குகள் பெற்றுள்ளனர்.

விலங்கியலில் யாரும் 200 மார்க் பெறவில்லை


கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. விலங்கியல் பாடத்தில் இந்த ஆண்டு ஒருவர் கூட 200க்கு 200 மார்க்கு பெறவில்லை.


பிறமொழிப்பாடம் : முதல் 3 இடம் பெற்ற மாணவர்கள்.

பிறமொழிப்பாடம் - முதலிடம்.

செங்கல்பட்டு மாவட்டம் எஸ்.ஆர்.டி.எப்., பள்ளி மாணவி சந்தியா சமஸ்கிருதம் மொழிப்பாடம் எடுத்து 1191 மொத்த மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார்.

பிறமொழிப்பாடம் - இரண்டாவது இடம்.

இரண்டாவது இடத்தை சென்னை தி.நகர் வித்யோதயா மெட்ரிக் பள்ளி மாணவி ஜெயப்பிரதா பி‌டித்துள்ளார். அவர் பிரெஞ்சை மொழிப்பாடமாக எடுத்திருந்தார். அவரது மொத்த மதிப்பெண் 1190.

பிறமொழிப்பாடம் - மூன்றாவது இடம்.

3வது இடத்தை பிரெஞ்சு மொழிப்பாடம் எடுத்து படித்த செங்கல்பட்டு எச்.எப்.சி., பள்ளி மாணவி மகாலட்சுமி 1189 மார்க் எடுத்து பிடித்துள்ளார்.


டாக்டருக்கு படித்து ஏழைகளுக்கு சேவை செய்வேன் : மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவி ரேகா பேட்டி.
டாக்டருக்கு படித்து ஏழைகளுக்கு  சேவை செய்வேன்: மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவி ரேகா பேட்டி

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் ஓசூர் விஜய் வித்யாலயா பள்ளி மாணவி ரேகா 1200-க்கு 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மாணவி ரேகா 10-ம் வகுப்பு படித்த போது 479 மதிப்பெண்கள் எடுத்து ஓசூர் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்.

மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசிரியர்கள் கேக் ஊட்டி மகிழ்ந்தனர். சக மாணவிகள் அவரை தூக்கி கொண்டு பள்ளியை சுற்றி ஊர்வலமாக வந்து உற்சாகமாக கொண்டாடினர்.

மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவி ரேகா நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் இடைவிடாமல் தொடர்ந்து படித்தேன், எனக்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர், பெற்றோர் என அனைவரும் உதவி செய்தனர். நான் மாநிலத்தில் முதலிடம் பெற்றது சந்தோசமாக இருக்கிறது. நான் டாக்டருக்கு படித்து ஏழைகளுக்கு சேவை செய்வேன்.

மற்ற மாணவிகளை போலவே நானும் படித்தேன். பாடத்தை புரிந்து கொண்டு படித்ததால் நான் இந்த சாதனையை படைத்தேன். இதற்காக நான் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மாநிலத்தில் முதலிடம் பெறுவேன் என்று நினைக்கவே இல்லை, எனக்கு சந்தோசமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


ரத்து செய்யப்படும் டிக்கெட்டால் தென்மாவட்ட ரெயில்களில் தினமும் ரூ.1 லட்சம் வருமானம்.

ரெயில்களில் அலைமோதும் கூட்டம்: ரத்து செய்யப்படும் டிக்கெட்டால் லட்சக்கணக்கில் வருமானம்; தென்மாவட்ட ரெயில்களில் தினமும் ரூ.1 லட்சம் கிடைக்கிறது

தொலைதூரங்களுக்கு செல்பவர்கள் ரெயில் பயணத்தையே விரும்புகிறார்கள். இதனால் ரெயில் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குடும்பத்தோடு செல்பவர்கள் பயண திட்டத்தை முன்கூட்டியே திட்டமிட்டு 2 மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறார்கள். அப்படி இருந்தும் கோடை விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை.

தென் மாவட்டங்களுக்கு 25க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்களில் அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரம் வரை முன்பதிவு டிக்கெட்டுகள் இல்லை. ஒவ்வொரு ரெயிலிலும் அதிகபட்சமாக 300 காத்திருப்போர் டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.

டிக்கெட்டுகள் ரத்தானால் நமக்கு வாய்ப்பு கிடைக்குமே என்ற நம்பிக்கையில்தான் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வாங்குகிறார்கள். பெரும்பாலான நாட்களில் அதிக அளவில் டிக்கெட்டுகள் ரத்தாவதில்லை. வேறு வழியின்றி வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டை கடைசி நேரத்தில் ரத்து செய்து விட்டு பஸ்களில் செல்கிறார்கள்.

குறைந்த பட்சம் ஒவ்வொரு ரெயிலிலும் 200 வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் தினமும் ரத்து செய்யப்படுகிறது. ஒரு டிக்கெட்டை ரத்து செய்தால் ரூ.20 கட்டணமா வசூலிக்கப்படுகிறது.

அந்த வகையில் தென்மாவட்ட ரெயில்கள் மூலம் தினமும் சராசரியாக ரூ.1 லட்சம் ரெயில்வேக்கு வருமானம் கிடைக்கிறது.

சென்ட்ரலில் இருந்து வடமாநிலங்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதேபோல் தென்னக ரெயில்வே, தென் மத்திய ரெயில்வே, மேற்கு ரெயில்வே, வட கிழக்கு ரெயில்வே, வடக்கு ரெயில்வே உள்பட அனைத்து ரெயில்வே கோட்டங்களையும் கணக்கிட்டால் ரெயில்வே துறை ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகள் மூலம் மட்டுமே தினமும் பல லட்சங்களை வருமானமாக குவித்து வருகிறது.

பாகிஸ்தானில் இருந்து தாவூத் இப்ராகிம் ஓட்டம் ; மகன் திருமணத்தை துபாயில் நடத்த திட்டம்.

பின்லேடன் கொலையால் பீதி: பாகிஸ்தானில் இருந்து தாவூத் இப்ராகிம் ஓட்டம்; மகன் திருமணத்தை துபாயில் நடத்த திட்டம்

1993-ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் நூற்றுக் கணக்கானோர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் மும்பையில் இருந்த வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டான்.

அவனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து கராச்சியில் ரகசிய இடத்தில் தங்க வைத்தது. தாவூத் இப்ராகிம் அங்கிருந்தவாறே லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் மூலம் இந்தியாவில் நாசவேலையில் ஈடுபட்டு வந்தான். அவனை தங்களிடம் ஒப்படைக் குமாறு இந்தியா கூறியது.

ஆனால் பாகிஸ்தான் தாங்கள் நாட்டில் தாவூத் இப்ராகிம் இல்லை என்று கூறி வந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்த சர்வதேச தீவிரவாதி பின்லேடனை அமெரிக்க படைகள் சுட்டுக்கொன்றது. இந்த அதிரடி தாக்குதலால் பாகிஸ்தானில் உள்ள தாவூத் இப்ராகிம் மற்றும் தீவிரவாதிகள் பீதி அடைந்துள்ளனர்.

இதுபோன்ற தாக்குதலை அமெரிக்கா தொடர்ந்து நடத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதன் காரணமாக தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருந்து தப்பி ஓடிவிட்டான். அவன் சவுதி அரேபியாவில் தஞ்சம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. தாவூத் இப்ராகிமுடன் அவனது குடும்பத்தினரும் கராச்சியை காலி செய்து விட்டனர்.

இதற்கிடையே தாவூத் இப்ராகிம் மகன் மொயினுக்கும், பாகிஸ்தானில் பிறந்த கனடா நாட்டு வம்சாவளிளைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களது திருமணத்தை வருகிற 28-ந் தேதி நடத்த திட்டமிட்டு இருந்தான். தன்னை இந்தியா தேடுவதால் தாவூத் இப்ராகிம் தனது மகன் திருமணம் நடைபெறும் இடத்தை ரகசியமாக வைத்து உள்ளான். 2 மாதத்துக்கு முன்பே திருமண தேதியை முடிவு செய்து விட்டான்.

இந்த நிலையில் பின்லேடனை அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி கொன்று விட்டது. இதனால் பீதி அடைந்த தாவூத் இப்ராகிம் தனது மகன் திருமணத்தை துபாயில் நடத்த திட்டமிட்டுள்ளான். என்றாலும் துபாயில் எங்கு நடைபெறும் என்பதையும் ரகசியமாக வைத்துள்ளான்.

கராச்சியில் தனது மகன் திருமணத்தை நடத்தினால்தான் பாகிஸ்தானில் அடைக்கலம் புகுந்து இருப்பது உலக நாடுகளுக்கு வெளிப் படையாக தெரிந்து விடும் என்பதால் தாவூத் இப்ராகிம் திருமண இடத்தை மாற்றிவிட்டான்.

திருமணத்துக்கு நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்துள்ளான். இந்திய உளவுத்துறை அதிகாரிகள் தாவூத் இப்ராகிம் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது. எனவே மகன் திருமணத்தில் தாவூத் இப்ராகிம் வெளிப்படையாக பங்கேற்பதும் அவனுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

1993-ம் ஆண்டு தலைமறைவுக்கு பின் தாவூத் இப்ராகிம் எந்த நிகழ்ச்சியிலும் வெளிப் படையாக பங்கேற்காமல் இருந்தான். எனவே மகன் திருமணத்தில் அவன் கலந்து கொண்டால் சர்வதேச போலீஸ் உதவியுடன் அவனை பிடிக்கவும் இந்தியா முயற்சி மேற்கொள்ளும் என்று தெரிகிறது.

இந்தியர்களின் கறுப்பு பணம் பற்றி வருமானவரித்துறை தீவிர ஆய்வு.

வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட இந்தியர்களின் கறுப்பு பணம் பற்றி வருமானவரித்துறை தீவிர ஆய்வு

இந்தியாவை சேர்ந்த சிலர் சுவிட்சர்லாந்து, வெர்ஜீன் தீவுகள் மற்றும் பனாமஸ் நாடுகளில் உள்ள வங்கிகளில் தங்கள் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். இது இந்தியாவின் பொருளாதாரத்தை கேள்விகுறியாக்கி உள்ளது.

எனவே, அங்கு கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் குறித்த விவரத்தை வருமான வரித்துறை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளது. அதன்படி சுவிட்சர்லாந்து, பனாமஸ், வெர்ஜீன் தீவு ஆகிய நாடுகளுக்கு தனிப்பட்ட முறையிலோ அல்லது வியாபார ரீதியாகவோ சென்று வருவோரை ரகசியமாக கண்காணித்து வருகிறது.

இதில், வருமானவரி துறையின் விமான உளவு பிரிவு ஈடுபட்டுள்ளது. இந்த பிரிவு சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து பயணம் செய்தவர்களின் விவரங்களை திரட்டியுள்ளது.

இதுவரை 1000 பேரின் பயண தகவல்கள் திரட்டப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சுமார் 20 லட்சம் விமான பயணங்கள் மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் தங்கள் பயணம் குறித்த உண்மையான தகவல்களை கூறவில்லை என வருமானவரித் துறையினரின் புலனாய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் பலர் தங்கள் முதலாளிகளுக்கு பினாமியாக செயல்பட்டிருக்கலாம். எனவே தகவல் தராத வரி ஏய்ப்பாளர்களிடம் தகவல் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட உள்ளது.

இந்த தகவலை வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

காதலிக்க மறுத்த மாணவியை கொலை செய்து கல்லூரி வளாகத்தில் புதைத்த ஊழியர்.

காதலிக்க மறுத்ததால் மாணவியை கொலை செய்து கல்லூரி வளாகத்தில் புதைத்தார்: ஊழியர் கைது-மறியல்

ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் சத்தியநாராயணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாரிகா (வயது24). இவர் அதே மாவட்டம் பொன்னேகால் பகுதியில் உள்ள அன்னிபெசன்ட் கல்லூரியில் பி.எட் படித்து வந்தார்.

கடந்த 1-ந்தேதி சாரிகா கல்லூரிக்கு சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் கல்லூரிக்கு சென்று விசாரித்தபோது சாரிகா மதியம் கல்லூரியில் இருந்து வெளியில் சென்றார். அதன் பிறகு அவர் கல்லூரிக்கு வரவில்லை என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே சாரிகாவின் செல்போன் மூலம் போலீசார் துப்பு துலக்கினார்கள். அப்போது கல்லூரி ஊழியர் ராஜுவிடம் இருந்து அவருக்கு நிறைய எஸ்.எம்.எஸ். வந்திருந்தது.

இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது அவர் மாணவி சாரிகாவை கொலை செய்ததாக கூறினார். ராஜு மாணவி சாரிகாவை ஒருதலையாக காதலித்து வந்தார். இந்த காதலை சாரிகா ஏற்கவில்லை.

இதற்கிடையே சாரிகாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் மாப்பிள்ளை தேடி வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜு, கல்லூரிக்கு வந்த மாணவி சாரிகாவிடம் தகராறு செய்துள்ளார். அவர்களிடையே மோதல் வலுத்ததால் ஆத்திரமடைந்த ராஜு துப்பட்டாவால் சாரிகா கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

பின்னர் பிணத்தை கல்லூரி வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது. இதையடுத்து ராஜுவை போலீசார் கைது செய்தனர். கல்லூரி வளாகத்தில் புதைக்கப்பட்ட மாணவி சாரிகா பிணம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் மாணவியின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிணத்துடன் பெற்றோரும் உறவினர்களும் போலீஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிக்கு விரைவில் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். கலெக்டர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாணவிகளின் உறவினர்கள் சிலர் கல்லூரிக்குள் புகுந்து பொருட்களை அடித்து உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கொச்சியிலிருந்து புறப்பட்ட மும்பை கப்பலில் “திடீர்” தீ.

கொச்சியிலிருந்து புறப்பட்ட மும்பை கப்பலில் “திடீர்” தீ

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து மும்பைக்கு எம்.வி.ஓர்கிட் என்ற சரக்கு கப்பல் புறப்பட்டது. கண்ணூர் அருகே ஆழ்கடலில் இருந்து 40 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் கப்பல் சென்று கொண்டிருந்தது.

அப்போது கப்பலில் தீடீர் என்று தீப்பிடித்தது. இது குறித்து கொச்சி துறைமுகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கொச்சி மற்றும் மங்களபுரத்தில் இருந்து கப்பல் படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் கப்பலில் பெரிய சேதம் ஏதும் இல்லை.

கப்பல் ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினர். கப்பலில் திடீர் என்று தீப்பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.