Monday, May 9, 2011

அமெரிக்கா தாக்குதல் பீதி : இந்திய எல்லையில் பாகிஸ்தான் படைகள் குவிப்பு.

அமெரிக்கா தாக்குதல் பீதி: இந்திய எல்லையில் பாகிஸ்தான் படைகள் குவிப்பு

பாகிஸ்தானில் பதுங்கி இருந்த அல்கொய்தா இயக்க தலைவர் பின்லேடன் அமெரிக்க அதிரடிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த மத்திய மந்திரி ப.சிதம்பரம் “பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது. அதனால்தான் அங்கு பின்லேடன் பதுங்கி இருந்துள்ளார். இதே போல் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் அடைக்கலம் கொடுக்கிறது” என்று கூறினார்.

இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தான் ராணுவ தளபதி கயானி கூறும் போது,

பின்லேடன் பிரச்சினையை வைத்து இந்தியா ஆதாயம் தேட முயற்சிக்கிறது. இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் நாங்கள் கடும் எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என்று எச்சரித்தார்.

இதேபோல பாகிஸ்தானை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்தியாவுக்கு எதிராக கருத்து வெளியிட்டன. இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென இந்திய எல்லை முழுவதும் படைகளை குவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 740 கிலோமீட்டர் தூரத்திற்கு எல்லை கட்டுப்பாட்டு பகுதி உள்ளது. இங்கு அதிக அளவில் பாகிஸ்தான் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதைபோல பனி படர்ந்த பகுதியான சியாச்சின் பகுதியிலும் 110 கிலோமீட்டர் தூரத்திற்கு படைகளை குவித்துள்ளது. இதை இந்திய ராணுவ அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இதனால் எல்லைப் பகுதியில் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் அத்துமீறினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய படைகளும் உஷாராகி வருகின்றன.

இதுபற்றி ராணுவ அதிகாரி ஒருவர் கூறும் போது, நாங்கள் எல்லா நிலைகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தேவைப்படும் நேரத்தில் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம். எப்போதுமே இந்த பகுதியில் நாங்கள் விழிப்புடன் இருப்பது வழக்கம் எனவே எந்த இக்கட்டான சூழ்நிலைக்கும் இடம் தரமாட்டோம் என்றார்.

பின்லேடனுக்கு பாகிஸ்தான் அரசு அடைக்கலம் கொடுத்து வந்ததை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. இதனால் பாகிஸ்தானை அமெரிக்கா நம்பவில்லை எனவே அமெரிக்க படைகள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அமெரிக்க படைகளை பாகிஸ்தானால் எதிர்கொள்ள முடியாது. எனவே திசை திருப்பும் முயற்சியாக இந்தியாவுடன் வம்பு இழுக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால்தான் இந்திய எல்லையில் படைகளை குவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: