Saturday, July 30, 2011

கியாஸ் விலை உயர்வுக்கு இந்தியா - சீனா காரணம் ; ஒபாமா குற்றச்சாட்டு.

அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்: கியாஸ் விலை உயர்வுக்கு    இந்தியா-சீனா காரணம்;    ஒபாமா குற்றச்சாட்டு

கியாஸ் விலை உயர்வுக்கு இந்தியா- சீனாதான் காரணம் என அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார். எரிபொருள் வருகிற 2025-ம் ஆண்டில் அமெரிக்க வாகனங்களில் எரி பொருள் பயன்பாடு திறன் ஊக்குவிப்பு திட்டம் தொடக்க விழா வாஷிங்டனில் நடந்தது. அதில் அதிபர் ஒபாமா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த பல ஆண்டுகளாக எரிபொருள் விலை உயர்வால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளே காரணமாகும். ஏனெனில், அங்கு அதிக அளவில் எரிபொருள் பயன் படுத்தப்படுகிறது. அந்த நாடுகளில் தேவை அதிகரிப்பால்தான் அமெரிக்காவில் கியாஸ் விலை அதிகரித்துள்ளது. எனவே 2012 முதல் 2016-ம் ஆண்டிற்குள் குறைந்த அளவு எரிபொருள் கியாஸ் மூலம் அதிக தூரம் ஓடக் கூடிய கார்கள் மற்றும் எடை குறைந்த சரக்கு ஏற்றும் வாகனங்களை தயாரிக்கும்படி கம்பெனிகளுடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

போர்டு, ஜி.எம்., ஹோண்டா, ஹீண்டாய், டொயோடா உள்ளிட்ட முக்கிய கம்பெனிகளுடன் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இக்கம் பெனிகள் தயாரிக்கும் 90 சதவீத வாகனங்கள் அமெரிக்காவில் விற்பனை ஆகின்றன. வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணை அளவை குறைப்பதற்காகத்தான் இந்த ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

இவ்வாறு அதிபர் ஒபாமா பேசினார்.

மு.க. ஸ்டாலினை விடுவித்தது போலீஸ்.


திமுகவினரின் பெரும் போராட்டத்தைத் தொடர்ந்து, முன்னாள் துணை முதல்வர் முக ஸ்டாலினை விடுவிக்க போலீசாருக்கு உத்தரவிட்டது தமிழக அரசு.

இன்று காலை கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் மதியம் 2 மணி வாக்கில் விடுவிக்கப்பட்டார். ஸ்டாலினுடன் வந்த பழனிமாணிக்கம் உள்ளிட்ட திமுக தலைவர்களும் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக தனது கைது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "ஆகஸ்ட் 1-ம் தேதி திமுக நடத்தவிருக்கும் பெரும் அறப்போரை நசுக்கவே என்னைக் கைது செய்துள்ளது அதிமுக அரசு," என்று கூறியிருந்தார்.

அவரது கைதைக் கண்டித்து திமுகவினர் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று பிற்பகல் அவரை போலீஸார் விடுவித்துவிட்டனர்.

ஸ்டாலின் கைது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருவாரூர் மாவட்ட எஸ்பி, "ஸ்டாலினை நாங்கள் கைது செய்யவில்லை. மாணவர் ஒருவர் விபத்தில் இறப்பதற்குக் காரணமான சம்பவம் தொடர்பாக மாவட்ட திமுக செயலர் பூண்டி கலைவாணனிடம் விசாரணை நடத்த வந்தோம்; அவரை ஒப்படையுங்கள் என்றோம்.

அதற்கு ஸ்டாலின் தரப்பு மறுத்ததுடன் தானாகவே சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கைதாகினர். அவர்களை பாதுகாப்பாக திருவாரூர் அழைத்து வந்தோம். தற்போது, கலைவாணனை மட்டும் விசாரணைக்கு நிறுத்தி வைத்து, மற்றவர்களை விடுவித்துவிட்டோம்," என்றார் அவர்.

இதைத் தொடர்ந்து, கலைவாணனைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மண்டபத்தை விட்டு வெளியேறினர்.

நிலவாரப்பட்டி நில அபகரிப்பு வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் கைது !


சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கு மற்றும் சேலம் பிரிமியர் ரோலர் மில் நிலம் அபகரிப்பு வழக்குகளில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த வழக்குகளில் அவர் முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் சரண் அடைந்து 3 நாள் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அதன் பிறகு சேலம் கோர்ட்டில் ஜாமீன் வாங்கிக் கொள்ளலாம் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் அவர் சரண் அடைந்தார். அவரிடம் 3 நாட்கள் போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தினமும் காலை 8 மணிக்கு சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

நேற்று முன்தினமும், நேற்று காலையும் அவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு வந்து கையெழுத்து போட்டு சென்றார். இன்று காலை கையெழுத்து போட 7-50 மணிக்கே அவர் போலீஸ் நிலையத்தில் காத்து இருந்தார். ஆனால் 8-05 மணி வரை அவர் வெளியே வரவில்லை.

திடீரென்று போலீஸ் நிலையம் முன்பு நூற்றுக் கணக்கான துப்பாக்கி ஏந்திய போலீசாரும், அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டனர். ஏற்கனவே தி.முக. தொண்டர்களும் குவிந்து இருந்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை உருவாகியது. தொண்டர்கள் போலீஸ் அராஜகம் ஒழிக என்று கோஷம் எழுப்பினார்கள்.

போலீசாருக்கும், தி.முக.வினருக்கும் வாக்குவாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது. அப்போது துணை போலீஸ் கமிஷனர் சத்யப்பிரியா வந்தார். அதன் பிறகு வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டதாக அறிவித்தனர்.

பின்னர் வீரபாண்டி ஆறுமுகம் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். இதைப் பார்த்த தி.முக. தொண்டர்கள் ஆவேசம் அடைந்து வேன் முன்பு படுத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் தடியடி நடத்தி தி.மு.க. வினரை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் வீரபாண்டி ஆறுமுகத்தை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். பின்னர் அவர் அய்யந்திருமாளிகையில் உள்ள 4-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு ஸ்ரீவித்யா வீட்டில் ஆஜர் செய்யப்பட்டார். அவரை அடுத்த மாதம் 12-ந் தேதி வரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து அவரை கோவை மத்திய சிறையில் அடைக்க போலீசார் பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்றனர். தாசநாயக்கன் பட்டியைச் சேர்ந்த பாலமோகன் ராஜ் என்பவரின் ரூ 4 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்து கொண்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ரூ.4 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு

சேலம் நிலவாரப்பட்டியில் இருக்கும், பாலமோகன்ராஜ் என்பவரின் 20469 சதுரடி நிலம் சேலம், நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.

இந்த இடத்தை அப்போதைய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தனக்கு வேண்டும் என்று சொல்லுவதாக சொல்லி அனுப்பியதாக, பாரப்பட்டி சுரேசும், கவுசிகபூபதியும், 25.3.2007 அன்று தன்னை வந்து பார்த்து பேசியதாகவும், தனக்கு இடத்தை விற்க விருப்பமில்லை என்று சொன்னதாகவும், ஆனால் விடாமல் தொல்லை செய்து, 27.3.2007 அன்று காலையில், கவுசிகபூபதி தன்னை வந்து அழைத்துக்கொண்ட பூலாவாரியில் உள்ள அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வீட்டுக்கு கூடிப்போனதாகவும், அங்கிருந்த வீரபாண்டி ஆறுமுகம் தன்னை அடித்து, மாரியாதையாக நிலத்தை எழுதி கொடுக்கவேண்டும் என்று மிரட்டியதாகவும், அன்று, மாலை கவுசிகபூபதியும், பத்திரம் எழுதும் சுந்தரமும் தன்னை வந்து பார்த்து நிலம் சம்பந்தமான விவரங்களை கட்டாயமாக பறித்துக்கொண்டு சென்றதாகவும், பின்னர், 28.3.2007 அன்று காலையில் தனக்கு சொந்தமான நிலத்தை எழுதிவாங்கிக் கொண்டதாகவும், நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்துக்கு நாற்பது இலட்சம் மட்டும் கொடுத்து ஏமாற்றி விட்டதாகவும் பாலமோகன்ராஜ் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நிலம், சேலம் மாவட்டகாவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வந்தாலும், பாலமோகன்ராஜ் இடத்தை பறித்தது, பத்திரம் பதிவு செய்தது எல்லாம் சேலம் மாநகர எல்லையில் வருவதால் இந்த வழக்கை சேலம் மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிவு செய்துள்ளார்கள்.

வீரபாண்டி ஆறுமுகம், அவரது அண்ணன் மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிகபூபதி உட்பட எட்டுப்பேர் மீது வழக்கு பதிவு செய்து, அதில் வீரபாண்டி ஆறுமுகத்தை 306/1 உட்பட நான்கு பிரிவுகளில் கைது செய்துள்ளனர், சேலம் போலீசார்.

நேற்று இரவோடு இரவாக, சேலம் காவல்துறையில் வீரபாண்டி ஆறுமுகத்தின் விசிவாசியாக இருந்த காவல் துறை அதிகாரிகளான ஐ.எஸ்.இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, அழகாபுரம் இன்ஸ்பெக்டர் கண்ணன் இருவரும் இராமநாதபுரம் மாவட்டத்திற்கும்,கிச்சிப்பாளையம் தங்கவேலு திருநெல்வேலி மாவட்டத்திற்கும், அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சங்கர் விழுப்புரம் மாவட்டத்திற்கும் மாற்றப் பட்டுள்ளார்கள்.

திருவாரூர் அருகே மு.க. ஸ்டாலின் திடீர் கைது.



திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டார்.

திமுக பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் திருத்துறைப் பூண்டி அருகே மொழிப்போர் தியாகி தொடர்பான கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று இரவு தஞ்சாவூருக்கு வந்திருந்தார்.

பின்னர் இன்று காலை திருவாரூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். திருவாரூர் மாவட்ட எல்லையில், திருத்துறைப்பூண்டி அருகே கோவில்வன்னி என்னும் இடத்தில் அவருக்கு வரவேற்பு கொடுக்க திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட தி.மு.க.வினர் காத்திருந்தனர்.

அங்கே மு.க.ஸ்டாலின் வந்ததும், போலீஸார் அவரிடம் ஒரு விசாரணை உள்ளது என்று கூறினர். என்ன என்று கேட்டபோது, சமச்சீர் கல்வியை அமலாக்கக் கோரி திமுகவினர் போராட்டம் நடத்தியபோது பள்ளியில் இருந்து மாணவர்களை வலுக்கட்டாயமாக பஸ்ஸில் திரும்பி அனுப்பினர். அப்போது, கொரடச்சேரி அருகே பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளானதில், திமுகவினரால் திருப்பி அனுப்பப்பட்ட விஜய் என்ற மாணவர் விபத்தில் பலியானார்.

இதற்கு பூண்டி கலைவாணன்தான் காரணம். எனவே விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.

பூண்டி கலைவாணனை ஒப்படைக்க இயலாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சாலைமறியல் போராட்டமும் நடந்தது. இதனால் ஸ்டாலினையும் சேர்த்து திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர்கள் அழகு திருநாவுக்கரசு, மதிவாணன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், விஜயன் எம்.பி. உள்பட சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடைகள் அடைப்பு

ஸ்டாலின் கைதான சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது திமுகவினர் மத்தியில். திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திமுகவினர் தொடர்ந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் கைது .



திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்த மாணவன் விஜய். நேற்று காலை திமுகவினர் நடத்திய சமச்சீர் கல்விக்கு ஆதரவான வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தின் காரணமாக வகுப்புக்கும் செல்லாமல், போராட்டத்திலும் கலந்துகொள்ளாமல், இந்த மாணவன் கிளரியம் என்ற கிராமத்திற்கு அரசு பேருந்தில் ஏறிச் சென்றான்.

அப்போது எதிர்பாராத விதமாக அரசு பேருந்து கவிழந்ததில் இந்த மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேலும் 18 பேர் காயம் அடைந்தனர். இந்த பிரச்சனைக்கு மாணவர்களை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி வெளியில் அனுப்பியதால்தான், அந்த மாணவன் அந்த பேருந்தில் செல்ல நேரிட்டது. மாணவர்களை வெளியே அனுப்பியது திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் என்று போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுடன் காரில் செல்லும்போது கைது செய்துள்ளனர்.

திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனை கைது செய்ய வந்த போலீசாரிடம், அப்பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், என்ன வழக்கு என்று கூறாமல் ஒப்படைக்க முடியாது என்று கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவினரின் எதிர்ப்பை மீறிய போலீசார் பூண்டி கலைவாணனை கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்படியானால் தானும் வருகிறேன் என்று கூறி போலீஸ் வாகனத்தில் மு.க.ஸ்டாலின் ஏறினார். பூண்டி கலைவாணனுடன் மு.க.ஸ்டாலினும் போலீஸ் வாகனத்தில் சென்றுள்ளதால் அப்பகுதியில் உள்ள திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்துறைப்பூண்டி போகும் வழியில் உள்ள ஆலத்தம்பாடியில் போலீசார் பூண்டி கலைவாணனை கைது செய்தனர்.

இவர்களுடன் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், எம்பி ஏகேஎஸ் விஜயன், முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் மதிவாணன் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உள்பட 300 பேர் காவல்துறை வாகனத்தில் ஏறினர்.

வீரபாண்டி ஆறுமுகம் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.



காவல் நிலையத்துக்கு கையெழுத்து போடச் சென்ற வீரபாண்டி ஆறுமுகத்தை மீண்டும் கைது செய்தனர் போலீசார்.

30.07.2011 அன்று காலை 8 மணிக்கு குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு கையொப்பம் இடச் சென்ற திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை, வேறொரு வழக்கில் மீண்டும் கைது செய்த சேலம் போலீசார் அவரை கோவைக்கு அழைத்துச் சென்றனர்.

அவர் மீது இன்னொரு நிலப்பறிப்பு வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கே நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

வீரபாண்டி ஆறுமுகம் இன்று மீண்டும் கைது.



காவல் நிலையத்துக்கு கையெழுத்து போடச் சென்ற வீரபாண்டி ஆறுமுகத்தை மீண்டும் கைது செய்த போலீசார்.

அங்கமாள் நகர் மற்றும் பிரிமியர் மில் நில அபகரிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 25.07.2011 மற்றும் 26.07.2011, 27.07.2011 ஆகிய மூன்று நாட்களும் சேலம் மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார்.

மூன்று நாட்கள் போலீஸ் விசாரணைக்கு உட்பட்டிருந்த வீரபாண்டி ஆறுமுகம், 27ஆம் தேதி மாலை நீதிமன்றத்தால் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டார்.

நீதிமன்ற மறு உத்தரவு வரும்வரை தினமும் காலை 8 மணிக்கு சேலம் மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் கையொப்பம் இடவேண்டும் என்ற நிபந்தனையுடன் வீரபாண்டி ஆறுமுகம் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் 30.07.2011 இன்று காலை 8 மணிக்கு குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு கையொப்பம் இடச் சென்ற வீரபாண்டி ஆறுமுகத்தை, வேறொரு வழக்கில் மீண்டும் கைது செய்தனர்.

போலீசார் வீரபாண்டி ஆறுமுகத்தை வெளியே அழைத்துக் கொண்டு சென்று உள்ளார்கள்.

இன்று நீதிமன்ற விடுமுறையாக இருப்பதால், நீதிபதியின் வீட்டுக்கு அவரை காவல் நீடிப்பு செய்ய அழைத்துச்சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.

ஆடி அமாவாசை - அப்பாவுக்காக.....!



அமாவாசை


வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியிற் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் "பிதிர் காரகன்" என்கிறோம். சந்திரனை "மாதுர் காரகன்" என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும்.

ஆடி அமாவாசை

பித்ருக்களை வழிபட ஏற்ற காலம் ஆடி மாதம் இந்த மாதமே ஒரு புண்ணிய காலமாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

தினசரி வாழ்வில் பல சோதனைகளை,தடைகளை சந்திக்கிறோம். இவற்றில் பல தோல்விகளுக்கு காரணமே தெரியாது. எதுக்கு இவ்வளவு கஷ்டம் நமக்கு மட்டும் வருது என வேதனைப்படுபவர்கள் பலர். அவர்களுக்கு நான் சொல்லும் ஆலோசனை என்னவென்றால் உங்கள் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையா மல் அவர்களின் ஆசி உங்கள் வம்சத்துக்கு கிடைக்காமல் இருந்தால் உங்கள் வம்சத்தில் பிறக்கும் ஆண்கள், பெண்கள் கடும் துன்பத்திற்கு ஆளாவார்கள். பெண்களுக்கு மண வாழ்க்கை முறிவு, ஆண்களுக்கு தொழில் பாதிப்பு, கடன், வேலை செய்யுமிடத்தில் பல பிரச்சனைகள் என சந்திப்பார்கள்.

இதை தவிர்க்க உங்கள் வம்சத்தில் உங்களுக்கு முன்னால் பிறந்து வாழ்ந்த உங்கள் முன்னோர்களை நினைத்து அவர்களுக்காக ஆற்றின் கரைகளிலோ, கடல் கரைகளிலோ பித்ரு பூஜை, பித்ரு பரிகாரம், பிண்டம் வைத்து வழிபாடு செய்தல் நலம்.

பித்ரு பூஜைக்காக லட்சக்கணக்கிலோ ஆயிரக்கணக்கிலோ செலவு செய்ய வேண்டாம். எள், மாவு, வாழைக்காய் என சில பொருட்களை பிராமணர்களிடம் கொடுத்து இதற்கு முன் வாழ்ந்த என் வம்சத்தார் 32 தலைமுறையினருக்கு ஒரே சமயத்தில் ஆத்ம சாந்தி செய்யலாம்.இதை ஆடி அமாவாசையில் செய்தால் இந்த பரிகாரம் உடனே உங்கள் முன்னோர்களுக்கு சென்று சேரும். மகிழ்ச்சியில் உங்களை ஆசிர்வாதிப்பார்கள்.

அதன் பின் வீடு வந்து மதியம் காக்கைக்கு சாதம் வைத்து பிறகு உண்ணவும். அன்று மாமிசமோ, மதுவோ எடுத்துக்கொள்ளக்கூடாது. அன்றைய தினம் இரவு உங்கள் வீட்டிற்கு உங்கள் முன்னோர் வருவர். நீங்கள் உங்கள் தாத்தா, பாட்டியிடம் அதிக பிரியம், பாசத்தோடு இருந்தீர்களா..? அவர்கள் நிச்சயம் அன்று இரவு உங்களை தேடி உங்கள் வீட்டிற்கு வருவார்கள். உங்கள் தலையை தொடுவார்கள். இது அனுபவ உண்மை. அவர்கள் திருப்தியாக இருந்தால் இது நடக்கும்.

உங்கள் குடும்பத்தினர் யாராவது விபத்து போன்ற அகால மரணம் அடைந்து இருந்தால் அவர்களுக்கு ஆடி அமாவாசை அன்று கண்டிப்பாக பிண்டம் வைத்து வணங்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் உலகில் அவரது ஆத்மா சித்ரவதை படாமல் இருக்கும். ஆத்ம சாந்தியும் உண்டாகும். இல்லையெனில் அவர்களின் சிதைந்த உடலுக்கு திரும்ப அவர்கள் போராடுவார்கள். தங்கள் குடும்பத்தாரோடு பேச மிகவும் கஷ்டப்படுவார்கள். கண்ணீர் வடிப்பார்கள். தொட முடியாமல், தொடர்பு கொள்ள முடியாமல் வேதனையில் துடிப்பார்கள். அவர்களுக்கு கடவுளின் மடியில் தஞ்சம் புக நீங்கள் செய்யும் பிண்ட பூஜை மிக உதவியாக இருக்கும். என்ன நம்ப முடியவில்லையா. இது முற்றிலும் உண்மை.

தாய், தந்தை, தாத்தா, பாட்டிக்கு மட்டும்தான் பித்ரு பூஜை செய்யணுமா என்றால் இல்லை. இந்த உலகில் இறந்த எந்த மனிதருக்கும் நீங்கள் தர்ப்பணம் கொடுக்கலாம். இதனால் அந்த உயிரின் ஆத்மா சாந்தியடையும் என சாஸ்திரம் சொல்கிறது.

தாய், தந்தை, நெருங்கிய உறவுகள் நம்மை விட்டு போய் விடுகின்றனர். அவர்களுக்கு அமாவாசைகளில், சாஸ்திரப்படி தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்நாளில் தீர்த்தங்களில் எள்ளை விடுகின்றனர். வாழைக்காய் உள்ளிட்ட சில காய்கறி வகைகளைப் படைக்கின்றனர். திருவிளக்கு முன் பெற்றவர்களின் படங்களை வைத்து உணவு படைத்து பூஜை செய்கின்றனர். காகங்களுக்கும், ஏழைகளுக்கும் உணவளிக்கின்றனர். முன்னோருக்காக தர்ப்பணம் செய்யப்படும் எள், தண்ணீர், காய்கறி வகைகள், உணவு ஆகியவை அவர்களைப் போய்ச் சேருகிறதா என்பது பலரது சந்தேகம்.

ஏனெனில்,எள் தண்ணீரோடு போய் விடுகிறது. வாழைக்காய், அரிசி வகைகளை அந்தணர்கள் கொண்டு போய் விடுகின்றனர். வடை, பாயசம் உள்ளிட்ட உணவுகளை வீட்டில் இருப்பவர்களே சாப்பிட்டு விடுகின்றனர். இப்படியிருக்க, இது முன்னோரைப் போய் எப்படி சேர்ந்தது என்பது தான் சந்தேகத்திற்கான காரணம்.

இறப்புக்கு முன் நம் பெற்றோருக்கு எத்தனையோ சேவை செய்கிறோம். அது இறப்புக்குப் பின்னும் தொடர வேண்டும் என நம்பப்படுகின்றது.



பிதுர் தர்ப்பணம் செய்யாவிட்டால், பிதுர்களால் நமக்கு கிடைக்கும் ஆசி கிடைக்காமல் போய் விடும் என்று சொல்லப்படுகின்றது. உன் பிள்ளையை பொறுப்பற்றவனாக வளர்த்திருக்கிறாயே என பிதுர் தேவதைகள், அவர்களுக்கு தண்டனையும் தந்து, மோட்சத்திற்கு போக விடாமல் செய்து விடுவர் என்று சாஸ்திரம் சொல்கிறது. பெற்றவர்களின் ஆசியின்றி செய்யப்படும் எந்தச் செயலும் வெற்றி பெறாது என் அனைத்து இன மகான்களாலும் சொல்லப்படுகின்றது.

இந்தியாவில் இருப்பவர்கள் ஆடி அமாவாசையன்று மறக்காமல் தங்கள் பெற்றோருக்கு ராமேஸ்வரம், பாபநாசம், கன்னியாகுமரி, வேதாரண்யம் மற்றும் நதிக்கரை, கடற்கரை தலங்களுக்கு சென்று தர்ப்பணம் செய்து பிதிர்களின் நல்லாசியைப் பெறுகின்றனர்.
ஆடி அமாவாசை காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தருகின்றது என நம்பப்படுகின்றது.

ejaffna.blogspot.com

என்றும் இளமைக்கு யோகாவின் ரகசியங்கள், அர்த்தகாடி சக்ராசனம், சிக்கி ஆசனம்.

என்றும் இளமைக்கு யோகாவின் ரகசியங்கள்!

என்றும் இளமைக்கு யோகாவின் ரகசியங்கள்!

"யோகாசனம் என்பது, எமனையும் வெல்லும் அரிய கலை. தினந்தோறும் குறிப்பிட்ட ஆசனங்களுடன், உணவுமுறையில் ஒருசில மாறுதல்களோடு யோகாசனங்களைச் செய்து வந்தால் புற்றுநோய், மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறு உள்பட எந்த நோயையும் மருந்தே இல்லாமல் குணப்படுத்திவிடலாம்''.

``உடல், சுவாசம், மனதை இறைநிலை யோடு இணைப்பதுதான், யோகம் எனப்படுகிறது.

யோகத்தில் இமயம், நியமம், ஆசனம், பிராணா யாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்று 8 நிலைகள் உண்டு. இதில் நான்காவதாக வருவதுதான், யோகாசனம்!

யோகா என்ற சமஸ்கிருத சொல்லுக்கு `இணைதல்' என்று பொருள். நமது உடலையும் மனதையும் யோகா மூலம் ஒன்றிணைக்க முடியும். அப்படி ஒன்றிணைக்கும்போது அற்புதமான ஆற்றலைப் பெற முடியும். உலகில் 84 லட்சம் ஜீவராசிகளுக்கும் 84 லட்சம் யோகாசனங்கள் உண்டு.

ஆனால், இவை அத்தனையையும் விரிவாய் சொல்வாரும் இல்லை. செய்வாரும் இல்லை. ஆனாலும், இதில் குறிப்பிட்ட ஆசனங்களை நாள்தோறும் செய்துவந்தால், நீங்கள் `என்றும் பதினாறாக' இளமையுடன் திகழ முடியும். வாழ்நாள் முழுக்க நோய்-நொடியின்றி, ஆரோக்கியமாக நீடுழி வாழ இயலும்.

யோகா விதிமுறைகள்:

* யோகாசனம் செய்வதற்கு கருவிகளோ, சாதனங்களோ தேவையில்லை. ஒரு போர்வை மட்டும் இருந்தால் போதும்.

* தரையில் போர்வையை விரித்து இறை சிந்தனையோடு கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி ஆசனம் செய்ய ஆரம்பித்துவிடலாம்.

* யோகாசனம் செய்வதற்கு நிறைய விதிமுறைகள்-விதி விலக்குகள் உண்டு. அதிகாலையில் எழுந்து காலைக்கடன் முடித்து, குளித்து விட்டு, குறைந்த ஆடையுடன் வெறும் வயிற்றில் கீழே விரிப்பு விரித்து கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஆசனம் செய்ய வேண்டும்.

* இல்லற வாழ்வியலுக்கு கிழக்கு நோக்கியும், ஞானம்-ஆன்ம முக்திக்கு வடக்கு நோக்கியும் அமர்வது உத்தமம்.

* பொதுவாக, ஆசனங்களை முதலில் வலப்பக்கம் செய்து, பிறகு இடப்பக்கமாக செய்யவேண்டும்.

* அதிகாலை 4-6 மணிக்குள் யோகாசனம் செய்து முடிப்பது சாலச்சிறந்தது.

* குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது யோகாசனம் செய்ய வேண்டும்.

* உணவு உட்கொண்டபிறகு 3 அல்லது 4 மணிநேரம் கழித்து யோகாசனம் செய்யலாம்.

* இதில் திரவ உணவுகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு.

* முழுநேர கண் விழிப்பு நோயால் தூக்க மின்மை, இல்லறத்தில் கூடிய நாள், எண்ணெய் தேய்த்து குளித்த நாள், நீண்டதூர பயணம், வீட்டில் நன்மையோ தீமையோ ஏற்பட்ட நாள், மாதவிடாய், மகப்பேறு காலம், மனச்சோர்வு, களைப்பு, மனநிலை சரியின்மை ஆகிய நேரங்களில் யோகா செய்வதைத் தவிர்ப்பது நல்லது.


அர்த்தகாடி சக்ராசனம்
அர்த்தகாடி சக்ராசனம்

செய்முறை:

இரு கால்களையும் பக்கவாட்டில் 3 அடிதூரம் அகட்டி வையுங்கள். கைகளிரண்டையும் செங்குத்தாக மேலே தூக்கவும். நின்ற நிலையில் உடம்பை மட்டும் அப்படியே சரித்து வலதுகையால், வலதுகால் பாதத்தைத் தொடுங்கள். அப்போது இடதுகை இயல்பாக தொங்கட்டும்.

முழங்கால்கள் மடங்கலாகாது. அடுத்தபடியாக இடதுகையால், இடதுகால் பாதத்தை தொடுங்கள். அப்போது வலதுகை, இயல்பாக தொங்கட்டும். இயல்பான சுவாசத்தில் 20 விநாடிகள் இருந்து, பிறகு ஆசனத்தைக் கலையுங்கள்.

பயன்கள்:

பெருந்தொந்தி குறையும். சிறுகுடல், பெருங்குடல் இரண்டும் நன்றாக இயங்கும். பெண்களுக்கு கர்ப்பப்பை, சினை முட்டை உற்பத்தி சீராகும். மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும்.

பின்பகுதி, புட்டங்கள், தொடைப் பகுதி, தொப்புள் பிரதேசம், கீழ் அடிவயிற்று பகுதிகளின் சதை குறையும். அர்த்தகாடி சக்ராசனத்தை தொடர்ந்து செய்கிற ஆண்-பெண் இருபாலருக்கும் பிடியிடை கிட்டுவது உறுதி.


சிக்கி ஆசனம்
சிக்கி ஆசனம்

செய்முறை:

இரு கால்களையும் பக்கவாட்டில் 3 அடிதூரம் அகட்டி வையுங்கள். கைகளிரண்டும் தலையில் கோர்த்திருக்கட்டும். நின்றநிலையில் உடம்பை மட்டும் அப்படியே வலதுபுறம் திருப்பி, முடிந்தவரையில் பின்பக்கம் பார்க்கவும். அடுத்தபடியாக இடதுபுறம்! இயல்பான சுவாசத்தில் 15 விநாடிகள் இருந்து, பிறகு ஆசனத்தை கலையுங்கள்.

பயன்கள்:

கால்வலி, குதிகால் பிடிப்பு நீங்கும். உடம்பின் பக்கவாட்டு தசைகள் குறையும். புட்டப்பகுதி எடையும் குறையும்! சிறுநீரகம் நன்கு இயங்கும். இதயம், காற்று சிற்றறைகள் நன்கு இயங்கி மூச்சு சம்பந்தமான நோய்கள் தீரும். பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். காலில் ஊளைச்சதை, மூட்டுப் பிடிப்பு உடையோர், தொடைச்சதையை குறைக்க விரும்புவோருக்கு உகந்த ஆசனமிது.