Saturday, July 16, 2011

சக்சேனா கேஸில், கத்தி செருகிய தி.மு.க. அமைச்சர் !



டப்பா காலியானாலும், உள்ளே பெருங்காய வாசனை பலமாகத்தான் இருக்கும். கட்சிக்கு அப்படியொரு பெருங்காய வாசனையை காட்டியிருக்கிறார் தி.மு.க. அமைச்சர் பழனி மாணிக்கம் என்று டில்லி வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

தி.மு.க.வுக்கு எதிராகப் பாயும் சட்ட நடவடிக்கைகளின்போது பெரிதாக எந்த உதவியும் செய்ய முடியாது என்ற நிலையில், ஏதோ தனது சக்திக்கு முடிந்தவரை, சிறியதாக ஒரு மின்னல் கீற்று காட்டியிருக்கிறார் அவர் என்கிறார்கள்.

சன் பிக்சர்ஸ் சக்சேனா தொடக்கத்தில் கைதாகக் காரணமாக இருந்தது, சேலம் செல்வராஜ் என்பவர் கொடுத்த புகார்தான். அதைத் தொடர்ந்துதான் மற்றைய சினிமாப் புள்ளிகள் வெளியே தைரியமாக வந்து புகார் கொடுக்கத் தொடங்கினார்கள்.

இதையெல்லாம் ஆரம்பித்து வைத்த சேலம் செல்வராஜை சும்மா விடலாமா? கட்சியின் கியாதி என்னாவது? நாளைக்கு கட்சியை யார் மதிப்பார்கள்?

இப்படியான பிரஸ்டீஜ் மேட்டரில், அமைச்சர் பழனி மாணிக்கத்துக்கு சென்னை யிலிருந்து உத்தரவு வந்தது என்கிறார்கள் டில்லியில். இந்த மாணிக்கம்தான், மத்திய நிதித்துறையின் இணை அமைச்சர்!

சக்சேனாவில் அடிதடி-மிரட்டல் வழக்குகளில் இருந்து அவரைக் காப்பாற்ற மத்திய நிதியமைச்சால் முடியாது. கிரிமினல் வழக்குக்கும் நிதி அமைச்சுக்கும் சம்மந்தமில்லை. ஆனால், நிதி அமைச்சுடன் சம்மந்தமுடைய வேறு ஏதாவது ஒன்றைப் பற்றிக் கொண்டு, இன்டைரக்டாக இதற்குள் வருவதற்கு, நம்மாட்களுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்?

சாமர்த்தியமாக, அந்த ரூட்டில் வந்து சேர்ந்தார் பழனி மாணிக்கம் என்பதே பேச்சாக இருக்கின்றது!

இவரது துறையின்கீழ்தான் வருமான வரி இலாகா வருகின்றது. பொதுவாக சினிமாக்காரர்களை எடுத்துக் கொண்டால், வருமானவரி இலாகாவின் ‘கோ-பை-த-புக்’ நடைமுறைகளை 100% பின்பற்றும் ஆட்களை விரல்விட்டு எண்ணலாம். (ஒரு கை போதும்)

இந்த வசதியை வைத்துக்கொண்டுதான், செல்வராஜ்மீது வருமானவரித் துறையின் ரெய்டுக்கு உத்தரவு கொடுக்க வைத்தார் அமைச்சர்.

செல்வராஜின் வீடு பிருந்தாவனம் ரோட்டில் உள்ளது. அலுவலகம், சினிமா நகரில் உள்ளது. இந்த இரண்டு இடத்திலும் ஒரே நேரத்தில் புகுந்த வருமான வரித்துறை அதிகாரிகள், அங்கிருந்த சில ஆவணங்களை எடுத்துப் போயிருக்கிறார்கள். இனி, அந்த ஆவணங்களில் உள்ள கணக்கு வழக்குகளை வைத்துக் குடைச்சல் கொடுக்க முடியும்.

செல்வராஜின் வீட்டில் ரெயிட் ஒருபக்கமாக நடந்து கொண்டிருந்தபோது, வந்திருந்த வருமானவரித்துறை அதிகாரிகளில் ஒருவர், “நீங்களே வருமானவரி சம்மந்தமான சிக்கல்களை வைத்துக்கொண்டு, எதற்காக சக்சேனாமீது புகார் கொடுக்கப் போனீர்கள்? பேசாமல் உங்க பிசினெஸைப் பார்த்துக்கொண்டு இருந்திருந்தால், நாங்களெல்லாம் ஏன் இங்கே வரப்போகிறோம்?” என்று அட்வைஸ் கொடுத்ததாகத் தகவல்.

சரி. சக்சேனாமீது புகார் கொடுத்தவர் காரணத்தால், தனது துறையைப் பயன்படுத்தி செல்வராஜ் வீட்டில் ரெயிட் நடாத்திய அமைச்சருக்கு, டில்லியில் சிக்கல் வராதா? நாளைக்கே இந்த விஷயம் ஊடகங்களால் பெரிதுபடுத்தப்பட்டால், நிதியமைச்சு நடவடிக்கை எடுக்காதா?

‘ஜெயிலில் 50வது நாள்’ கேடயமும் வழங்குவார்களா?

இந்தக் கேள்விகளுடன், நிதியமைச்சில் எமக்குத் தெரிந்த உயரதிகாரி ஒருவரை அணுகியபோது, அவர் கடகடவென்று சிரித்தார்.

“வருமானவரித்துறையில் இதெல்லாம் கோலிகுண்டு விவகாரம். ரெயிட் என்பது, கோர்ட்டில் பதிவாகும் வழக்கு அல்ல. வருமானவரித்துறைக்கு சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட ஒரு நடைமுறை அது. அதற்கான புரொஸீச்சர்களை சரியாகப் பின்பற்றினால், அதில் அமைச்சிலுள்ள யாரையும் மாட்டிவிட முடியாது.

புரொஸீச்சர் என்ன? சம்மந்தப்பட்ட நபரின்மீது வருமானவரித்துறை டைரக்டரின் முகவரியிட்ட ஒரு புகார் கடிதம் வேண்டும். ரெயிடு செய்யப்பட வேண்டிய நபரின் 2009ம் ஆண்டு வருமானவரிக் கணக்கில் காட்டப்பட்ட சோர்ஸ் ஆஃப் இன்கம்முக்கும், 2010ம் ஆண்டுக் கணக்கில் காட்டப்பட்டதற்கும் இடையே, ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாத ஓரிரு பதிவுகள் இருக்க வேண்டும். அவ்வளவுதான் தேவை.

அமைச்சர் நினைத்தால், மிகச் சுலபமாக சென்னையிலிருந்து யாரோ ஒருவரின் பெயரில் புகார் கடிதம் அனுப்புமாறு செய்திருக்க முடியும். சினிமாக்காரர்களில் சோர்ஸ் ஆஃப் இன்கமில், வருடத்துக்கு வருடம் நிச்சயம் சம்மந்தமில்லாத பதிவுகள் இருக்கும். செட்டப் புகார் லெட்டரின் பிரதியையும், இரண்டு வருட டாக்ஸ் ரிடர்ன் பிரின்ட்-அவுட்டையும் ஒரு பைலில் போட்டுக்கொண்டு, ரெயிட் உத்தரவில் கையெழுத்து போட்டு சென்னை அலுவலகத்துக்கு அனுப்பி விடலாம்.

ரெயிடில் சில ஆவணங்களை எடுத்துவந்து, ஆராயலாம். தேவைப்பட்டால், நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். கணக்குகளில் சிக்கல் இல்லாவிட்டால், சம்மந்தப்பட்ட பார்ட்டிக்கு ஒரு லெட்டர் அனுப்பி விடலாம் – “இதனால் தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருமானவரித்துறை மனம் வருந்துகிறது”

இதில் அமைச்சரையும் சிக்கவைக்க முடியாது. கையெழுத்திட்ட டைரக்டரையும் சிக்கவைக்க முடியாது” என்று விளக்கமாகச் சொன்னார் அந்த உயரதிகாரி.

இந்த ரெயிட் பெரிய விஷயமில்லைத்தான். ஆனால், சக்சேனாவுக்கு எதிராக புகார் கொடுக்க நினைக்கும் மற்றைய சினிமாப் புள்ளிகளை, ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும். இன்கம்டாக்ஸ் அலுவலக பைலில் தமது பெயர் இடம்பெற்றாலும் பரவாயில்லை என்று, சக்சேனாவுக்கு எதிராக புகார் கொடுக்க, எத்தனை சினிமாக்காரர்கள் முன்வருவார்கள்?

இந்த விஷயத்தில் தி.மு.க. தலைமையைப் பாராட்டத்தான் வேண்டும். ஏனென்றால், தமது கட்சியின் சார்பில் ஒரு முட்டாளை அமைச்சராக டில்லிக்கு அனுப்பவில்லை அவர்கள்!

ஒரே நாளில் சாய்பாபா சமாதியில் 1 லட்சம் பேர் தரிசனம் : புட்டபர்த்தி மீண்டும் களை கட்டியது.

ஒரே நாளில் சாய்பாபா சமாதியில்  1 லட்சம் பேர் தரிசனம்: புட்டபர்த்தி மீண்டும் களை கட்டியது

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஆசிரமம் அமைத்து ஆன்மீக பணியில் ஈடுபட்டு வந்தவர் சத்ய சாய்பாபா. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந்தேதி மரணம் அடைந்தார்.

இதையடுத்து ஆசிரமத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு சமாதி கட்டப்பட்டது. சாய்பாபா மரணத்திற்கு பிறகு கடந்த 3 மாதங்களாக புட்டபர்த்தி நகரம் வெறிச் சோடி காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று குரு பூர்ணிமா விழாவையொட்டி சாய்பாபா சமாதி திறக்கப்பட்டது. சமாதியை தரிசிக்க அங்கு ஏராளமான பக்தர்கள் திரண்டனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 1 லட்சம் பேர் தரிசனம் செய்தனர்.அங்குள்ள லாட்ஜூக்கள், ஓட்டல்கள் அனைத்தும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.அங்குள்ள கடைகளில் கோடிக்கணக்கில் வியாபாரம் நடந்தது.

சமாதி திறந்த பிறகு புட்டபர்த்தி மீண்டும் களை கட்டியுள்ளது. இதனால் அங்குள்ள வியாபாரிகள், ஓட்டல் - லாட்ஜ் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நித்யானந்தா சாமியார் முன்பு நடிகை ரஞ்சிதா நடனம்.

குண்டலினி யோகாசனம் நித்யானந்தா சாமியார் முன்பு    நடிகை ரஞ்சிதா நடனம்

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள பிடரியில் நித்யானந்தா சாமியாரின் ஆசிரமம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் குரு பூர்ணிமா விழாவையொட்டி சிறப்பு யாகங்கள் பூஜைகள், குண்டலினி யோகா போன்றவை நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு நேற்று பிடரி ஆசிரமத்தில் குரு பூர்ணிமா விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காலை 7.30 மணி முதல் இரவு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இவை அனைத்திலும் சாமியார் நித்யானந்தா கலந்து கொண்டார். அவர் சிம்மாசனத்தில் அமர்ந்தபடி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அவரை பக்தர்கள் பெருமாளை அலங்கரிப்பது போல் அலங்காரம் செய்தனர்.

சில பக்தர்கள் ஆளுயர மாலை அணிவித்து ஆசி பெற்றனர். இந்த குருபூர்ணிமா விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார். அப்போது அவர் பட்டுப்புடவை அணிந்திருந்தார். அவர் நித்யானந்தா சாமியாருக்கு பாத பூஜை செய்து அவரது முன் மண்டியிட்டார். அப்போது நித்யானந்தா ரஞ்சிதாவின் தலையை தொட்டு ஆசீர்வாதம் வழங்கினார். அவரைத் தொடர்ந்து ஆசிரம பெண்கள் அனைவரும் வரிசையில் வந்து நித்யானந்தாவுக்கு பாதபூஜை செய்து ஆசீர்வாதம் பெற்றனர்.

பின்னர் நித்யானந்தா பக்தர்கள் அனைவருக்கும் குண்டலினி யோகாசன பயிற்சி அளித்தார். அப்போது நடிகை ரஞ்சிதா திடீரென எழுந்து துள்ளி துள்ளி குதித்தபடி ஆனந்த நடனம் ஆடினார். அவரைப் போல் ஏராளமான பெண்களும் உற்சாக நடனம் ஆடினர். சில பெண்கள் தரையில் படுத்து உருண்டனர். இதை நித்யானந்தா சிம்மாசனத்தில் அமர்ந்தபடி ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார்.

சில சமயங்களில் பெண்கள் ஆடுவதை கண்டு மனம் விட்டு சிரித்தார். குண்டலினி யோகாசன பயிற்சி பற்றி நித்யானந்தா கூறும்போது, ஒவ்வொரு மனிதனிடமும் குண்டலினி சக்தி உள்ளது. அதை உயிர்ப்பிப்பதற்காக இந்த யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார். முன்னதாக பிடரி ஆசிரமத்தில் உள்ள 21 அடி ஆனந்த லிங்கத்திற்கு அபிஷேகம் நடந்தது.