Saturday, September 17, 2011

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பெண்கள் மறியல் - சென்னையில் 66 பேர் கைது .

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் பெண்கள் மறியல்- 66 பேர் கைது

மத்திய அரசு நேற்று இரவு பெட்ரோல் விலையை உயர்த்தியது. இதைக் கண்டித்து சென்னையில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனர். வியாசர்பாடியில் அம்பேத் கர் கல்லூரி அருகே எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் மாதர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திடீரென்று ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் துணை கமிஷனர் கார்த்தி கேயன், உதவி கமிஷனர் கோவி.மனோகரன், இன்ஸ் பெக்டர்கள் செந்தில் குமார், சிவசங்கரன் ஆகியோர் விரைந்து சென்று பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் 66 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை போலீசார் வேனில் ஏற்றி கொடுங்கையூர் திருமண மண்டபத்தில் வைத் திருந்தனர். வியாசர்பாடி பி.வி.காலனி யில் அடிக்கடி மின்சாரம் தடைபடுவதை கண்டித்து பெண்கள் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டனர்.

உதவி கமிஷனர் கோவி.மனோகரன், மின்வாரிய உதவி பொறியாளர் சித்ரா ஆகியோர் சென்று பெண்களுடன் பேசி சமரசப்படுத்தினார்கள்.

அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினி ; கணக்கெடுப்பில் தகவல்.

அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர்    பட்டினியால் வாடுகிறார்கள்;    கணக்கெடுப்பில் தகவல்

அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. உலகின் வல்லரசு நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவிலும் மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். அங்கு கடந்த 1983-ம் ஆண்டு முதல் இந்த நிலை இருந்து வருகிறது. அமெரிக்காவில் ஒரு நபரின் ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்துக்கு கீழ் இருப்பவர்கள் வறுமையில் வாடுபவர்களாக கருதப்படுகின்றனர்.

இந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளாக அங்கு பசி பட்டினியால் வாடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு அமெரிக்கா முழுவதும் இது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 4 கோடியே 62 லட்சம் பேர் பட்டினியால் வாடுவதாக தெரியவந்துள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். அது அமெரிக்க மக்கள் தொகையில் 6-ல் ஒருபங்கு ஆகும்.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாகாணங்களில் மிஸ்சிசிப்பி முதலிடம் வகிக்கிறது. அங்கு 22.07 சதவீதம் பேர் மிகவும் கஷ்டப்படுகின்றனர். அதைத் தொடர்ந்து லூசியானா, கொலம்பியா, ஜார்ஜியா, நியூமெக்சிகோ, அரிஷோனா போன்றவையும் அடங்கும்.

பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி

பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி: திட்ட கமிஷன் சொல்கிறது

பெட்ரோல் விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திட்ட கமிஷன் துணைத்தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி. இது நியாயமானது என்று கருதுகிறேன்.

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கான நம்பகத்தன்மையை இது அதிகரிக்கும். இதனால் முதலீடு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.

பெட்ரோலிய பொருட்களின் விலை, சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டையே நாங்கள் பின்பற்றுகிறோம்
என்று கூறியுள்ளார்.

நட்சத்திரத்தை விழுங்கிய அதிக சக்தி வாய்ந்த கருந்துளை.



விண்வெளியில் அதிக சக்தி வாய்ந்த கருந்துளைகள் உள்ளன.

இவை தங்களுக்கருகில் இருக்கும் அனைத்தையும் உள்ளிழுத்து கொள்ளும் ஆற்றல் பெற்றவை.

தற்போது அத்தகைய கருந்துளைகளில் ஒன்று நட்சத்திரம் ஒன்றை சிதறடித்து பின் தனக்குள்ளே உள் வாங்கிய அரிய நிகழ்ச்சியை வானியலாளர்கள் முதன் முறையாக கண்டறிந்துள்ளனர்.

பூமியிலிருந்து 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் நடந்துள்ள இது போன்ற நிகழ்வு இதற்கு முன்பு கண்டறியப்படாதது. பொதுவாக கருந்துளைகளின் மையம் சூரியனைப்போன்று 100 கோடி மடங்கு அதிக வலிமை கொண்டதாக இருக்கும். தற்போது நடைபெற்ற நிகழ்வில், கருந்துளையானது தன்னிடமிருந்து 3.9 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்த நட்சத்திரத்தை, அதிக சக்தி வாய்ந்த காஸ்மிக் ஜெட் எனப்படும் தனிப்பட்ட சக்தியால் சிதறடித்து பின் தன்னுள் இழுத்து கொண்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட ஒளி வெள்ளம் அதனை படம் பிடித்த நாசாவின் ஸ்விப்ட் தொலைநோக்கிக்கு அடுத்த ஒரு வடருடத்திற்கு தேவையான ஒளியை வழங்குமளவிற்கு பிரமாண்டமாய் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விண்வெளியில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து எக்ஸ் கதிர்களின் அலைவீச்சு அடிக்கடி நிகழ்ந்து வந்ததையும் ஸ்விப்ட் தொலைநோக்கி அவ்வப்போது நாசாவிற்கு தெரிவித்து வந்தது. அதனை தொடர்ந்து ஆராய்ந்ததில் இந்த அரிய நிகழ்வு தற்போது உலகிற்கு தெரிய வந்துள்ளது.

மற்றும் நட்சத்திர மண்டலத்தில் 100 மில்லியன் வருடங்களுக்கு ஒரு முறை இது போன்ற நிகழ்வு நடைபெறும் என பென்சில்வேனியா மாநில பல்கலைகழகம் மற்றும் ஹார்வேர்டு ஸ்மித்சோனியன் வானியல் அமைப்பு ஆகிய குழுவை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.