Saturday, October 1, 2011

தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு - நிலைமை இன்னும் மோசமாகும் !



தமிழகம் முழுவதும் மீண்டும் கடுமையான மின் வெட்டு நிலவி வருகிறது.

இதற்கு வழக்கம்போல காற்றாலைகள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியில் காற்றடித்தால் தான் மின்சார உற்பத்தி சீராகும் என்று கூறியே 5 வருடத்தைக் கழித்தார் அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி.

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக மின்வெட்டு சரி செய்யப்படும் என்று வாய் ஜாலம் காட்டப்பட்டது. ஆனால், நிலைமை முன்பை விட மோசமாகியுள்ளது.

காற்று வீசாததால் காற்றாலை மின்சார உற்பத்தியின் அளவு குறைந்து விட்டதாகவும், தமிழகத்தில் மின்சாரத்தின் தேவை பல நூறு மெகாவாட் அதிகரித்துவிட்டதாகவும், இதனால் தான் மின் தட்டுப்பாடு நிலவுவதுமாக மின்வாரியம் கூறுகிறது.

தமிழகத்தில் மின்சாரத் தேவையின் அளவு 11,000 மெகா வாட். ஆனால், உற்பத்தி ஆவதோ 9,500 மெகா வாட் தான்.

மேலும் தினந்தோறும் மின்சாரத் தேவையின் அளவும் கூடிக் கொண்டே போகிறது. இதனால் தடுப்பாடும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

இதனால் தமிழகம் முழுவதுமே பல மணி நேரம் மின்சார வினியோகம் தடை செய்யப்படுகிறது. பகல் நேரத்தில் செய்யப்படும் இந்த மின்வெட்டால், தொழில நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. பல தொழி்ற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பும், தொழிலாளர்களுக்கு பணி இல்லாத சூழலும் நிலவுகிறது.

இந் நிலையில் தமிழக அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரியை அளிக்கும் முக்கிய சுரங்கமான ஆந்திர மாநிலம் சிங்க்ரனியில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் கோரி இந்தப் போராட்டம் நடக்கிறது. இதனால் அங்கு நிலக்கரி வெட்டி எடுப்பது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை தொடர்ந்தால், தமிழகத்துக்கு நிலக்கரி சப்ளையும் பாதிக்கப்படலாம். இதனால் தமிழகத்தில் மின் நிலைமை மேலும் மோசமாகும்.