Monday, February 21, 2011

மாணவர்களின் கேள்விகளுக்கு டாக்டர்.அப்துல்கலாமின் பதில்கள். (பகுதி -3)





31.இந்தியாவில் மூளைவறட்சி ஏன்?
ஆகாஷ் சந்திரன், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி, அண்ணாநகர், சென்னை.
முஸ்தபா,ஸ்ரீ ஐயப்பா பாலிடெக்னிக் கல்லூரி, வேப்பூர், கடலூர்


டாகடர் அப்துல்கலாம் :
இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் பிற துறைகளில் ஏராளமான துறை நிபுணர்களை இந்தியா உருவாக்கி வருகிறது. இவர்களில் சிலர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவதைப் பற்றி நாம் கவலை அடைய வேண்டாம். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் கல்வி நிறுவனங்களுடனும் தொடர்பு வைத்துள்ளனர். சொந்த நாட்டில் பணிபுரிவதா அல்லது வெளிநாட்டுக்கு செல்வதா என்பது தனிநபர் விருப்பத்தைப் பொறுத்ததுதான். தேசத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேட்கை உள் உணர்வில்தான் ஏற்படுவது.

32.நிலவுக்கு மனிதனை எப்போது இந்தியா அனுப்பும்?
பிரபு, ரயில்வே காலனி மேல்நிலை பள்ளி, ஈரோடு

டாகடர் அப்துல்கலாம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் இதுதொடர்பாக முயற்சி செய்து வருகிறார்கள். சந்திரனில் தற்போது பூமியில் காணப்படும் எரிபொருளை விட 10 மடங்கு அதிக சக்தி கொண்ட எரிபொருளான ஹீலியம்-3 சந்திரனில் காணப்படுகிறது. ஏழ்மையை ஒழிக்க அவற்றை இங்கு கொண்டு வருவது அவசியம். நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம்தான் இஸ்ரோவின் அடுத்த முக்கிய திட்டம்.

33.கல்லாமையை ஒழிக்க மாணவர்களாகிய எங்கள் கடமை என்ன?
தண்டபாணி, தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகம், கோவை

டாகடர் அப்துல்கலாம் : மாணவர்களாகிய நீங்கள் கல்லாமையை ஒழிப்பதில் பங்கேற்க முடியும். உங்கள் விடுமுறை காலங்களில் நீங்கள் அருகில் உள்ள கிராமத்துக்கு சென்று அங்கு 10 பேருக்கு எழுத படிக்க சொல்லிக் கொடுங்கள். இதுபோன்ற முயற்சியை மாணவர்கள் தொடங்கினால் இந்தியாவில் கல்லாமை என்பது இல்லாமல் போய்விடும்.

34.நல்ல அறிவாளிகள் வெளிநாட்டில் வேலை செய்வதையே விரும்புகிறார்களே ஏன்?
ஸ்ரீமணிகண்டன், சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி, மதுரை. சண்முகபிரியா, ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, சென்னை. அசாருதீன், எஸ்.ஐ.வி., மெட்ரிக் பள்ளி, மேட்டுப்பாளையம்.

டாகடர் அப்துல்கலாம் : இந்தியாவில் மிகச்சிறந்த நிறுவனங்கள் ஆராய்ச்சிக்காக செயல்பட்டு வருகின்றன. சிலர் வெளிநாட்டுக்கு செல்வதை விரும்புகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் உள்கட்டமைப்புகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம். ஆண்டுக்கு மூன்று கோடி பட்டதாரிகளை நாம் உருவாக்குகிறோம். இவர்களில் சிலர் வெளிநாட்டுக்கு செல்வதைக் கண்டு நம் நாட்டில் அறிவு வளம் குறைந்துவிட்டது என்று கவலை கொள்ள வேண்டாம். அவர்களால் நம் இந்தியாவின் அறிவு வளமும் பெருகுகிறது என்றுதான் நினைக்க வேண்டும்.

35.மேற்கத்திய கலாசாரத்தால் நம் கலாசாரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை மாணவர்கள் மாற்றுவது எப்படி?
சந்தீப், சிந்தி மாடல் ஸ்கூல், சென்னை. பிரீத்தி கோமதி, சிவகாசி நாடார் மெட்ரிக் பள்ளி, மதுரை. ராமதாஸ், விப்ரோ டெக்னாலஜிஸ், சென்னை.

டாகடர் அப்துல்கலாம் : குடும்பம் மற்றும் சமூகத்தால் கலாசாரம் மாற்றம் ஏற்படுகிறது. பாடத்திட்டத்திலும், கூடுதல் பாடத்திட்டத்திலும் நம் கலாசார நெறிகளை நாம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். மதிப்பீடு அடிப்படையிலான கல்வி திட்டம் அவசியம்.

36.ஜீரோ கிராவிட்டி பற்றி கூறுங்களேன்
குமார், எச்.சி.எல்.லிட் ., புதுச்சேரி. ரமேஷ் ராஜா, சி.எஸ்.சி., கம்ப்யூட்டர் மையம், சென்னை.

டாகடர் அப்துல்கலாம் : விண்வெளி பயணத்தில் ஈடுபடுவோர் ஜீரோ கிராவிட்டி அதாவது புவியீர்ப்பு விசையை உணராத நிலையை அடைவார்கள். விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பும் போதும் இந்நிலையை அவர்கள் உணர்வார்கள்

.37.இந்திய பொருளாதாரத்தை சர்வதேச நாடுகளைவிட உயர்த்துவதற்கான வழிகள் என்ன?
அருள் முருகன், ஸ்வாதி, ஐ.எப்.இ.டி., காலேஜ் ஆப் இன்ஜினியரிங், விழுப்புரம். துர்கா, பிரின்ஸ் மெட்ரிக். பள்ளி, சென்னை. பிரியதர்ஷினி, தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரி, மதுரை. செழியன், டி.பி.ஜெயின் கல்லூரி, சென்னை. சுகன்யா, எஸ்.எஸ்.வி.சாலா மேனிலைப் பள்ளி ஆத்திகுளம்.

டாகடர் அப்துல்கலாம் : இந்திய பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் நகர்ப்புற பொருளாதாரம் ஆகிய இரண்டையும் சமப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நம் பொருளாதார வலிமையை மேம்படுத்த தகவல்தொடர்பு மற்றும் பயோடெக்னாலஜி துறையில் நாம் சிறந்து விளங்க வேண்டும். மக்களை மையமாகக் கொண்ட தொழில் கொள்கைகள், புதிய இளம் தலைவர்களை உருவாக்குதல், பயன்பாட்டு அடிப்படையிலான தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

38.இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் உள்ளனர். இதற்கு தீர்வு என்ன?
தீபா, அருணை இன்ஜினியரிங் கல்லூரி, திருவண்ணாமலை. கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி, நாகமலை.

டாகடர் அப்துல்கலாம் : மாணவர்களுக்கு தொழில் முனையும் திறன் வழங்காததுதான் அவர்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். கிராமப்புறங்களில் சிறிய அளவிலான தொழில்களை அமைக்க அவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். கிராமப்புறங்களை மையமாக கொண்டு, நகர்ப்புற வசதிகளை கிராமப்புறங்களுக்கு அளிக்க வேண்டும்.

39.நமது பாடத்திட்டத்தில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வர வேண்டுமா?
கார்த்திக், சாஸ்திரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

டாகடர் அப்துல்கலாம் : நமது பாடத்திட்டத்தில் அறிவியல் கருத்து அளவிலேயே உள்ளது. இது நடைமுறைக்கான செயல்முறை கற்றலிலிருந்து வெகு தூரத்தில் உள்ளது. நம்முடைய சிந்தனைகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளே இருக்கின்றன. நம்முடைய கல்வித் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். 5 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

40.நான் ஜனாதிபதி ஆக வேண்டும் என்று விருப்பப்படுகிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
சல்மான், ஹோலிகிராஸ் பள்ளி, சென்னை. ராமகிருஷ்ணன், இன்ஸ்டிடியூட் ஆப் ரோட் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜி, ஈரோடு.

டாகடர் அப்துல்கலாம் : இது நல்ல கனவு. உங்களுடைய செயல்களில் 100 சதவீத முயற்சி செய்யுங்கள். ஏதாவது ஒரு துறையில் சிறந்தவராக வாருங்கள். இடையில் சில தோல்விகள் வந்த போதிலும் அது பற்றி வருத்தப்படாதீர்கள். இறைவன் உங்களுக்கு துணை நிற்பார்.

41.ஜனாதிபதி அப்துல் கலாமுக்கும் விஞ்ஞானி அப்துல்கலாமுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
விஷ்ணு, வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, முகப்பேர். பவித்ரா, கபாலீஸ்வரர் நகர், நீலாங்கரை, சென்னை.

டாகடர் அப்துல்கலாம் : இரு பணிகளிலுமே நான் கடின உழைப்பையே அளிக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் இரண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

42.ஏன் செவ்வாய் கிரகம் சிவப்பாக இருக்கிறது?
ஜேம்ஸ் மார்ட்டின், பெடிட் செமினேர் மேனிலைப்பள்ளி, புதுவை.

டாகடர் அப்துல்கலாம் : பெர்ரிக் ஆக்சைடு எனும் இரும்பின் துரு செவ்வாய் கிரகத்துக்கு சிவப்பு நிறம் அளிக்கிறது. செவ்வாயின் மேற்புறத்தில் உள்ள இரும்பும் மற்ற தனிமங்களும் ஆக்சைடுகளாக மாறியுள்ளன. செவ்வாய் துரு நிறைந்த ஒரு கோளாக உள்ளது. சிவப்பு நிறத்தால் போருக்கான ரோமக்கடவுளான மார்ஸ் பெயரே இக்கோளுக்கு இடப்பட்டது.

43.ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு அவசியமா? 2020ம் ஆண்டுக்குப் பின்னரும் இது தொடருமா?
பிரபு, பி.எஸ்.ஆர். இன்ஜினியரிங் கல்லூரி, சிவகாசி. பத்மபிரியா, வேலம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை. சிவக்குமார், சண்முகநாதன் இன்ஜினியரிங் கல்லூரி, திருமயம்.

டாகடர் அப்துல்கலாம் : குறிப்பிட்ட சமுதாய மக்கள் வழிவழியாக வாய்ப்பு இழந்துள்ளனர். அவர்களுக்காக அரசியல் அமைப்பில் வகுக்கப்பட்டுள்ள சட்டதிட்டத்தின்படி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதை நிறைவேற்றுவது நமது சமுதாய கடமை. 2020ம் ஆண்டில் இன்ஜினியரிங் கல்லூரிகளும், மருத்துவக் கல்லூரிகளும் பெருகிவிடும். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் படிக்க விரும்பும் எல்லோருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அத்துடன் திறமைக்கும் மதிப்பு இருக்கும்.

44.சமுதாய ஒழுக்கம், லஞ்ச ஊழல் ஒழிப்பு, தனிநபர் சுகாதாரம் இவற்றைப் பேண மாணவர்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அவசியமா?
ஜேசுதாஸ், தேனாம்பேட்டை, சென்னை.

டாகடர் அப்துல்கலாம் : ஒழுக்கம் மற்றும் நல்ல மதிப்பீடுகளை நல்ல ஆசிரியர்கள் கற்றுத் தந்தாலே மாணவர்களுக்கு நல்ல குணங்கள் வந்துவிடும்.

45.சூரிய ஆற்றலை நாம் முறையாக பயன்படுத்திக் கொள்கிறோமா?
ஆனந்தவேலு, அரசு இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை.

டாகடர் அப்துல்கலாம் :
சூரிய சக்தி மிகுதியாக இருக்கிறது. கூடுதல் சக்தியை சேமிக்கும் சூரிய கலன்களை நாம் தயாரித்தால் அது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். நேனோ டெக்னாலஜி இதற்கு பெரும்பங்கு வகிக்கும். கார்பன் நேனோ டியூப் சூரிய கலன்களின் சக்தியை அதிகரித்து வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வளரும்.

நன்றி : கல்வி மலர்