Tuesday, May 10, 2011

காங்கிரஸ் அமைச்சர் சிதம்பரத்திற்கு இலஞ்சம் கொடுத்து புலிகள் தொடர்பான தகவல்களை பெற்ற மஹிந்த ராஜபக்சே.


வன்னி இறுதிக்கட்டப் போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு இந்திய அரசு சார்பாக செயற்பட்டவர்களுள் காங்கிரஸ் அமைச்சரான சிதம்பரத்திற்கு மஹிந்த ராஜபக்சே வழங்கிய கையூட்டு தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழர்களுக்கு சார்பாக செயற்பட்டு விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்களைக் கறந்து சிங்கள அரசிற்கு வழங்கியதுடன் சர்வதேச மனிதாபிமான நடவடிக்கைகளையும் முடக்கவும் துணை போயிருந்தார்.

இதற்காக மஹிந்த ராஜபக்சே அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி பெயரில் நளினி தொழில் நிலைக்கூட்டு நிறுவனத்திற்கு இலங்கையின் எரிபொருள் அகழ்ந்தெடுக்கும் உரிமையை வழங்கியுள்ளார்.

நளினி கூட்டு நிறுவனம் அதன் உரிமையை பல கோடி இலஞ்சம் பெற்றுக் கொண்டு ரஸ்யாவிற்கும் மலேசியா ஊடாக சீனாவிற்கும் விற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதைவிட மஹிந்த அரசாங்கம் காங்கிரஸ் அரசில் உள்ள பல இராஜதந்திரிகளுக்கு முதலீடுகளுக்கு இலங்கையில் நீண்டகால குத்தகைக்கு காணிகள் வழங்குதல், கறுப்புப் பணத்தை முதலீடாக மாற்றுதல், சீனா மற்றும் பல நாடுகளில் தொழில் ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொடுத்தல் ஆகிய உதவிகளை செய்து வருகின்றமை தெரியவந்துள்ளது.

www.nerudal.com

பிளஸ் 2 தேர்வில், 1.25 லட்சம் மாணவர்கள் தோல்வி.


பிளஸ் 2 தேர்வில், மூன்று பாடங்கள் வரை, ஒரு லட்சத்து, 25 ஆயிரத்து, 602 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வை, பள்ளிகள் மூலம், ஏழு லட்சத்து, 16 ஆயிரத்து, 543 பேர் எழுதினர். இவர்களில், ஆறு லட்சத்து, 15 ஆயிரத்து, 593 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு லட்சத்து, 950 பேர் தோல்வியடைந்தனர். இவர்களில், ஒன்று முதல், மூன்று பாடங்கள் வரை, தோல்வியடைந்தவர்கள் மட்டும், ஜூன், ஜூலையில் நடக்கும் உடனடித் தேர்வில் பங்கேற்கலாம்.

பள்ளிகள் மற்றும் தனித்தேர்வு மாணவர்கள் ஆகியோரில், மூன்று பாடங்கள் வரை, ஒரு லட்சத்து, 25 ஆயிரத்து, 602 பேர் தோல்வியடைந்துள்ளனர்.

ஒரு பாடத்தில், 70 ஆயிரத்து, 175 பேர், இரு பாடங்களில், 36 ஆயிரத்து, 459 பேர், மூன்று பாடங்களில், 18 ஆயிரத்து, 968 பேர் தோல்வியடைந்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள்:
மூன்று பாடங்கள் வரை தோல்வியடைந்த பள்ளி மாணவர்கள், அந்தந்த பள்ளிகள் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள், 9ம் தேதியில் இருந்தே வழங்கப்பட்டு வருகின்றன. "எஸ்.எச்.,' என குறிப்பிடப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, 13ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட பள்ளிகளிலேயே ஒப்படைக்க வேண்டும். தேர்வுக்கான கட்டணத்தையும், பள்ளிகளிலேயே செலுத்த வேண்டும்.

தனித்தேர்வர்கள்: மூன்று பாடங்கள் வரை தோல்வியுற்ற தனித்தேர்வர்கள், அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.வரும் 16 முதல், 20ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 24ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

பின்லேடன் வேட்டையின்போது தேவைப்பட்டால் பாகிஸ்தான் படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா.


பின்லேடன் வேட்டையின்போது அதைத் தடுக்க பாகிஸ்தான் போலீஸாரோ அல்லது படையினரோ முயன்றால் அவர்களைத் திருப்பித் தாக்கவும், அமெரிக்க சீல் படையினருக்கு அதிபர் ஒபாமா உத்தரவிட்டிருந்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானின் அபோத்தாபாத்தில் ஒரு வீட்டில் கடந்த பல வருடங்களாக ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வந்த பின்லேடனை சமீபத்தில் அமெரிக்க கடற்படையின் சீல் வீரர்கள் வேட்டையாடிக் கொன்றனர்.

இந்த வேட்டை தொடர்பான பல்வேறு செய்திகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.

பின்லேடன் வேட்டைக்கு முதலில் சில வீரர்களை மட்டுமே முடிவு செய்யப் பட்டிருந்தது. இருப்பினும் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டார். இதற்கு முக்கியக் காரணம், வேட்டையின்போது, பாகிஸ்தான் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டால் என்ன செய்வது என்பதால்.

பாகிஸ்தான் போலீஸ் தரப்பிலோ அல்லது ராணுவத்தின் சார்பிலோ அமெரிக்கப் படையினரைத் தடுக்க முயன்றால் அல்லது தாக்குதல் தொடுத்தால் திருப்பித் தாக்குமாறும் அமெரிக்கப் படையினருக்கு ஒபாமா உத்தரவிட்டிருந்தார் என்ற பரபரப்புத் தகவலும் வெளியாகியுள்ளது.

ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் அது இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதட்டத்தையும், பாகிஸ்தானை அமெரிக்கா உண்டு இல்லை என்று பண்ணியிருக்க வாய்ப்பு ஏற்படுத்தியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அமெரிக்கப் படையினர் அதிவிரைவாக செயல்பட்டதால் தங்களது ஆபரேஷனை வேகமாக முடித்து விட்டு பின்லேடன் உடலோடு பறந்து விட்டனர்.

அவர்கள் போன பின்னர்தான் அந்த இடத்திற்கு பாகிஸ்தான் ராணுவத்தினரும், போலீஸாரும் வந்துள்ளனர்.

முன்னதாக தங்களது எல்லைக்குள் மர்ம ஹெலிகாப்டர்கள் ஊடுறுவியதை பாகிஸ்தான் படையினர் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அவை எங்கே போனது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. அதைக் கண்டுபிடித்து முடிப்பதற்குள் அமெரிக்கா தனது வேலையை முடித்து விட்டது.

மேலும் பாகிஸ்தானுக்குள் போன ஹெலிகாப்டர்கள் தவிர பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் இரண்டு தாக்குதல் ஹெலிகாப்டர்களையும், அதிக அளவிலான வீரர்களையும் அமெரிக்கா தயார் நிலையில் வைத்திருந்தது. பாகிஸ்தானுக்குள் போன அமெரிக்க வீரர்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அவர்களிடமிருந்து உதவி கோரி அழைப்பு வந்தால் மின்னல் வேகத்தில் அங்கு சென்று தாக்குதல் நடத்த அவர்கள் ஆயத்தமாக இருந்தனர். ஆனால் அதற்கான வாய்ப்பை பின்லேடன் வேடையில் ஈடுபட்டவர்கள் வைக்கவில்லை.

கேரளா : எண்டோசல்பான் தொழிற்சாலையை மூட உத்தரவு.


கேரளாவில் எண்டோசல்பான் பூச்சி மருந்தை தயாரிக்கும் ஹெச்ஐஎல் தொழிற் சாலையை மூடுவதற்கு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கொச்சியில் உள்ள அந்த தொழிற்சாலை, விதிமுறைகளை மீறி எண்டோசல்பான் மருந்தை தயாரிக்கிறது என்ற அடிப்படையின் பேரில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இத் தகவலை கேரள மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இன்று செய்தியாளர் களிடம் தெரிவித்தனர்.

உலகம் முழுவதும் சுமார் 81 நாடுகளில், விவசாயத்துக்கு எண்டோசல்பான் பூச்சி மருந்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் இதை பயன்படுத்தியதால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். மேலும், நோய்கள் பரவுவதாகவும் குழந்தைகள் ஊனத்துடன் பிறப்பதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, கேரள அரசு எண்டோசல்பான் பயன்படுத்த தடை விதித்தது.

மேலும், நாடு முழுவதும் எண்டோசல்பான் பூச்சி மருந்தை தடை செய்ய வேண்டும் என்று கேரள அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், கொச்சியில் செயல்படும் எண்டோசல்பான் தொழிற்சாலையை உடனடியாக மூடுமாறு உத்தரவிடப் பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள சிஐஏ அதிகாரியை திரும்பப் பெற முடியாது: அமெரிக்கா.


பாகிஸ்தானில் உள்ள அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரியை திருப்பி அழைத்துக் கொள்ள முடியாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இஸ்லாமாபாத்தில் இருந்து செயல்படும் சிஐஏ அதிகாரியின் பெயர் குறித்த விவரங்கள் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியானது. ஆனால், அவரது பெயர் தவறாக வெளியிடப் பட்டுள்ளது என்றும், அப்பெயரை எதன் அடிப்படையில் வெளியிட்டார்கள் என்றும் அமெரிக்கத் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், சிஐஏ அதிகாரியை பாகிஸ்தானில் இருந்து திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்றும், பாக். விவகாரத்தில் அமெரிக்கா தன்னிச்சையாக செயல்படுவதாகவும் பாக். அரசு புகார் கூறியது.

ஆனால், உளவு அதிகாரியை திரும்ப அழைத்துக்கொள்ள முடியாது என்று பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க தாக்குதலுக்கு முன்பே பின்லேடன் இறந்து விட்டார் ; ஈரான் புதிய தகவல்.

அமெரிக்க தாக்குதலுக்கு முன்பே பின்லேடன் இறந்து விட்டார்;    ஈரான் புதிய தகவல்

உலகையே அச்சுறுத்திய அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் அபோதாபாத் நகரில் கடந்த 2-ந்தேதி அமெரிக்க ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு அவரது உடலை கடலில் அடக்கம் செய்ததாக அமெரிக்கா அறிவித்தது. இதை ஈரான் அரசு மறுத்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் உளவுத் துறை மந்திரி ஹைதர் மோஸ்லேகி ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

அல்கொய்தா இயக்க தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொல்லவில்லை. உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பே இறந்து விட்டார். அதற்கான நம்பகத்தகுந்த மிக சரியான தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. உண்மையிலேயே அவரை அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுத்துறை கைது செய்திருந்தாலோ அல்லது கொன்று இருந்தாலோ அவரது உடலை ஏன் காட்ட வில்லை.

உடலை கடலில் ஏன் வீச வேண்டும். எனவே இந்த செய்தி அப்பட்டமான பொய்யாகும். அமெரிக்காவில் நிலவும் உள்நாட்டு பிரச்சினையை திசை திருப்ப குறிப்பாக அங்கு நிலவும் பொருளாதார மந்த நிலை குறித்து மக்கள் எண்ணத்தை மாற்ற வெள்ளை மாளிகை அதிகாரிகள் பின்லேடன் கொல்லப்பட்டதாக பொய் செய்தியை பரப்பியுள்ளனர்.

இவ்வாறு மந்திரி ஹைதர் மோஸ்லேகி தெரிவித்துள்ளார்.

பசிபிக் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்.

பசிபிக் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்

சிங்கப்பூர், தென்மேற்கு பகுதியின் பசிபிக் தீவுகளில் உள்ள ஒரு தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சேத விபரம் பற்றிய தகவல்கள் உடனடியாக தெரியவில்லை.

பி.இ., எம்.பி.பி.எஸ். கட்-ஆப் மார்க் 0.5 முதல் 1 வரை உயர்கிறது.

மருத்துவம், என்ஜினீயரிங் படிப்புக்கான `கட்-ஆப்' மார்க் உயருகிறது

மருத்துவம் (எம்.பி.பி.எஸ்.), பல் மருத்துவம் (பி.டி.எஸ்.), விவசாயம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேருவதற்கு பிளஸ்-2 தேர்வில் உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களின் மதிப்பெண்கள் கட்-ஆப் மார்க்கிற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இதேபோல், என்ஜினீயரிங் படிப்பு எனில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களின் மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன. இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் உயிரியல் பாடத்தில் 615 பேரும், கணிதத்தில் 2,720 பேரும், இயற்பியலில் 646 பேரும், வேதியியலில் 1,243 பேரும் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

ஆனால், கடந்த ஆண்டு உயிரியலில் 258 பேரும், கணக்கில் 1,762 பேரும், இயற்பியலில் 231 பேரும், வேதியியலில் 741 பேரும் மட்டுமே 200-க்கு 200 மார்க் எடுத்திருந்தனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த வருடம், கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து இருக்கிறது.

இது மட்டுமல்லாமல், 200 முதல் 185 மார்க் வரை உள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் உள்ளது. இதன் காரணமாக, தொழிற்கல்வி படிப்புகளில் சேருவதற்கான கட்-ஆப் மார்க் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 0.5 முதல் 1 மார்க் வரை அதிகரிக்கும். தமிழகத்தில் 486 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பி.இ., பி.டெக். இடங்கள் இருக்கின்றன.

அதில் அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்கள் 1 லட்சத்து 15 ஆயிரம் ஆகும். இதேபோல், மொத்தமுள்ள 17 அரசு மருத்துவ கல்லூரிகளில் 1,653 எம்.பி.பி.எஸ். இடங்களும், 8 தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிற்கு 635 சீட்டுகளும் உள்ளன. மேலும், அரசு பல் மருத்துவ கல்லூரியில் 85 பி.டி.எஸ். இடங்களும், தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிற்கு 891 பி.டி.எஸ். சீட்டுகளும் இருக்கின்றன.

இந்த வருடம் சென்னை மருத்துவ கல்லூரியிலும், அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரியிலும் தலா 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளன. அதற்கான ஆய்வை இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) நடத்தி சென்றுள்ளது. இந்த சூழ்நிலையில், இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றிருப்பதால் என்ஜினீயரிங், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளுக்கு கட்-ஆப் மார்க் உயருகிறது.

என்ஜினீயரிங், மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் 16-ந் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. விவசாயம், தோட்டக்கலை, வனவியல் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி : கலைஞர் வெளியிட்டார்.


திமுக தலைவரும், முதல் அமைச்சருமான கலைஞர் 10.05.2011 அன்று செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட 'செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி' பன்னிரெண்டாம் மடலத்தினை வெளியிட, நிதியமைச்சர் க.அன்பழகன் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வின்போது, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்ட இயக்ககத்தின் மதிப்புறு இயக்குநர் மதிவாணன் உடனிருந்தார்.

பாகிஸ்தானில்தான் வசிக்கிறான் தாவூத் இப்ராகிம்-ப.சிதம்பரம்.


பாகிஸ்தானின் கராச்சி நகரில்தான் தாவூத் இப்ராகிம் வசிக்கிறான். அவனை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது மண்ணை இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கான களமாக பயன்படுத்த அது அனுமதிக்கக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இதுகுறித்து ப.சிதம்பரம் கூறுகையில், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி பாகிஸ்தானில் போய் பதுங்கி வாழ்ந்து வரும் ஒவ்வொரு தீவிரவாதியையும் பிடித்து இங்கே கொண்டு வர சர்வதேச அளவிலான ஆதரவை இந்தியா திரட்ட வேண்டும். அவர்கள் தீவிரவாதியாக இருந்தாலும் சரி, தலைமறைவு குற்றவாளிளாக அறிவிக்கப்பட்டு தேடப்படுபவர்களாக இருந்தாலும் சரி அவர்களை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.

தாவூத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தாவூத் இப்ராகிம் கராச்சியில்தான் வசிக்கிறான் என்று இந்தியா உறுதியாக நம்பகிறது. எங்கு இருக்கிறான் என்பதும் கூட நமக்குத் தெரியும். ஆனால் தாவூத் பாகிஸ்தானில் இல்லை என்று தொடர்ந்து மறுத்து வருகிறது பாகிஸ்தான்.

இப்படித்தான் பின்லேடன் பாகிஸ்தானில் இல்லை என்று கூறி வந்தது அந்த நாடு. எனவே தாவூத் குறித்து பாகிஸ்தான் கூறும் வார்த்தைக்கு மதிப்பே கிடையாது.

இருப்பினும் சர்வதேச அளவில் நெருக்கடிகள் அதிகரித்தால் பாகிஸ்தான் தனது நிலையிலிருந்து மாறியே ஆக வேண்டிய நிலை ஏற்படும்.

மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளின் குரல் மாதிரிகளை நாம் கேட்டிருந்தோம். ஆனால் பாகிஸ்தான் இழுத்தடித்து வருகிறது.

தற்போது மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்த குற்றப்பத்திரிக்கையை அமெரிக்க அரசு தனது கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. அதில், பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றி வரும் மேஜர் இக்பால் என்பவர் பெயரும், சஜீத் மிர், மஸார் இக்பால், அபு குவாஹா ஆகிய பாகிஸ்தானியர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பாகிஸ்தானின் தீவிரவாத தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார் ப.சிதம்பரம்.

10 ஆண்டுகளுக்கு முன்பே பின்லேடன் வேட்டைக்கு அனுமதி கொடுத்தார் முஷாரப்?


பத்து ஆண்டுகளுக்கு முன்பே, பின்லேடனை வேட்டையாடுவது தொடர்பாக அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டதாகவும், இதுதொடர்பாக அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும், பாகிஸ்தானில் அதிபராக இருந்த முஷாரப்பும் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கப் படைகளின் தாக்குதலிலிருந்து தப்பி டோரா போரா மலைப் பகுதியை விட்டு பின்லேடன் இடம் பெயர்ந்ததைத் தொடர்ந்து இந்த ரகசிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தானில் பின்லேடன் எங்காவது தென்பட்டால் அவனை அமெரிக்கப் படையினர் வேட்டையாடுவார்கள், அதை பாகிஸ்தான் அனுமதிக்கும் என்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளதாம். அதன் அடிப்படையில்தான் தற்போது பின்லேடனை 'சோலோ'வாக வந்து வேட்டையாடி விட்டுப் போயுள்ளது அமெரிக்கா என்கிறார்கள்.

இந்த ரகசிய ஒப்பந்தம் காரணமாகவே இப்போது அமெரிக்காவுக்கு எதிராக பெரிய அளவில் குரல் கொடுக்க முடியாத இக்கட்டான நிலையில் பாகிஸ்தான் இருப்பதாக கூறுகிறார்கள்.

இந்த ரகசிய ஒப்பந்தப்படி, பாகிஸ்தான் மண்ணில் பின்லேடனோ அல்லது அல் ஜவாஹிரியோ இருப்பது தெரிய வந்தால் அங்கு அமெரிக்கப் படைகள் நுழைந்து இருவரையும் தனியாகவே வேட்டையாடும். இதை பாகிஸ்தான் அனுமதிக்கும். எதிர்ப்பு தெரிவிக்காது. அதன்பின்னர், இஸ்லாமிய நாடுகள் மத்தியில் தனது பெயரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அமெரிக்காவை எதிர்த்து பாகிஸ்தான் குரல் கொடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

ஓய்வு பெற்ற பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்துள்ளதாக அந்த மீடியா செய்தி தெரிவிக்கிறது.

இதுகுறித்து ஒரு மூத்த அமெரிக்க முன்னாள் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு அதிகாரி கூறுகையில், புஷ்ஷுக்கும், முஷாரப்புக்கும் இடையே ஏற்பட்ட இந்த ரகசிய ஒப்பந்தம் குறித்து அதிபர் ஒபாமாவுக்கு நன்றாகத் தெரியும். மேலும் ஒசாமா எங்கு ஒளிந்திருக்கிறார் என்பதும் முன்பே அமெரிக்காவுக்குத் தெரியும். நல்ல சமயத்திற்காக நாங்கள் காத்திருந்தோம் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ரகசிய ஒப்பந்தத்தின்படியே தற்போது அத்தனையும் நடக்கிறது. எங்களது தாக்குதல் குறித்து வெளியுலகில் குய்யோ முறையோ என்று பாகிஸ்தான் கூச்சல் போடுவதும் கூட இந்த ரகசிய ஒப்பந்தத்தின்படிதான். இது குறித்து சர்தாரிக்கும், கிலானிக்கும் கூட நன்றாகத் தெரியும் என்றார் அவர்.

மொத்தத்தில் ஒசாமா பின்லேன் வேட்டையில் இன்னும் வெளியுலகுக்குத் தெரியாமல் இருக்கும் ரகசியம் எத்தனையோ...

மும்பை தாக்குதலுக்கு உதவிய பாகிஸ்தான் அதிகாரிகள்.

மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி மேஜர் இக்பால் உள்ளிட்ட அந்த நாட்டைச் சேர்ந்த 4 பேர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008, நவம்பரில், மும்பையில் தாஜ் ஓட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் முனையம், ஓபராய் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில், அமெரிக்காவைச் சேர்ந்த ஆறு பேர் உட்பட, 166 பேர் பலியாயினர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்த அமெரிக்க வாழ் பாகிஸ்தானியரான டேவிட் கோல்மேன் ஹெட்லியை, அமெரிக்க போலீசார், சிகாகோவில் 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்தனர்.

ஹெட்லி கொடுத்த தகவலின் பேரில், மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு உதவிய மேலும் நான்கு பேர் மீது அமெரிக்க கோர்ட்டில், கடந்த மாதம் 25ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

மும்பை தாக்குதல் சம்பவத்துக்கான ஆயத்த ஏற்பாடுகளை செய்ததாக சஜத் மிர் என்பவன் மீதும், தாக்குதலை நடத்த பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்ததாக அபு குவாபா என்பவன் மீதும், தாக்குதல் சம்பவத்துக்காக நிதி உதவி செய்த மேஜர் இக்பால் என்பவன் மீதும், மஜார் இக்பால் என்பவன் ஹெட்லிக்கு உடந்தையாக இருந்ததற்காகவும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்ட ஹெட்லிக்கு உதவியாக பாகிஸ்தான் ராணுவ மேஜர் சமீர் அலி என்பவரும், மேஜர் இக்பால் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளனர். இவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் இன்டர்போல் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பின்லேடனை வளர்த்து விட்டது அமெரிக்காதான் : பாகிஸ்தான் பிரதமர் கிலானி குற்றச்சாட்டு.


பின்லேடனை வளர்த்து விட்டது யார்? பின்லேடனின் வளர்ச்சிக்கு அமெரிக்காவே காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் கிலானி குற்றம் சாட்டியுள்ளார்.

தலிபான் மற்றும் அல்-காய்தா இயக்கங்களுக்கு 90-களின் தொடக்கத்தில் அமெரிக்கா ஆதரவளித்ததை சுட்டிக் காட்டியிருக்கும் பாகிஸ்தான், "ஒசாமா பின் லேடன் விவகாரத்தில் எங்களை மட்டுமே பொறுப்பாக்கக் கூடாது' என்று கூறியுள்ளது.

பாகிஸ்தானில் அமெரிக்க படைகளின் தாக்குதலில் பின்லேடன் கொல்லப்பட்டார். இதுபற்றி, பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி, அந்நாட்டு பாராளுமன்றத்தில் 09.05.2011 அன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

பின்லேடன் கொலை மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், அதை வெற்றியாக அறிவிக்க பாகிஸ்தான் விரும்பவில்லை. பாகிஸ்தானில் எண்ணற்ற தீவிரவாத தாக்குதல்கள் மூலம் பலரின் சாவுக்கு காரணமாக இருந்தவர், பின்லேடன். அவரது சாம்ராஜ்யம் அழிக்கப்பட வேண்டும்.

தீவிரவாத எதிர்ப்பு போரில், பாகிஸ்தான் ராணுவம் 30 ஆயிரம் பேரை இழந்துள்ளது. இருப்பினும், இப்போருக்கு தேசிய முக்கியத்துவம் அளிக்கிறது. தனது மண்ணில் தீவிரவாத செயல்களை அனுமதிக்காது. பாகிஸ்தான் மக்களை போல, எந்த நாட்டு மக்களும் இத்தனை சவால்களை சந்தித்து இருக்க மாட்டார்கள்.

பின்லேடனை கொல்வதற்காக, பாகிஸ்தானுக்குள் புகுந்து அமெரிக்க படைகள் தன்னிச்சையாக தாக்குதல் நடத்தியதை ஏற்க முடியாது. இது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும். இந்த தாக்குதல் பற்றி ராணுவ அதிகாரி ஜாவீது இக்பால் விசாரணை நடத்துவார். பாகிஸ்தான் ராடார்களால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அமெரிக்கா தனது தொழில்நுட்ப திறமையை காட்டியுள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள், ரகசியமாகவோ, வெளிப்படையாகவோ நடத்தப்பட்டால், அதற்கு பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும். முழுபலத்துடன் பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது. இதுபோன்ற அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கான கொள்கையை வகுக்க, வருகிற 13 ந் தேதி பாராளுமன்ற கூட்டு கூட்டம் நடைபெறும்.

பின்லேடன் விவகாரத்தில், பாகிஸ்தானை திறமையற்றதாக கருத முடியாது. பின்லேடன் மறைந்து வாழ நாங்கள் உடந்தையாக செயல்பட்டதாக கூறுவது முட்டாள்தனமானது. அல் கொய்தாவுடன் நெருக்கமாக செயல்பட்டதாக பாகிஸ்தான் மீதோ, அதன் உளவுப்படை மீதோ குற்றம் சாட்டுவது வஞ்சகமானது. சொல்லப்போனால், எங்கள் உளவுப்படையான ஐ.எஸ்.ஐ. துப்பு கொடுத்ததால்தான், அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி, பின்லேடனை கொல்ல முடிந்தது.

பின்லேடனின் இருப்பிடத்தை உலக நாடுகளின் உளவுத்துறைகளாலேயே கண்டுபிடிக்க முடியாதபோது, ஐ.எஸ்.ஐ.யின் பங்கு பாராட்டத்தக்கது. ஐ.எஸ்.ஐ., இந்த நாட்டின் சொத்து. தீவிரவாத எதிர்ப்பு போரில் அதன் பங்கு மகத்தானது. இந்த போரில், பாகிஸ்தான் அரசு அமைப்புகளிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அனைத்தும் இணக்கமாக செயல்படுகின்றன.

அல் கொய்தா உதயமானது, பாகிஸ்தானில் அல்ல. பின்லேடனை பாகிஸ்தானுக்கோ அல்லது ஆப்கானிஸ்தானுக்கோ நாங்கள் அழைத்து வரவில்லை. ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் ஆதரவுடன் விடுதலை இயக்கம் தோன்றியது. அதுவே, பின்னர் அல் கொய்தாவாக மாறியது. எனவே, பின்லேடனின் வளர்ச்சிக்கு அமெரிக்காவே காரணம். மற்றவர்களின் தவறுகளுக்கும், தவறான கொள்கைகளுக்கும் எங்களை குற்றம் சாட்டுவது சரியல்ல.

அதே சமயத்தில், அமெரிக்காவுடனான உறவுக்கு நாங்கள் உயர் முக்கியத்துவம் அளிக்கிறோம். எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரியின் பாகிஸ்தான் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறோம்.

வல்லரசு நாடுகளுடனும், அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தானின் உறவு நன்றாக இருக்கிறது. இந்தியாவுடனான பாகிஸ்தானின் நல்லுறவு, இருநாட்டு மக்களுக்கும் பலனளிக்கும். இவ்வாறு கிலானி பேசினார்.

2ஜி விசாரணையை ஜூலை 31-க்குள் முடிக்க சிபிஐ திட்டம்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணையை ஜூலை மாதம் 31-ம் தேதிக்குள் முடிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது.
இத்தகவலை சிபிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.இந்த வழக்கில், மேலும் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே, தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளில் முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ. ராசா, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார், கனிமொழி உள்ளிட்டோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது சிபிஐ அமைப்பில் அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பல்வேறு நீதிமன்றங்களில் சுமார் 10 ஆயிரம் வழக்குகள் தேங்கியுள்ளன.

இதனிடையே, நாட்டிலேயே மிகப் பெரிய ஊழலான 2ஜி வழக்கின் விசாரணையை ஜூலை 31-ம் தேதிக்குள் முடிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது.

புவி வெப்பமடைதல் காரணமாக மன்னார் வளைகுடாவில் 2 தீவுகள் கடலில் மூழ்கியது.

புவி வெப்பமடைதல் காரணமாக மன்னார் வளைகுடாவில் 2 தீவுகள் கடலில் மூழ்கியது

மன்னார் வளைகுடா பகுதியில் 21 தீவுகள் அமைந்துள்ளது. அதில் மிக சிறிய தீவின் பரப்பளவு 0.6 ஏக்கர் ஆகும். மிகப்பெரிய தீவின் பரப்பளவு 321.2 ஏக்கர். இந்த தீவுகளின் இருப்பிடத்தை வைத்து தூத்துக்குடி, வேம்பார், கீழக்கரை, மண்டபம் என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் மண்டபம் பிரிவில் பூமரிச்சான் தீவும், தூத்துக்குடி பிரிவில் விலங்கு சல்லி தீவும் இடம் பெற்று இருந்தன. இந்த 2 தீவுகளும் கடலில் மூழ்கியுள்ளன.

புவி வெப்பமடைதலால் கடல் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்த 2 தீவுகளும் கடலில் மூழ்கி விட்டன என மன்னார் வளைகுடா கடல்சார் தேசிய பூங்கா வார்டன் சுந்தரகுமார் கூறினார்.

பவள பாறைகள் தீவுகளுக்கு தடுப்பு அமைப்பாக செயல்பட்டு வந்தது. சட்ட விரோதமாக பவளப்பாறைகளை வெட்டியதால்தான் தீவுகள் மூழ்கி விட்டன என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் மேம்பாட்டு திட்ட பிரதிநிதி தீபக் சாமுவேல் கூறினார்.

கடந்த நூற்றாண்டில் பருவ மாற்றத்தினால் கடல் நீர்மட்டம் சராசரியாக ஆண்டுக்கு 1.8 மி.மீ. உயர்ந்துள்ளது. இது எதிர்காலத்தில் பெரும்பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஆனால் இப்போதுள்ள நிலையில் தீவுகள் மூழ்கியது பருவ மாற்றம் காரணமாக இருக்க முடியாது என்று பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்த்தி ஸ்ரீதர் கூறி உள்ளார்.

பெண்ணாக பிறந்ததால் சுவற்றில் அடித்துக் கொன்ற கொடூரன்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நகரந்தல் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். விவசாயி. இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

ரூபினி, விஜயலட்சுமி என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த சுமதி, பிரசவத்துக்காக தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவருக்கு 3வதாகவும் பெண் குழந்தை பிறந்தது.

லோகநாதன் மாமியார் வீட்டிற்கு சென்று மனைவி சுமதியை குழந்தையுடன் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்ததும், மீண்டும் பெண் குழந்தையை பெற்று விட்டாயே? என மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

நேற்று 3 மணியளவிலும் கணவன்- மனைவி இடையே மீண்டும் சண்டை வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த லோகநாதன், பச்சிளம் குழந்தையின் காலை பிடித்து தூக்கி சுவற்றில் ஓங்கி அடித்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த குழந்தையைக் கண்டு அதிர்ந்த சுமதி அழுதபடியே குழந்தையை பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளார். தீவிர சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.

இது குறித்து சுமதி வடவணக்கம்பாடி போலீசில் தனது கணவர் லோகநாதன் மீது புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லோகநாதனை இன்று மதியம் கைது செய்தனர்.

மும்பை தாக்குதல் : அமெரிக்கா குற்றப்பத்திரிகை தாக்கல்.

மும்பை தாக்குதல் :அமெரிக்கா குற்றப்பத்திரிகை தாக்கல்

பல பயங்கரவாதிகள் மீதான வழக்கு விசாரணை சிகாகோ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அமெரிக்கா இன்று 2 வது குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்துள்ளது.

இதில் கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ., உதவியது தெரியவந்துள்ளது .அதில் மும்பை தாக்குதலில் ஈடுப்பட்டதாக டேவிட் ஹெட்லி உள்ளிட்ட 5 பேர் மீது அமெரிக்கா குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும் அந்த ஆதாரங்கள் அடங்கிய முழு விபரங்களையும் அமெரிக்கா இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிகின்றது .

தற்போது மும்பை தாக்குதலில் ஈடுப்பட்டதாக கூறப்படும் 5 பேரின் புகைப்படத்துடன் முழு விபரத்தவும் இந்தியா வெளியிட்டுள்ளது அதில் மாஜித் இக்பால் ,ஷாஹித் மஜீத் ,அபு கஹபா,லஷ்கர் மற்றும் ஐ.எஸ்.ஐ., அதிகாரி மேஜர் இக்பால் ஆகிய 4 பயங்கரவாதிகள் பெயரும், ஒரு ஐ.எஸ்.ஐ., அதிகாரியின் பெயரையும் வெளியிட்டுள்ளது .மேலும் அமெரிக்க குற்றப்பத்திரிகையிலும் இவை அனைத்தும் இடம்பெற்றுள்ளது.