Tuesday, May 10, 2011

பெண்ணாக பிறந்ததால் சுவற்றில் அடித்துக் கொன்ற கொடூரன்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நகரந்தல் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். விவசாயி. இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

ரூபினி, விஜயலட்சுமி என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த சுமதி, பிரசவத்துக்காக தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவருக்கு 3வதாகவும் பெண் குழந்தை பிறந்தது.

லோகநாதன் மாமியார் வீட்டிற்கு சென்று மனைவி சுமதியை குழந்தையுடன் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்ததும், மீண்டும் பெண் குழந்தையை பெற்று விட்டாயே? என மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

நேற்று 3 மணியளவிலும் கணவன்- மனைவி இடையே மீண்டும் சண்டை வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த லோகநாதன், பச்சிளம் குழந்தையின் காலை பிடித்து தூக்கி சுவற்றில் ஓங்கி அடித்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த குழந்தையைக் கண்டு அதிர்ந்த சுமதி அழுதபடியே குழந்தையை பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளார். தீவிர சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.

இது குறித்து சுமதி வடவணக்கம்பாடி போலீசில் தனது கணவர் லோகநாதன் மீது புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லோகநாதனை இன்று மதியம் கைது செய்தனர்.

1 comment:

எண்ணங்கள் 13189034291840215795 said...

தப்பு அவன் மேல் மட்டுமா?.. பெண் குழந்தை பிறந்தால் நஷ்டம் என ஆக்கிவைத்திருக்கும் சமூகத்தை எப்போது குற்றவாளி கூண்டில் ஏற்றுவோம்?..

பெண் குழந்தைன்னா திருமணமே அவளின் எல்லை/முடிவு என முட்டாள்தனமாக வரையறுத்த கிறுக்கர்கள் யார்?..

பிடிக்காட்டி யாருக்காவது தத்து கொடுத்து தொலையவேண்டியதுதானே?..

பெண்களின் வாழ்வை எவ்வகையிலாவது நரகமாக்கும் ஒவ்வொருவருக்கும் இதில் பங்குண்டு..