Wednesday, May 4, 2011

பாகிஸ்தான் நம்பிக்கையான நட்பு நாடு இல்லை : அமெரிக்க புலனாய்வுக்குழு தலைவர் குற்றச்சாட்டு.

தகவல்களை கசிய விட்டது:    பாகிஸ்தான் நம்பிக்கையான    நட்பு நாடு இல்லை;    அமெரிக்க புலனாய்வுக்குழு    தலைவர் குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் பதுங்கி இருந்த அல்கொய்தா இயக்க தலைவர் பின்லேடன் அமெரிக்க புலனாய்வு குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க எம்.பி.க்கள் கூட்டத்தில் அமெரிக்க புலனாய்வு குழு தலைவர் லியோன் பனெட்டா விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

பாகிஸ்தான் எங்களது எல்லாவிதமான தகவல்களையும் கசிய விட்டது. இதனால் நாங்கள் பின்லேடன் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பான தகவல் எதையும் பாகிஸ்தானிடம் தெரிவிக்க வில்லை. நாங்கள் எந்த முடிவு எடுத்து பணியை செய்ய ஆரம்பித்தாலும் பாகிஸ்தான் அதற்கு இடைஞ்சலாக இருந்து வந்தது. இதனால் பின்லேடன் மீதான தாக்குதலை மிகவும் உஷாராக மேற்கொண்டோம்.

பாகிஸ்தான் தகவல்களை கசிய விடும் என்ற பயத்தின் காரணமாகவே தாக்குதல் தொடர்பாக நாங்கள் எதையும் தெரிவிக்கக்கூடாது என்று ஏற்கனவே முடிவு செய்து இருந்தோம். பாகிஸ்தான் நம்பிக்கைக்கு உரிய நட்பு நாடு இல்லை. என்றாலும் பாகிஸ்தானுடன் நட்பு நீடிக்கும். தீவிரவாதம் தொடர்பாக நாங்கள் அந்த நாட்டுடன் எந்த ஒப்பந்தமும் வைத்துக் கொள்ள மாட்டோம். ஆனால் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தானுடனான உறவு தொடரும்.

எங்களது எதிரிகள் இன்னும் அந்த நாட்டில் தான் உள்ளனர். அவர்களுக்கு எதிராக எங்களது தாக்குதல் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆபரேஷன் “ஜெரோனிமா” பெயர் உருவான கதை.

ஆபரேஷன் “ஜெரோனிமா” பெயர் உருவான கதை

பின்லேடன் மீது நடத்திய வேட்டைக்கு ஆபரேஷன் ஜெரோனிமா என்று பெயர் சூட்டி இருந்தனர். அதிபர் ஒபாமாதான் இந்த பெயரை தேர்வு செய்து இருந்தார்.

“ஜெரோனிமா” என்பது அமெரிக்காவை சேர்ந்த புரட்சி வீரனின் பெயர். ஜெரோனிமாவுக்கும் பின்லேடனுக்கும் மிகுந்த ஒற்றுமை உண்டு. பின்லேடனை போலவே ஜெரோனிமாவும் அமெரிக்காவின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டியவன்.

அமெரிக்காவில் வெள்ளைகாரர்கள் குடியேறுவதற்கு முன்பு அங்கு ஏராளமான பழங்குடி மக்கள் வசித்து வந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்களை கொன்று குவித்து விட்டுதான் வெள்ளைக்காரர்கள் குடியேறினார்கள். அவர்களில் தப்பி பிழைத்த மக்கள் ஆங்காங்கே வசித்து வந்தனர். அவர்களில் அபேச்சே எனும் ஒரு கூட்டத்தில் தலைவனாக இருந்தவன் ஜெரோனிமா.

1829-ம் ஆண்டு பிறந்த அவன் அமெரிக்காவுக்கு எதிரான பழங்குடி மக்களை திரட்டி அமெரிக்காவுக்கு எதிராக போராடினான். துப்பாக்கி படை ஒன்றை உருவாக்கி அமெரிக்காவுக்கே சிம்ம சொப்பனமாக இருந்தான். 5 ஆயிரம் பேர் கொண்ட அமெரிக்க படை அவனை பல ஆண்டுகளாக பிடிக்க முடியவில்லை.

மெக்சிகோ பகுதியில் உள்ள குகைகளுக்குள் பதுங்கி தப்பி வந்தான். கடைசியாக 1886-ம் ஆண்டு அமெரிக்க படை சுற்றி வளைத்தது அடுத்து சரண் அடைந்தான். பின்னர் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த அவன் 1909-ம் ஆண்டு தனது 79 வயதில் மரணம் அடைந்தான்.

ஜெரோனிமா போலவே பின்லேடனும் அமெரிக்காவுக்கு தண்ணீ காட்டி வந்ததால் பின்லேடனை பிடிக்க நடத்திய இந்த வேட்டைக்கு ஜெரோனிமா பெயரை சூட்டினார்கள்.

தாமதமாக வந்த கலெக்டரை கண்டித்த வேட்பாளர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் வாக்கு எண்ணிக்கைக்கான ஆலோசனைகள், கருத்துகள் பற்றி இன்று கலந்துரையாடலுக்காக வேட்பாளர்கள் வரவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மு. ராஜேந்திரன் தகவல் அனுப்பியிருந்தார்.

அதன்படி மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் வேட்பாளர்கள், அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் வந்து காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாக மாவட்ட ஆட்சியர் வரவில்லை. மதியம் 11 மணிக்கு மேல் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிர்மல் ஜோஷி குமாருடன் அரங்கிற்க்கு வந்து கூட்டத்தை தொடங்கினார்.

அப்போது கீ்ழ் பென்னாத்தூர் தொகுதியில் போட்டியிடும் ஒரு சுயேட்சை வேட்பாளர் எழுந்து, எங்கள வரசொல்லிட்டு நீங்க ( கலெக்டர்) லேட்டா வந்தா என்ன அர்த்தம். எப்ப பாத்தாலும் நீங்க லேட்டாவே வர்றிங்க. எங்களுக்கென்ன வேற வேலை இல்லன்னு நினைக்கறிங்களா என எல்லோர் முன்பும் மைக்கில் கேள்வி கேட்க முகம் கருத்து விட்டது மாவட்ட ஆட்சியர்க்கு.

வேட்பாளரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தலை குணிந்துக்கொண்டார். அந்த சுயேட்சை வேட்பாளர் மேலும் சங்கடப்படுத்தாமல் அமர்ந்துவிட்டார். அவரின் இந்த கேள்வி அங்கிருந்த அதகாரிகளை அதிர்ச்சியுற வைத்துவிட்டது. இருந்தும் அவரின் கேள்வியில் நியாயம்மிருந்தததால் அதிகாரிகள் அவரை மறைமுகமாக பாராட்டினர்.

கனிமொழிக்கு சம்மன் : அமைச்சர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் கலைஞர் தீவிர ஆலோசனை.


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் அதிபர்கள், அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வழக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் 2-வது குற்றப்பத்திரிகை ஏப்ரல் 25-ந் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான கனிமொழி எம்.பி., சரத்குமார் உள்பட 5 பேர்களின் பெயர்கள் இடம்பெற்றது.

2-வது குற்றப்பத்திரிகையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்களில் 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கனிமொழி எம்.பி., சரத்குமார் மற்றும் சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் கரிம்முரானி ஆகியோர் மே 6-ந் தேதி டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இதுபற்றி ஆலோசிக்க 27-ந் தேதி தி.மு.க.வின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் கருணாநிதி தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில், உண்மையை நிலைநாட்ட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், முதலமைச்சரின் சி.ஐ.டி. காலனி வீட்டில் நேற்று தீவிர ஆலோசனை நடந்தது. காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்த ஆலோசனை மதியம் 1.20 மணி வரை நடந்தது.

இந்த ஆலோசனையில் முதலமைச்சர் கருணாநிதி, துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்ட நிபுணர்கள் பி.எஸ்.ராமன், சண்முகசுந்தரம், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். வீட்டில் இருந்த கனிமொழியும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டார்.

6-ந் தேதி கோர்ட்டில் ஆஜராவது தொடர்பாக சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த தகவல் பரவியதும் சி.ஐ.டி. காலனி வீடு அருகே பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் குவிந்தனர்.

ஆலோசனை கூட்டம் முடிந்து வெளியில் வந்த கி.வீரமணியிடம் இதுபற்றி கேட்டபோது, இது வழக்கமான சந்திப்பு தான், வேறு ஒன்றுமில்லை என்றார். ஆனால் வேறு யாரும் பத்திரிகையாளர்களுடன் பேசவில்லை.

இரண்டாவது பசுமைப் புரட்சியை நோக்கி பிகார் : அப்துல்கலாம்.


நாட்டில் 2-வது பசுமைப் புரட்சி பிகார் மாநிலம் பலிகஞ்சில் ஏற்படும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் தெரிவித்தார்.

பிகார் மாநிலத் தலைநகர் பாட்னாவுக்கு அருகிலுள்ள பலிகஞ்ச்சில் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இதுகுறித்து மேலும் கூறியது:

பலிகஞ்ச் விவசாயிகள் இரண்டாவது பசுமைப்புரட்சியை படைக்கும் திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களது முயற்சியால் விவசாய உற்பத்தி இரண்டு மடங்கு ஆகியுள்ளது. 1999-ம் ஆண்டு இப்பகுதி விவசாயிகள் 2.4 ஹெக்டேர் நிலத்தில் கோதுமை, நெல் பயிரிட்டனர். 2004-ம் ஆண்டில் பயிரிடப்படும் நிலம் 2 ஆயிரம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.

இந்த சமயத்தில் வீரிய விதை, சத்தான உரம், புதிய விவசாயக்கொள்கை ஆகியவற்றை கடைப்பிடித்து நெல், கோதுமை பரியிட்டு 5 ஆண்டுகளில் உற்பத்தியை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக்கி சாதனை படைத்துள்ளனர். பலிகஞ்ச் விவசாயிகளின் இந்த முயற்சி தொடரவேண்டும். இதன்மூலம் பிகாரை நாட்டின் பசுமை மாநிலமாக மாற்ற வேண்டும்.

இம்மாநிலத்தில் மொத்தம் 56 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பிலேயே உணவு தானியங்கள் பயிரிடப்படுகின்றன. இம்மாநிலத்தின் சராசரி நெல் உற்பத்தி ஹெக்டேருக்கு 1.45 டன்னாகவும் கோதுமை 2.19 டன்னாகவும் உள்ளது. ஆனால் பலிகஞ்ச் விவசாயிகள் நெல் ஹெக்டேருக்கு 4டன்ஆகவும் கோதுமை ஹெக்டேருக்கு 6 டன் ஆகவும் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளனர்.

இம்மாநிலத்தில் உணவு உற்பத்தியை இரண்டு மடங்கு ஆக்க பலிகஞ்ச் மற்றும் இதர மாவட்ட விவசாயிகளுடன் இங்குள்ள ராஜேந்திரா விவசாயப் பல்கலைக்கழகம் மற்றும் உள்ள பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்படவேண்டும். விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

புதிய புதிய கண்டுபிடிப்புகளை விவசாயத்தில் புகுத்தவேண்டும். இதற்கு விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும். இந்தத்திட்டத்தை இங்குள்ள 38 மாவட்டங்களிலும் அமல்படுத்த வேண்டும். அப்போது மட்டுமே உணவு உற்பத்தியில் நமது இலக்கை அடைய முடியும். நெல், கோதுமை உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரிக்க முடியும். பலிகஞ்ச் விவசாயிகள் புதிய திட்டங்களை விவசாயத்தில் அமல்படுத்தி 2016-2020-ம் ஆண்டில் 2-வது பசுமைப் புரட்சியை படைக்க வேண்டும். இதன் மூலம் 2020-ம் ஆண்டில் உணவு உற்பத்தியை 23 கோடி டன்னில் இருந்து 34 கோடி டன்னாக உயர்த்த முடியும்.

விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம், வீரியவிதைகள், தரமான உரம், நீர் ஆதாரம் ஆகியவற்றை அடங்கிய அறிவுசார்ந்த விவசாயமாக 2-வது பசுமைப்புரட்சி அமைய வேண்டும். விவசாய விளை பொருளுக்கு சரியான விலை, உணவு பதப்படுத்துதல் வசதி, சந்தை வசதி ஏற்படுத்திக் கொடுப்பதாக இருக்க வேண்டும். விவசாய தொழில் நுட்பம் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும்.

விவசாய விஞ்ஞானிகளுடன் இணைந்து நமது விவசாயிகள் செயல்படவேண்டும். அப்போது மட்டுமே அதிக வீரியம் உடைய விதைகளை உற்பத்தி செய்ய முடியும் என்றார்.

பின்லேடன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து 2 தடவை தகவல் கொடுத்த இந்திய உளவுத்துறை ; அமெரிக்கா அலட்சியம் செய்தது.

பின்லேடன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து    2 தடவை தகவல் கொடுத்த    இந்திய உளவுத்துறை;    அமெரிக்கா அலட்சியம் செய்தது

பின்லேடன் பதுங்கி இருந்த இடத்தை அமெரிக்கா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தான் கண்டு பிடித்தது. ஆனால் அதற்கு முன்பே இந்தியா கண்டு பிடித்து 2 தடவை அமெரிக்காவுக்கு தகவல் சொன்னது. ஆனால் அவர்கள் இந்திய உளவுத்துறை தகவலை அலட்சியம் செய்து விட்டனர் என்று இப்போது தெரிய வந்துள்ளது.

முதலில் 2007-ம் ஆண்டு மத்தியில் இந்திய உளவுத்துறை பின்லேடன் பதுங்கி இருந்த இடத்தை கண்டு பிடித்தது. அப்போது பெஷாவர் நகரில் தலிபான் தீவிரவாதிகள் கூட்டம் நடந்தது. இதில் அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் பின்லேடனுக்கு அடுத்த இடத்தில் இருந்த தலைவரான அல் ஷ வாகிரி கலந்து கொண்டார். கூட்டம் முடிந்ததும் அல்ஷவாகிரி இஸ்லாமாபாத் நகருக்கு வந்து அங்கிருந்து ஏதோ ஒரு இடத்துக்கு சென்றார்.

இதை இந்திய உளவுத்துறை தெரிந்து கொண்டது. அவர் இஸ்லாமாபாத்துக்கு பின்லேடனை சந்திப்பதற்காக தான் வந்து இருக்க வேண்டும் என்று இந்திய உளவுத்துறை கருதியது. எனவே பின்லேடன் இஸ்லாமாபாத் நகரத்துக்கு அருகில் தான் எங்கோ தங்கி இருக்கிறான். என உறுதி செய்த இந்திய உளவுத்துறை அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் அனுப்பியது. ஆனால் இதை அமெரிக்கா கண்டு கொள்ளவே இல்லை.

அடுத்து 2008-ம் ஆண்டு இந்திய உளவுத்துறைக்கு இன்னொரு முக்கிய தகவல் கிடைத்தது. பின்லேடன் மிகவும் உடல் நலம் பாதித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நிலையில் இருக்கிறார். அவருக்கு சாதாரண ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க முடியாது என்று தகவல் கிடைத்தது. எனவே பாகிஸ்தானில் ஏதேனும் பெரிய நகரில் அவர் தங்கியிருந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும் என்று கருதினார்கள்.

மேலும் இதுபற்றி தகவல் திரட்டிய போது ராணுவ வீரர்கள் வசிக்கும் பகுதியில் தான் பின்லேடன் தங்கி இருக்கிறார் என்று தெரிய வந்தது. எனவே இதுபற்றியும் அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அப்போதும் அமெரிக்கா அலட்சியப்படுத்தியது. பின்லேடன் எங்காவது மலை பகுதியில் அல்லது பழங்குடி மக்கள் கிராமத்தில் தான் வசிக்க வேண்டும் என்று அமெரிக்கா கடைசி வரை கருதியது.

எனவே இந்தியா சொன்னது போல அவர் நகர பகுதியில் தங்கி இருப்பார் என்பதை நம்பவில்லை. இதனால் தான் அலட்சியப்படுத்தி வந்தனர். கடைசியில் அவர் அபோதாபாத் நகரில் ராணுவ வீரர்கள் வசிக்கும் பகுதியிலேயே 5 ஆண்டுகளாக வசித்து வந்துது இப்போது உறுதியாகி உள்ளது.

டீசல் லிட்டருக்கு ரூ. 6 அதிகரிக்கிறது;பெட்ரோல் விலை ரூ. 4 உயருகிறது ; சமையல் கியாஸ் விலையும் கூடுகிறது.


5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிந்ததும் டீசல் விலையை ரூ 6 உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பெட்ரோலின் விலையையும் அதே அளவு உயர்த்த அரசு பரிசீலித்து வருகிறது.

டீசல் விலையை உயர்த்துவது தொடர்பாக பரிசீலிக்க மே 11-ம் தேதி நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழுவின் கூட்டம் நடைபெற உள்ளதாக அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பெட்ரோல் விலை நிர்ணயம் செய்வது அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. எனினும் அதன் விலையையும் ரூ 3 முதல் 6 வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளிக்கும் என்று தெரிகிறது. மே 10-ம் தேதி கடைசிகட்ட வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக இந்த விலைகள் உயர்த்தப்படலாம்.

2011-12ம் ஆண்டுக்கான நிதிக் கொள்கையை ரிசர்வ் வங்கி மும்பையில் வெளியிட்டது. அதில் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் உரங்களின் விலையை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலகச் சந்தையில் கச்சா எண்ணை விலை பீப்பாய்க்கு 72 டாலராக இருந்தபோது டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதன் பிறகு இதுவரை டீசல் விலை உயர்த்தப்படவில்லை. அதே போல் சமையல் எரிவாயு, மண்எண்ணை, பெட்ரோல் விலையும் உயர்த்தப்படவில்லை.

இதனால் எண்ணை நிறுவனங்களுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது டீசல் விற்பனையில் எண்ணை நிறுவனங்களுக்கு லிட்டருக்கு 18 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

எனவே இதில் மூன்றில் ஒரு பங்காக அதாவது லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ. 8.50 இழப்பு ஏற்படுகிறது. இதை 2 அல்லது 3 கட்ட விலை உயர்வின் மூலம் ஈடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே பெட்ரோல் விலை முதல் கட்டமாக லிட்டருக்கு ரூ. 4 முதல் ரூ. 4.50 வரை உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.

மேலும் சமையல் கியாஸ் விற்பனையில் சிலிண்டருக்கு 315 ரூபாய் 86 பைசா இழப்பு ஏற்படுகிறது. மண்எண்ணை விற்பனையில் லிட்டருக்கு 26 ரூபாய் 98 பைசா இழப்பு ஏற்படுகிறது.

எனவே சமையல் கியாஸ் விலையும் உயர்த்தப்படுகிறது. மண்எண்ணை விலை மட்டும் உயராது.

மேற்கு வங்காள தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகிய பொருட்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே விலைகளை உயர்த்தும் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துடன் பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு குறைந்தபட்ச மதிப்பெண் முறை பின்பற்றப்படும் ; கருணாநிதி உத்தரவு.

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு குறைந்தபட்ச மதிப்பெண் முறை பின்பற்றப்படும்; கருணாநிதி உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையிலான அரசு - சமூக நீதியைக் காத்திடும் நோக்கிலும், அனைத்து மாணவ, மாணவியருக்கும் பொறியியல் கல்வி கிடைத்திட வேண்டுமென்ற நோக்கிலும், தமிழ்நாடு பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச தகுதியாக பொதுப் பிரிவினருக்கு சம்பந்தப்பட்ட பாடங்களில் சராசரியாக 50 விழுக்காடு மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 45 விழுக்காடு மதிப்பெண்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 40 விழுக்காடு மதிப்பெண்களும், பட்டியல் இனத்தவர் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கு 35 விழுக்காடு மதிப்பெண்களும் நிர்ணயம் செய்து, அது தொடர்பான ஆணைகளை வெளியிட்டு, கடந்த 2010-2011 ஆம் கல்வியாண்டு முதல் இந்நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்பொழுது அகில இந்திய தொழில்நுட்பக் குழுமம் 2011-2012 ஆம் கல்வியாண்டு முதல் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு சம்பந்தப்பட்ட பாடங்களில் குறைந்தபட்சமாக பொதுப்பிரிவினர் 50 விழுக்காடு மதிப்பெண்களும், ஒதுக்கீடு பெறும் இனத்தவர் 45 விழுக்காடு மதிப்பெண்களும் பெற்றிருத்தல் வேண்டும் என்பன உள்ளிட்ட புதிய நெறிமுறைகளை வரையறுத்து அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.

அகில இந்திய தொழில்நுட்பக் குழுமத்தின் இப்புதிய நெறிமுறைகள் பின்பற்றப் படுமானால், பட்டியல் இனத்தவர், சீர்மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், கிராமப்புற மாணவர்கள் பெரிதும் புறக்கணிக்கப்படுவதோடு, இது சமூகநீதிக் கொள்கையையே பொருளற்றதாகிவிடும்.

தற்போது தமிழக அரசால் 2010-2011 ஆம் ஆண்டு முதல், பல்வேறு பிரிவினைச் சார்ந்த மாணவ, மாணவியர்க்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண்கள் - சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு செயலாக்கத்தில் உள்ளது.

இந்நிலையில், தமிழக அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட இந்தக் குறைந்தபட்ச மதிப்பெண்களையே, வரும் கல்வியாண்டிற்கான (2011-2012) மாணவர் சேர்க்கைக்குப் பின்பற்றலாம் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஆகவே, கல்வி பொதுப் பட்டியலில் இருக்கிறது என்ற காரணத்தைக் காட்டாமல், அனைத்துப் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில், அகில இந்திய தொழில்நுட்பக் குழுமம் இந்த ஆணையினை திரும்பப் பெறுமாறு தமிழக அரசு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பின்லேடன் புகைப்படம் கோரமானது என்பதால் வெளியிட்டால் பிரச்சினை வரும் : அமெரிக்கா.


பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் பார்க்க மிகவும் கோரமாக இருப்பதால் அவற்றை வெளியிட்டால் பிரச்சினை வரும் என கருதுகிறோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

பாகிஸ்தானில் நடந்த தாக்குதலின்போது பின்லேடன் கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார். இதையடுத்து உலகெங்கும் பரபரப்பு ஏற்பட்டது. கொல்லப்பட்ட சில மணி நேரங்களிலேயே பின்லேடன் உடலில் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டு உடலையும் கடலில் வீசி விட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இதனால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. உண்மையிலேயே பின்லேடன் கொல்லப்பட்டு விட்டானா அல்லது ஒபாமாவின் செல்வாக்கை அதிகரிப்பதற்காக அவரது நிர்வாகம் டிராமா போடுகிறதா என்ற கேள்விகள் அமெரிக்காவிலேயே எழுந்துள்ளன.

இதையடுத்து புகைப்படங்களை வெளியிடுவது குறித்து யோசித்து வருவதாக அமெரிக்கா கூறியது. இந்த நிலையில் புகைப்படத்தை வெளியிட வாய்ப்பில்லை என்பதை அமெரிக்கா தற்போது மறைமுகமாக தெரிவித்துள்ளது.

பின்லேடன் வேட்டைக்காக பாகிஸ்தானிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது - அமெரிக்கா.


பாகிஸ்தானுக்குள் புகுந்து பின்லேடனை வேட்டையாடியதற்காக அந்த நாட்டிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. பின்லேடன் குறித்த தகவலை பாகிஸ்தானிடம் முன்பே கூறியிருந்தால் அவனை தப்ப விட்டிருப்பார்கள். பாகிஸ்தானை நம்பாததால்தான் நாங்களே நேரடியாக நடவடிக்கையில் இறங்கினோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி கூறுகையில், பின்லேடன் வேட்டைக்காக நாங்கள் மன்னிப்பு கேட்க மாட்டோம். அமெரிக்காவின் நம்பர் ஒன் எதிரி பின்லேடன். பல அப்பாவிகளின் உயிரை எடுத்தவன். இப்படிப்பட்டவனை கொன்றதற்காக மன்னிப்பு கேட்க முடியாது. அதற்கான அவசியமும் இல்லை.

அமெரிக்கா ஒருபோதும் இஸ்லாமுடன் போரிட்டதில்லை. இப்போது நடந்திருப்பதும் கூட இஸ்லாமுக்கு எதிரான போர் அல்ல. இதை ஏற்கனவே அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்ஷும் தெளிவாக கூறியுள்ளார். அதிபர் ஒபாமாவும் தெளிவுபடுத்தியுள்ளார். பின்லேடன் ஒரு முஸ்லீம் தலைவர் அல்ல. ஏராளமான முஸ்லீம்களின் உயிரைப் பறித்தவன் பின்லேடன். அதேபோல பல்வேறு மதத்தவர்களின் உயிரையும் பறித்தவன்.

பாகிஸ்தானில் உள்ள முஸ்லீ்ம்கள், பிற நாடுகளைச் சேர்ந்த முஸ்லீம்கள் மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லீம்களின் ஒத்துழைப்புடன்தான் இதை எங்களால் சாதிக்க முடிந்தது. உலகெங்கும் வாழும் முஸ்லீ்ம்கள் அல் கொய்தா தீவிரவாதத்திற்கு எதிராக கொடுத்து வரும் ஒத்துழைப்பினால்தான் இதை செய்ய முடிந்தது. அமெரிக்கர்களையும், அமெரிக்காவையும் பாதுகாக்க வேண்டியது எங்களது கடமை என்றார் அவர்.

அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டூ மரணம் - விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் கண்டுபிடிப்பு.


அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டூ சென்ற ஹெலிகாப்டர் தவாங்கில் விபத்துக்குள்ளானது என்றும், அந்த இடத்தை கண்டுபிடித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. உடல்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி கந்து (56), மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள தவாங் பகுதியில் இருந்து தலைநகர் இடா நகருக்கு கடந்த சனிக்கிழமை காலை 9.50 மணிக்கு தனியார் ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவருடன் எம்எல்ஏவின் சகோதரி மற்றும் அதிகாரிகள் உள்பட 4 பேர் சென்றனர். 20 நிமிடத்துக்கு பிறகு ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.

கடந்த 4 நாட்களாக அவரைத் தேடும் பணி நடந்து வந்தது. இந்நிலையில் இன்று அவரது ஹெலிகாப்டர் ஜாங் அருவிப்பகுதியில் விபத்துக்குள்ளானது என்றும், விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த விபத்தில் டோர்ஜி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்புக் குழுவினர்கள் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டது சட்ட விரோதமானது : அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கண்டனம்.

பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டது சட்ட விரோதமானது: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கண்டனம்

பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டது சட்ட விரோதமானது என்று கூறி அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பின்லேடன் கொல்லப்பட்டது முக்கிய மைல் கல் ஆகும்.

பின்லேடன் தங்கி இருந்த கட்டிடம் குறித்து ஏற்கனவே 2009-ம் ஆண்டில் இருந்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வுடனும், பிற நட்புறவு புலனாய்வு ஏஜென்சிகளுடனும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. நிறுவனம் தகவல்களை பகிர்ந்து கொண்டு உள்ளது.

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் ஒத்துழைத்து வருகிறது. கமாண்டோ நடவடிக்கை மூலம் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டது சட்ட விரோதமானது. இது அமெரிக்கா தன்னிச்சையாக மேற்கொண்ட நடவடிக்கை ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக அமெரிக்கா புகார் : பாகிஸ்தானுக்கு நெருக்கடி ; தீவிரவாத இயக்கங்களும் மிரட்டுகின்றன.

பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக அமெரிக்கா புகார்: பாகிஸ்தானுக்கு நெருக்கடி; தீவிரவாத இயக்கங்களும் மிரட்டுகின்றன

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை அடுத்த அபோதாபாத் நகரில் உள்ள பாதுகாப்பு மிகுந்த ஒரு பங்களா வீட்டில் பின்லேடன் பதுங்கி இருந்தார். அந்த வீட்டிற்குள் அமெரிக்க ராணுவ வீரர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அதிரடியாக புகுந்து பின்லேடனை சுட்டுக்கொன்றனர்.

இந்த தாக்குதலில் அங்கிருந்த மேலும் 4 பேரும் பலியானார்கள். பின்லேடனின் பாதுகாவலர்கள் உள்பட சிலர் உயிருடன் பிடிபட்டனர். பாகிஸ்தான் நாட்டுக்குள் அமெரிக்க ராணுவம் நடத்திய இந்த அதிபயங்கர தாக்குதல் பாகிஸ்தான் அரசுக்கே தெரியாது என்று கூறப்படுகிறது.

பின்லேடன் தங்கி இருந்து வீட்டுக்கு சற்று தொலைவில்தான் பாகிஸ்தான் ராணுவ அகாடமி உள்ளது. பாகிஸ்தான் ராணுவம் முகாமிட்டுள்ள அபோதாபாத் நகரில் நீண்ட காலமாக பின்லேடன் தங்கி இருந்தது அமெரிக்காவுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச அளவில் நடைபெறும் தீவிரவாதத்துக்கு எதிரான போரிலும், பின்லேடனை ஒழிக்கும் நடவடிக்கையிலும் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதாக பாகிஸ்தான் பல ஆண்டுகளாக கூறி வருகிறது.

அப்படி இருக்கும் போது பாகிஸ்தானிலேயே அதுவும் ராணுவ தளம் உள்ள நகரில் பின்லேடன் தங்கி இருந்தது, பாகிஸ்தான் அரசுக்கு தெரியாமல் இருந்திருக்க முடியாது என்றும், பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து இருக்கலாம் என்றும் அமெரிக்கா கருதுகிறது. தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இணைந்து செயல்படுவதாக கூறிக்கொண்டு, பின்லேடனுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அளித்ததா? என்ற கேள்வி அமெரிக்கர்கள் மனதில் எழுந்து இருக்கிறது.

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாகவே அவர்களில் பலர் கருதுகிறார்கள். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகி, உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. பின்லேடனுக்கு பாகிஸ்தான் அரசின் ஆதரவு கிடைத்தது பற்றியும், அவருக்கு உதவிய அதிகாரிகள் பற்றியும் விசாரணை நடத்தப்படும் என்று அமெரிக்கா அறிவித்து உள்ளது. இதுபற்றி தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ஜான் பிரென்னன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாகிஸ்தானில் நீண்ட காலம் பின்லேடன் தங்கி இருந்து இருக்கிறார் என்றால் அவருக்கு அந்த நாட்டின் ஆதரவு இல்லாமல் இருந்திருக்க முடியாது. அவருக்கு அரசாங்க அடிப்படையில் பாகிஸ்தானுக்குள் ஆதரவு கிடைத்து இருக்கக்கூடும். இதுபற்றி எல்லாம் ïகம் செய்யப்போவது இல்லை. பின்லேடன் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு மிக அருகில் தங்கி இருந்து இருக்கிறார். இது பல கேள்விகளை எழுப்புகிறது. இது தொடர்பாக நாங்கள் பாகிஸ்தான் அரசாங்கத்துடன் பேசி வருகிறோம்.

பின்லேடனுக்கு உதவிய அதிகாரிகள் யார் என்பது பற்றி விசாரணை நடத்தப்படும். பாகிஸ்தான் அரசாங்கத்தில் பலர் இருக்கிறார்கள். அவருக்கு எந்த மாதிரியான உதவிகள் கிடைத்தன. அரசாங்கத்தில் எந்த மாதிரியானவர்கள் உதவினார்கள் என்பதை எல்லாம் விசாரிக்க இருக்கிறோம். பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதும் அமெரிக்க அதிகாரிகள் பலர் பாகிஸ்தான் அதிகாரிகளை தொடர்பு கொண்டு வருகிறார்கள். அப்போது அவருக்கு எப்படிப்பட்ட உதவிகள் கிடைத்தன என்பது பற்றிய தகவல்கள் தெரியவரும்.

இவ்வாறு ஜான் பிரென்னன் தெரிவித்தார்.

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் இரட்டைவேடம் போடுகிறது என்று அமெரிக்க செனட்டர்கள் குற்றம் சாட்டினார்கள். செனட்டர் சூசன் காலின்ஸ் கூறுகையில், "தலைநகருக்கு மிக அருகிலேயே பின்லேடனை வைத்துக்கொண்டு அவர் இருக்கும் இடம் தெரியாது என்று பாகிஸ்தான் கூறி வந்து உள்ளது. இதன் மூலம் அது உறுதியற்ற நண்பர் என்பது உறுதியாகிறது'' என்று குறிப்பிட்டார்.

பின்லேடன் பாகிஸ்தானில் தங்கி இருந்தது அந்த நாட்டின் புலனாய்வு துறையினருக்கு தெரிந்திருக்க வேண்டும் ஜோ லீபர்மேன் என்ற செனட்டர் கூறினார். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் உண்மையிலேயே அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுகிறதா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், அதே சமயம் பின்லேடன் அங்கு தங்கி இருந்தது பற்றி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இல்லையேல் அந்த நாட்டுக்கு வழங்க முடிவு செய்துள்ள 15 ஆயிரம் கோடி நிதி உதவியை அமெரிக்க அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் பிராங்க் லடென்பெர்க் என்ற செனட்டர் வற்புறுத்தி உள்ளார்.

அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் உசேன் ஹக்கானியும் பின்லேடனுக்கு பாகிஸ்தானில் ஆதரவு இருந்தது என்று தெரிவித்து உள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பின்லேடனுக்கு அரசாங்கத்திடம் இருந்து ஆதரவு கிடைத்ததா? பாகிஸ்தான் மக்களிடம் இருந்து கிடைத்ததா? என்பது தான் கேள்வி. பின்லேடனை போன்ற நம்பிக்கையாளர்கள் பாகிஸ்தானில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் தான் பின்லேடனை பாதுகாத்து வந்தனர்.

ஆனால் அவர் தங்கள் மண்ணில் தான் இருக்கிறார் என்பது பாகிஸ்தான் அரசுக்கு தெரியாமல் இருந்தது. பின்லேடன் பாகிஸ்தானில் தங்கி இருப்பது முன்பே எங்களுக்கு தெரிந்து இருக்குமானால் நாங்கள் முன்பாகவே நடவடிக்கை எடுத்து இருப்போம். பின்லேடன் பாகிஸ்தானில் தங்கி இருந்தது எப்படி உளவுத்துறைக்கு தெரியாமல் போனது என்பது குறித்து அரசாங்கம் விசாரணை நடத்த இருக்கிறது.

இதில் உளவுத்துறையினர் தோற்று இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு தூதர் உசேன் ஹக்கானி தெரிவித்தார். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் உள்ள தூதரகங்களை மூட அமெரிக்கா உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள தூதரகம் மற்றும் பெஷாவர், லாகூர், கராச்சி ஆகிய நகரங்களில் உள்ள துணைத்தூதரகங்கள் மூடப்படுகின்றன. பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட பொதுமக்களுக்கான வழக்கமான பணிகள் எதுவும் நடைபெறாது.

அதே நேரத்தில், பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கர்களுக்கு தேவையான அவசர கால சேவைகள் நடைபெறும். இந்த தகவலை, பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக செய்தி தொடர்பாளர் ஆல்பர்டோ ரோட்ரிக்ஸ் தெரிவித்தார். இதற்கிடையே, பின்லேடன் கொல்லப்பட்டது அல்கொய்தா இயக்கத்தினர் இடையேயும், பாகிஸ்தானில் உள்ள தலிபான்கள் இடையேயும் மிகுந்த ஆத்திரத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் அமெரிக்காவையும், பாகிஸ்தானையும் பழிக்கு பழி வாங்க திட்டமிட்டு உள்ளனர்.

பின்லேடன் கொலைக்காக, அதிபர் சர்தாரி உள்ளிட்ட பாகிஸ்தான் தலைவர்களை கொல்வோம் என்று தாரிக்-இ- தலிபான் என்ற இயக்கம் மிரட்டல் விடுத்து உள்ளது. அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. பின்லேடன் படுகொலை சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்காவின் அவநம்பிக்கையை சம்பாதித்து உள்ள பாகிஸ்தானுக்கு, தீவிரவாதிகளிடம் இருந்தும் மிரட்டல் வந்து இருப்பதால் பாகிஸ்தானுக்கு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், அமெரிக்காவை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டு இருக்கிறது.

அதே சமயம், தீவிரவாதிகளிடம் இருந்து வந்துள்ள மிரட்டலை சமாளிப்பதற்காக நடவடிக்கைகள் பற்றியும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.