Friday, December 30, 2011

உத்தான பாதாசனம், மகராசனம், புஜபாத பீடாசனம்.

உத்தான பாதாசனம்.
உத்தான பாதாசனம்

செய்முறை:

விரிப்பில் மல்லாந்து படுத்தநிலையில் இரு கைகளையும் பக்கவாட்டில் உடலோடு ஒட்டி வைக்கவும். உள்ளங்கைகள் இரண்டும் தரையோடு படியுமாறு வையுங்கள். முழங்கால் மடங்காமல் பாதங்களை தரைக்கு மேல் ஓரடி உயரம் மட்டும் தூக்கி, அப்படியே 15 வினாடிகள் நிலைநிறுத்துங்கள். அதற்குபிறகு, மீண்டும் பழைய நிலைக்கு வரவும். இயல்பான சுவாசத்தில் 2-3 தடவைகள் வரை தொடக்கத்தில் செய்தாலே போதுமானது.

பயன்கள்:

அடிவயிற்று உள்ளுறுப்புகளான மூத்திரக்காய்கள், பெண்ணின் கர்ப்பப்பை, சூலகங்கள், சிறுநீர்ப்பை ஆகியவற்றின் செயல்கள், விறுவிறுப்பாகும். தொந்தி, தொடைசதைகள் குறையும்.

பருவ வயதின் விளிம்பில் இருக்கும் மாணவர்களுக்கு `சொப்பன ஸ்கலிதம்' ஏற்படாது.


மகராசனம்.

மகராசனம்

செய்முறை (நிலை-1):

விரிப்பில் மல்லாந்து படுத்த நிலையில் இரு கைகளையும் சேர்த்து தலைக்கு பின்னால் பிடரியில் வைக்கவும். இரு முழங்கைகளையும் தரையோடு படிய வைத்து, இரு கால்களையும் முழங்கால் அளவு மடக்கி குத்திட்டு வையுங்கள். இரு பாதங்களையும் 2 அடி தூரம் பக்கவாட்டில் அகட்டிவைக்கவும்.

இரு முழங்கால்களும் வலப்பக்கமாக தரையில் படுமாறு பக்கவாட்டில் கொண்டு செல்லுங்கள். அதே சமயத்தில் தலையை இடதுபக்கமாக திருப்பவும். இதேநிலையில் இடுப்பு-புட்டப் பகுதியை வலப்பக்கம் தூக்கக்கூடாது. அடுத்தபடியாக-இதை அப்படியே, இயல்பான சுவாசத்தில் பக்கம் மாற்றி செய்யவும்.

செய்முறை (நிலை-2):

விரிப்பில் குப்புற படுத்த நிலையில் கால்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து நீட்டவும். இடுப்பு, மார்பை தரையோடு படுமாறு வைத்து முகத்தை நிமிர்த்தி மோவாயை கீழேவையுங்கள். வலதுகையை மடக்கி, இடது தோள் பட்டை- இடதுகையையும் மடக்கி, வலது தோள்பட்டையை தொடவும். இந்த நிலையில் இரு கைகளின் முழங்கையும், முதலையின் வாய் போல சேர்ந்திருக்கவேண்டும். இயல்பான சுவாசத்தில் 15 விநாடிகள் இருந்து பின்பு சாதாரண நிலைக்கு வரவும்.

பயன்கள்:

சிறுநீரக பிரச்சினைகள் அகலும். முதுகுதண்டில் வலி இராது.


புஜபாத பீடாசனம்.
புஜபாத பீடாசனம்

செய்முறை:

விரிப்பில் தலை வைத்து மல்லாந்து படுத்த நிலையில் இரு கைகளையும் உடலோடு ஒட்டி தரையில் வைக்கவும். இரு கால்களையும் முழங்கால் அளவு மடக்கி குதிகால்களை பிருஷ்ட பாகத்தில் படுமாறு வையுங்கள். கரங்களால் அந்தந்த பக்கத்து கணுக்கால்களை பிடித்து-பாதம், தலை, பிடரி, தோள்களை சற்று தரையில் அழுத்தவும்.

இடுப்பு, முதுகு தண்டு பகுதியை முடிந்தவரை மேல்நோக்கி தூங்குங்கள். இந்த நிலையில் இடுப்பு பகுதியை, முழங்கால் உயரத்துக்கு கொண்டு வரவும். இயல்பான சுவாசத்தில் இருந்து, பழைய நிலைக்கு வந்து ஆசனத்தை கலைத்து விடுங்கள்.

பயன்கள்:

புட்டப் பகுதியில் எடை குறையும். முதுகுவலி இராது. கால் நோய்கள் அணுகாது. மூத்திரக்காய், விந்துப்பை-கர்ப்பப்பை கோளாறுகள் அகலும்.

Wednesday, December 28, 2011

பகவத் கீதைக்கு தடை விதிக்கக் கோரும் மனு : ரஷ்ய நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



இந்துக்களின் புனித நூலான பகவத் கீதைக்கு தடைவிதிக்கக் கோரும் மனுவை சைபீரிய நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முன்னதாக பகவத் கீதைக்கு தடை விதிக்கக் கோரி சைபீரிய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தி லும் இது தொடர்பாக அமளி ஏற்பட்டது.

இதையடுத்து ரஷ்ய தூதரை தொடர்புகொண்ட வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இந்த பிரச்னையை தீர்க்க இந்தியாவுக்கு உதவும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரும் உதவிசெய்வதாக உறுதி அளித்திருந்தார்.

இந்த நிலையில் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதைக்கு தடைவிதிக்கக் கோரும் மனுவை தள்ளுபடி செய்து சைபீரிய நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

லோக்பால் மசோதா வாக்கெடுப்பின்போது அவையில் இல்லாத 20 காங். எம்.பிக்கள் - ராகுல் காந்தி அதிர்ச்சி !



லோக்பால் மசோதா ஒருபக்கம் நிறைவேறினாலும் காங்கிரஸுக்கு நேற்று ஷாக் கொடுத்தது, அரசியல்சாசன அந்தஸ்து தரும் மசோதா தோல்வி அடைந்ததுதான். இதை காங்கிரஸ் எதிர்பார்க்கவில்லை. 273 உறுப்பினர்களைக் கூட திரட்ட முடியாமல் போனது ஒருபக்கம் இருந்தாலும், அந்தக் கட்சியைச் சேர்ந்த 20 உறுப்பினர்கள் அவைக்கு வராமல் இருந்தது காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று லோக்சபாவில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் அந்த அமைப்புக்கு அரசியல்சாசன அந்தஸ்து தர வகை செய்யும் மசோதாவை அரசால் நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது. இதற்குக் காரணம் அவையில் போதிய உறுப்பினர்கள் இல்லாமல் போனதே.

குறைந்தபட்சம் 273 உறுப்பினர்களாவது அவையில் இருக்க வேண்டும். ஆனால் நேற்று வெறும் 250 பேர்தான் இருந்தனர். இது காங்கிரஸை கடும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தி விட்டது. அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டது. எனவே ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக கொடி தூக்க ஆரம்பித்து விட்டது.

லோக்பால் அமைப்புக்கு அரசியல் சாசன அந்தஸ்து தரலாம் என்று ஐடியா கொடுத்ததே ராகுல்காந்திதான். அவரது ஐடியா எடுத்த எடுப்பிலேயே புஸ்வாணம் ஆனதால் அவரும் கடும் அதிருப்தியில் உள்ளார்.

நேற்று நடந்த வாக்கெடுப்பின்போது பகுஜன் சமாஜ், இடதுசாரிகள் உள்ளிட்ட சில கட்சிகள் வெளிநடப்புச் செய்தன. அதேசமயம், காங்கிரஸ் எம்.பிக்களில் கிட்டத்தட்ட 20 பேர் அவையில் இல்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தும் கூட இந்த 20 பேரும் அவையில் இல்லாமல் போனது காங்கிரஸ் மேலிடத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சி தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.

அரசியல் சட்ட திருத்த மசோதா தோல்வி - இது ராகுல் காந்திக்கு கிடைத்த படுதோல்வி !



மக்களவையில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டாலும் அதற்கு அரசியல் சாசன அந்தஸ்து தருவதற்காக கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. மத்திய அரசுக்கு இது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இதன் மூலம் அன்னா ஹசாரேவுக்கு கிட்டத்தட்ட அத்தனை அரசியல் கட்சிகளுமே எதிராக உள்ளதும் அம்பலமாகிவிட்டது.

லோக்பால் அமைப்புக்கு அரசியலமைப்பு சட்ட அந்தஸ்து தரும் திருத்த மசோதாவுக்கு 3 பிரிவுகளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டுமென்றால் அவையின் மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதம் பேர் அவையில் இருக்க வேண்டும். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் ஆதரிப்பது கட்டாயமாகும்.

ஆனால், இந்த திருத்த மசோதாவுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.

ஆட்சியில் நீடிக்க உரிமையில்லை-பாஜக:

அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டதால் ஆட்சியில் நீடிக்கும் உரிமையை மத்திய அரசு இழந்துவிட்டதாக பாஜக மூத்தஸ தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறினார்.

குறைந்தபட்சம் 273 வாக்குகளை கூட காங்கிரஸ் கட்சியால் பெற முடியவில்லை. அரசின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது. அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார்.

லோக்பால் அமைப்புக்கு அரசியல் சாசன அந்தஸ்து தரும் ஐடியாவைக் கொடுத்தவர் ராகுல் காந்தி என்பது நினைவிருக்கலாம். தேர்தல் ஆணையம் போல ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக லோக்பால் திகழ அதற்கு அரசியல்சாசன அந்தஸ்து தரப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். அதன்படியே இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால் இது தோல்வி அடைந்து விட்டது.

அதேசமயம், ஊழலை அம்பலப்படுத்துவோர் பாதுகாப்பு மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

Tuesday, December 27, 2011

நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் அத்தனை பேரும் குற்றவாளிகள்- அன்னா கடும் சாடல்.



எனது உண்ணாவிரதத்தை நான் வாபஸ் பெற மாட்டேன். இறுதி வரை போராடுவேன். நாடாளுமன்றத்தில் உள்ள அத்தனை பேருமே குற்றவாளிகள். எங்களை அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. உ.பி. உள்பட சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களிலும் நான் பிரசாரம் செய்வேன் என்று கூறியுள்ளார் அன்னா ஹசாரே.

மும்பையில் இன்று காலை தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல், உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் ஹசாரே. அவர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் அதை அவர் நிராகரித்து விட்டார்.

இன்று பிற்பகல் அன்னா பேசினார். அப்போது அவர் கூறுகையில், கடந்த மூன்று நாட்களாகவே நான் உணவு எதையும் உட்கொள்ளவில்லை. எனக்கு காய்ச்சல் இருப்பதாக இன்று டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் எனது நாட்டுக்காக எனது உயிரைக் கூட தியாகம் செய்ய நான் முடிவு செய்து விட்டேன். கடந்த 25 வருடமாக ஊழலுக்கு எதிராக நான் போராடி வருகிறேன். நான் மரணத்திற்குப் பயப்படவில்லை.

தேர்தல்கள் வருகின்றன. அந்த ஐந்து மாநிலங்களிலும் அரசுக்கு எதிராக நாம் பிரசாரம் செய்ய வேண்டும்.

விவசாயிகளின் நிலங்களைப் பறிக்க அரசுக்கு உரிமை இல்லை. கிராம சபையின் அனுமதியை அவர்கள் முதலில் பெற வேண்டும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்வதில்லை. நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருக்கும் அத்தனை பேருமே குற்றவாளிகள். குண்டர்கள், ரவுடிகள்தான் இன்று அரசியலுக்கு வருகிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் நாடாளுமன்றம். மக்கள்தான் உயர்ந்தவர்கள். நாம்தான் இந்த நாட்டின் உரிமையாளர்கள். நாம்தான் இந்த நாட்டுக்காக எம்.பிக்களையும், எம்.எல்.ஏக்களையும் தேர்வு செய்கிறோம். அப்படி இருக்கும்போது அவர்களை வேண்டாம் என்று சொல்லவும் நமக்கு உரிமை தரப்பட வேண்டும்.

பண போதை, அதிகார போதையால் மத்திய அரசு பலமுறை நமக்குத் துரோகம் இழைத்துள்ளது. இதை பாபா ராம்தேவுக்கும் முன்பு அவர்கள் செய்தார்கள். எனது போராட்டத்தில் வந்து இணையுமாறு நான் ராம்தேவை அழைத்துள்ளேன். அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம். நாளை அல்லது நாளை மறு நாள் அவர் நம்முடன் இணைய வருவார் என்றார் அன்னா.

கிரண் பேடி, கேஜ்ரிவால் கவலை

முன்னதாக தனது காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதம் தொடங்கியுள்ள அன்னா ஹசாரேவின் உடல் நலம் மோசமடைந்து வருவதால் அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறியிருந்தனர்.

இதுகுறித்து கிரண் பேடிகூறுகையில், அன்னாவின் உடல் நிலை சரியில்லை. அவருக்கு காய்ச்சல் அடிக்கிறது. அவர்தனது உண்ணாவிரதத்தை மட்டும் நிறுத்திக் கொண்டு போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று கோருகிறோம் என்றார்.

இன்னொரு உறுப்பினரான மனீஷ் சிசோடியா கூறுகையில், அன்னாவின் மோசமடைந்து வரும் உடல் நிலை எங்களைக் கவலைக்குள்ளாக்கியுள்ளது என்றார்.

அதேபோல அரவிந்த் கேஜ்ரிவாலும், அன்னா தனது உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அன்னா தனது உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று கோரியுள்ளோம். தற்போது அன்னாவுடன் நாங்களும் உண்ணாவிரதம் இருந்து வருகிறோம் என்றார்.

முல்லை பெரியாறு அணை : தேசிய பேரிடர் ஆணையம் நியமித்த குழு நிறுத்திவைப்பு.

முல்லை பெரியாறு அணை: தேசிய பேரிடர் ஆணையம் நியமித்த குழு நிறுத்திவைப்பு

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட சிறிய அளவிலான நில நடுக்கங் களால் முல்லை பெரியாறு அணைக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது என கேரளா வற்புறுத்தி வருகிறது.

இதனை தொடர்ந்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ய ஐந்து பேர் கொண்ட ஒரு அவசர கால குழுவை கடந்த 12-ம் தேதி அமைத்தது. இதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து கடந்த 21-ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினார். இதற்கு தமிழக எதிர் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

தமிழகம் வந்த பிரதமரிடம் முதலமைச்சர் ஜெயலலிதா பேரிடர் மேலாண்மை ஆணையம் நியமித்த குழுவை நிறுத்தி வைக்க கோரியிருந்தார்.

இதனை தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய குழுவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். சுப்ரீம் கோர்ட் நியமித்த குழு, தமது ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்திடம் வழங்கும் வரை, இக்குழுவை நிறுத்திவைப்பதாக தமிழக பொதுப்பணித்துறைக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

கொலை வெறிப் பாடலால் பிரபலம் : பிரதமர் விருந்தில் தனுஷ்.

கொலை வெறிப் பாடலால் பிரபலம்: பிரதமர் விருந்தில் தனுஷ்

நடிகர் தனுஷ் “கொலை வெறி” பாடலால் இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளார். பல்வேறு மாநிலங்களில் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவருக்கு அழைப்பு வருகின்றன. மும்பை, டெல்லி, கொல்கத்தா என சுற்றி வருகிறார். பல நிறுவனங்கள் தங்கள் பொருட்களை தனுசை அழைத்து அறிமுகம் செய்கின்றன.

கொலை வெறி பாடல் பிரதமர் மன்மோகன் சிங்கையும் எட்டியுள்ளது. இதையடுத்து பிரதமர் விருந்தில் பங்கேற்க தனுசுக்கு அழைப்பு வந்துள்ளது. ஜப்பானிய பிரதமர் யோசி கியோ நோடாவுக்கு டெல்லி ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தனது வீட்டில் மன்மோகன் சிங் நாளை விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் பங்கேற்கத்தான் தனுசுக்கு அழைப்பு வந்துள்ளது.

பாடல் பிரபலமானது குறித்து தனுஷ் கூறும்போது, கொலை வெறி பாடல் எனக்கு நிறைய கதவுகளை திறந்து விட்டுள்ளது. இந்த பாடல் வெற்றி பெறுவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. பாடலில் உள்ள ஆங்கில வரிகள் ஒவ்வொருவருக்கும் தொடர்பு உள்ளவை, நகைச் சுவை மற்றும் பாடலில் உள்ள கருத்துக்களும் சாதாரண மக்களையும், இளைஞர்களையும் கவர்ந்துள்ளது.

Monday, December 26, 2011

முதல் முறையாக கைதான தேமுதிக தலைவர் விஜயகாந்த்.



அரசியலுக்குப் புகுந்த பின்னர், அரசியல்வாதியாக மாறிய பின்னர், எம்.எல்.ஏவான பின்னர், எதிர்க்கட்சித் தலைவரான பின்னர் முதல் முறையாக கைதாகியுள்ளார் விஜயகாந்த்.

விஜயகாந்த் பொதுவாக பெரிய அளவில் போராட்டங்கள் நடத்துபவரில்லை. நடத்த விரும்பியதும் இல்லை. இதுகுறித்து அவரே கூறுகையில், மக்களைப் பாதிக்கும் வகையில் எந்தவிதமான போராட்டத்தையும் நடத்த மாட்டேன் என்று கூறுவார். இதனால் அவர் இதுவரை ஒருமுறை கூட போராட்டம் நடத்திக் கைதானதில்லை.

விஜயகாந்த் தேமுதிகவை ஆரம்பித்து முறைப்படி அரசியலுக்கு வந்த பின்னர் பெரிய அளவில் போராட்டங்கள் எதையும் நடத்தியதில்லை. அதிகபட்சமாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் ஆகியவற்றில் அவர் ஈடுபட்டுள்ளார். மற்றபடி சாலை மறியல் உள்ளிட்ட எந்தவகையான போராட்டத்திலும் அவர் ஈடுபட்டதில்லை. அதுவும் சமீபத்தில்தான் அவர் பிரமாண்டமான வகையில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதுதான் அவரது கட்சி சார்பில் நடந்த பிரமாண்டமான போராட்டமாகும். இந்தப் போராட்டத்தையும் கூட தனது கட்சி தலைமை அலுவலக வளாகத்திலேயே வைத்துக் கொண்டார் விஜயகாந்த்.

இந்த நிலையில் முதல் முறையாக அவர் பிரதமருக்குக் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை அறிவித்தபோது கட்சியினர் உண்மையிலேயே குஷியடைந்தனர். காரணம், இப்போதுதான் முதல் முறையாக ஒரு வலுவான போராட்டத்தை விஜயகாந்த் அறிவித்துள்ளார் என்பதால். இதனால் இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த அவர்கள் ஆயத்தமாக இருந்தனர்.

ஆனால் இன்று காலை தனது வீட்டை விட்டு கிளம்பியுடனேயே விஜயகாந்த்தைப் போலீஸார் கைது செய்து பஸ்சில் ஏற்றிக் கொண்டு போய் விட்டனர்.

இதனால் விஜயகாந்த், நேரில் போய் பிரதமருக்குக் கருப்புக் கொடி காட்ட முடியாமல் போய் விட்டது. இருப்பினும் இதுவரை ஒருமுறை கூட கைதாகாத அரசியல்வாதி என்ற பெயருடன் வலம் வந்த விஜயகாந்த் அதை முறியடித்து முதல் முறையாக கைதாகியுள்ளார் என்பது தேமுதிகவினருக்கு ஆறுதலான விஷயம்தான்!

வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான், கவிஞர் தாமரை உள்ளிட்டோர் மீது திடீர் வழக்கு.



சென்னை மெரீனா கடற்கரையில் அனுமதியில்லாமல் பொதுக்கூட்டம் நடத்தியதாக கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இயக்குநர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான், கவிஞர் தாமரை உள்ளிட்ட10 பேர் மீது திடீரென சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மே 17 இயக்கம் சார்பில் சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று பொதுக் கூட்டம் நடந்தது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காக இந்த பொதுக்கூட்டம் நடந்தது.



இந்தநிலையில் வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான், கவிஞர் தாமரை உள்ளிட்ட 10 பேர் மீது திடீரென சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மெளன ஊர்வலம் என அனுமதி வாங்கி விட்டு பொதுக் கூட்டம் நடத்தியதாக கூறி இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.



இந்தக் கூட்டத்தில் பேசிய தங்கர்பச்சான், கேரளாவில அரசியல் தலைவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆனால் இங்கு அப்படி இல்லை, தனித் தனியாக இருக்கிறார்கள் என்று கடுமையாக சாடியிருந்தார்.



அதேபோல வைகோ பேசுகையில் தமிழகத்தின் உதவி இல்லாவிட்டால் கேரள மக்களால் வாழவே முடியாது என்று ஆவேசமாக கூறியிருந்தார். பாரதிராஜா பேசுகையில் தமிழ் சினிமாத்துறையினரை குறிப்பாக நடிகர்களை கடுமையாக சாடியிருந்தார். நடிகர் சங்கத் தலைவராக தற்போது இருப்பவர் சரத்குமார் என்பது நினைவிருக்கலாம்.



தமிழக அரசின் இந்த திடீர் வழக்கு நடவடிக்கையால் தமிழ் ஆர்வலர்கள் குறிப்பாக முல்லைப் பெரியாறுக்காக போராடி வரும் மக்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

Sunday, December 25, 2011

சசிகலா நீக்கத்துக்கு காரணம் என்ன ? : சோ பரபரப்பு பேட்டி.

சசிகலா நீக்கத்துக்கு காரணம் என்ன?: சோ பரபரப்பு பேட்டி

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா, நடராஜன் உள்பட 14 பேர் நீக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இதுபற்றி கேள்விகளுக்கு எழுத்தாளர் “சோ” பதில் அளித்துள்ளார்.

கேள்வி: அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?.

பதில்:- சசிகலாவை நீக்கியதற்கான காரணத்தை அனுமானத்தின் அடிப்படையில் தான் கூறமுடியுமே தவிர முழு விஷயமும் எனக்கு தெரியாது. அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவும், அவரது உறவினர்களும் நீக்கப்பட்டது நல்ல நிர்வாகத்தை அளிக்க ஜெயலலிதா மேற்கொண்ட தீர்க்கமான உறுதியான நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன்.

தமிழகத்துக்கு நல்ல ஆட்சியையும், நேர்மையான நிர்வாகத்தையும் கொடுக்க ஜெயலலிதா விரும்புகிறார். ஆட்சியும், நிர்வாகமும் வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு தடை ஏற்படுத்தும் விதமாக மாநிலத்தில் மற்றொரு அதிகார மையம் செயல்படுவதில் அர்த்தம் இருக்க முடியாது.

எனவே அந்த வகையில், இந்த நடவடிக்கை சரியானது, தீர்க்கமானது என்று கூறுகிறேன். இந்த நடவடிக்கை அவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருக்க வாய்ப்பில்லை. சிலரின் நடவடிக்கைகள், அரசின் செயல்பாட்டுக்கு இடையூறாக இருப்பதாக அவர் உணர்ந்து இருக்கிறார். அதனால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதுதான் என்னுடைய அனுமானம்

கே:- சசிகலா கட்சியில் இருந்து விலக்கினாலும் மீண்டும் சிறிது நாளில் கட்சியில் சேர்ந்து விடுவார் என்றும் இதற்கு முன்பு இதேபோல் ஒதுக்கி வைக்கப்பட்டு பிறகு மீண்டும் சேர்ந்திருக்கிறார் என்றும் சிலர் கூறுகிறார்களே?

ப:- அந்த கட்சியினர் அப்படி நினைக்கவில்லை. அதற்கு மேல் சொல்ல எனக்கு ஒன்றுமில்லை.

கே:- முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நீங்கள் அவ்வப்போது ஆலோசனை வழங்குவதாக பேசுகிறார்களே?

ப:- நாட்டு நடப்பையும் அரசு நிர்வாகத்தையும் மிக நன்றாக அறிந்த முதல்- அமைச்சருக்கு நிர்வாக அனுபவமே சற்றும் இல்லாத நான் ஆலோசனை வழங்குவதாக சொல்வது மிகப்பெரிய தமாஷ். ஏற்கனவே 10 வருடம் முதல்-அமைச்சராக பதவி வகித்து வந்தவருக்கு ஒரு வினாடிகூட எந்த பதவியும் வகிக்காத என்னைப்போன்றவர்கள் ஆலோசனை வழங்குவதாக கூறுவது சரியல்ல.

கே:- சசிகலா நீக்கப்பட்ட பிறகு அந்த இடத்துக்கு இன்னொரு அதிகார மையம் உருவாகும் வாய்ப்பு உள்ளதா?

ப:- இன்னொரு அதிகாரமையம் என்ன என்பதை மற்றவர்கள் சுட்டிக்காட்டினால் தான் அது தெரியவரும். யார் அது? எந்த வகையில் அதிகாரம் செய்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். அப்போதுதான் எதுவும் சொல்லமுடியும்.

கே:- இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது திடீரென சசிகலா நீக்கத்துக்கு உங்கள் ஆலோசனைதான் காரணம் என்று கூறப்படுகிறதே?

ப:- இவ்வளவு நாள் இல்லாத பேச்சாக உள்ளது. சசிகலா நீக்கத்திற்கு நான்தான் காரணம் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஏதோ இப்போதுதான் எனக்கும் முதல்-அமைச்சருக்கும் திடீரென நட்பு ஏற்பட்டதுபோல் பேசுகிறார்கள். எங்கள் நட்பு 50 வருடத்துக்கு மேலானது. அப்படி இருக்கும் போது இப்போது நான் திடீரென ஏதோ ஆலோசனை சொல்லிவிட்டதாக கூறுவதில் துளிகூட அர்த்தம் இல்லை.

கே:- அ.தி.மு.க.வில் பெரிய அளவில் நடவடிக்கை எடுத்துள்ள ஜெயலலிதாவுக்கு தேசிய அளவில் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பு ஏற்படும் என நினைக்கிறீர்களா?

ப:- தேசிய அளவில் அவர் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாக எனக்கு தெரியாது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் எந்த பதவியிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் தேசிய அளவில் அவர் செயல்பட விருப்பம் இல்லாமல் இருக்கவும் வாய்ப்பு உண்டு என கருதுகிறேன். எனவே தற்போதைய அதிரடி நடவடிக்கைக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இருக்க முடியாது.

இவ்வாறு மாலை மலர் நிருபர் கேட்டதற்கு அவர் கூறினார்.

முல்லைப் பெரியாறு அணையின் ஆய்வை புறக்கணித்தது கேரளா.



முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அணையின் உறுதித்தன்மையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முல்லைப்பெரியாறு அணையில் 2 கட்டங்களாக ஆய்வு செய்தனர். அப்போது அணையில் அதிர்வலை சோதனை மற்றும் தேக்கடி ஏரியின் மண் படிவத்தை சேகரித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தொழில் நுட்ப குழுவில் இடம் பெற்று உள்ள வல்லுநர்கள் சி.டி.தத்தா, டி.கே.மேத்தா ஆகியோர் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்வதற்காக இடுக்கி மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் முதலில் இடுக்கி அணை மற்றும் அதன் அருகில் உள்ள கொளமாவு, செருதோணி ஆகிய அணைக்கட்டுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொழில்நுட்ப குழுவினர் நேற்று முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்ய காலை 9.30 மணியளவில் தேக்கடி படகு துறைக்கு வந்தனர். பின்னர் தேக்கடியில் இருந்து படகு மூலம் முல்லைப்பெரியாறு அணைக்கு சென்றனர்.

அவர்களுடன் தமிழக பொதுப்பணித்துறை மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் எம்.சம்பத்குமார், உதவி பொறியாளர் பழனிச்சாமி, கேரள மாநில முல்லைப் பெரியாறு செல் தலைவர் பொறியாளர் எம்.கே.பரமேஸ்வரன் நாயர், கேரள அணை பாதுகாப்பு துணை பொறியாளர் லத்திகா, டோமி ஜார்ஜ் ஆகியோர் உடன் சென்றனர்.

நிபுணர் குழுவினர் மற்றும் தமிழக, கேரளப் பொறியாளர்கள் குழு அணையின் பின்பகுதியில் உள்ள கேலரிக்கு சென்று அடிப்பகுதியை பார்வையிட்டனர். அடிக்கடி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அணைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அணையில் 7 துளைகள் போட்டு ஆய்வு செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட பகுதிகளையும் அப்போது பார்வையிட்டனர்.

அணையில் துளைகள் இடும் பகுதிகளை தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்து கொண்டு இருந்த போது, கேரள பொறியாளர் லத்திகா அணையில் வேறு சில இடங்களையும் மற்றும், தாங்கள் குறிப்பிடும் பகுதியையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அதை தொழில்நுட்பக் குழுவினர் ஏற்கவில்லை.

இதையடுத்து பொறியாளர் லத்திகா நிருபர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேட்டி அளித்தார். அப்போது அவர், "தொழில் நுட்ப குழுவினர் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். நாங்கள் என்ன சொன்னாலும் அவற்றை கேட்க மறுக்கின்றனர். அணைப்பகுதிகளில் நாங்கள் பார்வையிட சொல்லும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய மறுக்கின்றனர். அதனால் நாங்கள் இந்த ஆய்வை புறக்கணிக்கிறோம்'' என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்ட தொழில் நுட்ப குழுவினர் அதிருப்தி அடைந்தனர். கேரள அதிகாரிகளை அழைத்து நீங்கள் இதுபோல் செயல்படக்கூடாது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுங்கள் என்று கண்டனம் தெரிவித்தனர். அதற்கு கேரள அதிகாரிகள், இந்த ஆய்வில் எங்களுக்கு திருப்தி இல்லை. அதனால் ஆய்வை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று கூறினார்கள். இதனால் லேசாக வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் மத்திய குழுவினர் ஒரு சார்பாக செயல்படுவதாகவும் கேரள அதிகாரிகள் குற்றம் சாட்டியதால் ஆய்வு பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

கேரளத்தினரின் இந்த செயலைப் பொருட்படுத்தாமல் தொழில்நுட்பக் குழுவினர் அணையை முழுமையாக ஆய்வு செய்தனர். பின்னர் மாலையில், தமிழக மதகு பகுதிக்கு வந்து பார்வையிட்டனர். மாலை ஆறரை மணியளவில் ஆய்வை முடித்துக் கொண்டு தேக்கடி திரும்பினர். அதன்பிறகு அங்குள்ள விருந்தினர் மாளிகையில் கேரள - தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தொழில் நுட்ப குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

இன்று முல்லைப் பெரியாறு அணையில் மீண்டும் ஆய்வு செய்யும் தொழில்நுட்பக் குழுவினர் தேனி மாவட்டத்திற்கு வருகை தந்து வைகை அணையைப் பார்வையிடுகின்றனர். பின்னர் அவர்கள் மதுரை செல்கிறார்கள்.

Saturday, December 24, 2011

முல்லைப் பெரியாறு: இறுதிகட்ட ஆய்வைத் தொடங்கியது நிபுணர் குழு.



முல்லைப் பெரியாறு அணையில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தொழில் நுட்ப குழு இன்று காலை இறுதிகட்ட ஆய்வைத் தொடங்கியது.

இந்தத் தொழில்நுட்ப குழுவில் இடம்பெற்று உள்ள உறுப்பினர்கள் சி.டி.தத்தா, டி.கே.மேத்தா ஆகியோர் குமுளி அருகேயுள்ள தேக்கடியில் இருந்து காலை 9.45 மணிக்கு படகின் மூலம் முல்லைப் பெரியாறு அணைக்குப் புறப்பட்டது.

அப்போது, தமிழக மற்றும் கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்திருந்தனர்.

இந்த ஆய்வின்போது, ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளை சந்திக்கக் கூடாது என்று ஆய்வுக்குழுவுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இறுதிகட்ட ஆய்வு...

முல்லைப்பெரியாறு அணை வலுவிழந்து விட்டதாகக் கூறி, புதிய அணை கட்டும் முயற்சியில் கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இடுக்கி மாவட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே அணை உடையும் அபாயத்தில் இருப்பதாக பிரசாரம் செய்வதோடு, பல இடங்களில் சேத தடுப்பு மற்றும் கண்காணிப்பு மையங்களையும் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதேவேளையில், முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அணையின் உறுதித்தன்மையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப் பட்டது.

இதற்காக உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவினர் ஏற்கெனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆய்வு செய்தனர். அப்போது 2 கட்டமாக ஆய்வு நடந்தது. அணையில் அதிர்வலை சோதனை மற்றும் தேக்கடி ஏரியின் மண்படிவத்தை சேகரித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில், தொழில்நுட்ப குழுவில் இடம்பெற்று உள்ள உறுப்பினர்கள் சி.டி.தத்தா, டி.கே.மேத்தா ஆகியோர் முல்லைப் பெரியாறு அணையில் இறுதிக்கட்ட ஆய்வில் ஈடுப்பட்டுளனர்.

கொச்சிக்கு விமானம் மூலம் நேற்று வந்தக் குழுவினர் இருவரும் கார் மூலம் இடுக்கி அணைக்கு சென்றனர். அங்கு, இடுக்கி அணையை பார்வையிட்டுவிட்டு, அருகில் உள்ள கொளமாவு, செருதோணி ஆகிய அணைக்கட்டுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதைத்தொடர்ந்து குழுவினர் தேக்கடிக்கு சென்று இரவு தங்கினார்கள். இன்று முல்லைப் பெரியாறு அணைக்குப் புறப்பட்டனர். அணை பகுதி மற்றும் மதகு, பேபி அணை, அதன் அருகில் உள்ள எர்த் டேம் என்ற பகுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

அணையின் உறுதித்தன்மை குறித்து தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்ய இருப்பதாக தெரிகிறது.

அணையின் இறுதிக்கட்ட ஆய்வாக அணைக்கு அடியில் உள்ள மண்ணை எடுத்து பரிசோதனை செய்வதற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து 2 ராட்சத டிரில்லிங் எந்திரங்கள் அணைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் ஒரு எந்திரம் துளையிடுவதற்காகவும், மற்றொரு எந்திரம் துளையிட்ட இடத்தை மீண்டும் அடைப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

அந்த எந்திரங்களை வைத்து அணையில் 7 இடங்களில் 30 அடி ஆழத்துக்கு துளையிட்டு கீழே இருக்கும் மண்ணை எடுத்து பரிசோதிக்கப்பட இருக்கிறது.

அதன்மூலம் அணையின் உறுதித்தன்மை எந்த அளவில் உள்ளது என்பதை கண்டறியமுடியும். பரிசோதனைக்காக துளையிட்டு மண் எடுக்கும் பணி, தொழில்நுட்ப குழுவினர் முன்னிலையில் நடக்கிறது.

ஒரேநாளில் மண் எடுக்கும் பணி முடியவில்லை என்றால் மறுநாளும் அதை தொடருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகளை தொழில்நுட்ப குழுவினர் முழுமையாக பார்வையிட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த மண் பரிசோதனைக்கு பிறகு அணையின் பலம் உறுதி செய்யப்பட்டுவிடும் என்பதால், இதுவே இறுதிக்கட்ட ஆய்வாக கருதப்படுகிறது.

இந்தத் தொழில்நுட்ப குழுவினர் ஞாயிற்றுக்கிழமை வைகை அணைக்கு சென்று பார்வையிடுகின்றனர். அதன்பிறகு திண்டுக்கல் மாவட்டம் பேரணை மற்றும் வாய்க்கால்களை பார்வையிடுகிறார்கள்.

எனக்கு எதிராக 'பொய் சாட்சி' : சிபிஐ மீது ஆ.ராசா குற்றச்சாட்டு.



2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தனக்கு எதிராக 'பொய் சாட்சி'யை சிபிஐ உருவாக்கியுள்ளதாக, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா குற்றம்சாட்டினார்.

சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி முன்பு, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவரான ஆ.ராசா சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர், இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிடம் கூடுதல் தனி உதவியாளராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரி என்பவர் சாடசியம் அளித்தார்.

ஆ.ராசாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிய அவர், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட கார்ப்பரேட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் ராசா அவ்வப்போது தொடர்புகொண்டு பேசி வந்ததாக கூறினார்.

அப்போது, நீதிமன்றத்தில் சந்தோலியா (ராசாவின் முன்னாள் உதவியாளர்) அருகில் இருந்த ஒரு நபரை சுட்டிக்காட்டி, அவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நீதிபதியிடம் புகார் கூறினார். இதனால், நீதிமன்றம் பரபரப்பானது.

பின்னர், கொலை மிரட்டல் விடுத்தவர் என ஆசிர்வாதத்தால் புகார் கூறப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தியபோது, அதுபோன்ற சம்பவம் எதுவும் நிகழவில்லை என்பது சிபிஐக்கு தெரியவந்தது.

ராசா குற்றச்சாட்டு...

இந்த நிலையில், சிபிஐ-யின் முக்கிய சாட்சியாகக் கருதப்படும் ஆசிர்வாதம் ஆச்சாரியை ராசா சார்பில் அவரது வழக்கறிஞர் சுஷில் குமார் குறுக்கு விசாரணை செய்தார்.

அப்போது, நேற்றைய தினம் நடந்தவை அனைத்தையும் நாடகம் என்று அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், இந்த வழக்கில் சிபிஐ பொய்யாக உருவாக்கியுள்ள சாட்சியம்தான் ஆசீர்வாதம் ஆச்சாரி. அவர் சொல்வது அனைத்தும் தவறானவை. நேற்று கூட அவர் அரங்கேற்றிய கொலை மிரட்டல் நாடகத்தை நீங்கள் அறிவீர்கள்.

சந்தோலியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை, வரும் 2-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. அவருக்கு ஜாமீன் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே இந்த நாடகம் நடத்தப்பட்டது. ஆசிர்வாதம் ஆச்சாரி பொய் சாட்சியம் என்பதற்கு இதுவே சான்று," என்றார் அவர்.

இதைத் தொடர்ந்து நீதிபதி ஓ.பி.சைனி கூறுகையில், "அவர் (ஆச்சாரி) மிரட்டல் பற்றி முன்பு ஒருபோதும் தெரிவிக்கவில்லை. அப்படி ஏற்கெனவே சொல்லி இருந்தால், அந்தப் புகார் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதன் மூலம், இந்த வழக்கில் பலருக்கும் ஜாமீன் கிடைத்திருக்காது," என்றார்.

இந்த வழக்கில் மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை சாட்சிகளிடம் தாம் குறுக்கு விசாரணை செய்யப்போவதில்லை என்று தெரிவித்து இருந்த ஆ.ராசா, வியாழக்கிழமையில் இருந்து குறுக்கு விசாரணை செய்யத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மெரினாவில் நாளை மக்கள் திரள் போராட்டம்.

முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கக் கோரி, சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் மக்கள் திரள் போராட்டத்தில் மதிமுகவும் பங்கேற்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பாக தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், தமிழகத்தின் உரிமைகளை காத்திட வலியுறுத்தியும், தேனி மாவட்ட மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், சென்னை மெரினா கடற்கரையில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு மக்கள் திரள் போராட்டம் நடைபெறுகிறது.

'மே பதினேழு' இயக்கம் சார்பில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான், ஆர்.கே.செல்வமணி, மணிவண்ணன், கவுதமன், சேரன், முன்னாள் எம்.எல்.ஏ. பண்ருட்டி வேல்முருகன், திருமுருகன், ஓவியர் வீர சந்தானம் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த நிலையில், மதிமுக பொதுச் செயலர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், "முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டோம் என்றும், புதிய அணை கட்ட மாட்டோம் என்றும் 2006-ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துவோம் என்றும் கேரளம் முடிவெடுக்கும் வரை தமிழகத்தில் போராட்டம் புதிய புதிய வடிவங்களைப் பெறும்.

அதனால்தான் நாளை 25-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலைக்கு அருகில் மாலை 3 மணி அளவில் தமிழக உரிமை காக்கும் உணர்வாளர்கள் மக்கள் திரளாக பங்கேற்க மே 17 இயக்கத்தினரும், கலை உலக விற்பன்னர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.

உலகமெல்லாம் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் திரள்கிறோம் "நிதியின் மேல் பசிதாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்" என்றார் ஏசு பெருமான்.

முல்லைப் பெரியாறில் தமிழ் நாட்டுக்கு நீதி நிலைக்க வேண்டும் என்ற பசிதாகத்தோடு பங்கேற்போம். ஆராயாது, தவறான தீர்ப்பளித்த வேந்தனை எதிர்த்து எரிமலையாய் சீறினாள் கண்ணகி இன்றோ, உண்மையைத் தெரிந்து கொண்டே அதற்கு மாறாக அநீதி செய்யும் மத்திய அரசை எதிர்க்கவே தமிழகத்தின் சீற்றத்தைக் காட்ட கடற்கரையில் திரண்டிடுவோம். கட்சி அடையாளங்களையும், கட்சிக் கொடிகளையும் தவிர்க்க வேண்டுகிறேன்," என்று வைகோ கூறியுள்ளார்.

Friday, December 23, 2011

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு மணல் கடத்தல்.



முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையால் இருமாநிலங்களிடையே பதற்றம் எழுந்துள்ள நிலையிலும் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு ஆற்றுமணல் கடத்தப்படுவது குறைந்தபாடில்லை.

கோவை மாவட்ட செக்போஸ்ட் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் ஆற்றுமணல்கள் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்படுகின்றனவாம்.

திருச்சி, கரூர் ஆற்றுமணல்

கேரளா மாநிலத்தில் உள்ள ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு அந்த மாநில அரசு விவரமாக தடைவிதித்துள்ளது. இதனால் அங்கு வீடு மற்றும் கட்டடங்கள் கட்டுவற்கு மணல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனையடுத்து அந்த மாநிலத்தின் மணல் தேவையை நிறைவு செய்வது தமிழ்நாடுதான். பால், காய்கறி உள்ளிட்டவை போக தமிழகமக்கள் மணலையும் கேரளாவுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்து வருகிறார்கள்.

திருச்சி, கரூர் மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் திருட்டுத்தனமாக அள்ளப்படும் மணல் லாரிகள் மூலமாக பல்லடம் வேலந்தாவளம் வழியாக கேரளாவுக்கு கடத்தப்படுகிறது.

திமுக ஆட்சிக்காலத்தில் திமுக கொடியுடன் மணல் கடத்திய லாரிகள் தற்போது அதிமுக கொடியுடன் செக்போஸ்ட் போலீசாரின் ஆசியுடன் மீண்டும் மணல் கடத்தப்படுகிறதாம். இந்த கடத்தலுக்கு ஆளுங்கட்சியினரும் ஆதரவாக உள்ளதால் அவர்களுக்கும் மாமூல் கொடுத்துவிட்டு மணலை கடத்துகின்றனர் கடத்தல்காரர்கள்.

அணைப்பிரச்சினையிலும் தொடரும் கடத்தல்

முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினையால் இருமாநிலங்களிடையே வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், மணல் கடத்தல் லாரிகள் மட்டும் எப்படி எவ்வித இடையூறும் இல்லாமல் சென்றுவருகின்றன என்பது புரியாத புதிராக உள்ளது.

தமிழக பதிவு எண்களுடன் கூடிய லாரிகளில் மணல் கடத்துவதில் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளதால், தற்போது ஆந்திரா, புதுச்சேரி பதிவு எண்களை கொண்ட லாரிகளை கடத்தல் ஆசாமிகள் பயன்படுத்துகின்றனர்.

கடத்தல் வாகனங்களின் ஒரிஜனல் பதிவு எண் பலகைகள் மோசடியான முறையில் மாற்றப்பட்டு ஆந்திரா, கர்நாடக பதிவு எண்களுடன் இயக்கப்படுகின்றன. அதிகாரிகள் வழிமறித்தால், போலி பர்மிட் உள்ளிட்ட ஆவணங்களை காட்டி தப்பி விடுகின்றனர்.

லாரியில் கடத்தப்படும் மணல் மீது தார்பாலின் போட்டு மறைத்து, அதன்மேல் "கிரஷர் டஸ்ட் மண்' (கருப்பு மண்) போட்டு மூடி கடத்துவதாகவும் கூறப்படுகிறது. எனவே தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு ஆற்றுமணல் கடத்தப்படுவதை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

விண்ணைத் தொடும் விலைவாசி - தத்தளிக்கிறது கேரளா !



முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக மக்கள் இதுவரை இல்லாத அளவுக்கு கொந்தளித்துப் போயிருப்பதால் மறைமுகப் பொருளாதாரத் தடையில் கேரள மாநிலம் சிக்கியுள்ளது. இதனால் அங்கு பல அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவில் உயர்ந்துள்ளது. ஆனால் இதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அங்குள்ள அரசு மறைத்து வருவதாக கூறப்படுகிறது.

சாதாரண அணைப் பிரச்சினையை கிட்டத்தட்ட இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை போல மாற்றி விட்டது கேரள அரசு. தேவையில்லாமல் அங்குள்ள அரசியல்வாதிகள் மக்களை கொந்தளிக்கும் வகையில் பேசப் போக தற்போது அவர்களாலேயே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கேரளாவில் தமிழர்கள் மீதும், தமிழக வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள் சமூக விரோதிகள்.

இதன் விளைவு -தமிழகத்தில் இதுவரை யாரும் எதிர்பாராத பதிலடி. எங்கு பார்த்தாலும் முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுகிறார்கள் தமிழக மக்கள். உண்ணாவிரதம், பேரணி, கடையடைப்பு, கேரளக்காரர்களின் கடைகள் உடைப்பு, மறியல் என சகலவிதமான போராட்டங்களும் நடந்து வருகின்றன.

தேனி மாவட்டம்தான் போராட்டத்தில் முன்னணியில் உள்ளது. இங்கு கம்பம், கூடலூர், உத்தமபாளையம், தேனி என கிட்டத்தட்ட மாவட்டம் முழுவதுமே வீறு கொண்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதிலும் பல நகரங்களில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கடைகள் திறக்கப்படவில்லை. மக்கள் சாரை சாரையாக சாலைகளில் குழுமி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதேபோல தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தரப்பு மக்களும் போராடி வருகின்றனர். சலூன் கடைக்காரர்கள், ஆட்டோடிரைவர்கள், டாக்சி டிரைவர்கள், சலவைத் தொழிலாளர்கள், மீன் வியாபாரிகள், வியாபாரிகள், வக்கீல்கள், மாணவர்கள் என சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் தங்களது தரப்பு எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். தமிழகத்தில் இப்படி ஒரு போராட்டம் இதுவரை நடந்ததில்லை என்று கூறும் அளவுக்கு போராட்டங்கள் தொய்வின்றி நடந்து வருகின்றன.

அதேபோல அரசியல் கட்சிகளும் கூட போராடி வருகின்றன. அதிமுகவைத் தவிர அத்தனை கட்சிகளுமே ஒரு சுற்றுப் போராட்டத்தை முடித்து விட்டன.

இந்தப் போராட்டங்கள் போதாது என்று பல்வேறு வகையான பொருளாதார முற்றுகையும் நடந்து வருகிறது. தேனி மாவட்டத்திலிருந்து காய்கறி, பால், ஆடு, மாடுகள் என எதுவுமே கேரளாவுக்கு போவதில்லை. அத்தனையும் நிறுத்தப்பட்டு விட்டது.

அதேபோல சரக்கு லாரிகளும் கேரளாவுக்குப் போகாது என்று லாரி புக்கிங் ஏஜென்டு சங்கம் கூறி விட்டது. இதனால் சரக்கு லாரிகள் கேரளாவுக்குப் போகவில்லை.

அதேபோல மாநிலத்தின் பல பக்கங்களிலும் பல்வேறு வகையான பொருட்கள் போக்குவரத்து தடைபட்டுள்ளது. தங்களுக்காகத்தானே பொருட்களை கொண்டு வருகிறார்கள் என்ற அடிப்படை உணர்வு கூட இல்லாமல் கேரளாவுக்குள் கொண்டு வரப்படுகிற சரக்கு வாகனங்களையும் கேரளக்காரர்கள் தாக்கி வருவதால் இந்த நிறுத்தம்.

நாமக்கல் மாவட்டத்திலிருந்து தற்போது கறிக்கோழிகளை அனுப்புவதை நிறுத்தி விட்டனராம். காரணம், கோழிகளைக் கொண்டு போகிற வாகனங்களைத் தாக்கியதால். இதனால் நாமக்கல் மாவட்டத்திலிருந்து குறிப்பாக பல்லடத்திலிருந்து கிட்டத்தட்ட ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கறிக் கோழிகள் கேரளாவுக்குப் போகாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.

இதேபோல பிற பொருள் போக்குவரத்தும் கூட பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவு கேரளாவில் வரலாறு காணாத விலை உயர்வு என்று கூறப்படுகிறது.

காய்கறி விலை விண்ணைத் தொட்டுள்ளதாம். கிலோ தக்காளி ரூ. 300 வரை விற்பதாக கூறப்படுகிறது. மற்ற காய்கறிகளின் நிலையும் கூட அதுதான் என்கிறார்கள். அதேபோல பூக்கள், பழங்கள், பால் உள்ளிட்டவற்றின் விலையும் படு உயரத்திற்குப் போயுள்ளதாம். பாலை பெருமளவில் தமிழகத்திலிருந்துதான் கேரளா வாங்குகிறது. பெருமளவிலான பால் கர்நாடகத்திலிருந்தும் போகிறது. தற்சமயம், தமிழகத்திலிருந்து வரும் பாலுக்குத் தடை இல்லை என்று கூறப்படுகிறது.

இப்படி தமிழகத்திலிருந்து கிட்டத்தட்ட மறைமுகமாக கிளம்பியுள்ள பொருளாதாரத் தடையால் கேரளாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவில் உயர்ந்து மக்களை பாதிப்புக்குள்ளாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல தமிழகத்திலிருந்து கேரளாவுக்குப் போகும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் வெகுவாக குறைந்து விட்டதாம். குறிப்பாக தேக்கடிக்கு வரும் தமிழக பயணிகளின் எண்ணிக்கை அடியோடு நின்று விட்டது. இதனால் படகு குழாமில் மயான அமைதி நிலவுகிறது.

கேரளாவில்தான் இந்த நிலை என்றில்லை தமிழகத்திலும் கூட மலையாளிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். தமிழகம் முழுவதும் விரவிப் பரந்துள்ள கேரளக்காரர்களின் கடைகள் தினசரி தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன.

டீக்கடை, பேக்கரிக் கடை, நகைக் கடை, நிதி நிறுவனக் கடைகள் என பல வகையான தொழிலில் மலையாள மக்கள் தமிழகத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கடைகள் தினசரி ஆங்காங்கு தாக்கப்பட்டு வருகின்றன. இதனால் அவர்களுக்கு பெரும் பொருள் நஷ்டமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. தாக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் தமிழகத்தில் வசிக்கும் மலையாளிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவல நிலைக்கு கேரள அரசையும், கேரள அரசியல்வாதிகளையுமே அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் பெருமளவில் மலையாளிகள் வசிக்கிறார்களே என்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் கேரள அரசியல்வாதிகள் பொறுப்பின்றி நடந்து கொள்வதாக அவர்கள் புலம்புகின்றனர். பல காலமாக நாங்கள் தமிழகத்தில் வசித்து வருகிறோம். தமிழகத்தில் எங்களுக்கு மிக மிக அதிக சுதந்திரம் உள்ளது. கேரளாவில் கூட நாங்கள் இப்படி இருக்க முடியாது. தமிழர்களைப் போலவே நாங்களும் மாறி விட்டோம். இப்படிப்பட்ட நிலையில் எங்கள் மீது தாக்குதல் நடைபெறும் என்று கனவில் கூட எதிர்பார்க்கவில்லை, என்ன செய்வது என்று புரியவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இப்படி பல பக்கங்களிலும் தமிழகத்தின் போராட்டத்தால் கேரள அரசுக்கும், அங்குள்ள மக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த பாதிப்புகள் வெளியே தெரியாத அளவுக்கு 'மேக்கப்' செய்து வருகிறது கேரள அரசு என்கிறார்கள்.

திருப்பதி கோவில் லட்டு சுவை, தரம் உயருகிறது.

திருப்பதி கோவில் லட்டு சுவை, தரம் உயருகிறது; கடலை பருப்பு, நெய், சர்க்கரையை நேரடியாக வாங்க முடிவு

திருப்பதி எழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றது. அதற்கு காரணம் அதன் சுவைதான். ஆனால் சமீப காலமாக லட்டுவின் தரமும், சுவையும் குறைந்து வருவதாக தேவஸ்தானத்துக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. லட்டு சீக்கிரம் கெட்டு விடுவதாகவும் புகார் கூறப்பட்டது.

இதற்கு தீர்வு காண்பது குறித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் லட்டு தயாரிக்க பயன்படும் கடலை பருப்பு, நெய், சர்க்கரை மற்றும் ஏலக்காய், முந்திரி பருப்பு போன்றவை வாங்க டெண்டர் விடப்படுவதன் மூலம் தரம் குறைந்த பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதாக தெரிய வந்தது.

இதனால்தான் லட்டு தரம் குறைந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மூலப் பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருப்பதி கோவிலில் ஒரு நாள் லட்டு தயாரிக்க 10 டன் கடலை பருப்பு, 10 டன் நெய், 10 டன் சர்க்கரை, 2 டன் முந்திரி பருப்பு, ஒரு டன் உலர்ந்த திராட்சை, 300 கிலோ ஏலக்காய் தேவைப்படுகிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ. 100 கோடி செலவிடப்படுகிறது.

இவைகளை நேரடியாக கொள்முதல் செய்வதன் மூலம் குறைந்த விலையில் தரமான பொருட்களை உருவாக்கலாம் என தெரிய வந்தது. மும்பையில் உள்ள “பைசஸ்போர்டு” என்ற நிறுவனம் ஏலக்காயை தமிழ் நாடு, கேரளாவில் இருந்தும், முந்திரி பருப்பை கேரளாவில் இருந்தும் நேரடியாக கொள்முதல் செய்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

அந்த நிறுவனம் மூலம் இந்த பொருட்களை வாங்கவும் ஆந்திர அரசு நிறுவனமான விஜயா டைரி மூலம் நெய் வாங்கவும் தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது. அதே போல் சர்க்கரையை உற்பத்தி செய்யும் ஆலையில் இருந்து நேரடியாக பெறவும் திட்டமிடப்பட்டது.

இதன் மூலம் செய்யும் லட்டு தரமானதாகவும், சுவையானதாகவும் இருக்கும் என்று கோவில் நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் கூறினார். தற்போது விற்கும் விலையில் ஒரு லட்டு எடை 800 கிராம் இருக்கும் வகையில் கண் காணிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Thursday, December 22, 2011

முல்லை பெரியாறு அணை பிரச்சினை - திருச்சியில் இன்று கேரள வியாபாரிகள் கடையடைப்பு : தமிழகத்திற்கு ஆதரவாக இருப்போம்.

முல்லை பெரியாறு அணை பிரச்சினை-திருச்சியில் இன்று கேரள  வியாபாரிகள் கடையடைப்பு: தமிழகத்திற்கு ஆதரவாக இருப்போம்

முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகத்துக்கு ஆதரவாக திருச்சியில் இன்று கேரள வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தின் தென் பகுதியில் அமைந்து உள்ள 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வரும் முல்லை பெரியாறு அணையை கற்பனை காரணங்களை கூறி இடிக்க முயற்சி செய்யும் கேரள அரசின் செயல்பாட்டை திருச்சி கேரள வாழ் மக்கள் சார்பில் வன்மையாக கண்டித்தனர்.

தமிழகத்தில் 45இலட்சம் மலையாளிகள் சகோதரர்களாக வாழ்ந்துவருகிறோம். எனவே வரும் 28ந்தேதி கேரள அரசிர்க்கு முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகத்தின் நிலைப்பாடே எங்களுடையதும் ஆகும். என்பதனை விளக்கி கூறுவோம்.

முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக அரசின் நிலைப்பாட்டையும் அதன் மேல் நடவடிக்கைகளையும் முழு மனதுடன் வரவேற்பது மட்டுமல்லாமல் ஆதரவு அளித்து அறிக்கை வெளியிட்டனர்.

தமிழகத்தில் வாழும் கேரள மக்களுக்கும், கேரள நிறுவனங்களுக்கும் தமிழக அரசு பாதுகாப்புஅளித்து வருவதை போல் கேரள அரசும் அங்கு வாழும் தமிழக மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்,

தமிழகத்தில் இருந்து சபரி மலை செல்லும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சி மலையாளிகள் அசோசியேசன் சங்கம் சார்பில் உம்மண்சாண்டிக்கு தந்தி அனுப்பப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று திருச்சியில் தொழில் செய்துவரும் கேரளவாசிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

அதன்படி இன்று திருச்சியில் மலையாளிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். திருச்சி சின்னக்கடை வீதி, என்.எஸ்.பி. ரோடு, சிங்கார தோப்பு, பாலக்கரை, தில்லைநகர், சத்திரம் பஸ் நிலையம், காந்தி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள மலையாளிகளுக்கு சொந்தமான நகைக்கடைகள், பேக்கரி, டீக்கடைகள், மளிகை கடைகள், ஹார்டுவேர்ஸ் ஆகியவை அடைக்கப்பட்டு இருந்தன.

முல்லை பெரியாறு பிரச்சினை : பிரதமர் மன்மோகன்சிங் - கேரள முதல்வர் உம்மன்சாண்டி கொடும்பாவி எரிப்பு.

முல்லை பெரியாறு பிரச்சினை: பிரதமர்-கேரள முதல்வர் உருவபொம்மை எரிப்பு: வேலூரில் 38 பேர் கைது

முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்காத கேரள அரசை கண்டித்து தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் சார்பில் மத்திய அரசு அலுவலகம் முன்பு இன்று முற்றுகை போராட்டம் நடந்த போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினர்.

அப்போது பிரதமர் மன்மோகன்சிங், கேரள முதல்வர் உம்மன்சாண்டி ஆகியோரின் உருவ பொம்மையை எரித்தனர். மத்திய அரசு, கேரள அரசை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். உருவபொம்மையை எரித்த 10 பெண்கள் உள்பட 38 பேரை கைது செய்தனர்.

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை : 5மாவட்டங்களில் முழு கடையடைப்பு : வியாபாரிகள் உண்ணாவிரதம்.

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை: 5 மாவட்டங்களில் முழு கடையடைப்பு: வியாபாரிகள் உண்ணாவிரதம்

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையில் தமிழர்களின் உரிமையை காக்க போராட்டங்கள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது.

வக்கீல்கள், வர்த்தகர்கள், ஆட்டோ, வேன், கார் டிரைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும், சமூக அமைப்பினரும் கேரள அரசை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்று 5 மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், தமிழ்நாடு உணவுபொருள் வியாபாரிகள் சங்கம், மடீட்சியா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, வணிகர் சங்க பேரவை, மதுரை ஜூவல்லர்ஸ், புல்லியன் மெர்ச்சன்ட் அசோசியேசன், மதுரை ஜவுளி வியாபாரிகள் சங்கம், முல்லை பெரியாறு அறவழி போராட்டக்குழு, வெற்றிலை, பாக்கு, பீடி, சிகரெட் வர்த்தக சங்கம் உள்பட சங்கங்கள் இந்த போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.

முழு கடையடைப்பு காரணமாக மதுரையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. ஓட்டல்கள், ஜவுளி கடைகள், நகைக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள். பெட்டிக்கடைகள், டீ, காபி கடைகள், பலசரக்கு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

இதனால் மதுரையில் பெரியார் பஸ் நிலையம், ரெயில் நிலையம், கீழமாசிவீதி, விளக்குத்தூண், சிம்மக்கல், கோரிப்பாளையம், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

பஸ்கள் இயக்கப்பட்டதால் பஸ் நிலையங்களில் மட்டும் பயணிகள் கூட்டம் காணப்பட்டது. பல்வேறு ஆட்டோ, வேன் சங்கங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் பெரும்பாலான ஆட்டோ மற்றும் வேன்களும் ஓடவில்லை.

கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் மதுரை கே.கே.நகரில் உள்ள மடீட்சியா அலுவலகம், மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ஆகியவற்றின் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான தொழில் அதிபர்கள், வணிகர்கள் கலந்து கொண்டனர். இந்த முழு கடையடைப்பு மாலை 5 மணி வரை நடக்கிறது. இதனால் மதுரை மாவட்டத்தில் இன்று ரூ.200 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் இன்று மூடப்பட்டன. தேனி, கம்பம், கூடலூர், காமயகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிபட்டி போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. காய்கறி கடைகளும் மூடப்பட்டன. டீக்கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தேனி மவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. கம்பம், கூடலூர், பகுதியில் இன்று அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஓட்டல், பேக்கரி, டீக்கடை சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. மாவட்டத்தில் சுமார் 500 கடைகள் மூடப்பட்டு இருந்தன. வர்த்தக சங்கம் சார்பில் சங்க தலைவர் ஜெகதீசன், செயலாளர் கோவிந்தராஜன் ஆகியோர் தலைமை யில் வியாபாரிகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர். மேலும் மாவட்டத்தில் உள்ள வாடகை கார், வேன், ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் சுமார் 5 ஆயிரம் ஆட்டோக்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஓடவில்லை.

சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை உள்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஓட்டல்கள் உள்பட அனைத்தும் கடைகளும் மூடப்பட்டு இருந்தன. சுமார் 2 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மாவட்டம் முழுவதும் வேன், கார்கள், ஆட்டோக்கள் இன்று ஓடவில்லை.

திண்டுக்கல் பஸ் நிலையம், காந்தி மார்க்கெட், பூ மார்க்கெட் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. கேரள அரசை கண்டித்து இன்று காலை திண்டுக்க்ல காட்டாஸ்பத்திரி அருகே வர்த்தக சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது.

இந்த போராட்டத்தில் 50 இணைப்பு சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. கேரள அரசை கண்டித்து ஈரோடு மாவட்டத்திலும் இன்று பல்வேறு இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. அந்தியூர், பவானி, கவுந்தப்பாடி, சிவகிரி, அம்மன் கோவில் ஆகிய இடங்களில் முழு கடையடைப்பு நடந்தது. இந்த ஊர்களில் உள்ள ஆட்டோக்கள் மற்றும் வாடகை வேன்கள் என சுமார் 5000-க்கும் மேற்பட்ட வாகனங்களும் ஓடவில்லை.

வயதான தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்வு : ஜெயலலிதா உத்தரவு.

வயதான தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்வு: ஜெயலலிதா உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மொழி என்பது மனிதனை அடையாளப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகும். மொழி தானும் வளர்ந்து, தன்னை பயன்படுத்தும் மனிதனையும் வளர்க்கும் தனியாற்றல் பெற்றது.

எண்ணத்தின் வடிவமாகவும், நாகரிகத்தின் சின்னமாகவும் திகழும் மொழி, மனிதகுலத்தின் கருத்துப் பரிமாற்றத்துக்கு பயன்படுவதோடு மட்டுமல்லாமல் மனித சமுதாய இணைப்புக்கும் துணை செய்கின்றது.

நிலைத்த பழமையும் வளரும் புதுமையும் இரண்டறக் கலந்து வாழும் மொழி தமிழ்மொழி. அது நமது ஆட்சி மொழி.

தமிழ் மொழியின் வளர்ச்சியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தனி ஈடுபாடு கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

தமிழ் மொழியின் வளமை மற்றும் செழுமைக்கு முக்கிய காரணம், மொழியால் ஈடுபாடு கொண்டு, மொழிக்காக தன் வாழ்நாட்கள் முழுவதையும் அர்ப்பணித்த தமிழ் அறிஞர் பெருமக்களின் தன்னலமற்ற தொண்டே ஆகும்.

அத்தகைய தமிழ் அறிஞர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது.

இதன் அடிப்படையில், தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழ் இலக்கிய மேம்பாட்டிற் காகவும், அயராது பாடுபட்ட தமிழ் அறிஞர்களைப் போற்றும் வகையில், அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு, மாதம்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம், 1978-ம் ஆண்டு அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரால் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் தற்போது மாதந் தோறும் 1,000 ரூபாய் உதவித் தொகையாக அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

தமிழ் மொழி உயர்ந்து வாழ வேண்டும் மற்றும் மொழிக்காக தொண்டாற்றிய அறிஞர்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற நோக்கம் கொண்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் மற்றும் அவர்தம் மரபுரிமையர்களுக்கு தற்போது மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாய் நிதி உதவியை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட் டுள்ளார்கள்.

இதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 35 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு எந்த முகத்தோடு வருகிறார் பிரதமர் ? கருப்பு கொடி காட்டுவேன் : விஜயகாந்த்.



இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கத்தில் அணையின் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடி வரை உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் 2006ம் ஆண்டே ஆணையிட்டது. இதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. ஆனால் இன்று வரை நிறைவேற்றவில்லை.

உச்சநீதிமன்றத்தின் ஆய்வில் இருக்கிறபோதே கேரள அரசு வேண்டுமென்றே முல்லைப் பெரியாறு பிரச்சனையை கிளப்பியது.

பழைய அணைக்கு பதிலாக புதிய அணை கட்டப்போவதாகவும், பழைய அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும் கேரள சட்டமன்றத்திலேயே தீர்மானம் போட்டனர். கேரளாவில் உள்ள தமிழர்கள் தாக்கப்பட்டனர். தமிழ்நாட்டிலிருந்து அங்கு சென்ற ஐயப்ப பக்தர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டனர். இவ்வாறு தொடர்ந்து தமிழர்களின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை.

தமிழ்நாட்டிற்கு இந்திய அரசு தொடர்ந்து ஓர வஞ்சனை செய்து வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். தேமுதிகவைச் சேர்ந்த தலைமைக் கழகப் பேச்சாளர் இடி முழக்கம் சேகர் முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தனது இன்னுயிரையே மாய்த்துக்கொண்டார்.

இவ்வாறு தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் போக்கினை மேற்கொண்டு விட்டு இந்திய அரசின் சின்னமாக இப்பொழுது பிரதமர் தமிழ்நாட்டிற்கு எந்த முகத்தோடு வருகிறார் என்பதே எங்கள் கேள்வி. மக்களின் கோரிக்கைகளையும், உணர்வுகளையும் மதிக்காமல் பிரதமர் தமிழ் நாட்டிற்கு ஏன் வரவேண்டும்? தமிழர்கள் என்றாலே இந்திய அரசைப் பொறுத்தவரையில் பிள்ளைப் பூச்சிகளாகவே கருதுகிறார்கள்.

ஆகவே, இந்திய பிரதமர் 25 மற்றும் 26ம் தேதிகளில் சென்னைக்கு வருகிற பொழுது தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த உணர்வை காட்டும் வகையில் தேமுதிக சார்பில் ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் சென்னையில் 26ஆம் நாளன்று எனது தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

கேரளத்தின் சொல்படி ஆடும் மத்திய அரசு - வைகோ .



முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளமும் மத்திய அரசும் சேர்ந்து நடத்தும் சதித்திட்டம் அம்பலமாகி விட்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்தமிழ்நாட்டின் வாழ்வையே நாசமாக்க முனைந்துவிட்ட, கேரள அரசியல் கட்சிகளின் சதித் திட்டங்களுக்கு, கடந்த ஏழு ஆண்டுகளாக உடந்தையாகவே செயல்பட்டு வந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இப்போது பகிரங்கமாகவே கேரளத்துடன் சேர்ந்து கொண்டு, தமிழகத்தை வஞ்சித்து, அநீதி இழைக்கிறது.

அதனால்தான், பிரதமர் தலைமையில் இயங்கும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஒரு குழுவை அமைத்து, பூகம்பத்தால் முல்லைப் பெரியாறு பகுதிக்கு ஏற்படும் சேதத்தை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

பென்னி குயிக் கட்டிய நமது முல்லைப் பெரியாறு அணை, எந்த பூகம்பத்துக்கும் அசையாது, வலுவாக உள்ளது என்று, நிபுணர் குழுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே அறிக்கைகள் தந்தபின்பும், அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் 2006ல் தீர்ப்புத் தந்தபின்பும், பின்னர் 2009ல், இப்பிரச்சனைக்கு ஆய்வு செய்ய நீதியரசர் ஆனந்த் தலைமையில் அமைத்த குழு, ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கை தர இருக்கின்ற இந்த நேரத்தில், தந்திரத்தோடு கேரளத்தினர் வகுத்த சதித் திட்டத்தை, இந்தக் குழுவை அமைத்து மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது.

இதுகுறித்து இன்று பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு நான் எழுதி உள்ள கடிதம் பின்வருமாறு:

தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில், முல்லைப் பெரியாறு குறித்து நீங்கள் குழு அமைத்தது, தமிழ்நாட்டுக்கு இந்திய அரசு செய்துள்ள, பொறுக்க முடியாத மேலும் ஓர் அநீதி ஆகும். இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

முல்லைப் பெரியாறு பிரச்சனையில், மத்திய அரசு, 2004ம் ஆண்டு முதல், தமிழ்நாட்டுக்குத் துரோகங்களையே இழைத்து வருகின்றது.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறையின் தொழில் பாதுகாப்புப் பிரிவு, கடந்த 2006 நவம்பர் 9,10 ஆகிய தேதிகளில், மத்திய அரசுக்குத் தந்த அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்க வேண்டுமென்றால், அணைப் பகுதியில் இருந்து கேரள காவல்துறையை அகற்றி விட்டு, மத்திய ரிசர்வ் போலீஸ் படை அல்லது மத்திய தொழில் பாதுகாப்புப் படையை அங்கே குவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

அதை உங்கள் அரசு, குப்பையில் தூக்கிப் போட்டது. கேரள அரசியல் கட்சிகளின் தூண்டுதலில், அணையை உடைக்க வன்முறையாளர்கள் முயன்று வருகின்றனர்.

அணையைக் காக்க, மத்தியப் படையை அனுப்பச் சொல்லி தமிழ்நாடு வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. 2006 பிப்ரவரி 27ல் உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு வழக்கில், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டித் தந்த தீர்ப்பை முற்றிலும் உதாசீனம் செய்துவிட்டு, அணையை உடைக்கவும் எங்களுக்கு அதிகாரம் உண்டு என்று கேரளம் ஒரு சட்டத்தை நிறைவேற்றி இந்தியாவின் இறையாண்மைக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் சவால் விட்டது.

தற்போது அணையின் வலிமை உள்ளிட்ட நிலைமையை உச்ச நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் குழு ஆய்வு செய்து அறிக்கை தர இருக்கின்ற நிலையில் தேசியப் பேரிடம் ஆணையக் குழுவை உங்கள் அரசு நியமித்த செயல், உங்கள் அரசு கேரளாவின் சொல்படிதான் ஆடுகிறது என்பதை வெட்டவெளிச்சமாக்கி விட்டது.

இந்த அணைப் பிரச்சனையில், கேரளாவின் ஏஜெண்டாக அறிக்கை தந்து வந்த ரூர்க்கி ஐஐடி நிறுவனத்தின் பால் என்பவரை இந்தக் குழுவில் சேர்த்து இருப்பதில் இருந்தே, கேரளமும் மத்திய அரசும் சேர்ந்து நடத்தும் சதித்திட்டம் அம்பலமாகி விட்டது.

தேசியப் பேரிடர் ஆணையக் குழுவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று, தமிழக முதல்வர் நியாயமான வேண்டுகோள் விடுத்து உள்ளார். பேரிடர் மேலாண்மை நடவடிக்கை என்ற பெயரால், மத்திய காங்கிரஸ் அரசு, இந்திய ஒற்றுமை உடையும் பேரிடருக்கே வழிவகுக்கிறது.

எனவே, மத்திய அரசு எடுத்து உள்ள இந்த நடவடிக்கையை உடனடியாக ரத்துச் செய்யுமாறு வேண்டுகிறேன் என்று அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார் வைகோ.

ஃபுகுஷிமாவை அணு உலையை மூட ரூ. 78,400 கோடியும், 40 ஆண்டுகளும் தேவை !



ஜப்பான் நாட்டின் ஃபுகுஷிமா நகரில், ஆழிப் பேரலையால் சீரழிக்கப்பட்ட அணு மின் நிலையத்தில், உலையில் சிக்கியுள்ள எரிபொருளை வெளியே பக்குவமாக எடுக்க 40 ஆண்டுகளும் சுமார் ரூ.78,400 கோடியும் தேவைப்படும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

அப்படி வெளியே எடுக்கும் கதிரியக்கக் குணம் கொண்ட எரிபொருளை சுற்றுப்புறத்துக்கு ஆபத்து இல்லாமல் எப்படி அப்புறப்படுத்துவது என்பதற்கான வழிகளை இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்பது அடுத்த பிரச்னை.

உலையிலிருந்து, எரி கலத்தின் அடிப்புறத்துக்குச் சென்றுவிட்ட எரிபொருளை வெளியே கொண்டு வருவதற்கான முன் ஏற்பாடுகளைச் செய்யவே 10 ஆண்டுகள் பிடிக்குமாம். அதைச் செய்வதற்கும் ரோபோட்டுகள் எனப்படும் இயந்திர மனிதர்களை இனிமேல்தான் தயாரிக்க வேண்டுமாம்.

ஃபுகுஷிமா அணு உலையால் கதிரியக்க ஆபத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகும் மறைந்துவிடாது என்றும் தெரியவருகிறது.

ரூ.78,400 கோடி எரிபொருளை வெளியே எடுக்க மட்டும்தான். பிற செலவுகளும் காத்திருக்கின்றன.

இத் தகவல்களை இந்த அணு உலைக்காகவே ஜப்பானிய அரசு நியமித்துள்ள அமைச்சர் கோஷி ஹோசனோ, டோக்கியோ நகரில் புதன்கிழமை இதைத் தெரிவித்தார்.

அணு மின்சாரம் தயாரிப்பதற்கு மிகவும் மலிவானது, அணு உலைக்கு எந்தவித ஆபத்தும் நேராது, அப்படியே கதிரியக்கம் ஏற்பட்டாலும் சிகிச்சை செய்துவிடலாம், தடுத்து விடலாம் என்று கூறப்படும் வேளையில் ஃபுகுஷிமா அணு உலை தொடர்பாக வெளிவரும் இந்தத் தகவல்கள் அச்சம் தருபவையாக இருக்கின்றன.

Wednesday, December 21, 2011

மலையாளிக்கும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசம் : நெஞ்சை தொடும் சம்பவம்.



முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையால் கேரள வாழ் தமிழ் மக்கள் தாக்கப்பட்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு பெரும் காட்டு வழிகளில் இருட்டு நேரங்களில் நடையாய் நடந்து தமிழகத்திற்குள் வருவதைப் பார்த்து கொந்தளித்துப் போயிருக்கின்றனர் தமிழக மக்கள்.

இந்த முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்திற்கு உள்ள உரிமையையும், தமிழகத்தை நம்பியே கேரளா இருப்பதை கேரள மக்களுக்கு உணர்த்தவும் வேண்டி கேரளா செல்லும் 13 வழித் தடங்களை மறிக்கும் போராட்டத்தை முன்னின்று நடத்தியது ம.தி.மு.க.

வாளையாறு வழித் தடத்தில் க.க சாவடியில் நடந்த உணர்ச்சி மிகப் பெருங்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது... கேரள ரெஜிஸ்ட்ரேஷன் கொண்ட ஆம்புலன்ஸ் வேன் சைரன் எழுப்பிக் கொண்டு வர…உயிர் காக்க போகும் அந்த வாகனத்திற்கு வழி விடுங்கள் என்று மைக்கில் குரலொலிக்க..

சாலையை மறித்து நின்ற மொத்தக் கூட்டமும் வழி விட்டு நிற்க அந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு பின்னாலயே கேரளா ரெஜிஸ்ட்ரேசன் கொண்ட ஒரு டூ வீலரில் ஒரு மலையாளி வேகமெடுப்பதை பார்த்து டூ வீலரை தடுத்து விட்டனர் போராட்டக்காரர்கள். ஒரு கும்பல் வண்டி சாவியைப் பிடுங்கப் போக.

அடிடா அந்த மலையாளத்துக்காரன என இன்னொரு கும்பல் பாய வெல வெலத்துப் போன அந்த மலையாளிக்கு போலீஸ்காரர்கள் உதவப் போனாலும் யாரும் கேட்பதாயில்லை.

ஆனால் அந்த மலையளியோ..என்ட அச்சன் மரிச்சுப் போயி. ஆம்புலன்ஸ்ல ஏற்றிக் கொண்டு போகுனுண்டு..என உயிருக்குப் பயந்து பதறுவதைப் பார்த்தவர்கள்…விட்ருங்கப்பா அந்த ஆளை... இறுதிக் காரியத்துக்காக போற ஒரு மனுஷன நிறுத்துனதே தப்பு.

கேரளாக்காரனுகளுக்கு தான் உணர்ச்சி இல்லாம நம்ம மக்கள அடிச்சு துரத்துறனுகன்னா நாமளும் அதையே செய்யறதுல என்ன உணர்வு இருக்கு.? மலையாளிக்கும் தமிழனுக்கும் வித்தியாசமிருக்கு. அதை அவுங்க உணர்றதுக்கான சம்பவமா கூட இது இருக்கலாம்.

அந்தாள விட்ருங்க..என கூட்டத்தை விலக்கி ஒருவர் அனுப்பி வைக்க... அந்த மலையாளி கண்ணீர் விட்டபடியே அங்கிருந்து நகர்ந்து போனார்.

கோவை அருள்குமார்

கேரள அரசை கண்டித்து இன்று மதுரையில் வக்கீல்கள் ரெயில் மறியல் : 100 பேர் கைது.

கேரள அரசை கண்டித்து இன்று மதுரையில் வக்கீல்கள் ரெயில் மறியல்: 100 பேர் கைது

கேரள அரசை கண்டித்து இன்று மதுரையில் வக்கீல்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100 வக்கீல் களை போலீசார் கைது செய்தனர். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் போக்கை கண்டித்து மதுரை மாவட்ட வக்கீல்கள் சங்கம் சார்பில் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இன்று மதுரை ரெயில் நிலையத்தில் வக்கீல்கள் சங்கம் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. இதையடுத்து ரெயில் நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர். இன்று காலை மதுரை மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் தர்மராஜ், செயலாளர் ஏ.கே.ராமசாமி ஆகியோர் தலைமையில் 100 வக்கீல்கள் மாவட்ட கோர்ட்டில் இருந்து ஊர்வலமாக மதுரை ரெயில் நிலையம் நோக்கி வந்தனர்.

பின்னர் வக்கீல்கள் ரெயில் நிலையத்துக்குள் நுழைந்து 11.35 மணிக்கு குருவாயூரில் இருந்து சென்னை நோக்கி செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து ரெயிலில் கறுப்பு கொடி ஏற்றி மறியல் போராட்டம் நடத்தினர்.

அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் ரெயில் மறியலில் ஈடுபட்ட 100 வக்கீல்களையும் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இந்த ரெயில் மறியல் போராட்டத்தால் மதுரை ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளாவுக்கு செல்லும் சாலைகளை மறித்து முற்றுகை போராட்டம் ; வைகோ, பழ.நெடுமாறன் கைது.

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் சாலைகளை மறித்து முற்றுகை போராட்டம்; வைகோ, பழ.நெடுமாறன் கைது

முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசை கண்டித்து கேரளாவுக்கு செல்லும் 13 மலைச்சாலைகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்திருந்தார். தேனி மாவட்டத்தில் குமுளி சாலையில் லோயர் கேம்ப் பகுதியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், முல்லை பெரியாறு பாசன 5 மாவட்ட விவசாய சங்க தலைவர் கம்பம் கே.எம்.அப்பாஸ் ஆகியோர் தலைமையில் கேரளாவுக்கு செல்லும் உணவு பொருட்களை தடுத்து நிறுத்தும் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோல கம்பம் மெட்டு பகுதியில் மல்லை சத்யா தலைமையிலும், போடி மெட்டுவில் பார்வர்டு பிளாக் எம்.எல்.ஏ. கதிவரன் தலைமையிலும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கார்- வேன்களில் ம.தி.மு.க. தொண்டர்கள் வந்து குவிய தொடங்கினர்.

இது தவிர கம்பம், உத்தமபாளையம், கூடலூர், தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் அணி, அணியாக திரண்டு வர தொடங்கினர். உத்தமபாளையம் தாலுகா முழுவதும் ஏற்கனவே 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இந்த தடை உத்தரவை மீறி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. போராட்டக்காரர்கள் குமுளி எல்லை வரை சென்றால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் என கருதி போலீசார் அங்கு செல்லவிடாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொண்டனர். எல்லைப் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கம்பம் - குமுளி ரோட்டில் உள்ள வ.உ.சி மைதானத்தில் வைகோ மற்றும் தலைவர்கள் பேசுவதற்காக மேடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு மறியல் நடத்தவதற்காக காலை முதலே தொண்டர்களும், விவசாயிகளும் வந்து குவிந்தனர். வைகோ தேனி சமதர்மபுரம் சிவராம் நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.

அங்கிருந்து 10.30 மணியளவில் காரில் புறப்பட்டு வந்தார். உத்தமபாளையத்தை அடுத்துள்ள சீலையம்பட்டி அருகே வேனில் வைகோ, பழ.நெடுமாறன் மற்றும் அவர்களுடன் வந்தவர் களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசார் வைகோவிடம் தமிழக எல்லை சாலையில் மறியல் நடத்த அனுமதி அளிக்கவில்லை என்று கூறினர். ஆனால் வைகோ தொடர்ந்து செல்ல முயன்றார்.

இதையடுத்து போலீசாரின் அனுமதியை மீறி சென்றதால் வைகோ, பழ.நெடுமாறன், கே.எம்.அப்பாஸ் உள்பட முக்கிய நிர்வாகிகளை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமானோர் வேனை மறித்து போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர் போலீசார் கேட்டுக்கொண்டதன் பேரில் வைகோ அங்கு கூடியிருந்தவர்களிடம் போலீசார் தங்கள் கடமையை செய்யவிடுங்கள் என்று கூறினார்.

இதனையடுத்து போலீசார் வைகோ, பழ. நெடுமாறன், அப்பாஸ் ஆகியோரை போலீசார் வேனில் அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கம்பம்- குமுளி ரோட்டில் உள்ள வ.உ.சி. திடலில் ம.தி.மு.க. துணை பொது செயலாளர் மல்லை சத்யா தலைமையில் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க.வினர், விவசாயிகள், பொதுமக்கள் உள்பட 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கம்பம் மெட்டு சாலையில் ம.தி.மு.க. துணை பொது செயலாளர் துரை. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கேரள அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதே போல் கேரளா செல்லும் எல்லைச்சாலையான போடி மெட்டில் அகில இந்திய பார்வர்டு பிளாக் எம்.எல்.ஏ. கதிரவன், பாரதீய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன்ஜி தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது.

இதில் சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் சிவந்தியப்பன், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் நடராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் கேரள நோக்கி செல்ல முயன்ற போது அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

தனுராசனம், நாவாயாசனம், பூங்கொடி ஆசனம்.

தனுராசனம்.
தனுராசனம்

செய்முறை:

விரிப்பில் குப்புறபடுத்தநிலையில் இருகைகளையும் உடலோடு ஒட்டி தரையில் வையுங்கள். இரு முழங்கால்களையும் மடக்கி, ஒன்றுமாற்றி ஒன்றாக, பின்புற பாகத்தில் குதிகால் படுமாறு சில தடவை செய்யவும். அதற்கு பிறகு இரு கைகளால் பின்புறமாக அந்தந்த பக்கத்து கணுக்காலை பிடித்து முழங்காலை வெளிப்பக்கமாய் விரித்து தலையையும், நெஞ்சையும் தூக்கவும். இந்த நிலையில் இரு பாதங்களும் சேர்ந்தே இருக்கட்டும். முழங்கால்களை மட்டும் விரியுங்கள். வயிற்றுப்பகுதி, தரையில் இருக்கும் நிலையில், உடம்பு வில் போல அமையவேண்டும். இயல்பான சுவாசத்தில் 15 வினாடி இருந்து, பழைய நிலைக்கு வரவும்.

பயன்கள்:

முதுகு தண்டு வலி குணமாகும். பின்புற ஊளைசதை குறையும். தொந்தி காணாமல் போகும். வயிற்றிலுள்ள சிறுகுடல், பெருங்குடல், கிட்னிகள், மூத்திரப்பை, கைகள் ஆகியவை பின்னோக்கி இழுக்கப்படுவதால், தோளிலிருந்து மார்பு, நுரையீரல், இதயம், உதர விதானம், கல்லீரல், மண்ணீரல் போன்ற மிக முக்கியமான உறுப்புகளுக்கு புதிய ரத்தம் பாய்வதால், அவை நன்கு இயங்கும். நீரிழிவு, மஞ்சள்காமாலை, மலட்டுத் தன்மை, செரிமான கோளாறுகள் அகலும். இது பச்சமோத்தாசனத்துக்கு மாற்று ஆசனமும்கூட!


நாவாயாசனம்.
நாவாயாசனம்

செய்முறை:

விரிப்பில் வடக்கு நோக்கி தலைவைத்து மல்லாந்து படுத்து, இரு கால்களையும் மேலே தூக்கவும். அதற்கு பிறகு தலை, தோள்பட்டையையும் மேலே தூக்கி, உடம்பை பிருஷ்டபாகத்தில் நிறுத்தவேண்டும். இரு உள்ளங்கைகளையும் கீழே வைத்த நிலையில், தோள்பட்டைக்கு இணையாக முழங்காலுக்கு வெளியே நீட்ட வேண்டும். இந்த நிலையில் 15 விநாடிகள் இருந்து, மறுபடியும் பழைய நிலைக்கு திரும்பவும்.

பயன்கள்:

மல - ஜல பிரச்சினைகள் வராது. உடல் எடை குறையும். பரதநாட்டியம், சங்கீதம், உடற்பயிற்சியை விட, உடலில் பிராணசக்தியை அதிகரிக்கும் ஆற்றல், நாவாயாசனத்துக்கு உண்டு. தவிர, இது தனுராசனத்துக்கு மாற்று ஆசனமும்கூட!


பூங்கொடி ஆசனம்.
பூங்கொடி ஆசனம்

செய்முறை:

இயல்பான சுவாசத்தில், சிரசாசன நிலைக்கு வரவும். வலது காலை லேசாக மடக்கி, இடது காலால் வலதுகாலை மெல்ல சுற்றவும். அடுத்த படியாக இதையே மாற்றி செய்யவேண்டும்.

பயன்கள்:

பாத வலி, மூட்டுப்பிடிப்பு, கால் வீக்கம், காலில் நரம்புகள் புடைத்து சுருக்கிக்கொள்ளுதல் போன்ற நோய்கள் குணமாகும்.

Tuesday, December 20, 2011

கூடங்குளமும் வேண்டாம் என்றால் மின் தட்டுப்பாட்டை எப்படித்தான் தீர்ப்பது? - முத்துக்குட்டி.


இத்தனை நாட்கள் கழித்து இப்போது கூடங்குளத்தில் போராட வேண்டிய தேவை என்ன?

இதற்கு நேரடியாக விடை சொல்வதை விடக் கூடங்குளத்தில் பட்டினிப்போராட்டத்தில் பங்கேற்ற கவிஞர் மாலதி மைத்ரியின் விடையைச் சொல்கிறேன். ‘உங்கள் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமணம் பண்ண முடிவு செய்துவிட்டீர்கள். திருமண நாள் குறித்தாகிவிட்டது; மண்டபத்திற்குப் பணம் கொடுத்தாகிவிட்டது; சொந்தக்காரர்கள் எல்லாருக்கும் அழைப்பிதழும் அனுப்பிவிட்டீர்கள். நாளை காலை திருமணம். இன்று இரவு தான் உங்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தி தெரிய வருகிறது – நீங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கு எயிட்சு நோய் இருக்கிறது என்று! இப்போது சொல்லுங்கள்! பல்லாயிரக்கணக்கான உரூபா செலவு பண்ணிட்டோம், திருமணம் நடக்கட்டும்னு விடுவீங்களா? இல்லை நிறுத்தி விடுவீர்களா?

உங்கள் எடுத்துக்காட்டு நல்லாத்தான் இருக்கு. அதற்காகப் பதிமூன்றாயிரம் கோடி உருபா போட்ட பிறகு இன்று வந்து போராடுவது என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?

இந்தப் போராட்டம் ஒன்றும் இன்று தொடங்கியதில்லை. இப்போராட்டத்திற்கு இருபத்தைந்து ஆண்டு வரலாறு இருக்கிறது.

சொல்வதற்கு ஓர் அளவு வேண்டாமா? ஏதோ ஆறு மாதம், ஒரு வருடமாகப் போராடி வருகிறோம் என்றால் சரி! அதற்காக ஒரேயடியாக இருபத்தைந்து ஆண்டுகள் என்றால் யாராவது நம்புவார்களா?

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இருபத்தைந்து ஆண்டு வரலாறு இப்போராட்டத்திற்கு இருக்கிறது.

நீங்கள் சொல்லும் ‘இருபத்தைந்தாண்டு’க்கு ஏதாவது ஒரு சான்றாவது சொல்ல முடியுமா?

ஒன்றென்ன? நூறு சான்றுகள் காட்ட முடியும்.

vaiko_atomic_640

அ) 1986இல் தினமணி செய்தித்தாளில் அணு உலைகளின் பாதிப்புகள் பற்றி மிக விரிவான கட்டுரை வெளிவந்தது. அப்போதே அணு உலை எதிர்ப்பு என்பது தொடங்கிவிட்டது.

ஆ) அணு உலைக் கழிவுகள் பற்றித் தினமணியில் ஐராவதம் மகாதேவன் கட்டுரை எழுதியதன் அடிப்படையில் அன்றைய முதல்வர் ம.கோ. இராமச்சந்திரன் அணுமின் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள முடியாது என்று அறிவித்தார்.

ஆ) 1987இல் மீனவக் கிராமங்களின் தலைவர்கள் கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது.

இ) 1987 செப்டம்பர் 22ஆம் நாள் இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலைத்திட்டத்தை எதிர்த்து மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடந்தது.

ஈ) 1988இல் திருநெல்வேலியில் மிகப்பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது.

உ) 1988 நவம்பர் 21ஆம் நாள் பாராளுமன்றத்தில் அணு உலையை எதிர்த்து வைகோ உரை நிகழ்த்தினார்.

ஊ)1989இல் நாகர்கோவிலில் ஊர்வலம், 1989 மார்ச்சு இருபதாம் நாள் தூத்துக்குடியில் ஊர்வலம் என எல்லாவற்றிலும் மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

எ) தூத்துக்குடியில் நடந்த ஊர்வலத்தில் ஜார்ஜ் பெர்ணான்டசு, பாலபிராசாபதி அடிகள் போன்ற தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

ஏ) எழுத்தாளர் நாகார்ச்சுனன் 1989இல் சூனியர் விகடனில் ‘கொல்ல வரும் கூடங்குளம்’ என்னும் தலைப்பில் கட்டுரைகள் எழுதினார்.

ஐ) அந்தச் சமயத்தில் இந்தியாவிற்கு வந்த சோவியத் அதிபர் மிகைல் கோர்பச்சேவிற்கு மும்பையிலும் தில்லியிலும் கருப்புக்கொடி காட்ட முயற்சி செய்யப்பட்டது.

ஒ) 1989 மே முதல் நாள், ‘Save Water Save Life’ என்னும் உறுதிமொழியுடன் தேசிய மீனவர் கூட்டமைப்பு தாமசு கோச்சேரியின் தலைமையில் கன்னியாகுமரியில் பத்தாயிரம் பேருக்கும் அதிகம் பேர் பங்கேற்ற பெரிய பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது; பலர் காயமடைந்தனர்.

ஓ) 1989 சூன் 3 முதல் 13ஆம் நாள் வரை மருத்துவர் குமாரதாசு தலைமையில் திருநெல்வேலியிலும் அதைச் சுற்றி உள்ள சிற்றூர்களிலும் அணு உலைக்கு எதிராக வீதி நாடகங்கள் நடத்தப்பட்டன.

ஒள) 1989 சூன் பதின்மூன்றாம் நாள் கூடங்குளத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

க) கூடங்குளம் அணு உலைக்குப் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் எடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி 101 தொடர் பொதுக்கூட்டங்கள் நாகர்கோவிலிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் நடத்தப்பட்டன.

உ) 1989இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளில் கூடங்குளம் அணுமின் திட்டத்தைக் கைவிடும் கோரிக்கையைக் கொண்டிருந்தன.

ங) பேச்சிப்பாறை அணியில் இருந்து தண்ணீர்க்குழாய் அமைக்க நடப்பட்டிருந்த எல்லைக் கற்களைப் பிடுங்கி எறியும் போராட்டம் 1990 இல் நடத்தப்பட்டது.

ச) முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ்காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கடராமன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் தலைமையில் நடக்கவிருந்த மூன்று வெவ்வேறு அடிக்கல் நாட்டு விழாக்கள் மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டன.

* தமிழக ஆளுநர் முன்னிலையில் மதுரையில் நடந்த மிகப்பெரிய பொது நிகழ்ச்சி ஒன்றில் இசையமைப்பாளர் இளையராசா வெளிப்படையாக அணு உலையை எதிர்த்துப் பேசினார்.

­* இயக்குநர் பாலச்சந்தர், நடிகர் நாசர் போன்ற திரைக்கலைஞர்கள் பலர் கூடங்குளம் திட்டத்தை எதிர்த்துக் கையொப்பம் இட்டுள்ளனர்.

  • தமிழில் கூடங்குளத்தைப் பற்றிப் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
  • மருத்துவர் இரமேசு, பிரேமா நந்தகுமார், ஞாநி, ஊடகவியலாளர் A.S.பன்னீர்செல்வன், நீலகண்டன், குமாரசாமி, மருத்துவர் தெய்வநாயகம், எழுத்தாளர் செ.திவான், சுப.உதயகுமார் எனப் பலர் கூடங்குளம் அணுமின்திட்டத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.
  • ‘பிராண்ட்லைன்’ இதழில் மார்க்சிய சூழலியலாளர் பிரபுல் பித்வாய் இருபத்தைந்து ஆண்டுகளாகக் கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்த்தும் அணு உலைகளின் ஆபத்துகளை விளக்கியும் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

கூடங்குளம் அணுமின் எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றி உங்களுக்கு இவ்வளவு போதுமா? இன்னும் எதிர்பார்க்கிறீர்களா?

உங்களுக்கு என்ன சிக்கல்? கூடங்குளத்தில் அணு உலை அமைக்கக்கூடாது என்கிறீர்கள் அவ்வளவு தானே!

ஆமாம்! உறுதியாக அதைத்தான் சொல்கிறோம்.

ஏன் அவ்வளவு உறுதியாக வேண்டாம் என்கிறீர்கள்?

கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள இடம் எரிமலைக் குழம்புகளால் ஆனது. 1990களில் கேரளப் பல்கலைக்கழகத்தில் நில இயல் துறையைச் சேர்ந்த டாக்டர் பிஜி, சென்னை ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த இராம் சருமா ஆகியோர் இந்த எரிமலைக் குழம்புகள் பற்றித் தங்கள் ஆய்வுகளில் கூறியிருக்கிறார்கள். 2004 நவம்பர் மாதம் வந்த ‘கரண்டு சைன்சு’ இதழில் இவ்வாய்வுக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன. கூடங்குளத்தில் இருக்கும் ‘உருகிய பாறைப் பிதுங்கல்கள்’ நேரடியாக அணு உலையின் நிலைத்த தன்மையைக் குலைத்து விடும் வாய்ப்பு மிக அதிகம்.

சரி! அப்படியானால் வேறு இடங்களில் அணுமின் நிலையங்கள் அமைப்பதில் உங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை அப்படித்தானே?

இல்லை. அணுமின் நிலையங்களை எங்கு அமைப்பதையும் எதிர்க்கிறோம்.

எங்கு அமைப்பதையும் எதிர்க்கிறீர்களா? அணுமின் திட்டம் என்பது ஒரு தொழில்நுட்பம். அதை எதிர்ப்பது என்பது நம்மைப் பழைய காலத்திற்குத் தள்ளிவிடாதா?

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி! ஒரு தொழில்நுட்பத்தையே எதிர்ப்பது என்பது நம்மைப் பழைய காலத்திற்குத் தள்ளிவிடும் தான்! அதே வேளை அத்தொழில்நுட்பத்தால் ஏற்படும் பின்விளைவுகள் மனித குலத்தையே அழித்து விடும் என்றால் அப்படி ஒரு தொழில்நுட்பம் நமக்குத் தேவையா எனச் சிந்திக்க வேண்டும் அல்லவா? எனவே, அத்தொழில்நுட்பத்தால் ஏற்படும் பின்விளைவுகளை எதிர்கொண்டு மக்களைக் காப்பாற்றுவது எப்படி என்பதைக் கண்டறிந்த பிறகு அதைப் பயன்படுத்தலாம் என்று தான் சொல்கிறோம்.

அதனால் தான், மக்கள் நடமாட்டம் குறைவான கூடங்குளம் பகுதியில் அணு உலைகளை அரசு நிறுவியிருக்கிறது. அதையும் வேண்டாம் என்றால் என்ன சொல்வது?

மக்கள் நடமாட்டம் குறைவான பகுதியில் இல்லை; மக்கள் நடமாட்டமே இல்லாத பகுதியில் தான் அணு உலைகள் நிறுவப்பட வேண்டும். இதை நாம் சொல்லவில்லை; தமிழக அரசின் அரசின் அரசாணை எண் 828 (29.4.1991 – பொதுப்பணித்துறை) சொல்கிறது.

இவை தவிர்த்து உலகம் முழுக்கப் பின்பற்றப்பட்டு வரும் கீழ்க்காணும் விதிகளும் கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தில் முறையாகப் பின்பற்றப்படவில்லை.

அ) AERB எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி ஐந்து கி.மீ. சுற்றளவுக்குள் இருபதாயிரம் பேருக்கு மேல் வசிக்கக்கூடாது. ஆனால் அணுமின் நிலையத்திலிருந்து பத்து கி.மீ தொலைவிற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் இருபதாயிரம் மக்களும், இடிந்தகரை கிராமத்தில் பன்னிரண்டாயிரம் பேரும் காசா நகரில் நானூற்று ஐம்பது குடும்பங்களும் வசிக்கிறார்கள்.

ஆ) பத்து கி.மீ சுற்றளவுக்குள் மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்குக்குக் குறைவாகவே மக்கள் இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியை விட மிக அதிகமான மக்கள் இந்தப் பகுதியில் நெருக்கமாக வாழ்கிறார்கள்.

இ) முப்பது கி.மீ சுற்றளவுக்குள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால் இரண்டு இலட்சம் பேர் வாழும் நாகர்கோவில் நகரம் இருபத்தெட்டு கி.மீ தொலைவிற்குள் இருக்கிறது.

ஈ) இருபது கி.மீ சுற்றளவுக்குள் சுற்றுலாத் தலங்களோ வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது என்று AERB சொன்னாலும் உலகப்புகழ் பெற்ற கன்னியாகுமரி பதினைந்து கி.மீ சுற்றளவுக்குள் இருக்கிறது.

இப்படிக் கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து முப்பது கி.மீ சுற்றளவுக்குள் பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் அம்மக்களை வெளியேற்றுவதோ, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ, அவர்களுக்குத் தேவையான இருப்பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள் அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ நடைமுறையில் சிறிதும் இயலாத காரியமாகும்.

இவை தவிர,

  • உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்களிடம் பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை.
  • உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள் பற்றிய இரசிய அறிவியலாளர்களின் வருத்தங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை (’Site Evaluation Study’) மக்களுக்குத் தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கையும் (’Safety Analysis Report’) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, செய்தியாளர்களுக்கு என யாருக்கும் அளிக்கப்படவில்லை.

நீங்கள் சொல்வது போல் இருந்தால் உலகில் தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகள் பல, அணுமின் நிலையங்களை வைத்திருக்கக் கூடாது அல்லவா? ஆனால் அமெரிக்கா, இரசியா, பிரான்சு, சப்பான், செர்மனி எனப் பல நாடுகள் அணு மின் நிலையங்களை வைத்திருக்கின்றன என்று படிக்கிறோமே!

எங்கே இதையெல்லாம் படித்தீர்கள்?

என்ன இப்படிக் கேட்கிறீர்கள்? இரசியாவின் செர்னோபில் அணு விபத்து (நேர்ச்சி) பற்றிப் பாடப் புத்தகங்களிலேயே படித்திருக்கிறோம். கொஞ்ச நாட்களுக்கு முன் சப்பான் நாட்டில் புகுசிமாவில் அணு மின் நிலையம் நில நடுக்கம் வந்த போது பாதிக்கப்பட்டது எனச் செய்தித்தாள்களில் வந்தது.

அங்கெல்லாம் நடந்தது போல் இங்கு நடந்து விடக்கூடாது என்பதால் தான் அணு உலைகளே வேண்டாம் என்கிறோம்.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உலகில் செர்நோபில் விபத்திற்குப் பிறகு எல்லா நாடுகளும் அணு உலைகளை மூடியிருக்க வேண்டுமல்லவா?

கண்டிப்பாக. செர்நோபில் நேர்ச்சிக்குப் பிறகு இரசிய அரசு அணு உலைகள் அமைப்பதை நிறுத்திவிட்டது. அன்றைய சோவியத்து குடியரசுத் தலைவர் மிகைல் கார்ப்பசேவ், “செர்நோபிலில் நடந்ததை ஒரு குறிப்பிட்ட நாட்டில் நடந்த பேரழிவாகக் கொள்ள முடியாது. மாறாக, இது மொத்த உலகத்தையே பாதித்துள்ள விடயம்” என்று சொன்னார்.

திரும்பத் திரும்ப இரசியாவையே சொல்லாதீர்கள். அமெரிக்கா முதலிய பிற நாடுகள் அணு உலைகள் அமைப்பதில் என்ன செய்கின்றன? அதைச் சொல்லுங்கள்.

  • அமெரிக்காவில் 1979ஆம் ஆண்டிலிருந்தே எந்தப் புதிய அணு உலைகளும் கட்டப்படவில்லை.
  • புகுசிமா அணு உலை நேர்ச்சி நடந்த சப்பானில் மொத்தம் இருந்த 54 அணு உலைகளில் 37 உலைகளை மூடப்பட்டுள்ளன.
  • சுவிட்சர்லாந்து புது உலைகளைக் கட்டுவதையும் புதுப்பிப்பதையும் நிறுத்தி வைத்துள்ளது.
  • இத்தாலியிலும் அணுஉலைகள் மூடப்பட அந்நாட்டின் அரசு முடிவெடுத்துள்ளது.
  • செர்மனி 17 உலைகளைக் கலைப்பதை ஒத்திவைக்கலாம் என்று நினைத்திருந்தது. இப்போது அம்முடிவை உடனே எடுக்கலாம் என முடிவெடுத்திருக்கிறது.
  • சீனத்தில் புதிய அணு உலைகளுக்கான ஒப்புதல் நீக்கப்பட்டுள்ளது.
  • பிரான்சில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் மக்களுள் அறுபத்திரண்டு விழுக்காட்டுப் பேர் அணு உலைகளை மூட வேண்டும் என்று வாக்களித்திருந்தனர். பதினைந்து விழுக்காட்டு மக்கள் உடனடியாக மூட வேண்டும் என்று தெரிவித்திருத்திருந்தனர்.

எதில் தான் நேர்ச்சிகள் (விபத்துகள்) இல்லை? ஒரு பேருந்தில் போனால் கூடத்தான் அடிபடுகிறது; உயிரிழப்பு ஏற்படுகிறது. இப்படி நேர்ச்சிகளைப் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தால் எப்படி முன்னேறுவது?

ஒரு பேருந்து நேர்ச்சி என்றால் அதிக அளவு நூறு பேர் இறந்து போவார்கள். அத்துடன் பாதிப்பு முடிந்து விடும். ஆனால் அணு நேர்ச்சி என்பது அப்படி இல்லை. செர்நோபில் உலை வெடித்தவுடன் ஒன்பதாயிரம் பேர் தாம் இறந்து போனார்கள். ஆனால் அதன் தொடர்ச்சியாகக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் ஏறத்தாழப் பத்து இலட்சம் பேர் இறந்து போயிருக்கிறார்கள். அதாவது நேரடியாக இறப்போர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில்! தலைமுறை தலைமுறையாக இறப்போர் இலட்சக்கணக்கில்! இப்போது சொல்லுங்கள் – அணு உலை என்பது உயிருக்கு உலை தானே?

அப்படியே விபத்து என்றாலும் ஆழிப்பேரலை (சுனாமி)யோ நிலநடுக்கமோ வரும்போது தானே!

அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது. அமெரிக்காவின் மூன்று மைல் அணு நேர்ச்சியும் செர்நோபிள் அணு நேர்ச்சியும் நேரக் காரணம் இயக்கத்தில் நடந்த கோளாறும் மனிதத்தவறுகளும் தாம்! அங்கு ஆழிப்பேரலையும் வரவில்லை; நிலநடுக்கமும் வரவில்லை.

ஏற்கெனவே ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு மணி நேரம் மின்வெட்டு இருக்கிறது. இப்போது இந்தத் திட்டத்தின் மூலம் மலிவான விலையில் மின்சாரம் கிடைக்கும் என்கிறார்கள். அதையும் போராடி நிறுத்தி விட்டீர்கள் என்றால் மின்சாரத்திற்கு என்ன செய்வது?

இந்தத் திட்டத்தால் மலிவு விலையில் மின்சாரம் கிடைக்கும் என்பதெல்லாம் வெற்றுக் கட்டுக் கதைகள் தாம்!

மலிவு விலையில் அணு மின்சாரம் என்று அரசு சொல்கிறது. நீங்கள் அது கட்டுக்கதை என்று சொல்கிறீர்கள். எப்படி என்று ஏதாவது புள்ளிவிவரம் கொடுக்க முடியுமா?

வரும் 20 ஆண்டுகளில் அணு மின்னாற்றலின் அளவை 6 விழுக்காடாகக் கூட்ட வேண்டுமானால் அதற்கு தேவைப்படும் முதலீடு மட்டும் ஐம்பதாயிரம் கோடி உரூபா ஆகும். இப்போது சூரியஆற்றல், காற்றாலை போன்ற முறைகளுக்கு அரசு ஒதுக்கும் தொகை வெறும் அறுநூறு கோடி உரூபா தான். அதிலேயே அவை ஐந்து விழுக்காட்டு அளவு மின்சாரத்தைத் தந்து விடுகின்றன. இப்போது அணு ஆற்றலுக்கு அரசு ஒதுக்கும் தொகை 3897 கோடி உரூபா. ஆனால் அவை தருவது 2.5 விழுக்காட்டு அளவு மின்சாரம் தான். ஒரு மெகா வாட்(டு) மின்சாரத்தை அணு ஆற்றலின் மூலம் உருவாக்க ஏறத்தாழ இருபத்திரண்டு கோடி உரூபா செலவாகும். ஆனால் சூரிய ஒளி மூலம் அதே அளவு மின்சாரத்தைப் பதினைந்து கோடியில் உருவாக்கிவிடலாம்.

நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை என்றால் கல்பாக்கம் அணுமின்நிலையத்தைச் சுற்றி உள்ள மக்களுக்கு உடல் நலத்தில் பாதிப்பு வந்திருக்க வேண்டுமே?

நல்ல கேள்வி!

ð கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்களுடைய குடும்பத்தினருக்கு ‘மல்டிபிள் மைலோமோ’ என்னும் எலும்பு மச்சைப் புற்றுநோய் இறப்புவீதம் அதிகம் இருக்கிறது.

ð அப்பகுதியில் உள்ள மீனவப் பெண்கள் ‘ஆட்டோ இம்யூன் தைராய்டு’ என்னும் தைராய்டு சுரப்பியைப் பாதிக்கும் நோய் பற்றிய புள்ளி விவரங்கள் வெளிவந்திருக்கின்றன.

ð அணு உலையைச் சுற்றி ஐந்து கி.மீ. சுற்றளவுப் பகுதிகளில் (சதுரங்கப் பட்டினம் போன்ற பகுதிகளில்) தைராய்டு புற்று நோய் இறப்பு வீதம் பற்றிய புள்ளி விவரங்கள் ஆகியன அதிர்ச்சியான உண்மைகளை வெளிக்கொண்டு வந்தன. தைராய்டு புற்றுநோய்க்கு அணு உலையில் இருந்து வெளியேற்றப்படும் அயோடின் 131 என்னும் வாயுக்கழிவே காரணம் ஆகும்.

ð இப்புள்ளிவிவரங்கள் அனைத்தும் மருத்துவர் வீ. புகழேந்தி 2003, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் ஆகும். இவற்றில் எந்த அறிக்கையையும் கல்பாக்கம் அணு உலை நிருவாகம் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுடன் ஒப்பந்தம் போட்டு வரும் திட்டத்தில் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதைக் கெடுக்கப் பார்க்கிறீர்களே!

நாலு பேருக்கு வேலை கிடைக்க, நானூறு பேர் தங்கள் வேலையை இழப்பார்கள். அப்படிப்பட்ட திட்டம் நமக்குத் தேவையா?

எப்படி நானூறு பேர் வேலை இழப்பார்கள் எனச் சொல்கிறீர்கள்?

தாராப்பூர் (மும்பை) அணு உலை தொடங்கிய போது அந்தக் கிராமத்தில் மொத்தம் எழுநூறு மீன்பிடி படகுகள் இருந்தன. இன்று அங்கு வெறும் இருபது படகுகள் தாம் இருக்கின்றன. மீன்பிடித் தொழில் அழிந்து போனதால் அங்கிருந்த மீனவர்கள் அனைவரும் தினக்கூலிகளாக வேறு தொழில் பார்த்துப் போய்விட்டார்கள். கல்பாக்கம் அணு உலை கடலில் கலக்கவிடும் ‘குளோரினால்’ மீன்வளம் வெகுவாகக் குறைந்து வருகிறது. ‘சிங்க இறால்’ போன்ற மீன் வகைகள் வேகமாக அழிந்து வருகின்றன. இதே நிலை தான் நாளை கூடங்குளத்திலும் நடக்கும். மிகப்பெரிய மீன் பிடி மையமாகத் திகழும் தமிழகத்தின் தென்பகுதியில் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் மீன்கள், கடல் உயிரினங்கள் ஆகியவற்றால் வணிகம் நடந்து வருகிறது. இது அப்படியே நசிந்து போகும். பேச்சிப்பாறை அணையில் இருந்து கூடங்குளம் அணு உலைக்கு நீர் எடுக்கும் நிலையில் அந்த அணையை நம்பி வேளாண் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான வேளாண் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விடும். இப்போது சொல்லுங்கள் –சிலர் வாழ, பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வாழ்க்கையையே இழந்து நாடோடி வாழ்க்கை நடத்த வேண்டி வரும். இது தேவையா?

chernobyl_child_370அப்படி என்ன உடல் நலக்குறைவு கதிர்வீச்சால் ஏற்பட்டு விடும் என்கிறீர்கள்?

கதிரியக்கத்தின் பாதிப்பு நம் உடலின் மற்ற பகுதிகளை விட, குழந்தைப் பேறு சார்ந்த உறுப்புகள் மீது தான் அதிகமாக இருக்கும். கதிரியக்கம் விந்து, சினை முட்டைகளை எளிதாகத் தாக்கி அவற்றின் தன்மையை மாற்றிவிடும். அதனால் கருச்சிதைவுகள், குறைமாதப் பிறப்பு, பிறவிக் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள் எனப் பல பாதிப்புகள் ஏற்படும். தைராய்டு புற்றுநோய், தோல் புற்று நோய், குருதி சார்ந்த புற்றுநோய் எனப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டோருக்கு மிக அதிகம்.

அணுமின்நிலையம் வேண்டாம் என்று தமிழ்நாட்டில் மட்டும் தானே போராடிவருகிறீர்கள்? இந்தியாவின் மற்ற மாநிலங்கள் எல்லாம் அமைதியாகத் தானே இருக்கின்றன?

ð அணு உலைகள் பாதுகாப்பானவை என்று சொல்லிவந்த அமைச்சர்களை மராட்டியத்தில் உள்ள மக்கள் புகுசிமாவிற்கு அனுப்ப முடிவு செய்தனர்.

ð அதற்கான போக்குவரத்துக் கட்டணத்தைத் தலைக்கு ஒரு உரூபா வாங்கிச் சேர்த்து, காசோலைகள் அமைச்சர்களுக்கு அனுப்பப்பட்டன.

ð குசராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் கட்சிப்பாகுபாடு இல்லாமல் அமெரிக்கா நிறுவும் அணு உலையை எதிர்த்து வருகிறார்கள். அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை மூவர் உயிரை விட்டிருக்கிறார்கள்.

ð அரியானா மாநிலத்தின் பத்தேபாத்தில் மக்கள் தொடர் போராட்டம், பட்டினிப் போராட்டம் எனப் போராடிவருகிறார்கள்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களே கூடங்குளம் அணுமின்திட்டம் வேண்டும் என்கிறாரே!

‘அணுமின் திட்டம் வேண்டும்’ என்று சொல்வதற்கு அவர் என்னென்ன காரணங்கள் சொல்கிறார்?

23) அன்றாடம் செய்தித்தாள்களைப் படித்தாலே அவருடைய கருத்துகள் உங்களுக்குப் புரிந்திருக்கும். சரி! இருந்தாலும் சொல்கிறேன்.

  • அணு மின்சாரம் மலிவானது.
  • கூடங்குளம் அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது.
  • அணுக்கழிவுகளை எட்டாண்டுகள் வரை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • சப்பானின் புகுசிமா அணு நேர்ச்சியில் ஒருவர் கூடச் சாகவில்லை.
  • நீங்கள் பெரிதாகப் பேசும் செர்நோபிள் அணு நேர்ச்சியில் ஐம்பத்தேழு பேர் தாம் இறந்தார்கள்.
  • யுரேனியம் கிடைக்காமல் தான் செர்மனி அணு உலைகளை மூடுகிறதே தவிர, புகுசிமா நேர்ச்சியால் ஏற்பட்ட அச்சத்தால் ஒன்றும் இல்லை.

என்று உங்கள் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் நெற்றியடி அடித்துச் சொல்லியிருக்கிறார். அப்படிச் சொல்லியும் உங்களுக்குப் புரியவில்லையா?

முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் கருத்துகளை நன்றாக ஊன்றிப் படித்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் அக்கருத்துகளையே ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1.கலாம்: அணு மின்சாரம் மலிவானது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறும் இக்கணக்கானது, ‘ஒரு கிராம் யுரேனியத்தின் விலையால் அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவை வகுத்துச் சொல்வதாகும்’. ஆனால் அணு மின்சாரத்தைக் கணக்குப் போடும்போது கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை:

ð அணு உலைகளுக்குச் செய்யப்படும் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஆகும் செலவு. (இதுவே பிற முறைகளுக்கு ஆகும் செலவை விடப் பல நூறு மடங்கு அதிகம்)

ð அணு உலையை ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்குப் பின் பிரித்துக் கலைத்துவிடவேண்டும். இப்போது கூடங்குளத்திற்குப் பதின்மூன்றாயிரம் கோடி உரூபா செலவாகியிருப்பதாக அரசு சொல்கிறது. இவ்வுலையைப் பிரிக்க இன்றைய கணக்கில் இருபதாயிரம் கோடி உரூபா ஆகும் என்று அரசு கூறி வருகிறது. (அப்படியானால் இன்னும் முப்பதாண்டுகளில் அத்தொகை ஐம்பதாயிரத்தில் இருந்து அறுபதாயிரம் கோடி உரூபா தேவைப்படும்.). ஆகக் கூடங்குளத்திற்கு ஆகப்போகும் தொகை (கட்டுவதற்கும் பிரிப்பதற்கும் மட்டும்) ஏறத்தாழ எண்பதாயிரம் கோடி உரூபா.

ð அணு மின்சாரம் மலிவாகக் கிடைக்கும் ஒன்று என்றால் “Wall street நிறுவனங்கள் அணு உலைகள் அமைக்க உதவ மாட்டோம்” (“Wall street does not vote for Nuclear Industries”) என ஏன் சொல்கிறார்கள்?

ð நாட்டின் அணுஆற்றல் துறையை அரசு ‘அலுவல் கமுக்கச் சட்டத்தின்’ (‘Official Secret Act’) கீழ் பாதுகாத்து வருகிறது. எனவே அங்கு எவ்வளவு செலவழிக்கப்பட்டுள்ளது என்பது மக்களுக்குச் சொல்லப்பட மாட்டாது. கதை இப்படியிருக்க, அணு மின்சாரம் மலிவானது என்று எந்தக்கணக்கில் கூறுகிறார்கள்?

2. கலாம்: கூடங்குளம் அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது.

ð இக்கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதாக வைத்துக்கொள்ளுங்கள். இந்திய அரசு, இரசிய அரசுடன் சிறப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இவ்வொப்பந்தத்தின் படி, கூடங்குளம் அணு உலையில் நேர்ச்சி ஏதும் ஏற்பட்டால் இந்த அணு உலையை நிறுவியிருக்கின்ற “ஆடம்சுதுரோயெக்சுபோர்ட்டு” (“Atomstroyeksport”) நிறுவனத்தின் மீது யாராலும் வழக்குத் தொடர முடியாது. இந்த ஒப்பந்தத்தின் பெயர் தான் ‘அணு உலை நேர்ச்சி இழப்பீட்டு ஒப்பந்தமாகும்’. அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது என்றால் இந்த ஒப்பந்தம் எதற்கு?

ð அணு உலைகள் பாதுகாப்பானவை என்றால், பெரும்பாலான தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் ஏன் அணு உலைகளைக் காப்பீடு செய்ய முன்வருவதில்லை?

ð மற்ற எரிபொருள் ஆற்றல் தொழில்களைக் காட்டிலும் அணு ஆற்றல் தொழிலுக்கு ‘Wall Street’ வங்கிகள் ஏன் கூடுதல் வட்டி வாங்குகின்றன?

3.கலாம்: அணுக்கழிவுகளை எட்டாண்டுகள் வரை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ð கழிவுகளைப் பாதுகாக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்வோம். அப்படியானால் இரசியா ஏன் (முன்பு ஒப்புக்கொண்டதற்கு மாறாகக்) கழிவுகளை எடுத்துச் செல்ல முடியாது எனக் கைவிரிக்கிறது?

ð அணுக் கழிவுகள் என்று சொல்வது ஏதோ நம்முடைய வீட்டில் இருந்து கொட்டும் சமையல் கழிவுகளைப் போல என எண்ணி விடாதீர்கள். அணுக்கதிர் தனிமமான புளூட்டோனியத்தின் ஒரு கிராமில் பத்து இலட்சத்தில் ஒரு பகுதியே புற்றுநோயை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்தக் கழிவு இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்குக் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும்.

ð இரண்டு இலட்சம் ஆண்டுகள் (சரி! வெளியில் பேசப்படுகிற இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் என்று கூட வைத்துக்கொள்ளுங்கள்). இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொருளை எட்டாண்டுகள் மட்டும் பாதுகாத்துவிட்டு அதன் என்ன செய்யப் போகிறோம்?

ð அணுக்கழிவை நிலநடுக்கமும் நீர் ஒட்டும் வாய்ப்பும் அறவே இல்லாத யூக்கா மலையில் ஆழப் புதைக்கும் திட்டத்திற்குப் பல்லாயிரம் கோடிச் செலவழித்த பிறகு, அதுவும் பெரிய தீங்கு விளைவிப்பது தான் என அமெரிக்கா அந்தத் திட்டத்தைக் கைவிட்டது ஏன்?

4.கலாம்: சப்பானின் புகுசிமா அணு நேர்ச்சியில் ஒருவர் கூடச் சாகவில்லை.

ð ஒருவர் கூடச் சாகாத புகுசிமா நேர்ச்சிக்கு ஏன் ‘நேர்ச்சி அளவு: ஏழு’ என உச்ச அளவு சொல்லப்பட்டது?

ð ‘செர்நோபிளைப் போல இருபது மடங்கு கதிர்வீச்சு வெளிப்பட்டுள்ளது’ என அமெரிக்காவில் அணுத் தொழிலில் துணைத்தலைவராக இருந்த அர்னாடு கண்டர்சன் என எப்படிச் சொன்னார்? (http://www.aljazeera.com/indepth/features/2011/06/201161664828302638.html)

ð ஒருவர் கூடச் சாகவில்லை என்றால் ஏன் சப்பான் அரசு தன்னுடைய நாட்டில் அணு உலைகளை நிறுவுவதை உடனடியாக நிறுத்தி வைத்துள்ளது ஏன்?

ð ஒருவர் கூடச் சாகாத ‘சிறிய’ நேர்ச்சிக்குச் சப்பான் அரசு ஏன் அங்கு வாழ்ந்து வந்த எழுபதாயிரம் பேரை உடனடியாக வெளியேற்றியது?

ð புகுசிமாவில் பயிரான நெல்லை ஏற்றுமதி செய்யக்கூடாது எனச் சப்பான் அரசு ஏன் தடை விதித்தது? (http://www.dnaindia.com/world/report_japan-bans-shipment-of-rice-harvested-in-fukushima-after-high-cesium-level-detected_1619606)

5.கலாம்: நீங்கள் பெரிதாகப் பேசும் செர்நோபிள் அணு நேர்ச்சியில் ஐம்பத்தேழு பேர் தாம் இறந்தார்கள்.

ð இரண்டாம் உலகப் போரின் போது சப்பானின் இரோசிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதில் எத்தனைப் பேர் இறந்தார்கள்? அதன் பிறகு எத்தனைக் குழந்தைகள் ஊனமாக, மனவளர்ச்சி குன்றியதாக எனப் பல்வேறு குறைகளுடன் தொடர்ந்து பிறந்திருக்கின்றன என்பது நீங்கள் அன்றாடம் செய்தித்தாள் வாசிப்பவராக இருந்தாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதைப் போல நூறு மடங்கு கதிர்வீச்சைச் செர்நோபில் அணு விபத்து வெளிப்படுத்தியது என்றால் எவ்வளவு பெரிய அவலம் நடந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.

ð ஐம்பத்தேழு பேர் இறந்து போவது என்பது ஒரு பேருந்து நேர்ச்சியைப் போலத்தான்! அப்படியானால் அதை ஏன் ஆசியாவின் பெரிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘சுற்றுச்சூழலியல்’ துறை பாடத்திட்டத்தில் வைத்துப் பொறியியல் மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறார்கள்? கலாம் அவர்களே அப்பல்கலைக்கழகத்தில் சில காலம் பேராசிரியராகப் பணியாற்றினாரே!

ð செர்நோபிள் நேர்ச்சியால் ஒன்பது இலட்சத்து எண்பத்தைந்தாயிரம் பேர் இறந்து போனார்கள் என்று இரசிய அரசு அறிக்கையே சொல்கிறது. (இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ‘Chernobyl: Consequences of the Catastrophe for People and the Environment’ என்னும் அறிக்கையைப் படித்துப் பாருங்கள்).

ð செர்நோபிள் நேர்ச்சியால் செர்நோபிளைத் தாண்டி ஐரோப்பாவில் 1 இலட்சம் சதுர கி. மீ. நிலம் வேளாண்மை செய்ய முடியாத அளவு மாசுபட்டுள்ளது.

6.கலாம்: யுரேனியம் கிடைக்காமல் தான் செர்மனி அணு உலைகளை மூடுகிறதே தவிர, புகுசிமா நேர்ச்சியால் ஏற்பட்ட அச்சத்தால் ஒன்றும் இல்லை.

ð செருமன் நாட்டின் அதிபர் (சான்சலர்) ஆங்கெலா மார்க்கெல் நம்முடைய தலைமையமைச்சர் மன்மோகன்சிங்கைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே ‘சப்பான் நேர்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட எதிர்ப்பால் தான் அணு உலைகளை மூடுகிறோம்’ என்று சொல்லியிருக்கிறார். இது கலாம் அவர்களுக்குத் தெரியாதா?

ð யுரேனியம் கிடைக்காமல் தான் செருமனி அணு உலைகளை மூடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் நம்முடைய நாட்டில் யுரேனியம் கிடைக்கிறதா? இல்லையே! இந்த யுரேனியத்தை இறக்குமதி செய்வதற்குத் தானே மன்மோகன் அரசு அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தத்தைச் செய்துள்ளது!

ð யுரேனியத்தை நம்முடைய நாட்டிற்கு இறக்குமதி செய்ய முன்வந்துள்ள ஆசுதிரேலியாவில் ஓர் அணு உலை கூடக் கிடையாது! ஏன்?

அப்படியானால் அப்துல் கலாமும் காசு வாங்கிக் கொண்டு நம்மை ஏமாற்றுகிறார் என்று சொல்கிறீர்களா?

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நாடு போற்றுகிற ஒரு தலைவர். இளைஞர்கள் பலர் அவரை முன்னோடியாகக் கொண்டு இயங்கிவருகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் நம்முடைய பகுதியைச் சேர்ந்தவர்; தமிழ்வழியில் படித்தவர்; ஏழை மீனவக் குடும்பத்தில் இருந்து இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தவர்; எளிமையானவர் என்று பெயர் பெற்றவர். இவ்வளவு புகழ் பெற்ற ஒருவர் காசு வாங்கிக்கொண்டு ஏமாற்றுகிறார் என்றெல்லாம் கண்மூடித்தனமாக நாங்கள் சொல்லவில்லை; சான்றுகள் எவையும் இன்றி அப்படிச் சொல்வது பொருத்தமும் இல்லை. அப்துல் கலாம் ஆனாலும் சரி! அன்னை தெரசாவானாலும் சரி! அறிஞர் அண்ணாவானாலும் சரி! ‘சரி என்றால் சரி என்று சொல்வோம்! தவறென்றால் தவறு என்று சொல்வோம்!’ ‘நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே!’ என்றல்லவா தமிழ் நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது! முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு கலாம் அவர்கள், செல்லும் இடமெல்லாம் திருக்குறள் சொல்லும் இயல்புடையவர். அந்தத் திருக்குறள்

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் கேட்ப(து) அறிவு” என்று தானே நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது! ஆக, ஒரு கருத்தைக் கலாம் சொன்னாலும் சரி, யார் சொன்னாலும் சரி, ‘மெய்ப்பொருள் காண்பது’ நம்முடைய கடமையாகிறது அல்லவா?

நீங்கள் சொல்வது எல்லாம் சரி என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம். உங்கள் போராட்டத்தை அறிஞர்களுள் ஒருவராவது ஆதரிக்கிறாரா?

புகழ்பெற்ற அணுவியலாளர்களுள் ஒருவராகத் திகழும் முனைவர் பரமேசுவரன் (பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம்), சப்பான் (புகுசிமா) அணுமின் திட்டத்தில் பணியாற்றிய முனைவர் யமுனா, பேராசிரியர் வி. சிவசுப்பிரமணியன், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் முனைவர் டி.டி. அசித்குமார் என அடுக்கிக்கொண்டே போகலாம். (http://www.dnaindia.com/india/report_top-indian-scientists-to-launch-nation-wide-protest-for-ban-on-nuclear-plants_1600845-all)

நீங்கள் சொல்வதை எல்லாம் பார்க்கும் போது கூடங்குளம் அணு உலையை எதிர்க்க வேண்டும் என்று தான் தோன்றுகிறது. ஆனால் அங்கு போராடுபவர்களுக்கு (கூடங்குளம் திட்டத்தில் இரசியாவின் பங்கு இருப்பதால்) அமெரிக்கா பணம் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். அதை எப்படி ஏற்றுக்கொள்வது?

கூடங்குளத்தில் மக்கள் சாதி, மதம், கட்சி என எல்லாவற்றையும் தாண்டி ஒற்றுமையாக அரசை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். அதை ஒடுக்க விரும்பும் அரசே இது போன்ற பொய்ச்செய்திகளைப் பரப்புவது வருத்தப்பட வேண்டியது மட்டுமில்லை; வெட்கப்பட வேண்டியதும் ஆகும்.

அரசு பொய் சொல்கிறது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

ð இப்போராட்டத்தை நடத்துபவர்கள் அமெரிக்கத் துணையுடன் அமைக்கப்பட்டுள்ள தாராப்பூர் அணு உலை, பிரான்சு துணையுடன் அமையும் செய்தாப்பூர் அணு உலை ஆகியவற்றையும் சேர்த்தே எதிர்த்து வருகிறார்கள். தன்னுடைய துணையுடன் அமைந்துள்ள உலைகளை எதிர்ப்பவர்களுக்குக் காசு கொடுத்து அமெரிக்கா வளர்த்துவிடுமா? இது சொந்தக் காசில் ‘சூனியம்’ வைத்துக்கொள்வது போல் அல்லவா ஆகிவிடும்?

ð ஏற்கெனவே இப்போராட்ட வரலாற்றை உங்களுக்குச் சொல்லிவிட்டேன். இருபத்தைந்து ஆண்டுகளாக நடந்து வரும் போராட்டம் இன்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அவ்வளவு தான்! அமெரிக்கா தான் இப்போராட்டத்தைத் தூண்டுகிறது என்று சொன்னால் பாபா அணு ஆராய்ச்சி நிறுவன அறிவியலாளர் முனைவர் பரமேசுவரன், இசையமைப்பாளர் இளையராசா, நடிகர் நாசர், முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டசு (அமெரிக்காவின் கோககோலா நிறுவனத்திற்கு இந்தியாவில் தடை விதித்தவர் இவர்!) ஆகியோருக்கு இருபத்தைந்து ஆண்டுகளாக அமெரிக்கா பணம் கொடுத்து வருகிறது என்று பொருளாகிறது. ‘கேட்பவன் கிறுக்கனாக இருந்தால் கேப்பைச் சட்டியில் நெய் வடிகிறது என்று சொல்வதையும் நம்புவான்’ என்று ஊர்ப்புறத்தில் பழமொழி ஒன்று உண்டு. அரசு நம்மைக் கோமாளியாக்குவதுடன் தானும் வழிதவறிச் செல்கிறது.

சரி! கூடங்குளம் அணு உலை கூடவே கூடாது என்னும் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். அப்படியானால் மின்வெட்டைத் தீர்க்க என்ன தான் வழி?

மின்வெட்டை ஒரு நாளும் அணு மின்சாரம் தீர்த்துவிடாது. 1962ஆம் ஆண்டே, ‘இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளில் நாங்கள் 20000 மெ.வா. மின்சாரத்தை அணு உலைகள் வழியாக உற்பத்தி செய்து விடுவோம்’ என்று சொன்னார்கள். ஆனால் 1987ஆம் ஆண்டு ஆயிரம் மெ.வா கூடக் கிடைக்கவில்லை. அதன்பின் இரண்டாயிரமாவது ஆண்டில் நாங்கள் மொத்தத் தேவையில் பத்து விழுக்காட்டு அளவுக்கு மின்சாரம் உருவாக்கி விடுவோம் என்றார்கள். ஆனால் மூன்று விழுக்காட்டைக் கூட எட்டவில்லை. எனவே கூடங்குளம் அணு உலை நமக்கு மின் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் என்பது ஏட்டுச்சுரைக்காய் தான்! அது கறிக்கு உதவாது.

சரி! மாற்று என்ன? அதற்கு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா?

ð தமிழகத்தில் குண்டு விளக்குகளுக்கு(‘பல்பு’) மாற்றாக சி.எப்.எல் (‘’CFL’) விளக்குகளைப் பொருத்தினால் ஒரே நொடியில் 1800 மெ.வா. மின்சாரம் மிச்சமாகும்.

ð தமிழ்நாட்டில் கயத்தாற்றில் இருந்து கன்னியாகுமரி வரை நிறுவப்பட்டுள்ள காற்றாலைகள் மூலம் நாம் நாள் ஒன்றுக்கு 3200 மெ.வா மின்சாரம் பெறுகிறோம். இந்தியாவில் இது போல் காற்றடிக்கும் கடற்கரை குசராத்து முதல் வடகிழக்கு வரை ஏழாயிரத்து ஐந்நூறு கி.மீ. நீளத்திற்கு உள்ளது. அங்கும் காற்றாலைகள் நிறுவினால் பல்லாயிரக்கணக்கான மெ.வா. மின்சாரம் பெற முடியும்.

ð இன்றுள்ள காற்றாலைகள் 11-14 கி.மீ வேகத்தில் காற்றடித்தால் சுழல்கின்றன. இவற்றை ஆய்ந்து 4-5 கி.மீ வேகத்தில் காற்றடித்தாலே இயங்கும் வகையில் காற்றாலைகள் அமைக்கலாம் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.

ð ஒரு ச.கி.மீ. பரப்பளவில் சூரியத் தகடுகளைப் பொருத்தினால் நாள் ஒன்றுக்கு 35 மெ.வா. மின்சாரம் பெற முடியும்.

ð நம் நாட்டில் உள்ள தார் பாலைவனத்தில் 5000 ச.கி.மீ பரப்பளவில் (5000 * 35 = 175000 மெ.வா.) சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற முடியும்.

ð தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரில் இருந்து எரிவாயு உருவாக்கப்பட்டு மின்சாரம் பெறப்படுகிறது. இருபது இலட்ச உரூபா முதலீட்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் மாதம் ஓர் இலட்ச உரூபா அளவுக்குப் பணம் மிச்சமாகிறது.

ð இதே போல் ஒவ்வொரு மாவட்டத் தலைநகர், நகராட்சிகள், பேரூராட்சிகள் என எங்கெல்லாம் கழிவுநீர் அரசால் சேர்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் ‘கழிவு நீர் மேலாண்மை’ மூலம் மின்சாரம் பெற முடியும். ஏறத்தாழ ஐந்து மெ.வா. மின்சாரத்தை ஒவ்வொரு நகராட்சியில் இருந்தும் நம்மால் பெற முடியும். இப்படிச் செய்வதன் மூலம் நகர்ப்பகுதிகளில் மின்வெட்டை உடனடியாகக் குறைக்கலாம்.

- முத்துக்குட்டி ( muthukutti@zoho.com)

தொகுப்புக்குத் துணை நின்ற படைப்புகள்:

  1. அணு உலைகள் குறித்து, கீற்றில் வெளியான படைப்புகள் அனைத்தும்
  2. ‘கூடங்குளம் பொய்யைப் பிளந்து வாழ்வைக் காக்கும் போர்’, அ.முத்துக்கிருட்டினன், உயிர்மை, 2011 திசம்பர் இதழ்
  3. ‘கூடங்குளம்: கலாம் சொல்வதெல்லாம் உண்மை தானா?’, அ.மார்க்சு, குமுதம் தீராநதி, 2011 திசம்பர் இதழ்
  4. ­www.dianuke.org இணையத்தளத்தின் சில கட்டுரைகள்
  5. ‘அப்துல் கலாமுக்குச் சில கேள்விகள்’, மாலெ தீப்பொறி, 2011 திசம்பர் தொகுதி 10, இதழ் 5

‘மாற்றுவழியில் மின்சாரம்’, நெல்லை கவிநேசன், கோகுலம் கதிர், 2011 திசம்பர் இதழ்

நன்றி - கீற்று.