Thursday, December 22, 2011

வயதான தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்வு : ஜெயலலிதா உத்தரவு.

வயதான தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்வு: ஜெயலலிதா உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மொழி என்பது மனிதனை அடையாளப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகும். மொழி தானும் வளர்ந்து, தன்னை பயன்படுத்தும் மனிதனையும் வளர்க்கும் தனியாற்றல் பெற்றது.

எண்ணத்தின் வடிவமாகவும், நாகரிகத்தின் சின்னமாகவும் திகழும் மொழி, மனிதகுலத்தின் கருத்துப் பரிமாற்றத்துக்கு பயன்படுவதோடு மட்டுமல்லாமல் மனித சமுதாய இணைப்புக்கும் துணை செய்கின்றது.

நிலைத்த பழமையும் வளரும் புதுமையும் இரண்டறக் கலந்து வாழும் மொழி தமிழ்மொழி. அது நமது ஆட்சி மொழி.

தமிழ் மொழியின் வளர்ச்சியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தனி ஈடுபாடு கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

தமிழ் மொழியின் வளமை மற்றும் செழுமைக்கு முக்கிய காரணம், மொழியால் ஈடுபாடு கொண்டு, மொழிக்காக தன் வாழ்நாட்கள் முழுவதையும் அர்ப்பணித்த தமிழ் அறிஞர் பெருமக்களின் தன்னலமற்ற தொண்டே ஆகும்.

அத்தகைய தமிழ் அறிஞர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது.

இதன் அடிப்படையில், தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழ் இலக்கிய மேம்பாட்டிற் காகவும், அயராது பாடுபட்ட தமிழ் அறிஞர்களைப் போற்றும் வகையில், அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு, மாதம்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம், 1978-ம் ஆண்டு அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரால் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் தற்போது மாதந் தோறும் 1,000 ரூபாய் உதவித் தொகையாக அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

தமிழ் மொழி உயர்ந்து வாழ வேண்டும் மற்றும் மொழிக்காக தொண்டாற்றிய அறிஞர்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற நோக்கம் கொண்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் மற்றும் அவர்தம் மரபுரிமையர்களுக்கு தற்போது மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாய் நிதி உதவியை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட் டுள்ளார்கள்.

இதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 35 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: