Wednesday, December 28, 2011

பகவத் கீதைக்கு தடை விதிக்கக் கோரும் மனு : ரஷ்ய நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



இந்துக்களின் புனித நூலான பகவத் கீதைக்கு தடைவிதிக்கக் கோரும் மனுவை சைபீரிய நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முன்னதாக பகவத் கீதைக்கு தடை விதிக்கக் கோரி சைபீரிய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தி லும் இது தொடர்பாக அமளி ஏற்பட்டது.

இதையடுத்து ரஷ்ய தூதரை தொடர்புகொண்ட வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இந்த பிரச்னையை தீர்க்க இந்தியாவுக்கு உதவும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரும் உதவிசெய்வதாக உறுதி அளித்திருந்தார்.

இந்த நிலையில் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதைக்கு தடைவிதிக்கக் கோரும் மனுவை தள்ளுபடி செய்து சைபீரிய நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

லோக்பால் மசோதா வாக்கெடுப்பின்போது அவையில் இல்லாத 20 காங். எம்.பிக்கள் - ராகுல் காந்தி அதிர்ச்சி !



லோக்பால் மசோதா ஒருபக்கம் நிறைவேறினாலும் காங்கிரஸுக்கு நேற்று ஷாக் கொடுத்தது, அரசியல்சாசன அந்தஸ்து தரும் மசோதா தோல்வி அடைந்ததுதான். இதை காங்கிரஸ் எதிர்பார்க்கவில்லை. 273 உறுப்பினர்களைக் கூட திரட்ட முடியாமல் போனது ஒருபக்கம் இருந்தாலும், அந்தக் கட்சியைச் சேர்ந்த 20 உறுப்பினர்கள் அவைக்கு வராமல் இருந்தது காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று லோக்சபாவில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் அந்த அமைப்புக்கு அரசியல்சாசன அந்தஸ்து தர வகை செய்யும் மசோதாவை அரசால் நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது. இதற்குக் காரணம் அவையில் போதிய உறுப்பினர்கள் இல்லாமல் போனதே.

குறைந்தபட்சம் 273 உறுப்பினர்களாவது அவையில் இருக்க வேண்டும். ஆனால் நேற்று வெறும் 250 பேர்தான் இருந்தனர். இது காங்கிரஸை கடும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தி விட்டது. அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டது. எனவே ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக கொடி தூக்க ஆரம்பித்து விட்டது.

லோக்பால் அமைப்புக்கு அரசியல் சாசன அந்தஸ்து தரலாம் என்று ஐடியா கொடுத்ததே ராகுல்காந்திதான். அவரது ஐடியா எடுத்த எடுப்பிலேயே புஸ்வாணம் ஆனதால் அவரும் கடும் அதிருப்தியில் உள்ளார்.

நேற்று நடந்த வாக்கெடுப்பின்போது பகுஜன் சமாஜ், இடதுசாரிகள் உள்ளிட்ட சில கட்சிகள் வெளிநடப்புச் செய்தன. அதேசமயம், காங்கிரஸ் எம்.பிக்களில் கிட்டத்தட்ட 20 பேர் அவையில் இல்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தும் கூட இந்த 20 பேரும் அவையில் இல்லாமல் போனது காங்கிரஸ் மேலிடத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சி தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.

அரசியல் சட்ட திருத்த மசோதா தோல்வி - இது ராகுல் காந்திக்கு கிடைத்த படுதோல்வி !



மக்களவையில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டாலும் அதற்கு அரசியல் சாசன அந்தஸ்து தருவதற்காக கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. மத்திய அரசுக்கு இது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இதன் மூலம் அன்னா ஹசாரேவுக்கு கிட்டத்தட்ட அத்தனை அரசியல் கட்சிகளுமே எதிராக உள்ளதும் அம்பலமாகிவிட்டது.

லோக்பால் அமைப்புக்கு அரசியலமைப்பு சட்ட அந்தஸ்து தரும் திருத்த மசோதாவுக்கு 3 பிரிவுகளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டுமென்றால் அவையின் மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதம் பேர் அவையில் இருக்க வேண்டும். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் ஆதரிப்பது கட்டாயமாகும்.

ஆனால், இந்த திருத்த மசோதாவுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.

ஆட்சியில் நீடிக்க உரிமையில்லை-பாஜக:

அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டதால் ஆட்சியில் நீடிக்கும் உரிமையை மத்திய அரசு இழந்துவிட்டதாக பாஜக மூத்தஸ தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறினார்.

குறைந்தபட்சம் 273 வாக்குகளை கூட காங்கிரஸ் கட்சியால் பெற முடியவில்லை. அரசின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது. அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார்.

லோக்பால் அமைப்புக்கு அரசியல் சாசன அந்தஸ்து தரும் ஐடியாவைக் கொடுத்தவர் ராகுல் காந்தி என்பது நினைவிருக்கலாம். தேர்தல் ஆணையம் போல ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக லோக்பால் திகழ அதற்கு அரசியல்சாசன அந்தஸ்து தரப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். அதன்படியே இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால் இது தோல்வி அடைந்து விட்டது.

அதேசமயம், ஊழலை அம்பலப்படுத்துவோர் பாதுகாப்பு மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.