Tuesday, May 31, 2011

போர்க்குற்றத்தை நிரூபிக்க இலங்கை இறுதிக்கட்ட போர் வீடியோ ஆதாரம் உள்ளது; ஐ.நா. மனித உரிமைகள் கமிஷன் தகவல்.


இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் இறுதிக் கட்ட போர் நடந்தது. அப்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டனர்.

இப்போரின்போது, இலங்கை அரசு போர்க்குற்றம் இழைத்ததாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது. இதை இலங்கை அரசு மறுத்துள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ஒளிபரப்பாகும் சேனல்-4 என்ற டெலிவிஷன் இலங்கை ராணுவம் அப்பாவி தமிழர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொல்லும் 5 நிமிட காட்சிகளை ஒளிபரப்பியது.

அதில், தமிழ் ஆண்கள் மற்றும் பெண்களை நிர்வாணப்படுத்தி அவர்களின் கண்கள் மற்றும் கைகளை பின்புறம் கட்டி சுட்டுக் கொல்லும் காட்சிகள் பார்ப்பவர்களின் ரத்தத்தை உறைய வைத்தது. ஆனால் அக்காட்சி போலியானது. கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்டவை. இது போன்ற கொடுமைகளை ராணுவம் இழைக்கவில்லை என இலங்கை அரசு மறுத்தது.

ஆனால், அது உண்மையான வீடியோதான். “கிராபிக்ஸ்” தொழில்நுட்பம் அதில் பயன்படுத்தப்படவில்லை, என ஐ.நா.சபையின் மனித உரிமை கமிஷனின் புலனாய்வு பிரிவு நிபுணர் கிறிஸ்டோப் ஹெய்ன்ஸ் அறிவித்துள்ளார். இலங்கை போர்க்குற்றம் இழைத்துள்ளது என்பதற்கு இந்த வீடியோ காட்சிகளே நம்பத்தகுந்த ஆதாரம் என தெரிவித்துள்ளார். இவர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு : தயாநிதி மாறன் மீது பாரதீய ஜனதா குற்றசாட்டு.


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 2-ந்தேதி சி.பி.ஐ. தன் முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் ஆ.ராசா, சந்தோலியா, சித்தார்த் பெகுரா, ஷாகித் பல்வா ஆகிய நால்வரும் கூட்டுச் சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கடந்த மாதம் 25-ந்தேதி சி.பி.ஐ. தனது இரண்டாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், மும்பை சினி யுக் பிலிம்ஸ் நிறுவன இயக்குனர் கரீம் மொரானி, குசேகான் ரியாலிட்டி நிறுவனத்தின் ராஜீவ் அகர்வால், டி.பி.ரியாலிட்டி நிறுவனத்தின் ஆசீப் பல்வா ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. இதனைதொடர்ந்து அவர்களுக்கு “சம்மன்” அனுப்பப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களது முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சி.பி.ஐ. தரப்பில் 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அனேகமாக அடுத்த வாரம் 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பெயர்கள் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களின் பெயர்கள் இடம் பெற உள்ளது. அவர்கள் அனைவரும் சி.பி.ஐ. வலையில் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

இந்நிலையில் இன்று பா.ஜ.க. தெரிவித்துள்ள செய்தியில் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு தொடர்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் 2006-ல் குறிப்பிட்ட (தொலைக்காட்சி, தொலைபேசி )நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு உரிமம் பெற தயாநிதி மாறன் உதவியதாகவும், பின்னர் இந்த விவகாரத்தில் தயாநிதிமாறன் விளக்கமளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் தொலைத்தொடர்பு உரிமம் குறித்து தயாநிதி மாறனுக்கு சில கேள்விகளை பாஜக எழுப்பி உள்ளது.

இதையடுத்து 2006-ல் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு உரிமம் பெற ஆதரவாக இருந்ததாக தயாநிதி மாறன் மீது தெஹல்கா பத்திரிகை குற்றம் சாட்டியது. இதற்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் அப்பத்திரிக்கைக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

அதில் தெஹல்கா இதழின் கட்டுரையில் தயாநிதி மாறனுக்கு தவறான குற்றச்சாட்டுகளின் தொகுப்பு என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே தயாநிதி மாறனிடமிருந்து இதுவரை தங்களுக்கு நோட்டீஸ் எதுவும் வரவில்லை என தெஹல்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்பால் - பிரதமர், நீதிபதிகள், எம்பிக்களை விசாரிக்க மத்திய அரசு எதிர்ப்பு.


ஊழல் செய்யும் பிரதமர், நீதிபதிகள், எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் அவர்களையும் லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால், இந்த லோக்பால் சட்டம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.

லோக்பால் மசோதா வரைவுக் குழுவின் 5வது கூட்டம் அதன் தலைவரும் நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜி தலைமையில் நேற்று நடந்தது. இந்தக் குழுவில் பொது மக்கள் சார்பில் இடம் பெற்றுள்ள பிரதிநிதிகளான சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, கர்நாடக லோக் ஆயுக்தா தலைவர் சந்தோஷ் ஹெக்டே, சட்ட வல்லுனர்களான சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், தகவல் அறியும் சட்ட ஆர்வலர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் மத்திய அரசின் சார்பில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் கபில்சிபல், வீரப்பமொய்லி, ப.சிதம்பரம், சல்மால் குர்ஷித் ஆகியோர் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள், எம்.பிக்களை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது லோக்பால் வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள், எம்.பிக்களை கொண்டு வருவதற்கு அக்குழுவில் பொது மக்கள் சார்பில் இடம் பெற்றுள்ள பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் இதை மத்திய அரசு சார்பில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் எதிர்த்தனர்.

இந்த விவகாரத்தில் இரு தரப்பினர் இடையே கடைசி வரை ஒருமித்தக் கருத்து ஏற்படவில்லை. இதையடுத்து வரும் ஜூன் 6ம் தேதி மீண்டும் கூடி ஆலோசிப்பதென முடிவெடுக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அண்ணா ஹசாரே, பிரசாந்த் பூஷண், அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு ஏற்கெனவே வடிவமைத்த லோக்பால் மசோதாவைவிட இந்த மசோதாவை மோசமானதாக மாற்ற முயற்சிக்கிறது என்று கேஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே லோக்பால் வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள், எம்.பிக்களை கொண்டு வருவது குறித்து அனைத்து மாநில அரசுகள், அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் லோக்பால் மசோதா உருவாக்குவதை மேலும் இழுத்தடிக்க மத்திய அரசு முயல்வதாகத் தெரிகிறது.

அதே நேரத்தில் ஊழல் விவகாரத்தில் சிக்கும் அதிகாரிகளின் சொத்துக்களை முடக்குவது, பறிமுதல் செய்வது ஆகிய விஷயங்களில் லோக்பால் குழுவினருக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒருமனதான கருத்து நிலவுகிறது. மேலும் அவர்களது சொத்துக்களை ஏலம் விட்டு, ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழபபை ஈடுகட்டுவது என்ற லோக்பால் குழுவின் கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆனால், லோக்பால் சட்டத்தை ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற அன்னா ஹசாரேவின் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு தயங்கி வருகிறது. இதில் இழுத்தடிப்பு செய்தால் ஆகஸ்ட் 16ம் தேதி மீண்டும் எனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிப்பேன் என்று ஹசாரா எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லோக்பால் பிரதமரைக் கட்டுபடுத்தக் கூடாது-பாபா ராம்தேவ்:

பிரதமரையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவின் விசாரணை எல்லைக்குள் கொண்டுவரக் கூடாது என்று பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள செஹார் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராம்தேவ், லோக்பால் விசாரணை வளையத்துக்குள் பிரதமரையும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும் கொண்டு வருவது சரியாக இருக்காது.

இந்த விவகாரம் தொடர்பாக நான் சர்ச்சையை ஏற்படுத்த விரும்பவில்லை, பகிரங்கமாக விவாதம் செய்ய விரும்பவில்லை என்றார்.

ஹைகோர்ட்டில் ஜாமீன் மனு : தானே வாதாட ராசா திட்டம் !


ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக தான் பிரமதர் மன்மோகன் சிங்குக்கும், அவர் தனக்கு எழுதிய 18 கடிதங்களுடன் தானே வாதாடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இதையடுத்து ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுக ராசா முடிவு செய்துள்ளார். இது தொடர்பான மனுவை விரைவில் அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மனு மீது விவாதம் நடக்கும் போது தனது சார்பில் தானே ஆஜராகி வாதாட ராசா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ராசா அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாதத்தின்போது தாக்கல் செய்யவும், குறிப்பிட்டுப் பேசவும் சில முக்கிய ஆதாரங்களை அவர் திரட்டி வருகிறார். குறிப்பாக 18 முக்கிய கடிதங்களை அவர் நீதிமன்றத்தில் வாதாடுவார் என்று கூறப்படுகிறது.


இந்த 18 கடிதங்களும் 2007ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2010 ஜூலை வரையிலான காலகட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், ஆ.ராசாவுக்கும் இடையே பரிமாறி கொள்ளப்பட்ட கடிதங்களாகும். மேலும் இந்தக் கடிதங்கள் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடமும் ராசாவால் சமர்பிக்கப்பட்டுள்ளன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளை பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் அமைச்சரவை யின் ஒப்புதலின் பேரில் தான் மேற்கொண்டேன் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் இந்த 18 கடிதங்களையும் அவர் முக்கிய ஆதாரமாகக் காட்டக்கூடும் என்று தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் ஒதுக்கீடு செய்யும் போது நான் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை, அதற்கு உரிய அனுமதியைப் பெற்றிருந்தேன், எனவே நான் நிராபராதி என்று வாதாட ராசா தீர்மானித்துள்ளார்.

இவை தவிர ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோருக்கு தான் எழுதிய கடிதங்களையும் ராசா ஆதாரமாகக் காட்டக் கூடும் என்று தெரிகிறது.


ராசா இந்த வாதங்களை எடுத்து வைக்கும்போது மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படலாம்.


கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி கைது செய்யப்பட்ட ராசா 4 மாதங்களாக டெல்லி திகார் சிறையில் உள்ளார். ஸ்பெக்ட்ரம் வழக்கு நடக்கும்போதெல்லாம் அவர் பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடு்த்தவாரம் 3வது குற்றப்பத்திரிக்கை-மேலும் சிலருக்கு சிக்கல்:

இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்த வாரம் சிபிஐ தனது 3வது குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்யவுள்ளது. அதில் யார், யாருடைய பெயர்கள் இடம் பெறுமோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதலில் சென்னை, டெல்லி, பெரம்பலூரில் அதிரடி சோதனை நடத்திய சிபிஐ அதன் தொடர்ச்சியாக ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, தொலை தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குனர் ஷாகித் பல்வா ஆகியோரை கைது செய்தது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை தொகுப்புகளை கொண்டு, கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி சிபிஐ தன் முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் ஆ.ராசா, சந்தோலியா, சித்தார்த் பெகுரா, ஷாகித் பல்வா நால்வரும் கூட்டுச் சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந் நிலையில் கடந்த மாதம் 25ம் தேதி சிபிஐ தனது இரண்டாவது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் திமுக எம்.பி. கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாகி சரத்குமார், மும்பை சினியுக் பிலிம்ஸ் நிறுவன இயக்குனர் கரீம் மொரானி, குசேகான் ரியாலிட்டி நிறுவனத்தின் ராஜீவ் அகர்வால், டி.பி.ரியாலிட்டி நிறுவனத்தின் ஆஷிப் பல்வா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் வினோத் சோயங்கா, யுனிடெக் நிறுவனத்தின் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் நிறுவனத்தின் கெளதம் ஜோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் 14 பேர் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கோடிக்கணக்கில் பணம் எப்படி கை மாறியது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் சி.பி.ஐயும், அந்தப் பணம் வெளிநாடுகளில் எப்படி முதலீடு செய்யப்பட்டது என்பதை கண்டறியும் முயற்சிகளில் அமலாக்கப் பிரிவினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அமலாக்கப் பிரிவினரின் விசாரணையில் மொரீசியஸ் தீவில் உள்ள சில வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் பணப் பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிபிஐ, அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த 4 அதிகாரிகள் குழு மொரீசியஸ் சென்று விசாரணை நடத்தினர்.

அவர்களுக்கு தேவையான எல்லா தகவல்களையும் கொடுத்து உதவ வேண்டும் என்று மொரீசியஸ் உச்ச நீதிமன்றம் அந்நாட்டு தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளது. இது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இது சிபிஐக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது.

இந் நிலையில் மொரீசியசில் உள்ள 15 நிறுவனங்களின் பணப் பரிமாற்றத்தை தற்போது சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவினர் ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிறுவனங்கள் பலவும் ஒரே தெருவில் உள்ள ஒரே அலுவலகத்தின் முகவரியை தங்களது முகவரியாதத் தந்துள்ளன.

எனவே ஸ்பெக்ட்ரம் ஊழலில் சுருட்டப்பட்ட பணத்தை மொரீசியசில் முதலீடு செய்யவும், அங்கிருந்து இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு அதை முறையாக கொண்டு செல்லவும் இவை போலியாக உருவாக்கப்பட்ட நிறுவனங்களாக இருக்கலாம் என அமலாக்கப் பிரிவு கருதுகிறது.

இந்த பணப் பரிமாற்ற விஷயங்கள், சிபிஐயின் 3வது குற்றப்பத்திரிக்கையில் முழுமையாக இடம் பெறும் என்று தெரிகிறது. இதில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களின் பெயர்கள் இடம் பெறலாம். இதைத் தொடர்ந்து அவர்கள் கைதாகலாம்.

நிரா ராடியாவிடம் வருமான வரித்துறை விசாரணை:

இந் நிலையில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் அமைச்சராக இருந்த ராசாவுக்கும் இடையே இடைத் தரகராக செயல்பட்ட நிரா ராடியாவிடம் வருமான வரித்துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இதயமும், நுரையீரலும் ரத்தத்தில் துடித்து சாகும் ஈழப்பெண் -அதிர்ச்சி குறுந்தகடு.


வைகோ வெளியிடும் அதிர்ச்சி குறுந்தகடு

மதிமுக 18ம் ஆண்டு துவக்க விழா சென்னை சைதாப்பேட்டையில் 28.5.2011 அன்று நடந்தது. இந்த விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசியபோது,

’’என் அன்பு சகோதர்களே ....நான் இப்போது ஒரு குறுந்தகடு தயாரித்திருக்கிறேன். இன்னும் ஒரு வாரத்தில் அதை வெளியிடப்போகிறேன்.

ஐநாவின் பொதுச்செயலளாரிடம் மூவர் குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் அந்த சேனல் -4’ல் இருந்து புதிதாக சில பிரேம்கள் எடுத்து ஈழத்தின் இனக்கொலை இதயத்தில் ரத்தம் ....அந்த குறுந்தகட்டில் இல்லாத காட்சிகள்; அதில் இடம்பெறாத காட்சிகளை எடுத்து நான் குறுந்தகடு தயாரித்திருக்கிறேன்.

ஐநா மன்றத்தில் கொடுக்கப்பட்ட அறிக்கையைப்பற்றி நான் சொல்லச்சொல்ல அந்த காட்சிகள் வந்துகொண்டேயிருக்கும். 50 நிமிடங்கள் ஓடும் அந்த குறுந்தகடு. ஒரு வாரத்தில் வெளியிடப்போகிறேன்.

நான் தம்பிமார்களை, இளைஞர்களைக் கேட்கிறேன். ஒவ்வொரு கல்லூரி வாயில்களிலும் நின்று அந்த கல்லூரி முடிந்து வரும் பிள்ளைகளிடம் கொடுங்கள்.

அதில் நான் மதிமுகவைச் சொல்லவில்லை. பம்பரம் சின்னத்தைக் காட்டவில்லை. கட்சிக்கொடியை காட்டவில்லை.

நிலைமை என்னவென்று மாணவ, மாணவிகளுக்கு தெரியவேண்டும். அவர்கள் அந்த குறுந்தகட்டை வீடுகளுக்கு எடுத்துச்சென்று எல்லோரையும் பார்க்க வைக்கவேண்டும். அன்று இரவு சாப்பிடமுடியாது; அன்று இரவு தூங்கமுடியாது.

என்னாலே இரண்டாவது முறை அந்த குறுந்தகட்டை பார்க்க முடியவில்லை.

குண்டு பாய்ந்திருக்கிறது ஒரு தாய்க்கு. குண்டு பாய்ந்ததின் விளைவாக அந்த குண்டு முதுகு பக்கமாக வெளியேறியிருக்கிறது.

அப்போது இதயமும், நுரையீரலும் ரத்தில் துடிப்பது அந்த குறுந்தகட்டில் இருக்கிறது. அப்படிச்சாகிறாள். அதைப்பார்த்தால் சாப்பிடமுடியாது; தூங்க முடியாது.

பச்சைக்குழந்தைகள் எப்போது குண்டு வீசுவார்கள் என்று பயந்து பதுங்கிக் கொண்டிருக்கிறார்கள். அடப்பாவிகளா! அவர்கள் புலிகளா.

இசைப்பிரியா கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டாளே. அவளை எப்படி கற்பழித்தோம் என்பதை சிங்கள மொழியில் பேசி செல்போனில் பதிவு செய்திருக்கானுங்க.

இத்தனையும் தாங்கிய குறுந்தகட்டை வெளியிடுகிறேன்’’ என்று தெரிவித்தார்.

ஐ.டி. தலைநகர் தகுதியை பறி கொடுக்கும் பெங்களூர்.


இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகர் என்ற பெருமையை விரைவில் பெங்களூர் இழக்கவுள்ளது. நோய்டா மற்றும் குர்காவ்ன்க்கு அந்தப் பெருமை விரைவில் இடம் மாறும் என்று அசோசம் நடத்தியுள்ள சர்வே ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்களின் சொர்க்கபுரியாக ஒரு காலத்தில் விளங்கி வந்த நகரம் பெங்களூர். தோட்ட நகரம், பூ்ங்கா நகரம் என்ற பெருமைகளைக் கொண்டிருந்த பெங்களூர், பின்னர் தகவல் தொழில்நுட்ப தலைநகராக புது அவதாரம் எடுத்தது. ஓய்வுக்காக பெங்களூரில் யாரும் தங்க முடியாது என்ற அளவுக்கு நிலைமையும் மாறிப் போனது. அந்த அளவுக்குத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் படையெடுப்பால் பெங்களூரின் இயல்பும், கடும் விலைவாசியும், விண்ணைத் தொடும் வீட்டு வாடகைகளும், ரியல் எஸ்டேட் விலையும், மூச்சு முட்டும் போக்குவரத்து நெரிசலும் என நகரமே மாறிப் போய் விட்டது.

இந் நிலையில் விரைவில் தகவல் தொழில்நுட்ப தலைநகர் என்ற அந்தஸ்தையும் இழக்கப் போகிறது பெங்களூர் என்கிறார்கள்.

இதற்குக் காரணம் நோய்டா மற்றும் ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்காவ்ன் ஆகிய நகரங்களை நோக்கி ஐடி நிறுவனங்கள் படையெடுக்க ஆரம்பித்திருப்பதால். பல்வேறு ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து இந்த நகரங்களுக்கு இடம் பெயர ஆரம்பித்துள்ளதால் விரைவில் பெங்களூரை இந்த இரு டெல்லி 'புற நகர்களும்' முறியடிக்கும் என்கிறார்கள்.

ஐடி தவிர ஐடிஇஎஸ் எனப்படும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பிரிவு, பிபிஓ, கேபிஓ என பல்வேறு நிறுவனங்களும் நோய்டாவை நோக்கி பறக்க ஆரம்பித்துள்ளன என்று இதுதொடர்பாக நடத்தப்பட்ட சர்வே தெரிவிக்கிறது.

பெங்களூர் நகரில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் குறிப்பாக போக்குவரத்து நெரிசல் பல்வேறு ஐடி நிறுவனங்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதே பெங்களூரை விட்டு பல நிறுவனங்கள் கிளம்பும் முடிவுக்கு வர முக்கியக் காரணமாம். மேலும் தலைநகருக்கு மிக அருகாமையில் நோய்டா இருப்பதும், தேவைப்படும் வசதிகள், சூழல் இருப்பதாலும் நோய்டாவுக்கும், குர்காவ்க்கும் ஐடி நிறுவனங்கள் இடம் பெயர விரும்புகின்றனவாம்.

இதுகுறித்து அசோசம் பொதுச் செயலாளர் டி.எஸ்.ராவத் கூறுகையில்,பெங்களூரில் மக்கள் தொகை பெருமளவில் அதிகரித்து விட்டது. அடிப்படை வசதிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல், இட நெரிசல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் இங்கு உச்சத்தை தொட்டு நிற்கின்றன. மின்பற்றாக்குறை, குடிநீர்ப் பற்றாக்குறை, சாலை வசதிகள் போதுமானதாக இல்லாதது உள்ளிட்ட பலகுறைபாடுகள் நிரம்பி வழிகின்றன.

இவற்றின் காரணமாகவே நோய்டா மற்றும் குர்காவ்னை நோக்கி பலரும் கிளம்ப முக்கியக் காரணம். அதேசமயம், நோய்டா மற்றும் குர்காவ்னில் இந்தப் பிரச்சனைகள் எதுவும் இல்லை என்றார் ராவத்.

நாடு முழுவதும் 800 ஐடி நிறுவனங்களின் தலைமை செயலதிகாரிகள், தலைமை நிர்வாக அதிகாரிகளின் கருத்துக்களைக் கேட்டு இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 சதவீத நிறுவனங்கள் கர்கானுக்கு இடம் பெயரவும், 25 சதவீத நிறுவனங்கள் நோய்டாவுக்குச் செல்லவும் விருப்பம் தெரிவித்துள்ளனவாம். 20 சதவீத நிறுவனங்கள் சண்டிகருக்கும், 15 சதவீத நிறுவனங்கள் புனேவுக்கும், 10 சதவீத நிறுவனங்கள் ஹைதராபாத்துக்கும் செல்ல விரும்பியுள்ளன.

பெங்களூர் சற்று சுதாரித்துக் கொள்ளாவிட்டால் மீண்டும் அது பென்ஷனர்களின் பாரடைஸாக மாறும் வாய்ப்பை மறுப்பதற்கில்லை.

இதில் நம்ம மெட்ராசுக்கு வருவதாகவும் பெரிய அளவில் யாரும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு மிக முக்கிய காரணம் மின் தடையாக இருக்கலாம். 'கரண்ட் இருந்தா தானே கம்பெனி நடக்கும்'!

சில்லறை வணிகர்களின் சோற்றில் மண் அள்ளிப் போடும் இந்திய அரசு.


இந்திய அரசு சில்லறை வணிகர்களின் சோற்றில் மண் அள்ளிப் போட்டுவிடக் கூடாது என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

வணிகத்தில் ஒரே சின்னம் கொண்ட பொருட்களின் விற்பனையில் இங்கு எழுந்த கடும் எதிர்ப்பையும் மீறி 51 விழுக்காடு நேரடி அன்னிய முதலீட்டுக்கு 6 மாதங்களுக்கு முன்பு இந்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் தற்போது விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுக்குழுவின் தலைவர் கெப்சிக் பாசு, சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பதும், விவசாயப் பொருள் கொள்முதல் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்வதும் விலைவாசியைக் குறைக்க உதவும் என்று கூறியுள்ளார்.

இவரது பரிந்துரையைக் காரணம் காட்டி இந்திய அரசு சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு தொடர்பான முடிவினை விரைவில் எடுக்கும் என்று தெரிகிறது. சில்லறை வணிகத்தில நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது மிகவும் சீரழிவான ஒன்றாகும்.இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

தமிழ்நாட்டில் 3 லட்சத்திற்கும் அதிகமான சில்லறை வியாபாரிகள் உள்ளனர். சில்லறை வணிகத்தில் ஈடுபடுபவர்கள் அரசின் எந்த உதவியும் இன்றி தங்கள் சேமிப்பின் மூலமோ, சொத்துக்களை விற்றோ, கடன் வாங்கியோ, தங்கள் சொந்த முதலீட்டில் வியாபாரம் செய்கின்றனர். இதற்காக கடுமையாக உழைக்கின்றனர்.

அவர்களின் வாழ்வில் அக்கறை காட்டி, முன்னேற உதவ வேண்டிய அரசுகள் அவர்களுக்கு உதவிகரமாக இல்லாவிட்டாலும் வெளிநாட்டு நிறுவனங்களை அழைத்து வந்து அவர்கள் சோற்றில் மண் அள்ளிப் போடும் கொடுமையை செய்யக் கூடாது. அது கடுமையான எதிர்மறை விளைவை ஏற்படுத்தி விடும்.

ஏற்கனவே பெரிய நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் நாடு முழுவதும் உள்ள சிறு வியாபாரிகள் திணறுகின்றனர்.கொஞ்சம் கொஞ்சமாக பொருள் இழப்பை எதிர் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு என்பது அவர்களை இந்தத் தொழிலில் இருந்து முற்றிலும் விரட்டி விடும். இதன் விளைவாக உள்நாட்டு வணிகம், விவசாயம், நெசவு போன்ற தொழில்கள் பெருமளவு பாதிக்கப்படக்கூடும். இதனால் பல லட்சம் பேர் வாழ்க்கையைத் தொலைக்க வேண்டிய அபாயம் ஏற்படும்.

சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டினால் பொருட்களின் விலை குறையும் என்பது ஏமாற்றச் செயலாகும். அவர்களுக்கு இந்த நாட்டின் மீதோ, மக்கள் மீதோ அக்கறை கிடையாது. அவர்கள் சொல்லும் தரம், மலிவு என்பதெல்லாம் மாயஜாலம். நடைமுறையில் அவர்கள் இதனை செய்யப்போவது இல்லை.

முதலில் நம் சந்தையைக் கைப்பற்றும் அன்னிய முதலீட்டாளர்கள் காலப்போக்கில் நம் வணிகர்களின் சிறு கடைகள் அழிந்த பிறகு சந்தை விலையை நிர்ணயம் செய்வார்கள். அப்போது மக்கள் நலன் என்பது கருத்தில் கொள்ளப்படாமல் அதிக லாபம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும். இவர்களால் விலைவாசி மிகக் கடுமையாக அதிகரிக்கும். வேறு எங்கும் பொருட்கள் வாங்க முடியாத நிலை உருவாகும். ஏற்கனவே அரசு மொத்த வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்துள்ளது. ஆனால் இன்று வரை விலைவாசி சிறிதும் குறைந்தபாடில்லை. அப்படியானால் சில்லறை வர்த்தகத்தில் மட்டும் எப்படிக் குறையும்?

மேலும் சில்லறை வணிகம் என்பது வெறும் வியாபாரம் மட்டுமல்ல, அதில் நாட்டின் உணவு உற்பத்தி, உணவுப் பாதுகாப்பு, விவசாயிகளின் நலன், உள்ளுர் தொழில்களின் பாதுகாப்பு, நம் மக்களின் வாழ்வாதாரம் என அனைத்தும் பின்னிப் பிணைந்துள்ளது. கோடிக்கணக்கான தொழிலாளர்களும், சிறு வணிகர்களும், சிறு விவசாயிகளும், சிறு உற்பத்தியாளர்களும் தான் இந்த நாட்டை இதுவரை உருவாக்கினார்கள். காலம் காலமாக அவர்கள் அரும்பாடு பட்டு எட்டிய வளர்ச்சி நம் கண்ணுக்கு முன்னாலேயே இப்பொழுது அழிந்து வருகிறது. அதன் உச்சம் தான் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது ஆகும்.

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்வது, அரசின் குளிர்பதன சேமிப்பு கிடங்கு கட்டமைப்பை மேம்படுத்துவது, உணவுப் பொருள் பதுக்கலை ஒழிப்பது, பொது விநியோகத் திட்டத்தை சரியாகச் செயல்படுத்துவதன் மூலம் தான் விலைவாசி குறையவும் மக்களுக்கு புத்தம் புதிதாக பொருட்கள் கிடைப்பதற்கும் வழிவகை செய்யலாம்.

அதை விடுத்து சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்பது அயோக்கியத்தனம். எநவே, இந்திய அரசு இதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடம் கொடுக்காமல் அனுமதி மறுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

மருத்துவம் ஜுன் 2 - என்ஜினீயரிங் விண்ணப்பம் வாங்க இன்று கடைசி நாள்.


என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் வாங்குவதற்கு இன்று (31.05.2011) கடைசி நாள் ஆகும்.

தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் சேர்த்து மொத்தம் 486 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பி.இ., பி.டெக். இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன. என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர கடந்த 16 ந்தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன.

இதுவரை ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றுள்ளனர். விண்ணப்பம் வாங்குவதற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை ஜுன் 3 ந் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) சமர்ப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஜுலை முதல் வாரத்தில் கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

மருத்துவ படிப்பைப் பொருத்தவரையில் தமிழகத்தில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 8 தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. ஒரேயொரு அரசு பல்மருத்துவக் கல்லூரியும் 17 தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளும் இருக்கின்றன. கவுன்சிலிங் மூலம் 2,288 எம்.பி.பி.எஸ். இடங்களும், 976 பி.டி.எஸ். சீட்டுகளும் நிரப்பப்பட உள்ளன.

மேலும், சென்னை மருத்துவக் கல்லூரியிலும், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலும் கூடுதலாக 200 இடங்களுக்கு அனுமதி பெறப்பட்டு உள்ளது.

மருத்துவக் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் வாங்குவதற்கு ஜுன் 2 ந் தேதி கடைசி நாள் ஆகும்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர கடந்த 16 ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் இதுவரை 22 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன. விண்ணப்பங்கள் வாங்கவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் ஜுன் 2 ந் தேதி கடைசி நாள் ஆகும். ரேங்க் பட்டியல் 21 ந் தேதியும், முதல்கட்ட கவுன்சிலிங் 30 ந் தேதியும் தொடங்கும் என்று மருத்துவக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

1000 படகுககளின் உரிமம் ரத்து ; மீன் துறை அதிரடி.


நாற்பத்தைந்து நாட்கள் தடைக்காலம் முடிந்ததையடுத்து விசைப்படகு மீனவர்கள் உற்சாகத்துடன் இன்று அதிகாலை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

தடைக்காலம் முடிந்ததும் டோக்கன் பெறாமல் நூற்றுக்கணக்கான மீனவர்கள் நேற்று மாலையே கடலுக்குச் சென்றுவிட்டனர். ராமேஸ்வரம் பகுதியில் உள்ள 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 படகுகள் மட்டுமே டோக்கன் பெற்று கடலுக்குச் சென்றுள்ளன.

மண்டபம் பகுதியில் உள்ள 570 விசைப்படகுகளில் 234 படகுகள் மட்டுமே டோக்கன் வாங்கிச் சென்றன. 336 படகுகள் டோக்கன் பெறாமல் நேற்று மாலையை கடலுக்குச் சென்றன. அதேபோல, மண்டபம் பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட படகுகளில் ஒரு சில படகுகள் மட்டுமே டோக்கன் பெற்றுச் சென்றுள்ளன.

டோக்கன் பெறாமல் விசைப்படகுகள் கடலுக்குச் சென்றுள்ளது மீன்துறை அதிகாரிகளை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மீன்துறை உதவி இயக்குநர் மார்க்கண்டேயன் ராமநாதபுரம் கலெக்டர் ஹரிஹரனை நேரில் சந்தித்து டோக்கன் பெறாமல் சென்ற மீனவர்கள் குறித்து புகார் தெரிவித்தார்.

அனுமதி பெறாமல் சென்ற மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மீன்துறை அனுமதி பெறாமல் சென்ற படகுகளுக்கு டீசல் மானியம் ரத்து செய்யப்பட்டதோடு மீன் பிடி உரிமமும் ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்த ஆண்டும் மீனவர்கள் மீதான நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் கூறினர்.

கஞ்சா வழக்கு ஆரம்பம் - திருச்சி மாவட்ட திமுக துணை செயலாளர் கைது.


திருச்சி மாவட்ட திமுக துணைச் செயலாளரும், ஸ்ரீரங்கம் கோயிலின் முன்னாள் அறங்காவலருமான குடமுருட்டி சேகர், நேற்று (31.05.2011) இரவு காரில் சென்றுகொண்டிருந்தபோது, காவல்துறையினர் அவரது காரை மடக்கி விசாரணை செய்தனர். அவரின் காரையும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று காவல்துறையினர் கூறியதாகவும், அதற்கு சேகர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் கஞ்சா இருந்ததாகவும், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் இரண்டு பிரிவின் கீழ் சேகர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் போலீசார் சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்ட திமுக துணை செயலாளர் கைது செய்யப்பட்டிருப்பது அந்த மாவட்ட திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்லேடன் மறைவிடத்தை காட்டிக்கொடுத்த தலிபான் தலைவர்.

அமெரிக்காவிடம் பின்லேடன் மறைவிடத்தை காட்டிக்கொடுத்த தலிபான் தலைவர்

பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அல்கொய்தா தீவிரவாதி பின்லேடன் அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவருக்கு கூரியர் கடிதம் மூலம் தகவல் பரிமாற்றம் செய்து வந்த அபுஅகமது அல்- குவைதியுடன் டெலிபோன் பேச்சை ஒட்டுக் கேட்டு பின்லேடன் இருப்பிடத்தை அமெரிக்கா மோப்பம் பிடித்ததாக தகவல் வெளியானது.

தற்போது அது உண்மை இல்லை. பின்லேடன் இருப்பிடத்தை காட்டிக் கொடுத்தது தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் முல்லா அப்துல் ஹானிபிராதர் என தெரிய வந்துள்ளது. இந்த தகவலை இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இவர் பின்லேடன் நண்பர்களில் ஒருவராக திகழ்ந்தவர். தலிபான் இயக்கத்தை தோற்றுவித்த தலைவர்களில் ஒருவராவர். ஆப்கானிஸ்தானில் ரோட்டோரங்களில் நடைபெறும் குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி வருவதில் வல்லவர்.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் அமெரிக்க படையினரால் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் அமெரிக்க புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தினர். அப்போதுதான் பாகிஸ்தானில் பின்லேடன் பதுங்கி இருந்த ரகசிய இடம் பற்றி அவர் அமெரிக்க உளவுத்துறையிடம் தெரிவித்தார்.

இது குறித்து ஒரு ரகசிய உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. அதாவது, தலிபான்கள் அதிகம் இருக்கும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் ஆக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதை அமெரிக்கா ஏற்று அறிவித்தது. இதற்கிடையே, கடந்த அக்டோபர் மாதம் அவர் விடுவிக்கப்பட்டார். இந்த தகவலையும், அந்த பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்.


தமிழகத்தில் 21 மாவட்ட கலெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

அதன் விவரம் வருமாறு:-

1.பி.உமாநாத் கோவை கலெக்டர் - தமிழக அரசின் நிதித்துறை இணை செயலாளர்

2.பி.சீத்தாராமன் கடலூர் கலெக்டர் - சுனாமி நீடித்த வாழ்வாதார திட்ட இயக்குனர்

3.எம்.வள்ளலார் திண்டுக்கல் கலெக்டர் - தொழில் மற்றும் வர்த்தக துறை கூடுதல் கமிஷனர்

4. சி.காமராஜ் ஈரோடு கலெக்டர் - போக்குவரத்து துறை துணை செயலாளர்

5.ராஜேந்திர ரத்னு கன்னியாகுமரி கலெக்டர் - சிறப்பு திட்ட செயலாக்கத்துறை இணை செயலாளர்

6.ஜெ.உமா மகேஸ்வரி கரூர் கலெக்டர் - உயர் கல்வித்துறை இணை செயலாளர்

7.ஆர்.பழனிச்சாமி விழுப்புரம் கலெக்டர் - நகராட்சி நிர்வாகத்துறை இணை கமிஷனர்

8.எம்.விஜயகுமார் பெரம்பலூர் கலெக்டர் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை செயலாளர்

9.ஏ.சுகந்தி புதுக்கோட்டை கலெக்டர் - சமூக நலம் மற்றும் சத்துணவுத்துறை துணை செயலாளர்

10.டி.என்.அரிகரன் ராமநாதபுரம் கலெக்டர் - ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை துணை செயலாளர்

11.ஜெ.சந்திரகுமார் சேலம் கலெக்டர் - வருவாய் துறை இணை செயலாளர்

12.எம்.எஸ்.சண்முகம் தஞ்சாவூர் கலெக்டர் - தொழில் துறை இணை செயலாளர்

13.எம்.ஜெயராமன் திருநெல்வேலி கலெக்டர் - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை செயலாளர்

14.டி.பி.ராஜேஷ் திருவள்ளூர் கலெக்டர் - தமிழ் வளர்ச்சி, இந்து சமய அறநிலைய துறை, செய்தித்துறை துணை செயலாளர்

15. சி.சமயமூர்த்தி திருப்பூர் கலெக்டர் - பொதுத்துறை இணைச் செயலாளர்

16.வி.கே.சண்முகம் விருதுநகர் கலெக்டர் - வேளாண்மைத்துறை இணை செயலாளர்

17. டி.கே.பொன்னுசாமி அரியலூர் கலெக்டர் - எரிசக்தித்துறை இணை செயலாளர்

18.வி.பழனிக்குமார் வேலூர் கலெக்டர் - எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் மற்றும் உறுப்பினர் செயலர்

19.எஸ்.மதுமதி நாமக்கல் கலெக்டர் - சென்னை மாநகராட்சி இணை கமிஷனர் (சுகாதாரம்)

20.வி.சம்பத் சிவகங்கை கலெக்டர் - தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவன நிர்வாக இயக்குனர்

21. மகேசன் காசிராஜன் திருச்சி கலெக்டர் - நில வடிநீர் முகமை செயல் இயக்குனர்.

நாளை முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.35 உயருகிறது.


பெட்ரோல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. 5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாக, கடந்த ஜனவரி மாதத்துக்கு பிறகு, 4 மாதங்களாக பெட்ரோல் விலைஉயர்த்தப்படவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், கடந்த 15-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், பெட்ரோல் விலை நாளை புதன்கிழமை முதல் மீண்டும் உயர்த்தப்படுகிறது. இத்தகவலை முன்னணி பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. லிட்டருக்கு ஒரு ரூபாய் 35 காசுகள், விலை உயர்த்தப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

திஹார் சிறையில் எப்படி இருக்கிறார் ராசா?


முன்னாள் அமைச்சர் ராசா திஹார் சிறைக்கு உள்ளே வந்து மூன்று மாதங்களாகி விட்டது. வெளியில் எத்தனையோ நடந்து முடிந்து விட்டது. உற்ற நண்பர் சாதிக் பாட்சா உயிரிழந்து விட்டார்.ஆட்சி பறி போய் விட்டது. சக எம்.பி. கனிமொழியும் கைதாகி உள்ளே வந்து விட்டார். இத்தனையையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

சுறுசுறுப்பாக இயங்கி வந்த ராசா, இன்று ஒரு குட்டி அறையில் டிவி, செய்தித் தாள்கள், புதிதாக கிடைத்த நண்பர்கள் சகிதம் முடங்கிக் கிடக்கிறார்.

காலையில் சின்னதாக ஒரு வாக்கிங், மாலையில் சக கைதிகளுடன் பேட்மிண்டன் என்று பொழுது போய்க் கொண்டிருக்கிறது ராசாவுக்கு. ஆரம்பத்தில் மகா இறுக்கமாக காணப்பட்ட ராசா இன்று சற்று ரிலாக்ஸ்டாக தெரிகிறார். சிறை வாழ்க்கை இப்போது அவருக்குப் பழகி விட்டது.

ராசா குறித்து திஹார் சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பிற விஐபி கைதிகளைப் போல அல்லாமல், வெகு விரைவிலேயே சிறை வாழ்க்கைக்குப் பழகிக் கொண்டு விட்டார் ராசா. ஆரம்பத்தில் அவர் யாருடனும் சரியாக பேசவில்லை. அமைதியாக இருந்தார். பிற கைதிகளுடன் பேச மாட்டார். ஆனால் தற்போது அப்படி இல்லை. நன்றாகப் பேசுகிறார். பிற கைதிகளுடன் சகஜமாக பேசிப் பழகுகிறார். சிலர் அவருக்கு நண்பர்களாகி விட்டனர். அவரிடம் நண்பர்களாகியுள்ள பலரும் ஆயுள் தண்டனைக் கைதிகளாவர் என்றார்.

பிப்ரவரி 17ம் தேதி ராசா திஹார் சிறைக்கு வந்தார். அன்று முதல் இன்று வரை அவர் படு சமர்த்தாக இருந்து வருகிறாராம். எந்தவிதமான பிரச்சினையும் செய்வதில்லை. மிகமிக ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கிறாராம்.

மிக மிகப் பெரிய ஊழல் புகாரை தன் தலை மீது வைத்திருந்தாலும், ராசாவின் பழக்க வழக்கம், படு எளிமையாக உள்ளதாம். திஹார் சிறையின் முதலாவது சிறையில், 9வது வார்டில் அடைக்கப்பட்டிருக்கிறார் ராசா. அதே சிறையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்பந்தப்பட்டு கைதாகியுள்ள மேலும் சிலரும் அடைக்கப்பட்டுள்ளனர்.

தினசரி காலை 5 மணி முதல் 6 மணி வரை சிறைக்குள் வாக்கிங் போகிறார் ராசா. தான் அடைக்கப்பட்டுள்ள வார்டுக்குள்ளேயே இந்த வாக்கிங். அந்த வார்டில் உள்ள 14 கைதிகளுடனும் அவர் நண்பராகப் பழங்குகிறார்.

முதலில் சிறை சாப்பாட்டை சாப்பிட்டு வந்தார் ராசா. ஆனால் அது அவருக்குப் பிடிக்கவில்லை. இதையடுத்து வீட்டுச் சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அவருக்கு மட்டும் சாப்பாடு வரும். பின்னர் நண்பர்கள் அதிகமாகவே அவருக்கு கொண்டு வரப்படும் சாப்பாட்டு பாத்திரத்தின் சைஸ் பெரிதாகி விட்டது. இப்போது தனக்கு கொண்டு வரப்படும் சாப்பாட்டை தனது சக கைதிகளுடன் பகிர்ந்து கொண்டு சாப்பிடுகிறார் ராசா.

இட்லி, வடை, சாம்பார், ரசம், தயிர்ச் சாதம் என தென்னிந்திய உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுகிறார் ராசா.

தனது அறையில் கொடுக்கப்பட்டுள்ள டிவியைப் பார்க்கும் ராசா, செய்தித் தாள்களையும், புத்தகங்களையும் படிக்க அதிக நேரம் செலவிடுகிறார். மாலையில் சக கைதிகளுடன் சேர்ந்து பேட்மிண்டன் ஆடுகிறார்.

பிற கைதிகளுடன் ஒப்பிடுகையில் ராசா மிக மிக ஒழுங்குடன் இருக்கிறார் என்கிறார்கள் சிறை அதிகாரிகள்.

அவர் எந்த சிறப்புச் சலுகைகையும் எங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. தமிழ் செய்தித் தாள்களை தாருங்கள் என்பது மட்டுமே அவர் வைத்த ஒரே கோரிக்கை. மற்ற எதையும் அவர் எதிர்பார்க்கவில்லை.

தற்போது கடந்த சில நாட்களாக சிறை சாப்பாட்டையே மீண்டும் சாப்பிட ஆரம்பித்துள்ளார் ராசா.

சிறை வளாகத்தில் உள்ள கேன்டீனில் விற்கும் ஸ்னாக்ஸ் அவருக்குப் பிடித்துப் போய் விட்டது. அடிக்கடி அதை வாங்கிச் சாப்பிடுகிறார். அப்படி வாங்கும்போது சக கைதிகளுக்கும் சேர்த்தே வாங்குகிறார்.

திஹார் சிறைக்குள் பணப் புழக்கத்திற்குத் தடை உள்ளது. கூப்பன் கொடுத்துதான் பொருட்களைப் பெற முடியும். அதாவது கைதிகளை வாரத்திற்கு 2 முறை உறவினர்கள் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். அப்படி வரும்போது ஒரு முறைக்கு 1000 ரூபாயை சிறை அதிகாரிகளிடம் கொடுத்து அதற்குப் பதில் கூப்பன்களாகப் பெற்று அதை கைதிகளிடம் தரலாம். கைதிகள் அந்த கூப்பனைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான ஸ்னாக்ஸ் போன்றவற்றை சிறை கேன்டீனில் பெற முடியும்.

ராசா அடைக்கப்பட்டுள்ள வார்டில் மேலும் இரு விஐபிக்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இருவரும் மூத்த போலீஸ் அதிகாரிகள். ஒருவரது பெயர் எஸ்.எஸ். ராத்தி. இவர் டெல்லி காவல்துறையின் முன்னாள் உதவி ஆணையர் ஆவார். 1997ல் கன்னாட் பிளேஸில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக கைதாகி தண்டனை அனுபவித்து வருகிறார்.

இன்னொருவர் ஆர்.கே.சர்மா. இவர் பத்திரிக்கையாளர் ஷிவானி பட்நாகரைக் கொன்ற வழக்கில் கைதாகி தண்டனை அனுபவித்து வருகிறார்.

ராசா எப்போது வெளியே வருவார் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால் கனிமொழியை முதலில் பெயிலில் எடுக்கவே திமுக தரப்பு படு தீவிரமாகவும், ஆர்வமாகவும் இருப்பதாக திமுகவினரே கூறுகிறார்கள். எனவே ராசா இப்போதைக்கு வெளியே வரும் வழி தெரியவில்லை என்பது அவர்களின் கருத்து. ராசாவுக்கும் இது தெரிந்திருக்கும். எனவேதான் அவர் முன்பை விட இப்போது மிகுந்த ரிலாக்ஸ்டான மன நிலைக்குத் தன்னை மாற்றிக் கொண்டு விட்டார்.

வெளியே வரும்போது மிகச் சிறந்த பேட்மிண்டன் வீரராக ராசா உருவெடுத்து இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

புகைப் பிடிப்பதால் இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் மரணங்கள்.


புகைப் பிடிப்பதாலும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாலும் உலகம் முழுவதும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். அதில் 10 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக புகையிலை எதிர்ப்பு நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. புகைப் பிடிப்பதாலும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாலும் உலகம் முழுவதும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

அதில் 10 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். 2008ம் ஆண்டு மத்திய நலத்துறை அமைச்சராக இருந்த அன்புமணியின் முயற்சியால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொது இடங்களில் புகைப் பிடிப்பதை தடை செய்யும் சட்டம் தொடக்கத்தில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டபோதிலும், காலப்போக்கில் கைவிடப்பட்டுவிட்டது. அதை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்ற விதியும் பெயரளவிலேயே உள்ளது. இதை மிகக் கடுமையாக செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.

புகையிலை பொருட்கள் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் தடை செய்வதுடன், புகையிலை பொருட்களின் மீதான வரிகளையும் அதிகரிக்க வேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு என்பது யாரோ சம்பந்தப்பட்ட விஷயம் என்று எண்ணாமல் அனைவருக்கும் தீங்கு என்பதை உணர்ந்து சமுதாயத்தில் உள்ள அனைவரும் புகையிலைக்கு எதிராக போராட முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.