Sunday, June 12, 2011

இந்தியாவுக்கு வரும், வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட்டுகள்.


இந்தியா, வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட் செயின்கள் இந்திய அரசிடம் நீண்ட காலமாக கேட்டுக் கொண்டிருந்ததைக் கொடுக்க முன்வந்துள்ளது மத்திய அரசு. வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட்கள் இந்தியாவில் சில்லரை வியாபாரம் செய்ய கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

Wal-Mart Stores , Carrefour , Tesco, Metro AG ஆகிய வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட் செயின்கள், இந்தியாவில் சில்லரை வியாபாரத்தில் ஈடுபட விண்ணப்பித்திருந்தன. ஆனால், இந்தியாவின் சில்லரை வர்த்தகச் சட்டம் அதற்கு இதுவரை இடம் கொடுக்கவில்லை.

தற்போது சட்டம் மாற்றப்படவுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய சில்லரை வர்த்தகம் ஒன்றில் 51% முதலீட்டைச் செய்யலாம் என்பதே புதிய சட்ட மாற்றம். நிதி அமைச்சின் பிரதான பொருளாதார ஆலோசகர் கௌசிக் பாசு, இதற்கான பரிந்துரையை அங்கீகரித்துள்ளார்.

அடுத்துவரும் சில மாதங்களில், வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட் செயின்களால் 450 பில்லியன் டாலர் முதலீடு இந்தியாவில் செய்யப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இந்தியாவின் பிரதான நகரங்களில், வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட்கள் தமது கதவுகளைத் திறக்கப் போகின்றன!

1 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த மிகச்சிறிய டயனோசரஸ் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு .


இங்கிலாந்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பூமியை தோண்டி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பறவை போன்று வடிவம் கொண்ட மிகச்சிறிய டயனோசரசின் எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

சிறிய வால், நீண்ட கழுத்து, நீண்ட குச்சி போன்ற கால்கள், இறகு எலும்புகள் போன்றவை இருந்தன. அதற்கு “ஆஷ் டவுன்” என்று நிபுணர்கள் பெயரிட்டுள்ளனர். இது சுமார் 1 கோடி முதல் 1 கோடியே 45 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து இருக்கலாம் என்று கணித்துள்ளனர்.

பறவை போன்று இருந்தாலும் அந்த டயனோசரசால் பறக்க முடியாத நிலை இருந்து இருக்கலாம். அதன் எடை 7 அவுன்ஸ் மட்டுமே இருந்திருக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பெனாசிர் கொலை வழக்கு : முஷரபுக்கு நிரந்தர கைது வாரண்ட் ; பாகிஸ்தான் கோர்ட்டு பிறப்பித்தது.

பெனாசிர் கொலை வழக்கு:    முஷரபுக்கு நிரந்தர கைது வாரண்ட்;    பாகிஸ்தான் கோர்ட்டு பிறப்பித்தது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007-ம் ஆண்டு தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய போது தீவிரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலில் கொல்லப்பட்டார். அப்போது முஷரப் அதிபராக இருந்தார். அவரது ஆட்சியின் போது பொனாசிருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க தவறியதால் தான் அவர் கொலை செய்யப்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் முஷரப்பும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டில் இவர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது லண்டனில் தங்கியுள்ளார் எனவே, இவர் விசாரணைக்காக பாகிஸ்தான் ராவல்பிண்டியில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு கோர்ட்டில் ஆஜராக வில்லை. பலமுறை சம்மன் அனுப்பியும் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக வில்லை. எனவே அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. மேலும் அறிவிக்கப்பட்ட தலைமறைவு குற்றவாளியாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது அவர் மீது ஜாமீனில் வெளி வர முடியாத நிரந்தர கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதி ராணா நிசார் அகமது அதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தார். இதற்கிடையே, முஷரப் பின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தர விடவேண்டும் என அரசு வக்கீல்கள், கோரிக்கை விடுத்தனர்.

அதை தொடர்ந்து அடுத்த வழக்கு விசாரணையின் போது சொத்து விவரத்தை அளிக்குமாறு நீதிபதி கூறினார். இந்த வழக்கை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.

காங்கிரஸ் அரசு இருக்கும்வரை இலங்கை தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காது.

சிவசங்கரமேனன் பயணம் கண்துடைப்பு:    காங்கிரஸ் அரசு இருக்கும்வரை இலங்கை தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காது;     பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன் தலைமையிலான இந்திய குழுவினர் இலங்கையில் அந்நாட்டு அதிபர் ராஜபச்சேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தை வெறும் கண்துடைப்பு என்று தமிழக பா.ஜனதா கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

2009-ல் இலங்கை தமிழர்கள் மீது வன்கொடுமை தாக்குதல் நடத்தப்பட்ட போதும், அறிவிக்கப்படாத யுத்தம் நடத்தியபோதும் இலங்கை அரசுக்கு துணையாக இருந்தது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு. பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஏறக்குறைய கட்சி பிரதிநிதிபோல் இலங்கை சென்று செயல்பட்டவர் சிவசங்கரமேனன். அவர் சென்ற பிறகுதான் வெளியே தெரியாமல் இலங்கை அரசு தமிழர்களை கொன்று குவித்தது.

அப்படிப்பட்ட சிவசங்கர மேனனை இலங்கைக்கு அனுப்பியிருப்பதால் பலன் கிடைக்கும் என்று எதிர் பார்ப்பது முட்டாள்தனம். தற்போது இருக்கும் காங்கிரஸ் அரசு இலங்கை தமிழர்கள் வாழ்வில் விடிவு காலம் ஏற்படுத்துமா என்பது சந்தேகம். சட்டமன்றத்தில் எவ்வளவுதான் தீர்மானம் நிறை வேற்றினாலும் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்வரை இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது.

இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.

தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை தொடக்கம்.


தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடக்க விழா நாளை (திங்கட்கிழமை) மாலை தூத்துக்குடி துறைமுகத்தில் நடக்கிறது. விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி ஜி.கே.வாசன் கலந்து கொண்டு கப்பல் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். ஸ்காடியா பிரின்ஸ் பயணிகள் கப்பல் வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தூத்துக்குடி யில் இருந்து கொழும்புக்கும், புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பில் இருந்து தூத்துக்குடிக்கும் இயக்கப்படுகிறது.

தூத்துக்குடி, கொழும்பு ஆகிய 2 இடங்களிலும் மாலை 6 மணிக்கு கப்பல் புறப்படும். மறுநாள் காலை 8 மணிக்கு அதாவது 14 மணி நேரத்தில் சென்றடையும். 9 அடுக்குகளை கொண்ட இந்த ஏ.சி. கப்பலில் 1044 பயணிகள் மற்றும் 200 ஊழியர்கள் பயணம் செய்யலாம். 9 மாலுமிகள் இருப்பார்கள். இந்த கப்பல் மணிக்கு 13 கடல் மைல் முதல் 18 கடல் மைல் வேகத்தில் செல்லக் கூடியது. 111 எக்கனாமிக் அறையும், மாற்று திறனாளிகளுக்கு 2 சிறப்பு வசதி கொண்ட அறையும், 22 சூப்பர் டீலக்ஸ் அறையும், 169 டீலக்ஸ் அறையும் மற்றும் 11 முதல் வகுப்பு அறைகள் ஆக மொத்தம் 317 அறைகள் உள்ளன.

மேலும் முதல் 3 அடுக்குகளில் பயணிகள் கொண்டு செல்லும் சரக்குகளை வைக்கவும், 4-வது அடுக்கில் இருந்து 7-வது அடுக்குவரை பயணிகள் அறைகளும் உள்ளன. 8-வது அடுக்கில் கப்பல் ஊழியர்களும், 9-வது அடுக்கு திறந்த வெளியாகவும் உள்ளது. ஒரே நேரத்தில் 250 பேர் அமர்ந்து உணவு உண்ணக்கூடிய ஓட்டல், மீட்டிங் ஹால், ஆஸ்பத்திரி, நடன அறைகள் மற்றும் பார் வசதி உள்ளது.

300 டன் சரக்குகளை கொண்டு செல்லக் கூடிய திறன் கொண்டது. தூத்துக்குடியில் இருந்து கொழும்பு செல்ல குறைந்தபட்ச கட்டணம் ரூ.2 ஆயிரத்து 990-ம், அதிகபட்ச கட்டணம் ரூ.19 ஆயிரத்து 550-ம், கொழும்பில் இருந்து தூத்துக்குடிக்கு வர குறைந்தபட்ச கட்டணமாக ரூ.3 ஆயிரத்து 128-ம், அதிகபட்ச கட்டணமாக ரூ.20 ஆயிரத்து 470-ம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கப்பல் சேவை தொடக்க விழா சிறப்பு கட்டணமாக நாளை (திங்கட்கிழமை) மட்டும் ரூ.2 ஆயிரத்து 223-ம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கப்பலில் பயணம் செல்லும் பயணிகளுக்கு கப்பலுக்கு சென்ற உடன் குளிர்பானம் மற்றும் இரவு உணவு விலையும் பயண கட்டணத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்.

பயணிகள் கப்பலில் உள்ள கேண்டீனில் உணவுப் பண்டங்களை விலை கொடுத்து வாங்கி சாப்பிடலாம். இதில் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகையும் உண்டு. தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் கப்பல் டிக்கெட் விற்பனை உரிமத்தை பல்வேறு தனியார் நிறுவனத்தினர் பெற்று உள்ளனர்.

மேலும் கப்பலில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் 4 மணி நேரத்துக்கு முன்பாகவே துறைமுகத்துக்கு வரவேண்டும். டிராவல் பேக் உள்ளிட்ட பொருட்களை தங்களது அறைக்கு எடுத்துச் செல்லலாம். எக்கனாமிக் அறை வகுப்பு பயணிகள் 100 கிலோ எடை வரையும், முதல் வகுப்பு பயணிகள் 200 கிலோ எடை வரையும் லக்கேஜ் பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் கப்பலில் பயணம் செய்ய விரும்பு வோர் கண்டிப்பாக பாஸ்போர்ட் வைத்து இருக்க வேண்டும். கப்பலில் இலங்கை சென்றதும் அவர்களுக்கு அந்த நாட்டு அரசு சார்பில் சுற்றுலா விசா வழங்கப்படும். இந்த விசா 30 நாட்கள் வரை செல்லுபடியாகும். அதற்கு முன்பாக பயணிகள் கொழும்பில் இருந்து தூத்துக்குடி வர வேண்டும். தூத்துக்குடி - கொழும்பு இடையிலான பயணிகள் கப்பலில் பயணம் செய்ய பயணிகள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

குமாரசாமியுடன் திருமணம் : குழந்தையுடன் இருக்கும் படத்தை குட்டி ராதிகா வெளியிட்டார்.


கர்நாடகா முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, கன்னட நடிகை குட்டி ராதிகாவுடன் சுற்றுவதாக ஏற்கனவே தகவல் வந்தன. குட்டி ராதிகா இயற்கை, வர்ணஜாலம் உள்பட சில தமிழ்ப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்போது இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், 1 1/2 வயதில் ஷமிகா என்ற பெண் குழந்தை இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. குமாரசாமி நடிகை ராதிகா மற்றும் குழந்தையுடன் இருக்கும் படமும் வெளியிடப் பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் உள்ள தொடர்பு குறித்து குமாரசாமியிடம் கேட்ட போது அதை மறுக்க வில்லை. இது எனது தனிப் பட்ட விஷயம் இது பற்றி யாரும் கேட்க வேண்டாம். என்று கூறினார்.

எனவே அவர் ராதிகாவை திருமணம் செய்து கொண்டது ஏற்கனவே உருதியானது. குமாரசாமிக்கும், ராதிகாவுக்கும் 2004-ம் ஆண்டிலிருந்தே தொடர்பு இருந்துள்ளது. அப்போது குமாரசாமி எம்.எல்.ஏ.வாக இருந்தார். குமாரசாமி அரசியலுக்கு வருவதற்கு முன்பே சினிமா உலகுடன் தொடர்பு உண்டு.

அவரது சொந்த ஊரான ஹசனில் சொந்தமாக சினிமா தியேட்டர் வைத்துள்ளார். படங்களை வினியோகம் செய்ததுடன், ஒரு படத்தையும் அவர் தயாரித்து உள்ளார். அப்போது தான் ராதிகாவுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. குமாரசாமிக்கு ஏற்கனவே அனிதா என்ற மனைவி இருக்கிறார். ஆனால் குமாரசாமி ராதிகாவை திருமணம் செய்து கொண்டதற்கு அனிதா தரப்பிலோ? தந்தை தேவே கவுடா தரப்பிலோ பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியதாக தெரிய வில்லை.

குமாரசாமிக்கு நடிகை ராதிகா 2-வது மனைவி ஆகி இருப்பது போல, ராதிகாவுக்கு குமாரசாமி 2-வது கணவர் ஆவார். ராதிகா ஏற்கனவே ரத்தன்குமார் என்பவரை திருமணம் செய்திருந்தார். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே இந்த திருமணம் நடந்தது.

2002-ம் ஆண்டு ரத்தன்குமார் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலையின் பின்னனிகுறித்து காரணம் இதுவரை தெரிய வில்லை. அதன் பிறகுதான் குமாரசாமிக்கும், ராதிகாவுக்கும் அதிக நெருக்கம் ஏற்பட்டது. ராதிகா 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் புகழின் உச்சகட்டத்தில் இருந்தபோது 2005-ம் ஆண்டு திடீரென சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

நன்றாக வாய்ப்பு வந்து கொண்டிருக்கும் நேரத்தில் அவர் சினிமாவில் இருந்து விலகியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் குமாரசாமியை திருமணம் செய்ததால்தான் அப்போது சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

4 வருடத்துக்கு முன்பு குமாரசாமியும், ராதிகாவும் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்தது வெளி உலகுக்கு தெரிந்தது. இருவரும் மொரிசியஸ் நாட்டுக்கும் சுற்றுலா சென்று வந்தனர். கர்நாடகாவில் உள்ள மலை வாஸ்த ஸ்தலங்களிலும் இருவரும் ஜாலியாக சென்று வந்தனர்.

ராதிகா 1 1/2 வருடத்துக்கு முன்பு குழந்தை பெற்றபோது இந்த விஷயம் வெளியே கசிய ஆரம்பித்தது. அப்போது ராதிகாவிடம் உங்கள் கணவர் யார் என்று கேட்டதற்கு “ஒரு அரசியல் வாதி” என்று மட்டும் சொன்னார். பெயரை சொல்ல மறுத்துவிட்டார். இப்போது அது குமாரசாமி என்பது உறுதியாகி உள்ளது.

பாகிஸ்தானில வெடிகுண்டு தாக்குதல் ; 35 பேர் பலி ; 100 பேர் படுகாயம்.

பாகிஸ்தான் மார்க்கெட்டில் வெடிகுண்டு தாக்குதல்;    35 பேர் பலி;    100 பேர் படுகாயம்

பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்துள்ளது. கைபர்- பக்துன்கவா மாகாணத்தின் தலைநகரமான பெஷாவரில் கைபர் சூப்பர் மார்க்கெட் உள்ளது. நேற்று நள்ளிரவு அங்கு 2 தடவை குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது. கட்டிடங்கள் அதிர்ந்தன. மார்க்கெட் அருகேயுள்ள சில கட்டிடங்கள் இடிந்தன.

இந்த சம்பவத்தில் 35 பேர் பலியானார்கள். 100 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள லேடிரீடிஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 21 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காயம் அடைந்தவர்களில் பலர் பத்திரிகை நிருபர்கள். இதில் டெலிவிஷனின் தலைமை நிருபர் மற்றும் 8 போலீசாரும் அடங்குவர்.

இவர்கள் அபாய கட்டத்தை தாண்டி விட்டனர். இந்த தகவலை கைபர்- பக்துனகவா மாகாண செய்தித்துறை மந்திரி மியான் இப்திகார் ஹீசேன் தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு மார்க்கெட்டில் அதிக கூட்டம் இருந்தது. அப்போது, முதலில் ஒரு குண்டு வெடித்தது. அது சக்தி வாய்ந்த குண்டு இல்லை. எனவே, பலருக்கு காயம் மட்டுமே ஏற்பட்டது.

முதல் குண்டு வெடித்த சில நிமிடங்களிலேயே அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மற்றொரு குண்டு வெடித்தது. அது அதிக சக்தி வாய்ந்த குண்டு என்பதால் உயிர் இழப்பு மற்றும் காயம் அடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. தற்போது இப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போலீசாரின் ஈகோ - விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் “மர்ம” சாவு.


மதுரை அருகே போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் அடித்து கொன்று விட்டதாக உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை ஆத்திக்குளத்தை சேர்ந்தவர் மார்க்கண்டேயன் கட்டிட காண்டிராக்டர். இவரது மகள் சந்தானகவுரி. சில நாட்களுக்கு முன்பு சந்தானகவுரியை அவரது காதலர் (தாய் வழி உறவினர்) கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மார்க்கண்டேயன் ஊமச்சிகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் இவரது புகாரை ஏற்காமல் அலட்சியப்படுத்தி நிலுவையில் விட்டுவிட்டனர். இதனிடையே கடத்தி செல்லப்பட்ட சந்தானகவுரி கோவையில் இருக்கும் தகவலறிந்து மார்க்கண்டேயன் உறவினர்களுடன் கோவை சென்றிருக்கிறார்.

கோவை பீளமேடு காவல்நிலையத்தில், தனது மகள் கடத்தி வரப்பட்டு கோவையில் உள்ளாரென்றும் அவரை கண்டுபிடித்து தரவேண்டுமாய் ஒருபுகார் தந்திருக்கிறார்.

ஆனால் கடத்தி வரப்பட்ட அவரது மகளுக்கு கோவை பீளமேடு காவல் நிலையத்தில் வைத்துதான் காவல்துறை ஆணையாளர் முன்னிலையில் திருமணம் நடந்ததாக மார்க்கண்டேயனுக்கு தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் எங்கே என கேட்டதற்கு, தெறியாது என்று கோவை காவல்நிலையத்தில் இருந்து பதில் வந்திருக்கிறது. மேலும் காவலர்களின் சமாதானப் பேச்சிற்கு உடன்படாத மார்க்கண்டேயனிடம் வாக்குவாதம் வலுத்திருக்கிறது. நம்முடைய பேச்சிற்கு கட்டுப்பட மறுக்கிறானே என்று காவலர்களுக்கு கோபம் வெடித்து இருக்கிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மார்க்கண்டேயன் மீண்டும் ஊமச்சிகுளம் போலீஸ் நிலையத்திற்கு சென்று நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுக்க சென்றுள்ளார்.

இதனிடையே சந்தானகவுரியை கடத்தி சென்றவர்கள் தரப்பில் 2 பேரை காணவில்லை என்றும், மார்க்கண்டேயன் கடத்தி கொலை செய்திருக்கலாம் என்றும் ஊமச்சிகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மார்க்கண்டேயன் கோவையிலிருந்து மதுரை வருவதற்குள் மேற்கண்ட புகார் தரப்பட்டுள்ளது. இதன் பின்ன்னியில் கோவை போலிசார் இருந்துள்ளனர்.

கோவை போலிசாரின் இந்த செயலுக்கு காரணம்தான் என்ன? ஈகோ தான் காரணம் என்று அறியப்படுகிறது. தங்களுடைய காவல்நிலையத்தில் நடந்த, நாம் நடத்திவைத்த திருமணத்தில் பிரச்சினையா இரண்டில் ஒன்று பார்த்து விடுவது எனும் ஈகோ.

யார் பெற்ற பிள்ளைக்கு யார் ஈகோ பார்ப்பது?

ஊமச்சிகுளம் போலீசார் மார்க்கண்டேயன் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று விசாரணைக்காக மார்க்கண்டேயனை அழைத்து சென்று உள்ளனர். போலீஸ் நிலையத்தில் விடிய, விடிய விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அங்குள்ள கைதி அறையில் மார்க்கண்டேயனை அடைத்துள்ளனர்.

அதிகாலை மார்க்கண்டேயன் லாக்கப் அறைக்குள் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். உடனடியாக போலீசார் அவரது உடலை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின் உறவினர்களுக்கு தகவல் சொல்லப்பட்டது.

உடல் முழுவதும் இரத்த காயங்களோடு காணப்பட்ட மார்க்கண்டேயனைப் பார்த்ததும் உறவினர்கள் கொதித்துபோனார்கள். மார்க்கண்டேயனை போலீசார் அடித்து கொன்றுவிட்டதாக அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மறியலிலும் ஈடுபட்டனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க் மற்றும் அதிகாரிகள் ஊமச்சிகுளம் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே மார்க்கண்டேயன் சாவிற்கு காரணமான போலீசார் மூவரும் தலைமறைவாகி உள்ளதாகத் தெறிகிறது. இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் “மர்ம” சாவு மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவிகளை நிர்வாணமாக்கி ரசித்த மாணவர்கள்...


நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த விடுதி விழாவில் 3 மாணவிகளை நிர்வாணமாக்கி நடனமாட வைத்து சில மாணவர்கள் ராக்கிங் செய்து ரசித்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் 4 மாணவர்கள் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்குவதற்கு வசதியாக பாளை ஐகிரவுண்டில் மாணவர்களுக்கு 'இளவரசர் மாளிகை' என்ற பெயரிலும் மாணவிகளுக்கு 'இளவரசிகள் மாளிகை' என்ற பெயரிலும் தனித்தனியாக விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கியுள்ளனர். விடுதியிலுள்ள மாணவ, மாணவிகள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விடுதி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு ஏப்ரல் 23ல் விடுதி விழா நடந்தது. விழா முடிந்ததும் ஒவ்வொவரும் வீடுகளுக்கும் விடுதிக்கும் திரும்பினர். விழா மகிழ்ச்சியில் சில மாணவர்கள் குடித்துவிட்டு மாணவிகள் விடுதிக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த 3 மாணவிகளை உடைகளைக் கழற்றுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள் பின்னர் மாணவர்களின் மிரட்டலுக்குப் பணிந்தனர். இதன்பிறகு மாணவர்கள் அந்த மாணவிகளை நிர்வாணமாக நடனமாட கூறி வற்புறுத்தியுள்ளனர். வேறுவழியின்றி அவர்களும் நடனமாடினர். இதை தங்களது செல்போனில் அவர்கள் படம்பிடித்துள்ளனர். தொடர்ந்து விடுதிக்குள் வந்த சில மாணவிகளிடமும் மாணவர்கள் அத்துமீற முயன்றுள்ளனர்.

இதை பார்த்த மாணவி ஒருவர் துணிச்சலாக பெற்றோருக்கும் பேராசிரியர் களுக்கும் செல்போனில் தகவல் தெரிவித்தார். விடுதிக்குப் பேராசிரியர்கள் வருவது தெரிந்ததும் மாணவிகளிடம் அத்துமீறிய மாணவர்கள் அங்கிருந்து நழுவினர். இச்சம்பவம் தொடர்பாக 9 பேர் கொண்ட பேராசிரியர்கள், பேராசிரியைகள் குழு அமைக்கப் பட்டு மாணவிகளிடமும் அத்துமீறிய மாணவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை குழு நடவடிக்கையில் இரண்டு மாதம் காலதாமதம் ஏற்பட்டதால் பா.ஜ.க சார்பில் கல்லூரிக்கு எதிராக போராட்டம் நடந்தது. பின்னரே ஏப்ரல் 23ந்தேதி நடந்த சம்பவத்திற்கு ஜுன் மாதம் 10ம் தேதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கல்லூரி நிர்வாகம் பிரச்சனையை அப்படியே மறைக்க எண்ணியதோ என்னவோ தெரியவில்லை. இதனால் கல்லூரி வளாகத்திற்குள் கசிந்த விவகாரம் அனைவருக்கும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்ததும் மாவட்ட ஆட்சித்தலைவர் நடராஜனும், காவல்துறை அதிகாரிகளும் இச்சம்பவத்தில் மாணவிகள் ராக்கிங் செய்யப்பட்டனரா? என விசாரிக்க உத்தரவிட்டனர். இதற்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மனோகரன் மற்றும் விசாரணை குழுவினரிடம் நேற்று மாலை மாவட்ட ஆட்சித்தலைவர் நடராஜன் நேரில் விசாரணை நடத்தி விளக்கம் கேட்டார். அப்போது நடந்த சம்பவங்களையும் இதுவரை மாணவ, மாணவிகளிடம் நடத்தப் பட்ட விசாரணை குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் விசாரணை குழுவினர் தெரிவித்தனர். இதற்கிடையில் மாணவிகளிடம் அத்துமீறி நடந்ததாக mbbs மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் பாலவிக்னேஷ், சுந்தரவேல், கமலேஷ்குமார், மற்றும் பயிற்சி மருத்துவர் ஒருவரும் ஆக 4 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மனோகரனிடம் கேட்ட போது, "மாணவிகள் தரப்பில் புகார் கூறப்பட்டதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் நடந்த சம்பவத்தை மிகைப்படுத்தி விட்டனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடமும் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளோம். முதற்கட்டமாக 4 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது"என்றார்.

பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் தரப்பில் கூறுகையில், "இச்சம்பவத்தில் கல்லூரி நிர்வாகம் மெத்தனமாக செயல்பட்டது. அத்துமீறி நடந்த மாணவர்களைக் காப்பாற்ற சிலர் முயற்சித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் முழுவிபரத்தையும் கூறியும் மாணவர்கள் மீது எதிர்காலம் நலன்கருதி நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகம் தயக்கம் காட்டுகிறது. இவர்களைத் தண்டிக்காமல் விட்டு விட்டால் இதே தவறு மீண்டும் தொடரும். எனவே மற்றவர்களுக்குப் பாடமாக அமைய சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.