Saturday, December 24, 2011

முல்லைப் பெரியாறு: இறுதிகட்ட ஆய்வைத் தொடங்கியது நிபுணர் குழு.



முல்லைப் பெரியாறு அணையில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தொழில் நுட்ப குழு இன்று காலை இறுதிகட்ட ஆய்வைத் தொடங்கியது.

இந்தத் தொழில்நுட்ப குழுவில் இடம்பெற்று உள்ள உறுப்பினர்கள் சி.டி.தத்தா, டி.கே.மேத்தா ஆகியோர் குமுளி அருகேயுள்ள தேக்கடியில் இருந்து காலை 9.45 மணிக்கு படகின் மூலம் முல்லைப் பெரியாறு அணைக்குப் புறப்பட்டது.

அப்போது, தமிழக மற்றும் கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்திருந்தனர்.

இந்த ஆய்வின்போது, ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளை சந்திக்கக் கூடாது என்று ஆய்வுக்குழுவுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இறுதிகட்ட ஆய்வு...

முல்லைப்பெரியாறு அணை வலுவிழந்து விட்டதாகக் கூறி, புதிய அணை கட்டும் முயற்சியில் கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இடுக்கி மாவட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே அணை உடையும் அபாயத்தில் இருப்பதாக பிரசாரம் செய்வதோடு, பல இடங்களில் சேத தடுப்பு மற்றும் கண்காணிப்பு மையங்களையும் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதேவேளையில், முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அணையின் உறுதித்தன்மையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப் பட்டது.

இதற்காக உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவினர் ஏற்கெனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆய்வு செய்தனர். அப்போது 2 கட்டமாக ஆய்வு நடந்தது. அணையில் அதிர்வலை சோதனை மற்றும் தேக்கடி ஏரியின் மண்படிவத்தை சேகரித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில், தொழில்நுட்ப குழுவில் இடம்பெற்று உள்ள உறுப்பினர்கள் சி.டி.தத்தா, டி.கே.மேத்தா ஆகியோர் முல்லைப் பெரியாறு அணையில் இறுதிக்கட்ட ஆய்வில் ஈடுப்பட்டுளனர்.

கொச்சிக்கு விமானம் மூலம் நேற்று வந்தக் குழுவினர் இருவரும் கார் மூலம் இடுக்கி அணைக்கு சென்றனர். அங்கு, இடுக்கி அணையை பார்வையிட்டுவிட்டு, அருகில் உள்ள கொளமாவு, செருதோணி ஆகிய அணைக்கட்டுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதைத்தொடர்ந்து குழுவினர் தேக்கடிக்கு சென்று இரவு தங்கினார்கள். இன்று முல்லைப் பெரியாறு அணைக்குப் புறப்பட்டனர். அணை பகுதி மற்றும் மதகு, பேபி அணை, அதன் அருகில் உள்ள எர்த் டேம் என்ற பகுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

அணையின் உறுதித்தன்மை குறித்து தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்ய இருப்பதாக தெரிகிறது.

அணையின் இறுதிக்கட்ட ஆய்வாக அணைக்கு அடியில் உள்ள மண்ணை எடுத்து பரிசோதனை செய்வதற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து 2 ராட்சத டிரில்லிங் எந்திரங்கள் அணைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் ஒரு எந்திரம் துளையிடுவதற்காகவும், மற்றொரு எந்திரம் துளையிட்ட இடத்தை மீண்டும் அடைப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

அந்த எந்திரங்களை வைத்து அணையில் 7 இடங்களில் 30 அடி ஆழத்துக்கு துளையிட்டு கீழே இருக்கும் மண்ணை எடுத்து பரிசோதிக்கப்பட இருக்கிறது.

அதன்மூலம் அணையின் உறுதித்தன்மை எந்த அளவில் உள்ளது என்பதை கண்டறியமுடியும். பரிசோதனைக்காக துளையிட்டு மண் எடுக்கும் பணி, தொழில்நுட்ப குழுவினர் முன்னிலையில் நடக்கிறது.

ஒரேநாளில் மண் எடுக்கும் பணி முடியவில்லை என்றால் மறுநாளும் அதை தொடருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகளை தொழில்நுட்ப குழுவினர் முழுமையாக பார்வையிட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த மண் பரிசோதனைக்கு பிறகு அணையின் பலம் உறுதி செய்யப்பட்டுவிடும் என்பதால், இதுவே இறுதிக்கட்ட ஆய்வாக கருதப்படுகிறது.

இந்தத் தொழில்நுட்ப குழுவினர் ஞாயிற்றுக்கிழமை வைகை அணைக்கு சென்று பார்வையிடுகின்றனர். அதன்பிறகு திண்டுக்கல் மாவட்டம் பேரணை மற்றும் வாய்க்கால்களை பார்வையிடுகிறார்கள்.

எனக்கு எதிராக 'பொய் சாட்சி' : சிபிஐ மீது ஆ.ராசா குற்றச்சாட்டு.



2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தனக்கு எதிராக 'பொய் சாட்சி'யை சிபிஐ உருவாக்கியுள்ளதாக, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா குற்றம்சாட்டினார்.

சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி முன்பு, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவரான ஆ.ராசா சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர், இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிடம் கூடுதல் தனி உதவியாளராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரி என்பவர் சாடசியம் அளித்தார்.

ஆ.ராசாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிய அவர், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட கார்ப்பரேட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் ராசா அவ்வப்போது தொடர்புகொண்டு பேசி வந்ததாக கூறினார்.

அப்போது, நீதிமன்றத்தில் சந்தோலியா (ராசாவின் முன்னாள் உதவியாளர்) அருகில் இருந்த ஒரு நபரை சுட்டிக்காட்டி, அவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நீதிபதியிடம் புகார் கூறினார். இதனால், நீதிமன்றம் பரபரப்பானது.

பின்னர், கொலை மிரட்டல் விடுத்தவர் என ஆசிர்வாதத்தால் புகார் கூறப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தியபோது, அதுபோன்ற சம்பவம் எதுவும் நிகழவில்லை என்பது சிபிஐக்கு தெரியவந்தது.

ராசா குற்றச்சாட்டு...

இந்த நிலையில், சிபிஐ-யின் முக்கிய சாட்சியாகக் கருதப்படும் ஆசிர்வாதம் ஆச்சாரியை ராசா சார்பில் அவரது வழக்கறிஞர் சுஷில் குமார் குறுக்கு விசாரணை செய்தார்.

அப்போது, நேற்றைய தினம் நடந்தவை அனைத்தையும் நாடகம் என்று அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், இந்த வழக்கில் சிபிஐ பொய்யாக உருவாக்கியுள்ள சாட்சியம்தான் ஆசீர்வாதம் ஆச்சாரி. அவர் சொல்வது அனைத்தும் தவறானவை. நேற்று கூட அவர் அரங்கேற்றிய கொலை மிரட்டல் நாடகத்தை நீங்கள் அறிவீர்கள்.

சந்தோலியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை, வரும் 2-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. அவருக்கு ஜாமீன் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே இந்த நாடகம் நடத்தப்பட்டது. ஆசிர்வாதம் ஆச்சாரி பொய் சாட்சியம் என்பதற்கு இதுவே சான்று," என்றார் அவர்.

இதைத் தொடர்ந்து நீதிபதி ஓ.பி.சைனி கூறுகையில், "அவர் (ஆச்சாரி) மிரட்டல் பற்றி முன்பு ஒருபோதும் தெரிவிக்கவில்லை. அப்படி ஏற்கெனவே சொல்லி இருந்தால், அந்தப் புகார் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதன் மூலம், இந்த வழக்கில் பலருக்கும் ஜாமீன் கிடைத்திருக்காது," என்றார்.

இந்த வழக்கில் மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை சாட்சிகளிடம் தாம் குறுக்கு விசாரணை செய்யப்போவதில்லை என்று தெரிவித்து இருந்த ஆ.ராசா, வியாழக்கிழமையில் இருந்து குறுக்கு விசாரணை செய்யத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மெரினாவில் நாளை மக்கள் திரள் போராட்டம்.

முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கக் கோரி, சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் மக்கள் திரள் போராட்டத்தில் மதிமுகவும் பங்கேற்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பாக தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், தமிழகத்தின் உரிமைகளை காத்திட வலியுறுத்தியும், தேனி மாவட்ட மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், சென்னை மெரினா கடற்கரையில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு மக்கள் திரள் போராட்டம் நடைபெறுகிறது.

'மே பதினேழு' இயக்கம் சார்பில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான், ஆர்.கே.செல்வமணி, மணிவண்ணன், கவுதமன், சேரன், முன்னாள் எம்.எல்.ஏ. பண்ருட்டி வேல்முருகன், திருமுருகன், ஓவியர் வீர சந்தானம் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த நிலையில், மதிமுக பொதுச் செயலர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், "முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டோம் என்றும், புதிய அணை கட்ட மாட்டோம் என்றும் 2006-ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துவோம் என்றும் கேரளம் முடிவெடுக்கும் வரை தமிழகத்தில் போராட்டம் புதிய புதிய வடிவங்களைப் பெறும்.

அதனால்தான் நாளை 25-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலைக்கு அருகில் மாலை 3 மணி அளவில் தமிழக உரிமை காக்கும் உணர்வாளர்கள் மக்கள் திரளாக பங்கேற்க மே 17 இயக்கத்தினரும், கலை உலக விற்பன்னர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.

உலகமெல்லாம் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் திரள்கிறோம் "நிதியின் மேல் பசிதாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்" என்றார் ஏசு பெருமான்.

முல்லைப் பெரியாறில் தமிழ் நாட்டுக்கு நீதி நிலைக்க வேண்டும் என்ற பசிதாகத்தோடு பங்கேற்போம். ஆராயாது, தவறான தீர்ப்பளித்த வேந்தனை எதிர்த்து எரிமலையாய் சீறினாள் கண்ணகி இன்றோ, உண்மையைத் தெரிந்து கொண்டே அதற்கு மாறாக அநீதி செய்யும் மத்திய அரசை எதிர்க்கவே தமிழகத்தின் சீற்றத்தைக் காட்ட கடற்கரையில் திரண்டிடுவோம். கட்சி அடையாளங்களையும், கட்சிக் கொடிகளையும் தவிர்க்க வேண்டுகிறேன்," என்று வைகோ கூறியுள்ளார்.