Saturday, February 26, 2011

மாணவர்களின் கேள்விகளுக்கு டாக்டர்.அப்துல்கலாமின் பதில்கள். (பகுதி -4)




46.உங்கள் ரோல்மாடல் யார்?
ஜெயந்தி, ஸ்ரீராமசாமி நாயுடு மெமோரியல் கல்லூரி, சாத்தூர்

டாகடர் அப்துல்கலாம் :
என்னுடைய ரோல் மாடல் பேராசிரியர் சதீஷ் தவான். அவரது தலைமைப்பண்புகள் என்னைக் கவர்ந்தது. முக்கியமான பணிகளை மேற்கொண்டிருக்கும் போது, பிரச்னைகள் வரும். அந்த பிரச்னைகளை தோற்கடித்து நாம் வெற்றி பெற வேண்டும் என்று என்னிடம் அவர் கூறினார்.

47.நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிய முடியுமா?

கணேஷ்ராம், பனிமலர் இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை

டாகடர் அப்துல்கலாம் : ராணுவ படைகள் மற்றும் இடர்பாடு மேலாண்மைத் துறையினர் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று, உதவி வருகிறார்கள்.நாம் நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியுமானால், சேதத்தை குறைக்கலாம். இதற்கான ஆராய்ச்சி துவங்கிவிட்டது. இடர்பாடு நிர்வாகத்துறையினர் சேத அளவை குறைக்கவும், நிவாரணப் பணியில் ஈடுபடவும் செய்கின்றனர். விஞ்ஞானிகளும் முன்னெச்சரிக்கை அறிவிப்புக்கான கருவிகளை உருவாக்கி வருகின்றனர். இது பேரிழப்புகளை தவிர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்.

48.ஹீலியம் - 3 எந்த அளவுக்கு நமக்குப் பயன்படும்?
அன்புச்செல்வன், டால்பின் மெட்ரிக் பள்ளி, பொன்மேனி, மதுரை

டாகடர் அப்துல்கலாம் : சந்திரனில் ஹீலியம் -3 பெருமளவில் உள்ளது. எரிபொருளுக்கான மிக நேர்த்தியான மூலப்பொருள் இது. நல்ல ஆற்றல் அதே சமயம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது. கதிர்வீச்சு இருக்காது. 21ம் நூற்றாண்டுக்கான எரிபொருள் இது என்று எல்லோரும் வரவேற்கிறார்கள்.

49.எதை வெற்றிகரமான சாதனையாக கருதமுடியும்?
எஸ்.சிவா, தங்கவேலு தொழில்நுட்ப கல்லூரி, சென்னை

டாகடர் அப்துல்கலாம் : இது மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது. பிறரால் சாதிக்க முடியாத ஏதேனும் ஒன்றை, சாதித்துக்காட்டி ஜெயித்தால், நீங்களும் சாதனையாளரே.

50.உங்களுக்கு அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை உள்ளதா?
எஸ்.மகாலட்சுமி, ஸ்ரீ ஆண்டாள் அழகர் இன்ஜினியரிங் கல்லூரி, மாமண்டூர்

டாகடர் அப்துல்கலாம் : விடாமுயற்சியுடனான, கடின உழைப்பும், வியர்வையுமே வெற்றியை பெற்றுத்தரும்.

51.இளைய தலைமுறைக்கு உங்களது அறிவுரை? அவர்களிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
ஆர்.ஜெயந்தி, ஸ்ரீராமசாமி நாயுடு நினைவு கல்லூரி, சாத்தூர்

டாகடர் அப்துல்கலாம் : படிப்பில் சாதியுங்கள். அறிவையும் அனுபவத்தையும் வளர்த்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் இலக்கை தீர்மானியுங்கள். அந்த இலக்கை நீங்கள் அடைய முயற்சிக்கும் போது, கண்டிப்பாக சில பிரச்னைகளை சந்திப்பீர்கள். பிரச்னைகள் உங்களை வீழ்த்திவிடக்கூடாது. நீங்கள் அவற்றை துணிவுடன் எதிர்கொண்டு வீழ்த்துங்கள். நாட்டின் முன்னேற்றத்துக்கு பங்காற்றக் கூடிய அறிவான குடிமக்களாக நீங்கள் உருவாக வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.

52.இந்த வயதில் எனக்கு ஏற்படும் மனச்சிதறல்களிலிருந்து என்னை நான் பாதுகாத்துக் கொள்வது எப்படி?
சிவா, டி.ஐ., இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, காரப்பாக்கம், சென்னை

டாகடர் அப்துல்கலாம் : மனச்சிதறல்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமே. மாணவப் பருவம் பொறுப்புள்ளது என்பதால் நம் பலம் மற்றும் ஆர்வத்தை அறிந்து கொள்ள வேண்டும். உங்களது லட்சியத்தை நீங்கள் வகுத்துக் கொள்ளுங்கள். அதை அடைவதற்காக நீங்கள் தொடர்ந்து போராடுங்கள். இந்த லட்சியத்தை அடையும் போது நீங்கள் கண்டிப்பாக சில பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்த பிரச்னைகளை தோற்கடித்து உங்கள் லட்சியத்தில் நீங்கள் வெற்றி பெறுங்கள்.

53.நர்சிங் துறை பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
மூகாம்பிகை, மங்களசுந்தரி, மதர்தெரசா போஸ்ட் கிராஜுவேட் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்சஸ், புதுச்சேரி

டாகடர் அப்துல்கலாம் : நர்சிங் மிகச்சிறந்த உன்னதமான பணி. இரவிலும் பகலிலும் வேதனையுறுவோருக்கு தேவையானதை செய்யும் பணி என்பதால் ஆஸ்பத்திரி வார்டுகளில் அவர்கள் தேவதை போல் காட்சியளிப்பார்கள். இந்த பணியில் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. உலகம் முழுவதும் இப்பணிக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். இந்திய நர்ஸ்கள் எங்கு போய் பணியாற்றினாலும் அவர்களுக்கு நல்ல மரியாதை உண்டு.

54.இந்தியாவில் ஏராளமான தோரியம் தாது உள்ளது.ஆனால் அணு உலைகளுக்கு எரிபொருளுக்கு அடுத்த நாடுகளை நம்பியிருக்கிறோமே?
பிரதீப் குமார், 12ம் வகுப்பு, பி.வி.எம்., பள்ளி, பொள்ளாச்சி

டாகடர் அப்துல்கலாம் : இன்னும் சில ஆண்டுகளில் நமது விஞ்ஞானிகள் இதில் வெற்றி கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.00ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில்

55.இந்தியா எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது?
தரண்குமார், குமரகுரு இன்ஜினியரிங் கல்லூரி, கோவை

டாகடர் அப்துல்கலாம் : ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் தற்போது இதற்கான வசதி பெருகி வருகிறது. ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு போதுமான சுதந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலிருந்து கூட இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் திட்டங்கள் மேற்கொள்ள மாணவர்கள் வருகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலை மற்ற இன்ஜினியரிங் பிரிவுகளிலும் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

56.ஒரு மதத்துக்குள்ளேயே பல பிரிவுகள் உள்ளபோது, நீங்கள் எப்படி பல்வேறு மதங்களை மதிக்கிறீர்கள்?
கமலாதரன், மருதுபாண்டியன் நகர், சிவகங்கை

டாகடர் அப்துல்கலாம் :
நமது மதங்கள் மிக அழகான தீவுகளைப் போன்றவை. மதம் என்பது ஆன்மிகமாக மறுமலர்ச்சி அடைய வேண்டும். எல்லோரிடமும் ஒருமைப்பாட்டை பார்க்க வேண்டும். மதம், ஜாதி மற்றும் மொழி வேறுபாட்டுக்கு ஆதரவாக செயல்படமாட்டேன் என்று எல்லா மாணவர்களும் ஓர் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

57.சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் சூரியன் என்னவாகும்?
கிரிதர்ராஜ், இ.பி.ஜி., மெட்ரிக். பள்ளி, மூன்றுமாவடி, மதுரை

டாகடர் அப்துல்கலாம் : சூரியன் இதற்கு முன்பு 460 கோடி ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக இயங்கி வந்திருக்கிறது. இன்னும் 50 லட்சம் ஆண்டுகளுக்கு அதிலுள்ள எரிபொருட்கள் தீராது. சூரியனின் கடைசி காலத்தில் அதிலுள்ள ஹீலியம் குறைந்து பிற தனிமங்களால் அது பெரிதாகத் துவங்கும், அவ்வாறு விரிவடையும் போது, அது பூமியையே விழுங்கிவிடும்.

58.உங்களைப் போன்று உயர்ந்த பணிகளை மேற்கொள்ள நானும் விரும்புகிறேன். வழி சொல்லுங்களேன்.
உமர் பரூக், யாதவா கல்லூரி, மதுரை. சத்யா, பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கல்லூரி, வத்தலக்குண்டு

டாகடர் அப்துல்கலாம் : இளைஞர்களாகிய உங்களுக்கு வாழ்வில் லட்சியம் வேண்டும். இலக்கை தீர்மானித்த உடன் அதற்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை. சலிக்காத மனம், இடைவிடாத கடின உழைப்பு இருந்தால் தடைகளை தாண்டி இறுதியில் வெற்றி பெறலாம்.

59.கடவுள் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டா?
ஹேமா, எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி, மதுரை.

டாகடர் அப்துல்கலாம் : நோபல் பரிசு பெற்ற ஐன்ஸ்டீன் மற்றும் சர் சி.வி.ராமன் போன்றோர் கூட இந்த அண்ட சராசரத்தை படைத்த கடவுளின் விந்தையை கண்டு பிரமித்தனர். ராமன் கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். என்னைப் பொறுத்தவரை நமக்கு இறைவன் மீது நம்பிக்கை இருந்தால், நமது முயற்சியின் முடிவு பல மடங்காகப் பெருகும்.

60.நேனோ டெக்னாலஜியின் எதிர்காலம் என்ன?
ஜெகநாதன், அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர். கவிதா, கலைமகள் கல்லூரி, கோவை. ஷியாம் சுந்தர், வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, திருப்புவனம். முருகேசன், காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம்

டாகடர் அப்துல்கலாம் : மிக நேர்த்தியான தொழில்நுட்பத்தைக் கொண்டது நேனோ டெக்னாலஜி. மருத்துவத்துறையில் இந்த தொழில்நுட்பம் சாமான்யர்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது. பயோ இன்பர்மாடிக்ஸ் துறையுடன் இந்த துறை எதிர்காலத்தில் சங்கமிக்கும் வாய்ப்புள்ளது. அது மருத்துவத் துறையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும்.

61.வளர்ந்த நாடாக இந்தியா உருவாகும் போது விவசாயத்தின் நிலை என்ன?
ராஜபிரபு, பி.எஸ்.என்.ஏ., கல்லூரி, திண்டுக்கல். சதீஷ்ராஜா, குமாரசாமி இன்ஜினியரிங் கல்லூரி, கரூர்

டாகடர் அப்துல்கலாம் : நம் நாட்டில் 70 கோடி மக்கள் இன்னும் கிராமத்தில் வாழ்கிறார்கள். இதற்காக குறைந்தபட்சம் 7 ஆயிரம் கிராமங்களை நகர்ப்புறங்களுக்கு இணையான வசதி கொண்ட தொகுப்புகளாக மாற்ற வேண்டும். இதனால் அக்குறிப்பிட்ட கிராமங்களுடன் அதை சுற்றியுள்ள கிராமங்கள் சாலை வசதிகள், மின்னணு வசதி, தொலைதொடர்பு வசதி கிடைக்கும். அக்கிராமங்களும் முன்னேற்றம் அடையும். தமிழகத்தில் தஞ்சாவூரில் உள்ள வல்லம் கிராமம் 65 கிராமங்களை தன்னுடன் இணைத்து நகர்ப்புறத்துக்கு இணையாக திகழ்கிறது. வளர்ந்த நாடாக மாறும்போது கிராமங்கள் வளர்ந்தால்தான் விவசாயமும் விளைபொருட்களும் உயரும்.

62.இன்றைய வாழ்க்கையில் அறிவியல் இரண்டற கலந்துவிட்டது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?
தீபக் ராஜ், குலப்பட்டி பாலகிருஷ்ணா ஜோஷி குருகுலம் பள்ளி, கொளத்தூர்

டாகடர் அப்துல்கலாம் : ‘டிவி, ரேடியோ, தொலைதொடர்பு அமைப்புகள், வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் அறிவியலின் விளைவுகளே. எதிர்காலத்திலும் இவற்றில் அனைத்திலும் அறிவியல் வளர்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தும். பண்ணைகளில் உற்பத்தியை பெருக்குவது, கடலில் குறிப்பிட்ட இடங்களில் மீன்களை அறிவது, வானிலை அறிக்கை ஆகிய அனைத்துமே அறிவியல் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம்.

63.இந்தியா முழுவதும் ஆறுகளை எப்போது இணைப்பார்கள்?
ராமகிருஷ்ணன், இன்ஸ்டிடியூட் ஆப் ரோட் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜி, ஈரோடு

டாகடர் அப்துல்கலாம் : ஆறுகளை இணைப்பது மிகுந்த பலன் தரக்கூடியது. மத்திய பிரதேசத்தில் சிறு ஆறுகளை இணைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. எதிர்வரும் தலைமுறைக்கு இது முக்கியமான பணி.

64.ஏழ்மையை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?
தினேஷ், சி.ஐ.டி., பாலிடெக்னிக், கோவை

டாகடர் அப்துல்கலாம் : கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களுக்கு இணையான வசதிகளை உருவாக்கித் தரும் புறா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம்தான் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் ஏழ்மையை ஒழிக்க முடியும். இது கிராமப்புற மக்களின் தொழில் வாய்ப்பையும் தொழில்முனையும் திறனையும் அதிகரித்து அவர்களது வாழ்க்கையை வளம் பெற செய்யும்.

65.இந்திய மாணவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன?
கார்த்திக், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லூரி, கோவை

டாகடர் அப்துல்கலாம் : எதிர்வரும் 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக வேண்டும். அந்த வல்லரசான நாட்டில் மாணவர்கள் வாழ வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. இந்த சூழலில் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பும் வளர்ச்சியும் ஏற்படும்.

66.எதிர்கால சந்ததியினரிடம் எதிர்பார்ப்பது என்ன?

மதுமிதா, ஸ்ரீசாரதா வித்யாவனம் மெட்ரிக் பள்ளி, மதுரை

டாகடர் அப்துல்கலாம் : இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதை கனவாகக் கொண்டு மாணவர்கள் செயல்பட வேண்டும். நீங்கள் ஒரு லட்சியத்தை கொண்டு, எதிர்வரும் தடைகளை தகர்த்து, சிறப்படைய வேண்டும். விடுமுறை காலங்களில் மாணவர்கள் தங்கள் லட்சியங்களை தீர்மானித்துக் கொள்ளும் வாய்ப்பாக கொள்ள வேண்டும். இயலாதவர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும்

நன்றி : கல்வி மலர்

Monday, February 21, 2011

மாணவர்களின் கேள்விகளுக்கு டாக்டர்.அப்துல்கலாமின் பதில்கள். (பகுதி -3)





31.இந்தியாவில் மூளைவறட்சி ஏன்?
ஆகாஷ் சந்திரன், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி, அண்ணாநகர், சென்னை.
முஸ்தபா,ஸ்ரீ ஐயப்பா பாலிடெக்னிக் கல்லூரி, வேப்பூர், கடலூர்


டாகடர் அப்துல்கலாம் :
இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் பிற துறைகளில் ஏராளமான துறை நிபுணர்களை இந்தியா உருவாக்கி வருகிறது. இவர்களில் சிலர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவதைப் பற்றி நாம் கவலை அடைய வேண்டாம். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் கல்வி நிறுவனங்களுடனும் தொடர்பு வைத்துள்ளனர். சொந்த நாட்டில் பணிபுரிவதா அல்லது வெளிநாட்டுக்கு செல்வதா என்பது தனிநபர் விருப்பத்தைப் பொறுத்ததுதான். தேசத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேட்கை உள் உணர்வில்தான் ஏற்படுவது.

32.நிலவுக்கு மனிதனை எப்போது இந்தியா அனுப்பும்?
பிரபு, ரயில்வே காலனி மேல்நிலை பள்ளி, ஈரோடு

டாகடர் அப்துல்கலாம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் இதுதொடர்பாக முயற்சி செய்து வருகிறார்கள். சந்திரனில் தற்போது பூமியில் காணப்படும் எரிபொருளை விட 10 மடங்கு அதிக சக்தி கொண்ட எரிபொருளான ஹீலியம்-3 சந்திரனில் காணப்படுகிறது. ஏழ்மையை ஒழிக்க அவற்றை இங்கு கொண்டு வருவது அவசியம். நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம்தான் இஸ்ரோவின் அடுத்த முக்கிய திட்டம்.

33.கல்லாமையை ஒழிக்க மாணவர்களாகிய எங்கள் கடமை என்ன?
தண்டபாணி, தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகம், கோவை

டாகடர் அப்துல்கலாம் : மாணவர்களாகிய நீங்கள் கல்லாமையை ஒழிப்பதில் பங்கேற்க முடியும். உங்கள் விடுமுறை காலங்களில் நீங்கள் அருகில் உள்ள கிராமத்துக்கு சென்று அங்கு 10 பேருக்கு எழுத படிக்க சொல்லிக் கொடுங்கள். இதுபோன்ற முயற்சியை மாணவர்கள் தொடங்கினால் இந்தியாவில் கல்லாமை என்பது இல்லாமல் போய்விடும்.

34.நல்ல அறிவாளிகள் வெளிநாட்டில் வேலை செய்வதையே விரும்புகிறார்களே ஏன்?
ஸ்ரீமணிகண்டன், சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி, மதுரை. சண்முகபிரியா, ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, சென்னை. அசாருதீன், எஸ்.ஐ.வி., மெட்ரிக் பள்ளி, மேட்டுப்பாளையம்.

டாகடர் அப்துல்கலாம் : இந்தியாவில் மிகச்சிறந்த நிறுவனங்கள் ஆராய்ச்சிக்காக செயல்பட்டு வருகின்றன. சிலர் வெளிநாட்டுக்கு செல்வதை விரும்புகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் உள்கட்டமைப்புகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம். ஆண்டுக்கு மூன்று கோடி பட்டதாரிகளை நாம் உருவாக்குகிறோம். இவர்களில் சிலர் வெளிநாட்டுக்கு செல்வதைக் கண்டு நம் நாட்டில் அறிவு வளம் குறைந்துவிட்டது என்று கவலை கொள்ள வேண்டாம். அவர்களால் நம் இந்தியாவின் அறிவு வளமும் பெருகுகிறது என்றுதான் நினைக்க வேண்டும்.

35.மேற்கத்திய கலாசாரத்தால் நம் கலாசாரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை மாணவர்கள் மாற்றுவது எப்படி?
சந்தீப், சிந்தி மாடல் ஸ்கூல், சென்னை. பிரீத்தி கோமதி, சிவகாசி நாடார் மெட்ரிக் பள்ளி, மதுரை. ராமதாஸ், விப்ரோ டெக்னாலஜிஸ், சென்னை.

டாகடர் அப்துல்கலாம் : குடும்பம் மற்றும் சமூகத்தால் கலாசாரம் மாற்றம் ஏற்படுகிறது. பாடத்திட்டத்திலும், கூடுதல் பாடத்திட்டத்திலும் நம் கலாசார நெறிகளை நாம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். மதிப்பீடு அடிப்படையிலான கல்வி திட்டம் அவசியம்.

36.ஜீரோ கிராவிட்டி பற்றி கூறுங்களேன்
குமார், எச்.சி.எல்.லிட் ., புதுச்சேரி. ரமேஷ் ராஜா, சி.எஸ்.சி., கம்ப்யூட்டர் மையம், சென்னை.

டாகடர் அப்துல்கலாம் : விண்வெளி பயணத்தில் ஈடுபடுவோர் ஜீரோ கிராவிட்டி அதாவது புவியீர்ப்பு விசையை உணராத நிலையை அடைவார்கள். விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பும் போதும் இந்நிலையை அவர்கள் உணர்வார்கள்

.37.இந்திய பொருளாதாரத்தை சர்வதேச நாடுகளைவிட உயர்த்துவதற்கான வழிகள் என்ன?
அருள் முருகன், ஸ்வாதி, ஐ.எப்.இ.டி., காலேஜ் ஆப் இன்ஜினியரிங், விழுப்புரம். துர்கா, பிரின்ஸ் மெட்ரிக். பள்ளி, சென்னை. பிரியதர்ஷினி, தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரி, மதுரை. செழியன், டி.பி.ஜெயின் கல்லூரி, சென்னை. சுகன்யா, எஸ்.எஸ்.வி.சாலா மேனிலைப் பள்ளி ஆத்திகுளம்.

டாகடர் அப்துல்கலாம் : இந்திய பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் நகர்ப்புற பொருளாதாரம் ஆகிய இரண்டையும் சமப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நம் பொருளாதார வலிமையை மேம்படுத்த தகவல்தொடர்பு மற்றும் பயோடெக்னாலஜி துறையில் நாம் சிறந்து விளங்க வேண்டும். மக்களை மையமாகக் கொண்ட தொழில் கொள்கைகள், புதிய இளம் தலைவர்களை உருவாக்குதல், பயன்பாட்டு அடிப்படையிலான தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

38.இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் உள்ளனர். இதற்கு தீர்வு என்ன?
தீபா, அருணை இன்ஜினியரிங் கல்லூரி, திருவண்ணாமலை. கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி, நாகமலை.

டாகடர் அப்துல்கலாம் : மாணவர்களுக்கு தொழில் முனையும் திறன் வழங்காததுதான் அவர்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். கிராமப்புறங்களில் சிறிய அளவிலான தொழில்களை அமைக்க அவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். கிராமப்புறங்களை மையமாக கொண்டு, நகர்ப்புற வசதிகளை கிராமப்புறங்களுக்கு அளிக்க வேண்டும்.

39.நமது பாடத்திட்டத்தில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வர வேண்டுமா?
கார்த்திக், சாஸ்திரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

டாகடர் அப்துல்கலாம் : நமது பாடத்திட்டத்தில் அறிவியல் கருத்து அளவிலேயே உள்ளது. இது நடைமுறைக்கான செயல்முறை கற்றலிலிருந்து வெகு தூரத்தில் உள்ளது. நம்முடைய சிந்தனைகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளே இருக்கின்றன. நம்முடைய கல்வித் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். 5 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

40.நான் ஜனாதிபதி ஆக வேண்டும் என்று விருப்பப்படுகிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
சல்மான், ஹோலிகிராஸ் பள்ளி, சென்னை. ராமகிருஷ்ணன், இன்ஸ்டிடியூட் ஆப் ரோட் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜி, ஈரோடு.

டாகடர் அப்துல்கலாம் : இது நல்ல கனவு. உங்களுடைய செயல்களில் 100 சதவீத முயற்சி செய்யுங்கள். ஏதாவது ஒரு துறையில் சிறந்தவராக வாருங்கள். இடையில் சில தோல்விகள் வந்த போதிலும் அது பற்றி வருத்தப்படாதீர்கள். இறைவன் உங்களுக்கு துணை நிற்பார்.

41.ஜனாதிபதி அப்துல் கலாமுக்கும் விஞ்ஞானி அப்துல்கலாமுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
விஷ்ணு, வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, முகப்பேர். பவித்ரா, கபாலீஸ்வரர் நகர், நீலாங்கரை, சென்னை.

டாகடர் அப்துல்கலாம் : இரு பணிகளிலுமே நான் கடின உழைப்பையே அளிக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் இரண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

42.ஏன் செவ்வாய் கிரகம் சிவப்பாக இருக்கிறது?
ஜேம்ஸ் மார்ட்டின், பெடிட் செமினேர் மேனிலைப்பள்ளி, புதுவை.

டாகடர் அப்துல்கலாம் : பெர்ரிக் ஆக்சைடு எனும் இரும்பின் துரு செவ்வாய் கிரகத்துக்கு சிவப்பு நிறம் அளிக்கிறது. செவ்வாயின் மேற்புறத்தில் உள்ள இரும்பும் மற்ற தனிமங்களும் ஆக்சைடுகளாக மாறியுள்ளன. செவ்வாய் துரு நிறைந்த ஒரு கோளாக உள்ளது. சிவப்பு நிறத்தால் போருக்கான ரோமக்கடவுளான மார்ஸ் பெயரே இக்கோளுக்கு இடப்பட்டது.

43.ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு அவசியமா? 2020ம் ஆண்டுக்குப் பின்னரும் இது தொடருமா?
பிரபு, பி.எஸ்.ஆர். இன்ஜினியரிங் கல்லூரி, சிவகாசி. பத்மபிரியா, வேலம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை. சிவக்குமார், சண்முகநாதன் இன்ஜினியரிங் கல்லூரி, திருமயம்.

டாகடர் அப்துல்கலாம் : குறிப்பிட்ட சமுதாய மக்கள் வழிவழியாக வாய்ப்பு இழந்துள்ளனர். அவர்களுக்காக அரசியல் அமைப்பில் வகுக்கப்பட்டுள்ள சட்டதிட்டத்தின்படி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதை நிறைவேற்றுவது நமது சமுதாய கடமை. 2020ம் ஆண்டில் இன்ஜினியரிங் கல்லூரிகளும், மருத்துவக் கல்லூரிகளும் பெருகிவிடும். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் படிக்க விரும்பும் எல்லோருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அத்துடன் திறமைக்கும் மதிப்பு இருக்கும்.

44.சமுதாய ஒழுக்கம், லஞ்ச ஊழல் ஒழிப்பு, தனிநபர் சுகாதாரம் இவற்றைப் பேண மாணவர்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அவசியமா?
ஜேசுதாஸ், தேனாம்பேட்டை, சென்னை.

டாகடர் அப்துல்கலாம் : ஒழுக்கம் மற்றும் நல்ல மதிப்பீடுகளை நல்ல ஆசிரியர்கள் கற்றுத் தந்தாலே மாணவர்களுக்கு நல்ல குணங்கள் வந்துவிடும்.

45.சூரிய ஆற்றலை நாம் முறையாக பயன்படுத்திக் கொள்கிறோமா?
ஆனந்தவேலு, அரசு இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை.

டாகடர் அப்துல்கலாம் :
சூரிய சக்தி மிகுதியாக இருக்கிறது. கூடுதல் சக்தியை சேமிக்கும் சூரிய கலன்களை நாம் தயாரித்தால் அது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். நேனோ டெக்னாலஜி இதற்கு பெரும்பங்கு வகிக்கும். கார்பன் நேனோ டியூப் சூரிய கலன்களின் சக்தியை அதிகரித்து வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வளரும்.

நன்றி : கல்வி மலர்

Friday, February 18, 2011

தமிழ் எழுத்துக்களின் வரலாறு.




பெரியதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்.


* தகவல் : விக்கிப்பீடியா

Tuesday, February 15, 2011

'லோக் சபா'வில் குடித்துக் கொண்டே ஒரு பேட்டி!


குடி குடியைக் கெடுக்கும், குடிப் பழக்கம் நாட்டைக் கெடுக்கும் என்று நாடுதழுவிய அளவில் விளம்பரம் செய்யும் அரசு, திரைப்படங்களில் குடிப்பது போன்ற காட்சிகளை சென்சார் மூலம் தடைசெய்கிறது. இதே விதிதான் தொலைக்காட்சிக்கும். ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையாக 'லோக் சபா' தொலைகாட்சியில் இரு எழுத்தாளர்கள் குடித்துக் கொண்டே பேட்டி காணும் நிகழ்வொன்றை கண்டு அதிர்ந்தேன். பிற ஊடகங்களில் இது போன்ற நிகழ்வுகளை அனுமதிக்காமல் பாதுகாக்கும் அரசாங்கம், அரசு தொலைக்காட்சியில் எப்படி அனுமதித்தது?.

அடுத்து, ஏற்கனவே எழுத்தாளர்களின் தனிமனித ஒழுக்கம் விமர்சனைக்கு உள்ளாகி அடிக்கடி சர்ச்சயை கிளப்பிவரும் நிலையில், இது போன்ற பொது நிகழ்வில், அதுவும் அரசுத் தொலைகாட்சியில், என்ன நெஞ்சழுத்தம் இருந்தால் இது போன்ற அசிங்கங்களை அசால்ட்டாக செய்வார்கள்.

தொலைக்காட்சி அரங்கினுள் அமர்ந்துள்ளவர்கள் உறைந்து இருப்பது போல் அல்லாமல் பொதுமக்கள் இது போன்ற நிகழ்வுகளைக் கண்டிக்க வேண்டும்.



மதுபாட்டில் அருகே இருப்பவர் எழுத்தாளர் விக்ரம் சேத்., மதுகோப்பையை கையிலெடுப்பவர் மில்லர்.


மது நிறைந்த பாட்டில் பொதுமக்கள் பார்க்கும்படி ஒளிபரப்பாகிவிட்டது. இது சட்டத்திற்கு புறம்பானது.




போதையில் விக்ரம் சேத்.



தொலைக்காட்சி அரங்கினுள் அமர்ந்துள்ளவர்கள்







மில்லர்

Monday, February 14, 2011

ஒரு சுயசரிதை.- முன்னால் மத்திய அமைச்சர். ஆ.இராசா



சில

இலக்கியங்களில்
எழுத்துவடிவில்
இருந்த நான்
இந்தியாவில்
அவதாரம்
எடுத்தது
1947க்கு
பிறகுதான்!

என்னை
உணர்வுகளால்ல;
உச்சரிக்க
அழகாய்
இருப்பதால்
ஜனநாயகம்
என்று
பெயர்சூட்டி
இழுத்தணைத்துக்
கொண்டவர்கள்
இந்தியர்கள்!

மெஜாரிட்டி
மாங்கல்யம்
சூட்டப்பட்டதால்
ஆளுங்கட்சிக்கு
அடிமையாகிப்போன
பெண்டாட்டி
நான்.

எனது
கல்யாணத்தேர்தல்
ஆயிரங்காலத்துப்
பயிரல்ல;
அய்ந்தாண்டுப்
பயிர்!
அது
நடந்தேறிய
காட்சியை
நான்
மறக்கவில்லை!

மேடை

முழக்கத்தின்

தாளத்தில்-
எண்ணமுடியாத
வாக்குறுதி
ஒப்பந்தத்தின்படி-

ஒரு
நேரத்து
சிற்றுண்டிப்
பொட்டலத்தை

வரதட்சனையாக்கி

அள்ளிவீசப்பட்ட

ஓட்டுமலர்களால்
.



அய்ந்தாண்டுக்கு

ஆளுங்கட்சியோடு
வாழ்க்கைப்பட
ஒப்புதல்அளித்து
புகுந்தவீட்டுக்கு
போனபோதுதான்
என்னை
வாழ்த்தினார்கள்
'ஜனநாயகம் வாழ்க!'
என்று.


அய்ந்தாண்டுக்கு
ஒப்பந்தப்படுத்தப்பட்ட
நான்
மத்தியரசு
மாமியாரோடு
சண்டைபோட்டு
இடையிலேயே
வாழாவெட்டியாவதும்
உண்டு!

எதிர்கட்சி
நாத்திகள்
என்னை
விபச்சாரியாக்கும்
முயற்சியையே
இலட்சியமாக
கொண்டார்கள்!

இந்திய
கெளரவர்கள்
என்னை
துகிலுரிக்கிறார்கள்;

சபதம்

செய்யஅல்ல;
சப்தம்
செய்யக்கூட
பாண்டவர்களைக்
காணோம்.

பாஞ்சாலிக்கு
பதிவிரதை
பட்டம்சூட்டிய
இந்தியர்களே!

இல்லாததை

இருப்பதாக
கூறுவதில்
நீங்களே
முதல்

Saturday, February 12, 2011

மாணவர்களின் கேள்விகளுக்கு டாக்டர்.அப்துல்கலாமின் பதில்கள். (பகுதி -2)



16.வளர்ந்து வரும் பயங்கரவாதத்தை நாம் எப்படி கட்டுப்படுத்துவது? செல்வசிவாகணேஷ், செங்கல்வராயா பாலிடெக்னிக், சென்னை. சன்சித், பிளேட்டோ அகடமி மெட்ரிக் பள்ளி, திருப்பூர். ராஜயோகன், மகாராஜா பிருத்வி இன்ஜினியரிங் கல்லூரி, அவினாசி. கிரீஷ், ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலாயா பாலிடெக்னிக், கோவை. அனீஷ், திருநகர், வில்லிவாக்கம், சென்னை. விக்னேஷ், லட்சுமி மில்ஸ் பள்ளி, தூத்துக்குடி. விஷ்ணு, அமெரிக்கன் கல்லூரி, மதுரை

டாகடர் அப்துல்கலாம் :
சமுதாய கட்டமைப்பின் நிலையற்ற தன்மையால்தான் பயங்கரவாதம் உருவாகிறது. பல்வேறு நாடுகளில் இப்பயங்கரவாதம் உள்ளது. இளைஞர்களுக்கு நாம் வேலைவாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கும் போது அதை தடுக்கலாம். நிதி வசதியில் உள்ள சமச்சீரற்ற தன்மையை நாம் மாற்றும் போது, சமூகத்தில் உள்ள பல்வேறு வகையான பாகுபாடுகள் களையப்பட்டு பயங்கரவாதத்தை ஒழிக்கலாம். மதம் என்பது ஆன்மிகமாக மாற்றம் அடைய வேண்டும். பசி பட்டினியை ஒழித்து வளர்ந்த நாடாக நாம் மாற வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில் அமைதி தவழும் நாடாக இந்தியா மாறும்.

17. 2020ம் ஆண்டில் இந்தியா அறிவு சார் சூப்பர்பவர் ஆகுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?

மணிகண்டன், வீனஸ் கார்டன், மங்கலம் ரோடு, திருப்பூர். நாகேந்திர குமார், வெங்கடேஸ்வரா இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை. ஈஸ்வரன், ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி, உத்தமபாளையம். சந்தோஷ், மேரி மாதா மெட்ரிக் பள்ளி, மதுரை. ஜனனி, ஸ்ரீதாராசந்த் ஜெயின் வித்யாலயா, சென்னை. சத்யராஜ், கிராமிய பல்கலைக்கழகம், காந்திகிராமம். மோனிஷ்குரு, செயின்ட் மேரி மெட்ரிக் பள்ளி, கோவை. மணிகண்டன், பி.கே.என்., கல்லூரி, திருமங்கலம். சுரேஷ்குமார், தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரி, மதுரை/பிரவீன், சர் எம்.சி.டி.எம், டிரஸ்ட் பள்ளி, கீழ்ப்பாக்கம். மாது, ஆர்.எம்.கே., இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை. குருபரன், ஸ்ரீஆனந்த் ஜோதி வித்யாயலயா, சென்னை. கார்த்திகேயன், வேல்டெக், ஆவடி, சென்னை

டாகடர் அப்துல்கலாம் : நாம் கல்வியில் அதிக முதலீடு செய்ய வேண்டும். நம் சமுதாயத்துக்கு தரமான கல்வியை அளித்தாலே அறிவுசார் சமுதாயம் உருவாகும். இளைஞர்கள் அனைவரும் கல்லாமையை இல்லாமல் ஆக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். கிராமப்புறங்களில் சிறு சிறு தொழில்கள் துவங்க உதவி செய்து அங்குள்ள இளைஞர்களுக்கு பணிவாய்ப்புகளை அளிக்க வேண்டும். இதுவே இந்தியாவை 2020ம் ஆண்டில் அறிவுசார் சூப்பர்பவர் ஆக்க உதவும்.

18.உலகம் வெப்பமடைந்து வருவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
வெங்கட் சுப்ரமணியன், லட்சுமி மெட்ரிக்பள்ளி, கருப்பாயூரணி, மதுரை. பிரசன்ன குமார், டி.எம்.எச்.என்.யு., பள்ளி தேனி.சுகன்யா ராஜமன்னார், நடராஜன் நகர், தஞ்சாவூர்

டாகடர் அப்துல்கலாம் : உலகம் வெப்பமடைதல் என்பது கட்டுக்கதை என்று இனி சொல்ல முடியாது. அது உண்மையாகிவிட்டது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட பூமி தற்போது 0.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துவிட்டது.

உறைபனி மற்றும் பனிக்கட்டிகள் இந்த வெப்ப உயர்வில் மாற்றங்கள் அடையும். பனிக்கட்டிகள் இந்த வெப்பநிலை மாற்றத்தால் உருக தொடங்கியுள்ளன. மலைகளில் உள்ள பனி உருகுவதால் அவை கடல் மட்டத்தில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தப்போவதில்லை. ஆனால் துருவப்பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் கடல்மட்டத்தை உயர்த்தும். சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிமுறைகள், நம் வாழ்க்கை முறையில் கடைபிடிக்கப்படும் எளிய முறைகள் ஆகியவற்றால் உலகம் வெப்பமடைதலை தடுக்கலாம்

19..உள்நாட்டிலேயே உருவான நீங்கள் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிப்பது ஏன்?
சந்திரன், யாதவா கல்லூரி, மதுரை

டாகடர் அப்துல்கலாம் : உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் இந்தியாவில் வசிக்கின்றனர். ஆனால் 0.8 சதவீத எண்ணெய் மற்றும் காஸ் மட்டுமே இந்தியாவில் கிடைக்கிறது. 2030ம் ஆண்டில் நமக்கு 4 லட்சம் மெகாவாட் எரிசக்தி தேவைப்படும். தற்போது ஒரு லட்சத்து 44 ஆயிரம் மெகாவாட் எரிசக்தி மட்டுமே கிடைக்கிறது. இந்த தேவையை நிறைவேற்ற புதுப்பிக்கவல்ல எரிசக்தி (சூரிய சக்தி மற்றும் காற்று சக்தி) அணு சக்தி மற்றும் உயிரி எரிசக்தியிலிருந்துதான் பெற வேண்டும்.

அணுசக்தி உற்பத்தி தற்போது 3,900 மெகாவாட் ஆக உள்ளது. 2012ம் ஆண்டில் 9 புதிய அணு உலைகளின் உதவியால் 7,160 மெகாவாட்டாக உற்பத்தியை உயர்த்த வேண்டும். 2030ம் ஆண்டில் 50 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த தேவையான பணிகள் தற்போது அணுசக்தி துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2025ம் ஆண்டில் தோரியம் அடிப்படையிலான அணு உலைகளில் உற்பத்தி சிக்கல் ஏற்படும் போது, தேவைப்படும் யுரேனியம் தேவையை நிறைவேற்றிக் கொள்ள யுரேனியம் இறக்குமதி அவசியம். 2030க்குப் பிறகு நமக்கு அந்த தேவை இருக்காது.

20.இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் விளைவுகள் என்ன?
ஹரிப்பிரியா, ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், கோவை

டாகடர் அப்துல்கலாம் : நம்மிடம் 61 ஆயிரம் டன் யுரேனியம் மட்டுமே உள்ளது. இது 10 ஆயிரம் மெகாவாட் மின் சக்தி உற்பத்திக்கு மட்டுமே பயன்படும். எனவே நமது அணு உலைகளை 50-55 சதவீதமே பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் உள்ளோம். எல்லாவகையில் உள்ள எரிசக்தியை பயன்படுத்தினாலும் இன்னும் 50 ஆண்டுகளுக்கு இந்தியா எரிசக்திக்கு வெளிநாடுகளை சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. 123 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் நாம் எரிசக்திக்கு பிற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதில் தடை இல்லை. ஆகவே எரிசக்தி தேவையை நாம் அதிகரித்துக் கொள்ள முடியும்.

21.அணு சக்தி ஒப்பந்தம் நமக்கு நல்லதா... கெட்டதா?
ரம்யா கேசவ குமார், தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரி, பெரம்பலூர். செந்தில், நாகசாமி மெமோரியல் பாலிடெக்னிக் கல்லூரி, மதுரை

டாகடர் அப்துல்கலாம் : அமெரிக்காவும் இந்தியாவும் தனது தேசிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்து கொள்வதற்கே இந்த உடன்படிக்கை. அமெரிக்க விதிமுறைகளை மீறி அங்குள்ள நிறுவனங்கள் நடந்து கொள்ளாது

22. தற்போதுள்ள பொருளாதார சிக்கலுக்கு தீர்வு என்ன?
வி.ஹரிஷ், கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் மெட்ரிக் பள்ளி, மதுரை. கார்த்திகாயினி, எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம் சென்னை

டாகடர் அப்துல்கலாம் : பணவீக்கத்தை கட்டுப்படுத்த தற்போது அரசு முயற்சி செய்து வருகிறது. கிராமப்புறங்களில் விவசாயம் அல்லாத குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் கிராமப்புற வளர்ச்சி திட்டமும் உள்ளது. ‘ஒரு கிராமம் - ஒரு பொருள்’ என்னும் திட்டப்படி, ஒரு கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒரு குறிப்பிட்ட பொருள் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யுமளவுக்கு தரமாக இருக்கும்படி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் பொருளாதார நிலை உயர்ந்து அவர்களுடைய வாழ்க்கைத் தரமும் உயரும்.

23.கல்வியின் நோக்கம் என்ன, அறிவை வளர்ப்பது எப்படி?
மாதேஸ்வரன், ஒச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி. அழகு முருகேசன், எஸ்.பி.எம்., பள்ளி,விழுப்புரம். கோகுலகிருஷ்ணா, ஸ்ரீஅரவிந்த வித்யாலயா, நெய்வேலி

டாகடர் அப்துல்கலாம் : கல்வியின் நோக்கம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதே. அறிவார்ந்த சமுதாயத்துக்கு மூன்று அடிப்படை குணாதிசயங்கள் உள்ளன. மதிப்பீடு அடிப்படையிலான கல்வி, ஆன்மிக நெறிகளாக மாறக்கூடிய மதம் மற்றும் பொருளாதார வளர்ச்சி. பள்ளியில் கற்பிக்கப்படுவது அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கான பணி. இது தேசிய வளர்ச்சிக்கு உதவும்.

24.நல்ல ஆசிரியராவதற்கான குணாதிசயங்கள் என்ன?
ஆனந்த், செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி, சாத்தான்குளம். ராஜேஸ் குமார், அமெரிக்கன் கல்லூரி, மதுரை

டாகடர் அப்துல்கலாம் : ஆசிரியர் பொறுப்புள்ளவராக இருக்க வேண்டும். கற்பிப்பதில் விரும்புபவராக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொள்பவர்களாக இருக்க வேண்டும்.
நாகரிக சமுதாயத்தையும் நல்ல மதிப்பு மிக்க மாணவர்களை உருவாக்குபவர்களாகவும் இருக்க வேண்டும். நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மாணவர்களை சுயமாக கற்றுக்கொள்பவர்களாக உருவாக்க வேண்டும்.

25.கிராமப்புறங்களை முன்னேற்ற என்ன செய்ய வேண்டும்?
சீனிவாசன், அன்னை தெரசா முதுநிலை மற்றும் சுகாதார ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி.. மிதுன்சிங், காமராஜர் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, விருதுநகர்

டாகடர் அப்துல்கலாம் : கிராமப்புறங்களில் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். அதற்காக உருவானதுதான் புரா (PURA). இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், கிராமப்புறங்களிலேயே நகரங்களில் கிடைக்கும் எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இவ்வசதிகளை செய்து கொடுக்க நான்கு விதமான இணைப்புகள் அவசியம். முதல் இணைப்பு சாலை போக்குவரத்து. இரண்டாவது தகவல் தொடர்பு இணைப்பு. மூன்றாவது அறிவுசார்ந்த இணைப்பு. இந்த மூன்றையும் சேர்த்தால்தான் நான்காவதாக பொருளாதார இணைப்பு உருவாகும்.

அருகில் உள்ள கிராமங்களை இணைத்து புரா குழுமம் அமைய வேண்டும். பிறகு புரா திட்டத்தின் முதல் இணைப்பாக அக்கிராமங்களுக்கு சுற்றுச்சாலை அமைக்க வேண்டும். இன்டர்நெட் பிரவுசிங் சென்டர்கள், எலக்ட்ரானிக் தொடர்புகள், மின்னணு தொலைபேசி வசதிகள் ஆகியவற்றை செய்து தர வேண்டும். அப்பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைக் கொண்டு சுற்றிலும் உள்ள எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும். புரா அமைந்துள்ள கிராமங்களைச் சுற்றி கல்வி அறிவு இல்லாதவர்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.

இதன் வழியாக சிறுதொழில்கள் பெருகி குறைந்த விலையில் தரமான பொருட்களை உருவாக்கும் வாய்ப்பு ஏற்படும். அப்போது இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

26.இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றி கூறுங்களேன்?
செந்தில் பாலாஜி, சி.பி.டி., கல்லூரி, தரமணி, சென்னை.

டாகடர் அப்துல்கலாம் : தற்போது அணுசக்தி மூலம் நாம் பெறும் மின்சாரம் 3 சதவீதம் மட்டுமே. 2030ம் ஆண்டு வாக்கில் நமக்கு 4 லட்சம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அப்போதுதான் நம்முடைய பொருளாதார வளர்ச்சியை சீராக வைத்துக் கொள்ள முடியும். இதற்கு 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் அணு உலைகளிலிருந்து பெற்றாக வேண்டும். அப்போதுதான் நிலக்கரியை சார்ந்து மின் உற்பத்தி செய்வதை நாம் தவிர்க்க முடியும். தற்போது 55 சதவீத மின் உற்பத்தி நிலக்கரி மூலம் நடைபெறுகிறது. இதை 2030ம் ஆண்டில் 33 சதவீதமாக குறைக்க வேண்டும்.

27.வெற்றியின் ரகசியம் என்ன?
விமல்ராஜ், பி.எஸ்.ஜி., இன்ஜினியரிங் கல்லூரி, கோவை. ஆகாஷ் சந்திரன், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி, அண்ணாநகர், சென்னை. ஐஸ்வர்யா, டி.ஏ.வி., பள்ளி,வில்லிவாக்கம்.புஷ்பம், ஜெயா இன்ஜினியரிங் கல்லூரி,திருநின்றவூர்

டாகடர் அப்துல்கலாம் : எனது வெற்றியின் ரகசியம் எனது பெற்றோர்கள்தான். நான் எப்போதுமே என்னுடைய ஆசிரியர்களை நினைக்கிறேன். அவர்கள்தான் என்னுடைய வாழ்க்கைக்கான லட்சியத்தை அளித்தனர். நீங்கள் கடினமாக உழைக்கும் போது, சில பிரச்னைகள் உங்களை தேடி வரும். பிரச்னைகளை வரவிடாமல் தடுத்து வெற்றி அடையுங்கள். அப்போது நீங்கள் தோல்வியை துவள செய்து
வெற்றியாளராக உருவாவீர்கள்

28.பூமியைத் தவிர வேறு எங்காவது உயிர்கள் இருக்கின்றனவா?
சிவக்குமார், ஸ்ரீசாஸ்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை

டாகடர் அப்துல்கலாம் : உலகம் முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகள் பிற கோள்களில் உயிர்கள் இருக்கின்றனவா என்பதை ஆராய்ந்து வருகிறார்கள். நமது சூரிய குடும்பத்தில் பூமியில் எப்படி உயிர்கள் தோன்றியதோ, அதேபோல் வேறு எங்கும் உயிர்கள் உருவாகியிருக்க வாய்ப்புகள் உள்ளன. சூரியனைப் போல் கோடானு கோடி சூரியன்கள் பிரபஞ்சத்தில் உள்ளன.

29.பெர்முடா முக்கோணத்தின் அதிசயம் என்ன?
குருமூர்த்தி, பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, சாத்தூர். நந்தினி, ஜவஹர் மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி. நித்தியேஸ்வர், விவேக் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, கோவை.. சதீஷ்குமார், வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, தாம்பரம், சென்னை. ராஜா, வி.கே. மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்

டாகடர் அப்துல்கலாம் : அமெரிக்காவின் தென்கிழக்கு அட்லான்டிக் கடற்கரையை ஒட்டிய பகுதி பெர்முடா முக்கோணம் அல்லது சாத்தான்களின் முக்கோணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடங்களில் கப்பல்கள் காணாமல் போவதும் விமானங்கள் மறைந்துவிடுவதும் உண்டு. அதற்கான காரணங்கள் வெவ்வேறாக கூறப்படுகின்றன. இந்த இடத்தில் விபத்துகள் நடப்பதற்கு மனிதத் தவறுகள்தான் காரணம். உலகின் இரு இடங்களில் காந்த துருவம் வடக்கு நோக்கி காட்டாது. அதில் ஓர் இடம் இந்த பகுதி. இது கப்பல் மற்றும் விமானிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

30.இளைஞர்கள், மாணவர்கள் அரசியலில் ஈடுபடலாமா? கோபிநாத், சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல். தீப்தி, டாக்டர் ஜி.ஆர்.டி அறிவியல் கல்லூரி, கோவை. ராம்குமார், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம். ஆர். ஹரிஹரன், முகமது சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை, ராமநாதபுரம். பி.கே. சுவாமிநாதன், சாஸ்தா பல்கலைக்கழகம், சென்னை. ராணி, காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை. கீர்த்தி குமார், சி.எஸ்.ஐ., பள்ளி, கோவை. சிவஹரிநாதன், ஜேசிஸ் பள்ளி, சிவகாசி. ரமேஷ் சண்முகம், நேஷனல் பல்கலைக்கழகம், சிங்கப்பூர். மகேஸ்வரம், தியாகராஜர் கல்லூரி, மதுரை

டாகடர் அப்துல்கலாம் : அரசியல் இளைஞர்களை வரவேற்கிறது. அரசியலில் ஈடுபட நினைப்போர், காந்தியடிகளுக்கு அவரது தாயார் சொன்ன அறிவுரையை நினைத்துப்பார்க்க வேண்டும். அவர் சொன்னது, “மகனே உனது வாழ்வில் துன்பத்தில் துவளும் யாராவது ஒருவரின் வாழ்வில் நீ ஏதேனும் மாற்றத்தை உருவாக்கி அவரை துன்பத்திலிருந்து மீட்டெடுத்து, முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சென்றால், நீ மனிதனாக பிறந்ததன் பலன் உன்னை முற்றிலும் வந்து அடையும், என்றார். மாணவர்கள் முதலில் படிப்பில்தான் கவனம் செலுத்த வேண்டும். அதன் பின்னர் உங்கள் திறனுக்கேற்ப நீங்கள் உங்கள் வாழ்க்கையை முடிவு செய்யலாம்.

வளரும்.

நன்றி : கல்வி மலர்

Thursday, February 10, 2011

குறள் கொடுத்த வாழ்வு. பகுதி-2

தேன்தமிழ்ப் புலவர் மு.வைத்திலிங்கம்.


ஒரு சமயம் எங்கள் பள்ளி இலக்கிய மன்றத்தில் பேச ஒரு தமிழரிஞர் வந்தார். அவர் காரில் வந்து இறங்கினார். அது எங்களைக் கவர்ந்தது. அவர் அழகாகப் பேசினார். அந்த காரை எல்லோரும் சுற்றிக் கொண்டு தொட்டுப் பார்த்தனர் எவ்வளவு 'அருமையான காருடா!' என்று ஒருவன் பாராட்டினான்.

'இந்த மாதிரிக் காரெல்லாம் நம்மாள வாங்க முடியுமாடா?' என்று கேட்டான். ஏன் முடியாது; ஒரு நாளைக்கு நானே வாங்கிக் காட்டுகிறேன் பாரு என்றேன். எல்லோரும் 'கொல்' ன்று சிரித்தர், எனக்கு வெட்கக் கேடாகி விட்டது. ஒரு நாள் நிச்சயம் இதை விட நல்ல கார் நான் வாங்குவேன்டா என்று உரத்த குரலில் சொன்னேன். அதற்குள் தலைமையாசிரியர் அந்தப் பக்கம் வந்தார். அதனால் அனைவரும் கலைந்து சென்றோம்.ஆனால் என்னுள் ஏற்பட்ட உறுதி மட்டும் கலையவில்லை.

அந்தப் பேச்சாளர் எழுதிய நூலொன்றைக் கூட்டத்தில் மாணவர்களிடம் காட்டி அவர்தம் பெருமை பற்றித் தலைமையாசிரியர் பேசினார். ஒரு மாணவன் அந்த நூலைக் குறித்து பேசும்போது , 'அந்த மாதிரிப் புத்தகம் உன்னால் எழுத முடியுமாடா?' என்றான். 'என்னால் உறுதியாகப் புத்தகம் எழுத முடியும்டா!' என்றேன். மாணவர்கள் மீண்டும் சிரித்தனர்.

இவன் என்னடா எல்லாம் தன்னால் முடியும் என்கிறான்! என்றான் ஒருவன். 'எல்லாம் என்னால் முடியுமடா!' என்று மீண்டும் உரத்தக் குரலில் சொன்னேன். அப்போது என் நெஞ்சில் வள்ளுவரின் குறள் தோன்றி 'முடியும்! முடியும்!' என்றது.

இப்படி எத்தனையோ எண்ணங்கள் என் நெஞ்சில் வளர்த்துக் கொண்டே நான் வளர்ந்தேன். இந்த நேரத்தில் தான் 'இளைஞர் இதயம்' என்ற கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கினேன். தமிழாசிரியர் எனக்குத் துணை நின்றார். நண்பர்களும் ஆவலுடன் உதவினர். கட்டுரைகளும், கதைகளும், கவிதைகளும் கலந்து அந்த இதழைச் சிறப்பித்தன. என்றாலும் ஓரிதலுடன் அது நின்று போயிற்று.

அடுத்த ஆண்டு ஆறாம் படிவத்திற்கு (S.S.L.C) வந்தோம். அந்த ஆண்டு அரசுப் பொதுத் தேர்வு என்பதால் தலைமையாசிரியர் எங்களைப் பள்ளியில் இரவு தங்கிப் படிக்கச் சொன்னார். எட்டு மணிவரை எங்களுடன் இருந்து வீடு செல்லும் அவர், விடியற்காலை ஐந்து மணிக்கு வந்து எழுப்பி விடுவார். காலை ஏழுவரை படித்து விட்டு, வீட்டுக்குச் சென்று குளித்து, உண்டு விட்டு, பகல், இரவு உணவுடன் பள்ளிக்கு ஓடிவர வேண்டும். இப்படி எங்கள் நலனில் அக்கறை காட்டிய தலைமையாசிரியர் திரு. இராசரத்தினம் போல் வேறொரு தலைமையாசிரியரை என் வாழ்க்கையில் பார்த்ததில்லை.

அந்த ஆண்டு எம் பள்ளியில் தேர்வுக்குச் சென்ற அத்தனைப் பேரும் தேறினோம். மேலே என்ன செய்வது? இது பெரிய வினாவாக என முன் நின்றது. கல்லூரிக்குச் சென்று படிக்க எனக்கு விருப்பம். மழை வறண்டு கிணறுகள் வற்றிப் போனதால் உணவுக்கே தடுமாற்றம். இந்தச் சூழ்நிலையில் கல்லூரி பற்றி எண்ணவே இயலவில்லை.

ஒரு நாள் சேலத்துத் தெருவில் எம் தலைமையாசிரியரைக் கண்டேன். மகிழ்வுடன் வணங்கினேன். 'என்னப்பா! கல்லூரிக்குச் செல்லவில்லையா?! என்றார்.

'விரும்புகிறேன் ஐயா! வீட்டுப் பொருளாதாரம் இடந்தரவில்லை' என்றேன்.

பரவாயில்லை.திருப்பதியில் கோயில் சார்பில் தமிழ்க் கல்லூரி நடத்துகிறார்கள். என் நண்பர் தமிழ் துறையில் இருக்கிறார். நான் கடிதம் தருகிறேன். அவரைப் போய்ப் பார். இலவச உணவுடன் படிக்க இடங் கிடைக்கும்.

நான் மகிழ்ந்தேன். 'இன்றே புறப்படு' என்று கடிதமொன்றும் தந்தார். கடிதத்தைப் பெற்றுக் கொண்டு தயங்கி நின்றேன் 'ஏன் தயக்கம்?' என்றார். 'என்னிடம் பணம் ஏதும் இல்லை ஐயா!' என்றேன். 'கவலைப் படாதே! இதை வைத்துக் கொண்டு போய் வா' என்று ஒரு தொகையை அவரே தந்தார். பெற்றுக் கொண்டு கலங்கினேன். 'கவலை வேண்டாம். இப்போதே புறப்படு' என்று தட்டிக் கொடுத்தார்.

என் நலனில் அக்கறை கொண்ட அந்தப் பேருள்ளத்தை வியந்தவாறே திருப்பதி சென்றேன். உரியவரிடம் அந்த மடலை தந்தேன். அவர் மகிழ்வுடன், '' நண்பர் இராசரத்தினத்தின் மாணவனா நீ? உனக்கு இலவச உணவு விடுதியில் இடம் கொடுக்கிறேன். சேர்க்கை அட்டை அனுப்புவேன். வந்து சேர்ந்துக் கொள்!'' என்று என்னை அனுப்பி வைத்தார்.

கல்லூரி கனவுகளுடன் ஊர் தரும்பினேன். தலைமையாசிரியரிடம் நன்றி சொன்னேன். என் வீட்டாரும் பெருமை கொண்டனர். நண்பர் பலரிடமும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தேன்.

ஒரு நாள் திருப்பதிக் கல்லூரியிலிருந்து மடல் வந்தது. '' தம்பி! கவலைப்படாதே அமைச்சர் ஒருவரின் பரிந்துரையால் உன் இடத்தை வேறொருவருக்குத் தர வேண்டியதாயிற்று. அடுத்த ஆண்டு கட்டாயம் உனக்கு இடங் கிடைக்கும். நம்பிக்கையுடன் காத்திரு'' என்று அந்தப் பேராசிரியர் மடல் எழுதியிருந்தார்.

என் நம்பிக்கைக் கோட்டை நொறுங்கியது. தளர்ந்து போனேன். ''தம்பி! வீணாக வருந்தாதே. எல்லாம் விதிப்படியே நடக்கும். பண்ணையத்தை நாம் கவனிப்போம்'' என்றார் என் தந்தை.

''ஊழையும் உப்பக்கம் காண்பர்'' என்ற குறள் என்னுள் எழுந்து முழங்கியது. விதியை வெல்ல உறுதி கொண்டேன். நான் ஒரு நாள் தமிழாசிரியர் ஆவேன் என்னும் நம்பிக்கையை செஞ்சில் வளர்த்தேன். முயன்றேன். ஓர் உயர் தொடக்கப்பள்ளியில், பயிற்சி இல்லா ஆசிரியனாக ஆறு திங்கள் பணியாற்றினேன். அதில் பெற்ற ஊதியத்தைச் சேமித்து அடுத்த ஆண்டு ஈரோடு ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தேன். இரண்டாண்டுகள் பயிற்சி பெற்று வீடு திரும்பினேன்.

திடீரென்று ஒருநாள் என் தாயார் இயற்கையடைந்தார்கள். வெண்ணெய் திரளும்போது தாழி உடைந்த கதையாயிற்று. என் தந்தையார் மனம் குழம்பிப் போனார். எங்களைத் தவிக்க விட்டுக் கோயில் கோயிலாகப் போகத் தொடங்கினார். ஆறு திங்கள் அவர் எங்குள்ளார் என்றே தெரியவில்லை. எனக்குக் கீழ் எட்டுப்பேர். ஆணகள் நால்வர். பெண்கள் நால்வர். எல்லோரும் படித்துக் கொண்டிருந்தனர். நடுக்கடலில் கலம் நொறுங்கியது போல் தத்தளித்தோம்.

'இடுக்கண் வருங்கால் நகுக' என்னும் குறள் என்னைத் தட்டி வழி நடத்தத் தொடங்கியது. துணிவுடன் பண்ணையத்தை நடத்தத் தொடங்கினேன். நல்ல மழை பெய்த நேரம் அது. உறவினர் ஒருவரிடம் கடனாக ஓரினை மாடுகள் வாங்கி நிலத்தை உழுதோம். என் தம்பிகளில் ஒருவனைத் துணைக்கு வைத்துக் கொண்டு வேலைகள் நடைபெற்றன. வயல்களில் கரும்பு பயிர் செய்தோம். பள்ளி சென்று வந்த எம் பெரிய தங்கை எங்களுக்குச் சமைத்துப் போட்டாள். எமக்கு வேண்டியவர்களும் சிற்சில வகைகளில் உதவினர். கரும்பு வளர்ந்து வெட்டுக்குத் தயாரானது.

என் தந்தை வீடு வந்து சேர்ந்தார். எங்கள் உழைப்பைக் கண்டு பூரித்தார். சந்தைக்குக் கரும்பு கொண்டு போகும் பணி தொடங்கியது. என் கவலை ஓரளவு குறைந்தது.

நான் ஆசிரியப் பணி தேட ஆரம்பித்தேன். என் ஆசிரியர் ஈ.எஸ்.ஆறுமுகம் அவரகள் துணையால் கோவை மாவட்டம் நம்பியூர் உயர் பள்ளியில் எனக்குப் பணி கிடைத்தது. திறம்படச் செய்தேன். அங்குத் தமிழ் இலக்கியங்களைப் புலவர் தேர்வுக்கெனப் படிக்கத் தொடங்கினேன்.

அடுத்த ஆண்டு அந்தியூர் வந்தேன். அது பெரிய பள்ளி, எனக்கு நிறைய தமிழ் வகுப்புகள் கொடுக்கப்பட்டன. பாராட்டும் வகையில் அப் பணியைச் செய்தேன். அங்குப் புலவர் கு.மா.திருநாவுக்கரசு எனக்கு நண்பரானார். நாங்கள் இருவரும் சேர்ந்து மாணவர்களுக்கு ஞாயிறுதோறும் குறள் வகுப்பு நடத்தினோம். ஆசனங்கள் பயிற்றுவித்தோம். அங்கு வள்ளுவம் என்ற நாடகத்தை சிறப்பாக நடத்தி பாராட்டுப் பெற்றோம்.

அடுத்த ஆண்டு ஒலகடம் வந்தேன். அங்கு ஆறாண்டுக் காலம் என் பணி நடந்தது. என் தங்கை இருவரையும், என் பெரியப்பா வழி அண்ணன் பெண்கள் இருவரையும் அழைத்து வந்து படிக்க வைத்தேன். பெண்கள் படிக்க வேண்டும் என்ற ஆவலினால் அவர்களைப் படிக்க வைத்தேன். அங்குதான் புலவர் இளநிலைத் தேர்வெழுதினேன். புலவராக வேண்டும் என்ற ஆவலும் முயற்சியும் சிறிதும் குறையவில்லை. 'முயற்சி திருவினை ஆக்கும்' என்ற குறள் எனக்குத் துணையாகி வந்தது. இந்தப் பள்ளியிலும் வள்ளுவம் நாடகத்தை நடத்தினேன். ஊர்ப் பெருமக்கள் மேடையிலேயே எனக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

ஓலகடத்தில் ஓவியர் நடேசன், தொழிலாசிரியர் இராமசாமி, ஆசிரியர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் ஓரறையில் தங்கியிருந்தோம். அந்த அறைக்கு வள்ளுவர் இல்லம் எனப் பெயரிட்டோம். ஓய்வு கிடைத்த போதெல்லாம் திருக்குறள் படிப்போம். ஐயம் ஏற்படும் போது அனைவரும் சேர்ந்து அது பற்றிச் சிந்திப்போம். ஒரு சமயம் எனக்குத் திடீரென்று நச்சுக் காய்ச்சல் வந்தது. நண்பர்கள் துடித்துப் போயினர். உள்ளூரிலிருந்து மருத்துவரை அழைத்து வந்து காட்டினர். அவரும் மருந்துகள் தந்தார். ஒரு வாரமாகியும் காய்ச்சல் தணியவில்லை. எதிர் வீட்டு நண்பர் சுப்பிரமணியம் சீரகம் சேர்த்து வெந்நீர் வைத்து நாள் தோறும் கொடுப்பார்.

எனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் கோபி மருத்துவமனைக்குக் கொண்டு போகச் சொல்லி விட்டார். நண்பர் சுப்பிரமணியம் தனக்கு வேண்டியவரிடம் 'ஜீப்' ஒன்று இரவல் வாங்கித் தர, அதில் நண்பர்கள் என்னைக் கோபி மருத்துவமனைக்குக் அழைத்துச் சென்றனர். அங்குத் தங்கி மருத்துவம் பார்க்கக் கூறி அந்த மருத்துவர் ஓர் அறை ஒதுக்கித் தந்தார்.

என் வீட்டிலிருந்து எனக்குத் துணையிருக்க எவரும் வரவில்லை. வரவும் வாய்ப்பில்லை. என் இனிய நண்பர்களே எல்லாவகை உதவிகளையும் செய்தனர். முதல் நாள் ஒருவர் துணையிருப்பார். அடுத்த நாள் மாலை ஒருவர் ஓலகடத்திலிருந்து நேர்வு விடுப்பு எடுத்துக் கொண்டு வருவார்.துணையிருந்த நண்பர் சென்று விடுவார். மறு நாள் மாலை முதல் நாள் வந்தவர் வருவார். இப்படிப் பதினைந்து நாட்கள் நேர்வு விடுப்பு எடுத்துக் கொண்டு மாறி மாறி வந்தனர். பள்ளித் தலைமையாசிரியரும் அவர்களுக்கு விடுப்பு தந்து அனுப்புவதில் சுணக்கம் காட்ட மாட்டார்.

படுக்கையிலேயே சிறுநீரும், மலமும் கழிக்க வேண்டிய நிலை வந்த போதும் நண்பர்கள் தயங்கவில்லை. படுக்கைக் கோப்பையில் அவற்றை ஏற்று அப்புறப் படுத்தினர். அவர்கள் செய்த உதவிகளைக் கண்டு நான் பலமுறை கண்ணீர் மல்கியிருக்கிறேன். தேம்பித் தேம்பி அழுதிருக்கிறேன். 'நீங்கள் கவலைப் படாதீங்க. எங்கள் நண்பருக்கு இப்படிச் செய்வதில் நாங்கள் பெருமைப் படுகிறோம்' என்று சொன்னதை நான் இன்றளவும் மறக்கவில்லை.

இந்த நிலையில் எப்படியோ செய்தி கேட்டு என் தந்தையும், பெரியப்பார் மகனும் மருத்துவ மனைக்கு வந்தார்கள். என் நிலை கண்டு என் தந்தை கலங்கிப் போனார். ஒரு நாள் இரவு முழுவதும் அங்குத் தங்கி என் நண்பர்கள் எனக்குச் செய்த உதவிகளைக் கண்டு வியந்து போயினர். நாமே இருந்தாலும் இத்தனை உதவிகள் செய்ய முடியாது என என் அண்ணன் சொல்லியதைக் கேட்டு என் தந்தை கலங்கினார்.

'உடுக்கை இழந்தவன் கைபோல அங்கே

இடுக்கன் களைவதாம் நட்பு'

என்ற வள்ளுவர் வாக்கை எண்ணி எண்ணி பெருமிதம் கொண்டேன். உடல் நலம் பெற்று வீடு திரும்பும் வரை நண்பர்கள் உடன் இருந்து என்னைத் திரும்ப அழைத்து வந்தனர். எனக்காகவே சமையல்காரன் ஒருவனை அமர்த்தினர். அதுவரை விடுதியில் உண்டு வந்த நாங்கள் அதன் பிறகு சொந்த சமையல்காரனை வைத்துச் சமைத்து உண்ணத் தொடங்கினோம்.

அங்குத் தான் எனக்குத் திருமணமும் நடந்தது. வீட்டினர்க்கு எந்த செலவும் வைக்காமல் நானே முயன்று என் செலவில் தமிழரிஞர் கு.சிவமணி தலைமையில் சடங்குகள் எதுவுமின்றி மணம் முடித்துக் கொண்டேன். ஒலகடத்தில் இருக்கும் போதே எனக்குப் பெண் மகவு பிறந்தது. 'கலைச்செல்வி' என்று பெயரிட்டுப் பேணி வளர்த்தோம்.

1962 வாக்கில் சேலம் மாவட்டத்துக் குமாரபாளையம் உயர் பள்ளிக்கு மாவட்ட மாறுதல் பெற்று வந்தேன். இந்தப் பள்ளியிலும் வள்ளுவம் நாடகம் நடத்தப் பெற்றது. பெரும் பாராட்டும் கிடைத்தது. குடும்பம் பெருகியது. பொருள் நெருக்கடியும் வந்தது. என்றாலும் கலங்கவில்லை. 'புதையம்பில் பட்டுப் பாடூன்றும் களிறு' என்ற குறள் என் நினைவில் நின்று காத்தது.

அடுத்த ஆண்டு வனவாசி உயர் பள்ளிக்கு மாறுதல் பெற்றுச் சென்றேன். இடையிடையே எம் தோட்டத்திற்குச் சென்று கவனித்து வந்தேன். இங்குப் புலவர் தேர்வெழுதி வெற்றி பெற்றேன். தமிழாசிரியருமானேன். நங்கவள்ளியில் ஊர்ப் பெருமக்களுக்கு குறள் வகுப்பு நடத்தி வந்தேன். பலர் விரும்பிக் குறள் கற்றனர். பள்ளியிலும் இலக்கிய விழாக்கள் பல நடத்தினேன்.

1965-ல் மேச்சேரிக்கு நான் பயின்ற பள்ளிக்கு மாறுதல் பெற்றுச் சென்றேன். அங்குத்தான் அச்சகம் தொடங்கினேன். 'தேனமுதம்' என்ற இலக்கிய திங்களிதழும் அங்குத்தான் தொடங்கப்பட்டது. படிக்கும் போது நான் நண்பர்களிடம் சொன்னவாறு ஒவ்வொன்றாகச் செயல் படுத்தினேன்.எளிய இனிய நறுந்தமிழில் 'தேன்தமிழ்த் துணைவன்' என்ற உரைநூலும் வெளியிட்டேன். இவைகள் கொஞ்சம் கொஞ்சமாக வளரும் போது சேலத்துக்குக் குடிபெயர்ந்தேன். சேலத்துக்கு அண்மையிலுள்ள சுக்கம்பட்டி உயர் பள்ளிக்கு மாறுதலும் பெற்றேன். அந்தப் பள்ளியிலும் பகல் இடைவேளையில் குறள் வகுப்பு நடத்தினேன்.

அதன் பின் பல பள்ளிகளுக்கு மாற்றப்பட்டேன். என் எண்ணம் மட்டும் மாறவில்லை. சேலத்தில் 'தேன்தமிழ்ப் பதிப்பகம்' தொடங்கி நூல்கள் பதிப்பித்தேன். இதுவரை நூற்றியெழுபது நூல்கள் வெளியிட்டுள்ளேன். நான் எழுதிய பதினைந்து .நூல்களும் அவற்றில் அடங்கும். உயர்ந்த இலக்கியங்கள், சிறந்த புதினங்கள், குழந்தைப் பாடல்கள் எனப் பலதரத்து .நூல்களும் எம் பதிப்பகத்தில் வெளி வந்துள்ளன. தேன்தமிழ்த் துணைவனும் பெருகி வளர்ந்து மாணவர்களுக்கு நல்ல துணையாக விளங்குகிறது.

ஓய்வு பெற்று வீட்டில் அமைதியாக இருக்கும் இந்த நேரத்தில் நான் வளர்ந்தவகையை எண்ணிப் பார்க்கிறேன். என் தமிழாசிரியர் எனக்கு நினைவில் நிற்கும்படிச் சொன்ன 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப' என்ற குறள் என்னை வளர்த்திருக்கிறது. எணபதை எண்ணி மகிழ்கிறேன். பள்ளி நாட்களில் நான் கொண்ட உறுதிகள் ஒவ்வொன்றாகச் செயல்பட்டு வந்துள்ளன.

நல்ல அச்சகம் நிறுவினேன்.

பத்திரிகை தொடங்கி நடத்தி வருகிறேன்.

நூல்கள் பல எழுதியுள்ளேன்.

நல்ல காரும், மாடி வீடும் என்னிடம் உள்ளன. என் மகள் கலைச்செல்வி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறாள். என் முதல் மகன் அருள்மொழி புத்தகக் கடை நடத்தி வருகிறான். இளையவன் புத்தகக் கடை நடத்தி வருகிறான் கதிரவன் கணினி அச்சகமும் நடந்து வருகிறது..

இன்று நான் பெற்றுள்ள வள வாழ்வு குறள் கொடுத்த வாழ்வே என எண்ணி எண்ணி மகிழ்கிறேன்.

என் தமிழாசிரியர் சு. பழனியாண்டி அவர்களை நினைத்து நினைத்து வணங்குகிறேன்.

முற்றும்.


Wednesday, February 9, 2011

ஊழல் குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்க.... ஒரு வலைத் தளம்.

www.cvc.nic.in


கண் எதிரே ஊழல் நடக்கிறது. அது தொடர்பான குற்றச்சாட்டுகளை யாரிடம் தெரிவிப்பது? அதற்கு ஆதாரமான ஒலி & ஒளி கோப்புகள் இருப்பின் எங்கு ஒப்படைப்பது? மேற்கண்ட வினாக்கள் இருப்பின் www.cvc.nic.in வலைத் தளத்தை அணுகிப் பாருங்களேன். இது எனக்கு குறுஞ் செய்தியில் கிடைத்த தகவல்.

Saturday, February 5, 2011

ஓ.ஹென்றியின் சிறுகதை.

கடைசி இலை. The Last Leaf.


வாஷிங்டனில் ஓவியக் கலைஞர்கள் குடியிருக்கும் பகுதி அது.

அந்த மூன்று மாடி செங்கல் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில்தான் இணைபிரியாத தோழிகளான 'சூ'வும் 'ஜான்சி'யும் ஓவியக்கூடம் வைத்திருக்கிறார்கள். அவர்கள் குடியிருக்கும் இடமும் அதுதான்.

திடீரென அந்தப் பகுதியிலுள்ளவர்களைத் தாக்கிய நிமோனியா காய்ச்சலினால் படுத்த படுக்கையானாள் ஜான்சி. படுக்கையில் படுத்தபடியே ஜன்னல் வழியே தெரியும் அடுத்த வீட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

டாக்டர் வந்து ஜான்சியைப் பரிசோதித்தார்.

பிழைக்கமாட்டோம் என்று அவளாகவே எண்ணிக் கொண்டிருக்கிறாள்.அவள் மனதில் ஏதாவது ஆசையை வளர்த்துக் கொண்டிருக்கிறாளா? என்று சூ விடம் விசாரித்தார் டாக்டர்.

நேபிள்ஸ் கடலை ஓவியமாகத் தீட்டவேண்டும் என்பது தான் அவளுடைய இலட்சியம், என்றாள் சூ.

வேறு ஏதாவது அவள் மனதில் இருக்கிதா? யாரேனும் ண் பிள்ளையை நினைத்துக் கொண்டு.........

அப்படி எதுவும் இல்லையே டாக்டர்!

அப்படியானால் பலவீனம் காரணமாக அவள் தன்னம்பிக்கையை இழந்திருக்கலாம். என்னால் முடிந்தவரை சிகிச்சை செய்கிறேன். ஆனால் ஒன்று. நோயாளி எப்போது தனது முடிவை-சவ ஊர்வலத்தைப் பற்றியெல்லாம் எண்ணத் தொடங்கிவிட்டாளோ அப்போதே மருந்தின் சக்தி பாதியாகக் குறைந்துவிட்டது. அவளுக்கு மனநிம்மதி ஏற்படுமேயானால் அவள் பிழைக்க கூடும் என்ற உறுதி மொழியை என்னால் தர முடியும்.

இப்படிக் கூறி விட்டு டாக்டர் போய்விட்டார். படம் வரைவதற்கான கருவிகளுடன் ஜான்சியின் அறைக்குள் நுழைந்தாள் சூ.

ஜன்னல் பக்கம் பார்த்தபடி ஜான்சி படுத்திருந்தாள். சூ படம் வரைந்து கொண்டிருந்த போது ஜான்சியிடமிருந்து மெல்லிய சப்தம் வந்தது. உடனே ஜான்சி அருகே அவள் ஓடினாள்.

ஜான்சி, ஜன்னலை பார்த்தபடி இறங்கு வரிசையில் எண்களைச் சொல்லிக் கொண்டிருந்தாள். பன்னிரண்டு என்றாள்; பின்னர் பதினொன்று என்றாள்; அப்புறம் பத்து, ஒன்பது, எட்டு, ஏழு என்று வரிசையாகச் சொன்னாள்.

ஜன்னல் வழியாக ஜான்சி எதை எண்ணுகிறாள் என்பதைப் பார்ப்பதற்காக சூவும் ஜன்னல் அருகே சென்று பார்த்தாள்

கொஞ்ச தூரத்தில் ஒரு செங்கல் வீடுதான் இருந்தது. அதன் சுவரில் ஒரு திராட்சைக்கொடி படர்ந்திருந்தது. இலையுதிர்காலமாக இருந்ததினால் பெரும்பாலான இலைகள் உதிர்ந்து 'எலும்புக்கூடு' போல் காட்சியளித்தது.

'என்ன அது?' என்றாள் சூ ஜான்சியைப் பார்த்து.

'ஆறு' என்றாள் ஜான்சி. அவை வெகு வேகமாக உதிர்ந்து கொண்டிருக்கின்றன. மூன்று நாட்களுக்கு முன்னால் சுமார் நூறு இருந்தது; அவற்றை எண்ணினாலே தலைவலி வரும் போலிருந்தது. இப்போது எண்ணுவதில் கடினம் இல்லை. அதோ, இன்னொன்றும் உதிர்கிறது. இப்போது ஐந்துதான் மீதம் இருக்கிறது.

'ஐந்துதான் மீதியா? நீ எதைச் சொல்கிறாய் ஜான்சி?'

இலைகள். அந்த திராட்சைக் கொடியிலிருக்கும் இலைகள். அதிலிருந்து கடைசி இலை உதிர்ந்து விட்டால், நானும் போய்விடுவேன். மூன்று நாளாக இதை நான் அறிவேன். டாக்டர் உன்னிடம் சொல்லவில்லையா?.

ச்சீ அப்படியெல்லாம் உளறாதே. திராட்சைக் கொடியிலிருந்து இலைகள் உதிர்வதற்கும், நீ சுகம் அடைவதற்கும் என்ன சம்பந்தம்? நிச்சயம் நீ பிழைத்துக் கொள்வாய் என்று டாக்டர் கூறியிருக்கிறார். அமைதியாக இரு. நான் போய், நீ சாப்பிடுவதற்கு ஏதாவது கொண்டு வருகிறேன்.

எனக்காக நீ எதுவும் கொண்டுவரவேண்டிய தேவை இருக்காது. அதோ இன்னொன்றும் உதிர்கிறது. இனி நாலே நாலுதான் இருக்கிறது. அந்தி சாய்வதற்கு முன்னால் கடைசி இலை உதிர்வதை நான் பார்க்கவேண்டும். அப்புறம் நானும் போய்விடுவேன்.

ஜான்சி, பேசாமல் கண்ணை மூடித்தூங்கு. ஜன்னலைப் பார்க்காதே, நாளைக்குள் இந்தப் படத்தை நான் வரைந்து முடிக்கவேண்டும்.

சரி,சரி நீ வரைந்து முடித்தவுடன் சொல் ஏனென்றால் அந்தக் கடைசி இலை உதிர்வதை நான் பார்க்கவேண்டும்.

நீ அமைதியாகத் தூங்கு, என் படத்திற்கு 'போஸ்' தர பெர்மனை நான் அழைத்து வருகிறேன். ஒரு நிமிடத்தில் வந்துவிடுவேன் என்று கூறிவிட்டுக் கீழே இறங்கினாள் சூ.

சூ வின் கலைக்கூடம் இருந்த கட்டிடத்தின் கீழ்த் தளத்தில் வசித்து வந்த பெர்மனுக்கு அறுபது வயதுக்கு மேலிருக்கும். 'மோசஸ்' மாதிரி தாடி வைத்திருந்தார். அவரும் ஒரு ஓவியர். ஆனால் ஓவியக் கலையில் அவரால் முன்னேற முடியவில்லை. 'ஒரு மகத்தான ஓவியத்தை தீட்டப்போகிறேன்' என்றுதான் வேலையைத் தொடங்குமுன் கூறுவார். ஆனால் அவர் தீட்டிய ஓவியத்தை எவரும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டார்கள்.

அந்தப் பகுதியிலுள்ள ஓவியர்கள் தாங்கள் தீட்டும் சில படங்களுக்கு மாடலாக அவரைப் பயன்படுத்தி வந்தார்கள். இதில் கிடைக்கும் குறைந்த வருவாயில்தான் அவர் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். 'இறப்பதற்குள் இலட்சிய ஓவியம் ஒன்றை வரைந்து விட்டுத்தான் சாவேன்' என்று எல்லோரிடமும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பார்.

பெர்மனிடம் ஜான்சியின் பயத்தையும், பீதியையும் பற்றிக் கூறினாள் சூ.

இந்தப் பெண்களே இப்படித்தான்! எதையும் கண்டு நடுங்குவார்கள் என்றார் பெர்மன்.

சூவும், பெர்மனும் மாடிக்குச் சென்ற போது, ஜான்சி தூங்கிக் கொண்டிருந்தாள். ஜன்னல் கதவை மூடிவிட்டு படம் வரையத் தொடங்கினாள் சூ.

மறுநாள் காலை.

படுக்கையை விட்டு சூ எழுந்தவுடன், ஜான்சி அவளை அழைத்தாள்.

முதலில் ஜன்னல் கதவைத் திற நான் பார்க்கவேண்டும் என்று ஆணையிட்டாள் ஜான்சி.

சூ ஜன்னல் கதவைத் திறந்தாள்.

என்ன ஆச்சரியம்!

இரவு பெய்த மழை, வீசிய சூறாவளிக்குப் பிறகும், அந்த திராட்சைக் கொடியில் ஒரே ஒரு இலை மட்டும் இன்னும் மீதமிருந்தது. அது செங்கல் சுவருடன் ஒட்டியிருந்தது

அது தான் கடைசி இலை. நிச்சயம் நேற்றிரவே உதிர்ந்துவிடும் என்று எதிர்பார்த்தேன். இன்று உதிர்ந்துவிடும். அதே சமயத்தில் நானும் இறந்து விடுவேன். என்று கூறினாள்.

சூ அவளுக்கு தைரியம் கூறினாள்.

பகல் கழிந்தது. இருள் கவிழ்ந்தது. காற்று அடித்தது. மழையும் நிற்கவில்லை.

பொழுது புலர்ந்தது. ஜன்னல் கதவைத் திறக்கச்சொன்னாள் ஜான்சி.

அவ்வாறே செய்தாள் சூ.

அந்த திராட்சை இலை இன்னும் அதே இடத்தில் அசையாமல் இருந்தது.

அந்த இலையையே நீண்ட நேரம் உற்றுப் பார்த்தாள் ஜான்சி. பிறகு சூவை அழைத்தாள்.

'நான் ரொம்ப மோசம் சூ!. இதை எனக்கு உணர்த்துவதற்காகத் தான் ஏதோ ஒன்று அந்த இலையை மட்டும் கொடியில் தங்க வைத்திருக்கிறது. சாக வேண்டும் என்று விரும்புவது பாவம்... எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா... முகம் பார்க்கும் கண்ணாடியை கொண்டு வா... நான் வசதியாக உட்கார்ந்து கொண்டு, நீ சமைப்பதைப் பார்க்கிறேன்', என்று உற்சாகத்துடன் கூறினாள் ஜான்சி.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் அவள் சொன்னாள்; 'சூ எப்படியும் நேபிள்ஸ் கடலை ஓவியமாகத் தீட்டுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

மாலையில் டாக்டர் வந்தார். 'உனது பராமரிப்பில் நிச்சயம் உன்தோழி பிழைத்துக் கொள்வாள்' என்று சூவிடம் கூறிவிட்டுப் புறப்படத் தயாரானார்.

இதே கட்டிடத்தின் கீழ்தளத்தில் ஒரு நோயாளி இருக்கிறார். பெர்மன் என்று பெயர்.அவருக்கு நிமோனியா, பிழைப்பாரா என்று சந்தேகமாக இருக்கிறது. இன்று அவர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்படுகிறார். என்றார் டாக்டர்.

மாலையில் ஜான்சியிடம் வந்தாள் சூ

.'பெர்மன் நிமோனியாவினால் இறந்து விட்டார். அவர் இரண்டே இரண்டு நாள் தான் படுத்திருந்தார். முந்தாநாள் காலையில் தனது அறைக்கு அருகில் அவர் கீழே கிடந்தார். ஆடைகளெல்லாம் நனைந்திருந்தன. இரவு எங்கே போய்வந்தார் என்று யாருக்கும் தெரியவில்லை.பின்னர் தான் ஜன்னல் வழியே தெரிகிறதே ஒரு சுவர். அதன் அருகில் ஒரு கைவிளக்கு, ஏணி, வண்ணங்கள், சில பிரஷ்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நீயும் ஜன்னல் வழியே பார். காற்றடிக்கும் போது அந்த கடைசி இலை மட்டும் விழவில்லையே என்று ஆச்சரியப்பட்டாய் அல்லவா! உண்மையில் அது இலை அல்ல. பெர்மன் தீட்டிய விலைமதிப்பற்ற சித்திரம்!

கடைசி இலை விழுந்ததே, மழை பெய்தஅந்த இரவில் தான். அந்த செங்கல் சுவரில் இந்த இலையைத்தான் பெர்மன் தீட்டிக்கொண்டிருந்திருக்கிறார்'.