Sunday, July 31, 2011

கயானா நாட்டில் தரையில் மோதி 2 ஆக பிளந்த விமானம்.

கயானா நாட்டில் விமானம் தரையில் மோதி 2 ஆக பிளந்தது: 163 பயணிகள் காயத்துடன் தப்பினர்

அமெரிக்கா நியூயார்க்கில் இருந்து கரீபியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-800 ரக பயணிகள் விமானம் கயானா தலைநகர் ஜார்ஜ்டவுனில் உள்ள ஜெட்டிஜகன் விமான நிலையத்துக்கு நேற்று புறப்பட்டு வந்தது. அதில் 157 பயணிகளும், 6 விமான ஊழியர்களும் இருந்தனர்.

நேற்று நள்ளிரவு 1.32 மணியளவில் அந்த விமானம் ஜெட்டிஜகன் விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது ஈரப்பதமான தட்பவெட்ப நிலை நிலவியது.

இதனால் நிலை தடுமாறிய விமானம் சுமார் 7,400 அடி நீள ஓடுதளத்தில் குட்டிகரணம் அடித்தபடி சென்றது. இறுதியில் 2 ஆக பிளந்தது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விமானத்தின் கதவை திறந்தபடி முண்டியடித்துக்கொண்டு வெளியேறினார்கள்.

இதற்கிடையே விமான நிலைய அதிகாரிகளும், மீட்பு படையினரும் விரைந்து வந்தனர். அவர்கள் விமானத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்தவர்களை உயிருடன் மீட்டனர். இந்த விபத்தில் பிளாடெல்பியாவை சேர்ந்த கீதா ராம்சிங் (41) உள்பட பலர் காயம் அடைந்தனர். அவர்களில் பலரின் கால் எலும்பு முறிந்தது. ஆனால் உயிர் சேதம் ஏதுமில்லை.

இந்த விமானம் 2 ஆக பிளந்து நின்ற இடம் ஓடுதளத்தின் இறுதி பகுதியாகும். அதன் அருகே 200 அடி ஆழத்தில் பள்ளத்தாக்கு உள்ளது. அதில் விழுந்து இருந்தால் ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக அதுபோன்று நடக்கவில்லை என்று கயானாவின் அதிபர் பாரத் ஜக்தேவ் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. அது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விமான விபத்து சம்பவம் கயானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலமோசடி பொய் புகார் அதிகரிப்பு.



இடத்திற்கு கூடுதல் பணம் பெறும் ஆசையி்ல் நில மோசடி செய்ததாக பொய் புகார்கள் கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் வன்முறை சம்பவங்களும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நிலங்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது. இதனால் நிலத்தில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் விற்கப்பட்ட நிலத்தின் விலை இன்னும் பல மடங்கு அதிகரித்து விட்டதால் ஏன்தான் நிலத்தை விற்றோமோ என்ற ஏக்கத்தில் இருப்பவர்கள் பலர்.

இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு நிலமோசடி தொடர்பான புகார்களை பெறுவதற்கு மாவட்டம் தோறும் தனிப்பிரிவை அமைத்துள்ளது. இதன் காரணமாக சில வருடங்களுக்கு முன் தாங்களாகவே விரும்பி முழு சம்மத்துடன் நிலத்தை விற்றவர்கள் கூட இன்று அந்த நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டதால் விற்றவர்களிடம் இருந்து கூடுதலாக பணத்தை பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் நிலத்தை அபகரித்து விட்டதாக பொய் புகார் கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அதிகப்படியான பணத்திற்கு ஆசைப்பட்டும், அரசியல் விரோதத்தாலும் கொடுக்கப்படும் பொய் புகார்களால் வரும் நாட்களில் வன்முறை, மோதல், கொலை போன்ற சம்பவங்கள் அதிகரிக்கும் அபாய நிலை உருவாகியுள்ளதாக பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

சென்னையில் சமச்சீர் கல்வியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.

சென்னையில் சமச்சீர் கல்வியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பங்கேற்பு

தமிழ்நாடு தனியார் பள்ளி பெற்றோர் - ஆசிரியர் கழகம், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் சங்கம் ஆகியவை சார்பில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மோகன்ராஜ், நீலன் அரசு, உதயகுமார், வேலம்மாள் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமச்சீர் கல்வியை தமிழக அரசு அமல்படுத்தாமல் இருப்பது சரியான நடவடிக்கை. தரமான கல்வியை தரவேண்டும் என்பதற்காக பழைய பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள முயற்சி வரவேற்க்கத்தக்கது.

இவற்றை வரவேற்றும் தி.மு.க. மாணவர்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்தியதை கண்டித்தும், நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்தை ரத்து செய்யக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஆதரவாக கோஷங்களும் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள்- ஆசிரியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறியதாவது:-

தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக முதல் - அமைச்சர் ஜெயலலிதா, எடுத்து வரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது. தமிழக மாணவர்கள் தேசிய அளவில் போட்டிகளை சமாளிக்க கல்வி தரத்தை உயர்த்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டியது இல்லை. நிர்ணயிக்கப்பட்டுள்ள தனியார் பள்ளி கல்வி கட்டணம் ஏற்க கூடியது அல்ல. முத்தரப்பு குழு அமைத்து கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். தனியார் பள்ளிகளின் இணைப்பு பள்ளிகளை சிபிஎஸ்இ பள்ளி தொடங்க அனுமதி வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உலகை வசீகரிக்கும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்.



பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சராக ஹினா ரப்பனி கர் நியமிக்கப்பட்டு ஒரு வார காலம்தான் ஆகிறது. அதற்குள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துவிட்டார் ஹினா. அவரது புகைபடங்களை பிரசுரிப்பதிலும், அவர் தொடர்பான வீடியோ கிளிப்பிங்குளை ஒளிபரப்பவும் சர்வதேச ஊடகங்கள் போட்டிபோடுகின்றன.

இதுவரை "பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் அக்கறை காண்பிப்பதில்லை; தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்கிறது..." என்றெல்லாம் பாகிஸ்தான் குறித்து எதிர்மறை கருத்துக்களையும், அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு வந்த உலகின் முன்னணி நாளிதழ்கள் மற்றும் வார சஞ்சிகைகளெல்லாம், தற்போது மாடல் அழகி போன்ற வசீகர தோற்றமும், அறிவு திறனும் கொண்ட இளம் பெண் ஒருவரை வெளியுறவுத் துறை அமைச்சராக நியமித்து, பாகிஸ்தான் தற்போது சந்தித்து வரும் நெருக்கடியை விவேகமாக எதிர்கொள்ள தொடங்கி உள்ளதாக புகழாரம் சூட்டிக்கொண்டிருக்கின்றன.

அல் காய்தா தலைவர் ஒஸாமா பின்லேடன் பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதன் மூலம், பாகிஸ்தானின் இமேஜ் உலக நாடுகளில் அதல பாதாளத்திற்கு சரிந்தது.



பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக பாகிஸ்தான் மீது எப்போதும் இருந்துவரும் குற்றச்சாட்டை, பின்லேடனின் பதுங்கல் நிரூபிக்கும் விதமாக அமைந்து விட்டதால் பாகிஸ்தான், உலக நாடுகளிடம் அம்பலப்பட்டு போனது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிடமிருந்து பாகிஸ்தானுக்கு சமீப காலமாக கடுமையான நெருக்கடிகள் வந்தன. குறிப்பாக பாகிஸ்தான் இராணுவத்திலும், உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யிலும் தீவிரவாதிகளுக்கு ஆதரவான சக்திகள் உள்ளதாக, அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ குற்றம்சாட்டியது.

ஆனால் பாகிஸ்தான் அதற்கு கடுமையாக மறுப்பு தெரிவித்து, ஆதாரமில்லாமல் குற்றம்சாட்ட வேண்டாம் என்று கூறவே, சிஐஏ-வின் தலைவர் விமானத்தை பிடித்து நேரடியாக இஸ்லாமாபாத் வந்திறங்கினார்.

அங்கு அவர் பாகிஸ்தான் இராணுவ மற்றும் உளவுத் துறை அதிகாரிகளை சந்தித்து, அமெரிக்காவின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வீடியோ ஆதாரம் ஒன்றை காட்டியதாகவும், அதனை பார்த்து பாகிஸ்தான் அதிகாரிகள் வாயடைத்துபோய் தலையை தொங்கப்போட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டது.



இந்த சூழ்நிலையில்தான் மும்பையில் அண்மையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவம் பாகிஸ்தான் மீது மீண்டும் உலக நாடுகளின் பார்வையை திருப்பவே, அந்நாடு வெகுவாகவே அவஸ்தைக்குள்ளானது.

இதனையடுத்தே தனது வெளியுறவு நடவடிக்கைகள் மற்றும் தோற்றத்தை மாற்றுவதற்கான வியூகத்தை வகுத்தது. அதன் ஒரு அம்சமாகவே திறமையும், புத்திசாலித் தனமும் கொண்டவர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டால் எதிர் தரப்பின் கடுமையைகுறைக்க முடியும் என்றெண்ணி, வசீகரிக்கும் அழகு கொண்ட ஹினா ரப்பானி கர் என்ற 34 வயது அழகு பெண்ணை தனது வெளியுறவுத் துறை அமைச்சராக கடந்த 20 ஆம் தேதி நியமித்தது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் வரலாற்றில் அதன் வெளியுறவுத் துறை அமைச்சராக பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவை நினைவுபடுத்தும் இந்த அழகு அமைச்சரும், பாரம்பரிய அரசியல் குடும்ப பின்னணி கொண்டவர்தான்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்டான் என்ற இடத்த்ல் 1977 ஆம் ஆண்டு ஜனவரி 19ல் பிறந்த ஹினாவின் குடும்பம், செல்வ செழிப்பு மிக்க குடும்பமும் கூட. ஹினா குடும்பத்தினருக்கு சொந்தமாக ஏராளமான மீன் பிடி படகுகள் கொண்ட மீன் பிடித் தொழிலும், மாந்தோப்புகளும், கரும்பு வயல்கள் உள்ளிட்ட ஏராளமான விவசாய தொழில்களும் உள்ளன.



லாகூர் பல்கலைக்கழகத்தில் நிர்வாக அறிவியலில் பி. எஸ்சி பட்டம்பெற்ற ஹினா, அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பில் எம். எஸ்சி பட்ட மேற்படிப்பு பயின்றுள்ளார்.

இவரது தந்தை குலாம் ரப்பானி, பஞ்சாப் மாகாணத்தின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவர். இவரது மாமாதான் பஞ்சாப் மாகாண முதலமைச்சர்.

ஃபெரோஷ் குல்சார் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டுள்ள ஹினாவுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்.

தந்தையும், மாமாவும் அரசியலில் இருக்க ஹினாவுக்கு அந்த ஆசை வராமல் போகுமா என்ன? 2002 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் நாடாளுமனற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹினாவுக்கு, அரசியலில் அப்போது முதல் ஏறுமுகம்தான்.

2008 தேர்தலில் ஹினாவுக்கு பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்க மறுக்கவே, பாகிஸ்தான் மக்கள் கட்சியில் சேர்ந்து போட்டியிட்டு 84, 000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று மீண்டும் எம். பியானார்.



தொடர்ந்து பிரதமர் யூசுப் ரஸா கிலானி தலைமையிலான அமைச்சரவையில் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை இணையமைச்சராக பணியாற்றிய அவர், 2011 பிப்ரவரியில் வெளியுறவுத் துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்த ஷா முகமத் குரேஷி அப்பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதும், 2011 பிப்ரவரி 13 ல் வெளியுறவுத் துறையின் தற்காலிக அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்துதான் கடந்த 20 ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தான் அயலுறவுத் துறையின் கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டார் ஹினா. அப்போதே உலக நாடுகளை, குறிப்பாக மேற்குலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார்.

இவர் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதை வெகுவாக புகழ்ந்து எழுதும் "பாகிஸ்தான் அப்சர்வர்" போன்ற அந்நாட்டு ஆங்கில ஏடுகள், அண்மையில் ஹிலாரி கிளின்டனுடன் ஹினா நடத்திய பேச்சுவார்த்தையின் போது, அவரது தைரியமான பேச்சும், அணுகுமுறையும், பாடி லேங்வேஜ் எனப்படும் உடம் மொழியும் ஹிலாரியை வெகுவாகவே கவர்ந்ததாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானும் ஏகப்பட்ட இழப்புகளை சந்தித்துள்ளதாக புள்ளி விவரங்களுடன் அவர் முன்வைத்த வாதத்தை பார்த்து
ஹிலாரி அசந்துபோனதாகவும் புகழாராம் சூட்டுகின்றன.



இந்த நிலையில்தான் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்று டெல்லி வந்தார் ஹினா.

வழக்கமாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் டெல்லி வந்தால், விமான நிலையத்தில் வந்திறங்குவதை படம் பிடித்து சம்பிரதாய செய்தியாக வெளியிடுவது இந்திய ஊடகங்களின் வழக்கம்.

ஆனால் வசீகரமும், மாடல் அழகி போன்ற தோற்றத்துடனும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சராக ஒருவர் வந்திறங்குவார் என்று தொலைக்காட்சி கேமராமேன்களும், பத்திரிகை புகைப்படக்காரர்களும் எதிர்பார்க்கவே இல்லை.

ஆங்கிலத்தில் "Stunning beauty" என்று சொல்வார்களே அதுமாதிரி அசர அடிக்கிற அழகுடன் வந்திறங்கிய ஹினாவை நமது பத்திரிகை புகைப்படக்காரர்களும், தொலைக்காட்சி கேமராமேன்களும் வளைத்து வளைத்து படம்பிடித்ததை பார்த்து, ஹினா சற்று வெட்கப்பட்டுதான் போனார்.


இந்த நிலையில்தான் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வுடன் இன்று இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார் ஹினா.

இப்பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் முடிவுகள் எதுவும் எட்டப்படாது என்று முன்னரே கூறப்பட்டபோதிலும், பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக ஹினா செய்தியாளர்களிடம் கூறினார்.

அதே சமயம் கடந்த காலங்களைப் போன்றல்லாமல் இந்த முறை இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை இறுக்கமாக அல்லாமல், உற்சாகமான சூழலில் நடந்ததாகவும், இத்ற்கு ஹினா முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல என்றும் கூறுகின்றனர் நமது வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள்.

பாகிஸ்தானில் பெனாசிர் பூட்டோவுக்கு பின்னர் ஒரு வசீகரமான, வலிமையான, விவேகமான ஒரு தலைவர் இல்லாமல் இருந்த நிலையில், ஹினா ரப்பானி அந்த இடத்தை பூர்த்தி செய்வார் என்றும், எதிர்காலத்தில் பாகிஸ்தான் பிரதமர் பதவியில் ஹினா அமரப்போவது நிச்சயம் என்றும் அடித்துக் கூறுகின்றன பாகிஸ்தான் ஊடகங்கள்.

எப்படியோ இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் ஒரு புதிய நல்லத்தியாயம் மலர, ஹினா போன்ற இளம் தலைவர்கள் இருநாடுகளிலும் நிறைய பேர் உருவாகட்டும்!

etamilnews.com

மாணவன் உயிரை குடித்த சமச்சீர் கல்வி போராட்டம் .

சமச்சீர் கல்வி போராட்டம் மாணவன் உயிரை குடித்தது;     வீட்டுக்கு திரும்பும் வழியில் பஸ் கவிழ்ந்து விபத்து

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி கிளரியம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் விஜய் (வயது 12). விஜய் கொரடாச்சேரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று சமச்சீர்கல்வியை நடைமுறைப்படுத்தக் கோரி தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தி.மு.க.வினர் பள்ளி மாணவர்களை அழைத்து மறியலில் ஈடுபட்டனர்.

பள்ளிக்கு சென்ற மாணவன் விஜய் மற்றும் மாணவர்களை வீட்டுக்கு செல்லுமாறு தி.மு.க.வினர் கூறினர். இதனால் அந்த வழியாக வேளாங்கண்ணியில் இருந்து தஞ்சை நோக்கி வந்த அரசு பஸ்சில் விஜய் ஏறினான். அவனுடன் பள்ளி மாணவ- மாணவிகள் சிலரும் அந்த பஸ்சில் ஏறினர்.

பஸ் கிளரியம் ரெயில்வேகேட் அருகே சென்றபோது எதிரே தஞ்சையில் இருந்து ஜல்லி ஏற்றிக்கொண்டு திருவாரூர் நோக்கி வேகமாக ஒரு லாரி வந்தது. லாரியை பஸ் கடக்க முயன்றபோது, லாரி பஸ் மீது மோதியது. இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து, உடனே நிலை தடுமாறி ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த மாணவன் விஜய் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

மேலும், அதே பஸ்சில் பயணம் செய்த சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திவ்யா (10), தமிழரசி (14), பிரவீனா (16), சூர்யா (15), செந்தமிழ்ச்செல்வி (14), வீரமணி (15), கவிதா (18), வேதவள்ளி (25) உள்ளிட்ட 19 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயம் அடைந்த மாணவ- மாணவிகளை ஆம்புலன்சில் ஏற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்தின் காரணமாக, திருவாரூர் - தஞ்சை சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய 2 வாகனங்கள் மீட்கப்பட்ட பின்னர், போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் மாணவனின் சாவுக்கு காரணமான தி.மு.க.வினரை கைது செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் வேனில், கலங்கிய கண்களுடன் வீரபாண்டியார் !



தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வருவதாக நினைத்துக் கொண்டு ரிலாக்ஸ்டாக வந்திருந்தபோது அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். சிறைக்கு அழைத்துச்செல்ல வேனில் ஏற்றப்பட்டபோது இந்த முன்னாள் அமைச்சர் கண் கலங்கியதைக் காணப் பரிதாபமாக இருந்தது.

போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட மூன்றாவது நாளாக நேற்று காலை, 7.53 மணிக்கு, வீரபாண்டியார் வந்திருந்தார். அவருடன், உதவியாளர் சேகர், வழக்கறிஞர் மூர்த்தி ஆகியோரும் வந்தனர்.

வெளியே நின்றிருந்த தொண்டர்களிடம் ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு சரியாக 7.57 மணிக்கு அலுவலகத்துக்குள் நுழைந்தார் முன்னாள் அமைச்சர். உள்ளே காத்திருந்த இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், சீனிவாசன் ஆகியோர், அமைச்சரிடம் வழக்கு நிபந்தனை பைலில் கையெழுத்து வாங்கினர்.

கையெழுத்து போட்டுவிட்டு சாவகாசமாக துணை கமிஷனர் சத்யபிரியாவின் அலுவலகத்துக்குள் நுழைந்தார் வீரபாண்டியார். அடுத்த நிமிடமே, அதிரடிப்படை வாகனம் ஒன்று, அலுவலகத்தின் முன் பகுதியில் சர்ரென்று வந்து நின்றது.

இந்த நேரத்தில்தான் துணை கமிஷனர் சத்யபிரியா வாயைத் திறந்தார். தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலமோகன்ராஜ் என்பவரின் நிலத்தை, மிரட்டி வாங்கிய வழக்கில் கைது செய்யப்படுவதாக வீரபாண்டியாரிடம் தெரிவித்தார்.

அதிர்ச்சி அடைந்த வீரபாண்டியார் சில விநாடிகள் எதுவும் பேசாமல் வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தார். அதன்பின், தன்னை இப்படிக் கைது செய்ய முடியாது என்று போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தான் முன்னாள் அமைச்சர் என்பதைத் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்.

ஆனால், அவர் கூறியதை யாரும் காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. அவரை வேனில் ஏற்றுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். வீரபாண்டியார் திகைத்தபடி நின்றிருந்தார்.

சில நிமிடங்களில் அவர், போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். வேன் நகரத் தொடங்கியபோது, அங்கு வெளியே காத்திருந்த தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சிவலிங்கம், மாநகர பொருளாளர் அன்வர் உட்பட சிலர் வீதியில் உட்கார்ந்து மறித்தனர்.

அவர்களுடன் போலீஸ் கொஞ்சம் கடுமையாகவே நடந்து கொண்டது.

அவர்களை கைகளிலும் கால்களிலும் பிடித்து, அப்படியே தூக்கி வீதியிலிருந்து அகற்றினர் போலீஸார். அதையடுத்து லேசான தடியடி பிரயோகமும் நடத்தினர்.

ஆட்கள் அகற்றப்பட்டதையடுத்து, வீரபாண்டியாரை ஏற்றிய வேன் உட்பட ஏழு வாகனங்கள் வெளியில் வந்தன. இந்த வாகனங்கள் தடையில்லாமல் செல்வதற்கு ஏற்கனவே முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கோர்ட்வரை, பணியில் நின்றிருந்த போக்குவரத்து போலீசார் தயார் நிலையில் நின்றிருந்தனர். வீரபாண்டியாரின் வண்டி கிளம்பியதும் வாக்கி டாக்கி மூலம் அவர்கள் அனைவருக்கும் தகவல் பறந்தது.

இதனால், இடையே எங்கும் நிறுத்தப்படாமல் அனைத்து போலீஸ் வாகனங்களும் அதி வேகத்தில் பறந்தன. சினிமாவில் வரும் சேஸிங் காட்சிபோல வரிசையாகச் சென்ற வாகனங்கள், சேலம் கோர்ட் வளாகத்துக்கு அருகிலுள்ள நீதிபதியின் வீட்டு வாயிலில் போய் நின்றன.

வீட்டிலிருந்த நீதிபதி ஸ்ரீவித்யா இவர்களின் வருகைக்காக காத்திருந்தார்.

வழக்கமாக கிரிமினல் குற்றவாளிகளை ஆஜராக்கும் பாணியில் வீரபாண்டியாரை போலீஸார் இரு கைகளிலும் பற்றியபடி நீதிபதி ஸ்ரீவித்யா முன்னிலையில் கொண்டுபோய் நிறுத்தினர். குற்றவாளிகள் தப்பியோடி விடாதபடி அவர்களது இரு கைகளையும் போலீஸார் பற்றிக் கொள்வது வழக்கம்.

வழக்கின் விபரங்களை சரிபார்த்த நீதிபதி ஸ்ரீவித்யா, வீரபாண்டியாரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். முன்னாள் அமைச்சர் தலைகுனிந்த நிலையில் நின்றிருந்தார்.

முன்னாள் அமைச்சர் உட்பட ஐந்து பேர் மீது, சட்ட விரோதமாக நான்கு பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடுதல், அத்து மீறி உள்ளே நுழைதல், அச்சுறுத்தும் வகையில் கொலை மிரட்டல் விடுதல், அத்துமீறுதல், மிரட்டி பணம் பறித்தல், நிலத்தை அபகரித்தல், மிரட்டல் மூலம் அபகரித்துக் கொள்ளுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது போலீஸ்.

இந்த ஐந்து பேரில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை மட்டும் கைது செய்துள்ளதாக நீதிபதியிடம் தெரிவித்தனர் போலீஸார். அதையடுத்து அவரை வெளியே அழைத்துச் செல்லலாம் என சைகை செய்தார் நீதிபதி ஸ்ரீவித்யா.

உடனடியாக அவரை கைகளைப் பற்றி இழுத்த நிலையிலேயே வெளியே கொண்டுவந்த போலீஸார், கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காக மீண்டும் வேனில் ஏற்றினார்கள். வேனில் ஏற்றப்படும்போது தி.மு.க.வின் இந்த முன்னாள் அமைச்சர் கண் கலங்கினார்.

அவர் கண் கலங்கியதையும், அழுதுகொண்டே வேனில் ஏறியதையும் போலீஸார் எவரும் கண்டுகொள்ளவில்லை.

நேற்று காலை 11.35 மணியளவில், கோவை மத்திய சிறை வளாகத்துக்குள் வீரபாண்டி ஆறுமுகம் வந்த வாகனம் நுழைந்தது.

அப்போது, சிறை வளாகத்துக்கு முன் கூடியிருந்த தி.மு.க.,வினர், தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்கள் அனைவரையும், போலீசார் அப்புறப்படுத்தினர்.

கோவை சிறையில் வீரபாண்டி ஆறுமுகம் அடைக்கப்பட்டார்.

viruvirupu.com

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும் ; அ.தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம்.



சட்டசபை தேர்தலுக்கு பின்னர் முதல் முறையாக அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்தது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல் - அமைச்சர் ஜெயலலிதா முன்னிலை வகித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும்; என்று அ.தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

அ.தி.மு.க. செயற்குழுவின் தீர்மானம் விவரம் வருமாறு:-

* இந்திய நாட்டிற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கு விசாரணையில், பிரதமர் மீதும், மத்திய உள்துறை அமைச்சர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்னாள் மத்திய அமைச்சர் நீதிமன்றத்தில் கூறி இருக்கிறார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பல நாட்களாகியும், இதுகுறித்து பிரதமரோ, உள்துறை அமைச்சரோ எந்த விதமான பதிலையும் அளிக்கவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமாக இருப்பவரும் இதுகுறித்து தனது கருத்தைத் தெரிவிக்கவில்லை.

இந்த இமாலய ஊழலில் உள்ள உண்மையை தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இந்த நாட்டு மக்களுக்கு இருக்கிறது. மத்திய அரசிடமிருந்து முறையான பதிலை இந்த நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் வகையில், பிரதமர் மீதும், உள்துறை அமைச்சர் மீதும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன்சிங் அவர்களையும், மத்திய உள் துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களையும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அவர்களையும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.