Wednesday, March 30, 2011

சேலம் - நாமக்கல், இடையே இரயில் வெள்ளோட்டம்.

சேலம், நாமக்கல், கரூர் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக சேலம்-கரூர் இரயில் இருந்து வந்தது. இதற்க்காக அகல இரயில் பாதை அமைத்திட 1996-97ஆம் ஆண்டு இரயில்வே துறை அனுமதி வழங்கி பணிகள் நடைபெற்று வந்தது.

சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு 53கிலோ மீட்டர் தூரம் ஒரு பிரிவாகவும், நாமக்கல்லில் இருந்து கரூருக்கு 32கிலோ மீட்டர் தூரம் ஒரு பிரிவாகவும், மொத்தம் 85கிலோ மீட்டர் தூரம் புதிய அகல இரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த இரயில் வழித்தடத்தில் குறுக்கிடும் பாதைகள், ஆறுகள், ஓடைகள் ஆகியவற்றின் மீது இரயில்வே பாலங்கள் கட்டப்பட்டன.

மேலும் தண்டவாளங்கள் அமைக்கும் பணிகளும் முடிவடைந்தது. சுமார் 700கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் நிறைவடைந்து, சேலம் - நாமக்கல் இடையே இரயில் முதல் சுற்று சோதனை ஓட்டம் வெற்றிகரமாக 28-03-2011 அன்று நடைபெற்றது. விரைவில் சேலம்-கரூர் இரயில் பயண்பாட்டிற்கு வரும்.

என் கையில் அடிவாங்கிறவன் நாளை மாகாராஜா ஆவான்! - விஜயகாந்த். - வடிவேலுவின் எதிர்கேள்வி.

நான் வேட்பாளரை அடித்துவிட்டதாக ஊரெல்லாம் அவதூறு பரப்புகிறார்கள். அட ஆமாய்யா... நான் என் ஆளைத்தான் அடிச்சேன். என் கையில் அடிவாங்குபவன் நாளை மகாராஜா ஆவான், என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று தர்மபுரி தொகுதியில் வேட்பாளர் ஏ.பாஸ்கரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவர் பேசும் போது, தர்மபுரி தொகுதி வேட்பாளர் பாஸ்கர் பெயரை பாண்டியன் என்று கூறி விட்டதாகவும், அதை சுட்டிக் காட்டிய வேட்பாளர் பாஸ்கரை அவர் அடித்ததாகவும் தொலைக்காட்சிகளில் வீடியோவுடன் தகவல் வெளியானது.

அவரது இந்த செயலுக்கு பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக கூட்டணி பிரச்சாரங்களிலும் இந்த செயல் பிரதானமாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால் விஜயகாந்த் தனது உதவியாளரை மைக்கை சரி செய்து கொடுக்காததால் அடித்ததாக மற்றொரு செய்தி வெளியானது. ஆனால் இதை விஜயகாந்த் மறுத்தார்.

ஏற்காடு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பெருமாளை ஆதரித்து அவர் பேசும் போது இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.

விஜயகாந்த் கூறுகையில், "நான் வேட்பாளரை அடித்ததாக தொலைக் காட்சியில் செய்தி வெளியிடுகின்றனர். அட ஆமாய்யா, அடிச்சேன். என் ஆளைத்தானே அடித்தேன். என்னைப்பற்றி என் கட்சிகாரர்களுக்குத்தான் தெரியும்.

தப்பு நடந்தால் தட்டி கேட்பது இந்த விஜயகாந்த்தின் புத்தி. என் கையில் இன்று அடிவாங்கியவன் நாளை மாகாராஜா ஆவான். நான் சினிமாவில் காசு பார்த்து விட்டு அரசியலுக்கு வந்தவன்.

அரசியலில் காசு பார்க்க வரவில்லை. சாதி, மதத்தை வெறுக்கின்றவன் நான். காய்கறி, பெட்ரோல் விற்கிறவன் சாதியை பார்த்தா விற்கிறான்? இங்கு கூடி இருக்கிற நீங்கள் எந்த ஜாதி என எனக்குத் தெரியாது", என்றார்.

நான் அவனில்லை.... - சொல்கிறார் பாஸ்கரன்!

இதற்கிடையே, விஜயகாந்திடம் அடிவாங்கிய அனுபவம் குறித்து தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கரிடம் கேட்டபோது, "தர்மபுரியில் நேற்று தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருந்த போது கேப்டன் பேசிய மைக்கில் பேட்டரி கழன்றி கீழே விழுந்தது. அதை எடுத்து கொடுக்குமாறு தனது உதவியாளரிடம் கூறினார். அவர் எடுத்து கொடுத்த பின்பு தொடர்ந்து அவர் பேச ஆரம்பித்தார். மீண்டும் அந்த பேட்டரி கீழே விழுந்தது. அப்போதும் அதை எடுத்து கொடுக்க சொன்னார். உதவியாளர் எடுத்து கொடுத்த போது பேட்டரியை தான் அவர் கையால் 2, 3, முறை தட்டினார்.

ஆனால் வேட்பாளரை தாக்கிவிட்டார் என்று தவறாக தகவல் பரப்பி விடப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவத்தின் போது நானும், பாலக்கோடு தொகுதி அ.தி. மு.க. வேட்பாளர் கே.பி.அன்பழகனும் பிரசார வேனுக்குள் சீட்டில் அமர்ந்திருந்தோம். நான் கட்சி துண்டை கழுத்தில் அணிந்திருந்தேன். என் தலையிலும் முடி அதிகளவில் உள்ளது. ஆனால் விஜயகாந்த் தாக்கியது போல் காட்டப்பட்டது சித்தரிக்கப்பட்ட காட்சி...", என்றார்.

என் ஆளைத்தானே அடித்தேன் என்று விஜயகாந்தே ஒப்புக் கொண்ட பிறகும், பாஸ்கரன் என்னமாய் சமாளிக்கிறார் பாருங்கள்!

வடிவேலுவின் எதிர்கேள்வி

என்னிடம் அடி வாங்கினவங்க எல்லாம் மகாராஜா ஆகிவிடுவாங்க என விஜயகாந்த் கூறுகிறார். அப்புறம் எதுக்கு கட்சி.

கட்சியை கலைத்துவிட்டு உங்க கல்யாண மண்டபத்துக்கு முன்னாடி அனைவரையும் வரிசையா நிற்க வைத்து, ஒவ்வொருவரையும் முதுகில் நாலு குத்து, மூக்கில் நாலு குத்து, மூக்கை உடைத்து எல்லாரையும் மகாராஜாவாக ஆக்கிவிடு.

எதுக்கு எலெக்ஷன். டோட்டலா அந்த கூட்டணியை கலைங்க. கூட்டணி தலைவர்களை வரவழைத்து அவர்கள் வாயில குத்து. குத்தி மகராஜாவாக ஆக்கிவிடு. இவர்கிட்ட அடிவாங்கியவர்களெல்லாம் மகாராஜா ஆகிவிடுவார்களாம். நான் செய்ற காமெடியெல்லாம் அந்த அணியில் பண்ணிக்கிட்டு இருக்காங்க. இவ்வாறு வடிவேலு பேசினா

6 மந்திரிகள் அவுட்... 7 பேர் டவுட்!

கடந்த ஐந்து வருடங்களாக மடிப்புக் கலையாத சட்டையோடு, சைரன் ஒலித்த காரில் அமைச்சர் என்ற அந்தஸ்தோடு பந்தாவாக வலம் வந்தவர்கள்...இன்று கொளுத்தும் வெயிலைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், இடுப்பு வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு மக்களிடம் ஓட்டுக்காக கையேந்தி, தெருத் தெருவாக நடந்துகொண்டு இருக்கிறார்கள்!

தி.மு.க. அமைச்சரவையில் மின் துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி.மணி இருவருக்கு மட்டும்தான் இந்த முறை ஸீட் இல்லை. மற்ற அனைவருமே களத்தில்! இவர்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?

அமைச்சர்களாக இருந்தவர்கள் போட்டியிடும் தொகுதிகளை ஜூ.விநிருபர்கள் அலசி ஆராய்ந்து கொடுத்திருக்கும் முதல் கட்ட சர்வே இதோ...

வீரபாண்டி ஆறுமுகம் (சங்ககிரி): 'வழக்கமாகப் போட்டியிடும் தொகுதியில் நின்றால், அல்வா கொடுத்துவிடுவார்கள்’ என சங்ககிரிக்கு வந்திருக்கிறார் ஆறுமுகம். இதுநாள் வரை அவரை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் சாதாரண ஆட்களாக இருந்ததால், எளிதில் ஜெயித்தார். இந்த தடவை அப்படி இல்லை. சித்தப்பாவை 'விடாது கருப்பாக’த் துரத்திக்கொண்டே வந்திருக்​கிறார் அ.தி.மு.க-வின் விஜய​லட்சுமி பழனிசாமி. இருவரும் வன்னியர். ஆனால், சங்ககிரி தொகுதியில் கவுண்டர்கள் அதிகம் என்பதால், அவர்களது வாக்குகள்தான் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும்.

நில அபகரிப்பு, ஆறு கொலைகள் விவகாரம், கடந்த ஐந்து வருடங்களில் கட்சிக்காரர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டதெல்லாம் விஸ்வரூபம் எடுத்து வீரபாண்டியாரை மிரட்ட ஆரம்பித்து இருக்கிறது. அண்ணன் மகளைத் தோற்கடிக்க வேண்டும் என்றால், சித்தப்பா ரொம்பவே மெனக்கெட வேண்டும்!

துரைமுருகன் (காட்பாடி): கருணாநிதியின் இடது கரமான துரைமுருகனுக்கு மீண்டும் காட்பாடி. அரசு அறிவிக்கும் நலத் திட்டங்களை முடிந்த வரை காட்பாடிக்குக் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார். மக்கள் யாரும் எளிதில் நெருங்க முடியாதவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு. அ.தி.மு.க. வேட்பாளர் அப்பு... ஒரு புதுமுகம். மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர். இதுதான் துரைமுருகன் பலம். செல்வாக்கான ஆளைப் போட்டு இருந்தால் திணறி இருப்பார். ஆனாலும், குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெறக்கூடும்!.

பொன்முடி (விழுப்புரம்):அதிரடி அமைச்சர் பொன்முடி நிற்பது, விழுப்புரத்தில். எதிர்ப்பாளர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். அவரும் அதிரடிப் பேர்வழிதான். யாருக்கும் மரியாதை கொடுக்காமல் பேசுவதும், கட்சிக்காரர்​களிடம்கூட நெருங்கிப் பழகாமல் விலகி இருப்பதும் பொன்முடியின் பலவீனம். வன்னியர் எதிர்ப்பாளர் என்ற இமேஜும் உண்டு. பெரும்பாலான வாக்காளர்கள் வன்னியர்கள் என்பதும், தி.மு.க-வில் இருக்கும் வன்னியர்களே பொன்முடிக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதும், அவரை டேமேஜ் பண்ணிவிடும்போலத் தெரிகிறது. ஆனால், அவரோ தன் பண பலத்தை நம்புகிறார்!

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (குறிஞ்சிப்பாடி): பன்னீருக்கு தொடர்ந்து மூன்று முறை வெற்றியைத் தந்த தொகுதி குறிஞ்சிப்பாடி. தொகுதிக்கு நிறையவே செய்திருக்கிறார். தொகுதியில் அதிகப்​படியாக வன்னியர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் இருக்கிறார்கள். பா.ம.க-வும், விடுதலைச் சிறுத்தை​களும் கை கோத்து இருப்பது பன்னீருக்குக் கூடுதல் பலம். எதிர் அணி வேட்பாளரான சொரத்தூர் ராஜேந்திரன், நெய்வேலிப் பகுதியில்தான் செல்வாக்கானவர் என்பதால், குறிஞ்சிப்பாடியில் பன்னீருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை!

பெரிய கருப்பன் (திருப்பத்தூர்): அறநிலையத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், 'தான் உண்டு தனது சொந்த வேலை உண்டு’ என்று இருப்பவர். அதற்காக தொகுதி மக்களைக் கண்டுகொள்ளாமல் இருந்தால் எப்படி? கடந்த ஐந்து வருடங்களில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தைத் தவிர வேறு எந்த சிறப்புத் திட்டத்தையும் பெரிய கருப்பன் கொண்டுவரவில்லை. அ.தி.மு.க - வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன். 1991-96-ல் இங்கே வெற்றி பெற்று அமைச்சராக இருந்த இவர், தன்னை வளப்படுத்திக்கொண்டதோடு, கட்சியினரையும் சாதிக்காரர்களையும் கை தூக்கிவிட்டார். அதுதான் இப்போது ராஜ கண்ணப்பனைக் கை தூக்கிவிடும் சக்தியாக மாறி இருக்கிறது. பெரிய கருப்பன் மறுபடியும் சட்டமன்றத்துக்குப் போவது கொஞ்சம் கஷ்டம்தான்!

தமிழரசி (மானாமதுரை): தான் பெரிதும் எதிர்பார்த்த சோழவந்தான் தொகுதியை பா.ம.க. தள்ளிக்கொண்டு போனதால், மானா மதுரையில் இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறார் தமிழரசி. தொகுதி மாறி வந்ததுதான் அவருக்கு ஏழரை. வழக்கமாக காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதி என்பதால், ஸீட்டை எதிர்பார்த்துக் காத்திருந்த காங்கிரஸார் ஏக அதிருப்தியில் இருக்கிறார்கள். அதே நேரத்தில், அ.தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான குணசேகரனுக்கும் சொந்தக் கட்சிக்குள் ஏகப்பட்ட அதிருப்திகள். அதை எல்லாம் தாண்டி, கூட்டணி பலத்தோடு தொகுதியை ரவுண்டு வருகிறார் குணசேகரன். இருக்கும் நிலைமையைப் பார்த்தால், தமிழரசிக்கு மானாமதுரை மல்லி மணக்காது!

பொங்கலூர் பழனிசாமி (கோவை தெற்கு): கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் பொங்கலூர் பழனிசாமி, தொகுதிக்கு 'ஆஹோ... ஓஹோ’ என்று செய்துவிடாவிட்டாலும், மக்கள் டென்ஷனாகும் வகையில் எந்த வம்பையும் இழுக்கவில்லை. தொகுதிக்குள் இருந்து யார் போன் பண்ணினாலும், தானே அட்டெண்ட் செய்து பொறுப்பாகப் பதில் சொல்வதில் ஆரம்பித்து, சிம்பிளாக நடந்துகொள்வதன் மூலம் சம்பாதித்துவைத்த நல்ல பேர்தான் அவருக்கு இப்போது ரொம்பவே கைகொடுக்கிறது!

இளித்துரை ராமச்சந்திரன் (குன்னூர்): நீலகிரி மாவட்டம் குன்னூரில் போட்டியிடும் ராமச்சந்திரனுக்கு ஆரம்பமே ஆறுதல் தருவதாக இருக்கிறது. குன்னூரின் பலம் வாய்ந்த தி.மு.க. புள்ளியான முபாரக்குக்கு ஸீட் கிடைக்காததால், அவரது ஆதரவுப் பட்டாளம் கடும் அதிருப்தியில் சோர்ந்துகிடக்கிறது. ஆனால், அவர்களிடம் வெள்ளைக் கொடி நீட்டி வழிக்குக் கொண்டுவந்திருக்கும் ராமச்சந்திரன், கூடவே தன் மீது மாளாத வருத்தத்தில் இருந்த படுக இனத் தலைவர்களிடமும் சமரசம் செய்திருக்கிறார். இதன் மூலம் ராமச்சந்திரனின் பாதை தெளிவாக இருக்கிறது!

எ.வ.வேலு (திருவண்ணாமலை): வேலுக்கு எதிராக நிற்பது அ.தி.மு.க. வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன். இருவருமே மக்களுக்கு நன்கு அறிமுகமனாவர்கள். தொகுதியில் இருக்கும் அடிப்பொடிகளில் தொடங்கி, அத்தனை பேரையும் தெரிந்துவைத்து இருப்பது, வேலுவின் பிளஸ். வன்னியர் எதிர்ப்பாளர் என்பது அவருக்குக் கெட்ட பெயர். தொகுதியில் அதிகம் இருக்கும் முதலியார்களைப்பற்றி இவர் ஏதோ ஒரு கமென்ட் அடித்ததாகவும், அதனால் அவர்கள் கோபம்கொண்டு கூடிப் பேசி வருவதாகவும் தகவல். தலித் வாக்குகள் பெரும்பாலும் விஜயகாந்த் பக்கம் இருக்கின்றன. இதைவைத்துப் பார்க்கும்போது வேலு வெல்வது டவுட். எனவே, அனைவரையும் குறிவைத்து விலைக்கு வாங்கி வருகிறார்கள் தி.மு.க-வினர்!

ஐ.பெரியசாமி (ஆத்தூர் - திண்டுக்கல்): எதிர்க் கட்சியில் இருக்கும் ஆட்களைக்கூட பெயர் சொல்லிக் கூப்பிடுவதுதான் ஐ.பெரியசாமியின் வழக்கம். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பே, தொகுதியில் ரேஷன் கார்டு, டி.வி. என பெண்டிங்கில் இருந்த அத்தனையும் அள்ளி வழங்கி, நல்ல பெயரைத் தக்கவைத்துக்கொண்டார் ஐ.பி. எதிர்த்து நிற்கும் தே.மு.தி.க. வேட்பாளருக்கு அவரின் கட்சிக்குள்ளேயே சில எதிர்ப்புகள் கிளம்பி இருப்பதால், பெரியசாமியின் வெற்றி உறுதியாகிவிட்ட சந்தோஷத்தில் இருக்கிறார்கள் தி.மு.க-வினர்!

மதிவாணன் (கீழ்வேளூர்): புதிய தொகுதியான கீழ்வேளூரில் பால் வளத் துறை அமைச்சர் மதிவாணன். அவரை எதிர்த்து நிற்பவர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாலி. திருவாரூர் தொகுதியில் கருணாநிதி போட்டியிடுவதால் ஒட்டுமொத்த உடன்பிறப்புகளும் திருவாரூரே கதியெனக் கிடக்கிறார்கள். மதிவாணனைக் கண்டுகொள்ளக்கூட, தொகுதிக்குள் ஆள் இல்லை. கம்யூனிஸ்ட்கள் அதிகம் உள்ள தொகுதி என்று சொல்லக்கூடிய பட்டியலில் இந்தத் தொகுதியும் உண்டு. தே.மு.தி.க-வுக்கும் இங்கே குறிப்பிட்ட அளவு செல்வாக்கு உண்டு. ஆகவே, மதிவாணணுக்கு பால் பொங்குவது கஷ்டம்!

சுப.தங்கவேலன் (திருவாடானை): திருவாடானை தொகுதி தனக்குத்தான் என முடிவு செய்த தங்கவேலன், கடந்த ஆறு மாதங்களாக அரசின் நலத் திட்டங்கள் அத்தனையும் திருவாடானைத் தொகுதியிலேயே செயல்படுத்த ஆரம்பித்தார். எதிர்த்து நிற்கும் தே.மு.தி.க. வேட்பாளர் முஜிபுர் ரகுமான் வெளியூர்க்காரர் என்பதால், அதையே சாதகமாக்கி பிரசாரத்தில் குதித்திருக்கிறார் தங்கவேலன். தொகுதி முழுக்க வைட்டமின் 'ப’வும் நிறையவே போகிறது. எனவே, கடலில் தத்தளிப்பவனுக்கு ஒரு பிடி கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார் தங்கவேலன். 'அதற்காக’ ஓட்டு போட்டால் மட்டும்தான், இவரால் தேற முடியும்!

மைதீன்கான் (பாளையங்கோட்டை): கடந்த இரண்டு முறை டி.பி.எம்.மைதீன்கான் வெற்றி பெற்ற தொகுதி இது. 'தமிழக அமைச்சர்களில் எளிதாக அணுகக்கூடியவர் யார்?’ என்று போட்டிவைத்தால், மைதீன்​கானுக்கே முதல் இடம். தொகுதி வளர்ச்சிக்காக தனது மேம்பாட்டு நிதியுடன், கனிமொழி, சண்முகசுந்தரம், திருச்சி சிவா போன்ற ராஜ்ய சபா எம்.பி-க்களின் நிதியையும் பெற்றுத் தந்து நிறையத் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். கடந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் மைதீன்கான். பெரும்பான்மை முஸ்லிம்கள் உள்ள தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி நிற்பதும், வேட்பாளர் முஸ்லிம் அல்லாதவராக இருப்பதும் அ.தி.மு.க. அணியில் தோல்விக்கு முழுக் காரணமாக இருக்கும்.

பூங்கோதை (ஆலங்குளம்): ஆலடி அருணாவின் வாரிசு என்ற ஒரே தகுதியுடன் கடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பூங்கோதை, அமைச்சரவையிலும் இடம்பிடித்தார். கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்க​மானவர். அது மட்டுமே போதும் என்று நினைத்ததால், கட்சிக்காரர்கள் மத்தியில் வெறுப்பையும் சம்பாதித்தார். தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை, இங்கு இருக்கவில்லை என்ற வருத்தம் மக்களிடம் பரவலாக இருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பில் கடையம் போன்ற தி.மு.க. ஆதரவு ஏரியாக்கள் உள்ளே வந்து இருப்பது மட்டும்தான் பூங்கோதைக்கு கை கொடுக்கும். எதிர் அணியில் நிற்பவர், பூங்கோதையைவிட வீக்கான வேட்பாளர். இருவருமே நாடார்கள். எனவே, வாக்குகள் பிரியும். மற்ற சாதியினர் பூங்கோதைக்கு எதிராக இருக்கிறார்கள். உழைத்துக்கொண்டே இருந்தால் மட்டும்தான் தேறலாம். இல்லை என்றால் டவுட்!

கீதாஜீவன் (தூத்துக்குடி): அரசு நலத் திட்டங்களைத் தொகுதிக்காக நிறைய செயல்படுத்தி இருக்கிறார் கீதா ஜீவன். அப்பா பெரியசாமியின் தலையீடு நிறைய இருப்பதுதான் அவருக்கு மைனஸ். அதேபோல, அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் ஜெனிஃபர் சந்திரனை அறிவித்தார்கள். பிறகு பால் என்பவரைக் கொண்டுவந்தார்கள். அவரையும் மாற்றி செல்லப்பாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த காமெடி, கீதா ஜீவனுக்கு சாதகம். ஜெனிஃபருக்கு ஸீட் அறிவித்து பிடுங்கிக்கொண்டதால், மீனவர்கள் மத்தியில் அதிருப்தி இருக்கிறது. அந்த அதிருப்தி தி.மு.க-வுக்கு சாதகமாகி, கீதா ஜீவனை வெற்றிக் கோட்டுக்கு அருகே கொண்டுபோய் உள்ளது!

சுரேஷ்ராஜன் (கன்னியாகுமரி): சுற்றுலா வளர்ச்சியை மட்டுமே நம்பி இருக்கும் தொகுதி. நம்பிக்கையை ஓரளவுக்கு நிறைவு செய்திருக்கிறார். எதிர்ப்பு என்று பெரிய அளவில் ஏதும் இல்லை. அ.தி.மு.க-வில் தளவாய் சுந்தரத்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பதால், அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இவை எல்லாம் சுரேஷ்ராஜனுக்குப் பலமாக... கன்னியாகுமரியில் காற்று தி.மு.க. பக்கமே வீசுகிறது!

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை): சாத்தூரில் இருந்து தொகுதி மாறி அருப்புக்கோட்டையில் வேட்பாளர் ஆகி இருக்கிறார் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இவரை எதிர்த்து நிற்பது அ.தி.மு.க-வின் மாநில நிர்வாகியான வைகை செல்வன். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு இருந்தே, தொகுதி முழுக்க பணத்தை அள்ளி இறைக்கிறார் அண்ணாச்சி. மாவட்டம் முழுக்க செய்திருக்கும் நலத் திட்டங்களுடன் அண்ணாச்சி கொடுக்கும் பணத் திட்டங்களும் சேர்ந்து இருப்பதால் வெற்றி உறுதி என்று நினைக்கிறார். ஆனால், சாந்தமாக தொகுதிக்குள் வலம் வரும் வைகை செல்வனின் தேவாங்கர் சமூகத்தினரது வாக்குகள் முழுமையாகப் போனால், இரட்டை இலைக்கு வெற்றி கிடைக்கவும்கூடும். மற்ற சமூகத்து வாக்குகளை அள்ள பகீரத வேலைகளில் இறங்கி இருக்கிறார் சாத்தூரார்!

தங்கம் தென்னரசு (திருச்சுழி): குற்றச்சாட்டுக்கள் எதிலும் சிக்காமல் இருக்கிறார் தங்கம் தென்னரசு. அதே நேரத்தில், தொகுதிக்கு புதிதாக திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை என்பதே இவர் மீதான குற்றச்சாட்டு. எதிர்த்து நிற்பவர் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த இசக்கி முத்து. ஓர் இடைத் தேர்தலின்போது தனியாக நின்றே இந்தக் கட்சி 20 ஆயிரம் வாக்குகளை அள்ளிய வரலாறும் உண்டு. அகமுடையர் அதிகம் உள்ள இந்தத் தொகுதியில் அந்த சமூகத்தவரை நிறுத்தி இருந்தால், தங்கம் வெற்றி சந்தேகத்துக்கு உரியதாக மாறி இருக்கும். எதிர் வேட்பாளரின் பலவீனம் இவரை இம்முறை ஜெயிக்கவைத்துவிடும்!

கே.என்.நேரு (திருச்சி மேற்கு): திருச்சி மேற்குத் தொகுதியில் களம் இறங்குகிறார் கே.என்.நேரு. கூட்டணி இழுபறியில் அ.தி.மு.க. திணற... அப்போது இருந்தே, சட்டென்று வேலைகளை ஆரம்பித்துவிட்டார் நேரு. இவரது பலமே சுறுசுறுப்புதான். நள்ளிரவு 12 மணிக்கு கட்சியின் முக்கியப் பிரமுகர்களுடன் பிரசார வியூகம்பற்றி ஆலோசனை நடத்துகிறார் என்றால், அதிகாலை நேரத்தில் கட்சிக்காரர்கள் யாரையாவது தொலைபேசியில் விரட்டுகிறார். நேருவுக்கு எப்போதும் ஒரு ராசி உண்டு. ஒரு தேர்தலில் வெற்றி என்றால், அடுத்த தேர்தல் அவரது காலை வாரிவிட்டுவிடும். பெரிய அரசியல் பின்புலன் இல்லாத நபர்களிடம் தோற்ற அனுபவமும் அவருக்கு உண்டு. இந்த முறை தனது உழைப்பு மற்றும் பண பலம் மூலமாக வெற்றியை அடையலாம்!

என்.செல்வராஜ் (மணச்சநல்லூர்): வனத் துறை அமைச்சரான என்.செல்வராஜ், மணச்சநல்லூர் தொகுதி வேட்பாளர். செல்வராஜின் மகன் கருணைராஜா, முத்தரையர் சங்க செயல்​பாடுகளில் பெரும் ஈடுபாடுகொண்டவர். ஆகவே, அந்த வாக்குகள் செல்வராஜ் பக்கம் சாயவே அதிக வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம், நேருவும் இவரும் தனித் தனி கோஷ்டியாக செயல்படுபவர்கள் என்பதால், அதுவே தலைவலி. அதனால், நேரு கோஷ்டி ஆட்களை சமாதானப்படுத்தி தேர்தல் வேலை செய்யவைப்பதில் முனைப்பாக இருக்கிறார். எதிர் அணி வேட்பாளர் சரி இல்லை என்பதால், செல்வராஜ் வெல்வார்!

உபையதுல்லா (தஞ்சாவூர்): தொடர்ந்து மூன்று முறை தொகுதியின் எம்.எல்.ஏ.வான உபையதுல்லா எளிமையானவர். மக்களிடம் நல்ல பெயர் நல்ல பெயர் இருந்தாலும், மாவட்டச் செயலாளர் பழனிமாணிக்கத்துக்கும் இவருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். அதுதான் உபையதுல்லாவுக்குப் பிரச்னையாக இருக்கும். ஆனால், நல்ல மனிதர் என்ற இமேஜ் இவரை கை தூக்கிவிடலாம்!

வெள்ளகோயில் சாமிநாதன் (மடத்துக்குளம்): தொகுதி மாறி மடத்துக்குளத்துக்கு வந்து இருக்கிறார் சாமிநாதன். தொகுதிக்குப் புதியவர். முழுக்க முழுக்க பணத்தையே நம்பி களத்தில் குதித்திருக்கிறார். அ.தி.மு.க. வேட்பாளர் சண்முகவேலு, தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். எளிமையானவர் என மக்களிடம் பெயரெடுத்தவர். தொகுதி முழுக்க சண்முகவேலுக்கு சொந்த பந்தங்கள் அதிகம். சுத்தி வளைத்துப் பார்த்தால், சண்முகவேலுவின் கைதான் ஓங்கி இருக்கிறது!

கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்): கே.பி.பி. சாமிக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் கே.குப்பன். முன்னாள் எம்.எல்.ஏ-வான குப்பன், தற்போது திருவொற்றியூர் அ.தி.மு.க. நகரச் செயலாளர். சாமியைவிட செல்வாக்கு​கொண்டவர். கடந்த ஐந்து ஆண்டு​களில், தொகுதிக்கு பல்வேறு நலத் திட்டங்களை சாமி வலை வீசிக் கொண்டுவந்து குவித்து இருந்தாலும், தொகுதி மக்கள் மத்தியில் அவருக்கு எதிரான எதிர்ப்பு அலை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அமைச்சர் சாமியின் தம்பி சாமியாடிய விவகாரங்களைப் பயத்துடன் மீண்டும் நினைத்துப் பார்த்தபடி, பொது ஜனம் இலைத் தரப்பை இரு கரம் கூப்பி வரவேற்கிறார்கள். மணலி, சேக்காடு, எண்ணூர் என இதுவரை சாமிக்கு சர்வ பலத்தைக் கொடுத்த மீனவ ஏரியாவாசிகளும், இப்போது தி.மு.க-வின் மீது திடீர் கோபம்கொண்டு சாமிக்கு எதிராக வரிந்து கட்டத் தொடங்கி உள்ளனர்!

க.அன்பழகன் (வில்லிவாக்கம்): 88 வயதுக்காரர் பேராசிரியர் க.அன்பழகன், தி.மு.க-வின் பொதுச் செயலாளர். தமிழக நிதி அமைச்சர். இந்தப் பெருமைகளை உடைய பேராசிரியர், இந்த முறை வில்லிவாக்கம் தொகுதியில் அ.தி.மு.க-வின் ஜே.சி.டி.பிரபாகரனை எதிர்த்துக் களம் இறங்கி இருக்கிறார். இதற்கு முந்திய இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில், துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பேராசிரியர் 336, 409 என்கிற ஓட்டு வித்தியாசத்தில்தான் ஜெயித்தார். அதனால்தான், தனக்கு சேஃப்டியான தொகுதி இது என்கிற வகையில் வில்லிவாக்கம் வந்து இருக்கிறார். ஆனால், வில்லிவாக்கமும் அவருக்கு சாதகமாக இல்லை!

ஜே.சி.டி.பிரபாகரன் 1980-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்தவர். இவரது ஆளுமையைவைத்து 'வில்லிவாக்கம் எம்.ஜி.ஆர்' என்று மக்கள் செல்லமாக அழைப்பார்கள். தொகுதிக்குள் ஒன்றரை மாதங்கள் பாத யாத்திரை சென்று மக்கள் குறை கேட்டவர். கடந்த 27 ஆண்டுகளாக விளையாட்டுப் போட்டிகள், சமூகப் பணிகள் எனத் தொகுதி மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறவர். இவருக்குக் கை கொடுப்பவர் - தே.மு.தி.க. கவுன்சிலர் பிரபாகரன். கடந்த உள்ளாட்சியில் தி.மு.க. முக்கியப் பிரமுகரை வீழ்த்தி இவர் ஜெயித்தார். இதை எல்லாம் வைத்து அன்பழகன் அவுட் என்கிறார்கள்!

பரிதி இளம்வழுதி (எழும்பூர்): ஐந்தாவது முறை எழும்பூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ-வாகத் தேர்தெடுக்கப்பட்டவர் பரிதி இளம்வழுதி. இந்த முறை ஆறாவது தடவை... தொகுதி மேம்பாட்டு நிதி முழுவதையும் மக்கள் நலப் பணிகளுக்காக செலவிட்டவர். சாலை வசதி, புதிய கட்டடங்கள் என்று மக்கள் பணியை ஏகத்துக்கும் செய்திருந்தாலும், ஒரு சில கட்சி நிர்வாகிகளின் குறைகளைக் கேட்கவில்லை என்கிற புலம்பல் உட்கட்சியில் ஒலிக்கிறது. பரிதியை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணியில் நிற்பவர் தே.மு.தி.க-வின் புரசை கு.நல்லதம்பி. இவருக்கும் நடிகர் விஜயகாந்த்துக்கும் 30 வருடப் பழக்கம். ரசிகர் மன்றத்திலும், கட்சியிலும் மாவட்டப் பொறுப்பில் இருக்கிறார். 20 வருடங்களுக்கு முன்னால், 15 சைக்கிள்களை வாங்கிக் கொடுத்து, இவருக்கு சைக்கிள் கடை வைத்துத் தந்ததே விஜயகாந்த் தானாம். ஆனால், இவருக்குப் பரிதியை எதிர்கொள்ளும் அளவுக்கு படை, பண பலம் இல்லாததால், பரிதியின் பக்கம் வெற்றிக் காற்று!

தா.மோ.அன்பரசன் (பல்லாவரம்): கடைசி நிமிஷம் வரையில்கூட, 'முதல்வர் கருணாநிதி போட்டியிடும் தொகுதி இது’ என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், திடீரென்று கருணாநிதி திருவாரூருக்கு இடம்பெயர, இங்கே தா.மோ.அன்பரசனுக்கு உறுதியானது. குரோம்பேட்டை தாண்டி சாலையில் வரும்போது, எதிர்ப்படும் மேம்பாலங்கள், பழைய மகாபலிபுர ரோட்டைத் தொடும் துரைப்பாக்கம் ரேடியல் மேம்பாலம், மீனம்பாக்கம் விமான நிலைய மேம்பாலம்... இரண்டையும் கடக்கும் பல்லாவரம்வாசிகள் உதயசூரியன் சின்னத்தை மறக்க மாட்டார்கள் என்று தி.மு.க-வினர் சொல்லி ஓட்டு சேகரிக்கிறார்கள். தர்ஹா ரோடு சுரங்கப் பாதை, மீனம்பாக்கம் பி.வி.நகர் சுரங்கப் பாதை... இரண்டையும் கட்டி முடித்ததும் இவர்களே. ஆனால், மக்கள் வசிக்கும் சில இடங்களை தொல்பொருள் துறை கைப்பற்றி, அங்கே எல்லாம் புதிய கட்டடம் எதுவும் கட்டக் கூடாது. பூமியைத் தோண்டக் கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறது. அந்த உத்தரவைத் திரும்பப் பெறவைப்பதாக அன்பரசன் மக்களிடம் உத்தரவாதம் தந்திருந்தார். ஆனால், மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த ஓர் அறிவிப்பும் வரவில்லை. அன்பரசனை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் தன்சிங் போட்டியிடுகிறார். முன்னாள் பல்லாவரம் நகரசபைத் தலைவர். இவருக்கும் செல்வாக்கு இருக்கிறது. கடந்த முறை இதே தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் சுமார் 12 ஆயிரம் ஓட்டுகளை வாங்கினார். அந்த வகையில், இந்த ஓட்டுகள் மீண்டும் தன்சிங்குக்கு சாதகமாக விழும் என்று எதிர்பார்கிறார்கள். இது தா.மோ.அன்பரசனை டவுட் பட்டியலில் சேர்க்கவைக்கிறது!


ஜூனியர் விகடன்

போதை பொருள் கடத்தலில் தொடர்பா? - திரிஷா ஆவேசம்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் சிக்கிய நைஜீரிய போதை மருந்து கும்பலுக்கும் தெலுங்கு சினிமா புள்ளிகளுக்கும் பெரிய அளவில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பிரபல நடிகர் ரவி தேஜாவின் சகோதரர் மற்றும் நண்பர்களும் இதில் சிக்கினர்.

இந்த நைஜீரிய போதை மருந்து கும்பலின் செல்போனில் நடிகை த்ரிஷா உள்ளிட்ட பிரபல நடிகைகளின் நம்பர்களும் இருந்ததாக போலீசார் தகவல் வெளியிட்டனர். தொடர்ந்து த்ரிஷாவிடமும் போனில் விசாரணை நடத்தினர்.

இதனால் அவருக்கும் போதை மருந்து கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பது உண்மைதான் என செய்திகள் பரவின. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள நைஜீரிய கும்பலுடன் என்னைத் தொடர்புபடுத்துவதா என ஆவேசமாகக் கேட்டுள்ளார் நடிகை த்ரிஷா

ஐதராபாத்தில் திரிஷா அளித்த பேட்டி.

சினிமாவில் நிலைத்து நிற்பதுதான் முக்கியம். வெற்றி தோல்வி பற்றி கவலைப்படக்கூடாது. எனது ஒவ்வொரு படத்தையும் புதுப் படமாகவே பார்க்கிறேன். நல்ல கதாபாத்திரங்களே இது வரை அமைந்துள்ளன. குடும்பபாங்கான வேடம், இளைஞர்களுக்கு பிடித்த மாதிரியான வேடங்களை தேர்வு செய்து நடிக்கிறேன்.

இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி தனது கேரக்டர்களையும் மாற்றிக்கொள்கிறேன். உடம்பை அழகாக வைத்துக்கொள்ளவும் அக்கறை காட்டுவேன். அதற்காக தினமும் யோகா உடற்பயிற்சிகள் செய்கிறேன். ஒவ்வொரு நடிகைகளும் இந்தி படங்களில் நடிக்க கனவாக உள்ளது.

அது எனக்கு நிறைவேறி உள்ளது. இந்தியில் நடிப்பதன் மூலம் உலக அளவில் ரசிகர்கள் பெற முடியும். நான் விரும்பும் ஆண் புத்திசாலியாக இருக்க வேண்டும். பேச்சுத் திறமையும் வேண்டும். பேச்சாற்றல் உள்ள ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்.

என்னைப் பற்றி ஆதார மில்லாமல் வரும் புகார்களை கண்டிக்கிறேன். சமீபத்தில் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் என்னை தொடர்பு படுத்தி செய்தி வந்துள்ளது. என்னை வழிவாங்க யாரோ இதனை கிளப்பி விடுகின்றனர். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று தெரியவில்லை.

தொடர்ந்து அதுபோன்ற கிசுகிசுக்கள் வருகின்றன. அதில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இது போன்ற கிசு கிசுக்களால் நான் மனம் உடைந்து இருக்கிறேன். அப்போதெல்லாம் எனது தாய் பக்கபலமாக இருப்பார். அவர்தான் இத்தகைய வேதனைகளில் இருந்து என்னை வெளியே கொண்டு வருவார்

ஹசன்அலி ஜாமீனும் - பாஜக கருத்தும்.

ஹசன் அலியை ஜாமீனில் விடுதலை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கறுப்புப் பண விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குதிரைப் பண்ணை அதிபர் ஹசன் அலிக்கு மும்பை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் மார்ச் 11-ல் ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் கடந்த 17-ம் தேதி ரத்து செய்து, அவரது காவலை நீட்டித்தது.

இந் நிலையில், ஹசன் அலி சார்பில் அவரது வழக்கறிஞர் லலித், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். ஜாமீன் உத்தரவு ரத்து செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யுமாறு மனுவில் கோரப்பட்டிருந்தது

மனுவை விசாரித்த நீதிபதிகள், நியாயமான காரணங்கள் இல்லாததால் முந்தைய உத்தரவில் தலையிட முடியாது என்று கூறிவிட்டனர்.


கறுப்புப் பண விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

"கறுப்புப் பண விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதியாகச் செயல்படவில்லை. இந்த விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்துள்ளது' என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சீதாராமன் தில்லியில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குதிரைப் பண்ணை அதிபர் ஹசன் அலி மீதான விசாரணை வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றம் தலையிட்ட பின்னரும்கூட மத்திய அரசு துரிதமாகச் செயல்படவில்லை.

ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் குவிக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியா கொண்டு வருவதற்கு மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அந்தப் பணம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டால் பல ஆண்டுகளுக்கு வரியே விதிக்காமல் மத்திய பட்ஜெட்டை தயாரிக்க முடியும். பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்த முடியும்.

இந்த வழக்கில் தொடர்புடைய சிலருக்கு அரசியல் அடைக்கலம் அளிக்கப்படுவதாகத் தெரிகிறது என்று அவர் மேலும் கூறினார்.

ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு.

திமுகவுக்கு ஆதரவாகவும், விஜயகாந்துக்கு எதிராகவும் நடிகர் வடிவேலு பிரச்சாரம் செய்து வருகிறார்.சென்னையை அடுத்த தாம்பரத்தில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர், கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு லூஷூ வந்திருக்கு. அது வந்திட்டு என்ன சொல்லுது. நாடு சரியில்ல...ரொம்ப மோசமா போய்க்கிட்டிருக்கு. விஜயகாந்த் மாதிரியே பேசிக்காட்டுகிறார், நான் நாட்டு மக்களுக்கு விடுதலை வாங்கித்தரப்போறேன்னு சொல்லுது.

என்ன இப்ப வெள்ளைக்காரன் பிரிட்டிஷ் ஆட்சியா நடந்துக்கிட்டிருக்கு. நீ விடுதலை வாங்கித்தர்றதுக்கு.

அந்த லூஸூ முதல்ல என்ன சொல்லுச்சு. நான் மக்களோடுதான் கூட்டணின்னு சொல்லுச்சு. தெயவத்தோடுதான் கூட்டணின்னு சொல்லுச்சு. மக்களும் கலைஞரும் ஒண்ணுதான். அது ரெண்டும் கலைஞர்கிட்ட வந்தாச்சு.

இப்ப நீ எங்க போய் கூட்டணி சேர்ந்திருக்க. சீட்டுக்காக போய் சேர்ந்திருக்க. அது சீட்டுக்காக சேர்ந்த அணி அல்ல. சீட்டிங் அணி. காசு வாங்கிட்டு போய் சேர்ந்திருக்க நீ. பிளடி ஃபூல்.

யார ஏமாத்துற நீ. மொதல்ல என்ன சொன்ன நீ. 30,40 சீட்டுக்கு எல்லாம் எலும்ப பொறுக்குற நாய் நான் இல்லன்னு சொன்னீல்ல. இப்ப 41 எலும்ப வாங்கியிருக்க. அதுக்கு பேரு என்ன? நீதான சொன்ன. 30,40 வாங்குறதுக்கு நான் நாயில்லன்னு.

கூட்டணி ஏன் சேர்ந்தீங்கன்னு பத்திரிக்கைகாரங்க கேட்குறாங்க. அதுக்கு நீ என்ன சொல்லுற. இப்ப கூட்டணி சேரனுங்குறது அவசரம்னு சொல்லுற. என்ன கக்கூஸ் போற அவசரமா?

எம்.ஜி.ஆரின் நிறமும் கிடையாது. குணமும் கிடையாது. அப்புறம் எதுக்கு எம்.ஜி.ஆருன்னு சொல்லிக்கிட்டு திரியற. நீ இந்த மக்களுக்கு என்னத்த புடுங்க போற? என்று விஜயகாந்தை விளாசி எடுத்தார்.

விஜயகாந்த் எப்போதும் நிதானமின்றி இருப்பதால், பிரச்சாரத்தில் என்ன பேசுகிறோம் என்று அவருக்கே தெரியாது. ஏதோ ஒரு பிரச்சனையை பற்றி எப்போதாவது நிதானமாக அவரால் பேச முடிகிறதா. அவருக்கு பெயர் கேப்டன் என்று சொல்கிறார்கள். தான் என்ன பேசினோம் என்பதை காலையில் பேப்பரில் பார்த்துதான் தெரிந்துகொள்வார்.

எம்ஜிஆருக்கு மாற்றாக விஜயகாந்த்தை ஒருபோதும் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நேற்று கட்சியை ஆரம்பித்துவிட்டு இன்று முதல் அமைச்சர் பதவிக்கு வர ஆசைப்படலாமா? முதல் அமைச்சராக வர ஆசையாக இருந்தால் ஒரு 5 கோடி, 10 கோடி செலவு செய்து முதல் அமைச்சராக நடிக்க வேண்டியதுதானே.

எம்ஜிஆர் போல நடிக்கணும் என்றால் அவரைப்போல ஒரு கண்ணாடியும், தொப்பியையும் போட்டு படத்துல நடிக்க வேண்டியதுதானே. அதைவிட்டுவிட்டு கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் ரோட்ல வந்து எம்ஜிஆர் மாதிரியே தொப்பியை வாங்கி மாட்டிக்கிட்டு, கண்ணாடிய மாட்டிக்கிட்டு, கையில கர்ச்சிப்பை வச்சிக்கிட்டு அசிங்கமா இல்லையா.

இப்படி பேசியதால் என்னுடைய உருவபொம்யை எரிக்கச் சொல்லி மகிழ்கிறார். ஆனால் விஜயகாந்த்துக்கு எதிரான எனது விமர்சனத்தை ஒருபோதும் நிறுத்த மாட்டேன் என்றார்.